வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த யாழ்., மன்னார் மக்களை சொந்த இடங்களில் குடியேற்ற வேண்டும்

thomas-sawndaranayakam.jpgஜனாதி பதியிடம் யாழ்.ஆயர் வேண்டுகோள் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து வன்னியில் தங்கியிருந்த மக்கள் மீண்டும் இடம்பெயர்ந்துள்ள நிலையில், அவர்களை வவுனியாவுக்கு கொண்டு செல்லாது சொந்த இடங்களில் குடியேற்ற நடவடிக்கையெடுக்குமாறு யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இது தொடர்பாக யாழ்.ஆயரால் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

வன்னியில் விடுவிக்கப்படாத பிரதேசங்களிலிருந்து இதுவரை 35 ஆயிரம் மக்கள் வெளியேறியுள்ளனர்.

இவ்வாறு வெளியேறும் மக்களை அந்தந்த மாவட்டங்களில் மீள குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்து வன்னியில் இருந்த மக்கள் மீண்டும் இடம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு இடம்பெயர்ந்தவர்களை அவர்களது சொந்த மாவட்டங்களில் மீளக்குடியேற்ற வேண்டும்.

யாழ்ப்பாண மக்களை தென்மராட்சியின் மிருசுவில் மற்றும் அதை அண்டிய பிரதேசங்களில் உள்ள காணிகளில் தற்காலிக வதிவிடங்களை அமைத்து மீளக்குடியேற்றலாம்.

எனவே, இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களை வவுனியாவுக்குக் கொண்டு செல்லாது அவர்களது சொந்த இடங்களில் குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இக்கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலர் கோதாபய ராஜபக்ஷ, புனர்வாழ்வு அமைச்சர் ரிச்சோட் பௌடின் மற்றும் வவுனியா, யாழ்ப்பாண மாவட்டங்களின் அரச அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *