எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

சிதம்பரத்தின் கருத்து புலிகள் மீது பழியைப்போட்டு திசைதிருப்பும் முயற்சி -திருமாவளவன்

thirumavalavan-1601.jpgவிடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டால் தான் இலங்கையில் போரை நிறுத்த முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியிருப்பது புலிகள் மீது பழிபோட்டு திசை திருப்பும் முயற்சி என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு;

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் நிலைகுறித்து விளக்குவதற்காக நேற்று முன்தினம் மயிலாப்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், “இலங்கையில் நடக்கும் போரை நிறுத்த இந்திய அரசால் முடியும்; ஆனால், விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போடுவதாக உறுதியளிக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.

ஒரு முறைக்கு பல முறை போர் நிறுத்தத்திற்கு தயார் என்றும், இந்தியாவுடன் நட்புறவையே விரும்புகிறோம் என்றும் விடுதலைப் புலிகள் வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.

இந்த உண்மையை மறைத்துவிட்டு போர் நிறுத்தம் செய்வதற்கு இலங்கை அரசு தயார் என்பதுபோலவும், புலிகள் தான் அதற்குத் தயாராக இல்லை என்பது போலவும் கருத்தை பரப்பி தமிழர்களைக் குழப்பும் முயற்சியில் சிதம்பரம் ஈடுபட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு எத்தகைய தீர்வுத் திட்டத்தையும் முன்வைக்காமல், தீர்வு காண்பதற்குரிய முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் புலிகள் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் என்பது கொழும்பின் குரலையே எதிரொலிப்பதாகும்.

இதன் மூலம் உண்மையான அரசியல் பின்னணிகளை மக்களுக்கு விளக்காமல் புலிகள் மீது பழிபோட்டு திசைதிருப்புவதில் சிதம்பரம் முனைப்பாக இருக்கிறார் என்பது தெரியவருகிறது.

மனிதநேய அடிப்படையில் இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை சிதம்பரத்திற்கோ, இந்திய அரசுக்கோ இருப்பது உண்மையானால் ஜனநாயக அடிப்படையிலான ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைத்து அதற்கான பேச்சுவார்த்தைக்கு முன் ஏற்பாடுகளை உடனடியாக செய்யவேண்டும்.

அவ்வாறு இல்லாமல் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டால் தான் போர் நிறுத்தம் செய்யப்படும் என்று சிதம்பரம் போன்றவர்கள் கூறுவது இனவெறியர்களின் கூற்றாகவே அமையும்.

ஆகவே உண்மைகளை திசை திருப்பி பிரச்சினையை மென்மேலும் நீடிக்காமல் இலங்கைத் தமிழர்களின் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு சுமுகமான அரசியல் தீர்வுக்குரிய வரைவுத் திட்டத்தை இந்திய அரசு முன்வைக்க வேண்டும்.

ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

இந்த கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 1,2 ஆகிய இரு நாட்களில் விடுதலைச் சிறுத்தைகளின் முன்னணி பொறுப்பாளர்கள் தலைமையில் “ஈழம் காப்போம்’ என்ற முழக்கத்துடன் ஊர்ஊராய் நடைப்பயணம் நடைபெறும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

மக்களை வெளியேற அனுமதிக்க விடுதலைப்புலிகளுக்கு அமெரிக்க அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் -இலங்கைத் தூதுவர் வேண்டுகோள்

srilanka_displaced.jpgவன்னியில் மோதல்கள் நடைபெறும் பகுதிகளிலிருந்து அங்குள்ள மக்கள் வெளியேறுவதற்கு விடுதலைப்புலிகள் அனுமதிப்பதற்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமென இலங்கை அரசு அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வடக்கே மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் அங்கிருந்து மக்கள் வெளியேறுவதற்கு விடுதலைப்புலிகள் தடுத்து வருவதாக ஐ.நா. அறிவித்து ஒருநாள் கடந்த நிலையில் அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜாலிய விக்ரம சூரிய இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அங்கு தொடர்ந்து இடம்பெற்றுவரும் மோதல்களால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு எதிர்பார்க்கின்றனர். இந்தநிலையில் அங்கிருந்து அம்மக்கள் வெளியேற முடியாதவாறு விடுதலைப்புலிகள் தடுத்து வருகின்றனர். இந்த மக்கள் வெளியேறுவதற்கான அழுத்தத்தை குறிப்பாக அமெரிக்கா கொடுக்கவேண்டுமென இலங்கைக்கான தூதுவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த மனோநிலையை மக்களிடம் வலுப்படுத்தி தற்காலிக வெற்றியையே அரசு பெற்றுள்ளது -காமினி ஜயவிக்ரம பெரேரா எம்.பி.

election_ballot_.jpgயுத்த மனநிலையை முழு நாட்டிலும் ஏற்படுத்தவோ, மக்களை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து அன்பளிப்புப் பொருட்களை வழங்கி விருந்தளித்து மக்களை ஏமாற்றும் வாய்ப்பு ஜனாதிபதிக்கு இனிக்கிடைக்கப்போவதில்லை என ஐக்கிய தேசியக்கட்சியின் நிறைவேற்றுக் குழுத் தலைவர் காமினி ஜயவிக்ரம பெரேரா திங்கட்கிழமை குருநாகலில் தெரிவித்தார்.

வடமேல்மாகாண சபையின் தேர்தல் முடிவுகள் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது;

யுத்தத்தின் மூலம் பெறும் வெற்றிகளைக்காட்டியவாறு எப்போதும் தேர்தல்களில் வெற்றி கொள்ள முடியாது. நடந்து முடிந்துள்ள மத்திய மற்றும் வடமேல் மாகாணசபைத் தேர்தல்களில் அரசாங்கம் தற்காலிக வெற்றியொன்றையே பெற்றிருக்கின்றதேயொழிய வேறு குறிப்பிடத்தக்கவை எதுவும் இல்லை.

அரசாங்கத்தின் தற்காலிக வெற்றி குறித்து நாம் அச்சம் கொள்ளவோ அதைரியம் கொள்ளவோ தேவையில்லை. எதிர்வரும் தேர்தல்களில் நாம் சிறந்த வியூகங்களை வகுத்து எமது கட்சி ஆதரவாளர்களுடன் இணைந்து வெற்றி பெறுவோம் கட்சியை மேலும் பலப்படுத்துவோம்.

மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கமும் ஜனாதிபதியும் அனைத்து அரசவளங்களையும் பயன்படுத்தி அரச ஊடகங்களின் மூலம் மக்களிடையே யுத்த மனநிலையை வலுப்படுத்திக் காட்டித் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளனர்.

நடந்து முடிந்த தேர்தலில் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்ட போதிலும் அவ்விருவரும் மத்திய மாகாணத்தில் மிகக் குறைந்தளவு எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்றுள்ளனர்

வடமேல்மாகாண சபைத் தேர்தலில் பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர் தமது வாக்குகளைப் பயன்படுத்தத் தவறியமையாலேயே ஐ.ம சு. முன்னணி அங்கு அதிக ஆசனங்களைப் பெறமுடிந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

போர்நிறுத்தம், சமாதானப் பேச்சுக்கு புலிகள் தயார் இந்திய அமைச்சரின் நிபந்தனையை ஏற்க முடியாது -ஜெயானந்தமூர்த்தி

jeyananthamoorthy-mp.jpgவிடுதலைப் புலிகள் போர்நிறுத்தம் மற்றும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே உள்ளனர். ஆனால், இந்திய உள்துறை அமைச்சரின் நிபந்தனையை ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

முதலில் ஆயுதங்களை களையவேண்டும் என்ற இந்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரத்தின் நிபந்தனையை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் இந்தியாவில் வைத்து கூட்டமொன்றில் தெரிவித்த கருத்துத் தொடர்பாக லண்டன் தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே ஜெயானந்தமூர்த்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜெயானந்தமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளதாவது;

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா நடுநிலையாளராக கடமையாற்ற முன்வருவதாகவும், ஆனால் இதற்கு முன்னர் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் களையவேண்டுமென அமைச்சர் சிதம்பரம் கூட்டமொன்றில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மத்தியஸ்தத்தை நாம் வரவேற்கின்றோம். ஆனால், விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கையளிக்கவேண்டுமென அவர் நிபந்தனை விதிப்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் பாதுகாப்புக்காகவும் தமிழினத்தின் உரிமையை வென்றெடுப்பதற்குமே ஆயுதத்தைத் தூக்கியுள்ளனர். அப்போது தமிழ் மக்கள் தங்களது பாதுகாப்பு என்பது விடுதலைப் புலிகளும் அவர்கள் வைத்திருக்கும் ஆயுதமுமே என்பதை பல தடவைகளில் சொல்லியுள்ளனர். இந்த நிலையில் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கையளிக்கவேண்டுமென இந்திய அமைச்சர் கூறும் கூற்றை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வரை விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் களைய வேண்டுமென யார் கூறினாலும் அது அர்த்தமற்றதாகவே அமையும். இந்த ஆயுத ஒப்படைப்பு என்ற விடயம் போராட்ட வரலாற்றில் புதிய விடயமல்ல. இது தமிழ் மக்களுக்கு இந்தியாவின் மூலமாக கடந்த காலத்தில் நல்ல பாடத்தையும் கற்றுத் தந்தது என்பதை எவரும் மறந்துவிட முடியாது.

1987 ஆம் ஆண்டில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா விடுதலைப் புலிகளின் ஆயுதத்தைக் களைந்தது. அதன் பின் நிராயுதபாணிகளாக இருந்த விடுதலைப் புலிகளுடன் இந்திய சமாதானப்படை போர் புரிந்தது. இந்த ஒப்பந்தமும் ஆயுதக் களைவும் தமிழ் மக்களின் சுதந்திர போராட்டத்தை நசுக்குவதற்கு இந்தியா போட்ட திட்டமாகும்.

ஆனால், இதில் விடுதலைப் புலிகள் பல சவால்களுக்கு மத்தியில் வெற்றிபெற்றனர். அப்படியான ஒரு திட்டத்தை இந்தியா செயல்படுத்த மீண்டும் முனைகின்றது. தற்போது மிகமோசமான போரை அரசாங்கம் தமிழ் மக்கள் மீது நடத்தி வருகின்றது. இதற்கு இந்தியாவும் துணை போகின்றது. இப்போரினால் தினமும் நூற்றுக் கணக்கில் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் இந்தியா போரை நிறுத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். இதைவிடுத்து விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் களைய வேண்டுமென கூறுவது ஒருதலைப்பட்சமான நடவடிக்கையாகும்.

எனவே இந்தியா பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தம் வகிக்க முன்வருவதானால் போரை நிறுத்துமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமே தவிர விடுதலைப் புலிகளுக்கு நிபந்தனை விதிப்பது ஆரோக்கியமானதாக அமையாதெனவும் தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு தாக்குதல் தொடர்கிறது பொதுமக்களுக்கான இழப்பு அதிகரிப்பு

artilary13.jpgமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பாதுகாப்பு வலயப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட கடும் ஷெல் தாக்குதல்களில் 48 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 126 பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக இணையத்தள செய்திச் சேவைகள் மேலும் கூறுகையில்;

அம்பலன்பொக்கணை, முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு, தேவிபுரம் மற்றும் வள்ளிபுனம் பகுதிகள் மீது நேற்று நடத்தப்பட்ட செறிவான ஷெல் தாக்குதல்களிலேயே பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். புதுக்குடியிருப்பு பகுதியில் ஷெல் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாலகுமார் விதுசா (வயது 14) தயானந்தன் அம்பிகா (வயது 44), சசிகுமர் ஸ்பேயன் (வயது 60) ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்புப் பகுதியில் பிற்பகல் 2 மணியளவில் கடும் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர். ச் விக்னேஸ்வரன் கஜனி (வயது07), சசிகுமார் தேனிலவன் (வயது05), பாலகுமார் விதுசா (வயது16), தயானந்தா அம்பிகாவதி (வயது 45), தவம் பெனடிற் (வயது 61), சின்னத்தம்பி (வயது 61) ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

ரவீந்திரன் றோஜின, த.சுபாசிண, தர்மலிங்கம் ஜென, தர்மலிங்கம் அஜந்தன, சு.ஞானாம்பிக, சோமசுந்தரம் விக்னேஸ்வரராஜா, விக்கினேஸ்வரராஜ கரன், அரவிந்தன், கந்தையா முத்துக்குமார, க.நந்தின, சிவச்செல்வன், த.வனஜ, த.அரவிந்தன், த.கிநிச பாலராச, சந்திரகுமார, சித்திரவேல் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

தேவிபுரத்தில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளனர். வள்ளிபுனத்தில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

அம்பலவன்பொக்கணை மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் நடத்தப்பட்ட ஷெல் தாக்குதல்களில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 56 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து தி.மு.க.குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

president-of-india-residence.jpgதமிழ் நாட்டில் தி.மு.க.சார்பில் அமைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் உரிமைப் பேரவையின் துணைக்குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீலை புதுடில்லியில் சந்தித்து பேசியுள்ளனர்.  தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான அந்தக் குழுவில் மத்திய அமைச்சர் ஆர்.ராதா, கனிமொழி எம்.பி., திராவிட கழகத் தலைவர் வீரமணி ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

இலங்கை அரசாங்கத்தை யுத்த நிறுத்தத்துக்கு அழுத்தம் கொடுக்க, இலங்கை மீது பொருளாதார கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென்றும், சர்வதேச அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்ப வேண்டுமென்றும் இந்தச் சந்திப்பில் இந்திய ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாக துரைமுருகன் தெரிவித்திருக்கிறார்.

“இந்திய அரசு இந்த பிரச்சினையை ஐ.நா.பொதுச் சபைக்கு எடுத்துச் சென்று அங்கு விவாதித்து அதன் ஊடாக பாதுகாப்பு சபைக்கு அனுப்பி அங்கிருந்து அமைதிகாக்கும் படையினரை இலங்கைக்கு அனுப்ப வேண்டுமென ஜனாதிபதியை நாம் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டோம்.

மனித உரிமைகள் அமைப்புகள், அகதிகள் ஆணைக்குழு போன்றவற்றுடனெல்லாம் இந்திய அரசாங்கம் தொடர்பு கொள்ளவேண்டும். மேலும், கடுமையான நடவடிக்கை என்றால் பொருளாதார கட்டுப்பாட்டைக் கூட இலங்கை மீது விதிக்க வேண்டும். அப்படி செய்தால்தான் இலங்கை அரசாங்கம் யுத்த நிறுத்தத்துக்கு படியுமென நாம் திட்டவட்டமாக ஜனாதிபதியிடம் தெரிவித்திருக்கிறோம்’ என்றும் துரைமுருகன் மேலும் கூறியிருக்கிறார்.

அரசாங்கமும் போர் நிறுத்தம் ஒன்றை அறிவிக்க வேண்டும் – இரா.சம்பந்தன்

sampanthan.jpgவிடு தலைப்புலிகள் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த பகிரங்கமாக விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் முல்லைத்தீவில் சிக்கியுள்ள மூன்றை லட்சம் மக்களை காப்பற்றுவதற்காக அரசாங்கமும் போர் நிறுத்தம் ஒன்றை அறிவிக்க வேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் (பெப். 17)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மோதல்கள் தீவிரமடைந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இதுவரை வன்னியில் இரண்டாயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்து 500 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவில் குடிநீர், உணவு மற்றும் மருந்து பொருட்கள் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அரசு தமிழர்கள் மீதான நன்கு திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருக்கின்றது. உலக நாடுகள் உடனடியாக தலையிட்டு இந்த அழிப்பு போரை உடனடியாக நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்டு மனம் நொந்த நிலையில் இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்துள்ள மக்களை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்படாததன் நோக்கம் என்ன?. அந்த மக்களை பார்வையிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கூட அனுமதி வழங்கக்கூடாதா?.

வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்து வெளியேறி வருகின்ற மக்களை விடுதலை புலிகள் கொலை செய்கின்றனர் என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால், அதில் எந்தவிதமான உண்மையும் இல்லை. விடுதலைப் புலிகள் எதற்காக மக்களை கொலை செய்ய வேண்டும்? அரசாங்கம் கூறுவது போன்று அவ்வாறு மக்களை புலிகள் கொலை செய்ய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.

வன்னிப் பெரு நிலப்பரப்பில் காயமடைகின்ற மக்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்துகள் இல்லை. கொல்லப்பட்ட மக்களின் உடலங்கள் வீதிகளில் கிடக்கின்றன உடலங்களை புதைப்பதற்கு கூட முடியாத நிலை. அந்தளவுக்கு இடைவிடாத எறிகணை பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இனப் படுகொலைகளை சில அனைத்துலக நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான இனப் படுகொலைகள் உலகில் எங்கும் இடம்பெற்றதில்லை என்றார் சம்பந்தன்.

கூட்டத்தில் தமிழ் எம்.பிக்கள் குழு தலைவர் மாவை சேனாதிராசா, யாழ். மாவட்ட எம்.பி. என்.சிறீக்காந்தா, திரிகோணமலை மாவட்ட எம்.பி. துரைரத்ணம், மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. கனகசபை ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இலங்கைப் பிரச்சினையில் தெளிவான முடிவிலுள்ள ஒரே அரசியல் தலைவர் ஜெயலலிதா : சோ

cho_ramaswamy.jpgஇலங்கைப் பிரச்சினையில் மிகத்தெளிவான முடிவை எடுத்துள்ள ஒரே தலைவர் ஜெயலலிதாதான் என்று “சோ” இராமசாமி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியின் பொதுமேடைப் பேச்சுக்களைத் தொகுத்து தமிழில் மொழிபெயர்த்து அதனை “கல்வியே கற்பகத் தரு” என்ற பெயரில் அலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதற்கான விழா சென்னையில் நடைபெற்றது, இந்த விழாவில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும், துக்ளக் ஆசிரியரும் பத்திரிகையாளருமான “சோ” இராமசாமி, நல்லி குப்புச்சாமி செட்டியார் கலந்துகொண்டனர். 

“சோ” இராமசாமி  இலங்கைப் பிரச்சினைகள் பற்றிப் பேசுகையில்,  காஷ்மீரில் இருக்கும் இராணுவத்தினரை உடனடியாக வெளியேறவும், அவர்களது நடவடிக்கைகளை நிறுத்தவும் பாகிஸ்தான் இந்தியாவைக் கேட்டுக்கொண்டால் எப்படி அபத்தமாக இருக்குமோ, அதேபோல்தான் இலங்கைப் போரை நிறுத்தச் சொல்லி இந்தியாவை வலியுறுத்துவது.  அந்த நாட்டில் பயங்கரவாதத்தை எதிர்த்து போர் நடந்துகொண்டுள்ளது.

இங்கிருந்து கூக்குரலிடுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை.  இதனைச் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது.  எந்த மேடையிலும் நான் தைரியமாகச் சொல்வேன். இதையே என்னை யாழ்ப்பாணத்தில் போய்ப் பேசச்சொன்னாலும் நான் பேசத் தயார். இலங்கைப் பிரச்சினைகளைப் பொறுத்தவரையில் இந்தியாவில் சரியான முடிவை எடுத்துள்ள ஒரே அரசியல் கட்சித் தலைவர் ஜெயலலிதா மட்டுமே என்று பேசினார்.

கடலூர் கலெக்டர் அலுவலகம் அருகே இளைஞர் தீக்குளிப்பு

fire_.jpgகடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஜோதி என்கிற தமிழ்வேந்தன் என்ற பிரமுகர் இன்று பிற்பகல் தீக்குளித்தார். கடலூர் குழந்தை காலனியை சேர்ந்தவர் ஜோதி என்கிற தமிழ்வேந்தன் (29) இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் செயலாளராக உள்ளார்.

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கடலூர் நீதிமன்ற அலுவலகத்திற்கு மண்ணெண்ணை கேனுடன் வந்தார் தமிழ்வேந்தன். பின்னர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கோஷமிட்டபடி உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீவைத்தார். இதைப் பார்த்து, அருகில் இருந்த காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் பாதுகாப்புக்கு நின்ற காவலர்கள் தமிழ்வேந்தனைக் காப்பாற்ற முயற்சித்தனர்.

ஆனால் அதற்குள் உடலின் பெரும் பகுதி எரிந்து போய் விட்டது. இதையடுத்து உடனியாக அவரை கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது தனியார் மருத்துவமனையில் தமிழ்வேந்தனை அனுமதித்துள்ளனர்.

திருமா, பிரபாகரன் பற்றிதான் எப்போதும் பேசுவான் என் மகன் – தீக்குளித்த தமிழ்வேந்தன் தாயார்!

ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற வேறு வழியில்லாததால் தீக்குளிக்கிறேன் என்ற படி கடலூரில் தீக்குளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முகாம் பொருப்பாளர் தமிழ்வேந்தன் கடலூர் தனியார் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் நிலையில் பத்திரிகையாளர்களிடம் கதறியபடியே பேசிய அவரது தாயார் அஞ்சலைதேவி,

‘எம் மவனுக்கு எப்ப பாத்தாலும் ஈழத்துல இருக்கிற சனங்களைப் பத்திதான் பேச்சு.  நேத்திக்கு மனித சங்கிலி போராட்டத்துக்கு போயிட்டு வந்தவன் ராத்திரி பூரா பொலம்பிக்கிட்டிருந்தான்.  ஈழத்துல சனங்க ஆயிரமாயிரமா செத்துகிட்டு இருக்காங்க. என்னால ஒண்ணும் பண்ண முடியலையே புலம்பினான்.

இன்னைக்கு காலையில அவனுக்கு சோறு போட்டுட்டு கூலி வேலைக்கு போயிட்டேன்.  அங்க இருந்தப்பதான் புள்ள இப்படி பண்ணிகிட்டான்னு சொன்னாங்க.  அவனுக்கு எல்லாமே  திருமாவளவனும்,  இலங்கையில இருக்கிற பிரபாகரனும்தான்.  அவங்க ரெண்டு  பேரு மேலயும் பைத்தியமா இருப்பான்.    ” என்றபடி கதறினார்.

தமிழ்வேந்தனுக்கு ஜான்சி என்கிற மனைவியும், சந்தோஷ் என்கிற 7 மாத கைக்குழந்தையும் இருக்கிறார்கள். தமிழ்வேந்தனுடன் பிறந்த அண்ணன் சிவா, அக்கா சாந்தி இருவரும் மருத்துவமனையில் அழுதபடி இருந்தனர்.  தந்தை பஞ்சாங்கமும் கூலி வேலை செய்பவர்தான்.

இலங்கைப் பிரச்சினைக்கு விடுதலைப் புலிகள்தான் காரணம். போர் நிறுத்தம் செய்ய இந்தியா வலியுறுத்தாது- பிரணாப் முகர்ஜி : மக்களவையில் பாமக,மதிமுக அமளி

pranaf.jpgஇலங்கைப் பிரச்சினைக்கு விடுதலைப் புலிகள்தான் காரணம். போர் நிறுத்தம் செய்ய இந்தியா வலியுறுத்தாது என்று லோக்சபாவில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று அறிவித்தார். இதையடுத்து பாமக உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் பெரும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து இருமுறை லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.

லோக்சபாவில் இன்று இலங்கை விவகாரம் தொடர்பாக பிரணாப் முகர்ஜி அறிக்கை ஒன்றை வாசித்தார்.

அவர் கூறுகையில், இலங்கைத் தமிழர்களின் நலன்களை விடுதலைப் புலிகள் சேதப்படுத்தி விட்டனர். இன்றைய நிலைக்கு அவர்கள்தான் காரணம். அவர்கள் உடனடியாக ஆயுதங்களைக் கைவிட்டு விட்டு, தாங்கள் பிடித்து வைத்துள்ள அப்பாவித் தமிழர்களை விடுவிக்க வேண்டும். இந்தியாவில் விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாகும். இலங்கையில் சண்டை ஓய்ந்த பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகாரப்பகிர்வு அமல்படுத்தப்படவும், அங்கு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் இந்தியா உதவும்.

இலங்கை அரசியல் சட்டத்தின் 13வது சட்டத் திருத்தம் முழு அளவில் அமல்படுத்தப்பட வேண்டும். அதன் மூலம் அனைத்து சமூகத்தினருக்கும் அதிகாரம் பரவலாக்கப்படும். அதன் மூலம் இனப்பிரச்சினைக்கு முழுமையான நிரந்தரமான தீர்வு ஏற்படும். வடக்கு மாகாணத்தில் அமைதி திரும்ப அரசியல் சந்தர்ப்பம் இருப்பதாகவே இந்தியா கருதுகிறது. 13வது அரசியல் சட்டத் திருத்தம் இதற்கு முக்கியமானது. வடக்கு மாகாணத்தின் மறு சீரமைப்புக்கும், மறு வாழ்வுக்கும் இந்தியா உதவத் தயாராகவே உள்ளது. இலங்கையில் அமைதி நிலவுவதற்குத் தேவையான நடவடிக்கைகளில் தொடர்ந்து இந்தியா தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும்.

இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே இந்தியா மத்தியஸ்தம் செய்யவே செய்யாது. அதற்கான வாய்ப்பே இல்லை என்றார் பிரணாப் முகர்ஜி.

இதைக் கேட்டதும் பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, திமுக உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் எழுந்து பிரணாப் பேச்சு திருப்தி தரவில்லை என்று கூறி கோஷமிட்டனர். அவர்களை அமருமாறு கூறிய லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்றால் தனியாக நோட்டீஸ் தருமாறு கூறினார். ஆனால் அதை ஏற்காமல் தொடர்ந்து பாமக உள்ளிட்ட கட்சிகளின் எம்.பிக்கள் கோஷமிட்டபடி இருந்ததால் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் சிறிது நேரம் கழித்து சபை மீண்டும் கூடியது. கூட்டத்தை துணைத் தலைவர் நடத்தினார். அப்போது பாமக எம்.பிக்கள், சபாநாயகர் இருக்கை முன்பு திரண்டு கோஷமிட்டனர். பத்திரிக்கை செய்திகளை காட்டி இலங்கையில் இனப்படுகொலை நடந்து வருகிறது. அதை உடனடியாக இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர். இதனால் மீண்டும் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.