எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

தற்கொலை குண்டு தயாரிப்பு தொழிற்சாலை, சூசையின் பதுங்குகுழி நேற்று கண்டுபிடிப்பு

uthaya_nanayakara_.jpgபுதுக்குடி யிருப்பு மேற்கு பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் தற்கொலைக் குண்டு தயாரிக்கும் பாரிய தொழிற்சாலை மற்றும் கடற் புலிகளின் தலைவர் சூசையின் பதுங்கு குழி முகாம் ஒன்றையும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இந்த முகாமை சூசை பாவித்தமைக்கான தடயங்கள் காணப்படுவதாக படைத் தரப்பினர் உறுதி செய்துள்ளதாக தெரிவித்த அவர், இந்த முகாமின் ஒரு பகுதி விமானப் படையினரின் விமானத் தாக்குதல்களில் நிர்மூலமாக்கப்பட்டுள்ளமையைக் காணக்கூடியதாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தின் 58 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படையினரும், இராணுவத்தின் ஏழாவது சிங்க ரெஜிமண்ட் பிரிவினரும் இணைந்து நடத்திய தாக்குதல்களுக்குப் பின்னர் இந்த குண்டு தயாரிக்கும் தொழிற்சாலையை கைப்பற்றியுள்ளனர். தற்கொலைத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படும் தற்கொலை குண்டுகள், கிளேமோர் குண்டுகள் மற்றும் வெடி மருந்துகள் இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதல்களின் பின்னர் படையினர் நடத்திய பாரிய தேடுதல்களில் கொல்லப்பட்ட புலிகளின் நான்கு சடலங்களையும், ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டையும் படையினர் மீட்டெடுத்துள்ளனர். இந்த தற்கொலைக் குண்டு தயாரிக்கும் தொழிற்சாலையின் எல்லைப் புரத்திலேயே சூசை பாவித்த முகாம் அமைந்துள்ளது என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.

சார்க் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பம்

mahi.jpgதெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு நாடுகளின் (சார்க்) வெளிவிவகார அமைச்சர்களின் 31வது அமர்வு இன்று காலை 10 மணிக்கு கொழும்பு – கொன்ரினன்ரல் ஹோட்டலில் ஆரம்பமாகின்றது.

ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்துவார்.

வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லா கமவின் தலைமையில் நடைபெறும் ‘சார்க்’ வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் இம்முறை ஏழு நாடுகளின் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி பதில் பிரதமராகவும் கடமையாற்றுவதால் இந்த மாநாட்டில் இந்தியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் இ. அஹமட் கலந்து கொள்கின்றார்.

மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஏற்கனவே ‘சார்க்’ வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கை வந்துள்ளனர். இவர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனித்தனி சந்திப்புகளை நடத்தி இரு தரப்பு விடயங்கள் குறித்து கலந்துரையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வித்தியாதரன் பலாத்காரமாக கடத்தப்பட்டதாக ஊடக அமைப்புகள் கடும் கண்டனம்

vithyatharan.jpgசுடர்ஒளி, உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.வித்தியாதரன் ஆயுதம் தாங்கிய குழுவினரால் பலாத்காரமாக கடத்திச் செல்லப்பட்டது தொடர்பாக ஐந்து ஊடக அமைப்புகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.  இது தொடர்பாக அந்த ஊடக அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

வித்தியாதரன் தமது உறவினரொருவரின் மரணச் சடங்குகளில் கலந்து கொள்வதற்காக கல்கிஸையிலுள்ள மலர்ச் சாலையொன்றுக்கு சென்றிருந்த போதே இக்கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது இலங்கையில் ஊடகவியலாளர்களுக்குள்ள உயிராபத்து வரிசையில் மிக மோசமான நிகழ்வாகும். வித்தியாதரனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக உடனடி நடவடிக்கை எடுக்கும்படி எமது ஊடக அமைப்புகள் பொலிஸ் மா அதிபரைக் கேட்டுக் கொள்கின்றன.

தமது அலுவலக சகாக்கள் உட்பட பெருந்தொகையானோர் முன்னிலையில் வித்தியாதரன் இவ்வாறு கடத்தப்பட்டது தொடர்பாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவின் கவனத்துக்கு கொண்டு வந்தோம். அவர் சிறிது நேரத்துக்குப் பின்னர் எம்முடன் தொடர்பு கொண்டு விசாரணைக்காகவே பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

இதற்கு சில தினங்களுக்கு முன்னரும் இவரது பத்திரிகையில் வெளிவந்த செய்தியொன்று தொடர்பாக இரகசியப் பொலிஸார் வித்தியாதரனை விசாரணைணக்குட்படுத்தினர். ஏதாவது ஒரு காரணத்துக்காக உரிய முறையில் கைது செய்யும் தேவை இருந்தாலும் இவ்வாறு தாக்கி பலாத்காரமாக கடத்திச்செல்லப்பட்டிருப்பது சட்ட விரோதமானதாகும்.

கடந்த இரண்டு மாத காலத்துக்குள் இலங்கையில் முக்கிய பத்திரிகையின் ஆசிரியரொருவர் படுகொலை செய்யப்பட்டார். மற்றுமொரு பத்திரிகை ஆசிரியர் படுமோசமாகத் தாக்கப்பட்டார். இலத்திரனியல் ஊடகமொன்று தீயிட்டு எரிக்கப்பட்டது. இருந்தும் இவை தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை. முறையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுமில்லை. இந்த சூழ்நிலையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான இதுபோன்ற மோசமான வன்முறைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றதென்பதை குறிப்பிடவேண்டியுள்ளது.

இந்தப் பின்னணியின் கீழ் அரச அதிகாரியிடமும் பொலிஸ் மா அதிபரிடமும் நாம் மீண்டும் வலியுறுத்துவது என்னவென்றால், வித்தியாதரன் மீது குற்றச்சாட்டுகள் இருப்பின் நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டங்களின்படி சம்பந்தப்பட்ட விசாரணைகளை மேற்கொள்ள எதுவித தடைகளும் இல்லாத நிலையில், இவ்வாறு பலாத்காரமாக கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகார முறை இருந்ததாலேயே பயங்கரவாதத்தை இந்தளவு ஒழிக்க முடிந்தது – அமைச்சர் ஜீ.எல்.

glperisss.jpgநிறை வேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறைமை இருந்ததாலேயே பயங்கரவாதத்தை இந்தளவுக்கு இலகுவாக ஒழிக்க முடிந்தது என வெளிநாட்டு வர்த்தக, ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகார முறைமை இல்லாதிருந்திருப்பின் பயங்கரவாத ஒழிப்பு வெறும் கனவாகவே இருந்திருக்கும். நடந்து முடிந்த மத்திய, வடமேல் மாகாண சபைத் தேர்தலிலும் மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கி இதனை வலியுறுத்தியும் உள்ளனர். நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறைமையை மக்கள் அங்கீகரித்துள்ளமையையே கடந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்றும் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மேலும் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.

வடமேல், மத்திய மாகாணங்களில் 5 மாவட்டங்களிலும் 40 தொகுதிகளில் 38 தொகுதிகளை அரசாங்கம் வெற்றியீட்டியது. இது மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றியாகும். விகிதாசார முறையிலான தேர்தல் ஒன்றின் மூலம் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. 1978ம் ஆண்டுக்கு முன்பு உள்ளதைப் போன்று தொகுதிவாரியான தேர்தல் முறை இப்போது இருந்திருக்குமானால் ஜே.ஆர். ஜயவர்தனா பெற்ற ஆறில் 5 பெரும்பான்மையை விஞ்சிவிடும் அளவுக்கு அமோக வெற்றியை அடைந்திருக்கலாம். எதிர்வரும் மேல் மாகாணம் மட்டுமல்ல பொதுத்தேர்தல் ஒன்றிலும் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனேயே வெற்றிபெறும்.

இன்றுள்ள விகிதாசார முறையிலான தேர்தல் முறையை எவரும் விரும்பவில்லை. எனினும் இந்த தேர்தல் முறையை மாற்றுவதற்காக அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையிலான தெரிவுக்குழு நியமிக்கப்பட்டாலும் இதற்கு மாற்டான ஒரு முறைமை தொடர்பாக இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு இன்னமும் முடியாதுள்ளது.

எனவே, எமக்கு கிடைக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டு தேர்தல் முறைமையை மாற்ற முடியும் என்றும் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டதன் பின்னர் அங்கு முதலாவதாக உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து பாரிய அபிவிருத்திப் பணிகள் தொடங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலும் நடத்தப்பட்டது.

இதேபோன்றே வடக்கிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், பாரிய அபிவிருத்தி, மாகாண சபைத் தேர்தல்களும் நடத்தப்படும். இவற்றுக்கு நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறைமை அவசியமாகின்றது என்றும் அமைச்சர் பீரிஸ் கூறினார்.

ஆதாரமில்லாத செய்திகளை வெளியிடுவது நியாயமற்றது – யாப்பா

anura.jpgவன்னி யிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வரும் மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை அரசாங்கம் குறைவின்றி செய்துகொண்டுள்ள இத்தருணத்தில் ஆதாரமற்ற இணையத்தளங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியிடப்படுவது எந்த வகையிலும் நியாயமற்ற செயல் என ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா நேற்று தெரிவித்தார்.

மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது தொடர்பாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உட்பட பலர் நேரடியாகச் சென்று அங்குள்ளவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றனர். பயங்கரவாதிகள் யார்? பொதுமக்கள் யார்? என்பது தொடர்பாக பிரித்தறிந்தவாறே படையினர் செயற்படுகின்றனர்.

ஹியூமன் ரைட்ஸ் வொட்ச் என்றழைக்கப்படும் மனித உரிமைகள் கண்காணிப்பாளர்களும் இணையத்தளங்களில் வெளியிடப்படும் தவறான செய்திகளை மேற்கோள்காட்டி எமது மனிதாபிமான நடவடிக்கைக்கு தவறான கருத்தை சர்வதேச சமூகத்திடம் கொண்டு செல்ல முற்படுகின்றனர் என்றும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.அத்துடன் பயங்கரவாதம் ஒழிக்கப்படும்போதே நாட்டில் அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும் எனவும் அமைச்சர் அநுர பிரியதர்ஷய யாப்பா மேலும் தெரிவித்தார்.

லலித் கொத்தலாவலவிற்கு விளக்கமறியல்:கல்கிஸ்ஸை நீதிமன்றம் உத்தரவு

lalith.gifகோல்டன் கீ நிதி மோசடி தொடர்பில் செலிங்கோ நிறுவன உரிமையாளர் லலித் கொத்தலாவலவை விளக்க மறியலில் வைக்குமாறு கல்கிசை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளதுடன் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலி கொத்தலாவலவையும் கைது செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் கோல்டன் கீ வாடிக்கையாளர்களின் 2 ஆயிரத்து 600 கோடி ரூபாய் நிதியை எதிர்வரும் 10 நாட்களுக்குள் செலுத்துமாறும் இறுதி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. செலிங்கோ நிறுவனத்தின் உரிமையாளர் லலித் கொத்தலாவலக்கு கோல்டன் கீ கடன் நிறுவன பணிப்பாளர் மேற்கொண்டதாக கூறப்படும் மோசடி குற்றச்சாட்டு, உரிமையாளர் என்ற அடிப்படையில் லலித் கொத்தலாவலயின் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.

மேல் மாகாண சபைக்கு ஏப்ரல் 25ல் தேர்தல்; 38 கட்சிகள், 23 சுயேச்சைகள் போட்டி; 2378 வேட்பாளர்கள் களத்தில்

sri-lanka-election-01.jpgமேல் மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறுமென தேர்தல் திணைக்களம் நேற்று அறிவித்தது. 102 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தலில் 2378 பேர் போட்டியிடுகின்றனர்.

இம்முறை தேர்தலில் 38 கட்சிகளும் 23 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐ. தே. க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், புதிய இடதுசாரி முன்னணி, சோசலிச சமத்துவக் கட்சி, ஐக்கிய சோசலிசக் கட்சி அடங்லாக 17 கட்சிகளும் 13 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.

கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐ. தே. க. முஸ்லிம் காங்கிரஸ் அடங்கலான 11 கட்சிகளும் 4 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட உள்ளன.

களுத்துறை மாவட்டத்தில் ஐ. ம. சு. முன்னணி, ஐ. தே. க., முஸ்லிம் காங்கிரஸ் அடங்கலான 10 கட்சிகளும் 6 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட உள்ளன. 07 கட்சிகள் 6 சுயேச்சை குழு நிராகரிப்பு கொழும்பு மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகளும் 07 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்தன. கொழும்பு பதில் தெரிவத்தாட்சி அதிகாரி ஆர். எம். ஏ. எல். ரத்னாயக்க முன்னிலையில் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

இதன்போது இரண்டு கட்சிகளினதும் 3 சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஈழவர் ஜனநாயக முன்னணி, ஐக்கிய இலங்கை ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளினதும் எம். அன்பழகன், பி. பன்னீர்ச் செல்வன், விஜே குணவர்த்தன தலைமையிலான சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தில் 14 அரசியல் கட்சிகளும் 6 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்தன. இதில் 3 அரசியல் கட்சிகளினதும் 2 சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி, ஐக்கிய இலங்கை ஜனநாயகக் கட்சி, ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி ஆகிய கட்சிகளினது வேட்பு மனுக்களே நிராகரிக்கப்பட்டதாக கம்பஹா உதவித் தேர்தல் ஆணையாளர் மொஹமட் தெரிவித்தார்.

களுத்துறை மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகளும் 7 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்தன. இதிலே 2 அரசியல் கட்சிகளதும் ஒரு சுயேச்சைக் குழுவினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பூமிபுத்ர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய கட்சிகளின் வேட்பு மனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன.

இம்முறை தேர்தலில் ஐ. ம. சு. முன்னணியில் இ. தொ. கா., மலையக மக்கள் முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணி, ஐ. தே. க. (ஜனநாயகக் குழு), கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி, மக்கள் கட்சி அடங்கலான பல கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன.

கொழும்பு மாவட்ட முதன்மை வேட்பாளராக சுனில் ஜெயமினியும் கம்பஹா மாவட்ட முதன்மை வேட்பாளராக பிரசன்ன ரணதுங்கவும் களுத்துறை மாவட்ட முதன்மை வேட்பாளராக ரெஜினோல்ட் கூரேயும் போட்டியிடுகின்றனர். ஐ. தே. க. முதன்மை வேட்பாளராக லக்ஷ்மன் அபே குணவர்த்தன போட்டியிடுவதோடு ஜே. வி. பி. முதன்மை வேட்பாளராக துமிந்த தாககமுவவும் முஸ்லிம் காங்கிரஸ் முதன்மை வேட்பாளராக அப்துல் ஹையும் போட்டியிடுகின்றனர். இது தவிர, ஐ. ம. சு. முன்னணி பட்டியலில் அஜ்மல் மெளஜுட், எம். எச். மன்ஸில், நவுஸர் பெளசி, வசந்தா ரோஹினி தேவி, கே. ரி. குருசாமி, செல்லசாமி திருக்கேஷ்வரன், முத்து சங்கரலிங்கம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஐ. தே. க. சார்பாக 5 முஸ்லிம்களும் 2 தமிழர்களும் போட்டியிடுகின்றனர். சாஹுல் ஹமீட், எம். எஸ். எம். பைரூஸ், அப்துர் ரஹுமான் முஹம்மது முயீஸ், ஏ. ஜே. எம். முஸம்மில், துஆன் ஆமித், கிருஷாந்தா யோகதாஸ், குமர குருபரன் ஆகியவர்களே போட்டியிடுபவர்களாவர்.களுத்துறை மாவட்டத்தில் எம். எம். எம். அம்ஜாத், அம்ராஸ் மஜீத், தங்கராஜா ஜயராஜ் ஆகிய சிறுபான்மையினரும் கம்பஹா மாவட்டத்தில் சலீம் முஹம்மது சதாவுல்லா, கே. புஷ்பராஜ் ஆகியோர் ஐ. ம. சு. முன்னணியில் போட்டியிடுகின்றனர்.

களுத்துறை மாவட்ட ஐ. தே. க. முதன்மை வேட்பாளராக கித்சிறி கஹடபிடியவும், ஜே. வி. பி. முதன்மை வேட்பாளராக டாக்டர் நன் ஜெயதிஸ்ஸவும், மு. கா. சார்பாக எம். அஸ்லமும் போட்டியிடுகின்றனர்.

கம்பஹா மாவட்ட ஐ. தே. க. முதன்மை வேட்பாளராக மாதிவலயும் ஜே. வி. பி. சார்பாக வருணா தீப்தி ராஜபக்ஷவும் மு. கா. சார்பாக சாபி ரஹீமும் போட்டியிடுகின்றனர்.

முதலமைச்சர் வேட்பாளர்

ஐ. ம. சு. முன்னணி சார்பாக இம்முறை முதலமைச்சர் வேட்பாளர் எவரும் நிறுத்தப்படவில்லை. கட்சி இது குறித்து பின்னர் முடிவு செய்யும் என அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் கூறினார். ஐ. தே. க. வும் இம்முறை முதலமைச்சர் வேட்பாளர் எவரையும் அறிவிக்கவில்லை. கூடுதல் விருப்பு வாக்கு பெறுபவர் முதலமைச்சராக நிய மிக்கப்படுவாரென ஐ. தே. க. கூறியது.

வவுனியா-யாழ்ப்பாணம் வீதி புனரமைக்கப்பட்டு விரைவில் பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் ஏக்கநாயக்க

bus.jpgஏ9 பாதை தற்போது படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதால் விரைவில் அவ்வீதியூடாக தெற்கில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்படுமென பெருந்தெருக்கள் அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க தெரிவித்தார். தெஹியோவிட்டவில் இருந்து தெரணியகலைக்குச் செல்லும் வீதியை 11 கோடி ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட பின்னர் அதனை திறந்து வைத்துப் பேசும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.தொடர்ந்து பேசிய அமைச்சர்;

இந்த நாட்டில் அதிவேக பாதைகளின் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து செயல்படுத்திவருவது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசே, அதன்படி வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரையுமான ஏ9 வீதியை அதிவேக பாதையாக அபிவிருத்தி செய்யப்பட்டு சில மாதங்களில் அந்த வேலை பூர்த்தியானதும் தெற்கில் இருந்து வடக்கே பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்படும். இந்த வீதி திறக்கப்பட்டு போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டதும் வடக்கே தெற்கு உறவுகள் அபிவிருத்தியடையும்.

இதன் மூலம் வடபகுதி மக்களின் தென்பகுதி பிரயாணக் கஷ்டம் நீக்கப்பட்டுவிடும். வடபகுதிக்கும் பொருட்களை இலகுவாக தரைமார்க்கமாக எடுத்துச் செல்லவும் முடியும். வடபகுதி உற்பத்தி பொருட்களையும் தெற்கே எடுத்துவருவதற்கும் வழி ஏற்படுகிறது. பல வருடங்களாக இந்த வீதி மூடப்பட்டிருந்ததால் வடபகுதி மக்கள் கஷ்டப்பட்டனர்.

நாட்டில் 2,500 பாலங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதற்கு பிரிட்டிஷ் அரசு நிதி உதவி அளித்துள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில்தான் நாட்டில் அபிவிருத்தி வேலைகள் நடைபெறுகின்றன. ஒருபுறம் யுத்தம் நடைபெறுகின்ற போதிலும் மறுபுறம் அபிவிருத்தி வேலைகளும் எதுவித தடையுமின்றி நடைபெறுகின்றன என்றார்.

திசைமாறிய 40 குடும்ப உறவுகள் ஒன்றிணைவு. வவுனியா நிவாரண கிராமத்தில் நிகழ்வு.

Wanni_Warபுலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்து வெவ்வேறு இடங்களில் பிரிந்து தங்கியிருந்த 40 குடும்பங்களின் அங்கத்தவர்கள் ஒன்றிணைக்கப் பட்டுள்ளனர்.பல்வேறு வழிகள் ஊடாகத் தப்பிவந்தபோது, வெவ்வேறான நலன்புரி நிலையங்களில் தங்க வேண்டிய நிலைக்கு உள்ளாகியிருந்தவர்களே இவ்வாறு ஒன்று சேர்ந்துள்ளதாக மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஒன்றிணைந்த இந்த 40 குடும்பங்களும் தற்போது வவுனியா- செட்டிக்குளம் மனிக் பாமில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கதிர்காமர் நிவாரணக் கிராமத்தில் தங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். செட்டிக்குளம் மற்றும் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள 13 நலன்புரி நிலையங்களிலிருந்த போது, இந்தக் குடும்ப அங்கத்தவர்கள் கண்டறியப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

மோதல் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்களுள் மனிக்பாம் கதிர்காமர் நிவாரண கிராமத்தில் 2825 பேரும், அருவித்தோட்டம் வித்தியாலயத்தில் 582 பேரும் செட்டிக்குளம் வித்தியாலயத்தில் 1965 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நெளுக்குளம், பம்மைமடு, காமினி வித்தியாலயம், பூந்தோட்டம், கல்வியியற் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, கோவில் குளம் இந்து வித்தியாலயம், வவுனியா மத்திய மகா வித்தியாலயம், சைவப்பிரகாச பாட சாலை ஆகிய நலன்புரி நிலையங்களில் 26809 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் 13 நலன்புரி நிலையங்களில் 32, 181 பேர் தங்கியுள்ளதாகக் கூறிய அமைச்சர் பதியுதீன், கிழக்கு மாகாணத்தில் மீள் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டதைப் போன்று வடக்கிலும் துரிதமாக மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இவர்கள் தொடர்ந்தும் நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்படமாட்டார்கள் என்றும், விரைவில் அவர்களின் சொந்தக் கிராமத்தில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தாய், தந்தையரின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் சந்திரிகா நடந்துகொள்ள வேண்டும் – அமைச்சர் அதாவுட

athauda-senavi.jpgதாய், தந்தையரின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா நடந்துகொள்ள வேண்டுமென தொழில் அமைச்சர் அதாவுட செனவிரத்ன தெரிவித்துள்ளார். மாவனல்ல பகுதியில் நடைபெற்ற வைபமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் வேளையில் சந்திரிகாவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கை குறித்து சர்வதேச மட்டத்தில் பாதகமான விமர்சனங்களை முன்வைத்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் காணப்படும் தனிப்பட்ட கோபம் காரணமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சிரேஷ்ட அரசியல் தலைவர்களாகப் போற்றப்படும் பண்டார நாயக்கா மற்றும் சிறிமாவோ அம்மையாரின் புதல்வி என்ற ரீதியில் சந்திரிகா பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்