விஸ்வா

விஸ்வா

தடுத்து வைக்கப்பட்டிருந்த வேலணை வைத்தியர் பிணையில் விடுவிப்பு!

வேலணை மருத்துவமாது தர்சிகாவின் மரணம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட வைத்தியர் பிரியந்த செனவிரட்ண இன்று (16-07-2010)பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழப்பாண உயர் நீதிமன்றினால் இன்று இவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10ம் திகதி வேலணை மருத்தவமனையில் மருத்துவ மாதுவாகப் பணியாற்றிய செல்வி சரவணை தர்சிகாவின் மரணத்தில் தொடர்பு பட்டதான சந்தேகத்தில் இவ்வைத்தியர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.  யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னைய செய்தி: மருத்துவமாதுவின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியருக்கு எற்பட்டுள்ள நோய் குறித்து தெளிவில்லையாம்!

மருத்துவமாது சரவணை தர்சிகாவின் மரணம் தொடர்பாக சந்தேகத்தில் பேரில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வைத்தியர் செனவிரட்ன தற்போது யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு என்ன நோய் என்பது குறித்து கண்டுபிடிக்க முடியாதுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். யாழ்.சிறைச்சாலையில் இருந்தபோது. சிலரால் தான் தாக்கப்பட்டதாக முதலில் அவர் கூறியிருந்தார்.  பின் தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.

யாழ்.சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட இவர் கடந்த பதன்கிழமை இரவு 8.30 மணியளவில் யாழ்.மருத்தவமனைக்கு கொண்டுவரப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், தடுப்புக்காவலில் உள்ள குறிப்பிட்ட மருத்துவரான பிரியந்த செனவிரட்ன யாழ்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் அவரின் உடல் நிலைப்பாதிப்பு குறித்து எதிர்வரும் 19ம் திகதி நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்.போதனா மருத்துவமனை வைத்திய அதிகாரிக்கு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் ஆர்.வசந்தசேனன் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபரான வைத்தியரின் பாதுகாப்பு காரணங்களுக்காக அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்ற அனுமதி வழங்குமாறு பொலிஸார் நீதிமன்றிடம் விடுத்த கோரிக்கையை நீதவான் மறுத்துள்ளார். அவரை யாழ். சிறைச்சாலையில் விசேட பாதுகாப்புடன் எதிர்வரும் 21ம் திகதி வரை தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வவுனியா செட்டிக்குளத்தில் இடம்பெயர்ந்தோர் முகாம்கள் அமைந்திருந்த நிலப்பரப்புக்களை ஆக்கிரமிக்க சிலர் முயற்சி!

IDP_Campஇறுதிக் கட்டப் போரின் போது வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா செட்டிக்குளம் பகுதியிலுள்ள ‘மெனிக்பாம்’ முகாமில் தங்கியிருந்த மக்கள் கட்டம் கட்டமாக சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டு வருகின்ற நிலையில், அம்முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த பாரிய நிலப்பரப்பை ஆக்கிரமிக்க அரசாங்கத்துடன் அங்கம் வகிப்பவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் முதலானோர் அதிகம் முனைப்புக் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடர்ந்த காடுகளாக இருந்த அப்பகுதிகள் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்கள் அமைக்கப்படுவதற்காக காடுகள் அழிக்கப்பட்டு துப்புரவாக்கப்பட்டன. அப்பகுதிகளில் பல கட்டிடங்கள். குழாய் நீர் அமைப்பு என்பனவும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வகையில் அந்நிலப்பரப்பு சிறந்த விவசாய நிலமாகவும் மக்கள் குடியிருக்கக்கூடிய பகுதிகளாகவும் மாற்றப்பட்டுள்ளன.

IDP_Campஇடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டு வரும் வேளையில், இந்நிலப்பரப்புக்கள் சிங்கள மக்களின் குடியேற்ற நிலமாக மாற்றப்படலாம் என்கிற தகவல்கள் முன்னரே வெளியாகியிருந்தன. இதேவேளை, அம்முகாம்களில் தங்கியிருந்த வன்னி மக்களில் சிலர் அப்பகுதிகளில் தங்களுக்கு காணிகள் வழங்கப்பட்டால் அங்கு நிரந்தரமாக தங்கவதற்கு விருப்பமான நிலையிலும் காணப்பட்டனர். ஆனால், தற்போது அரசாங்கத்தோடு தொடர்புடைய சிலர் சொந்த நிலமாக அதனை ஆக்கிரமிக்கும் நோக்கில் முயன்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

”வன்னியில் 13 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.” பாராளுமன்றப் பிரதித் தலைவர் சந்திரகுமார்

Chandrakumar_MP_Jaffna_EPDPவன்னிப் பகுதிகளில் தற்போதுள்ளதை விடவும் மேலும் 13 எரிபொருள் நிரப்பும் நிலையங்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வுள்ளதாக ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வன்னிப் பெரு நிலப்பரப்பில் வசிக்கும் மக்களின் அத்தியாவசிய தேவைகள் தற்போது சீர் செய்யப்பட்டு வருவதாகவும், அவற்றில் எரிபொருள் தேவைகள் ஓரளவிற்கு பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 13 எரிபொருள் நிரப்பும் நிலையங்களை அமைக்க அமைச்சர் சுசில் பிறெம்ஜெயந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

”காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை எந்த நாட்டிற்கும் வழங்கப்பட மாட்டாது” அமைச்சர் பி.தயாரட்ண

KKS_Cement_Factoryகாங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை இந்தியாவிற்கோ அல்லது வேறு எந்தவொரு நாட்டிற்கோ வழங்கப்பட மாட்டாது என அரச சொத்துடமைகள் மற்றும் கைத்தொழில் அமைச்சர் பி.தயாரட்ண தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்கிழமை யாழ்ப்பாணம் விஜயம் செய்த அமைச்சர் ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் இல்லத்தில் வைத்து செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தினார். அவ்வேளையிலேயெ இவ்வாறு அவர்  தெரிவித்தார். வெகு விரைவில் காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை கட்டம் கட்டமாக இயங்கச் செய்யப்படும் எனவும், உடனடியாக இதனை இயங்கச்செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

அடுத்து வரும் சந்ததியும் இத்தொழிற்சாலையை பயன்படுத்த வேண்டும். இத்தொழிற்சாலை இந்தியாவிற்கு விற்கப்பட்டதாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என தெரிவித்ததோடு, எந்தவொரு நாட்டிற்கும் இத்தொழிற்சாலை வழங்கப்படப் போவதில்லை எனவும் அமைச்சர் தெரவித்துள்ளார்.  பல வருடங்களாக பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள்ளிருக்கும் காங்கேசன்துறை சிமெந்துத் தொழிற்சாலையை பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்பு கொண்டு மீளவும் இயங்கவைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மலையகம் நாவலப்பிட்டியில் போக்குவரத்துப் பயணிகள் திடீர் சோதனைக்குட்பட்டனர்!

கண்டி மாவட்டத்திலுள்ள நாலப்பிட்டியில் நேற்று பாதுகாப்புப் படையினரின் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நாவலப்பிட்டி நகரூடாகச் சென்ற சகல போக்குவரத்து வாகனங்களும் இடைநிறுத்தப்பட்டு, பயணிகள் சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். பயணிகளின் தேசிய அடையாள அட்டைகள் இராணுவத்தினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

போர் முடிவிற்கு வந்ததன் பின்னர் தென்னிலங்கைப் பகுதிகளிலோ, மலையகப் பகுதிகளிலோ போக்குவரத்து வாகனங்கள் இடைமறிக்கப்பட்டு பயணிகள் சோதனையிடப்படும் நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டிருந்தன. தற்போது சிறிது சிறிதாக இந்நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக தெரிய வருகின்றது.  இது பொதுமக்கள் மத்தியில் மீண்டும் ஒரு அச்ச நிலையை எற்படுத்துவதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மருத்துவமாது தர்சிகாவின் மரணம் தொடர்பில் வைத்திய பொறுப்பதிகாரி கைது!

வேலணை வைத்தியசாலையில சுருக்கிட்ட நிலையில் மரணமான மருத்துவமாது ச.தர்சிகாவின் மரணம் தொடர்பாக அவ்வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டொக்ரர் பிரியந்த செனவிரட்னவை கைது செய்து நேற்று (14-07-20100) நீதிமன்றில் முற்படுத்துமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் ஆர்.வசந்தசேனன் பொலிஸாருக்கு  உத்தரவிட்டுள்ளார். மேற்படி பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணைகள் நேற்று ஊர்காவற்றுறை நீதவான் நிதிமன்றில் நடைபெற்றது. மரணமான தர்சிகாவின் சகோதரி, வேலணை வைத்தியசாலையில் கடமையாற்றிய தாதி உத்தியோகத்தர்கள், சம்பவ தினத்தன்று சடலம் மீட்கப்பட்ட விடுதி அறைக்கதவை உடைத்துத் திறந்தவர்கள் ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

இதன்படி தர்சிகாவின் மரணம் தொடர்பாக சந்தேகம் உள்ளதாகவும், டொக்ரர் பிரியந்த செனவிரட்னவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறும் பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார். அத்துடன் தர்சிகாவின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வைத்தியப் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 24ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, மருத்துவமாது தர்சிகாவின் கொலை தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வுப் பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்த மரணம் தொடர்பாக பலர் வாக்குமூலமளிக்க முன்வந்த போதிலும், பொலிஸார் அவற்றைப் பெற மறுத்துவிட்டதாகவும், அதனால் இது தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் கையளிக்கப்பட வேண்டும் எனவும் நேற்று பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அவர் அனுப்பியுள்ளார்.

‘நாட்டு மக்கள் எல்லோருமே ஒன்று தான் அனைவருக்கும் அனைத்தும் கிட்ட வேண்டும்!’ கிளிநொச்சியில் ஜனாதிபதி

Rajaparksa_in_Killinochieநேற்று (14 June) கிளிநொச்சியில் ஜனாதிபதி கலந்து கொண்ட அமைச்சரவைக் கூட்டமும், பொதுமக்கள் மத்தியில் உரையாற்றும் நிகழ்வும் நடைபெற்றுள்ளது. முற்பகல் வேளையில் அமைச்சரவைக் கூட்டம் இரணைமடுக் குளத்திற்கருகே  அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்ட இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றது. தமிழ்ச்செல்வனின் இல்லம் என்றும் விடுதலைப் புலிகளின் அரசியல் செயலகம் என்றும் ஊடகங்களில் வெளிவந்திருந்த போதும், உண்மையில் அது நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு சொந்தமான கட்டடம் ஆகும் தற்போது அது கிளிநொச்சி மாவட்ட இராணுவத் தலைமையகமாகவுள்ளது.

Rajaparksa_in_Killinochieபிற்பகல் கிளிநொச்சியில் பொதுமக்கள் மத்தயில் ஜனாதிபதி உரைநிகழ்த்தினார். ஆனால், பொதுமக்கள் அனைவரும் அக்கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை என கிளிநொச்சி மக்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றும் அரச ஊழியர்கள் மற்றும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே இதில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தவேளை, பொதுமக்கள் ஏ-9 பாதையுடாக பயணிப்பது தடைசெய்யப்பட்டிருந்ததாகவும் பலத்த பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்ததாகவும் கிளிநொச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்னிப்பிரதேசத்தில் அபிவிருத்திப்பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், நாட்டு மக்கள் எல்லோருமே ஒன்று தான் அனைவருக்கும் அனைத்தும் கிட்ட வேண்டும் எனவும் ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் கொழும்பிற்கு வெளியே கூட்டப்பட்ட முதலாவது கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

வடமராட்சியில் பெண் படுகொலை! உடமைகள் கொள்ளை!

வடமராட்சியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு அவரது உடமைகள் கொள்ளையிடப்பட்டு உள்ளன. 13-07-2010 வடமராட்சி இமையாணன் கிழக்கு, உடுப்பிட்டியில் முற்பகல் 11 மணியளவில்  40 வயதான திருமணமாகாத பெண்ணான ஜெயகௌரி என்பவரது சடலம் வல்வெட்டித்துறை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இவரை கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்த (July 11 2010) காணவில்லை என அயலவர்களினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்று இவரின் சடலம் கிணறு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இவரின் தலையில் அடிகாயங்கள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவரது விட்டிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டி, கைத்தொலைபேசி மற்றும் இவரது நகைகள் யாவும் கொள்ளையிடப்பட்டுள்ளன. இவரது நான்கு சகோதரர்கள் வெளிநாட்டிலுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவரது கொலை தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

வன்னியில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் மழைபெய்யும் வேளைகளில் அவலங்களை எதிர்கொள்கின்றனர்.

Rehabilitation_Wanniதற்போது இடைக்கிடையே பெய்து வரும் மழை காரணமாக வன்னியில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். கூரைகளற்ற வீடுகளிலும் தறப்பாள் கூடாரங்களிலும் வசிக்கும் மக்கள் மழை பெய்யும் போது பெரும் அவலங்களுக்கு உள்ளாகின்றனர். கூரைகளற்ற வீடுகளின் உள்ளேயும், தறப்பாள் கூடாரங்களுக்குள்ளும் மழைநீர் புகுந்து விடுவதால் சிறுகுழந்தைகள், வயோதிபர்கள் உள்ள குடும்பங்கள் பெரும் துன்பங்களை அனுபவிக்க நேரிடுகின்றது. அவர்களது நிவாரண உணவுப்பொருட்களும் மழையில் நனைந்து நாசமாகின்றன.

Rehabilitation_Wanniமுன்னர் மீள்கடியேற்றப்பட்ட  மக்கள் தற்காலிகக் கூடாரங்களை அமைத்துக்கொள்ள பன்னிரண்டு கூரைத் தகரங்கள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு அவை வழங்கப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை. எதிர்வரும் பருவமழைக்கு முன்பாக இம்மக்களுக்கான வீடுகள் ஒழுங்கமைக்கப்படா விட்டால் பாரிய அவலங்களுக்கு அவர்கள் முகம் கொடுக்க வேண்டிவரும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

அமிர்தலிங்கம். யோகேஸ்வரன் ஆகியோரது 21வது நினைவுநாள் இன்று நினைவு கூரப்பட்டது.

Amirthalingam_A_TULFதமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான திரு.அ.அமிர்தலிங்கம் அவர்களினதும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான திரு.வெ.யோகேஸ்வரன் அவர்களினதும் 21வது நினைவு தினம் இன்று தமிழர் விடுதலைக்கூட்டணியின் யாழ்.மாவட்டத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

கூட்டணியின் யாழ். மாநகரசபை உறுப்பினர் இரா.சங்கையா தலைமையில்  இன்று முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்ற இந்நிகழ்வில் ஈகைச்சுடரை கூட்டணியின் முன்னால் உடுவில் கிராமசபை தலைவர் ச.முத்துலிங்கம்.  கூட்டணியின் முத்த உறுப்பினர்களில் ஒருவரான த.பூலோகரட்ணம் ஆகியோர் ஏற்றினர்.  அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோரது உருவப்படங்களுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலத்தப்பட்டது.

தொடர்ந்து நினைவுரைகள் இரா.சங்கையா தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் செ.முத்துலிங்கம், முன்னாள் மாநகரசபை உறுப்பினர் செ. விஜயரத்தினம், ச.முத்துலிங்கம், திருஞானசம்பந்தர் ஆகியோர் நினைவுரைகள் நிகழ்த்த நன்றியுரையினை தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஊடகச்செயலாளர் த.கஜன் நிகழ்த்தினார். தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஆதரவாளர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.