விஸ்வா

விஸ்வா

வடக்கில் மூன்று வர்த்தக மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

வடபகுதியில் மூன்று வர்த்தக வலயங்கள் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். மன்னார், கிளிநொச்சி, வவனியா ஆகிய இடங்களில் இந்த வர்த்தக மையம் அமைக்கப்படும் எனவும் அதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறிய மற்றும், நடுத்தரத்தைக் கொண்ட தொழில் நடவடிக்கைகள் இந்த வலயங்களில் செயற்படுவதற்கரிய வசதிகள் செய்து கொடுக்கப்படும் எனவும், இந்த வர்த்தக வலயங்கள் அமைக்கப்படுவதன் மூலம் வடமாகாண உற்பத்திப் பொருட்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் எனவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

யாழ். இராணுவத் தளபதிக்கு சமாதானத்திற்கான விருது வழங்கப்படவுள்ளது.

Mahinda_Hathurusinghe_Major_Generalயாழ் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவிற்கு சமாதானத்திற்கான விருது பிலிப்பைன்ஸ் நாட்டில் வழங்கப்படவுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் உயர் பயிற்சிகளைப் பெற்றுத் திரும்பிய பின்னர் வன்னியில் அவர் கடமையாற்றினார். வன்னியில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு அவர் ஆற்றிய பணிகள் காரணமாக இந்த விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 24ஆம் திகதி பிலிப்பைனஸில் வைத்து இவ்விருது வழங்கப்படவுள்ளதால் இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் பிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலாவிற்கு பயணமாகின்றார். விருது பெற்று நாடு திரும்பியதும், எதிர்வரும் மாதம் 10ஆம் திகதி கொழும்பு மண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் வைத்து அவருக்கு பாராட்டு நிகழ்வு ஒன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது பதவியேற்பு வைபவம் இன்று கோலாகலமாக நடைபெறுகின்றது.

MR_Sworn_in_2nd_termஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரண்டாவது பதவிக் காலத்தை இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கின்ற நிலையில் கொழும்பில் இந்நிகழ்வையொட்டிய வைபவங்கள் மிகவும் கோலாகலமாக நடைபெறுகின்றன. கொழும்பு காலிமுகத்திடலுக்கு முன்பாகவுள்ள ஜனாதிபதி செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மேடையில் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது பதவியேற்பு வைபவம் நடைபெறுகின்றது. இந்நிகழ்வில் சுமார் 150 வெளிநாட்டு பிரதிநிதிகளும் பங்கு கொள்கின்றனர். மாலைதீவு ஜனாதிபதி, பூட்டான் பிரதமர் ஆகியோரும் இதில் உள்ளடங்குகின்றனர்

MR_Sworn_in_2nd_termஇன்று காலை 10 மணிக்கு தனது இரண்டாவது பதவிக்காலத்தை ஜனாதிபதி சத்தியப்பிரமாணம் செய்து ஆரம்பிக்கின்றார். இப்பதவியேற்பு வைபவத்தையொட்டி காலிமுகத்திடலில் முப்படையினரின் அணிவகுப்பு மற்றும், மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.

இந்நிகழ்வுகளுக்காக கொழும்பு வரும் வாகனங்களுக்கு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 6 மணி தொடக்கம் மாலை 3 மணி வரை கொழும்பு கோட்டை, காலிமுகத்திடல் ஆகியவற்றிற்கான பாதைகள் மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இந்த இரண்டாவது பதவியேற்பு வைபவம் பெருந்தொகை அரச நிதியை செலவு செய்து நடத்தப்படுவதாக பிரதான எதிர்கட்சியான ஐக்கியதேசியக்கட்சி விமர்சித்துள்ளது.

ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழ்தேசியக் கூட்டணியின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி இந்த இரண்டாவது பதவிக்காலத்தில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என வலியுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பு வைபவத்தில் அவர் ஆற்றுகின்ற உரை நாளை சனிக்கிழமை காலை 9.15 மணிக்கு யாழ்.குடாநாட்டின் சகல பகுதிகளிலும் ஒலிபரப்பப்படவுள்ளதா அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் முதற்கட்டமாக 1000 வீடுகள் அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

India_Flagபோரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் முதற்கட்டமாக ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இந்த ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்திய வீடமைப்பு மற்றும், வறுமை ஒழிப்பு அமைச்சின் நிர்வாக்தின் கீழ் இயங்கும் இந்துஸ்தான் பிறீபப் என்ற நிறுவனமும் இலங்கை அரசாங்கமும் இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் மரணம்.

Motorbike_Accidentயாழ். உரும்பிராய் சந்தியில் நேற்று இடம்பெற்ற விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார். இவர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் மினிபஸ் ஒன்றுடன் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டது.

சபாபதிப்பிள்ளை வீதி, சுன்னாகம் என்ற முகவரியைச் சேர்ந்த சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன் (வயது 30) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார். இவரோடு மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணித்த எஸ்.கோபு (வயது30) என்ற இளைஞர் படுகாயமுற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 100 பேர் 21ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளனர்.

விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 100 பேர் எதிர்வரும் 21ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலநறுவையிலுள்ள சேனபுர என்ற தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளனர் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும், புனர்வாழ்வு பிரதி அமைச்சர் விஜிதமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வை முன்னிட்டு இவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிபொருட்கள் அகற்றும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் இளைஞர் படுகாயம்.

Landmine_Hello_Trust_Employeeயாழ்ப் பாணத்தில் வெடிபொருட்கள் அகற்றும் பணியிலீடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நேற்று தவறுதலாக இடம்பெற்ற வெடிவிபத்தில் படுகாயமடைந்தார். நேற்று வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. யாழ்.பொன்னாலை பாண்டவெட்டை என்ற இடத்தில் மிதிவெடியகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இவ்விபத்து ஏற்பட்டது.

கண்ணிவெடியகற்றும் நிறுவனமான ‘ஹலோ ட்றஸட்’ நிறுவனத்தில் பணியாற்றும் குருநகரைச் சேர்ந்த நிசாந்தன் எட்மன் பீரிஸ் என்ற 22 வயது இளைஞரே படுகாயமடைந்தவராவார். இவர் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

கண்ணிவெடியகற்றும் நிறுவனமான ‘ஹலோ டறஸ்ட்’ இல் போரினாலும் வறுமை நிலையினாலும் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளே அதிகளவில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ். பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் குறித்து அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க.

DD_and_SPDissanayakkaயாழ். பல்கலைக்கழகத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வருகை தந்த அமைச்சர் நேற்று புதன்கிழமை யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை உலகின் முதற்தரப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக உயர்த்தவுள்ளதாக அவர் தெரிவித்தார். மாணவர்களுக்கு இரு விசாலமான விடுதிகள் விரைவில் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் யாழ்.பல்கலைக்கழகத்தின் அழகியல், கலைத்துறையினை தனியொரு பீடமாக்க திட்டமிட்டுள்ளதாகவம், பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறும் மாணவர்கள சிறந்த அங்கில அறிவுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆங்கில மொழிக் கல்வியை சிறந்த முறையில் அபிவிருத்தி செய்யவும் திட்டமிடப்பட்டள்ளது எனவும் அத்துடன் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொடுத்தல், பல்தேசிய ஆளுமை மிக்கதான கற்கை நெறிகளை அறிமுகப்படுத்தல் என பல்வேறு திட்டங்கள் குறித்தும் அவர் தெரிவித்தார். பல்கலைக்கழக பரீட்சை முறையிலும் மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“யாழ்.சிங்களக் குடியேற்றத்தின் பின்னணியில் தென்னிலங்கை அமைப்பொன்று செயற்படுகின்றது” கூட்டமைப்பு எம்.பி அ.விநாயகமூர்த்தி

யாழ்.குடாநாட்டில் சிங்கள மக்கள் குடியேற்றத்தின் பின்னணியில் தென்னிலங்கையிலுள்ள அமைப்பு ஒன்று செயற்படுவதாகவும், தற்போது எற்பட்டுள்ள சுமுகநிலையை குழப்பி இனமோதல்களை தோற்றுவிக்க அந்த அமைப்பு யாழ்.குடாநாட்டில் சிங்களக் குடியேற்றங்களை நெறிப்படுத்தி வருவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான அ.விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். தற்போது யாழ். வந்து குடியமர்ந்துள்ள சிங்கள மக்களுக்கு யாழ்ப்பாணத்தில் காணிகள் எவையும் இல்லை. இந்நிலையில் அவர்கள் இங்கு குடியேற்றம் செய்யப்படுவது சட்டவிரோதமானது என அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் முன்னர் வாழ்ந்த முஸ்லிம்கள் இங்கு வந்து மீள்குடியேறுவது வரவேற்கத்தக்கது. ஏனெனில், அவர்களுக்கு சொந்தமாக காணிகள், வீடுகள் இங்கு உள்ளன. ஆனால், வியாபார நோக்கத்திற்காக முன்னர் இங்கிருந்த சிங்கள மக்களுக்கு காணிகள் வீடுகள் இல்லை. அவர்களை அரசாங்க காணிகளில் குடியேற்றம் செய்வது சட்டவிரோதமானதாகும். தற்போது நிலவுகின்ற சுமுகமான சூழ்நிலையை குழப்புவதற்காகவே இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்து உதவியுடன் யாழ். கோட்டை புனரமைப்பு.

Jaffna_Fordநெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நடைபெற்று வரும் யாழ்.கோட்டைப் புனரமைப்பு பணிகளை இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் லியோனி குலென்றே பார்வையிட்டுள்ளார். அதன் புனரமைப்பு வேலைகள் தொடர்பாக அவர் யாழ். அரசஅதிபரிடம் திருப்தி தெரிவித்துள்ளார்.

யாழ்.கோட்டையின் புனரமைப்பிற்காக நெதர்லாந்து அரசாங்கம் 62 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது. இதற்கு மேலதிகமாக இலங்கை அரசாங்கமும் 43.4 மில்லியன் ருபாவை ஒதுக்கியுள்ளது.

நேற்று மாலை யாழ்.மாவட்டச்செயலகத்தில் நெதர்லாந்து தாதுவர் அரசாங்க அதிபரைச் சந்தித்து கலந்துரையாடினார். அதன்போது யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் குறித்தும், நெதர்லாந்து அரசாங்கம் அதற்கு வழங்கவுள்ள உதவிகள் குறித்தும் நெதர்லாந்து தூதுவர் அரசஅதிபருக்கு விளக்கினார்.