சஜீர் அகமட் பி
சஜீர் அகமட் பி
தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு நாடுகளின் (சார்க்) வெளிவிவகார அமைச்சர்களின் 31வது அமர்வு இன்று காலை 10 மணிக்கு கொழும்பு – கொன்ரினன்ரல் ஹோட்டலில் ஆரம்பமாகின்றது.
ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்துவார்.
வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லா கமவின் தலைமையில் நடைபெறும் ‘சார்க்’ வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் இம்முறை ஏழு நாடுகளின் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி பதில் பிரதமராகவும் கடமையாற்றுவதால் இந்த மாநாட்டில் இந்தியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் இ. அஹமட் கலந்து கொள்கின்றார்.
மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஏற்கனவே ‘சார்க்’ வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கை வந்துள்ளனர். இவர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனித்தனி சந்திப்புகளை நடத்தி இரு தரப்பு விடயங்கள் குறித்து கலந்துரையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேல் மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் செயலகம் இன்று அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இன்று நண்பகலுடன் முடிவடைந்தன. இதனையடுத்தே தேர்தல் நடைபெறும் தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண சபையில் 102 ஆசனங்களைக் கைப்பற்றுவதற்காக இம்முறை 19 அரசியல் கட்சிகளையும் 26 சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த 2581 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேல் மாகாண சபை கடந்த ஜனவரி மாதம் 29ஆம் திகதி கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
களனி பல்கலைக்கழகத்தில் மாணவர் குழுக்களுக்கிடையிலான மோதல்கள் நேற்றும் தொடர்ந்ததையடுத்து பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களும் நேற்று முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளன.
மாணவர் குழுக்களுக்கிடையே மோதல்கள் நேற்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றதால் மாணவர்கள் சிலர் காயமடைந்திருப்பதாகவும் அதில் ஒருவர் திடீர் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் தெரிவித்தார். மோதல்களை அடக்குவதற்காகக் கலகம் அடக்கும் பொலிஸார் அழைக்கப்பட்டதுடன் கண்ணீர்ப் புகை பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸார் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் மாணவர்கள் அனைவரும் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அதேவேளை, பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ளோர் இன்று காலை 7 மணிக்கு முன்னர் வெளியேற வேண்டுமெனவும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதிலும் பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடிவிடுவதென நிர்வாகம் கூடி தீர்மானமெடுத்தது. இதனையடுத்து நேற்றுப் பிற்பகலில் பல்கலைக்கழகம் மூடப்பட்டது
அரிசி உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை இன்னும் இரண்டொரு வாரங்களுக்குள் வெகுவாகக் குறைவடையும் என்று வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அதேநேரம் சமையல் எரிவாயுவின் விலையில் மார்ச் மாதமளவில் மாற்றம் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
பணவீக்கம் குறைவடைந்து வருவதால் நூற்றுக்கு 28 ஆக விருந்த வாழ்க்கைச் செலவுப் புள்ளிவீதம் வெகுவாகக் குறைவடைந்து வருகிறது. எதிர்வரும் இரண்டு வாரங்களில் நூற்றுக்கு எட்டு அல்லது ஒன்பது வீதமாக இது குறைவடையுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.எதிர்வரும் புத்தாண்டு பண்டிகைக் காலங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்கான எவ்வித தட்டுப்பாடும் இருக்கமாட்டாதென தெரிவித்த அமைச்சர், குறைந்த விலையில் சகல பொருட்களையும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்குமெனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், நெல் அறுவடைக்காலம் என்பதால் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசியின் விலையில் வீழ்ச்சி ஏற்படும். பயங்கரவாதிகளிடமிருந்து கிழக்கு மாகாணம் மீட்கப்பட்ட பின் இம்முறை ஒரு இலட்சத்து இருபதினாயிரம் ஏக்கரில் புதிதாக நெற்செய்கை செய்யப்பட்டுள்ளது. இதனால் போதுமானளவு அரிசி கையிருப்பில் வருவதுடன் குறைந்த விலையிலும் அரிசியை விற்பனை செய்ய முடியும்.
அண்மைக்காலங்களில் சமையல் எரிவாயு, பெற்றோல், டீசல் உட்பட எரிபொருட்கள் மற்றும் பஸ், ரயில் கட்டணங்கள் குறைவடைந்துள்ளதால் வாழ்க்கைச் செலவுப் புள்ளிவீதம் குறைந்து வருகிறது. எதிர்வரும் இரண்டொரு வாரங்களில் வீழ்ச்சியும் பணவீக்கத்திற்கமைய நூற்றுக்கு எட்டு அல்லது ஒன்பது வீதமாக வாழ்க்கைச் செலவு குறைவடையும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
உயர் கல்வி தொடர்பான ஆசிய-பசுபிக் உப பிராந்திய மாநாடு இன்று இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்திய அரசாங்கமும் யுனெஸ்கோவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இம்மாநாடு புதுடில்லி விக்யான் பவானில் நடைபெறவிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ள இம்மாநாட்டில் ஆசிய-பசுபிக் பிராந்திய நாடுகளின் உயர் கல்வி அமைச்சர்கள் பங்குபற்றவுள்ளார்கள்.
இதேவேளை, இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இலங்கையிலிருந்து உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ணபால தலைமையிலான குழு பங்குபற்றவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வன்னியிலி ருந்து வரும் கர்ப்பிணித் தாய்மார்களின் நலன்கருதி வவுனியா ஆயுர்வேத வைத்திய நிலையத்தில் விசேட மத்திய நிலையமொன்று அமைக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று தெரிவித்தார். வன்னியில் இருந்து சுமார் 700 கர்ப்பிணித் தாய்மார்கள் வவுனியாவுக்கு வந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பிரசவத்தின் பின்னர் இவர்கள் முகாம்களுக்கு அனுப்பப்படாமல் மேற்படி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு சகல வசதிகளும் அளிக்கவுள்ளதாகவும் அவர்களின் குழந்தைகளின் நலன்களை கவனிக்கவும் விசேட ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.சுகாதார அமைச்சினூடாக இவர்களுக்கான வசதிகள் மேற்கொள்ளப்படும். இது தவிர வவுனியா வந்துள்ள மக்களுக்கும் சிறந்த சுகாதார வசதிகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இம்முறை வடமேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட மாகாண சபையின்முன்னாள் உறுப்பினர்கள் 21 பேர் தோல்வியடைந்துள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியில் 11 பேரும், மக்கள் விடுதலை முன்னணியில் 8 பேரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருவரும் என 21 முன்னாள் உறுப்பினர்கள் தோல்வியுற்றுள்ளனர்.
குருநாகல் மாவட்டத்தில் சுதந்திர முன்னணியில் ஒருவரும், ஐக்கிய தேசிய கட்சியில் ஏழு பேரும், மக்கள் விடுதலை முன்னணியில் ஐந்து பேரும் இத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தில் சுதந்திர முன்னணியில் ஒருவரும், ஐக்கிய தேசிய கட்சியில் இருவரும் மக்கள் விடுதலை முன்னணியில் மூவரும் தோல்வியடைந்துள்ளனர். மாகாண சபையில் ஆரம்பகாலம் முதல் உறுப்பினராக இருந்த புத்தளம் மாவட்ட ஐ.தே.கட்சியின் முதன்மை வேட்பாளர் யூ. எம். ஐயூப்கான் இம்முறை தோல்வி அடைந்துள்ளார்.
உலகப் புகழ் பெற்ற ஆஸ்கர் விருது விழா இன்றிரவு நடைபெறும் நிலையில், இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஆஸ்கர் விருதை வென்று புதிய வரலாறு படைப்பாரா எனும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள ‘ஸ்லம்டாக் மில்லினர்’ திரைப்படம் சர்வதேச அளவில் விருதுகளை வென்றுள்ளது. கோல்டன் குளோப் விருது உட்பட பல்வேறு விருதுகளை இந்தப்படமும், ஏ.ஆர்.ரஹ்மானும் வென்றுள்ளனர்.
.
ஆஸ்கர் விருதுக்காக 10 பிரிவில் இந்தப் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 3 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஹாலிவுட்டின் மதிப்புமிகு விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்றிரவு கோலாகலமாக நடைபெறுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்த விருதை வென்று வரலாறு படைக்க வேண்டும் என்று இந்திய திரைப்பட ரசிகர்கள் ஆர்வத்தோடும், நம்பிக்கையோடும் காத்திருக்கின்றனர்.
விடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று கட்டுநாயக்காவில் விமானப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தையடுத்து, அந்த விமானம் விழுந்த இடத்திற்கு நேற்று சனிக்கிழமை நீர்கொழும்பு நீதிவான் ஜயகிடி அல்விஸ் சென்று விசாரணை நடத்தினார். கட்டுநாயக்க விமான நிலையத்துக்கும் கட்டுநாயக்க ரயில் நிலையத்துக்கும் இடையில் வெள்ளிக்கிழமை இரவு இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்த விமானம் விழுந்த இடத்தில் இறந்து கிடந்த விமானியின் சடலத்தை நீர்கொழும்பு நீதிவான் பார்வையிட்டார். இச்சம்பவம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.
வெள்ளை நிறத்திலான விமானியின் சடலம் நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரில் வெள்ளிக்கிழமை இரவு வந்த விடுதலைப்புலிகளின் இரு விமானங்களில் ஒன்றை விமானப்படையினர் கட்டுநாயக்காவில் சுட்டுவீழ்த்தியதாக விமானப்படையினர் தெரிவித்தனர்.
இலங்கை இறைவரித்திணைக்கள கட்டிடத்தின் மோதுண்ட விமான சிதைவுகள்
புகைப்படங்கள் www.lankadeepa.lk, இணையத்தளத்திலிருந்து பெறப்பட்டவை.