சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

தமிழக பி.ஜே.பி. வேட்பாளர் பட்டியல் வெளியீடு : தென் சென்னையில் இல.கணேசன் போட்டி

india-election.jpgநாடாளுமன்றத் தேர்தலில் தமிழக பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும். தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.  தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி புதுச்சேரி உள்ளிட்ட 12 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைவர் இல.கணேசன் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார்.

ராகுல் காந்தி பிரதமர் ஆவது உறுதி!: பிரியங்கா பேட்டி

23-priyanka.jpgராகுல் காந்தி பிரதமர் ஆவது உறுதி என்று, பிரியங்கா கூறினார். அமேதி தொகுதியில், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்திக்காக அவரது தங்கை பிரியங்கா, பிரசாரம் செய்து வருகிறார். இதுவரை அவர் 18 கூட்டங்களில் பேசி இருக்கிறார். அயோத்யா நகரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றால், மன்மோகன்சிங் தான் பிரதமர். இதில் மாற்றம் இல்லை. அவரது பெயரை காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்து விட்டது. ராகுல் காந்தி சிறந்த உழைப்பாளி. அவருக்கு சிறப்பான திறமை உண்டு. பிரதமராக அவருக்கு அனைத்து தகுதிகளும் இருக்கிறது. எதிர் காலத்தில் ஒருநாள் ராகுல்காந்தி பிரதமர் ஆவது உறுதி.

நான் அரசியலில் ஈடுபடுவேனா? என்ற கேள்விக்கு, எதிர்மறை பதிலை கொடுக்க விரும்பவில்லை. இல்லை என்பது நான் விரும்பாத வார்த்தை. ஆனால் இப்போது நான் அதுபற்றி சிந்திக்க வில்லை. எனது அண்ணன் மற்றும் தாயார் தொகுதிகளில் தேர்தல் நிர்வாகியாக மட்டும் செயல்படுகிறேன். சிறிய பொதுக்கூட்டங்களில் பேசுகிறேன். எனக்கும் வயதாகிக்கொண்டே போகிறது. எனவே அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று கூறிக்கொள்ள விரும்பவில்லை. இவ்வாறு பிரியங்கா கூறினார்.

‘தாய்லாந்தில் நிலைமைகள் கட்டுப்பாட்டில்’

protest_afp.jpgதாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இராணுவத்தினருக்கும் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்ட பின்னணியில், தற்போது அங்கு நிலைமைகள் கட்டுக்குள் இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் அபிஷிட் வெஜஜிவா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் சிலர் கொல்லப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை அபிஷிட் அவர்கள் மறுத்தார். இராணுவத்தினர் வெறும் சத்த வெடிகளை மட்டுமே வெடித்ததாகவும் அவர் கூறினார். தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரா அவர்களின் ஆதரவாளர்களுக்கும் படையினருக்கும் இடையில் நடந்த தள்ளுமுள்ளுகளில், போராட்டக்காரர்கள் பலர் காயமடைந்தனர். இந்த போராட்டங்களை தாம் ஏற்பாடு செய்யவில்லை என்று தக்ஷின் தெரிவித்தார்.

மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறி ஒளிக்கதிர்கள் நாடெங்கும் வீசட்டும் – பிரதமர்

pm-srianka.jpgமக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றி சமாதானத்தின் ஒளிக்கதிர்களை நாடுமுழுவதிலும் பரவச் செய்து பிறக்கும் சிங்கள, தமிழ் புத்தான்டினை ஏனைய காலங்களை விடவும் இம்முறை மக்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடுவார்கள் என்பதே எனது நம்பிக்கையாகும்.

பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

மக்களின் அன்றாட வாழ்க்கையையும், பொருளாதாரத்தையும் பாதிப்பிற்கு உள்ளாக்கிய பயங்கரவாதமானது நிரந்தரமாக இல்லாதொழிவதைக் காண்பதே அனைத்து இலங்கைவாழ் மக்களினதும் பிரார்த்தனையாக அமைந்தது. உண்மையாகவே மகிழ்ச்சியுடன் இவ்வாறு கொண்டாடுவதற்கு வழியமைத்துத் தந்தவர்ள் எமது வீரமிக்க இராணுவத்தினரே. இவர்களின் உயிர்தியாகத்துடன் கூடிய பணியை சிறிதும் மறந்துவிட முடியாது. வீரமிக்க இராணுவ வீரர்களை போர் முனைக்கு அனுப்பிவிட்டு உறுதியற்ற அச்சத்துடன் வாழ்ந்து வந்த ஆயிரக்கணக்கான தாய்மார்கள், இராணுவத்தினரின் மனைவி, மக்கள் அச்சமின்றி மன அமைதியுடன் இருப்பதற்குக் கிடைத்துள்ளமையானது இம்முறை புத்தாண்டின் மற்றுமொரு முக்கியத்துவமாகும்.

பயங்கரவாதிகள் காட்டிய போலியான எல்லைகளில் சிக்குண்டு காணப்பட்ட மக்களுக்கு சுதந்திரத்தை உண்மையான முறையில் அனுபவிப்பதற்கான வாய்ப்பும் கிட்டியுள்ளது. வடக்கிலும், தெற்கிலும் பேதங்களின்றி அனைத்து மக்களும் தமது நடவடிக்கைகளில் ஈடுபட்டு சிறந்ததொரு எதிர்காலத்தை அடைவதற்கான வழி பிறந்துள்ளது.

கிழக்கிலே பயிரிடப்பட்ட நிலங்களிலிருந்து சிறந்த அறுவடைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக பயிரிடாதுள்ள வடக்குப் பிரதேச நிலங்கள் நாளை பயிரிடும் நிலங்களாக மாறும். அப்போது மிகவும் செழிப்புள்ள நாடொன்றை வருங்கால சந்ததியினருக்கு பெற்றுக்கொடுக்க முடியும்.

பிறந்துள்ள தமிழ், சிங்கள புத்தாண்டானது சகலருக்கும் சமாதானம், மகிழ்ச்சி பொருந்திய இனிய புத்தாண்டாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன்.

தாய்லாந்தில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம்

protest_afp.jpgதாய்லாந்து அரசாங்கம் அவசரகால சட்டத்தை பிறப்பித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பாங்காங்கின் பிரதான வீதிகளில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டகாரர்கள் குவிந்து வருகின்றனர்.

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் ஆதரவாளர்களான இவர்கள், உள்துறை அமைச்சகத்திற்குள் உட்புகுந்ததோடு, தற்போதைய பிரதமர் பயணித்ததாக கருதப்படும் வாகனம் மீது கற்கள் மற்றும் இதர பொருட்களை வீசி எறிந்தனர். வீதிகளில் இராணுவம் குவிக்கப்பட்டு இருந்தாலும், இது வரையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ரயில் தடம் புரண்டதில் 11,400 லீட்டர் எரிபொருள் கசிவு – தம்புத்தேகமவில் சம்பவம்

கொலன்னாவையில் இருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற ரயில் வண்டியொன்று தம்புத்தேகம பகுதியில் நேற்று (12) அதிகாலை தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது. இந்த ரயிலில் 32,800 லீட்டர் எரிபொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதோடு 5 பெட்டிகள் தடம்புரண்டதால் பெருமளவு எரிபொருள் கசிந்துள்ளதாக ரயில்வே போக்குவரத்து முகாமையாளர் விஜய சமரசிங்க கூறினார்.

தடம்புரண்ட பெட்டிகளுள் சுமார் 11,400 லீட்டர் எரிபொருள் இருந்ததாகவும் அவர் கூறினார். மேற்படி ரயில் இரவு 10 மணிக்கு கொலன்னாவயில் இருந்து பயணமானதோடு அதிகாலை 5.50 மணியளவில் விபத்து நிகழ்ந்துள்ளது. ரயிலில் இருந்து கசியும் எரிபொருட்களை அருகில் உள்ள கிராம மக்கள் நேற்றுக்காலை (12) முதல் எடுத்துச் செல்வதாகவும் அறிவிக்கப்படுகிறது. தடம்புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றவும் ரயில் பாதையை சீர்செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரயில் தடம்புரண்டதையடுத்து யாழ். தேவி ரயில் சேவை கல்கமுவ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

போர் நிறுத்தம்: இலங்கையை அழுத்தி வருகிறோம்- ப.சிதம்பரம்

chidambaram1.jpgபிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், நான் ஆகியோர் சேர்ந்து ஆலோசனை செய்து போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என இலங்கை அரசிடம் அழுத்தமான கோரிக்கை வைத்துள்ளோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். நேற்று இலங்கையில் 2 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று காரைக்குடி அருகே வடகுடியில் நிருபர்களிடம் சிதம்பரம் பேசுகையி்ல்,

இலங்கைப் பிரச்சனை குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்கெதிராக மற்றொருவர் பேசியும், அறிக்கைகள் விடுத்தும் வருகின்றனர். இதிலே சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

மத்திய அரசைப் பொறுத்தவரை 83ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வந்த வேறு வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அரசுகள் இந்த பிரச்சனையில் ஒரே கொள்கையினையே கடைப்பிடித்து வந்துள்ளன. நம்மைப் பொறுத்தவரை இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சம உரிமைகளை அளிக்கும் குடியுரிமை கிடைக்க வேண்டும். ஒருங்கிணைந்த இலங்கையிலே தமிழர்கள் வாழும் பகுதியிலே ஒரு மாநிலம் அமைய வேண்டும். தேவையெனில் மேலும் ஒரு மாநிலம் அமையலாம்.

இது நமது கொள்கை இந்த கொள்கையில் முன்னேற்றம் கொண்ட காலமும் உண்டு, பின்னடைவு ஏற்பட்டதும் உண்டு. தற்போதைய பின்னடைவு நமக்கு மிகுந்த வருத்தத்தையும் கவலையினையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக போர் நிறுத்தத்தினை பல மாதங்களாக வலியுறுத்தி வருகிறோம். இந்தியாவின் குரல் ஓங்கி ஒலித்ததன் காரணமாகத் தான் இன்று இந்தியாவோடு சேர்ந்து உலக நாடுகளும், ஐநாவும் சேர்ந்து போர் நிறுத்தத்தினை வலியுறுத்துகின்றன. நேற்று முன்தினம் கூட ஐநா. சபையின் செயலாளர் பான்-கி-மூன் போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், நான் ஆகியோர் சேர்ந்து ஆலோசனை செய்து சில அழுத்தமான கோரிக்கைகளை இலங்கை அரசிடம் தெரிவித்திருக்கிறோம். மிகுந்த அழுத்தத்தோடு வற்புறுத்தி தெரிவித்திருக்கிறோம். போர் நிறுத்தத்தினை கோரிக்கை, வேண்டுகோளாக இல்லாமல் அதற்கும் மேலான தேவையாகவே கூறியுள்ளோம்.

அதே நேரத்தில் விடுதலைப் புலிகள் தரப்பினரையும் போர் நிறுத்தத்திற்காக வற்புறுத்தி வருகிறோம். இதற்கு பலன் கிடைக்கும் என நம்புகிறேன். இதற்கு பலன் கிடைக்காவிட்டால் இலங்கை அரசுக்கு, இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் பெரிய பாதிப்பு ஏற்படும். தமிழக மக்கள் மத்திய அரசின் நடவடிக்கைகளை நம்ப வேண்டும், ஆதரிக்க வேண்டும். மத்திய அரசில் 4 ஆண்டுகள் 11 மாதம் அங்கம் வகித்து விட்டு அந்த அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்துக்கும் சம்மதம் தெரிவித்து விட்டு, அதன்பின் அந்த அரசை விட்டு வெளியே வந்து இந்த அரசு இலங்கை பிரச்சினையில் எதுவுமே செய்யவில்லை என்று சிலர் (பாமக) கூறுவது அபத்தமான விநோதம்.

அமைச்சரவையில் நடைபெறும் விவாதங்கள் முடிவுகளை அனைத்து அமைச்சர்களும் அறிவார்கள். மாற்று கருத்து இருந்தால் அப்போது தெரிவித்து இருக்க வேண்டும். மத்திய அரசு இந்த நிமிடம் வரை போர் நிறுத்தத்திற்கான தேவையை வலியுறுத்தி வருகிறது. இலங்கையில் இரு தரப்பினரும் போர் நிறுத்தத்திற்கு முன் வருவார்கள் என நம்புகிறேன் என்றார்.

ஈஸ்டர் திருநாளில் போர் நிறுத்தம் ஏற்படட்டும்: ஜெயலலிதா

jaya.jpgஅன்பும்,  இரக்கமும் உயிர்த்தெழட்டும் என்று, ஜெயலலிதா தனது ஈஸ்டர் திருநாள் வாழ்த்தில் கூறி இருக்கிறார். அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

அன்பின் வடிவமாம் இயேசு பெருமான், சிலுவையில் மாண்டு உயிர்த்தெழுந்த திருநாள் ஈஸ்டர் பண்டிகை என்னும் பெயரால் உலகு எங்கும் கொண்டாடப்படும் இந்த வேளையில், கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நன்னாளில், அன்பு உயிர்த்தெழட்டும், உயிர் இரக்கம் உயிர்த்தெழட்டும், அமைதி தவிழட்டும், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படட்டும், அகிலம் முழுவதும் ஆனந்தம் தாண்டவமாடட்டும் என பிரார்த்திப்போம். எனது அன்புக்குரிய கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் என் இனிய ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஜனாதிபதி நாடு திரும்பினார் – 500 மில். டொலர் நிதி உதவி; ஒரு இலட்சம் பேருக்கு வேலை

mahinda-rajapaksha.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் உத்தி யோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்று நாடு திரும்பினார். அவர் லிபிய ஜனாதிபதி கேர்ணல் மு அம்மர் கடாபி, பிரதமர் அல்படாதி அலி அல் முஹம்மதி உட்பட மேலும் பல தலைவர்களை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினார். இந்த விஜயத்தின் போது மூன்று முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.

500 மில்லியன் அமெரிக்க டொலரை நிதி உதவியாக வழங்கவும் சுகாதார சேவை, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப் புகளை வழங்கவும் லிபியா இணக்கம் தெரிவித்துள்ளது.

கடத்தலை தொடரும் சோமாலிய கடற்கொள்ளையர்கள்

caption.jpgஅமெரிக்க கடற்படை கப்பல்களுக்கும், அமெரிக்கர் ஒருவரை பணயமாக பிடித்து வைத்துள்ள சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கும் இடையிலான இழுபறிகள் தொடருகின்ற நிலையில், ஏடன் வளைகுடாவில் மேலும் இரு சம்பவங்கள் இடம்பெற்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

16 அமெரிக்க சிப்பந்திகளுடனான அமெரிக்க இழுவைப் படகு ஒன்று கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக மரிடைம் அமைப்பு கூறுகின்றது. பிறிதொரு சம்பவத்தில், கடற்கொள்ளையர்கள்,  இருபத்தாறாயிரம் தொன்கள் எடையுள்ள கடற்கலன் ஒன்றின் மீது சுட்டதாக கூறப்படுகின்றது.

அந்த கப்பலின் தலைமை மாலுமியின் அறையை நோக்கி அவர்கள் கைக்குண்டை ஏவியதாகவும், ஆனாலும், அது வெடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. கப்பல் சிப்பந்திகள் கடற்கொள்ளையர்களை தண்ணீர் குழாய்கள் மூலம் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.