பயங்கர வாதத்துக்கு அரசாங்கம் எப்போதுமே எதிரானது என்பதில் அணுவளவேனும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை என்றும் ஆனால், தமிழ் மக்களுக்கு ஒருபோதும் தற்போதைய அரசாங்கம் எதிரானது இல்லை என்றும் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
பயங்கரவாதிகளையும் தமிழ் மக்களையும் வேறுபிரித்துப் பார்க்கும் சக்தி அரசாங்கத்துக்கு இருப்பதாகவும் பிரதமர் கூறினார். ஹெரனையில் ஞாயிற்றுக்கிழமை ஹெரனை தேர்தல் தொகுதியில் உள்ள பெருந்தோட்ட பிரதிநிதிகளை சந்தித்துப் பேசியபோதே பிரதமர் இவ்வாறு கூறினார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்;
இலங்கையில் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக பரந்தளவிலான கூட்டணியொன்று ஏற்பட்டிருக்கிறது. இந்த கூட்டணியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் 21 கட்சிகள் இருக்கின்றன. நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது செய்வதற்காகவே சகலரும் இந்தக் கூட்டணியில் இணைந்திருக்கின்றனர்.
எந்த இனத்தவராக இருந்தாலும் சரி எந்த மதத்தவராக இருந்தாலும் சரி நாட்டிலுள்ள அனைத்து மக்களும் இலங்கையர்களே. இலங்கையின் சகல பிரஜைகளுக்கும் சம உரிமை இருக்க வேண்டுமென்பதே எமது நிலைப்பாடு. பயங்கரவாதத்தை நாம் எப்போதும் எதிர்க்கிறோம். அதில் அணுவளவேனும் சந்தேகம் கொள்ளவேண்டாம். எனினும் நாம் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு எதிரானவர்களல்ல. தமிழ் மக்களையும் பயங்கரவாதிகளையும் வேறுபடுத்தியறியும் சக்தி எமக்கு இருக்கிறது.
இதேநேரம் சிலர் இலங்கை பற்றி தவறான தகவல்களையும் கருத்துகளையும் உலகுக்குப் பரப்புகின்றனர். தோட்டப்புறங்களில் வேலை செய்வதற்கான மனித வளம் குறைந்து வருகிறது. நான் இதைக் கூறுவது தோட்டப்புறத்திலுள்ள மக்கள் அப்படியே அங்கேயே இருக்கவேண்டுமென்று அர்த்தமில்லை. மாற்றுவழி தேவையென்றே கூறுகின்றேன். இது தொடர்பாக ஆராய்ந்து ஏற்புடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
ஏனெனில் உலக மாற்றத்துக்கு ஏற்ப மக்களின் மாற்றத்தையும் நிறுத்திவிட முடியாது. குறுகிய நோக்கங்களிலிருந்தும் எண்ணங்களிலிருந்தும் விலகி உலக அபிவிருத்திக்கும் தொழிநுட்ப வளர்ச்சிக்கும் ஏற்ப நாமும் செயலாற்ற வேண்டும் என்றார்.