இலங்கையில் நெடுங்காலமாக இருந்துவரும் தமிழ் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அவ்வப்போது பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோதும் அவ்வாறான சந்தர்ப்பங்களை முறையாகப் பயன்படுத்தாது,
அந்த முயற்சிகளுக்குத் தடையாக இருந்து வந்தது புலித்தலமையே என சமூகசேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன ரீதியாகவும் வறுமை காரணமாகவும் உருவாகி வரும் பாகுபாடுகளை நீக்கும் முகமாக சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்ற அமைச்சர் அங்கு ஐ.நா. செயலாளரை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே இவ்வாறு கூறியுள்ளார்.
புலிகளின் இத்தகைய செயற்பாடுகளால் இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் தொடர்ந்தும் துயரங்களையும் அழிவுகளையும் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகி வருவதாகவும் அமைச்சர் தேவானந்தா இங்கு மேலும் தெரிவித்திருந்தார்.
இலங்கை அரசாங்கம் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்திருப்பது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர்ää அவற்றுக்கான மேலதிக அதிகாரங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஆரதரவளிக்க வேண்டும் என ஐ.நா. செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அரசியலுரிமைப் பிரச்சினைக்குரிய தீர்வு நோக்கிய முயற்சிகளுக்கு எதிராகக் காணப்படும் அனைத்துத் தடைகளும் அகற்றப்படும் பட்சத்தில் இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்களை அழிவுகளிலிருந்து நிரந்தரமாக மீட்டெடுக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மனித அழிவுகளும் அவலங்களும் அற்ற ஒரு சமாதான தேசத்தை உருவாக்கவும் அமைதி, அபிவிருத்தி மற்றும் அரசியலுரிமை என்பனவற்றை எமது மக்கள் அனுபவித்து மகிழவும் உதவ வேண்டும் என இச்சந்திப்பின்போது ஐ.நா. செயலாளரிடம் அமைச்சர் தேவானந்தா வேண்டுகோள் விடுத்தார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.