சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரியங்கா

23-priyanka.jpgஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி வாத்ரா கூறியுள்ளார்.

நாட்டின் முன்னாள் பிரதமரைக் கொன்றவர்கள் என்ற நிலையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்று அவர் பிபிசிக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தப் பிரதேசங்களில் சிக்குண்டுள்ள மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை தான் புரிந்துகொண்டுள்ளதாகவும், அம்மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய இந்தியா முயல வேண்டும் என்றும் பிரியங்கா காந்தி வாத்ரா தெரிவித்துள்ளார்.

சமீப காலங்களில் ராஜீவ் கொலை வழக்கு பற்றிய தனது கருத்துக்களை பிரியங்கா சற்று வெளிப்படையாகவே தெரிவித்துவருகிறார்.

வேலூர் சிறைக்கு சென்று ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினியை சந்தித்திருந்த பிரியங்கா காந்தி இக்கொலை தொடர்பாக யார் மீதும் பழி வாங்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அவரின் சகோதரரான ராகுல் காந்தி ராஜிவ் காந்தி கொலை தொடர்பாக தமக்கு இன்னமும் நியாயம் கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார்

மஹியங்கனையில் சிங்கள ஆசிரியையினால் எழுதப்பட்ட தமிழ்நூல் வெளியீடு

மஹியங்கனை பண்டாரநாயக்க மத்திய மகா வித்தியாலயத்தில் தமிழ் மொழி கற்பிக்கும் ஆசிரியை விமலா கொடிஆரச்சி எழுதிய இரண்டு தமிழ்ப் புத்தகங்களின் (கைநூல்) வெளியீட்டு விழா அண்மையில் மஹியங்கனை தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. வெளியீட்டு விழா நிகழ்வில் நூலாசிரியர் விமலா கொடிஆரச்சி பேசுகையில்: ‘நான் சிங்கள மொழிமூலம் கற்றேனாயினும் தமிழ் மொழியின் மீதுள்ள பற்றுதல் மற்றும் ஆற்றல் காரணமாக இக்கைநூலை எழுதக் கிடைத்தது. இந்நூல் சிங்கள மொழி மூலக் கல்வி பயிலும் மாணவர்களின் தேவையில் ஒரு சிறு பங்களிப்பைச் செய்யும் என்று எதிர்பார்க்கிறேன்.’

‘6ம், 7ம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான தமிழ் மொழிக் கைநூல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்புத்தகங்கள் நன்கு பிரயோசனப்படக் கூடியவையாகும். மஹியங்கனை ஜீ.எம். நூல் வெளியீட்டு நிறுவனத்தினால் இப்புத்தகங்கள் வெளியிட்டு வைக்கப்பட்டன

உற்பத்தி செலவினத்தைக் குறைக்க புதிய வகை இயந்திரம் அறிமுகம்

சுமார் 55 வருடகால பழைமைவாய்ந்த வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையின் உற்பத்தி நடவடிக்கைகளை மேம்படுத்தவென தேச நிர்மாண அமைச்சின் 20 மில்லியன் ரூபா நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட புதிய இயந்திரமொன்று தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டுள்ளது. உமி மூலமாக எரியூட்டும் இவ்வியந்திரத்தின் செயற் பாட்டினை கடதாசி ஆலையின் தலைவர் சிறிபால அமரசிங்க வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

ஆலை முகாமையாளர் ரீ. வாமதேவன் தலைமையில் இது தொடர்பாக நடைபெற்ற வைபவத்தில் சர்வமதத் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். உமியை எரிபொருளாகக் கொண்டு இப்புதிய இயந்திரம் இயங்கச் செய்வதனால் கடதாசி உற்பத்திச் செலவு குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

1955 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வாழைச்சேனை கடதாசி ஆலையில் மூவாயிரம் ஊழியர்கள் பணியாற்றி மாதம் ஒன்றில் 1800 தொன் உற்பத்தி இடம்பெற்றது. பிற்காலத்தில் அரசுகளின் மாறுபட்ட கொள்கை காரணமாக சந்தைப்படுத்தலில் ஏற்பட்ட வீழ்ச்சியினையடுத்து ஆலை நட்டத்தில் இயங்கியது.

இதையடுத்து ஊழியர்களது எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது 240 ஊழியர்கள் மாத்திரமே பணியாற்றுவதுடன், மாதத்திற்கு 450 தொன் கடதாசியே உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குள்ள கட்டடங்கள் பழைமையடைந்துள்ளதுடன், இயந்திரங்களும் துருப்பிடித்துக் காணப்படுகின்றன.

இங்குள்ள ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்குக் கூட உற்பத்தி இலாபம் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பணிப்புரைக்கிணங்க வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையின் உற்பத்தி நடவடிக்கைக்கு ஊக்கமளிக்கும் நோக்குடன் புதிய இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்தேவி சேவை வவுனியா வரையுமே

sri-lanka-railway.jpgயாழ் தேவி ரயில் சேவை தாண்டிக்குளம் வரையும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டபோதிலும், பாதுகாப்பு காரணங்களால் வவுனியா வரையுமே தற்போது நடைபெறுகிறது. வியாழக்கிழமையில் இருந்து யாழ்தேவி ரயில் வவுனியாவுக்கு அப்பால் தாண்டிக்குளம் ரயில் நிலையம் வரையும் நடைபெறும் என போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிவித்திருந்தார்.

ஆனால், தற்போதைய நிலையில் பாதுகாப்பு காரணங்களால் வவுனியாவுக்கு அப்பால் இச்சேவையை நீடிக்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். வவுனியாவில் இருந்து மூன்று கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள தாண்டிக்குளம் ரயில் நிலையமும் ரயில் பாதையும் புனரமைக்கப்பட்டது.

யாழ்தேவி ரயில் சேவையை மீண்டும் வடக்கு நோக்கி நடத்துவதற்கு தொடர்பான திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு கடந்த மார்ச் 23 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. இதன்போது வடபகுதி நோக்கிய ரயில் சேவையின் அவசியம் குறித்தும் ஆராயப்பட்டது.

அமைச்சர் முரளிதரன் சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவராக நியமனம்

karuna_amman.jpgதேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று கட்சியின் செயற்குழுக் கூட்டம் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடை பெற்ற போது விநாயகமூர்த்தி முரளிதரனை உப தலைவர்களில் ஒருவராக நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.கட்சி யாப்பின்படி 5 உப தலைவர்களில் ஒருவராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

அத்தியாவசிய உதவிகளை வழங்க சர்வதேச நாடுகள் முன்வருகை

cvili.jpgபுலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்துள்ள மக்களுக்குத் தேவையான சகல அத்தியாவசிய உதவிகளையும் வழங்குவதற்கு சர்வதேச சமூகம் முன்வந்துள்ளது. இதனடிப்படையில் 40 ஆயிரம் குடும்பங்களுக்கென இந்தியா அனுப்பி வைத்திருக்கும் அவசரகால உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இன்று வெள்ளிக்கிழமை கிடைக்கப் பெறவிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம நேற்றுத் தெரிவித்தார்.

இதேநேரம் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்துள்ள மக்களுக்கான நிவாரண உதவிகளை ஒருங்கிணைக்கவென வெளிவிவகார அமைச்சின் மேலதிகச் செயலாளர் சித்ராங்கனி வாகிஸ்வரா தலைமையில் விசேட செயலணியொன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

புலிகளின் பிடிலியிலிருந்து தப்பி வந்துள்ள மக்கள் விவகாரம் குறித்து வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம, கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுக்குத் தெளிவுபடுத்தினார்.

இச்சமயம் அவர் விடுத்த வேண்டுகோளுக்கு ஏற்ப, புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்துள்ள மக்களுக்குத் தேவையான சகல அத்தியாவசிய உதவிகளையும் வழங்குவதற்கு இராஜ தந்திரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இச்சந்திப்பைத் தொடர்ந்து நடாத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் ரோகித போகொல்லாகம மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் கூறுகையில், புலிகளின் பிடியிலிருந்து ஒரு இலட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தப்பி வந்துள்ளனர். இம்மக்களைப் பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும் தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்.

அதேவேளை இம்மக்களின் தேவைகளையும் நாம் இனம் கண்டுள்ளோம். குடிநீர், அடிப்படை சுகாதார வசதிகள், மருத்துவ உதவிகள், தற்காலிக மற்றும் இடைத்தங்கல் வசதிகள் என்பனவே அத்தேவைகளாகும். இது தொடர்பாக இராஜ தந்திரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கேற்ப ஐக்கிய அமெரிக்கா நடமாடும் வைத்தியசாலையொன்றை வழங்கவும் முன்வந்துள்ளது. ஐ. நா. நிறுவனங்களும் உதவ முன்வந்துள்ளன.

புலிகளின் பிடியிலிருந்து 48 மணி நேரத்தில் ஒரு இலட்சத்து 2 ஆயிரம் பொதுமக்கள் தப்பி வந்துள்ளார்கள். எஞ்சியுள்ள மக்களும் அடுத்துவரும் சில தினங்களுக்குள் விடுவிக்கப்படுவர், இப்போது புலிகளும் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பிலேயே இருக்கின்றனர். இல்லாவிட்டால் அவர்கள் அரசு அறிவித்த பாதுகாப்பு வலயத்தில் இருந்திருக்க மாட்டார்கள்.

இம்மக்களின் நிலைமை தொடர்பாக கொழும்பிலுள்ள இராஜ தந்திரிகளுக்கு மட்டுமல்லாமல் கனடா வெளிவிவகார அமைச்சருக்கு நேற்று முன்தினமிரவும், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருக்கு நேற்றும் எடுத்துக் கூறியுள்ளேன். இன்று பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சருக்குத் தெளிவுபடுத்துவேன் என்றார்.

இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் சேகரிப்பு

Wanni_War_Boat_Refugeesவவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க விரும்புவோர், அவற்றை மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் ஊடாகப் பெற்றுக்கொடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

சில பரோபகாரிகளும், நிறுவனங்களும் அமைப்புகளும் இடம்பெயர்ந்தவர்களுக்கு வழங்குவதற்காக புத்தாடைகள், உலருணவுப் பொருள்கள், குடிநீர் போத்தல், பிஸ்கட், பால் மா, தேயிலை, பற்பசை பற் தூரிகைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடமும், நிறுவனங்களிடமும் சேகரித்து வருகின்றமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும், அவற்றை அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையத்தின் லொறிகள் மூலம் இலவசமாக வவுனியாவுக்குக் கொண்டு சென்று வவுனியா அரச அதிபரிடம் ஒப்படைக்க முடியுமெனவும் அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பான விபரங்களை 0112431590 மற்றும் 0112431579 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையத்தின் பணிப்பாளரையோ அல் லது 0112395513 என்ற இலக்கத்துடன் அமைச்சின் செயலாளர் யூ. எல். எம். ஹலால்தீனையோ தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமூகத்தின் கண்ணீரைத் துடைக்கவே தேர்தலில் குதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது – அஸ்லம் தாலிப்

election.jpgமுஸ்லிம் சமுதாயத்தின் கண்ணீரைத் துடைக்கவே நான் தேர்தல் களத்தில் குதித்தேன். என் போன்ற இளைஞர்கள் நம் சமுதாயத்தில் புரையோடிப் போயுள்ள இன்னல்களை இனம் கண்டு சேவை செய்ய முன்வர வேண்டுமென கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீ.ல. முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் அஸ்லம் தாலிப் தெரிவித்தார்.

அவரது இல்லத்தில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் குழுக் கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் அஸ்லம் தாலிப் மேலும் தெரிவிக்கையில்; பல்வேறு கோணங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்ற மூத்த அரசியல் வாதிகள், முஸ்லிம் சமூகத்தின் இளம் சமுதாயத்தின் எதிர்காலத் திட்டங்கள் பற்றி எதுவுமே சொல்லாமல் பிதற்றிப் பேசி வருகின்றனர்.

கொழும்பில் சீரான நீர் வடிகாலமைப்பு இல்லை. சேரிப் புறங்களில் சிறு வீதிகள் சிதைந்து காணப்படுகின்றன. வீடுகள் ஒழுகிக் கரைகின்றன. இவற்றில் கவனமெடுத்து சமுதாய ஏழை எளிய மக்களின் துயரங்கள் துடைக்கப்படவே நான் இத் தேர்தலில் களமிறங்கினேன். இதேபோல கொழும்பு முஸ்லிம் பாடசாலைகள் மிகவும் பின் தங்கிக் காணப்படுகின்றன. ஏன் இந்த அவல நிலை. வேறு மாவட்டங்களில் எமது முஸ்லிம் மாணவர்கள் கல்வியில் முன்னேற வெற்றிக் கம்பங்களை எட்ட முடியுமானால் ஏன் எம்மால் முடியாமலுள்ளது. யார் சிந்திக்கின்றார்… நான் கூறிய உண்மைகளை என்னால் கூட நம்ப முடியவில்லை தான். ஆயினும் நாம் எல்லோரும் ஜீரணித்துத் தான் ஆக வேண்டும் என்றார்.

வேலைநிறுத்தம்: பஸ்களை நிறுத்திய அதிகாரிகள், கடைகளை மூடிய போலீஸ்

23-bandh-tamilnadu.jpgதிமுக அழைப்பு விடுத்திருந்த பொது வேலைநிறுத்தம் தமிழகத்தை கடுமையாக பாதித்தது. அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளே டிப்போக்களை மூடி விட்டதால் பஸ்களை இயக்க வந்த டிரைவர்களுக்கும் அனுமதி தரப்படவில்லை. போலீஸாரே பல பகுதிகளில் கடைகளை மூடச் சொல்லியதாக கடைக்காரர்கள் புகார் கூறுகின்றனர். திமுக பந்த்தால் மக்கள் பெரும் அதிருப்தியும், கோபமும் அடைந்துள்ளனர்.

ஈழத்தில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி திமுக தலைவர் கருணாநிதி, இன்று பொது வேலைநிறுத்தம் மேற்கொள்ள அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் சில அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. இருப்பினும் அதிமுக, மதிமுக, பாமக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இதில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்து விட்டன. போராட்டத்திற்கு ஆதரவு தருவதாக திரையுலகம், வணிகர்கள் சங்கம் உள்ளிட்டவை தெரிவித்திருந்தன.

இந்த நிலையில், இன்று காலை போராட்டம் தொடங்கியது. பொது வேலைநிறுத்தத்தின்போது போக்குவரத்து இயல்பு நிலையில் இருக்கும், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி அறிவித்திருந்தார். இருப்பினும் நேற்று இரவு முதலே அரசுப் பேருந்துகள் ஓடவில்லை. குறிப்பாக வெளியூர்ப் பேருந்துகள் ஓடவில்லை. பயத்தின் காரணமாக தனியார் பேருந்துகளும் ஓடவில்லை. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசுப் போக்குவரத்துக் கழக டிப்போக்கள் மூடப்பட்டு விட்டன. பஸ் நிலையங்களில் உள்ள போக்குவரத்துக் கழக விசாரணை அறைகளும் மூடப்பட்டு விட்டன.

போக்குவரத்துக் கழக அதிகாரிகளே, டிப்போக்களை மூடியதால், பஸ்களை இயக்க வந்த அதிமுக உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த டிரைவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் மூடப்பட்டுள்ளன. திறந்திருந்த கடைகளையும் திமுகவினர், போலீஸாரோடு வந்து மூடச் சொல்லியதாக கடைக்காரர்கள் புகார் கூறியுள்ளனர். சென்னை புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம் ஆகிய பகுதிகளில் திமுகவினர் பெரும் கும்பலாக வந்து கடைகளை மூடுமாறு கூறியுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக போலீஸாரும் கடைகளை மூடுமாறு மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.ரயில் போக்குவரத்தில் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. பலத்த பாதுகாப்புடன் அவை இயக்கப்பட்டு வருகின்றன.

இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கு புளொட் இயக்கம் ஊட்டச்சத்து பிஸ்கட் சமைத்த உணவு உதவி

civiling_flee_vanni_02.png
வவுனியாவுக்கு பெரும் எண்ணிக்கையில் மக்கள் இடம்பெயர்ந்து வந்துள்ள நிலையில் அரச செயலக அதிகாரிகளின் வேண்டுகோளுக்கமைய, ஊட்டச்சத்துள்ள பிஸ்கட் மற்றும் சமைத்த உணவு என்பன கடந்த இருதினங்களாக வழங்கப்பட்டுள்ளதாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் புனர்வாழ்வு நடவடிக்கை பொறுப்பாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

ஒரேநேரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதி்க்குள் வந்துள்ளதையடுத்து, அவர்களது அவசர உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகப் பொதுமக்களின் ஒத்துழைப்போடு இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊட்டசத்துமிக்க 700 கிலோ பிஸ்கட் மற்றும் இரண்டு தினங்களாக 30 ஆயிரம் சமைத்த உணவுப் பார்சல்கள் என்பன பொதுமக்களின் பேருதவியோடு வழங்கப்பட்டுள்ளதாகவும் புளொட் அமைப்பி்ன் புனர்வாழ்வு நடவடிக்கை பொறுப்பாளர் கண்ணன் கூறியுள்ளார்