அர சாங்கத்தின் ஒட்டுண்ணிகளாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் மலையகக் கட்சிகளை மலையக மக்கள் தூக்கியெறியும் போது தான் அம்மக்களுக்கு விடிவு கிடைக்குமென்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான என். ஸ்ரீகாந்தா, மலையக மக்களின் விடிவுக்கு வடக்கு, கிழக்கு விடுதலைப் போராட்டம் உறுதுணையாக இருக்குமென்றும் கூறினார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நாடற்ற மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்கல் சிறப்பேற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் பேசும் போதே ஸ்ரீகாந்தா இவ்வாறு கூறினார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்; இந்த நாட்டில் மட்டுமல்லாது ஆசிய ரீதியிலும் உலகளாவிய ரீதியிலும் மிக மோசமாக வஞ்சிக்கப்பட்ட மக்கள் பிரிவு அல்லது சமூகமென ஒன்றை அடையாளம் காட்டுவதென்றால் அது மலையக தமிழ் தொழிலாள வர்க்கத்தினராகவே இருக்கும். அமெரிக்காவுக்கு கப்பல் மூலம் வரும் நெருக்குவாரங்களுக்கு மத்தியில் ஏற்றிச் செல்லப்பட்ட ஆபிரிக்க நீக்ரோகளை அடுத்ததாக எமது மலையக மக்களை குறிப்பிடலாம். மோசமாக வஞ்சிக்கப்பட்ட, ஏமாற்றப்பட்ட சமூகம் இது.
1948 ஆம் ஆண்டு மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் அம்மக்களுக்கு பிரஜாவுரிமை கிடைத்ததை அடுத்தே மலையக கட்சிகள் பாராளுமன்றத்துக்கு வந்தன. மலையக கட்சிகள் அரசாங்கத்தின் ஒட்டுண்ணிகளாக இருந்து கொண்டு மலையக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். மலையக மக்கள் என்று இவ்வாறான கட்சிகளை தூக்கி எறிகின்றனரோ அன்று தான் அந்த மக்களுக்கு விடிவு கிடைக்கும். அத்துடன் வடக்கு, கிழக்கு விடுதலைப் போராட்டமானது மலையக மக்களின் விடிவுக்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.