“வடக்கில் இடம்பெறும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து நிவாரண கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களைச் சென்று பார்வையிட்டு அவர்களுக்கான உதவிகளை வழங்கும் ஒரு சந்தர்ப்பத்தை அரசாங்கம் எதிர்க்கட்சிகளுக்கு வழங்கவில்லை” என முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் சுதந்திரத்திற்கான மேடையின் அரங்கம் என்ற அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
::யுத்த நிலவரம்
::யுத்த நிலவரம்
இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.
இலங்கையில் மனிதாபிமானப் பிரச்சனை உருவாவதைத் தவிர்க்குமாறு கோரியுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பேச்சுக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டனின் வெள்ளை மாளிகையில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிபர் பராக் ஒபாமா, இலங்கையில் ஒரு மனிதாபிமானப் பிரச்சனை உருவாகியிருக்கிறது. இந்தப் பிரச்சனை ஒரு பேரழிவாக மாற்றமடைவதற்கு முன்பாக சிறிலங்க அரசு போர்ப் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவிகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இலங்கையில் போரை நிறுத்தக் கோரி, வெள்ளை மாளிமை முன்பாக கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் அமெரிக்க வாழ் தமிழர்கள் ஒபாமாவின் பேச்சுக்கு இன்று வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு தலைமை தாங்கி போராட்டம் நடத்தி வரும் எலியாஸ் ஜெயராஜா இதுகுறித்துப் பேசுகையில், தமிழர்கள் குடியிருப்புப் பகுதியில் நடத்தப்படும் தாக்குதலை நிறுத்த வேண்டும், போர் பகுதியில் சிக்கியுள்ளவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும் என்ற அதிபர் ஒபாமாவின் கோரிக்கையை சிறிலங்க அரசாங்கம் மறுக்க முடியாது என மகிழ்ச்சி தெரிவித்தார்.
அதிபர் ஒபாமாவின் பேச்சு, இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை பார்த்துக் கொண்டு உலக நாடுகள் அமைதியாக இருக்காது என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது என்றும் ஜெயராஜா கூறினார்.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் சிக்கியுள்ள சிவிலியன்களை விடுவிக்கும் 2ஆம் கட்ட நடவடிக்கையில் 3765 சிவிலியன்கள் நேற்று 14ஆம் திகதி மீட்கப்பட்டதாக பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் இன்று தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் 59ஆம் படைப்பிரிவினரிடம் 3250 சிவிலியன்களும், 58ஆம் படைப்பிரிவினரிடம் 206 சிவிலியன்களும் 53ஆம் படைப்பிரிவினரிடம் 309 சிவிலியன்களும் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதே நேரம் கடந்த ஏப்ரல் 20ஆம் திகதி முதல் மே 14ஆம் திகதி வரை 122,128 சிவிலியன்கள் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
வவுனியாவில் உள்ள முகாம்களிலும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள நிவாரண கிராமங்களிலும், உள் நாட்டில் இடம்பெயர்ந்த இரண்டு லட்சம் பேர் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் போதுமான வசதிகளின்றி இருப்பதாகவும், மக்கள் மத்தியில் தொற்றுநோய்கள் பரவுவதாக வரும் செய்திகள் குறித்து வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ல்ஸ் அவர்களிடம் கேட்டபோது, ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பிறகு தொற்று நோய் எதுவும் பரவவில்லை என்றார் என பீபீஸி இணையம் தெரிவித்துள்ளது
ஆனால் அதற்கு முன் கடும் வெயில் காரணமாக கொப்பளிப்பான் எனப்படும் சிக்கன் பாக்ஸ் நோய் பரவியதாகவும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். உணவு வழங்கும் இடங்களில் ஏற்பட்ட நெரிசலில் சிறுவர்கள் சிக்கி உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்துக் கேட்டபோது, அது பற்றி தனக்கு அறிக்கை கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.
எஞ்சியுள்ள பொதுமக்களை மீட்டெடுக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர் மூவாயிரத்திற்கும் அதிகமான மக்களை மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
தப்பிவரும் பொதுமக்களை இலக்கு வைத்து புலிகள் நேற்று நடத்திய துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் தாக்குதல்களில் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 14ற்கும் அதிகமான பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்கம் இறுதியாக அறிவித்த புதிய பாதுகாப்பு வலயத்திலிருந்து நேற்றுக்காலை பெருந்தொகையான பொதுமக்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்ததாகவும் இவர்களை இராணுவத்தின் 59வது படைப் பிரிவினர் பாதுகாப்பாக மீட்டெடுத்த வண்ணம் உள்ளதாக பிரிகேடியர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கரையாமுள்ளி வாய்க்கால் மற்றும் வெள்ளைமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தை உள்ளடக்கிய மிகவும் குறுகிய பிரதேசத்திற்கு படை நடவடிக்கைகள் மூலம் வெற்றிகரமாக முடக்கியுள்ள பாதுகாப்புப் படையினர் எஞ்சியுள்ள பொதுமக்களை பாதுகாப்பாக மீட்டெடுக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வட்டுவாக்கல் பிரதேசத்தின் ஊடாக கடந்த இரு தினங்களாக புலிகளின் பாரிய மண் அணைகளை தகர்த்த வண்ணமும், கைப்பற்றிய வண்ணமும் வேகமாக முன்னேறிச் சென்ற 59வது படைப் பிரிவினர் பொதுமக்கள் சிக்குண்ட பிரதேசத்தை அண்மித்திருந்தனர்.
நேற்றுக் காலை தொடக்கம் குறித்த சில மணிநேரத்திற்குள் பெரும் எண்ணிக்கையிலான சிவிலியன்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்ததை அடுத்து புலிகள் தப்பிவரும் சிவிலியன்களை தடுக்கும் வகையில் கடுமையான தாக்குதல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டுள்ளனர்.புலிகளின் கடும் தாக்குதல்களில் காயமடைந்த நிலையில் பொதுமக்கள் தொடர்ந்தும் வர ஆரம்பித்ததை அடுத்து இராணுவத்தினர் புலிகளை இலக்குவைத்து பதில் தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் அந்த மக்களை பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளனர். இவர்களில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
புதிய பாதுகாப்பு வலயத்திற்குள்ளும் அதனை அண்மித்த பிரதேசத்திற்குள்ளும் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் 53வது, 58வது, 59வது படைப் பிரிவுகளை நோக்கி பொதுமக்கள் வருகைதந்த வண்ணம் உள்ளதாகவும் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கலாம் என்றும் பிரிகேடியர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, புலிகளின் தாக்குதல்களில் காயமடைந்த பொதுமக்களை பாதுகாத்து சிகிச்சை அளிக்கும் வகையில் விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.
முள்ளியாவளை பிரதேசத்திற்கு அவசர அவசரமாக விரைந்த ஹெலிகள் அநுராதபுரத்தை நோக்கி காயமடைந்தவர்களை அழைத்து வந்துகொண்டிருப்பதாகவும் விமானப்படை ஹெலிகள் தொடர்ந்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் விமானப் படைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார். இதுவரை ஒரு இலட்சத்து 88 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வந்துள்ளனர்.
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் போர்ப்பிரதேசத்தில் உள்ள பொதுமக்களுக்கென உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு கப்பல்கள், அங்கு இடம்பெற்று வருகின்ற தொடர்ச்சியான உக்கிர மோதல்கள் காரணமாக அவற்றை அங்கு கரையிறக்கமுடியாமல் போனதாக அனைத்துலக செஞ்சிலுவைக்குழுவின் தகவல் அதிகாரி சரசி விஜேரட்ண தெரிவித்தார்.
கிறீன் ஓசியன் என்ற கப்பலில் முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் உள்ள நோயாளர்கள் மற்றும் காயமடைந்தவர்களை ஏற்றிவருவதற்காக மூன்று தினங்களாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எனினும் போர்ச்சூழல் காரணமாக அந்த முயற்சி நேற்றும் கைகூடவில்லை எனவும் சரசி விஜேரட்ண தெரிவித்தார்.
கிறீன் ஓசியன் கப்பலில் 25 மெட்றிக்தொன் உணவுப் பொருட்களும், ஓரியன்டல் பிரின்ஸஸ் என்ற கப்பலில் உலக உணவுத் திட்ட நிறுவனத்தினால் வழங்கப்பட்ட 500 மெட்றிக் தொன் உணவுப் பொருட்களும் அனைத்துலக செஞ்சிலுவைக்குழுவின் கொடியுடன் கடற்படையின் பாதுகாப்புடன் நேற்று காலை முல்லைத்தீவு பகுதிக்குப் புறப்பட்டுச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும் முள்ளிவாய்க்கால் மற்றும் வட்டுவாகல் கரையோரப் பகுதிகளில் இடம்பெற்ற கடும் மோதல்கள் காரணமாக கப்பல்கள் இந்த உணவுப் பொருட்களை கரையிறக்கமுடியாமல் போனதாக சரசி விஜேரட்ண தெரிவித்தார்.
மோதல் பகுதியில் சனச் செறிவுள்ள இடங்களில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்று அரசாங்கம் கூறுவதற்கும் புதிய செய்மதிப்படங்களும் கண்கண்ட சாட்சியங்களும் தெரிவிப்பதற்கும் இடையில் முரண்பாடு காணப்படுவதாக நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டிருக்கிறது.
மேற்குப் பகுதியில் பொதுமக்கள் மீதான ஷெல் தாக்குதல் இடம்பெறுவதை அண்மைய செய்மதிப் புகைப்படங்களும் சாட்சியங்களும் வெளிப்படுத்துவதாக மனித உரிமைகள் அமைப்பின் ஆசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் பிராட் அடம்ஸ் தெரிவித்திருக்கிறார். பொதுமக்களைப் பயன்படுத்துவதில் இலங்கை இராணுவமோ புலிகளோ தயக்கம் காட்டுவதாகத் தென்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்க விஞ்ஞான முன்னேற்றச்சங்கமானது மோதல் வலயத்தின் செய்மதிப் புகைப்படப் பிரதிகள் தொடர்பான பூர்வாங்க ஆய்வறிக்கையை செவ்வாய்க்கிழமை பிரசுரித்திருக்கிறது. அது கனரக ஆயுதங்களைப் பாவித்ததால் ஏற்பட்ட குறிகளையும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் பாவித்த கட்டமைப்புகள் அகற்றப்பட்டவற்றையும் காட்டுகிறது. மே 6 இற்கும் மே 10 இற்கும் இடையில் சாட்டுகிறது. மோதல் வலயத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இருப்பதையும் செய்மதிப்படம் காட்டியுள்ளதாக அமெரிக்க விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் தெரிவித்துள்ளது. முள்ளிவாய்க்கால் ஆஸ்பத்திரி மீண்டும் ஷெல் தாக்குதலுக்கு இலக்காகியிருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
மோதலில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் சர்வதேச சட்டத்தை மீறுவதாக மீண்டும் மீண்டும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது. புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக வைத்திருப்பதாகவும் சனச் செறிவுடைய இடங்கள் மீது இலங்கைப் படையினர் ஷெல் தாக்குதல்களை எழுந்தமானதாக நடத்துவதாகவும் சாடியிருக்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டாமென உதவி வழங்கும் நாடுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், இலங்கையின் மனிதாபிமான நிலைவரம் குறித்து ஐ.நா. பாதுகாப்புச் சபையில் உத்தியோகபூர்வமாக அவசரமாக ஆராயப்பட வேண்டுமெனவும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் விசேட அமர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் கண்காணிப்பகம் வலியுறுத்தியிருக்கிறது.
வன்னியில் இருந்து யாழ்ப்பாணம் வந்து கைதடி, ஆதரவற்ற சிறுவர் இல்லம், கைதடி சித்த ஆயுர்வேதக் கல்லூரி விடுதி, பனை அபிவிருத்திச்சபை ஆராய்ச்சி நிலையங்களில் தங்கிவாழும் சிறார்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் பதினெட்டாம் திகதி ஆரம்பமாகவுள்ளன. இச்சிறார்களுக்கான கல்விச் செயல்பாடுகளை ஆரம்பிக்க சிறுவர் நிதியம், யுனிசெவ் ஆகியன இந் நிலையங்களுக்கு அருகில் தற்காலிக வகுப்பறைக் கட்டிடங்களை நிர்மாணித்துக் கொடுத்துள்ளன.
நலன்புரி நிலையங்களிலுள்ள ஆசிரியர்கள் இச்சிறார்களுக்கான கற்பித்தலில் ஈடுபடுவர். தென்மராட்சிக் கல்வி வலயம் இச் சிறார்களுக்கான பாட நூல்களையும், யுனிசெவ் இவர்களுக்கான சீருடை, கல்வி உபகரணங்களையும் வழங்கவுள்ளன.
அரசாங்கத்தின் எறிகனை தாக்குதல்களினால், பாதுகாப்பு வலயத்தில் 400க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்ததாக கூறப்படுவது தொடர்பில் நேர்மையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கை ஒன்றிலேயே இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டறிக்கைக்கு, ஐக்கிய தேசிய கட்சி சார்பாக அதன் செயலர் திஸ்ஸ அத்தநாயக்க, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் மற்றும் சிறிலங்கா சுதந்தி கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்தின் மீது இவ்வாறானதொரு குற்றச் சாட்டினை முன்வைக்கும் போது, அதில் இருந்து விடுபட வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இதன் பொருட்டு அரசாங்கம் ஒரு நேர்மையான விசாரணையை நடத்தி, தம்மீது குற்றம் இல்லை என்றால் அதனை உலகுக்கு நிரூபிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.இவ்வாறான குற்றச் சுமத்தல்கள் மூலம், சர்வதேச ரீதியாக இலங்கையை தலைகுனிய செய்ய முனையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக பிரசாரங்களை முறியடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்