::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

எல்லை நிர்ணயம் செய்து செயற்படுவதற்கு – எந்தவொரு ஆயுதக் குழுவுக்கும் இனிமேல் இடமளிக்கப்படமாட்டாது

sarath-fonseka.jpgஇலங் கையில் இனிமேல் எந்தவொரு ஆயுதக் குழுவும் எல்லைகளை நிர்ணயம் செய்துகொண்டு செயற்பட இடமளிக்கப் போவதில்லையென இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்தார். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதும் அதனை மீண்டும் தலையெடுக்க எவ்வகையிலும் அனுமதிக்கப் போவதில்லையெனவும் இராணுவத்தளபதி தெரிவித்தார். அநுராதபுரத்தில் நடைபெற்ற முன்பள்ளித் திறப்பு விழாவொன்றில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இராணுவத்தளபதி உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரை நிகழ்த்துகையில் கூறியதாவது: “இராணுவத்தில் இணைந்துகொள்வோரின் தொகை முன்னரைவிட அதிகரித்துள்ளது. மூன்று வருடங்களுக்கு முன்னர் 116,000 ஆக இருந்த படையினரின் எண்ணிக்கை 180,000 ஆக அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் இந்தத்தொகையை 10 முதல் 15 மடங்காக அதிகரிக்க எதிர்பார்க்கின்றோம்” என்றும் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் 7வது விமான ஓடுபாதை கைப்பற்றப்பட்டுள்ளது

airstrip-1501.jpgவிடுதலைப் புலிகளின் 7வது விமான ஓடுபாதை கைப்பற்ற்ப்பட்டுள்ளது புலிகளின் கடைசி விமான ஓடுபாதையெனக் கருதப்படும் இந்த ஓடுபாதை முல்லைத்தீவு சுந்தரபுரத்திற்கு  மேற்குப் பகுதியிலும் பிரமந்தாறு பகுதியின் வடக்கேயும்  அமைந்துள்ளது. சுமார் 2 கி.மீ. நீளமான இந்த ஓடுபாதையை இன்று (3) காலை கைப்பற்றியுள்ள பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான 58வது படையணியினர் அப்பகுதியைத் தற்போது தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவ்ந்துள்ளனர் என்று இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சாத்தான்களின் செவிகளில் மனித உரிமை வேதம் – தங்கள் வேள்விக்கு மக்களை பலியிட சிங்கமும் புலியும் தயார் : த ஜெயபாலன்

War in Wanni - Photo_Puthinamமகாபாரதக் கதையில் அனைத்தையும் வைத்து சீட்டாடி நிர்க்கதியான தருமன் இறுதியில் தனது மனைவியைப் பணயம் வைத்து சீட்டாடித் தோற்றது என்பது புராணக் கதை. இப்போது இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெறுகின்ற இந்த யுத்தத்தில் ஒட்டுமொத்த வன்னி மக்களும் பணயம் வைக்கப்பட்டு உள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு எனப் பல்வேறு சர்வதேச அமைப்புகள் தொடர்ச்சியாக அழுத்தங்களைக் கொடுத்த போதும் அவற்றை முற்று முழுதாக உதாசீனப்படுத்திவிட்டு தங்கள் பாட்டுக்கு தங்கள் நோக்கங்களுக்காக இரு தரப்பும் யுத்தத்தைத் தொடர்கிறது. நிர்க்கதியான மக்கள் என்பதற்கு உண்மையான உதாரணம் வன்னி மக்கள் என்பதற்கு அப்பால் அதற்கொரு விளக்கம் வேண்டியதில்லை.

சார்ள்ஸ் டார்வினின் 200வது பிறந்த தினம் பெப் 12ல் நினைவுகூரப்படும் காலத்தில் யுத்தப் பிரியர்களான சிங்கமும் புலியும் ‘தக்கன பிழைக்கும்’ விதியை வன்னி மக்களின் மத்தியில் வைத்து பரீட்சித்துப் பார்க்கத் முனைந்துள்ளன. அனைத்து யுத்த விதிகளையும் மீறி கடந்த பல மாதங்களாக நடைபெறும் இந்த யுத்தம் தற்போது இந்த அத்தியாயத்தின் க்ளைமக்ஸிற்கு வந்துள்ளது. துரதிஸ்ட வசமாக இங்கு கதாநாயகர்கள் யாரும் இல்லை. ஆபத்தில் கைகொடுக்க கிருஸ்ணபரமாத்மாவும் இல்லை. இரு பக்கத்திலும் நிற்பது சாத்தான்கள் மட்டுமே. இவர்களுக்கு மத்தியில் அப்பாவி வன்னி மக்கள் ஒன்றல்ல இரண்டல்ல 250 000 பேர் வரை மாட்டிக் கொண்டு உள்ளனர். குழந்தைகள் சிறுவர்கள் பெண்கள் வயோதிபர்கள் எவ்வித வேறுபாடும் இன்றி தொடர்ச்சியான குண்டுத் தாக்குதல்களுக்குள் வெட்டைவெளியில் விடப்பட்டு உள்ளனர். இந்த ஆபத்தான சூழலில் குழந்தைகள் பிரசவிக்கின்றன. மழலைகள் தங்கள் உயிரைக் காக்க அழுதழுது ஓடுகின்றன. மரணங்கள் தொடர்கிறது. அன்புக்குரியவர்களை இழந்த உறவுகள் துடிக்கின்றன.

செப்ரம்பர் 11 அன்று தாக்குதலுக்கு உள்ளான அமெரிக்க இரட்டைக் கோபுரங்களில் ஒன்று உலகமே பார்த்து நிற்க யாருமே எதுவும் செய்ய வியலாத கையறு நிலையில் நிற்க சில மணி நேரங்களில் சரிந்து வீழ்ந்தது. இறுதிநேரத்தில் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அந்த மக்கள் தவித்த தவிப்பு கையறு நிலையில் உலகமே அதனைப் பார்த்து நின்றது. அந்த மனித அவலம் அதனிலும் பல மடங்காக புதுக்குடியிருப்பில் நிகழ்ந்துவிடும் என்ற அபாயம் இப்போது ஏற்பட்டு உள்ளது. ஆனால் இந்த அவலத்தை ஏற்படாமல் தடுக்க சகல சந்தர்ப்பங்களும் உண்டு. அப்படி இருந்தும் ஒரு மனித அவலம் ஏற்படுத்தப்படுமானால் அதனை தமிழ் மக்கள் என்றைக்கும் மன்னிக்கவோ மறக்கவோ மாட்டார்கள்.

சர்வதேச சமூகம் விரைந்து செயற்பட வேண்டும். அதற்கான நடைமுறைச்சாத்தியமான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட வேண்டும். இன்றுள்ள நிலையில் வெறும் அழுத்தங்கள் மட்டும் போதாது. செயற்பாடுகள் மிக அவசியம்.

வன்னி மக்கள் பணயம் வைக்கப்பட்டு உள்ள இந்த நிலையிலும் அந்த மக்களை யுத்தப் பகுதிகளில் இருந்து உடனடியாக வெளிக்கொண்டு வருவதைக் கோருவதை விட்டுவிட்டு புலிகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஊர்வலங்களும் ஆர்ப்பாட்டங்களும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

ஜனவரி 31ல் பிரித்தானிய தமிழர் பேரவையும் தமிழ் இளையோர் அமைப்பும் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அதில் 50 000 – 100 000 பேர் வரை கலந்தகொண்டனர். சகல அரசியல் முரண்பாடுகளையும் மறந்து வன்னி மக்களைக் காக்க அவர்கள் திரண்டனர். அங்கு ஒரு சில புலி ஆதரவுக் குரல்களும் வே பிரபாகரனின் படங்களும் கொண்டு வரப்பட்டாலும் அவற்றை அப்புறப்படுத்தும் படி நிர்ப்பந்திக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தது.  யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்பதே அவ்வூர்வலத்தில் கலந்த கொண்டவர்களின் பிரதான கோரிக்கையாக அமைந்தது. ஆனால் ஏற்பாட்டாளர்களான பிரித்தானிய தமிழர் பேரவையினது செய்திக் குறிப்பு முற்றிலும் விடுதலைப் புலிகளின் ஆதரவு நிலையை எடுத்து உள்ளது. சர்வதேச அமைப்புகள் அனைத்துமே வன்னி மக்களை புலிகள் தடுத்து வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டி உள்ள நிலையில் தங்கள் புலியாதரவு நிலைப்பாட்டினால் பிரித்தானிய தமிழர் பேரவை ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை ஒரு வகையில் பாதிக்கச் செய்துள்ளனர்.

இங்கு பிரித்தானிய தமிழர் போறம் புலிகளுக்கு வக்காலத்து வாங்க அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணத்தில் ஈபிடிபி புலிகளுக்கு எதிராக ஊர்வலம் நடாத்தி உள்ளது. புலிகள் பணயக் கைதிகளாக உள்ள தமிழ் மக்களை விடுவிக்க வேண்டும் என்று அந்த ஊர்வலத்தில் கோரப்பட்டு உள்ளது.

தடுத்து வைக்கப்பட்டு இருப்பது வன்னி மக்கள். அவர்கள் ஒரு மனித அவலத்தை ஒவ்வொரு விநாடியும் எதிர்நோக்கி உள்ளனர். அவர்களுக்காக யாழிலும் புலத்திலும் உள்ள மக்களின் மனங்கள் துடிக்கின்றது. ஆனால் அதனை பிரித்தானிய தமிழர் பேரவை, ஈபிடிபி என்பன தங்கள் குறுகிய அரசியல் நலன்களின் அடிப்படையில் பயன்படுத்த முற்பட்டு உள்ளன. பிரித்தானிய  தமிழர் பேரவைக்கு புலிகளின் மனித உரிமை மீறல்கள் தெரியவில்லை. ஈபிடிபிக்கு தனதும் தனது அரசினதும் மனித உரிமை மீறல்கள் தெரியவில்லை. இந்த ‘செலக்டிவ் அம்னீசியா’ காரர்கள் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க முற்பட்டதே தமிழ் மக்களின் இந்த அவலத்திற்கு காரணம்.

அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த, தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி, ஈபிஆர்எல்எப் தலைவர் சிறீதரன், புளொட் தலைவர் சித்தார்த்தன், மற்றும் கிழக்கின் முதலமைச்சர் பிள்ளையான் பா உ முரளீதரன் இவர்கள் ஏன் இந்த வன்னி மக்களின் பாதுகாப்புப் பற்றி அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. புலிகள் பயங்கரவாதிகள் என்று குற்றம்சாட்டும் இந்தத் தலைவர்கள் புதுக்குடியிருப்பில் சிக்கித் தவிக்கும் மக்களைக் கருத்தில் எடுக்காமல் தங்களுடைய அரசாங்கம் நடத்தும் இந்த யுத்தம் பற்றி மௌனமாக இருக்கிறார்கள். அங்கு மக்கள் உயிரிழக்கும் போதெல்லாம் அதனைப் புலிகளின் தலையில் கட்டி தப்பித்துக் கொள்வதைத் தவிர இவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த வன்னி மக்களுக்கு ஏற்படப் போகும் அவலத்தை தடுத்து நிறுத்துவதற்காகவேனும் இவர்கள் குரல் கொடுக்காவிட்டால் இவர்கள் செய்வது அரசியல் விபச்சாரம் என்று குறிப்பிடுவது மிகையல்ல. இது இவர்களுக்கு மட்டுமல்ல புலம்பெயர் தேசங்களில் உள்ள இவர்கள் ஏஜென்டுகளுக்கும் பொருந்தும்.

ஏற்படப் போகும் இந்த அவலத்திற்கு புலிகளும் சம பொறுப்புடையவர்கள். அவர்கள் ஒன்றும் புனிதர்கள் அல்ல என்பது அரசாங்கத்தின் மீதான தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக பிரித்தானிய தமிழர் பேரவை சுட்டிக்காட்டும் சர்வதேச அமைப்புகள் அனைத்தினதும் அறிக்கைகளிலும் மீண்டும் மீண்டும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதைப் பற்றி மூச்சும் விடுவதில்லை. பிரபாகரன் மாவீரர் தின உரையில் உறுமினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் ‘வடக்கில் இருந்து தெற்குக்கு சவப்பெட்டிகள் அனுப்புவோம்’ என்று டபிள் உறுமல் விடுவதைத் தவிர உருப்படியாக எந்த அரசியலும் செய்யவில்லை.

தங்களுக்கு வாக்களித்த மக்களை விட்டுவிட்டு தமிழ் மக்களை நாங்கள் தான் பிரதிநிதித்துவம் செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டு புலிக்கும் சிங்கத்துக்கும் பின்னால் நிற்கும் தமிழ் தலைமைகளும் அவர்களின் புலம்பெயர் முகவர்களும் இந்த வன்னி மக்கள் சிந்தும் குருதியில் தங்களைக் கறைபடுத்திக் கொண்டுள்ளனர்.

இப்போதுள்ள நிலையில் யுத்தத்தில் சிக்குண்ட தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால்
1. யுத்தம் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அல்லது
2. அரச படைகளும் புலிகளும் குறைந்த பட்சம் சில தினங்களுக்காவது யுத்தத்தைத் தவிர்த்து மக்கள் பாதுகாப்பாக பாதுகாப்பு வலயங்களுக்கு செல்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
3. பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குதல் நடத்துவதை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
4. பாதுகாப்பு வலயங்களை சர்வதேச மனிதாபிமான அமைப்புகளின் பொறுப்பில் விடவேண்டும்.
5. விடுதலைப் புலிகளும் பாதுகாப்பு வலயங்களுக்கு மக்கள் செல்வதை அனுமதிக்க வேண்டும்.
6. பாதுகாப்பு வலயங்களுக்கு செல்வதற்கான பாதுகாப்பான வழியை புலிகளும் அரச படைகளும் ஏற்படுத்த வேண்டும்.
போன்ற ஜனவரி 29 அன்று ‘இலங்கை அரசும் புலிகளும் 200 000 – 300 000 தமிழர்களை ‘guinea pigs’ ஆக நடத்துகின்றனர் – பொறுப்பற்றவர்களின் யுத்தம் : த ஜெயபாலன்‘என்ற கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு அல்லது அதற்கு ஒத்த விடயங்களை உடனடியாக செயற்படுத்த சர்வதேச சமூகத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அவலங்கள் ஏற்பட்ட பின் அதனைக் கண்டிப்பதிலும் அந்த அவலத்தை தடுத்து நிறுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும். இந்தப் போராட்டத்தில் தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள முஸ்லீம் மக்களும் சர்வதேச மக்களும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

முல்லைத்தீவில் புலிகளின் ஒன்றுகூடல் தளம் மீது விமானத் தாக்குதல

jet-1301.jpgமுல்லைத்தீவு களப்புக்கு வடக்கு பிரதேசத்திலுள்ள புலிகளின் ஒன்று கூடல் தளம் ஒன்றை இலக்கு வைத்து விமானப் படையினர் நேற்று கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.  விமானப் படைக்குச் சொந்தமான ஜெட் ரக தாக்குதல் விமானங்களைப் பயன்படுத்தி நேற்றுப் பிற்பகல் 4.20 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

முன்னேறிவரும் இராணுவத்தின் 59வது படைப் பிரிவினருக்கு உதவியாக நடத்தப்பட்ட தாக்குதல் வெற்றியளித்துள்ளதாக விமான ஓட்டிகளும், களமுனை வீரர்களும் உறுதியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பில் நேற்று மோதல் – பலத்த இழப்புகளென இருதரப்பும் தெரிவிப்பு

truck.jpgமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தொடர்ந்தும் கடும் சமர் நடைபெற்று வருவதாக பாதுகாப்புத்தரப்பு தெரிவித்துள்ளது.  புதுக்குடியிருப்புக்குத் தென்புறப்பகுதியில் படைநடவடிக்கையில் ஈடுபடும் 59 ஆவது படையணியினர் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை விடுதலைப் புலிகளின் வலுநிலைகளைத் தகர்த்தழித்தவாறு முன்னேறியுள்ளதாக படைத்தரப்பு தெரிவிக்கின்றது. இதேநேரம், புதுக்குடியிருப்புப் பகுதியில் பாரிய படைநடவடிக்கைக்குத் தயாரான படையினர் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாரிய ஊடறுப்புத் தாக்குதலை நடத்தி படையினருக்குப் பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் நந்திக்கடல் வாவிக்கு மேற்கே படைநடவடிக்கையில் ஈடுபடும் 59 ஆவது படையணியே சனிக்கிழமை புதுக்குடியிருப்புக்கு தெற்கே புலிகளின் வலுநிலைகளை உடைத்து முன்னேறியதாக படைத்தரப்பு தெரிவித்தது. அன்று காலை 6 மணி முதல் முழு நாளும் நடைபெற்ற உக்கிர சமரில் 9 ஆவது சிங்கப்படையணி, 4 ஆவது விஜயபா படையணி மற்றும் 7 ஆவது கெமுனு படையணிகள் தங்கள் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை 1.5 கிலோமீற்றர் தூரத்திற்கு முன்நகர்த்தியுள்ளன. இந்த மோதல்களில் விடுதலைப்புலிகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை புதுக்குடியிருப்பு மீது தாக்குதல் நடத்தத் தயாராயிருந்த படையினர் மீது நேற்று அதிகாலை தாங்கள் நடத்திய முன்கூட்டிய பாரிய ஊடறுப்புத் தாக்குதலில் படையினருக்குப் பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் 3 யுத்த டாக்கிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளதாக “தமிழ்நெற்’, “புதினம்’ இணையத்தளங்கள் தெரிவித்துள்ளன.

கரும்புலிகளின் இருமுகாம், பெருந்தொகை ஆயுதங்கள் – விசுவமடுவில் மீட்பு

_army.jpgவிசுவமடு கரும்புலிகளின் பாரிய இரு முகாம்கள், புலிகளின் 12 சடலங்கள் மற்றும் பெருந்தொகையான ஆயுதங்களை இராணுவத்தினர் நேற்று முன்தினம் மீட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். மோதல்களைத் தொடர்ந்து படையினர் மேற்கொண்டு வரும் தேடுதல்களில் இதுவரை காலமும் இவ்வளவு பெருந்தொகை ஆயுதங்கள் மீட்கப்படவில்லையெனவும், இதுவே முதல் தடவையென்றும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

விசுவமடு பிரதேசத்தில் நேற்று முன்தினம் மாலை படையினருக்கும் புலிகளுக்குமிடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. மோதல்களைத் தொடர்ந்து படையினர் அப்பகுதியில் மேற்கொண்ட தேடுதல்களின் போது புலிகளின் 12 சடலங்களையும் பெருந்தொகை ஆயுதங்களுடன் கரும்புலிகளது இரண்டு பாரிய முகாம்களையும் கைப்பற்றியுள்ளனர். கரும்புலிகளது முகாம்களுள் ஒன்று நிலத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்ததாகவும், அது இரண்டு மாடிகளைக் கொண்டதுடன், முற்றிலும் குளிரூட்டப்பட்ட நிலையில் மாளிகை போன்று அமைக்கப் பட்டிருந்ததாகவும் மத்திய நிலையம் குறிப்பிட்டது.

நிலத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த இந்த முகாமில் கணனிகள் உட்பட பல நவீன தொழில்நுட்ப உபகரணங்களும் நவீன முறையில் அமைக்கப்பட்ட குளியலறை, சமையலறை என்பனவும் இருந்துள்ளன. அத்துடன் உடற்பயிற்சி செய்யும் உபகரணங்களுடன் உடற்பயிற்சி நிலையமும் இருந்துள்ளது. சத்தம் வெளியில் கேட்காதவாறான ஜெனரேட்டர் ஒன்றிலிருந்தே இந்த முகாமுக்கு மின்சாரம் பெறப்பட்டுள்ளது. இவற்றை வைத்து பார்க்கும் போது புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் இங்கு தங்கியிருந்திருப்பாரென சந்தேகிக்கத் தோன்றுவதாகவும் ஊடக நிலையத்தின் அதிகாரியொருவர் கூறினார்.

இவையனைத்தையும் இராணுவத்தின் 58வது படையணியினரே கைப்பற்றியுள்ளனர். இதேவேளை கரும்புலிகளின் மற்றைய பாரிய முகாமிலிருந்து பெருமளவிலான வெடிபொருட்களும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

121 மில்லிமீற்றர் கொண்ட மூன்று நவீன எறிகணைகள், 18 ரி – 56 ரக துப்பாக்கிகள், 05 எம். பி. எம். ஜி, ஒரு ஸ்நிப்பர், 08 செயலிழக்கக்கூடிய ஆர். பி. ஜி.கள், 02 டேர்மோ பெரிக் ஆயுதங்கள், 20 பிஸ்டல் துப்பாக்கிகள், மூன்று ஆர். பி. ஜி. ஆயுதங்கள், 59 கிரனேற் கைக்குண்டுகள், 07 கிளேமோர்கள், ஒரு நவீன மாற்றங் களுடனான கிளேமோர், ஒரு ட்ரைபொட், புலிகளினால் உபயோகிக்கப்படும் ‘அருள்’ எனப்படும் 35 குண்டுகள், 100 டெட்ட னேட்டர்கள், ஒரு ரேடியோ செட், 8.9 வகையான மூவாயிரம் ரவைகள், 35 கேஸ் குண்டுகள், 08 ஹெல்மட், 02 80 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள், 02 81 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள், 02, 82 மில்லிமீற்றர் மோட்டார் குண்டுகள் 35 இடைப்பையுடன் கூடிய பட்டிகள், பெருந்தொகையான கரும்புலிகளின் ஆடைகள் என்பனவற்றையும் பொலிஸார் மீட்டிருப்பதாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

வவுனியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை செஞ்சிலுவை தொண்டர்கள் பராமரிக்கின்றனர்

redcross-2801.jpgவன்னியில் காயமடைந்து வவுனியா அரசினர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு, வார்ட்டுகளில் உதவி செய்து பராமரிப்பதற்கு உதவியாளர்கள், உறவினர்கள் இல்லாமல் காயமடைந்தவர்கள் பெரும் அவதிக்குள்ளாகிவருவதாக ஆஸ்பத்திரி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக காயமடைந்துள்ள சிறுவர்களே இந்த உதவியாளர்கள் இன்றி பல கஷ்டங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

எனினும் இலங்கை செஞ்சிலுவைச் சங்க வவுனியா கிளை அதன் 29 தொண்டர்களை வவுனியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் காயமடைந்தவர்களுக்கு உதவும் பணிக்கு நியமித்துள்ளது. இத்தொண்டர்கள் இரவு பகலாக 24 மணி நேரமும் காயமடைந்தவர்களை பராமரிக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் காயமடைந்துள்ள சிறுவர்களின் உறவினர்களையாவது அவர்களுடன் ஆஸ்பத்திரியில் தங்கி பராமரிக்க அனுமதிக்குமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சம்பந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இவர்களைப் பராமரிப்பதற்காக வியாழக்கிழமை வந்த உறவினர்கள் நெளுக்குளம் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் சிவசக்தி ஆனந்தன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் 48 மணிநேரக்காலக்கெடு முடிவடைந்துவிட்டது. ஆழ ஊடுருவும் படை ஊடுருவுமா? – ஏகாந்தி

sl_navy.jpgஇலங்கையில் அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் நடைபெற்றுவரும் யுத்தத்தில் மனிதாபிமான நெருக்கடிமிக்க ஒரு கட்டத்தில் தற்போதைய யுத்த நிலை காணப்படுகின்றது. மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் மாவிலாறில் ஆரம்பித்த எதிர்நடவடிக்கை படிப்படியாக முன்னேற்றமடைந்து இன்று விடுதலைப்புலிகளின் பலத்தை சுமார் 35 சதுர கிலோமீற்றர் பரப்புக்குள் முடக்கியுள்ளது. விடுதலைப் புலிகளின் கேந்திர முக்கியத்துவமிக்க பல இடங்களை படையினர் கைப்பற்றியுள்ள நிலையில் தற்போது முல்லைத்தீவை கைப்பற்றுவதில் அரச படையினர் முழுமூச்சாக இருப்பதாக தெரிகின்றது.

இங்கு அவதானிக்கக்கூடிய முக்கிய விடயம் விடுதலைப் புலிதரப்பில் கட்டுப்பாட்டுப் பிரதேச எல்லை சுருங்கியுள்ளதால் இப்பிரதேசத்தினுள் சிக்கியுள்ள பொதுமக்களின் நிலை என்னவாகும் என்பதாகும்.

வன்னி நிலப்பரப்பில் அகப்பட்டிருக்கும் பொதுமக்களின் எண்ணிக்கைப் பற்றி இதுவரை உத்தியோகபூர்வமான கணிப்பீடு வெளியிடப்படவில்லை. பொதுவாக 2 இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் இப்பிரதேசத்தினுள் இருக்கலாம் என கூறப்படுகின்றது. நேற்றைய தினம் (31) அமைச்சர் மஹிந்த சமரசிங்க முல்லைத்தீவுப் பிரதேசத்தினுள் 1 இலட்சத்து 20ஆயிரம் மக்கள் இருப்பதாக கிடைக்கும் தகவல்களின் ஊடாக உறுதிப்படுத்த முடியுமென தெரிவித்தார்.

எவ்வாறாயினும் முல்லைத்தீவுப் பிரதேசத்துக்குள் பெருமளவு பொதுமக்கள் சிக்குண்டுள்ளார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் வன்னி நிலப்பரப்பில் மோதல் நடைபெறும் பிரதேசங்களிலுள்ள பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வருவதற்கு அரசாங்கம் வழங்கிய நாற்பத்தெட்டு மணித்தியால கால அவகாசம் நேற்று இரவுடன் முடிந்தது.

palitha_koahana.jpg48 மணி நேர கெடு முடிந்ததும், ராணுவம் தாக்குதலைத் தொடங்கி விடும் என இலங்கை வெளியுறவு செயலாளர் பலித கொஹனா எச்சரித்துள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனால் இந்த கெடுவை ஏற்று அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் மிகவும் சொற்ப எண்ணிக்கையிலான தமிழர்களே இடம் பெயர்ந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இது பற்றி இராணுவப் பேச்சாளர் உதயநாணயக்கார தகவல் தெரிவிக்கையில்  கடந்த 48 மணி நேரத்தில் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த 171 சிவிலியன்கள் பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக  தெரிவித்தார். அதேநேரம்,  பாதுகாப்புப் படையினரால் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தை நோக்கி பொது மக்கள் வருகை தந்துள்ளனரா இல்லையா என்பது தொடர்பாக தகவல்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

விசுவமடு பிரதேசத்தை நோக்கி நேற்றுக் காலை 16 குடும்பங்களைச் சேர்ந்த 63 சிவிலியன்கள் இராணுவத்தினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களில் 38 ஆண்களும், 25 பெண்களும் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, முல்லைத்தீவு வலைமடு பிரதேசத்திலிருந்து புல்மோட்டையை நோக்கி 43 சிவிலியன்கள் கடற்படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர்.

43 சிவிலியன்களில் 16 சிறுவர்களும், 14 ஆண்களும், 13 பெண்களும் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். இரு சிறிய ரக படகுகள் மூலமே இவர்கள் வருகைத் தந்துள்ளதாகவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, வவுனியா, ஓமந்தைச் சோதனைச் சாவடியை நோக்கி 35 குடும்பங்களைச் சேர்ந்த 65 சிவிலியன்கள் நேற்று முன்தினம் அதிகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையான நேரத்திற்குள் வருகை தந்துள்ளனர். இந்த 65 சிலியன்களில் 12 சிறுமிகள், 10 சிறுவர்கள், 34 பெண்கள் மற்றும் 9 ஆண்களும் அடங்குவதாகவும் இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். இந்த நிலையில், 48 மணி நேர கெடு முடிந்துள்ள நிலையில் இராணுவம் மீண்டும் தாக்குதலைத் தொடங்குமிடத்து பொதுமக்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியாகிவிக் கூடிய நிலையுள்ளதுடன்,  ராணுவம் நடத்தப் போகும் கடும் தாக்குதலில் சிக்கி பெருமளவில் உயிரிப்புகள் ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது.

முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு, விஸ்வமடு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் யுத்தம் நடைபெறுகின்றது. பரந்தன் முல்லைத்தீவு வீதியில் A35 மையமாக வைத்தே நடைபெறும் இந்த யுத்தம் முடிவுக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக படைத் தரப்பு கூறுகின்றது. 15 கிலோமீற்றர் X 15 கிலோமீற்றர் பரப்பளவில் புலிகள் உள்ளதாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்படும் அதேநேரத்தில் இப்பகுதியினுள்ளே பொதுமக்களை கேடயங்களாக புலிகள் பயன்படுத்தி வருவதாகவும் அரச தரப்பு அறிவிக்கின்றது.

தற்போது புலிகளின் வசம் எஞ்சியிருக்கும் முக்கிய நகரான புதுக்குடியிருப்பை பிடித்துவிடவே படையினர் முயல்கின்றனர். இந்த நகரையும் கைப்பற்றி விட்டால் A35 வீதியையும் கைப்பற்றி புலிகளுக்கான கடைசி விநியோகப் பாதையையும் மூடிவிட முடியும் என கருதுகின்றனர். அத்துடன்,  புலிகளின் பகுதியையும் மிகவும் குறுகளாக்கி A35 வீதிக்கு வடக்கே செவ்வகம் போன்றதொரு பகுதிக்குள் முடக்கிவிட வேண்டுமென கருதுவதால் எட்டுத் திக்கிலிருந்தும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதேநேரம் விடுதலைப் புலிகள் கடல் மார்க்கமாக தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காகவும், முல்லைத்தீவு கடற்பரப்பில் தங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அதிவேக டோறா பீரங்கிப் படகுகள், தாக்குதல் படகுகள், விரைந்து தாக்குதலை நடத்தும் படகு அணிகள் என முல்லைத் தீவு முதல் வட மேற்கே சாலை வரையான கடற்பரப்பு பலத்த பாதுகாப்பு வலயமொன்றை அமைத்துள்ளனர். தரையில் தற்போது படையினர் புலிகளின் பகுதியை U வடிவில் சுற்றி வலைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Protest_UK_Jan31எனவே இலங்கையின் களநிலைகள் இவ்வாறிருக்க முன்னெப்போதுமில்லாத வகை சர்வதேச ரீதியில் தமிழ் மக்களின் உணர்வலைகள் ஒன்றிணைந்து வெளிப்படுவதையும் காணக்கூடியதாகவுள்ளது. ஆனாலும்,  இத்தகைய கவனயீர்ப்பு நடவடிக்கைகளினால் இலங்கை அரசாங்க நடவடிக்கைகளுக்கு பாரிய தாக்கங்கள் ஏற்படுவதை காணமுடியவில்லை.

banki-moon.jpgசிலதினங்களுக்கு முன்பே ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பங்கிமூங் வெளியிட்டிருந்த கருத்துக்களைப் பார்க்கும்போது வன்னியில் சிவிலியன்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு வலயமொன்றை அறிவித்தமையை பான் கீ மூன் வரவேற்றிருந்தார்.

மோதல் நடைபெறும் பகுதிக்குள் சிக்குண்டுள்ள மக்களின் நிலை குறித்த அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வழிகளை உறுதிப்படுத்துமாறு இலங்கை இராணுவத்தினருக்கும்,  விடுதலைப் புலிகளுக்கும் ஐ.நா.பொதுச் செயலாளர் பான்கீ மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனினும் போர்நிறுத்தத்திற்கான சர்வதேசத்தின் அழைப்புகளுக்கு மத்தியிலும் வெற்றியில் கவனத்தைக் குவித்து இலங்கை இராணுவம் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில், தங்களுக்கு பாதுகாப்பான இடம் எதுவென்று மக்கள் உணருகிறார்களோ அங்கு செல்வதற்கு மக்களை அனுமதிக்கவேண்டுமென விடுதலைப்புலிகளைக் கோரியுள்ள ஐ.நா.செயலர், மோதல் நடைபெறும் பகுதிகளிலிருந்து வெளியேறும் மக்கள் சர்வதேச நடைமுறைமைகளுக்கேற்ப நடத்தப்படுகிறார்கள் என்பதை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் வன்னி மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளபோதிலும் அங்குள்ள மக்களின் நிலை குறித்து தான் தொடர்ந்தும் கவலையடைவதாக பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

மேலும், சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் பிரகாரம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வெளியேறுவதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை உண்மைத் தன்மையுடன் ஏற்படுத்தவும் தம்மால் இயன்ற அனைத்தையும் விடுதலைப் புலிகளும் அரசாங்கமும் மேற்கொள்ளவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதுதவிர, விரும்பிய இடங்களுக்கு மக்கள் செல்வதற்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் அதேவேளை, மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு மனிதாபிமான அமைப்புகள் முழு அளவில் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமெனவும் கேட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் நிலைவரம் மிகவும் துக்ககரமாக இருப்பதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க அரச திணைக்களம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகளை ஐ.நா.வின் உதவி அமைப்புகளுடன் இணைந்து அமெரிக்கா மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. அரச திணைக்களத்தில் செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் நாளாந்த நிகழ்வின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனைத் தெரிவித்த திணைக்களத்தின் பேச்சாளர்களில் ஒருவரான ரொபேர்ட் வூட், மோதல்கள் விரைவில் முடிவுக்கு வருமென அமெரிக்கா நம்புவதாகவும் தெரிவித்தார்.

unicef_2301.jpgஇந்நிலையில், மோதல் பகுதிக்குள் சிக்குண்டுள்ள சிறுவர்களின் நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ள ஐ.நா. சிறுவர் பாதுகாப்பு நிதியம் (யுனிசெப்), கொல்லப்படும் அல்லது காயமடையும் சிறுவர்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.  மேலும் இங்கு நடைபெறும் மோதல்களால் சிறுவர்கள் கொல்லப்படுவது குறித்தும் காயமடைவது குறித்தும் தங்களிடம் தெளிவான ஆதாரங்கள் இருப்பதாக யுனிசெப்பின் தென்னாசியாவுக்கான பிராந்திய பணிப்பாளர் டானியல் ரூல் தெரிவித்துள்ளார்.

மேலும் எந்தவொரு சூழ்நிலையிலும் பாடசாலைகள் மற்றும் மருத்துவ நிலையங்கள் என்பன பாதுகாப்பு வலயங்களாக கருதப்படவேண்டுமெனத் தெரிவித்துள்ள அவர், மோதல் பகுதிக்குள் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் சிக்கியிருப்பது குறித்து தாம் மிகுந்த கவலையடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  இப் பகுதிகளில் இருக்கும் சிறுவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டுமெனவும் யுனிசெப் அரசாங்கத்தையும் விடுதலைப் புலிகளையும் கேட்டுள்ளது.

redcrose2801.jpgமோதல்கள் காரணமாக காயமடைந்து வன்னிப் பிரதேசத்தின் மீட்கப்படாத பிரதேசங்களில் சிக்கியிருக்கும் பொது மக்களை அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு கொண்டு வருவது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவை சங்க குழு (ஐ.சி.ஆர்.சி) அரசாங்கத்துடனும் விடுதலைப் புலிகளுடனும் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கின்றது.  அரச கட்டுப்பாடற்ற பகுதியில் மேலதிக வைத்திய உதவி தேவைப்படும் மக்கள் பெருமளவில் உள்ளனர். இந்நிலையில் அவசர சிகிச்சை தேவைப்படுகின்ற இவர்களுக்கு உதவுவது அவசியமானதென்று சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இரு தரப்பினரையும் வலியுறுத்தியுள்ளதாகவும் அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சரசி விஜயரட்ண தெரிவித்தார்.

குறிப்பாக மோதல்கள் நடைபெற்றுவரும் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திலேயே பெருமளவு பொதுமக்கள் ஷெல் தாக்குதல்களால் படுகாயமடைந்து உரிய வைத்தியசாலை வசதிகளின்றி பெரும் அவல நிலையை எதிர்கொள்வதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அரசாங்கத்தின் காலக்கெடு நேற்று நள்ளிரவுடன் முடிவுற்றது. இதைத் தொடர்ந்து வன்னி நிலைகள் குறித்த செய்திகளை இச்செய்தி எழுதப்படும்வரை தெரிந்துகொள்ள முடியவில்லை. படைத் தரப்பிலிருந்து கிடைக்கும் உத்தியோகப்பற்றற்ற தகவல்களின் அடிப்படையில் முல்லைத்தீவில் புலிகளைப் பிடிப்பதற்கு ஆழ ஊடுருவும் படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என தெரியவருகின்றது.

காயமடைந்தவர்களுக்கு உதவ வவுனியா ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் நெளுக்குளம் முகாமுக்கு அனுப்பப்பட்டனர்

redcrose2801.jpgவன்னிப் பகுதியில் இடம்பெற்ற அகோர ஷெல் தாக்குதல்களால் படுகாயமடைந்த நிலையில் வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அவர்களுடன் வந்த உறவினர்கள் ஆஸ்பத்திரியில் நிற்க அனுமதிக்கப்படாது நெளுக்குளம் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை இரவு ஆறு அம்புலன்ஸ்களில் படுகாயமடைந்தவர்களும் ஐந்து பஸ்களில் சிறுசிறு காயமடைந்தவர்களும் அவர்களைப் பராமரிப்பவர்களுமென 226 பேர் வவுனியாவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தனர்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இருந்து 50 சிறுவர்கள் உட்பட 226 பேர் வவுனியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு ஆஸ்பத்திரியில் உதவிசெய்து பராமரிப்பதற்காக சேர்ந்து வந்த 139 பேரும், ஆஸ்பத்திரிக்குள் காயமடைந்தவர்களுடன் கூடச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டு அவர்கள் நேரடியாக நெளுக்குளம் முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.

படுகாயமடைந்தவர்களில் அதிகமானவர்கள் கைகால்கள் முறிந்த நிலையிலும், அவயங்கள் பாதிக்கப்பட்டும் உள்ளதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

இராணுவத் தளபதி வன்னிக்கு விஜயம்

fonseka2.jpgஇராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்று வன்னிப் பகுதிக்குச் சென்று மோதல் நடைபெறும் பிரதேசங்களை நேரில் பார்வையிட்டு,அங்கு இராணுவம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். அவருடன் இராணுவ உயர் அதிகாரிகளும் சென்றிருந்தனர் என இணையத்தளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  அதில் மேலும்  தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:

வன்னிப் பகுதியிலிருந்து இடம்பெயரும் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யவும், இராணுவ நடவடிக்கைகள் மேற்பார்வையிடவும் பென்சேகா  வன்னிக்கு வந்ததார் என இராணுவத் தரப்பு தெரிவித்தது. சரத் பொன்சேகா இப்பயணத்தின் போது விடுதலைப் புலிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் 57, 58, 59 ஆவது படை அணிகளின் தளபதிகள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளைச் சந்தித்து போர் உத்திகள் குறித்து ஆலோசனை நடத்தினார் என்றும் ஜனாதிபதியின் 48 மணிநேர போர் நிறுத்த அறிவிப்பு முடிவுக்கு வந்த பின்னர் முழுவீச்சில் தாக்குதலை நடத்த இராணுவம்திட்டமிட்டுள்ளது என்றும் அதுகுறித்த ஆலோசனைகளை வழங்கவே பொன்சேகா போர்முனைக்குச் சென்றனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.