::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

புதுக்குடியிருப்பு முதன் முதலில் முழுமையாக படையினர் வசம் – 420 புலிகள் பலி

puthukku-05-04.jpgமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசம் முழுவதையும் பாதுகாப்புப் படையினர் நேற்று தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புலிகளுடனான கடந்தகால யுத்த வரலாற்றில் புதுக்குடியிருப்பு முழுவதையும் படையினர் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளமை இதுவே முதற் தடவையாகும் என்று தெரிவித்த அவர், வன்னி படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த மற்றுமொரு மாபெரும் வெற்றியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இராணுவத்தின் 53வது, 58 வது படைப்பிரிவினரும், இராணுவத்தின் எட்டாவது அதிரடிப்படையினரும் இணைந்து கடந்த சில தினங்களாக நடத்திய கடும் தாக்குதல்களுக்கு பின்னர் படையினர் நேற்றுக்காலை இந்தப் பிரதேசம் முழுவதையும் முற்றாக விடுவித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்புப் படையினர் பல முனைகள் ஊடாக முன்னெடுத்த வெற்றிகரமான படை நடவடிக்கைகள் மூலம் புலிகளின் சகல செயற்பாடுகளும் 21 சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள் முடக்கப்பட்டிருந்தது. இவற்றில் 20 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் அரசாங்கம் பொது மக்களின் நலனை கருத்திற் கொண்டு அறிவித்திருந்த பாதுகாப்பு வலயமாகும்.

பாதுகாப்புப் படையினர் புலிகள் மீது தாக்குதல் நடத்தி ஒரு சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தையே கைப்பற்ற வேண்டி இருந்தது. நேற்றைய தினம் நடத்திய இறுதிக் கட்ட கடுமையான தாக்குதல்களுக்குப் பின்னர் அந்தப் பிரதேசத்தையும் கைப்பற்றியுள்ளதன் மூலம் தற்பொழுது புதுக்குடியிருப்பு முழுவதும் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் நேற்றைய தினம் பிரகடனப்படுத்தியுள்ளது என்றும் பிரிகேடியர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இராணுவத்தின் 53வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா, எட்டாவது அதிரடிப்படைப் பிரிவின் கட்டளைத் தளபதி கேர்ணல் ரவிப் பிரிய ஆகியோர் தலைமையிலான படையினர் புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசத்தை முற்றாக விடுவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பாதுகாப்புப் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் புலிகளின் இதயமாக புதுக்குடியிருப்புப் பிரதேசமே கருதப்பட்டது. புலிகளின் பிடியிலிருந்த ஒவ்வொரு கோட்டைகளையும், தலைநகர்களையும் பாதுகாப்புப் படையினர் நடத்திய கடுமையான தாக்குதல்களுக்குப் பின்னர் இழந்த புலிகள் தற்பொழுது தங்களது பிரதான கோட்டையையும் இழந்துள்ளனர் என்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

பொது மக்களுக்காக அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலய பிரதேசத்திற்குள் தற்பொழுது ஊடுருவியுள்ள புலிகள் அங்குள்ள பொது மக்களை கேடயங்களாக பயன்படுத்தி கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இருந்த போதிலும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புலிகளின் பிடியிலிருந்து பொது மக்களை விடுவி க்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரண பணிகளில் அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றது -ஐநாவின் பிரதிநிதி

walter_kaelin_.jpgஇலங்கை அரசாங்கம் கஷ்டமான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், இடம்பெயர்ந்து பெரும் எண்ணிக்கையில் வரும் மக்களின் உடனடி நிவாரண தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அரசாங்கத்திற்கு ஐநா சபை உதவிகளைச் செய்து வருவதாக சனியன்று வவுனியாவுக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் பிரதிநிதியாகிய வோல்டர் கேலன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கான ஐநா சபை செயலாளர் நாயகத்தின் பிரதிநிதி வோல்டர் கேலன், செட்டிகுளம் மனிக் பாம் பகுதியில் உள்ள கதிர்காமர் நிவாரண கிராமம், அருணாச்சலம் நிவாரண கிராமம் என்பவற்றிற்குச் சென்று அங்குள்ள மக்களின் நிலைமைகளை நேரில் கண்டறிந்தார்.

அங்குள்ள பலதரப்பினரிடமும் கலந்துரையாடி நிலைமைகளை அவர் கேட்டறிந்து கொண்டார். ஓமந்தையில் உள்ள சோதனைச்சாவடிக்கும் விஜயம் செய்த அவர், வவுனியா செயலகத்தில் வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் தலைமையிலான திணைக்களத் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு இடம்பெயர்ந்துள்ள மக்களின் நிலைமைகள் தேவைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

“இலங்கை அரசாங்கம் கஷ்டமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கின்ற வேளையில் நான் இங்கு வந்திருக்கிறேன். மோதல்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. வன்னிப்பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் சிக்கியிருக்கின்றார்கள். பெரும் எண்ணிக்கையானவர்கள் காயமடைகின்றார்கள். இது எங்களுக்கு கவலையளிக்கின்றது. இதுவிடயத்தில் நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறோம்.

அதேவேளை பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இடம்பெயர்ந்து வந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களை பொறுப்பேற்று நிலைமைகளை மதிப்பீடு செய்து அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டியுள்ளது. அவர்களைப் பராமரிக்க வேண்டியுள்ளது. இது விடயத்தில் பெரும் சவால்கள் இருக்கின்றன. எனவே நிலைமைகளை நேரில் கண்டறிந்து உரிய சிபாரிசுளைச் செய்வதே எனது விஜயத்தின் நோக்கமாகும்.

கொழும்பில் அரசாங்கத்துடன் நான் பேச்சுக்களை நடத்தியுள்ளேன். இங்கு வவுனியாவில் இடம்பெயர்ந்த மக்களின் இடைத்தங்கல் முகாம்கள், இடைத்தங்கல் கிராமங்கள், ஓமந்தையில் உள்ள சோதனைச்சாவடி ஆகிய இடங்களை நான் பார்வையிட்டுள்ளேன். இந்த இடங்களில் அரசாங்கம் முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டிருப்பதை என்னால் காணமுடிந்தது.

அதேவேளை, இங்குள்ள நிலைமையானது (இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்குப்) பொருத்தமானதாக இல்லை. இந்த விடயங்கள் குறித்து அரசாங்கத்துடன் நாங்கள் பேச்சுக்கள் நடத்திக் கொண்டிருக்கின்றோம். இதுவிடயத்தி்ல் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதும், உரிய தீ்ர்மானங்களும் சிபாரிசுகளும் மேற்கொள்ளப்படும். ஐநா மன்றமும் இந்த மக்களின் தேவைகள் குறித்து சுறுசுறுப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இடைத்தங்கல் நிலையங்களில் தங்கியுள்ள மக்களின் அவசர நிவாரண தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அரசாங்கத்திற்கு நாங்கள் உதவி வருகின்றோம்” என வோல்டர் கேலன் தெரிவித்தார்.

இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்று வவுனியாவில் வன்னி தளபதிகளுடன் ஆலோசனை

sarath-f-s.jpgவன்னியில் தொடரும் போர் தொடர்பான பிந்திய நிலைமைகளை அறிந்து கொள்வதற்காகவும், களமுனைத் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தி அவர்களுக்கான புதிய உத்தரவுகளை பிறப்பிப்பதற்காகவும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்று சனிக்கிழமை வவுனியா சென்றிருந்தார். வன்னி இராணுவத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியகொழும்பில் இருந்து சென்ற குழுவினரை வரவேற்று வன்னி இராணுவத் தலைமையக மாநாட்டு மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார்.

மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் களமுனையில் இருந்து வந்திருந்த மூத்த தளபதிகளுடன் சரத் பொன்சேகா விரிவான ஆலோசனைகளை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.தற்போதைய கள நிலைமைகளையிட்டு வன்னியில் இருந்து வந்த தளபதிகள் விளக்கிக் கூறிய அதே வேளையில், இந்த நிலையில் கையாள வேண்டிய உபாயங்கள் தொடர்பாக சரத் பொன்சேகா புதிய உத்தரவுகளை அவர்களுக்குப் பிறப்பித்திருப்பதாக கூறப்படுகின்றது.

புதுக்குடியிருப்பு முழுமையாக படையினர் வசம். உயர்மட்ட தலைவர்கள் உட்பட 250 புலிகள் மரணம்.-பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு

puthukku-05-04.jpgகடந்த 24 மணிநேரத்திற்குள் ராணுவத்தினர் மேற்கொண்ட பாரிய தாக்குதலில் புதுக்குடியிருப்பு கிழக்கு பகுதி படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசாங்கம் அறிவித்துள்ள யுத்த சூனிய பிரதேசம் தவிர்ந்த வன்னிப்பிரதேசமானது படையினரின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட மேற்படி தாக்குதலில் 200 வரையிலாள புலிகளின் சடலங்கள் ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ள அதேவேளை 140 இற்கு மேற்பட்ட சடலங்கள் அப்பகுதியெங்கும் காணப்படுவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் புலிகளின் உயர்மட்ட தலைவர்களான தீபன் றூபன் நாகேஷ் கடாபி விதூஷா துர்க்கா மாலதி ஆகியோரும் கொல்லப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலில் கனரக ஆயுதங்கள் உட்பட எண்ணற்ற ஆயுதங்களை படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இறுதியாக கிடைத்துள்ள தகவல்களின்படி தாக்குதல்களை வழிநடத்திய பொட்டு அம்மானும் மக்கள் மத்தியில் சென்றுள்ளதாக ராணுவ உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பிரபாகரன் அங்கு பதுங்கியுள்ள நிலையில் பொதுமக்கள் எவரையும் வெளியேறவிடாமல் புலிகள் தமக்கு மனித கேடயங்களாக பொதுமக்களை தொடர்ந்தும் தடுத்து வைத்துள்ளனர் எனவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

வடக்கே தொடரும் மோதல்

lankanavyboat.jpg
முல்லைத்தீவு அலம்பில் கடற்பகுதியில் வெள்ளிகிழமை நள்ளிரவுக்குச் சற்றுப் பின்னரும், சனிக்கிழமை அதிகாலையிலும் விடுதலைப்புலிகளின் படகுகள் மீது படையினர் நடத்திய இருவேறு தாக்குதல்களில் விடுதலைப்புலிகளின் 6 படகுகள் அழிக்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

அலம்பில் கடற்பரப்பில் 10 படகுகள் அடங்கிய விடுதலைப்புலிகளின் படகு அணியொன்றைக் கண்ட படையினர் அவற்றின்மீது நடத்திய தாக்குதலில் 4 படகுகள் அழிக்கப்பட்டதாகவும் ஏனைய படகுகள் மோதல் தவிர்ப்பு பிரதேசத்தை நோக்கித் தப்பியோடிவிட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இந்த மோதல் சம்பவத்தில் கடற்படையின் 3 படகுகள் சிறிய சேதங்களுக்கு உள்ளாகியதாகவும் இரண்டு கடற்படையினர் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கின்றது.

இந்தப் படகுகளில் 3 படகுகள் தற்கொலைத் தாக்குதல் படகுகள் எனவும், ஏனையவை விடுதலைப்புலிகளின் தாக்குதல் படகுகள் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் விபரம் வெளியிட்டிருக்கின்றது.

இதேவேளை, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு புலிகளின் பாதுகாப்பு அரண்களை தகர்த்தபடி முன்னேறிச் செல்லும் இராணுவத்தின் இரண்டாவது அதிரடிப்படையணியினர் இப்பகுதியில் தேடுதல் நடத்தியதில் பெருந்தொகையான ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

முல்லைத்தீவில் இருந்து மேலும் பலர் புல்மோட்டைக்கு வருகை

taking-to-green-ocean.jpgஇலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியிலிருந்து காயங்களுக்கு இலக்கானோர் நோயாளர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் உறவினர்கள் உள்ளிட்ட 490 பேர் நேற்று கப்பல் மூலம் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டோரில் வயதானவர்களே அதிகமாக உள்ளதாக தள வைத்தியசாலை பகுதியில் உள்ள வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவிக்கின்றார்.

இதே வேளை வெள்ளிகிழமை கப்பல் மூலம் புல்மோட்டைக்கு கொண்டுவரப்பட்டோரில் இதுவரை மூவர் மரணித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கப்பல் மூலம் நேற்றுமாலை 480 பேர் புல்மோட்டையை வந்தடைந்தனர்.

taking-to-green-ocean.jpgமுல் லைத்தீவு புதுமாத்தளன் பிரதேசத்தில் இருந்து மேலும் ஒரு தொகுதி மக்கள் கப்பல் மூலம் புல்மோட்டையை நேற்று மாலை வந்தடைந்துள்ளனர்.
 
காயமடைந்த மற்றும் அவர்களைப் பராமரிக்கும் அவர்களது உறவினர்கள் உட்பட 480 பேர் ‘கிறீன் ஓஷன்’  கப்பல் மூலம் செஞ்சிலுவைச் சங்க வழித்துணையுடன் 17வது தடவையாக வந்துள்ளனர்.

ஐ.நா.பிரதிநிதி வோல்டர் கேலன் வவுனியா விஜயம்

walterkelin.jpgஇலங்கை வந்துள்ள ஐ.நா.வின் செயலாளர் நாயகத்தின் உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்களுக்கான பிரதிநிதி பேராசிரியர் வோல்டர் கேலன் இன்று வவுனியாவுக்கு விஜயம் செய்து வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.

விசேட வவுனியா முகாம் வன்னி இராணுவ தலைமையகத்திலிருந்து செட்டிகுளம் கதிர்காமர் நிவாரண கிராமம் அருவித்தோட்டம் முகாம் ஆகியவற்றுக்கு சென்று பார்வையிட்டனர். இவருடன் மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன், சமாதான செயலகப் பணிப்பாளர் ரஜீவ் விஜேயசிங்க, வவுனியா அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரும் முக்கிய இராணுவ அதிபர், பொலிஸ் அதிகாரிகளும் இங்கு சென்றிருந்தனர். .

மக்களின் நிறைகுறைகள், மக்களுக்கான சேவைகள், ஏற்கனவே தங்கவைத்த மக்களுக்கு செய்யப்பட்ட வசதிகள் மேலும் செய்யப்பட வேண்டிய சேவைகள் என்பன குறித்து அனைத்து தரப்பினரிடமும் கலந்துரையாடினர். அதன் பின்னர் வன்னி இராணுவ தலைமையகத்துக்குச் சென்று இராணுவ உயர் அதிகாரிகளைச் சந்தித்தனர். வவுனியா நகரப் பகுதிகளையும், சில நலன்புரி நிலையங்களையும் விஜயம் செய்தனர்

கப்பலில் புல்மோட்டைவந்த மக்கள் விடுதலைப் புலிகள் மீது புகார் – பிபிசி தகவல்

taking-to-green-ocean.jpg புல்மோட்டையில் கரையிறக்கப்படும் தமிழ் அகதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள புதுமாத்தளன் பகுதியில் இருந்து கப்பல் மூலமாக வெள்ளியன்று 480 பேர் புல்மோட்டை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர். இவ்வாறு கப்பலில் கொண்டுவரப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வசிக்கும் மக்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்ல புலிகள் அனுமதி மறுப்பதாகவும், 14 வயதுடைய சிறுவர்களைக் கூட தமது படையணியில் அவர்கள் கட்டாயமாகச் சேர்ப்பதாகவும் புல்மோட்டைக்கு வந்த சிலர் பிபிசியிடம் தெரிவித்தனர்.

புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள குறுகிய பிரதேசத்தில் ஷெல் தாக்குதல்கள் அதிகம் இடம்பெறுவதாகத் தெரிவித்த ஒருவர், அங்கு தண்ணீருக்கு கடும் கட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் ஒரே வீட்டில் இருந்து கூட நான்கு-ஐந்து பேர் என்று பிடித்துச் செல்வதால், சிறார்களை வெளியே அனுப்பவே பயப்பட வேண்டிய சூழல் நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வர மக்கள் விரும்பினாலும் புலிகள் அதை அனுமதிப்பதில்லை என்று நம்மிடம் கூறிய ஒரு பெண்மணி, தப்பி வர முற்படும் மக்கள் மீது புலிகள் சுடுகின்றனர் என்றும் கூறினார். இதற்கிடையே, புதுமாத்தளன் பகுதியிலிருந்து 2 இயந்திரப் படகுகளின் மூலம் எவ்வித வழித்துணையும் இன்றி 21 பேர் புல்மோட்டையை வந்தடைந்துள்ளனர்.

கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட இவர்கள் விசாரணைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுக்கிறது. இதனைத் தொடர்ந்து இவர்களை வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்வும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்ட பிரதி சுகாதார பணிப்பாளர் வரதராஜா பணி இடைநிறுத்தம்

dr-varatharajah.jpgமுல்லைத் தீவு மாவட்ட பிரதி சுகாதாரப் பணிப்பாளர் வரதராஜா தனது பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெயாந்த மக்கள் தொடர்பான தவறான தகவல்களை வழங்கியதனையடுத்தே இவர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார்.  இந்த உத்தரவை சுகாதார அமைச்சு பிறப்பித்துள்ளது.

அண்மைக்காலமாக இவரால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பினனரே இவரைப் பணியிலிருந்து இடை நிறுத்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட பிரதிச் சுகதார சேவைகள் பணிப்பாளர் முல்லைத்தீவில் மோதல்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தொடர்பான தகவல்களை சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கி வந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது