முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசம் முழுவதையும் பாதுகாப்புப் படையினர் நேற்று தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
புலிகளுடனான கடந்தகால யுத்த வரலாற்றில் புதுக்குடியிருப்பு முழுவதையும் படையினர் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளமை இதுவே முதற் தடவையாகும் என்று தெரிவித்த அவர், வன்னி படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த மற்றுமொரு மாபெரும் வெற்றியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இராணுவத்தின் 53வது, 58 வது படைப்பிரிவினரும், இராணுவத்தின் எட்டாவது அதிரடிப்படையினரும் இணைந்து கடந்த சில தினங்களாக நடத்திய கடும் தாக்குதல்களுக்கு பின்னர் படையினர் நேற்றுக்காலை இந்தப் பிரதேசம் முழுவதையும் முற்றாக விடுவித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்புப் படையினர் பல முனைகள் ஊடாக முன்னெடுத்த வெற்றிகரமான படை நடவடிக்கைகள் மூலம் புலிகளின் சகல செயற்பாடுகளும் 21 சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள் முடக்கப்பட்டிருந்தது. இவற்றில் 20 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் அரசாங்கம் பொது மக்களின் நலனை கருத்திற் கொண்டு அறிவித்திருந்த பாதுகாப்பு வலயமாகும்.
பாதுகாப்புப் படையினர் புலிகள் மீது தாக்குதல் நடத்தி ஒரு சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தையே கைப்பற்ற வேண்டி இருந்தது. நேற்றைய தினம் நடத்திய இறுதிக் கட்ட கடுமையான தாக்குதல்களுக்குப் பின்னர் அந்தப் பிரதேசத்தையும் கைப்பற்றியுள்ளதன் மூலம் தற்பொழுது புதுக்குடியிருப்பு முழுவதும் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் நேற்றைய தினம் பிரகடனப்படுத்தியுள்ளது என்றும் பிரிகேடியர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இராணுவத்தின் 53வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா, எட்டாவது அதிரடிப்படைப் பிரிவின் கட்டளைத் தளபதி கேர்ணல் ரவிப் பிரிய ஆகியோர் தலைமையிலான படையினர் புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசத்தை முற்றாக விடுவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்புப் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் புலிகளின் இதயமாக புதுக்குடியிருப்புப் பிரதேசமே கருதப்பட்டது. புலிகளின் பிடியிலிருந்த ஒவ்வொரு கோட்டைகளையும், தலைநகர்களையும் பாதுகாப்புப் படையினர் நடத்திய கடுமையான தாக்குதல்களுக்குப் பின்னர் இழந்த புலிகள் தற்பொழுது தங்களது பிரதான கோட்டையையும் இழந்துள்ளனர் என்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
பொது மக்களுக்காக அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலய பிரதேசத்திற்குள் தற்பொழுது ஊடுருவியுள்ள புலிகள் அங்குள்ள பொது மக்களை கேடயங்களாக பயன்படுத்தி கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இருந்த போதிலும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புலிகளின் பிடியிலிருந்து பொது மக்களை விடுவி க்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்.