::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

வன்னி மோதல் பகுதியிலிருந்து தமிழகத்திற்கு இலங்கை அகதிகள்

mullaitheevu.jpgஇலங் கையின் மோதல் வலயத்திலிருந்து தமிழ் அகதிகள் தமிழ்நாட்டுக்கு வருகைதர ஆரம்பித்திருப்பதாக “ரைம்ஸ் ஒவ் இன்டியா’ பத்திரிகை நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இந்த அகதிகளை முகாம்களுக்கு அனுமதிக்க முன்னர் அவர்களிடம் விசாரணை நடத்தப்படுவதாக தமிழகப் பொலிஸார் தெரிவித்தனர். தினமும் சராசரியாக மூன்று, நான்கு அகதிகள் தமிழக கரையில் படகு மூலம் வந்து இறங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் அநேகமானோர் மோதல் வலயத்திலிருந்தே வருகின்றனர். ஆனால் காயமடைந்தவர்கள் எவரும் இதுவரை வரவில்லை. 45 – 50 வயதிற்கு இடைப்பட்டவர்களும் 14 வயதிற்கு குறைவான சிறுவர்களுமே வந்துள்ளனர். நாகபட்டினம் பகுதியிலேயே தற்போது அதிகமானோர் வந்திறங்குகின்றனர் என்று சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அகதிகளென்ற போர்வையில் புலி உறுப்பினர்கள் ஊடுருவுவதை தடுக்க தமிழக கரையோர நிர்வாகம் அதிக விழிப்புடன் இருப்பதாக அந்த அதிகாரி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு வரும் ஒவ்வொரு அகதியையும் புலனாய்வுப்பிரிவினர் விசாரணை செய்கின்றனர். அந்த அகதிகள் கூறுவது துன்பங்கள் , மரணங்கள் பற்றியதாகவே உள்ளது. சண்டையில் ஏற்படும் துன்பங்களுக்கு அப்பால் அத்தியாவசியப் பொருட்கள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. உணவோ குடிக்க நீரோ இல்லை என்று அவர்கள் கூறுவதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

பாடசாலைச் சிறார்கள் உட்பட 52 புலி உறுப்பினர்கள் சரண் – பாதுகாப்பு அமைச்சு

Wanni_War_Welfare_Campபடையினரால் கைப்பற்றப்பட்ட பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட வலைஞர்மடம் பகுதியில் வைத்து பாடசாலைச் சிறார்கள் உட்பட 52 புலி உறுப்பினர்கள் நேற்று இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதுபற்றி அமைச்சு மேலும் குறிப்பிடுகையில், சரணடைந்தவர்களுள் யுத்தப் பயிற்சி பெற்றுள்ள 13 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட 23 பேர் அடங்கியுள்ளனர். இதுதவிர புலிகளால் அண்மையில் தமது சிறுவர் படைக்கு பலவந்தமாகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட 29 சிறுவர்களும் இக்குழுவில் காணப்படுகின்றனர்.

இராணுவத்தினர் தம்மைப் பயங்கரவாதப் பிடியிலிருந்து காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையிலேயே தாங்கள் சரணடைந்ததாகவும்,  தமது பெற்றோரைத் தேடித் தருமாறும் சரணடைந்த புலி உறுப்பினர்கள் பாதுகாப்புத் தரப்பினரிடம் கேட்டுள்ளனர். தம்மைப்போல இராணுவத்தினரிடம் சரணடைவதற்கு புலிப்பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ள நுற்றுக்கணக்கானோர் விருப்பம்கொண்டுள்ளதாகவும் சரணடைந்தோர் மேலும் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் உள்ள புலிகளின் இறுதி பதுங்கிடமான வெள்ள முள்ளிவாய்க்கலிலிருந்து சுமார் 6 கிலோ மீற்றர் தொலைவிலேயே வலைஞர்மடம் அமைந்துள்ளது. இராணுவத்தின் 58ஆம் படைப் பிரிவினரே இப்பிரதேசத்தை நேற்று முன்தினம் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தனர். வலைஞர்மடம் பிரதேசம் கைப்பற்றப்பட்டதும் அங்கு தமது நிலைகளைப் பலப்படுத்திய படையினர் அன்றைய தினமே அங்கிருந்த 500 சிவிலியன்களை உடனடியாக விடுவித்தனர் என்றும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

வெள்ளமுள்ளி வாய்க்கால் கடற்பரப்பில் இரு தரப்பினருக்கிடையில் கடும் மோதல் கடற்புலிகளின் 3 படகுகள் அழிப்பு; 12 பேர் பலி

navy.jpgமுல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் கடற்புலிகளுக்கும் கடற்படையினருக்கும் இடையில் நேற்று அதிகாலை ஒருமணியளவில் கடும் சமர் இடம்பெற்றது எனப் படைத்தரப்புச் செய்திகள் தெரிவித்தன. முள்ளிவாய்க்கால் கடற்பகுதியூடாக புலிகளின் படகுகள் வருவதை அவதானித்த கடற்படையினர் நடத்திய தாக்குதல் சில மணிநேரம் நீடித்திருந்தது என்றும் படைத் தரப்பில் கூறப்பட்டது.இத்தாக்குலில் கடற்புலிகளின் மூன்று படகுகள் அழிக்கப்பட்டன. அதிலிருந்த கடற்புலிகள் 12 பேர் உயிரிழந்தனர் என்றும் படைத்தரப்புச் செய்திகள் தெரிவித்தன.

எனினும் இந்த மோதல்களில் கடற்படையினருக்கு ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் நேற்று இரவு வரை வெளியிடப்படவில்லை

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் சுமார் 15,000 மக்களே இருக்கிறார்கள் – கோட்டாபய ராஜபக்ஷ

gotabhaya.jpgசர்வதேச சமூகம் தமது அரசிடம் போர் நிறுத்தம் தொடர்பான அழுத்தங்களை கொடுப்பதை விட்டு, விடுதலைப் புலிகளை சரணடையச் சொல்லுமாறு செய்ய வேண்டும் என்றும் கூறிய கோட்டாபய ராஜபக்ஷ இது தொடர்பில் சர்வதேச சமூகம் இரட்டை நிலையை கையாள்வதாகவும் குற்றம் சாட்டினார்.

ஒரு பயங்கரவாத அமைப்பை எதிர்த்து போராடி வரும் தமது அரசு அவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடாது என்பதனை தெளிவு படுத்திய கோட்டாபய ராஜபக்ஷ, வடக்கே போர் நடக்கும் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கான உணவு மற்றும் இதர நிவாரணப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கையை தாம் தடுக்கவில்லை என்றும், மாறாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் உலக உணவுத் திட்டத்தினருக்கு அவ்வாறான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தொடர்ந்து வேண்டியுள்ளதாகவும் கூறுகிறார்.

இன்னமும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் சுமார் 15,000 மக்களே இருக்கிறார்கள் என்றும், முல்லைத்தீவு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் தெரிவித்த 1,65,000 எனும் கணக்கீடு தவறானது என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளவை பொய் என்றும் அவர் கூறுகிறார்.

இதனிடையே, இலங்கைக்கான பயணம் ஒன்றினை மேற்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின், மனிதாபிமான பணிகளுக்கான துணைத் தலைமைச் செயலர் ஜான் ஹோல்ம்ஸ் அவர்கள் வவுனியாப் பகுதிக்கு சென்று அங்கு தங்கியுள்ள இடம் பெயர்ந்த மக்களை சந்திப்பதற்கான ஒழுங்குகளை செய்து கொடுத்துள்ளதாகவும் கோட்டபைய ராஜபக்ஷ  தெரிவித்தார்.

வன்னியிலிருந்து வந்தவர்கள் தங்க வவுனியாவில் மேலும் 5 பாடசாலைகள்

Wanni_War_Welfare_Camp
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை தங்கவைப்பதற்கு புதிதாக ஐந்து பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டு மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தாண்டிக்குளம் அரசினர் தமிழ்க்கலவன்பாடசாலை, கந்தபுரம் வாணி வித்தியாலயம், பூவரசன்குளம் மகாவித்தியாலயம், ஆண்டியாபுளியங்குளம் வித்தியாலயம், முதலியார்குளம் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே நலன்புரி நிலையங்களாக இயங்கத் தொடங்கியுள்ளன.

ஓமந்தைக்கு இராணுவத்தினரால் கூட்டிவரப்படும் இடம்பெயர்ந்த மக்கள் மேற்படி பாடசாலைகளிலுள்ள நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஏற்கனவே 15 தற்காலிக நலன்புரி நிலையங்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மெனிக்பாம் வலயம் இரண்டு ஆனந்தகுமாரசாமி நிவாரண கிராமத்திற்கு வியாழக்கிழமை மட்டும் ஒன்பதாயிரம் பேர் கூட்டிச் செல்லப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமையும் ஆயிரக்கணக்கானோர் வந்து சேர்ந்துள்ளனர்.

பாதுகாப்பு வலயத்தை மீட்டெடுக்க இன்னும் 4 நாட்கள்

images-army.jpgதற்பொழுது இடம்பெற்றுவரும் மனிதாபிமான இராணுவ நடவடிக்கைகள் இன்னும் நான்கு நாட்களுக்குள் முடிவுக்கு வரும் என பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். பொதுமக்களை மீட்கும் பணியினை படையினர் மிகவும் அவதானத்துடன் மேற்கொண்டு வருகின்றனர். எந்தவொரு கனரக ஆயுதங்களையும் பயன்படுத்தாது துப்பாக்கிகளை மட்டும் பயன்படுத்தி முன்னேறி வருகின்றனர் என கூறினார்.

இராணுவத் தளபதி வன்னிக்கு விஜயம்

sarath-fonseka.jpg வவுனியாவுக்கு நேற்று சனிக்கிழமை காலை இராணுத் தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகா விஜயமொன்றை மேற்கொண்டார்.  முல்லைத்தீவு, புதுமாத்தளன் மோதல் தவிர்ப்பு வலயத்தில் இடம் பெறும் படை நடவடிக்கை குறித்து ஆராயும் நோக்கிலேயே சிரேஷ்ட அதிகாரிகள் சிலர் சகிதம் இராணுவத் தளபதி இந்த விஜயத்தை மேற்கொண்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அங்கு இடம்பெற்ற முக்கிய சந்திப்பில் கலந்து கொண்ட வன்னிக்கான கட்டளைத்தளபதிகள், வன்னியில் புலிகள் எஞ்சியிருக்கும் பகுதியின் நிலைமைகள் குறித்து இராணுவத் தளபதிக்கு விளக்கம் கூறினார். எதிர்வரும் நாட்களில் அந்தப்பகுதிகளில் மேற்கொள்ளவுள்ள படை நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளித்த இராணுவத்தளபதி அதற்கான உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

28 சடலங்கள் வவுனியாவில் அடக்கம்

வவுனியா பொதுவைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்த 28 சடலங்கள் மாவட்ட நீதிவானின் அனுமதியுடன் பூந்தோட்டம் பொதுமயானத்தில் கடந்த புதன்கிழமை இரவு அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அடையாளம் காணப்பட்டு உறவினர்களினால் எடுத்து செல்லப்படாததும், அடையாளம் காணப்படாததுமான சடலங்கள் சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்தன. இடநெருக்கடியும் சடலங்கள் பழுதடைந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியதனைத் தொடர்ந்து இவை அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டன.

ஒரே குழியில் 28 சடலங்களும் போடப்பட்டே அடக்கம் செய்யப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இடம்பெயர்ந்தோருக்கு உடனடியாக 155 மில்லியன் டொலர் நிதி தேவை – அரசு, ஐ.நா., 40 நிவாரண அமைப்புகள் கோரிக்கை

cvili.jpgமோதல் பகுதியிலிருந்து வெளியேறி முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்போருக்கு உடனடி நிவாரண உதவி வழங்க நிதி உதவி தேவைப்படுவதாக உதவி வழங்கும் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்திருக்கும் அதேசமயம், ஐ.நா.வும் அரசாங்கமும் 40 நிவாரண முகவரமைப்புகளும் 155 மில்லியன் டொலர் தேவையென கோரிக்கை விடுத்துள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மோதல் பகுதியிலிருந்து வெளியேறி நிராதரவாகவிருக்கும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கு உதவியளிக்குமாறு வேண்டுகோளை விடுத்துவரும் உதவிவழங்கும் அமைப்புகள் பல மில்லியன் டொலர்களை திரட்டுவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இடம்பெயர்ந்தோரை தங்கவைக்கும் முகாம்கள் நிரம்பி வழிகின்றன. நாற்காலி வைக்கும் இடத்தின் அளவுடைய பகுதியில் சில குடும்பங்கள் இருப்பதாக நிவாரணப் பணியாளர்கள் கூறுவதாக “ரிலீவ்வெப்’ இணையத்தளம் தெரிவித்தது.

மருத்துவமனைகளும் காயப்பட்டடோராலும் நோயாளர்களாலும் நிரம்பியுள்ளன. மோசமான காயங்களுடன் மோதல் பகுதியிலிருந்து கொண்டுவந்து அனுமதிக்கப்படுவோருக்கு மருத்துவர்கள் இரவுபகலாக சிகிச்சையளித்து வருகின்றனர். இந்த மக்களுக்கு அடிப்படை நிவாரண உதவிகளை வழங்குவதற்கு நிதியுதவி அதிகளவு தேவைப்படுவதாக இலங்கைக்கான ஐ.நா.வின் வதிவிடப்பிரதிநிதி நீல்புனே கூறியுள்ளார்.

குழந்தைகள் வயிற்றோட்டத்தாலும் சிறுவர்கள்,பெண்கள் போஷாக்கின்றியும் காயமடைந்தவர்களையும் நான் பார்க்கின்றேன். மோதல்பகுதியிலிருந்து மாதக்கணக்காக உடுத்தியிருந்த ஆடையுடன் ஆட்கள் வந்துள்ளதையும் பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார். வவுனியாவுக்கு சென்று முகாம்களின் நிலைமையை பார்வையிட்டு திரும்பியிருந்த நீல்புனே இந்த மக்களில் பலர் ஒருவருடத்துக்கு முன்பே தமது வீடுகளிலிருந்து யுத்தம் காரணமாக வெளியேற பலவந்தமாக நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் என்றும் அந்த மாதிரியான மோசமான சூழ்நிலையிலிருந்தும் இவர்கள் உயிர்தப்பி வாழ்வது ஏதோவொரு அற்புதம் எனவும் புனே கூறியுள்ளார்.

இலங்கைக்கு உதவி வழங்க ஐ.நா. வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இந்த இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு, புகலிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க உதவும் முகவரமைப்புகள் நிதிப்பற்றாக்குறையினால் திண்டாடுகின்றன. 196,000 பேர் வெளியேறியிருப்பதாக அரசு கூறுகிறது. இவர்களில் அநேகமானோர் வவுனியாவிலுள்ள முகாம்களில் தங்கியுள்ளனர். முதலில் இடம்பெயர்ந்தவர்கள் மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் தங்கியுள்ளனர். விரைவில் இவர்களுக்கு முகாம்களை அமைப்பதற்கான இடங்களை தயாராக்குமாறு ஐ.நா. அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

பொருத்தமான நிலத்தை வழங்குவதில் அரசு தாமதம் காட்டுவதாகவும் தற்காலிக முகாம்களுக்கான உள்சார் கட்டமைப்பு வசதிகளுக்கு செலவிட உதவி வழங்கும் குழுக்களால் எவ்வளவு தொகையை. செலவிட முடியும் என்பதில் யதார்த்தபூர்வமற்ற எதிர்பார்ப்புகளை அதிகாரிகள் கொண்டிருப்பதாகவும் நிவாரணப் பணியாளர் ஒருவர் தெரிவித்ததாக ரிலீவ் வெப் கூறியுள்ளது. பலர் உடுத்த ஆடையுடனேயே எதுவுமின்றி வந்துள்ளனர். பசியுடனும் தாகத்துடனும் இருக்கும் அவர்களுக்கு சிறியளவு உணவும் நீருமே கிடைக்கிறது. அன்புக்குரியவர்கள் கண் முன்னால் கொல்லப்படுவதைக் கண்ட பலர் நினைவாற்றல் இல்லாதவர்களாக பிரமை பிடித்தவர்களாக உள்ளனர்.

இடம்பெயர்ந்தவர்களுக்கான அவசரப் புகலிடங்கள் , மலசல கூடங்களை அமைக்கவும் 9 மில்லியன் டொலர் நிதியுதவி தேவையென செயலர் அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  உணவு , ஆடைகள், படுக்கைகள், சுகாதார வசதிகள் என்பவற்றை வழங்கிவரும் சேவ்த சில்ரன் அமைப்பு 3.65 மில்லியன் டொலர் தேவையென வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தக் குடும்பங்கள் சகலவற்றையும் இழந்துவிட்டன. சிறுவர்கள் உளரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சேவ்த சில்ரன் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் பிரசாத் நாயக் தெரிவித்துள்ளார்.  நிதி மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருப்பதாகவும் பொதுமக்கள் அதிக அளவில் உதவவேண்டும் என்றும் ?கிறிஸ்ரியன் எய்ட், அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. புகலிடம், உணவு, நீர், சுகாதார வசதி, ஆடை, படுக்கை, நுளம்பு வலைகள் மற்றும் உளவியல் ரீதியான ஆதரவு உடனடியாக தேவைப்படுவதாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஐ.நா.வும் அரசாங்கமும் சுமார் 40 உதவி வழங்கும் அமைப்புகளும் 2 இலட்சம் பேருக்கு உதவுவதாகவும் 155 மில்லியன் டொலர் தேவையென வேண்டுகோள் விடுத்துள்ளன. அதேசமயம், தேவைப்படும் தொகையில் 31 சதவீதமே அதாவது 48 மில்லியன் டொலரே கிடைத்திருப்பதாக ஐ.நா. பேச்சாளர் கோர்டொன் வைஸ் கூறியுள்ளார்.

உணவுக்கான உதவி 60 சதவீதம் கிடைத்திருப்பதாகவும் ஆனால் தங்குமிடத்திற்கு 18 சதவீதமே கிடைத்திருப்பதாகவும் நீர், சுகாதார வசதிகளுக்கு 16 சதவீதமும் சுகாதார வசதிகளுக்கு 15 சதவீதமும் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்ததுடன் இது மிகவும் பற்றாக்குறையாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். உடனடி மனிதாபிமான உதவிகள் வழங்க உதவி வழங்குவோர் விரும்புவதாகவும் ஆனால் நீண்டகாலத்துக்கு இடைத்தங்கல் முகாம்களுக்கு நிதியுதவி வழங்க தயங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கூடாரங்கள், அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு அவசரமாக அனுப்புகிறது யூ.என்.எச்.சி.ஆர்.

new_welfare.png
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வரும் மக்களின் அவசர தேவைகளுக்காக கூடாரங்கள் மற்றும் பொருட்களை இலங்கைக்கு அனுப்பும் அவசர பணிகளைத் தாங்கள் ஆரம்பித்துள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகராலயம் (யு.என்.எச்.சி.ஆர்) தெரிவித்துள்ளது. வன்னியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகளையடுத்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்களுக்கு வந்துள்ளனர்.

வவுனியா, மன்னார், யாழ்.குடாவில் இந்த மக்கள் பாடசாலைகளிலும் பொட்டல் வெளிகளில் கூடாரங்கள் அமைக்கப்பட்டும் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். எனினும் இந்த மக்களுக்கான தங்குமிட வசதிகள் மிகவும் குறைவாயுள்ள நிலையில் யு.என்.எச்.சி. ஆர் தனது அவசர உதவிப் பணிகளை ஆரம்பித்துள்ளது. இதன் முதல்கட்டமாக கூடாரங்கள் மற்றும் பொருட்களை விமான மூலம் கொழும்புக்கு அனுப்பும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தேவையான. ஐயாயிரம் கூடாரங்களும் வேறுபொருட்களும் அடுத்த ஓரிரு தினங்களில் விமானங்கள் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்படவுள்ளன. அந்தக் கூடாரங்கள் தற்போது வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் 38 முகாம்களிலுள்ளவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.