இடம்பெயர்ந்தோருக்கு உடனடியாக 155 மில்லியன் டொலர் நிதி தேவை – அரசு, ஐ.நா., 40 நிவாரண அமைப்புகள் கோரிக்கை

cvili.jpgமோதல் பகுதியிலிருந்து வெளியேறி முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்போருக்கு உடனடி நிவாரண உதவி வழங்க நிதி உதவி தேவைப்படுவதாக உதவி வழங்கும் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்திருக்கும் அதேசமயம், ஐ.நா.வும் அரசாங்கமும் 40 நிவாரண முகவரமைப்புகளும் 155 மில்லியன் டொலர் தேவையென கோரிக்கை விடுத்துள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மோதல் பகுதியிலிருந்து வெளியேறி நிராதரவாகவிருக்கும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கு உதவியளிக்குமாறு வேண்டுகோளை விடுத்துவரும் உதவிவழங்கும் அமைப்புகள் பல மில்லியன் டொலர்களை திரட்டுவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இடம்பெயர்ந்தோரை தங்கவைக்கும் முகாம்கள் நிரம்பி வழிகின்றன. நாற்காலி வைக்கும் இடத்தின் அளவுடைய பகுதியில் சில குடும்பங்கள் இருப்பதாக நிவாரணப் பணியாளர்கள் கூறுவதாக “ரிலீவ்வெப்’ இணையத்தளம் தெரிவித்தது.

மருத்துவமனைகளும் காயப்பட்டடோராலும் நோயாளர்களாலும் நிரம்பியுள்ளன. மோசமான காயங்களுடன் மோதல் பகுதியிலிருந்து கொண்டுவந்து அனுமதிக்கப்படுவோருக்கு மருத்துவர்கள் இரவுபகலாக சிகிச்சையளித்து வருகின்றனர். இந்த மக்களுக்கு அடிப்படை நிவாரண உதவிகளை வழங்குவதற்கு நிதியுதவி அதிகளவு தேவைப்படுவதாக இலங்கைக்கான ஐ.நா.வின் வதிவிடப்பிரதிநிதி நீல்புனே கூறியுள்ளார்.

குழந்தைகள் வயிற்றோட்டத்தாலும் சிறுவர்கள்,பெண்கள் போஷாக்கின்றியும் காயமடைந்தவர்களையும் நான் பார்க்கின்றேன். மோதல்பகுதியிலிருந்து மாதக்கணக்காக உடுத்தியிருந்த ஆடையுடன் ஆட்கள் வந்துள்ளதையும் பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார். வவுனியாவுக்கு சென்று முகாம்களின் நிலைமையை பார்வையிட்டு திரும்பியிருந்த நீல்புனே இந்த மக்களில் பலர் ஒருவருடத்துக்கு முன்பே தமது வீடுகளிலிருந்து யுத்தம் காரணமாக வெளியேற பலவந்தமாக நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் என்றும் அந்த மாதிரியான மோசமான சூழ்நிலையிலிருந்தும் இவர்கள் உயிர்தப்பி வாழ்வது ஏதோவொரு அற்புதம் எனவும் புனே கூறியுள்ளார்.

இலங்கைக்கு உதவி வழங்க ஐ.நா. வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இந்த இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு, புகலிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க உதவும் முகவரமைப்புகள் நிதிப்பற்றாக்குறையினால் திண்டாடுகின்றன. 196,000 பேர் வெளியேறியிருப்பதாக அரசு கூறுகிறது. இவர்களில் அநேகமானோர் வவுனியாவிலுள்ள முகாம்களில் தங்கியுள்ளனர். முதலில் இடம்பெயர்ந்தவர்கள் மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் தங்கியுள்ளனர். விரைவில் இவர்களுக்கு முகாம்களை அமைப்பதற்கான இடங்களை தயாராக்குமாறு ஐ.நா. அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

பொருத்தமான நிலத்தை வழங்குவதில் அரசு தாமதம் காட்டுவதாகவும் தற்காலிக முகாம்களுக்கான உள்சார் கட்டமைப்பு வசதிகளுக்கு செலவிட உதவி வழங்கும் குழுக்களால் எவ்வளவு தொகையை. செலவிட முடியும் என்பதில் யதார்த்தபூர்வமற்ற எதிர்பார்ப்புகளை அதிகாரிகள் கொண்டிருப்பதாகவும் நிவாரணப் பணியாளர் ஒருவர் தெரிவித்ததாக ரிலீவ் வெப் கூறியுள்ளது. பலர் உடுத்த ஆடையுடனேயே எதுவுமின்றி வந்துள்ளனர். பசியுடனும் தாகத்துடனும் இருக்கும் அவர்களுக்கு சிறியளவு உணவும் நீருமே கிடைக்கிறது. அன்புக்குரியவர்கள் கண் முன்னால் கொல்லப்படுவதைக் கண்ட பலர் நினைவாற்றல் இல்லாதவர்களாக பிரமை பிடித்தவர்களாக உள்ளனர்.

இடம்பெயர்ந்தவர்களுக்கான அவசரப் புகலிடங்கள் , மலசல கூடங்களை அமைக்கவும் 9 மில்லியன் டொலர் நிதியுதவி தேவையென செயலர் அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  உணவு , ஆடைகள், படுக்கைகள், சுகாதார வசதிகள் என்பவற்றை வழங்கிவரும் சேவ்த சில்ரன் அமைப்பு 3.65 மில்லியன் டொலர் தேவையென வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தக் குடும்பங்கள் சகலவற்றையும் இழந்துவிட்டன. சிறுவர்கள் உளரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சேவ்த சில்ரன் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் பிரசாத் நாயக் தெரிவித்துள்ளார்.  நிதி மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருப்பதாகவும் பொதுமக்கள் அதிக அளவில் உதவவேண்டும் என்றும் ?கிறிஸ்ரியன் எய்ட், அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. புகலிடம், உணவு, நீர், சுகாதார வசதி, ஆடை, படுக்கை, நுளம்பு வலைகள் மற்றும் உளவியல் ரீதியான ஆதரவு உடனடியாக தேவைப்படுவதாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஐ.நா.வும் அரசாங்கமும் சுமார் 40 உதவி வழங்கும் அமைப்புகளும் 2 இலட்சம் பேருக்கு உதவுவதாகவும் 155 மில்லியன் டொலர் தேவையென வேண்டுகோள் விடுத்துள்ளன. அதேசமயம், தேவைப்படும் தொகையில் 31 சதவீதமே அதாவது 48 மில்லியன் டொலரே கிடைத்திருப்பதாக ஐ.நா. பேச்சாளர் கோர்டொன் வைஸ் கூறியுள்ளார்.

உணவுக்கான உதவி 60 சதவீதம் கிடைத்திருப்பதாகவும் ஆனால் தங்குமிடத்திற்கு 18 சதவீதமே கிடைத்திருப்பதாகவும் நீர், சுகாதார வசதிகளுக்கு 16 சதவீதமும் சுகாதார வசதிகளுக்கு 15 சதவீதமும் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்ததுடன் இது மிகவும் பற்றாக்குறையாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். உடனடி மனிதாபிமான உதவிகள் வழங்க உதவி வழங்குவோர் விரும்புவதாகவும் ஆனால் நீண்டகாலத்துக்கு இடைத்தங்கல் முகாம்களுக்கு நிதியுதவி வழங்க தயங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *