::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும் – அமைச்சர் அநுர பிரிதர்ஷன யாப்பா

20090424063601srilanka4.jpgஇடம் பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள தமிழ் மக்களும் இந்நாட்டுப் பிரஜைகள். அவர்களுக்கு உதவுவது தங்கள் கடமை என்றும் இதில் அனைவரும் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஊடக தகவல்துறை,  முதலீட்டு அபிவிருத்தி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

இடம்பெயர்ந்தவர்களுக்கு விநியோகிப்பதற்காக கட்டுகம்பளை தேர்தல் தொகுதி மக்களால் சேகரிக்கப்பட்ட பொருட்களை அப்பிரதேச மக்கள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா ஊடாக அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று முற்பகல் தகவல் ஊடகத்துறை அமைச்சில் இடம்பெற்றது.

குறிப்பிட்ட பொருட்களைக் கையேற்று உரை நிகழ்த்திய போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பத்து இலட்சம் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான  குடிநீர் போத்தல்கள், பிஸ்கட், பால்மா,  அரிசி, பருப்பு, சீனி மற்றும் துணிவகைகள் போன்றவை இந்நிகழ்வின் போது கையளிக்கப்பட்டன.

இலங்கையில் ஐ.நா.புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதா – இரு தரப்புக்குமிடையே இராஜதந்திரப் போர்

_sri_lanka_sat_any.gif ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் கடுமையான குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருப்பதையடுத்து இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்குமிடையிலான இராஜதந்திரப் போர் இப்போது மேலும் தீவிரமடைந்திருக்கின்றது.

முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எடுக்கப்பட்ட சர்ச்சைக்குரிய செய்மதி ஒளிப்படங்கள் சில ஐ.நா.வினால் வெளியிடப்பட்டதையடுத்தே இந்தக் குற்றச்சாட்டை இலங்கை அரசு முன்வைத்துள்ளது.

பாதுகாப்பு வலயப் பகுதிகளில் இலங்கைப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதல்களை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் எனக்கூறி செய்மதி ஒளிப்படங்கள் சிலவற்றை ஐ.நா.சபை கடந்த வாரத்தில் கசிய விட்டதையடுத்து இலங்கை அரசாங்கம் கடும் சீற்றமடைந்திருக்கின்றது.  இந்தச் செயற்பாட்டின் மூலமாக ஐ.நா.சபை தன்னுடைய வழமையான செயற்பாடுகளின் எல்லையைத் தாண்டிச் சென்றிருக்கின்றது என்ற குற்றச்சாட்டையும் இலங்கை அரசாங்கம் முன்வைத்திருக்கின்றது.

உறுப்பு நாடு ஒன்றின் தகவல்களை இரகசியமான முறையில் பெற்று, அந்த நாட்டுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் அந்தத் தகவல்களை பின்னர் ஏனைய நாடுகளுக்கும் ஊடகங்களுக்கும் கசிய விடுவதற்கான உரிமை ஐ.நா.வுக்கு உள்ளதா என இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  “ஐ.நா.வின் ஒரு பிரிவோ அல்லது ஐ.நா.வுடன் சம்பந்தப்பட்ட ஒரு தனிநபரோ உறுப்பு நாடு ஒன்றில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைச் சேகரித்து பின்னர் அவற்றைத் தெரிவு செய்யப்பட்ட சில தூதரகங்களுக்கு கசியவிடுவது அல்லது இணையத்தளத்தில் வெளியிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது’ என வெளிவிவகாரச் செயலாளர் பாலித கோஹன ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்திருக்கின்றார்.  உலகில் போர்ப்பகுதிகளாக பல இடங்கள் உள்ளன எனச் சுட்டிக்காட்டியிருக்கும் கோஹன. இந்த இடங்களில் எல்லாம் உளவு பார்ப்பதற்கான உத்தேசம் ஐ.நா.சபைக்கு உள்ளதா எனவும் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

இலங்கை அரசாங்கத்துக்குச் சங்கடமான நிலைமை ஒன்றை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இந்த செய்மதிப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன எனக் குறிப்பிடும் கோஹன, இவ்வாறான நடவடிக்கை சர்வதேச உறவுகளுக்கு ஒரு அச்சுறுத்தலாக இருப்பதுடன், சக்தியற்ற மூன்றாம் உலக நாடகளுக்கு விடுக்கப்படும் ஒரு மிரட்டலாகவுமே கருதவேண்டுமெனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகள் வசமிருக்கும் எஞ்சிய பகுதியை நோக்கிப் பல முனைகளிலும் படைநகர்வு

waroooo.jpgபாதுகாப்பு அமைச்சு கூறுகிறதுமுல்லைத்தீவில் மோதல் தவிர்ப்பு வலயத்தில் விடுதலைப் புலிகள் வசமிருக்கும் மிகுதிப் பகுதியையும் கைப்பற்றும் கடும் தாக்குதலை படையினர் மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பரந்தன் முல்லைத்தீவு வீதியில் “ஏ35′ நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மிக அருகருகே நடைபெற்ற கடும் சமரையடுத்து அப்பகுதியில் புலிகளால் மிகவும் வலுவாக அமைக்கப்பட்டுள்ள மண் அணையை 53 ஆவது படையணியினர் தகர்த்துள்ளனர்.

இதையடுத்து, மோதல் தவிர்ப்பு வலயத்தினுள் புலிகள் வசம் எஞ்சியிருக்கும் கடைசி 5 சதுர கிலோ மீற்றர் பரப்பையும் கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள 58 ஆவது மற்றும் 53 ஆவது படையணிகள் செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.  “ஏ35′ வீதி, முல்லைத்தீவு புதுமாத்தளன் வீதியை இணைக்கும் முக்கிய சந்திக்குத் தெற்கே நந்திக்கடல் வாவிக்கும் “ஏ35′ வீதிக்குமிடையிலுள்ள சிறிய பகுதியில் தற்போது 53 ஆவது படையணி செயற்படுகிறது.

சனிக்கிழமை 58 ஆவது மற்றும் 53 ஆவது படையணிகள், புதுமாத்தளன் முல்லைத்தீவு மற்றும் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் வெள்ளமுள்ளிவாய்க்காலுக்கும் இடையிலுள்ள முக்கிய சந்தியைக்கைப்பற்றியுள்ளது.  இந்தக் கடும் சமரின் போது விடுதலைப் புலிகள், தாங்கள் அமைத்திருக்கும் மண் அணையை படையினர் கைப்பற்றுவதைத் தடுக்க பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டனர்.

ஞாயிற்றுக்கிழமை புலிகள் இந்தப் பகுதிக்கு பல வாகனங்களில் மேலதிகமாக தங்கள் ஆட்களை அனுப்பி படையினரின் நகர்வுகளை முறியடிக்க பல தடவைகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.  எனினும், புலிகளினால் கண்ணி வெடிகள், மிதி வெடிகள் மிக அதிகளவில் புதைக்கப்பட்டு மிகவும் வலுவாக வைத்திருந்த மண் அணையை படையினர் கடும் சமரின் பின்னர் கைப்பற்றியுள்ளதாகவும் இதில் புலிகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத் தரப்பு கூறியுள்ளது.

தற்போது எஞ்சியிருக்கும் பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் படையினர் சகல முனைகளிலும் முன்னேறி வருவதால் புலிகள் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாகவும் படையினர் கூறுகின்றனர்.

இடம்பெயர்ந்தோர் நலன் குறித்து பிரித்தானிய எம்.பி. க்களுக்கு ஜனாதிபதி விளக்கம்

uk_delegation-2009-05-05.pngஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய பாராளுமன்றக் குழுவினர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இச்சந்திப்பு இன்று முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு தற்போது அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகள் மற்றும் சேவைகள் தொடர்பாகவும் மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்தும் பிரித்தானிய பாராளுமன்றக் குழுவினருக்கு ஜனாதிபதி விளக்கிக் கூறினார்.

 இச்சந்திப்பில் அமைச்சர்களான ரோஹித போகொல்லாகம,  மஹிந்த சமரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன ஆகியோர் கலந்துகொண்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

போர் நிறுத்தம் கொண்டுவர அனுசரணைப் பணி செய்யுங்கள்- ரவிசங்கர் குருஜியிடம் புலிகள் கோரிக்கை

sri_sri_ravi_shanka.jpg இலங்கையில் போர் நிறுத்தம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு அனுசரணைப் பணிபுரியுமாறு இந்தியாவின் ஆன்மீகத் தலைவரும் வாழும் கலை நிறுவனத்தின் ஸ்தா பகருமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியிடம் விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விடுதலைப்புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் நேற்று குருஜியுடன் தொலைபேசியில்  தொடர்பு கொண்டு பேசினார். அப்போதே இந்தக் கோரிக்கையை அவர் முன் வைத்தார் என்று இந்தியச் செய்தி ஏஜென்சிகள் தகவல் வெளியிட்டுள்ளன.

மோதல் பிரதேசத்தில் உணவு மற்றும் மருந்துப் பொருள்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதால் ஆயிரக்கணக்கான மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நடேசன் ரவிசங்கர் குருஜியிடம் தமது தொலைபேசி உரையாடலின் போது எடுத்துரைத்தார்.

நாங்கள் போர் நிறுத்தத்துக்கு தயாராகவே உள்ளோம். போர் நிறுத்தத்தை நடை முறைப்படுத் தேவையான அனுசரணைப் பணியை மேற்கொள்ளுமாறு தங்களைக் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் நடேசன் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியிடம் தெரிவித்துள்ளார்.

கடந்தமாதம் 20 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சுவாமிகள் வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களின் நிலைமை தொடர்பாக கேட்டறிந்தார்.அதன்பின் 23 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவர் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.

கனடிய அமைச்சரின் போர்நிறுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரிப்பு

can-srila.jpgகனடிய அமைச்சரினால் விடுக்கப்பட்ட போர்நிறுத்த கோரிக்கையை அரசாங்கம் முற்றாக நிராகரித்து விட்டதாக ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு நேற்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்ட சர்வதேச ஒத்துழைப்புக்கான கனடிய அமைச்சர் பெவர்லி ஜேஒடாவே போர்நிறுத்தக் கோரிக்கையை விடுத்திருந்ததாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஏ.எப்.பி. வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சர்வதேச ஒத்துழைப்புக்கான கனடிய அமைச்சர் பெவர்லி ஒடா வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவை நேற்றுக்காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன்போது கனடிய அமைச்சர் போர்நிறுத்தம் குறித்து விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. கடந்த மாதம் அரச தரப்பில் மேற்கொள்ளப்பட்ட ஒருதலைப்பட்ச மோதல் தவிர்ப்பு தோல்வியில் முடிவடைந்ததாக அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, கனடிய அமைச்சருக்கு தெரிவித்துள்ளார்.

வவுனியாவுக்கு இதுவரை 30 லொறி மருந்துப் பொருட்கள் அனுப்பி வைப்பு

medical_lorry.jpg வவுனியாவுக்கு வந்துள்ள மக்களின் மருத்துவ தேவைகளுக்காக கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரை 30 லொறிகளில் மருந்து வகைகள் அனுப்பிவைக்கப் படடுள்ளதாக சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவுப் பணிப்பாளர் டாக்டர் சரத் வீரபண்டார தெரிவித்தார்.
 
வன்னியில் இருந்து வந்துள்ள மக்களுக்காக நேற்றைய தினமும்  3 லொறிகளில் மருந்து வகைகள், சத்திர சிகிச்சை உபகரணங்கள் என்பன அனுப்பி வைக்கப்பட்டன. இதேவேளை புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களுக்கு இன்று கப்பல்  மூலம் மருந்து வகைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களுக்கு தேவையான மருந்து வகைகள் தொடர்பாக மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் அமைச்சிற்கு அறிவித்திருந்தார். இதன்படி கப்பல் மூலம் புதுமாத்தளனுக்கு மருந்து வகைகள் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம். கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படும் மருந்துகள் கப்பல் மூலம் புதுமாத்தளனுக்கு அனுப்பப்படும் எனவும் அவர் கூறினார். புதுமாத்தளனுக்கு கடந்த மாதத்தில் இரண்டு தடவைகள் மருந்து வகைகள் அனுப்பப்பட்டுள்ளன. 

“கொடூர ஆயுதங்களைப் பயன்படுத்தி பெற்ற யுத்த வெற்றியை நிரந்தரமானதென்று கருதமுடியாது’

flee0009.jpgஅரசாங்கம் கொடூர ஆயுதங்களைப் பயன்படுத்தி வடக்கின் யுத்தத்தின் மூலம் பெற்றுள்ள வெற்றியை நிரந்தர வெற்றியாகக் கருதிவிட முடியாது. அம்மக்களுக்கு அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் சம உரிமைகளையும் சம அந்தஸ்தையும் வழங்கி அவர்களின் மனதை ஆட்கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளும் வெற்றியே நிரந்தரமானது, உண்மையுமான வெற்றியாகும். எனவே அரசும் யுத்தத்தில் ஆர்வம் காட்டிவரும் பெரும்பான்மை சமூகத்தினரும் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வழிவகுப்பது அவசியமானதாகும் என மாத்தளை மாநகர சபை உறுப்பினர் எஸ்.பிரகாஷ் கூறினார்.

கடந்த மாத்தளை மாநகர சபையின் மாதாந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறினார். மேற்படி கூட்டம் நகரபிதா முகம்மது ஹில்மி கரீம் தலைமையில் மாத்தளை மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அவர் தெடார்ந்து பேசும் போது குறிப்பிட்டதாவது;

கடந்த 3 தசாப்தங்களாக நிலவிவந்த யுத்தத்திற்கு முடிவுகட்டி வடக்கிலும் நாட்டிலும் அமைதியையும் சமாதானத்தையும் உருவாக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எடுத்த முயற்சி பாராட்டத்தக்கதாகும்.  இருப்பினும் கொடூர ஆயுதங்களைப் பயன்படுத்தி யுத்தத்தின் மூலம் அப்பகுதியை மீட்டெடுத்து அமைதியை நிலைநாட்ட எடுத்த முயற்சியினால் எத்தனை உயிர்கள் பலியாகியுள்ளன, எத்தனை மில்லியன் ரூபா சொத்துக்கள்? அழிக்கப்பட்டுள்ளன? எத்தனை குடும்பப் பெண்கள் விதவையாகியுள்ளனர்? எத்தனை பேர் அங்கவீனர்களாயுள்ளனர்? எத்தனை ஆயிரம் பேர் அகதிகளாகி நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர்.

இதனைப் போரை விரும்பி ரசிக்கும் பெரும்பான்மை சமூகத்தினரும், அரசாங்கமும் உணரவேண்டும். எனவே இந்த யுத்தத்தினால், நிர்க்கதியாகியுள்ள மக்களுக்கு நிரந்தர வசிப்பிடம், அடிப்படைத் தேவை, தொழில் வாய்ப்பு, பொருளாதார மேம்பாட்டுக்கான வழிவகுப்பும், சம உரிமை, சம அந்தஸ்து என்பவற்றைப் பெற்றுக்கொடுத்து அவர்களுக்கு இயல்பு வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் மோதல் பகுதிக்கு போதுமான உணவு அனுப்பப்பட்டதாக உலக உணவுத் திட்டம் கூறுகிறது

menikfarm.gifஇலங் கையில் வடகிழக்கே விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே கடும் மோதல்கள் நடைபெற்று வரும் நிலையில், அப் பகுதிகளில் சிக்கியிருக்கும் பொதுமக்களுக்கான உணவு வழங்கல் நடவடிக்கைகள் சீரான முறையில் இல்லையென்றும், இதன் காரணமாக அங்கு மக்கள் பட்டினியால் அவதியுறுவதாகவும் எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் என்றும் விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இலங்கை அரசு அங்கு உணவுப் பொருட்கள் செல்வதை தடுப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இலங்கை அரசு அவ்வாறான தடை எதையும் விதிக்கவில்லை என்று அதன் பாதுகாப்புச் செயலர் கோட்டபாய ராஜபக்ஷ கடந்த வாரம் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இதை உறுதிப்படுத்தியுள்ள உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான துணை இயக்குநர் அசேப் அஸ்ரத் அம்மையார், கடந்த பிப்ரவரி முதல் தேதி தொடங்கி ஏப்ரல் மாத இறுது வரை மூவாயிரம் மெட்ரிக் டண்களுக்கும் மேலான உணவுப் பொருட்கள் மோதலற்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்.

அந்தப் பகுதிக்கு உணவு எடுத்துச் செல்வதில் தாங்கள் சில சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவிக்கிறார். அங்கு எடுத்துச் செல்லப்படும் பொருட்களை சேமித்து வைப்பதில் பிரச்சினைகள் இருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளதாகவும், தற்போது சிறிய கப்பல்களில் எடுத்துச் செல்லப்படும் உணவுப் பொருட்கள் நடுக்கடலில் சிறிய மீன்பிடி படகுகளில் மாற்றப்பட்டு கடற்கரைப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தேவையான மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறுகிறார்.

திங்கட்கிழமை இரவுகூட 30 மெட்ரிக் டண்கள் அளவுக்கு உணவுப் பொருட்கள் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுவதாகக் கூறும் அசேப் அஸ்ரத், தமது களஞ்சியத்தில் வடபகுதியிலுள்ள மக்களுக்கு வழங்குவதற்கு தேவையான உணவுப் பொருட்கள் கையிருப்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

முதியோர்கள் 58 பேர் சமளங்குளம் முதியோர் இல்லத்தில் பராமரிப்பு

20090424063601srilanka4.jpgவன்னி யில் இருந்து இடம்பெயர்ந்து வந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 58 பேர் சமளங்குளம் அரசினர் பாடசாலையில் இயங்கத் தொடங்கியுள்ள வவுனியா கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தின் முதியோர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இங்கு மொத்தமாக 66 பேர் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அவர்களில் 6 பேர் வயோதிபம் காரணமாக மரணமடைந்ததாகவும், இருவர் உறவினர்களின் வேண்டுகோளுக்கமைய அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும், எஞ்சிய 58 பேர் இந்த முதியோர் இல்லத்தில் தற்போது பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் சிலருக்கு உறவினர்கள் எவரும் இல்லையென்றும் பலர் தாமாக இயங்க முடியாதவர்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலய அறங்காவலர் அவையினர் இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும், உணவையும் வழங்கி பராமரித்து வருகின்றார்கள். இந்த ஆலயத்தின் தொண்டர்கள் இவர்களைப் பராமரிக்கும் பணியில் முழுமையாக ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த முதியோர் இல்லத்திற்கு எம்.எஸ்.எப். மற்றும் இன்ரநஷனல் ஹன்டிகப்ட் எனப்படும் வலுவிழந்தோருக்கான சர்வதேச நிறுவனம் ஆகியன தேவையான மெத்தைகள், சக்கர வண்டிகள் போன்றவற்றை வழங்கி உதவியுள்ளன. இந்த இல்லத்திற்குத் தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஒக்ஸ்பாம் நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.