புலம்பெயர் வாழ்வியல்

புலம்பெயர் வாழ்வியல்

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் அவர்களுடைய வாழ்வியல், சமூக, அரசியல் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரைஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்! – அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரைஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்! அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!

தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் (பகுதி 01) (ஒளிப் பதிவு செய்யப்பட்ட திகதி 06.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின்  பேச்சுமொழியில்  எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

எனது ஊரும் சுற்றமும்

தேசம்நெற் சார்பாக தோழர் யோகன் கண்ணமுத்து அவர்களுடன் நேரடியான ஒரு உரையாடல். கடந்த கால அரசியலில் 1956ஆம் ஆண்டு இலங்கையில் முதலாவது இனக்கலவரம் அல்லது ஸ்ரீ எதிர்ப்பு போராட்டங்கள் ஆரம்பமானதில் இருந்து அவரின் வரலாறும் கிட்டத்தட்ட தொடங்குகிறது. இலங்கையின் இனவிடுதலை வரலாறும் தோழர் அசோக் யோகன் கண்ணமுத்து உடைய வரலாறும் கிட்டதட்ட ஒரே சமாந்திரமாக பயணித்துள்ளது. அந்தவகையில் அவருடனான நேர்காணலும் இந்தப் பதிவும் வரலாற்று முக்கியத்துவமானது என நினைக்கின்றேன். நாங்கள் நேரடியாக இந்த உரையாடலுக்குள் செல்வோம்.

தேசம்: வணக்கம் தோழர் யோகன் கண்ணமுத்து!

அசோக்: வணக்கம் ஜெயபாலன்!

தேசம்: உங்களின் அரசியல் பயணத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் போராட்ட அரசியலை நாங்கள் எவ்வாறு அணுகினோம் என்றுதான் நாங்கள் பார்க்கப் போகின்றோம். பிறந்து, சிறுவனாக, இளைஞனாக வளர்ந்து போராட்டத்தின் முக்கியமான தளத்தில் இருந்திருக்கிறீர்கள். அத்துடன் இந்த புலம்பெயர் தளத்தில் அரசியல் சார்ந்த ஈடுபாட்டாளனாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் தற்போது சுமார் ஒரு 60 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று உங்களின் மிக இளமைப் பருவத்தில் எந்த விடயத்தை மீள கொண்டு வரக்கூடியதாக உள்ளது. அந்த நேர சூழல், உங்கள் கிராமம், எப்படியான சூழலில் நீங்கள் பிறந்திருந்தீர்கள்? உங்கள் பெற்றோரின் அரசியல் பின்னணி என்ன? எப்படி இந்த அரசியலுக்குள் ஈர்க்கப்பட்டீர்கள் என்பதைச் சொல்வீர்கள் என்றால் நன்றாக இருக்கும். அந்த அடிப்படையில் உங்களின் மிக இளமைப் பருவத்தில் என்ன ஞாபகம் இருக்கிறது? உங்கள் கிராமம், குடும்பம் சம்மந்தமாக..

அசோக்: மட்டக்களப்பிலிருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தூரத்தில இருக்கிற   கடலோர  விவசாயக் கிராமமான களுதாவளைதான் என்  பூர்வீகம்.  எங்கள் குடும்பம் வந்து நிலப்பிரபுத்துவ சமூகம் சார்ந்த குடும்பம்…

அப்பா, அம்மா இருவரின் குடும்பமும் விவசாயக் குடும்பம்தான். விவசாயத்தையே பின்னணியாகக் கொண்டது. எனது அப்பாதான் எமது கிராமத்தில் படித்த முதலாவது தலைமுறை. களுதாவளையைச் சேர்ந்தவர். படுவான்கரை, எழுவான்கரை என இரண்டில் எமது கிராமம் எழுவான்கரை. விவசாயத்தை அடிப்படையாகக்கொண்டது.

அப்பா இராமகிருஸ்ண மிஷனுடன் மிகவும் நெருக்கமான உறவு கொண்டிருந்தார். விபுலானந்தர் மீது பற்றுக் கொண்ட விசுவாசியாக இருந்தார்

தேசம்: அதற்கு குறிப்பிடத்தக்க ஏதாவது காரணம்…?

அசோக்: அடிப்படையில் அப்பாவுக்கு   ஆன்மீக ஈடுபாடு இருந்தது.  அத்தோடு  சமூக அக்கறை இருந்தது. அந்தக் காலத்தில் சுவாமி விபுலானந்தரின் சமூக சேவையின் ஊடாகத்தான் பள்ளிக் கூடங்கள்  உருவாகியது.  அபிவிருத்தி நடைபெற்றது. அதில் அப்பாவும் ஆர்வம் கொள்கின்றார். மிஷனரி பாடசாலைக்கு பதிலாக இராமகிருஸ்ணன மிஷன் திருகோணமலை, மட்டக்களப்பு  பிரதேசங்களில்   ஸ்தாபிக்கப்படுகிறது. சிவானந்தா வித்தியாலயம்,  காரைதீவு இராமகிருஸ்ண மிஷன் வித்தியாலயம் ஆரம்பிக்கப்படுகிறது. இராமகிருஸ்ண மிஷன் களுதாவளையிலும் ஒரு பாடசாலையை ஆரம்பிக்கிறார்கள். அப்பா தான் தலைமை ஆசிரியராக இருந்தார்.

அப்பாவுக்கு அரசியல் ஈடுபாடும் இருந்தது. தமிழ்த் தேசியவாதியாகவும் தமிழ் ஆசிரியராகவும் இருந்த படியால் தமிழரசு கட்சியினுடன் அரசியல் உறவும் ஏற்படுகிறது.

தேசம் : அம்மாவின் பின்னணியைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்?

அசோக்: அம்மாவின் குடும்பமும் ஒரு விவசாயக் குடும்பம் தான். அம்மா 10 ஆம் வகுப்பு படித்தாவோ தெரியவில்லை எனக்கு. ஆனால் நிறைய வாசிப்பார். நாவல், சிறுகதை, இலக்கியம் என பயங்கர வாசிப்பு. நான் நினைக்கிறேன் அம்மா எட்டு ஒன்பதாம் வகுப்புதான் படித்திருப்பார். அப்பா, அம்மா காதலித்து அதில் நிறைய பிரச்சினைப்பட்டு …

தேசம்: இரண்டு பேரும் ஒரு கிராமமா?

அசோக்: ஆம் ஒரே கிராமம்தான். அம்மாவின் அப்பருக்கு விருப்பமில்லை.

தேசம்: ஏன்? சமூக பின்னணியா?

அசோக்: இரண்டு குடும்பமும் ஒரு சமூக பின்னணியை கொண்டிருந்தாலும் அம்மாவின் குடும்பம் கொஞ்சம் வசதியான குடும்பம். அம்மாவின் அப்பாவுக்கு அதில் விருப்பமில்லை. அப்பா வந்து அம்மாவை தூக்கிக்கொண்டு போய் மிஷனரியில் வைத்து திருமணம் செய்து அது பெரும் முரண்பாடு.   காலப்போக்கில் இராமக்குட்டியாரின்  கோபம் தணிந்து உறவு உருவாகிவிட்டது. இராமக்குட்டி என்பது அம்மாவின் அப்பா பெயர்.

தேசம்: இதில் பாரம்பரிய வித்தியாசம் அல்லது குல வித்தியாசம் ஏதாவது இருக்கிறதா?

அசோக்: என்ன சிக்கல் என்றால் எமது கிராமம்   கிழக்கு மாகாணத்தில் தாய்வழி சமூகம்.  இது இறுக்கமான சமூகமாகும். எங்கள் கிராமத்தில் அம்மாவின் குடிதான் நான்.

தேசம்: குடி வழி சமூகம் என்றால்…?

அசோக்: குடிவழிச்சமுகம் என்றா அம்மாவின்  வம்சத்தை வழியை கொண்டதாக இருக்கும். எங்கட கோயில் மற்ற  சடங்குகள் திருவிழாக்கள் எல்லாம் அம்மாவின்ற குடியைக் கொண்டே நடக்கும். என்னை அழைப்பதென்றால் அம்மாவின் குடியைச் சொல்லித்தான் அழைப்பார்கள்.  அம்மா பெத்தான்குடி. அப்பா  பேனாச்சிகுடி.  அம்மா ஆட்கள் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று கருதிக் கொண்டார்களோ தெரியல்ல. சில நேரத்தில் திருமணத்திற்கு அதுவும் ஒரு தடங்கலாக இருந்திருக்கும். அம்மாவை கொண்டு போய் அங்குள்ள கொன்வென்டில் தங்க வைத்து அப்பா படிப்பித்துள்ளார்.

தேசம்: அப்பாவின் அரசியல் போக்கு தொடர்பாக மாறுபட்ட கருத்திருந்ததா?

அசோக்: இல்லை. அவ்வாறாக தெரியல்லை.

தேசம்: அப்பாவின் அரசியல் தொடர்பால் அம்மாவின் நிலைப்பாடு என்ன?

அசோக்: அம்மாவின்  ஒத்துழைப்பு நிறையவே இருந்தது. 1956ஆம் ஆண்டு ஸ்ரீ எதிர்ப்பு தனிச் சிங்கள சட்டமூலம் வந்தபோது அப்பா ஆறு மாதம் வீட்டு காவலில் வைக்கப்பட்டார்.   அம்மா 1961ஆம் ஆண்டு திருகோணமலையில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கும் இமாநாட்டிற்கும் அறப் போரணித்  தலைவர் அரியநாயகம் திருக்கோயில்   அவருடைய தலைமையில் கால்நடையாக யாத்திரைச் சென்றுள்ளார் திருகோணமலைக்கு. பேரணியில் நிறைய பெண்கள் கலந்துகொண்டிருந்தனர். இது புரட்சியான விடயம். அந்தக் காலத்தில் பெண்கள் திருக்கோவிலில் இருந்து

திருகோணமலைக்கு கால்நடையாக போவது பெரிய விடயம். அதில் அம்மா கலந்துகொண்டதாக அம்மா சொல்ல அறிந்துள்ளேன்.

தேசம்: உங்கள் பெற்றோரை பொருத்தவரையில் இரண்டு பேரும் அரசியலில் ஈடுபட்டிருந்தனர்?

அசோக்: ஆம்

தேசம்: உங்கள் குடும்பத்தில் மொத்தம் எத்தனை பேர்?

அசோக்: நாங்கள் மொத்தம் ஒன்பது பேர். ஏழு அண்ணா இரண்டு அக்கா. நான் ஒன்பதாவது ஆள்.

தேசம்: நீங்கள் பெரிய குடும்பம். ஒரு அண்ணாவை நீங்கள் வளர்த்தும் உள்ளீர்கள்.

அசோக்: ஓம் ஒரு அண்ணா எங்களுடன் தான் வளர்ந்தார். மொத்தம் பத்து பேர்.

தேசம்: பெரிய குடும்பமாக இருந்து இன்னொருவரை எடுத்து வளர்ப்பது அதற்கான தேவை எப்படி வந்தது?

அசோக்: பொருளாதார ரீதியாக எங்கள் வீடு பிரச்சினைக்குரியது அல்ல. அப்பாவுக்கு தலைமை ஆசிரியர் தொழில் கௌரவ தொழிலேயொளிய, அதுதான் எங்களது பொருளாதாரம் இல்லை. அம்மாவின் பக்கம் நிறைய தென்னங் காணிகளும் விவசாயக் காணிகளும் இருந்தன. விவசாயக் காணிகளை நாம் செய்வதுடன் குத்தகைக்கும் கொடுப்போம். இப்போ  அப்படியில்ல. பொருளாதார ரீதியில் சராசரி  குடும்பம்தான். அன்றைய காலகட்டத்தில் தமிழரசு கட்சியினுடைய பொருளாதார வளங்களை கொடுக்கும் பெரிய பின்புலமாக அப்பா இருந்துள்ளார். அதனால்தான் எனக்கு தமிழரசு கட்சி யில் வெறுப்பு வந்தது. அப்பா் எப்படி பயன்படுத்தப்பட்டார் என்பது எனக்குத் தெரியும்.

தேசம்: களுதாவளையில் இருந்து ஒரு சராசரி குடும்பத்தையும் பார்க்க நீங்கள் கொஞ்சம் வசதியாக இருந்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

அசோக்: அப்படித்தான் நினைக்கிறன். நிலவுடைமைச் சமூகத்திற்குரிய அனைத்து குணாம்சங்களும் எமக்கிருக்கும். தோட்டங்களில் வந்து வேலை செய்வார்கள். நிறைய தொழிலாளர்கள்  எங்களைச் சுற்றியிருப்பார்கள். ஒரு கூட்டு குடும்பத்துக்குரிய எல்லாம் இருக்கும். தொழிலாளர்கள் என்பதை விட ஒரு ஐக்கிய உறவு எங்களுக்குள் இருக்கும். ஏன் என்றால்  நாங்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். உறவுக்காரர்கள். யாழ்ப்பாணத்தில் தொழிலாளர்கள் வேறு சமூகம், நிலவுடையமையாளர்கள் வேறு சமூகம். எமது ஊரில் நிலவுடையாளர்களும், தொழிலாளர்களும் ஒரே சமூகம். அதனால் ஒரு கூட்டுறவு இருக்கும்.

தேசம்: களுதாவளைக் கிராமத்தை எடுத்தோமேயானால் ஒட்டுமொத்தமாக களுதாவளை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்களா? அல்லது வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்களா?

அசோக்: நல்லதொரு கேள்வி.   யாழ்ப்பாண   சமூகத்திற்கும் எமது சமூகத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் பல்வேறு சாதிகள் இருக்கும். நீங்கள் வந்து கொக்குவில் கிராமத்தை எடுத்தீர்கள் என்றால் பல்வேறு சமூகங்கள் இருக்கும்.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பை பொறுத்தவரையில் குறிப்பிட்ட கிராமங்கள்  மட்டும்தான் சாதிய அடிப்படையிலான கிராமங்கள். ஆரம்ப காலத்தில் பண்டைய  குடியேற்றங்கள் நடைப்பெற்ற போது சில கிராமங்களில் குடிமைச் சமூகங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளது. நீங்கள் எல்லா கிராமங்களிலும் ஒடுக்கப்பட்ட குடிமைச்   சமூகத்தை காண இயலாது. குறிப்பிட்ட சில கிராமங்களிலேயே காண முடியும். ஐந்து கிராமங்கள் என நினைக்கின்றேன். குடிமைச் சமூகங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். களுதாவளை, கோமாரி, அம்பிளாந்துறை, கல்முனை, வெல்லாவெளி. இவ்வாறு நான்கு ஐந்து கிராமங்கள். இக்கிராமங்களில் ஒடுக்கப்பட்ட சமூகமாக பறையர் சமூகம் இருக்கும். கிழக்கு மாகாணத்தில்   பறையர் சமூகத்திற்கு காணிகள் இருக்கும். யாழ்ப்பாணத்தில் ஒடுக்கப்பட்ட பெரும்பாலான பறையர் சமூகத்திற்கு நிலங்கள் இல்லை. இங்கு இவர்களுக்கு நிலங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இயல்பாகவே அவர்கள் பொருளாதார ரீதியாக சுயமாக வாழக்கூடிய சூழல் இருக்கும்.

தேசம்: சாதிய முரண்பாடு இங்கு ஓரளவு குறைவாக இருக்கும்?

அசோக்: ஆம் குறைவாக இருக்கும். சாதிய முரண்பாடு குறைவாக இருக்கும். பொதுத்தளத்தில்  பார்க்கும் போது குறைவாக இருக்கும். ஆனா  குடிமைச் சமுகங்கள் வாழும்  அந்தந்த கிராமங்களில் இருக்கும். அந்த கிராமங்களில் அவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகம் தானே. ஒடுக்கப்பட்ட சமூகம் உள்ள கிராமங்களில் அவர்கள் மீதான ஓடுக்குமுறை கடுமையாக இருக்கும். எங்களுடைய கிராமத்தில் பறையர் சமூகம் கோயிலுக்குள் செல்ல முடியாது.  நாங்கள் படிக்கும் பாடசாலையில் படிக்க முடியாது. அவர்களுக்கு தனி பாடசாலை. தனி கோயில்.

நான் பல்வேறு முயற்சிகள் செய்து அவர்களை எங்கள் கோயிலுக்குள் கொண்டுச் செல்ல எடுத்த முயற்சியினால் பல்வேறு சிக்கல்களை அனுபவித்துள்ளேன். அது ஒரு காலம். இப்போதும் அப்படித்தான்  என நினைக்கிறன்.  கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் சாதிய ஒடுக்குமுறை இல்லை என்று சொல்வதற்கு காரணம்,  ஒரு கிராமத்திற்கு சென்றால் அங்கு ஒரே சாதி. முக்குவராக இருப்பார்கள். அல்லது கரையார் சமூகமாக இருப்பார்கள். அங்கு சாதி ஒடுக்குமுறை இருக்காது. நூற்றுக்கு தொண்ணூறு வீதமான கிராமங்கள் ஒரு சமூகமாகத்தான் இருக்கும்.

தேசம்: இப்படி பார்க்கும் போது யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் சாதி முறைக்கும் வேலை பிரிவினைக்கும் ஒரு நெருக்கமான தொடர்பிருக்கிறது. நீங்கள் சொல்வதை பார்க்கும் போது வேலை பிரிவினை அடிப்படையில் சாதி இருப்பது போல் தெரியவில்லை. ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களே எல்லா வேலைகளையும் செய்கிறார்கள்.

அசோக்: ஆமாம். அப்படித்தான். உதாரணமாக பார்த்தால் இலங்கையில் இடதுசாரி இயக்கங்கள் யாழ்ப்பாணத்தில்தான் அதிகம். மட்டக்களப்பில் அதன் தோற்றம் இடம்பெறமுடியாமல் போய்விட்டது. ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள் தொழிலாளர்களாகவும் நிலஉடமையாளர்களாகவும் இருந்தபடியால் அது கூர்மை அடையல்ல. சாதிய முரண்பாடுகளோ, வர்க்க முரண்பாடுகளோ வருவதற்கு சாத்தியம் இல்லாமல் போய்விடுகின்றது கூர்மை அடைந்தாலும் சமாளித்துவிடுவார்கள். ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தானே.

சாதியும் வர்க்கமும் வடமாகாணத்தில் தாக்கம் அதிகம். மட்டக்களப்பில் ஒரே சமூகமாக   இருக்கின்ற  படியால் அந்த முரண்பாடுகள் கூர்மையடையாது.

(உரையாடல் தொடரும்…)

 

உண்மைகள் உறங்குவதில்லை: மனம் திறந்து பேசுகின்றார் தோழர் யோகன் கண்ணமுத்து!

ஈழ விடுதலைப் போராட்டம் – தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் – புளொட் – தோழர் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம்

1956இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட, அதன் பின் பிறந்த தலைமுறையினர் தான் அசோக் யோகன் கண்ணமுத்து. 1957இல் பிறந்த இவர் தமிழர்களின் உரிமைப்போராட்டத்தோடு தவழந்து, நடந்து, இளைஞனாகி ஆயதமேந்திப் போராடி அதிஸ்டவசமாக உயிர்தப்பி தற்போது தனது சாட்சியத்தை தேசம்நெற் இணையத்தில் பதிவு செய்ய முன்வந்துள்ளார். ஈழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபட்டிருந்த தோழர் யோகன் கண்ணமுத்து: தமிழீழ விடுதலைப் போராட்டச் சூழல், தமிழீழ விடுதலைப் புலிகளினுள் ஏற்பட்ட பிளவு, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உருவாக்கம், மட்டக்களப்புச் சிறையுடைப்பு, கழகத்தினுள் இடம்பெற்ற பிளவுகள், தீப்பொறி, ஈஎன்டிஎல்எப் ஆகிய அமைப்புகளின் உருவாக்கம் என பல்வேறு விடயங்கள் பற்றியும் பதிவு செய்கின்றார்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மத்திய குழுவில் உறுப்பினராக இருந்த தோழர் யோகன் கண்ணமுத்து விடுதலைப் போராட்டத்தில் முன்னணியில் நின்ற வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடனும் வெவ்வேறு தளங்களில் பயணித்தவர். சகோதரப் படுகொலைகள், பழிவாங்கல் செயற்பாடுகள் என போராட்டத்தின் பல்வேறு அம்சங்ளையும் அவர் இங்கு பதிவு செய்ய முற்பட்டு உள்ளார். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முன்னணிப் போராளியான இவர் விடுதலைப் போராட்டம் பற்றிய இன்னுமொரு கோணத்தையும் பதிவு செய்கின்றார்.

இது தொடர்பாக வாசகர்களாகிய உங்களுக்கு ஈழப்போராட்ட வரலாறு தொடர்பாக கேள்விகள், சந்தேகங்கள் இருப்பின் அவற்றை இங்கு பதிவு செய்தால் அக்கேள்விகளுக்கான பதிலையும் பெற்றுக்கொண்டு இந்த வரலாற்றுத் தொடரை மேலும் காத்திரமானதாக ஆக்க முடியும்.

இப்பதிவு தற்போதைய புதிய தலைமுறையினருக்கு எமது விடுதலைப் போராட்டம் பற்றி மறைக்கப்பட்ட அல்லது அறிந்திராத பக்கங்களை எடுத்துக்காட்டும்.

அடுத்த வாரம் முதல் தேசம்நெற் இணையத் தளத்தில் இவருடைய நேர்காணல் பதிவு தொடராக எழுத்திலும் காணொலியாகவும் வெளிவரும்.

ஜெமினி – தேனீ – கருத்துச் சுதந்திரம்: கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்ட சமூகத்தில் ஒரு சுதந்திர வேட்கைகொண்ட மனிதன்

சரத்து 19: ஒவ்வொருவரும் சுயாதீனமான கருத்துக்களைக் கொண்டிருக்கவும் அதனை வெளிப்படுத்தவும் உரிமையுடையவர்கள். இந்த உரிமை என்பது இடையூறற்று கருத்துக்களைக் கொண்டிருக்கவும் தகவல்களையும் கொள்கைகளையும் தேடவும் எந்த ஊடகத்தினூடாகவும் எல்லைகளைக் கடந்தும் அதனை வெளிப்படுத்தவுமான உரிமையயை உள்ளடக்குகின்றது. – ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பிரகடனத்தின் 19வது சரத்து.

Article 19: Everyone has the right to freedom of opinion and expression; this right includes freedom to hold opinions without interference and to seek, receive and impart information and ideas through any media and regardless of frontiers.

இந்தக் கருத்துச் சுதந்திரத்தை நிலை நாட்டுவதற்காகப் போராடிய விரல்விட்டு எண்ணக்கூடிய ஊடகங்களில் ‘தேனீ’ இணையத்தளத்தின் பாத்திரம் மிகமுக்கியமானது. அதற்குப் பின்நின்ற ஜெமினியின் – கங்காதரனின் உழைப்பு மதிப்பிட முடியாதது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் தமிழர்களை உலகெங்கும் புலம்பெயர நிர்ப்பந்தித்த போது, யுத்தத்தின் ஆரம்ப காலகட்டங்களில் வடக்கு கிழக்கை விட்டு, ஆரம்ப நாட்களில் புலம்பெயர்ந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் அராஜகப் போக்கினால் பாதிக்கப்பட்ட மாற்று இயக்கத்தைச் சார்ந்தவர்களே. இலங்கையில் மறுக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்தை, தாங்கள் புலம்பெயர்ந்த தேசங்களில் அவர்கள் கட்டியெழுப்ப முற்பட்டனர்.

ஆனாலும் மிகக் கூறுகிய காலத்தினுள்ளேயே கட்டமைப்பு ரீதியாக மிகப்பெரும் பலத்துடன் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதிக்கம், புலம்பெயர் தேசங்களிலும் கோலோச்ச ஆரம்பித்தது. கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான அரசியல் வன்முறையானது; அரசியல் படுகொலைவரை சென்றது. பாரிஸ், பேர்ளின், லண்டன், ரொறொன்ரோ, சிட்னி என வன்முறைகள் தொடர்ந்து சில படுகொலைகளும் நிகழ்ந்தது.

ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மிகப்பெரும் பொருளாதார, அரசியல், பலம்பொருந்திய கட்டமைப்பாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் அராஜகத்திற்கு எதிராக தனியன்களாக; தங்களுடைய நாளாந்த குடும்பச் சுமைகளுடன், ஒரு சமூகத்தின் கருத்துச் சுதந்திரத்திற்காக ஒரிரு ஆண்டுகள் அல்ல கால்நூற்றாண்டாக போராடி வருவது என்பது சாதாரணமானதல்ல.

1990க்களின் பிற்பகுதியில் இணையத் தொழில்நுட்பம் வீச்சுப்பெறத்தொடங்கியது. இலங்கைத் தமிழர்களின் கருத்துச் சுதந்திரத் தளத்திலும் இது அதிர்வை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் பாரம்பரிய ஊடகங்களான பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி ஊடாக தங்கள் கருத்துச் சுதந்திரத்தை நிலைநாட்டப் போராடியவர்கள்; அதற்கான கூட்டு உழைப்பை பெறுவதிலும், அதற்கான அதீத செலவீனங்களை தாங்க முடியாத நிலையிலும் தத்தளித்தனர். தங்களுடைய உழைப்பை வழங்குகின்ற அதேசமயம், தங்களுடைய வருமானத்தையும் செலவிட்டே இந்த கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமைப் போராட்டத்தை நடத்தினர். இணையத்தின் வருகை இந்தச் செலவீனங்களை மிகமிக குறைத்துக்கொண்டது. வாசகர் பரப்பை நாட்டின் எல்லைகளைக் கடந்தும் விரித்துச் சென்றது.

தங்களுடைய உழைப்பினை மட்டும் வைத்துக்கொண்டு கருத்துச் சுதந்திரத்திற்காகப் போராட முடியும் என்ற ஒரு நிலையயை இணையத்தொழில்நுட்பம் வழங்கியது. உலெகெங்கும் பரந்திருந்த மாற்றுக் கருத்தாளர்களை இணைக்கின்ற தளமாக ‘தேனீ’ யயை ஜெமினி என எல்லோராலும் அறியப்பட்ட கங்காதரன் உருவாக்கினார்.

தேனீ, தேசம்நெற் (தேசம், லண்டன் உதயன், லண்டன் குரல்), ரிபிசி வானொலி என விரல்விட்டு எண்ணக் கூடிய ஊடகங்களே 1990க்களின் பிற்பகுதி முதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சாரங்களுக்கு சவாலாக செயற்பட்டு வந்தன. இணையத் தளங்கள் 2000ம் ஆண்டிற்குப் பின் வீச்சுப்பெற்று வந்தது. வன்னி யுத்தத்தின் போது தாயகத்தின் உண்மை நிலவரங்கள் மூடிமறைக்கப்பட்டு மக்கள் ஒரு மய உலகிற்குள் தள்ளப்பட்டிருந்த போது பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தது இந்த ஊடகங்கள் மட்டுமே.

இந்தப் பின்னணியிலேயே ஜெமினி – கங்காதரனின் வரலாற்றுப் பாத்திரத்தை என்னால் மதிப்பிட முடிகின்றது. ஒரு தனிமனிதனின் உழைப்பு ஒரு சமூகத்தின் கருத்துச் சுதந்திரத்தை தக்க வைத்துக்கொள்வதில் எவ்வளவு ஆதிக்கம் செலுத்தி இருக்கும் என்பதற்கு தேனீ இணையமும் ஜெமினியின் உழைப்பும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றால் அது மிகையல்ல.

ஜெமினி – கெங்காதரனை ஸ்ருட்காட் ஜேர்மனியில் ஒரு சில கூட்டங்களில் சந்தித்து பேசியதைத் தவிர எனக்கு அவருடன் அவ்வளவு உறவு இருந்ததில்லை. அவருடைய அரசியல் நிலைப்பாடுகளுடனும் எனக்கு அவ்வளவு உடன்பாடும் இருந்ததில்லை. ஆனால் அவருக்கு சமூகத்தின் மீது இருந்த நேசமும் அதற்காக அவர் செய்த தன்னலமற்ற அர்ப்பணிப்பும் எனக்கு ஜெமினி மீது எப்போதும் ஒரு மரியாதையயை ஏற்படுத்தியது. இரவோடு இரவாக அரசியல் ஞானம்பெற்ற ‘கீ போர்ட் மார்க்ஸிட்டுக்கள்’ மத்தியில் தான் நம்பிய அரசியல் கருத்துக்களுக்கா இறுதிவரை போராடிய ஒரு தன்னலமற்ற போராளி ஜெமினி. அப்படிப்பட்ட ஒரு போராளியயை இக்கொடிய நோய் கொண்டு போனது கருத்துச் சுதந்திரத்தை மதிக்கின்ற ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட பேரிழப்பே.

“I disapprove of what you say, but I will defend to the death your right to say it”. Voltaire
“உன்னுடைய கருத்தோடு எனக்கு உடன்பாடில்லை, ஆனால் அதனைச் சொல்வதற்கு உனக்குள்ள உரிமைக்காக எனது உயிரைக்கொடுத்தும் போராடுவேன்”. வோல்ரயர்

த ஜெயபாலன்
ஆசிரியர் தேசம் – தேசம்நெற்.

உயிருடன் இருக்கும் தன் மக்களையே பரலோகம் அனுப்புகிறது அமெரிக்க அரசு! அப்படியிருக்க, உயிருடன் இல்லாதவர்களை பொம்பயோ எப்பிடி கண்டுபிடிப்பார்?

சீனாவின் சர்வதேச ஆதிக்கத்தை தாங்க முடியாத அமெரிக்கா!
அமெரிக்க ராஜாங்க அமைச்சர் மைக்கல் பொம்பயோ இலங்கை வருகை!!!

உலக பொருளாதார ஆதிக்கத்தை தன் பக்கம் சுவீகரித்துக்கொள்ளும் சீனாவின் வளர்ச்சியயைத் தடுக்க அமெரிக்க இராஜாங்க அமைச்சர் மைக்கல் பொம்பயோ ஆசிய சுற்றுப் பயணம் மேற்கொண்டு அதில் ஒரு கட்டமாக இலங்கைக்கும் வருகின்றார் இன்று. மைக்கல் பொம்பயோ காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடித்துக் கொடுக்க இலங்கைக்கு வரவில்லை. அது பற்றி கரிசணையுடையவரோ அல்ல. அடுத்த இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதே கேள்விக்குறியாக இருக்கின்ற போது அமெரிக்க இராஜாங்க அமைச்சரின் ஆசிய விஜயம் ஒரு பொருட்டாகவே அமையப் போவதில்லை. தனது சொந்த நாட்டில் 225,000 பேர் கொல்லப்பட்டதையே பொருட்படுத்தாத ஒரு இராஜாங்க அமைச்சரிடம் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டு பிடிக்கும் அதிகாரம் அந்த நாட்டிடம் உள்ளது என்று உளறும் முட்டாள்தனத்தை என்ன செய்வது.

இறுதி யுத்தத்தில் பெரும்பாலும் உயிரோடு இல்லை என்பது சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கும், தமிழ் அரசியல் வாதிகளுக்கும், இலங்கை அரசுக்கும், சர்வதேசத்திற்கும் மிகத் தெளிவாகத் தெரியும். உயிருடன் இருப்பவர்களையே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் பரலோகம் அனுப்பிக்கொண்டுள்ளார். அவருடைய ராஜாங்க அமைச்சர் இல்லாதவர்களை எப்படி கண்டுபிடிக்க முடியும்?

ஈராக், அப்கானிஸ்தான், லிபியா இன்று சிரியா இப்படியே இந்த மேற்குலகம் கொலைக்களமாக்கிய நாடுகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஏராளம்! ஏராளம்!! யார், யாரிடம் எல்லாம் போய் நீதி கேட்பது என்ற விவஸ்தையே இல்லாமல் இன்னும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை வைத்துத் தான் அரசியல் நடத்த வேண்டும் என்ற அளவுக்கு தமிழ் அரசியல் ஈனமாகிப் போய்க் கிடக்கின்றது.

இறுதி யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அமெரிக்க படைகள் வன்னியில் உள்ள மக்களை மீட்கப் போவதாக ஒரு செய்தி அந்நேரத்தில் கசிந்தது. அவர்கள் எவ்வளவு தூரம் சாத்தியப்பட்டு இருக்கும் என்பது உறுதியாகத் தெரியாது. ஆனால் இச்செய்தி வெளியானதும் அமெரிக்காவில் உள்ள பேர்ள் என்ற தமிழர் அமைப்பு வன்னி எங்களின் சொந்த மண் அந்த மண்ணில் இருந்து மக்களை மீட்க வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டது. அதற்குக் காரணம் வன்னி யுத்தகளத்தில் இருந்து மக்கள் மீட்கப்பட்டால் – போராட்டத்தின் மண் மூட்டைகள் – பாதுகாப்பு அரண் – அடுத்த சில மணிநேரங்களிலேயே யுத்தம் முடிவுக்கு வந்துவிடும். போராட்டத்தை வைத்து சர்வதேச நாடுகளில் தாங்கள் வியாபாரம் செய்ய முடியாது. அதற்காகவே இந்த வெளிநாட்டு சரகு புலிகள் குரல்கொடுத்து வந்தனர். அன்று வன்னிமக்களை கொல்லக்கொடுத்து சூறையாடிய பணத்தில் இன்று பகட்டு வாழ்க்கை வாழ்கின்றனர். அதில் கொஞ்சத்தை வீசியெறிந்து இன்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிக்கின்றோம் என்று உலாவிக்கொண்டு திரிகின்றனர்.

கருத்துச் சுதந்திரத்தை கற்பித்தமைக்காக ஆசிரியர் படுகொலை!!!

கருத்துச் சுதந்திரம்: வல்லரசுகளுக்கும் அடிப்படைவாதிகளுக்கும் எப்போதும் ஆபத்தான ஆயுதம்!

பிரஞ்ச் எழுத்தாளர் வோல்ரயர் கருத்துச் சுதந்திரம் பற்றி குறிப்பிட்டது: “I disapprove of what you say, but I will defend to the death your right to say it” – “நீ சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் உனக்கு சொல்வதற்குள்ள உரிமைக்காக எனது உயிரையும் கொடுத்து போராடுவேன்”

ஆம்! நேற்று மாலை மூன்று மணியளவில் பிரான்ஸ் தலைநகரான பரிஸின் புறநகர பாடசாலை ஒன்றின் வரலாற்று விரிவுரையாளர் கருத்துச் சுதந்திரத்திற்காக உயிரையும் கொடுத்து போராடியுள்ளார். 47 வயதான சம்பந்தப்பட்ட ஆசிரியர் மதஅடிப்படைவாதியால் கழுத்து வெட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பாடசாலைக்கு அருகே இடம்பெற்றுள்ளது.

இதுபற்றித் தெரியவருவதாவது படுகொலை செய்யப்பட்ட விரிவுரையாளர் கருத்துச் சுதந்திரம் பற்றிய கற்பித்தலை மேற்கொள்ள பிரான்ஸின் தலைநகரில் நடைபெற்ற சார்லி ஹப்துல் படுகொலைக்கு காரணமான மொகம்மது நபியின் கார்ட்டூன்களை காண்பித்து விளக்கி உள்ளார். அதற்கு முன்னதாக இஸ்லாமிய மாணவர்கள் தங்கள் உணர்வுகளைப் பாதிக்கும் என்று கருதினால் வகுப்பை விட்டு வெளியேறவும் அனுமதி வழங்கப்பட்டது. இஸ்லாமிய மாணவர்கள் வெளியேற சில இஸ்லாமிய மாணவர்கள் வகுப்பில் தொடர்ந்தும் இருந்தனர். அதன்பின் ஒரு பெற்றார் இதனை ஒரு பிரச்சினையாக விடியோவில் பதிவிட இது ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் பதிவாகி இச்சம்பவம் சர்ச்சைக்குரியதாகியது. பிரான்ஸில் வசிக்கும் மொஸ்கோவைச் சேர்ந்த செச்சினிய அடிப்படைவாதி அந்த ஆசிரியரை கழுத்தறுத்து தனது மத அடிப்படைவாதத்தை நிரூபித்துள்ளார்.

Everyone has the right to freedom of opinion and expression; this right includes freedom to hold opinions without interference and to seek, receive and impart information and ideas through any media and regardless of frontiers. – Article 19:

ஒவ்வொருவருக்கும் கருத்தைக் கொண்டிருக்கவும் அதனை வெளிப்படுத்தவும் உரிமை உண்டு. அவ்வுரிமையானது தடைகளேதுமின்றி சுதந்திரமாக கருத்துக்களைக் கொண்டிருக்கவும் தகவல்களையும் கருத்தியல்களையும் எந்த ஊடகத்தினூடாகவும் எல்லைகளுக்கு அப்பாலும் தேடவும் பெறவும் பரப்பவுமான உரிமையயை வழங்குகின்றது.

விஞ்ஞானம் தொழில்நுட்பம் நாகரீகம் நவீனத்தை நோக்கி நகர்ந்த போதும் மனதனின் அடிப்படைச் சிந்தனைகளில் இன்னமும் அடிப்படைமாற்றங்கள் நிகழவில்லை. வல்லரசுகள் முதல் அடிப்படைவாதிகள் வரை இன்னமும் அடிப்படை உரிமைகளை சாதாரணர்களுக்கு வழங்குவதை தங்களுக்கு மிகப்பெரும் ஆபத்தானதாகவே நோக்குகின்றனர். அடிப்படைவாதிகளுக்கு மொகம்மது நபிக்கு கார்ட்டூன் வரைந்ததைப் பொறுக்க முடியவில்லை தங்கள் கொலைவெறியயை காண்பிக்கின்றனர் அமெரிக்க பிரித்தானிய வல்லாதிக்க சக்திகளுக்கு தங்களைப் பற்றிய உண்மைத் தகவல்கள் வெளியே வருவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை விக்கிலீக்ஸ்யை உருவாக்கிய ஜூலியன் ஆசான்ஜ் மீது பொய் வழக்குகளைச் சோடித்து அவரை படுகொலை செய்ய முயற்சிக்கின்றனர். சர்வதே மனித உரிமை அமைப்புகள் அவரை விடுவிக்க கோரியும் பிரித்தானிய அரசு தனது அமெரிக்க வல்லாதிக்கத்திற்கு சேவகம் செய்வதில் எவ்வித குறையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றது.

கடவுள் நம்பிக்கையயை வைத்திருக்கின்றோம் என்ற பெயரில் இந்த கடவுள் நம்பிக்கையாளர்கள் பலரும் மிக மோசமான மனித விழுமியங்களுக்கு புறம்பான செயற்பாடுகளையே செய்கின்றனர். மத எல்லைகளுக்கு அப்பால் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் பெரும்பாலும் மனிதத்தை நேசிப்பவர்களாகவும் பண்பட்டவர்களாகவும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடவுளை அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் வணங்குபவர்கள் பெரும்பாலும் ஒப்பீட்டளவில் அன்பு பண்பு நேர்மை குன்றியவர்களாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை உங்களைச் சுற்றியுள்ளவர்களைப் பார்த்து நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.

சகிப்புத் தன்மை பொறுமை கருத்துக்களை கேட்கும் இயல்பு கருத்துக்களை அலசி ஆராயும் ஆளுமை நம்பிக்கை தன்னம்பிக்கை இவைகளின் பற்றாக்குறையானது தனிப்பட்ட உறவுகளிலும் சமூக உறவுகளிலும் அரசியலிலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இந்த உலக சமூகத்தை அமைதியின்மைக்கும் வன்முறைக்கும் இட்டுச்செல்கின்றது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம், பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிலிபைன்ஸ் ஜனாதிபதி ரொட்றிகோ டொரேற்ரே போன்ற அரசியல் தலைவர்கள் இந்த அமைதியற்ற வன்முறையான சமூகத்தின் பிரதிபலிப்புகள். சமூகத்தில் மேற்குறிப்பிட்ட விழுமியங்களின் பற்றாக்குறையினால் பண்பற்ற சமூக நோக்கற்ற பிரபல்யவிரும்பிகள் ஆட்சிக்கு வருகின்றனர்.

“வரம்புயர நீருயரும் நீருயர நெல் உயரும் நெல்லுயர குடி உயரும் குடி உயர கோன் உயரும்” – ஔவை பாட்டி சொன்னது. இப்போது இது ரிவேர்ஸில் நடைபெறுகின்றது என்று கொள்ளலாம்.

கோன் இறங்க குடி இறங்கும்! குடி இறங்க காடெரியும்!! மதவெறியர் கழுத்தறுப்பர்!!!

குறிப்பு: பிரான்ஸில் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியருக்கு இக்கட்டுரையயை சமர்ப்பணம் செய்கின்றேன்.

தற்கொலை உளவியல் : த ஜெயபாலன்

“தற்கொலை”: ஒரு பொதுச்சுகாதாரப் பிரச்சினை

தற்கொலைகளை நாங்கள் இன்னமும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் சம்பவங்களாகவே பார்க்கின்றோம். ஆனால் உண்மை அதுவல்ல. தற்கொலைகள் உலகின் முக்கிய பொதுச் சுகாதாரப் பிரச்சினை.

உலகின் மக்களில் இறப்பவர்களில், ஆண்டுக்கு 1.4 வீதமானவர்கள் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர். அண்ணளவாக ஆண்டுக்கு 8 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர். உலகின் மரணத்துக்கான காரணிகளில் முதல் 20 காரணிகளில் ஒன்று தற்கொலை.

15 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களின் மரணத்தில் தற்கொலை இரண்டாவது முக்கிய காரணியாகும். 20 தற்கொலை முயற்சிகளில் ஒன்றுதான் மரணமாகின்றது. அப்படியாயின் எவ்வளவு பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்பதை கணித்துப்பாருங்கள்.

இன்னும் 15 ஆண்டுகளில் உலகில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை வருடத்துக்கு பத்து லட்சத்தை எட்டும் என உலக சுகாராத அமைப்பு எச்சரித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தப் பின்னணியிலேயே தமிழ் மக்கள் மத்தியில் உள்ள தற்கொலைப் போக்கை நோக்க வேண்டியுள்ளது.

தமிழர் தற்கொலைகள்:
இக்கட்டுரையை எழுதுவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டிருந்த போது, ஒக்ரோபர் 3இல் பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் ஒரே தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகொலை செய்யப்பட்டு கொலையாளி தற்கொலைக்கு முயற்சித்து கோமா நிலையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் நால்வர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்செய்தியின் முழுவிபரங்ளும் வெளிவருவதற்கு முன்னமே ஆங்கிலக்கால்வாயின் அடுத்த கரையில், லண்டன் பிரன்ட்பேர்ட்டில் இன்னுமொரு தமிழர் ஒக்ரோபர் 6 இல் தன் மனைவியையும் மகனையும் கொலை செய்து விட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆய்வை மேற்கொண்டிருந்த வேளையில் எனது சகோதரி முறையான ஒருவரின் உணவகத்தில் பணியாற்றிய 22 வயதேயான வெள்ளையின இளைஞன் கிழக்கு லண்டனில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். இச்சம்பவங்கள் எல்லாமே ஒரு சில நாட்கள் இடை வெளியில் நடைபெற்றவை.

லண்டனில் நான் ஊடகவியலாளனாக கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்சமூகத்தின் மத்தியில் நடைபெற்ற பல தற்கொலை மரணங்களைப் பதிவு செய்துள்ளேன். அதில் மூன்று சம்பவங்களில் தாய்மார் தம் இரு குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு, தாங்கள் தற்கொலைக்கு முயற்சித்து, அதில் தோல்வியடைந்தனர். ஒன்றில் தந்தை தன் இரு குழுந்தைகளைக் கொலை செய்துவிட்டு தான் தற்கொலைக்கு முயற்சித்து அதில் தோல்வியடைந்தார். பிரன்ட்பேர்ட்டில் நடைபெற்ற ஒரு சம்பவத்தில் மட்டுமே கொலை செய்தவர் அதே முறையில் தற்கொலைக்கு முயற்சித்து தானும் தற்கொலை செய்து இறந்துபோனார்.

அதாவது, மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் அனைத்துமே மிக குரூரமான வன்முறையால் – கூரிய ஆயுதங்களால் குத்தி மரணம் ஏற்படுத்தப்பட்டவையாகும். அதே முறையில் தங்களைத் தாங்களே குத்தி மரணத்தை விளைவிக்க முனைந்த போது அவர்களால் அது சாத்தியப்படவில்லை.

இவற்றைவிட பல தமிழர்கள் பல்வேறு சமூக பொருளாதார மற்றும் வெவ்வேறு வயதுடையவர்கள் பலர் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்துகொள்கின்றனர். இவர்கள் ஓடும் புகையிரதத்தின் முன் பாய்வதை தங்கள் தற்கொலை முறையாகக் கொண்டிருந்தனர். சிலர் தூக்கிட்டு இறந்துள்ளனர். தங்களை கூரிய ஆயுதத்தால் குத்திக்கொண்டு, தற்கொலை செய்ய முயற்சித்தவர்கள் பெரும்பாலும் அதில் தோல்வியயையே தழுவினர்.

இலங்கையில் தமிழர்:
இந்தப் பின்னணியில் இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் நடைபெறும் தற்கொலைகள் பற்றிய ஆய்வுக்காக வடக்கில் செப்பரம்பர் 01 முதல் செப்ரம்பர் 14 வரை நடைபெற்ற மரணங்களை தேசம்நெற் ஊடகவியலாளர்களுடாக சேகரித்தேன், அதன் விபரம் பின்வருமாறு: (அருகில் தரப்படும் திகதியானது சம்பவம் நிகழ்ந்த திகதியல்ல. அச்சம்பவம் பத்திரிகையில் பிரசுரமான திகதி)
செப்ரம்பர் 01:
முல்லைத்தீவு தீர்த்தக்கரை: மூன்று பிள்ளைகளின் தந்தை, 47 வயது, பொது மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை
செப்ரம்பர் 04:
வவுனியா மாங்குளம்: தங்கவேல் சிவக்குமார், 26 வயது இளைஞர், வீட்டில், தூக்கிட்டு தற்கொலை
செப்ரம்பர் 07:
யாழ் மாதகல் நாவலடி: பாலசுப்பிரமணியம் முருகதாஸ், 32 வயது, காதல் விவகாரமாக தூக்கிட்டு தற்கொலை
செப்ரம்பர் 09:
யாழ் கோப்பாய் மத்தி: குகதாஸ் தினேஸ், 18 வயது, இளைஞர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், விசமருந்தி தற்கொலை
செப்ரம்பர் 09:
வவுனியா கூமாங்குளம்: ரஞ்சித் வசந், 22 வயது, இளம் குடும்பஸ்தர் (மனைவி 4 மாத கர்ப்பிணி) தற்கொலை
செப்ரம்பர் 11:
கிளிநொச்சி பெரியபரந்தன்: சசிதரன் வயது 28, தனுஷியா வயது 27ஆகிய இருவரும் காதலுக்கு குடும்பத்தார் சம்மதிக்காததால் காட்டுப்பகுதியில், தூக்கிட்டு தற்கொலை
செப்ரம்பர் 12:
கிளிநொச்சி அம்பாள் நகர்: 15 வயது, யுவதி, தற்கொலை
செப்ரம்பர் 14:
யாழ்ப்பாணம் குப்பிளான்: இளைஞர் தாய் பணம் தர மறுத்ததால் தற்கொலை

உணர்ச்சிவயப்பட்ட முட்டாள்கள்:
எமது மூளையின் சிந்தனையின் செயற்பாடானது இன்னமும் முழுமையாக அறியப்படாத, மிகவும் சிக்கலான, ஆனால் ஆழமான செயன்முறையாகும். அன்பு, பாசம், காதல், கோபம், வெறுப்பு, வேதனை, துயரம், ஆற்றாமை, சிரிப்பு, அழுகை, சோகம் போன்ற உணர்வுகள் மனம் சார்ந்ததாகவும் மனமே எமது தனித்துவத்தை தீர்மானிப்பதாகவும் உள்ளது.

ஆனால் எமது உடலில் மனம் என்ற ஒரு அங்கம் இல்லை. எமது உணர்வோட்டங்களே மனமாகச் சித்தரிக்கப்படுகின்றன. எமது உடலில் சுரக்கின்ற ஹோமோன்களே எங்களில் உருவாகின்ற காதலையும் வெறுப்பையும் சந்தோசத்தையும் அழுகையையும் தீர்மானிக்கின்றனவேயொழிய சம்பவங்களோ நபர்களோ அல்ல என்பதே விஞ்ஞானபூர்வமானது.

ஆனால் என்னாலும் எனக்கு வெளியே நின்று உணர்வை ஒதுக்கி வைத்துவிட்டு அவ்வாறு நோக்க முடிவதில்லை என்பதே உண்மை. நாம் எல்லோருமே ஒரு வகையில் எமோசனல் இடியட்ஸ் – உணர்வு வயப்பட்ட முட்டாள்கள். அதனால்தான் நாங்கள் விலைமதிக்க முடியாத உயிரைக் கூட சிறிய சம்பவங்களுக்காக, நபர்களுக்காக (அவை வெறும் இரசாயன மாற்றங்கள் என்று புரிந்துகொள்ளாமல்) மாய்த்துக்கொள்ளத் துணிகின்றோம்.

உளவியல் வலி:
நாங்கள் எத்தனை வயதுள்ளவர்களாக வளர்ந்தாலும் எமது நாற்பதுகளையும் ஐம்பதுகளையும் தொட்டாலும் எம்மில் பெரும்பாலானவர்களுக்கு உணர்வு வளர்ச்சி என்பது ஒன்பது வயதைத் தாண்டுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எமக்கு உயிராபத்தான விடயங்களில் கூட ஒன்பது பேரில் எண்மர் சரியான முடிவை எடுப்பதில்லையெனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஏன் இவர்கள் தற்கொலைக்கு உந்தப்படுகின்றனர் என்ற கேள்விக்கான பதில் பல காரணிகளில் தங்கி இருக்கின்றது. அதில் மிகப் பிரதானமானது அவர்களுக்கு ஏற்படுகின்ற உளவியல் ரீதியான வலி.
இந்தத் தாங்க முடியாத உளவியல் வலியில் இருந்து தப்பித்துக்கொள்வதே அவர்களுக்கு மிகப்பெரும் நிம்மதியைத் தருகின்றது. அதுவே தற்கொலைக்கான உந்துதலாக அமைகின்றது. பொதுவாக அச்சம் உண்மைச் சம்பவங்களிலும் பார்க்க பீதியை ஏற்படுத்தக் கூடியது. தற்கொலைக்கு உந்தப்படுபவர்கள் இந்த அச்சத்தினால் ஆட்கொள்ளப்பட்டு விடுகின்றனர். இதனோடு ஒருவருடைய தனித்துவ பரம்பரையலகு, உணர்வுநிலை, உணர்வுப் பிரதிபலிப்பு, முடிவெடுக்கும் ஆற்றலின் பற்றாக்குறை என்பன தற்கொலைக்கு காரணமாகின்றன.

மனிதன் ஒரு சமூக விலங்கு:
மேலும் மனிதன் ஒரு சமூக விலங்கு. அப்படியிருக்கையில் தற்கொலை என்பது முற்றிலும் தனிநபர் சார்ந்தது என்று வரையறுத்துவிட முடியாது என்கிறார் எமிலி டேர்க்ஹெய்ம். அவர் தற்கொலைக்கு ஒரு சமூக இயல்பும் உள்ளது என்றும் கலாச்சாரகூறுகளும் அதற்கு காரணமாக இருப்பதாகவும் கூறுகின்றார்.
உளவியல் நிபுணர் தோமஸ் ஈ ஜோய்னியரின் தற்கொலைக்கான உள்ளுணர்வு கொள்கையின்படி “தற்கொலை மீது விருப்பம் இல்லாதவராலும், தற்கொலையை நிறைவேற்ற முடியாதவராலும், தற்கொலையைச் செய்ய முடியாது” என்கிறார். அதாவது தற்கொலைக்கான விருப்பமும் தற்கொலை செய்துகொள்வதற்கான வல்லமையும் உள்ள ஒருவரே தற்கொலையயைச் செய்ய முடியும் என்கிறார். இதற்கு அவர் இரு உள்ளுணர்வு கட்டமைப்புகளை முன்வைக்கிறார் ஒன்று நான் இன்னொருவரில் தங்கியிருக்க வேண்டியுள்ளது என்ற கற்பனை எண்ணப்பாடும், நான் நிராகரிக்கப்படுகின்றேன் என்ற எண்ணப்பாடும் இதற்கு காரணமாக உள்ளன.

நிலையை உணர மறுக்கும் வயோதிபர்:
வயதானவர்கள் தங்கள் பிந்தைய காலத்தில் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதில்லை. ஆனால் இந்த மாற்றங்கள் தொடர்பில் மிகவும் உணர்வுரீதியில் பாதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள். அதனால் வாழ்க்கையின் பின்நாட்களில் ஏற்படும் தற்கொலைக்கு இது காரணமாகின்றது. சில நாளாந்த பழக்கங்களையும் எண்ணங்களையும் அவர்களால் செய்துகொள்ள இயலாத நிலையேற்பட்டும். மிகவும் உணர்வுமயப்பட்டு இருப்பதால் சிறு விமர்சனங்களையும் தாங்க முடியாதவர்களாகவும் இருப்பார்கள். இவை வாழ்க்கையின் பிற்பகுதியில் ஏற்படும் தற்கொலைகளுக்கு காரணமாக அமைகின்றது.

இலங்கை நிலவரம்:
மேலே பட்டியலிடப்பட்ட வடமாகாணத்தில் இடம்பெற்ற தற்கொலைச் சம்பவங்கள் எதுவுமே பொதுவிதியில் இருந்து விலகியவையல்ல. உலகில் 75 வீதத்திற்கும் அதிகமான தற்கொலைகள் வருமானம் குறைந்த அல்லது நடுத்தர வருமானம் உடைய நாடுகளிலேயே நடக்கின்றன. இதில் இலங்கை உட்பட்ட 11தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நாற்பது வீதம் வரையான தற்கொலைகள் நடைபெறுகின்றது.
1955இல் இலங்கை தற்கொலை வீத பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது முதல் தற்போது வரையில் இலங்கை தற்கொலைகளைக் கட்டுப்படுத்துவதில் பாரிய முன்னேற்றத்தை தொட்டு உள்ளது. ஆனால் 1995இல் இலங்கை தற்கொலை வீதத்தின் உச்சத்தை தொட்டு இருந்தது.

1990இல் உலகில் அதன் மக்கள் தொகைக்கு தற்கொலைகள் கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருந்தது. அப்போது இலங்கையில் 100,000 பேருக்கு 55 பேர்வரை தற்கொலை செய்யும் நிலையிருந்தது. அதற்கு அப்போது இலங்கை யுத்தத்தின் உச்சத்தில் இருந்தமை காரணமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அமைதிப் பூமியான கிரீன்லாந்தில் 100,000 பேருக்கு 100 பேர் வரை தற்கொலை செய்துகொண்டனர். கிரீன் லாந்தின் ஒரு நாளில் 20 மணிநேரம் இருட்டாக இருக்கும் காலநிலை அதற்குக் காரணமாகக் கூறப்பட்டது. ஆனால் அடுத்த கால் நூற்றாண்டு காலத்தில் இலங்கையும் கிரீன்லாந்தும் தற்கொலை தடுப்பு கொள்கைகளை அறிமுகப்படுத்தித் தற்கொலை வீதத்தை வெகுவாகக் குறைத்துக்கொண்டன. 2017இல் கிரீன்லாந்தும் இலங்கையும் முறையே 50, 20 ஆக தங்கள் நாடுகளின் தற்கொலைகளைக் குறைத்துக்கொண்டன. இன்று இலங்கை உலக தற்கொலை நாடுகளின் பட்டியலில் 29வது இடத்தில் உள்ளது.

இலங்கையில் தமிழ் மாவட்டங்களில் தற்கொலைகளின் போக்கை அவதானிக்கும் எவரும் வடக்கில் குறிப்பாக வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்கள் தற்கொலை போக்கின் உச்சத்தை தொடுவதைக் காணலாம். (கீழுள்ள பட்டியல் தற்கொலை எண்ணிக்கை 100,000 பேருக்கு எத்தினைபேர் தற்கொலை செய்துள்ளனர் என்பதனைக் காட்டுகின்றது.) பொதுவாக வடமாகாணம் (விதிவிலக்கு மன்னார் மாவட்டம்) இயல்பாகவே தற்கொலை இயல்புடைய மாகாணமாக உள்ளது. தற்கொலைப் பதிவுகள் மேற்கொள்ளப்பட ஆரம்பிக்கப்பட்டது முதல் இற்றைவரை வடமாகாணம் தற்கொலைகளில் முன்னிலை வகிக்கின்றது.

இதற்கு யுத்தமும் ஒரு காரணமாக இருந்த போதும் அது முழுமுதற்காரணமல்ல என ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. பொதுவாகவே தற்கொலைகள் சனத்தொகை அடர்த்தி குறைந்த கிராமப்புறங்களில் மிக அதிகமாகக் காணப்படுகின்றன. இலங்கையில் சனத்தொகை அடர்த்தி மிகக் குறைந்த 5 மாவட்டங்களில் நான்கு மாவட்டங்கள் வடமாகாணத்தில் உள்ளன. கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார். தென்னிலங்கையிலும் ஒப்பீட்டளவில் சனத்தொகை அடர்த்தி குறைந்த பிரதேசங்களில் தற்கொலை வீதம் அதிகம் காணப்படுகின்றது.

இலங்கையில் தற்கொலை வீதமானது இனங்களிடையே வேறுபடுகின்றதா என்பதற்கு வலுவான ஆய்வுகள் செய்யப்படவில்லை. மேலும் யுத்தத்தைக் காட்டிலும் சனத்தொகை அடர்த்தி தற்கொலையில் கூடிய செல்வாக்கைச் செலுத்துகின்றது. சனத்தொகை அடர்த்தி குறைந்த பிரதேசங்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கி இருப்பதும் வறுமை தனிமை வேலையின்மை போன்றன அப்பகுதிகளின் பொது இயல்பாக இருப்பதும் இங்கு தற்கொலைகள் அதிகரிப்பிற்கு காரணமாக உள்ளன.

தற்கொலையைத் தூண்டும் தனிமை:
தற்கொலைக்கு முக்கிய காரணிகளில் தனிமையும் ஒன்று. கிராமப்புறங்களில் இதுவொரு ஊக்கியாக அமைகின்றது. வெறுமைக்கும் விரக்திக்கும் அவர்களை இட்டுச்செல்கின்றது. தனிமையில் இருக்கின்ற போது சனநடமாட்டம் அற்ற பகுதிகளிலேயே தற்கொலைகள் நடைபெறுகின்றன. கிராமப்புறங்களின் சூழல் தற்கொலைக்கு வாய்ப்பாகின்றது.

இலங்கையில் தற்கொலை முறைகள்:
இலங்கையில் 1990களில் உச்சத்தை தொட்டிருந்த தற்கொலைகள் பெரும்பாலும் கிருமிநாசினி – நஞ்சருந்தி – விஷமருந்தி மேற்கொள்ளப்பட்ட தற்கொலைகளாகவே இருந்தன. சனத்தொகை அடர்த்தி குறைந்த பிரதேசங்களில் வாழ்ந்தவர்கள் விவசாயத்தை தொழிலாகவும் கொண்டிருந்தனர். அதனால் கிருமிநாசினிகள் – விஷம் – நஞ்சு நினைத்ததும் கிடைக்கக் கூடியதாக இருந்தது.

தற்போது தற்கொலை சாதனமாக “தூக்கிடுவது”முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. தற்கொலைக்கு இந்தப் பொருட்களின் நுகர்வை, பாவனையை, பரிமாற்றத்தைத் கட்டுப்படுத்தியதன் மூலம் இலங்கையில் சனத்தொகை அடர்த்தி குறைந்த விவசாய கிராமங்களில் தற்கொலை வீதம் சடுதியாக வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. இப்பொழுதெல்லாம் விசமருந்தி தற்கொலை செய்பவர்களின் வீதம் வெகுவாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது தூக்கிட்டு கொள்வதே தற்கொலைக் கருவியாக உள்ளது.

தற்போது தற்கொலைச் சாதனமாக தூக்கிடுவது முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது. தூக்கிடுவதற்கு பயன்படுத்தப்படும் கயிறு, சேலை, கட்டித் தொங்கப் பயன்படும் வளை என்பன நாளாந்த வாழ்வியலின் அம்சங்களாக இருப்பதால் அதனை கிடைக்காமல் செய்வது அவ்வளவு இலகுவான விடயம் அல்ல. ஆனால் கயிறு போன்றவற்றை பெறுவதில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்த முடியும். சட்டப்படி கூரைகள் இவ்வளவுஉயரமாக இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் ஏற்படுத்தப்படலாம். இவற்றின் மூலம் இலகுவில் தூக்கிடுவதற்கானவாய்ப்புகளை இல்லாமல் செய்ய முடியும்.

தடுத்தல்:
முக்கியமாக தற்கொலைக்கான ஆபத்தான காரணியான தனிமையை வழங்கக் கூடாது. தற்கொலைக்கான இயல்புடையவர்கள் ஏற்கனவே தற்கொலை முயற்சியில் இறங்கியவர்கள் தனிமையில் இருப்பதை அனுமதிக்கக் கூடாது.

தற்கொலைகள் முற்றிலுமாக தடுக்கக் கூடியவை. அதனால் அதனைத் தடுப்பதற்கான முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதனைச் சாதிப்பதற்கு அனைத்துத் தரப்பினர் (சம்பந்தப்பட்டவர்கள், குடும்பம், சமூகம், அரசு) அனைவரும் ஒருமுகப்பட்டு செயற்பட வேண்டும்.
தற்கொலை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். தற்கொலைக்கான சாதனங்கள் கிருமிநாசினிகள், சுடுகருவிகள், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றின் நுகர்வு, பாவனை, பரிமாற்றத்தில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட வேண்டும். மனநலம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் மனநலம் தொடர்பாக சமூகத்தில் உள்ள எதிர்மறையான எண்ணங்கள் களையப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர் மனம் திறந்து பேசுவதற்கான சமூகச் சூழல் உருவாக்கப்பட வேண்டும். ஊடகங்கள் தற்கொலைகளை உணரச்சியூட்டும் செய்திகளாக வெளியிடுவதற்கு மாறாக அறிவுபூர்வமாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் செய்திகளாக வெளியிட வேண்டும்.

உளநலம் குறித்த தப்பெண்ணம்:
தற்கொலைகள் தொடர்பாக கிழக்கு இலங்கை பல்கலைக்கழக மருத்துவ விரிவுரையாளர் ஒருவர் தெரிவிக்கையில் வடக்கு கிழக்கில் மனநலம் பற்றிய தப்பெண்ணங்கள் தற்கொலைகளைத் தூண்டுவதாகத் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள் விபரீதம் நிகழ்வதற்கு முன் உளநல உதவிகளைப் பெறுவதற்கு முன்வருவதில்லை என அவர் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் பாதிக்கப்பட்டவர்கள் தாமாக உளநல சிகிச்சைக்கு முன்வந்து செல்வதில்லை. சம்பந்தப்பட்டவர்கள் தங்களுடைய வேறு நோய்களுக்கு சிகிச்சைக்கு வருகின்ற போதுதான், பொது மருத்துவர்கள் மற்றும் உடற்கூற்று மருத்துவர்கள் உளநல பிரச்சினைகளை இனம்கண்டு அவர்களை மனநல மருத்துவர்களிடம் காண்பிக்குமாறு அறிவுறுத்துகின்றனர். அவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் கூட அடுத்த கட்டத்திற்கு செல்வதில்லை. அவர்கள் சமூகத்தின் எதிர்மறையான கருதுகோள் காரணமாக கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடன் வைப்பதுடன் நின்றுவிடுகின்றனர். அதனால் பாதிக்கப்பட்டவரின் உளநிலை மேலும் மோசமடையவே செய்கின்றது.

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ விரிவுரையாளர் மேலும் குறிப்பிடுகையில் இலங்கையில் உளநல சிசிச்சையாளர்கள் இருக்கின்ற அளவிற்கு உளவியலாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் தெரிவித்தார். அதாவது பொது உளநலப் பணியாளர்களின் போதாமை காணப்படுவதால் ஆரம்பத்திலேயே பொது உளநலப் பிரச்சினைகளை இனம்கண்டு அதனை மோசமடையாமல் தடுப்பதற்கான உளவியலாளர்கள் உருவாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

பிரித்தானியா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே உளநலம்பற்றிய தவறான எண்ணக் கருக்கள் இன்னமும் சமூகத்தில் காணப்படுகின்றது. அப்படி இருக்கயில் மேற்கு நாடுகளில் வாழும் தமிழர்கள் பற்றிச் சொல்லத் தேவையில்லை. இச்சூழலில் ‘ஜோதி’ என்ற இலவச உளவியல் ஆலோசணை அமைப்பு நண்பர் மு. கோபாலகிருஷ்ணந் என்பவரால், அவருடைய மகன் அகிலன் நினைவாக உருவாக்கப்பட்டு, தற்போது பத்தாண்டுகளுக்கு மேலாக இலவச உளவியல் ஆலோசனையை வழங்கி வருகின்றது.
பிரித்தானியாவில் 24 மணிநேர தற்கொலைத் தடுப்பு தொலைபேசிச் சேவையும் தற்கொலைத் தடுப்பு ஆலோசனைச் சேவையும் கூட உள்ளது. ஆனால் தமிழ் சமூகம் தன்னுடைய எதிர்மறையான எண்ணக்கருவை மாற்றிக் கொள்ளாதவரை இச்சேவைகள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பில்லை.

(‘அரங்கம்’ இணையத்தளத்திற்காக எழுதப்பட்ட கட்டுரை)

தமிழ் மக்கள் மத்தியில் தொடரும் கொலைகளும் தற்கொலைகளும்!! லண்டனில் மனைவியயையும் மகனையும் கொலை செய்தவர் தானும் தற்கொலை!!!

இன்று அதிகாலை ஒரு மணியளவில் தனது மனைவியயையும் மகனையும் கொலை செய்தவர் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். லண்டன் பிரன்பேர்ட்டில் உள்ள க்ளேபொன்ட் லேன் இல் இக்கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாரிஸில் ஐவர் படுகொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் இடம்பெற்று 72 மணி நேரத்தில் லண்டனில் இத்துயரம் நிகழ்ந்துள்ளது. கோவிட்-19 ற்குப் பிறகு லண்டனில் தமிழ் மக்கள் மத்தியில் இடம்பெற்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
இரவு பொலிசார் பலாத்காரமாக சம்பவம் இடம்பெற்ற குடும்பத்தினரின் வீட்டு கதவை உடைத்து உள்ளே நுழைந்த போது நடுத்தர வயது மிக்க பெண்ணும் நடுத்தர வயதான ஆணும் மூன்று வயதேயான கைக் குழந்தையும் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர். மருத்துவப் பிரிவினர் அவர்களைக் காப்பாற்ற பல முயற்சிகளை எடுத்தனர். மருத்துவவண்டிகள் ஸ்தலத்துக்கு விரைந்து அனுப்பப்பட்டது. வான்வெளி மருத்துவ வாகனமும் தருவிக்கப்பட்டது. இவர்களைக் காப்பாற்ற எடுத்த நடவடிக்கைகள் எதுவும் பலனளிக்கவில்லை.
பொலிஸார் கொல்லப்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் உறவானவர்கள் என்று தெரிவித்துள்ளனர். தேசம்நெற்கு கிடைக்கும் தகவலின் படி கணவர் சிவராஜ் தனது மனைவி காமேஸ்வரியயை யும் மூன்றே வயதான மகனையும் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனத் தெரியவருகின்றது. இவர்கள் வாழ்ந்த பகுதியியும் இவர்களின் மாடித்தொகுதியும் ஒரு வளம்மிக்க பகுதி. இவர்கள் அயலவர்களுடனும் மிக நல்ல உறவைப் பேணி வந்துள்ளனர். எப்போதும் குடும்பமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பவர்கள் என்று அயலவர்கள் தெரிவித்துள்ளனர். இத்தம்பதிகள் மலேசியத் தமிழ் குடும்பத்தினர் எனவும் தெரிய வருகின்றது.
அதிகாலை நான்கு மணியளவில் அவர்களுடைய உடல்கள் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

பரிஸ்யை உலுக்கிய தமிழ் குடும்பப் படுகொலைகள்! இரு குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகொலை! ஐவர் மருத்துவமனையில்!! கொலையாளி தற்கொலை முயற்சியிலில் இருந்து தப்பி மருத்துவமனையில்!!!

பாரிஸில் தமிழர் வாழும் பகுதியான நொய்ஸ்-லி-சக் இன்ற இடத்தில் இன்று காலை நடந்த கொடிய சம்பவத்தில் இரு குடும்பங்களைச் சேர்ந்த ஐவர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இன்னும் ஐவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழர்கள் செறிந்த வாழ்கின்ற பொபினி பிக்காசோ ரான்ஸி ஆகிய பகுதிகளுக்கு அண்மையாக இந்த நொய்ஸ்-லி-சக் உள்ளமை குறிப்பிடத்தக்கது. தனது மைத்துனர் குடும்பத்தினரை அறையிலி வைத்து பூட்டிவிட்டு தனது மனைவியயையும் பிள்ளைகளையும் கொலையாளி படுகொலை செய்ததாகவும் அவருடைய மனைவி மற்றையவர்களைக் காப்பாற்ற போராடியதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் பற்றி பாரிஸ் பொலிஸார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இலங்கையயைச் சேர்ந்த நடுத்தர வயது மிக்க தந்தை ஒருவர் தனது மனைவியயையும் 5 வயது 18 மாதங்களேயான பிள்ளைகளையும் படுகொலை செய்ததுடன் அவ்வீட்டில் இருந்த மருமக்களான 5 வயது 9 வயதுப் பிள்ளைகளையும் படுகொலை செய்துள்ளார். தனது மனைவி பிள்ளைகளைப் படுகொலை செய்தவர் அதன் பின் மைத்துனரின் குடும்பத்தினரையும் தாக்கி உள்ளார். அத்தாக்குதலில் மைத்துனரின் இரு பிள்ளைகள் கொல்லப்பட்டு உள்ளனர். அதன் பின் கொலையாளி தற்கொலை செய்ய முயற்சித்து தன்னை மிகவும் காயப்படுத்திக்கொண்டுள்ளார்.
இக்கொலைகளுடன் சம்பந்தப்பட்ட நபர் பற்றி ஏற்கனவே பொலிஸில் புகார் செய்யப்பட்டும் இருந்துள்ளது. பொலிஸார் இந்நபர் பற்றிய விசாரணைகளை மேற்கொண்டும் இருந்தனர். ஆனால் பொலிஸார் விசாரணைகளை மெற்கொண்ட போது அது குடும்பத்தகராறு என்று அதனை பெரிதுபடுத்தாமல் குடும்பத்தினர் பின்னர் சமாளித்துவிட்டதாகவும் மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது. இவ்வளவு கொடூரமான முடிவுக்கு என்ன காரணம் என்பது பற்றிய முழுமையான விபரங்கள் இதுவரை தெரியவரவில்லை. இது வெறுமனே குடும்பத் தகராறுடன் மட்டும் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையா அல்லது சம்பந்தப்பட்ட நபருக்கு உளவியல் சார்ந்த பிரச்சினைகள் இருந்ததா என்பதும் இதுவரை தெரியவரவில்லை. இன்று இச்செய்தி பிரான்ஸ் தொலைக்காட்சியின் முக்கிய செய்தியாகி உள்ளது. நாளை பிரான்ஸ் தேசிய பத்திரிகைகளிலும் முதற்பக்கத்தை நிரப்பும் முக்கிய அதிர்ச்சிக்குரிய சம்பவமாக மாறியுள்ளது.
கொலையாளி மிகவும் அமைதியான சுபாவம் உடையவர் என்றும் அவர் சந்திப்பவர்களை கன்னியமாக நலம்விசாரித்துக் கொள்பவர் என்றும் அப்பகுதியில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர். மிகவும் அப்பாவித்தனமான இம்மனிதர் எவ்வாறு இப்படியொரு கூட்டுப்படுகைலையயைச் செய்தார் என்பது அவருக்கு நெருக்கமானவர்களுக்கு அதிர்ச்சியயை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதி மக்கள் இச்சம்பவத்தால் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய குடும்பத்தினர் யாழ் சண்டிலிப்பாயயைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் நேறைய தினம் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை முடித்து வந்ததாகவும் சொல்லப்படுகின்றது. அங்கு குழந்தையயை விற்று வாங்கும் ஒரு விடயம் இடம்பெற்றதாகவும் அதில் கணவன் வழி குடும்பமா? மனைவி வழிக் குடும்பமா என்றொரு சர்ச்சை எழுந்ததாகவும் சொல்லப்படுகின்றது. ஆனால் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
சம்பந்தப்பட்ட நபர் இக்கொடூரத்தை மேற்கொண்டிருந்த வேளை வீட்டில் யன்னல் வழியாக் ஏறிக் குதித்து தப்பி வெளியே சென்ற 13 வயதுச் சிறுவன் அருகில் இருந்த கபே ஒன்றிற்குள் சென்று உதவி கோரியதைத் தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உதவி கோரச் சென்ற சிறுவன் தங்களது மாமா பைத்தியம் பிடித்தவராக தங்களைத் தாக்குவதாக தெரிவித்துள்ளார். வீட்டில் இருந்த இன்னும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் பாரிஸில் இருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. வழமையாக பாரிஸில் மாடிக்கட்டிடத் தொகுதியிலேயே தமிழ் மக்கள் பெரும்பாலும் வாழ்கின்றனர். ஆனால் இக்குடும்பத்தினர் தனி பங்களோவீட்டில் இருந்துள்ளனர். அதனால் அச்சிறுவன் யன்னல் வழியாக தப்பித்து குதித்துச் செல்லக் கூடியதாக இருந்துள்ளது.
கொலைகளை மேற்கொண்டவர் கத்தி சுத்தியல் போன்ற நாளாந்தம் வீட்டில் பாவிக்கின்ற ஆயுதங்களையே பயன்படுத்தி இக்கொடூரத்தை மேற்கொண்டுள்ளதாக பிந்திக் கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இக்கொலைகளை அவர் திட்டமிட்டுச் செய்தாரா? என்ன நோக்கத்திற்காகச் செய்தார்? அவருடைய மனநிலை என்ன? என்பது பற்றிய விபரங்கள் தொடரும் பொஸில் விசாரணைகளில் இருந்தே தெரியவரும்.
இதுவரை தாய்மார் தங்கள் பிள்ளைகளைக் கொலை செய்து தாங்களும் தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவர்கள் பிரித்தானியாவில் மூன்று சம்பவமும் கனடாவில் ஒரு சம்பவமும் அஸ்திரேலியாவில் ஒரு சம்பவமும் இடம்பெற்று இருந்தது. இச்சம்பவங்கள் ஒவ்வொன்றிலும் இரு குழந்தைகள் கொல்லப்பட்டு இருந்தனர்.
மாறாக இவ்வாண்டு ஏப்ரல் பிற்பகுதியில் லண்டனில் தமிழ் தந்தை இரு குழந்தைகளைக் கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயற்சித்து இருந்தார். நேற்றைய பாரிஸ் படுகொலையானது இவை எல்லாவற்றையும் காட்டிலும் மிக மோசமானதாக அமைந்துள்ளது. இச்சம்பவத்தில் கொலையாளி தாயயைக் கொன்றதுடன் மைத்துனர் குடும்பத்தையும் கொல்ல முயற்சித்துள்ளார். மருமக்களையும் கொன்றுள்ளார். தமிழர்களுடைய அண்மைய வரலாற்றில் இடம்பெற்ற மிகமோசமான கொடூரமான கூட்டுப்படுகொலைச் சம்பவம் இதுவாக அமைந்துள்ளது.
இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் தற்கொலைகள் மற்றும் இவ்வாறான கொடூரமான கொலைகள் சகஜமாகி வருகின்றது. முன்னைய சம்பவங்களில் கொலையாளிகள் இவ்வாறான ஒரு கொடூரத்திற்கு துணிவதற்கான எவ்வித அறிகுறியயையும் வழங்கவில்லை. தங்கள் பிள்ளைகளை காப்பாற்றுவதாக எண்ணிய மனநிலையுடனேயே கொலைகளில் ஈடுபட்டு தற்கொலை செய்யவும் முயற்சித்தனர். ஆனால் பரிஸ் சம்பவத்தில் கொலையாளி சில அறிகுறிகளை காட்டி இருக்கலாம் அவர் ஒரு காரணத்தோடு செயற்பட்டாரா என்ற எண்ணங்கள் எழுகின்றது.
தமிழ் சமூகம் தன்னுடைய உளவியல் மனநிலை பற்றி நிறையவே ஆராய்ந்து அறிய வேண்டியுள்ளது.

பாரிஸில் நடந்த கொடிய சோகம்!! இரு குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகொலை!!!

பரிஸில் தமிழர் வாழும் பகுதி ஒன்றில் இன்று காலை நடந்த கொடிய சம்பவத்தில் இரு குடும்பங்களைச் சேர்ந்த ஐவர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் பற்றி பரிஸ் பொலிஸார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இலங்கையயைச் சேர்ந்த நடுத்தர வயது மிக்க தந்தை ஒருவர் தனது மனைவியயையும் 5 வயது 18 மாதங்களேயான பிள்ளைகளையும் படுகொலை செய்ததுடன் அவ்வீட்டில் இருந்த மருமக்களான 5 வயது 9 வயதுப் பிள்ளைகளையும் படுகொலை செய்துள்ளார்.

இக்கொலைகளுடன் சம்பந்தப்பட்ட நபர் பற்றி ஏற்கனவே பொலிஸில் புகார் செய்யப்பட்டும் இருந்துள்ளது. பொலிஸார் இந்நபர் பற்றிய விசாரணைகளை மேற்கொண்டும் இருந்தனர். இவ்வளவு கொடூரமான முடிவுக்கு என்ன காரணம் என்பது பற்றிய முழுமையான விபரங்கள் இதுவரை தெரியவரவில்லை. இது வெறுமனே குடும்பத் தகராறுடன் மட்டும் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையா அல்லது சம்பந்தப்பட்ட நபருக்கு உளவியல் சார்ந்த பிரச்சினைகள் இருந்ததா என்பதும் இதுவரை தெரிவவில்லை.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய குடும்பத்தினர் யாழ் சண்டிலிப்பாயயைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் நேறைய தினம் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை முடித்து வந்ததாகவும் சொல்லப்படுகின்றது. ஆனால் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

சம்பந்தப்பட்ட நபர் இக்கொடூரத்தை மேற்கொண்டிருந்த வேளை வீட்டிச் யன்னல் வழியாக் ஏறிக் குதித்து தப்பி வெளியே சென்ற 13 வயதுச் சிறுவன் அருகில் இருந்த கபே ஒன்றிற்குள் சென்று உதவி கோரியதைத் தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உதவி கோரச் சென்ற சிறுவன் தங்களது மாமா பைத்தியம் பிடித்தவராக தங்களைத் தாக்குவதாக தெரிவித்துள்ளார். வீட்டில் இருந்த இன்னும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் பாரிஸில் இருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. வழமையாக பாரிஸில் மாடிக்கட்டிடத் தொகுதியிலேயே தமிழ் மக்கள் பெரும்பாலும் வாழ்கின்றனர். ஆனால் இக்குடும்பத்தினர் தனி பங்களோவீட்டில் இருந்துள்ளனர். அதனால் அச்சிறுவன் யன்னல் வழியாக தப்பித்து குதித்துச் செல்லக் கூடியதாக இருந்துள்ளது.

கொலைகளை மேற்கொண்டவர் கத்தி சுத்தியல் போன்ற நாளாந்தம் வீட்டில் பாவிக்கின்ற ஆயுதங்களையே பயன்படுத்தி இக்கொடூரத்தை மேற்கொண்டுள்ளதாக உறுத்திப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் தற்கொலைகள் மற்றும் இவ்வாறான கொடூரமான கொலைகள் சகஜமாகி வருகின்றது.

பிரித்தானியாவில் கோவிட்-19 தமிழர்களுக்கான உதவிச் சேவை

தமிழர்களுக்கான உதவிச்சேவை ஒன்று அண்மையயில் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. கோவிட்-19 நெருக்கடியான இக்காலகட்டத்தில் வீட்டில் இருந்தவாறே தொலைபேசி மூலமாக உங்களுக்கு வேண்டிய ஆலோசனைகளை தங்களால் வழங்க முடியும் என இவ்வமைப்பினர் தங்கள் இணையத் தளத்தில் குறிப்பிட்டு உள்ளனர். குறிப்பாக மருத்துவ ஆலோசணைகள் மனநலம் சார்ந்த மருத்துவ ஆலோசணைகள் இன்று குறிப்பாகத் தேவைப்படுகின்ற அரச உதவித் திட்டங்கள் பற்றிய ஆலோசணைகள், சட்ட ஆலோசணைகள், கல்வி தொடர்பான ஆலோசணைகள் சுகாதார சேவைகள் பற்றிய ஆலோசணைகளையும் இவர்கள் தமிழிலேயே உரையாடி வழங்கக் காத்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

எமது நினைவுவெளிகளுக்கு அப்பால் நடந்துதுகொண்டிருக்கும் மிகப்பெரும் நெருக்கடியான நிலையில் இவ்வாறான ஆலோசணைகளும் உதவிகளும் வழிகாட்டல்களும் நிச்சயம் பலருக்கும் உதவியாக அமையலாம்.

இவ்வமைப்பை மருத்துவர் புவிநாதன் முன்னெடுத்துள்ளார். ஆலோசணைகளை வழங்குபவர்கள்: கணக்கியல் பால முரளி, ஆனந்தன் ஆர்நோல்ட், மருத்துவம் – மருத்துவர்கள் புவிநாதன், கவன், செல்வராணி பத்மபாஸ்கரன், தாரணி சிறிசற்குணம், ஹிமா புவிநாதன், சமூக சுசாதாரசேவை – ராஜேஸ்வரி சுப்பிரமணியம், அரச உதவித் திட்டங்கள்: கௌரி பரா

அவர்களுடைய தொடர்பு விபரங்கள்:

http://tamilshelpline.org/

United Kingdom
02035001573
07525050010

Medical@tamilshelpline.org
immigration@tamilshelpline.org
lawyer@tamilshelpline.org
business@tamilshelpline.org
finance@tamilshelpline.org
benefits@tamilshelpline.org
youth@tamilshelpline.org
community@tamilshelpline.org
housing@tamilshelpline.org

Opening Hours
Monday – Friday
09:00 – 18:00

Saturday
09:00 – 18:00

Sunday
10:00 – 16:00