புலம்பெயர் வாழ்வியல்

புலம்பெயர் வாழ்வியல்

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் அவர்களுடைய வாழ்வியல், சமூக, அரசியல் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

‘எம் மக்களை மீட்க ‘BTF ன்’ மாபெரும் (முதலைக் கண்ணீர்) போராட்டம்’ : ரி சோதிலிங்கம்

Protest_Londonமுகாம்களில் உள்ள மக்களுக்காக செய்யும் போரட்டம் அவர்களின் அவல நிலையையும் அவர்கள் திரும்பிப் போய் தமது சொந்த இடங்களில் வாழும்நிலையை உருவாக்கும் போராட்டமாக இருக்க வேண்டும். அந்த வகையில் யூன் 20ல் BTF -British Tamil Forum ஒழுங்கு செய்துள்ள பேரணி முகாம்களில் அவஸ்த்தைப்படும் மக்கள் மீண்டும் தமது வாழ்விடங்களுக்கு மீள குடியேற்ற உதவும் என்பதை நம்புவது மிகவும் கடினமாக உள்ளது.

2. கடந்த காலங்களில் பிரிஎப் (பிரித்தானிய தமிழர் பேரவை) போன்ற புலிகளின் ஆதவாளர்களால் நடாத்தப்பட்ட போராட்டங்கள் புலிகளின் அழிவுக்கும் புலிகளின் தலைவரின் படுகொலைக்கும் துணை போனது மட்டுமல்ல பல்லாயிரக் கணக்கான தமிழர்களின் உயிரிழப்பிற்கும் காரணமானது.

3. ‘புலிகளுக்கும் தமிழீழம் வேணும் எமக்கும் தமிழீழம் வேணும்’ என்பதால் நாம் அவர்கள் இயக்கத்தையும் அந்தக் கொடியையும் ஏற்றுக் கொண்டோம் என்று இயங்கி தமிழீழக் கோசம், பிரபாகரன் படம், புலிக்கொடியடன் நடாத்திய பேரணிகள் போல் இந்த முறையும்  பிரிஎப் புலிக்கொடி தமிழ்க் கொடி விற்று நிதி சேகரிப்பில் இறங்கினால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

4. புலிகளின் ஆதரவாளர்களால் இயக்குனர்களால் கடந்த காலங்களில் புலிகளின் பெயரால் மக்களுக்காக மக்களிடமிருந்து சேர்த்த  நிதி மோசடிகளும் தாம் போராட்டத்திற்கு உதவி செய்கிறோம் என்று போராட்த்திற்கும் துரோகம் இழைத்துள்ளதை புலிகளின் ஆதரவாளர்களால் பகிரங்கமாகவே பேசப்படும் விடயமாக உள்ளது.

5. இன்றுவரையில் உயிரிழந்த புலிப் போராளிகளுக்கும் அதன் தலைவருக்கும் அஞ்சலிக் கூட்டம் செய்யாமலும் இன்றும் புலிகள் மீண்டும் எழுவர்; 5வது தமிழீழப்போர் தொடுப்பர்; புலிக்கொடியே தேசியக் கொடி என்றும் கோசம் இட்டு முகாம்களில் உள்ள மக்களின் வாழ்வில் நிலைமைகளை மோசமாக்கும் நிலைக்குத் தள்ளிவிடுவார்கள் என்ற அச்சம் தவிர்க்க முடியாதது.

6. நாட்டில் உள்ள உண்மைச்சுற்றாடல் நிகழ்வை கவனத்தில் எடுக்காமல் புலம்பெயர் சூழலில் கனவு உலகில் தவறான முடிவுகள் எடுக்ப்பட்டு தவறாக வழிநடாத்தப்பட்டது. இதன் முடிவில் புலிகளின் தலைமையும் புலிப்போராளிகளும் அழிக்கப்பட்டனர். இந்த போராட்டங்களின் முடிவுகளின் விமர்சனங்கள் இல்லாமல் மீண்டும் ஒரு போரட்டம் நடத்துவதும் அதுவம் இவ்வளவு அவசர அவசரமாக இது நடாத்தப்படுவதும் இது புலிகளுக்குள்ளேயே நடைபெறும் குழுவாத்தின் பிரதிபலிப்புக்களா என்ற பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

7. இன்று இந்த மக்கள் முகாம்களில்  அவலநிலைக்குத் தள்ளப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருப்பது கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு வவுனியா பிரதேசங்களில் வாழ்ந்த மக்களை புலிகளின் தலைவரையும் ஆயுதங்களையும் பாதுகாக்கும் பொருட்டு மனிதக் கேடயங்களாக பயன்படுத்த இழுத்துச்சென்றதே என்பதை பிரிஎப் மறந்து விடக்கூடாது. இப்படி இழுத்துச்சென்ற மக்களை புதைகுழிகளுக்குள்ளும் செல் மழைக்குள்ளும் பசி பட்டினியுடன் மரணத்தை எதிர்நோக்க வைத்ததும் புலம்பெயர் புலிகளின் தவறான வழிகாட்டலே என்பதை பிரிஎப் மறந்துவிடக்கூடாது. இன்றுள்ள வன்னி முகாம்களைவிட மிகவும் மோசமான நிலையிலேயே இந்த மக்களை புலிகளின் தலைமை வைத்திருந்ததும் இந்த மக்களை புலம் பெயர் புலிகளின் தவறான புத்திமதியில் பலிக்கடாக்களாக்கும் திட்டத்தின் தோல்வியையும் பிரிஎப் மறந்துவிடக் கூடாது.

8. இன்றுள்ள முகாம் வாழ்க்கையை புலிகளே புதுமாத்தளன் – முள்ளி வாய்க்கால் பகுதியில் ஆரம்பித்து வைத்து மக்களை மரணம் நோக்கி நடாத்தினர் என்பதையும் இந்த சம்பவங்களை பிரிஎப் புலிகளிடம் தட்டிக்கேட்கவில்லை என்பதையும் இங்கே கூறிக்கொள்வது தவிர்க்க முடியாதது.

9. அது மட்டுமல்ல இப்படியான இந்த சூழ்நிலையிலிருந்து தப்பி ஓடி வந்தவர்களை தலைவரை தனியே விட்டுவிட்டு ஓடிவந்த துரோகிகள் என்றும் இந்த துரோகிகளுக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது என்று கூறியவர்களும் பிரிஎப்  மற்றும் புலிகளின் ஆதரவாளர்களே.

10. மேலும் மேற்கூறிய இந்த துரோகப்பட்டத்தை ஏக்காளமாக தூபமிட்டு பரப்பிய ஜபிசி ஜிரிவி தீபம் போன்ற ஊடகங்கள் இன்று இவற்றுக்கு என்ன சொல்கிறார்கள்? அரசியல் சவால்களைவிட இராணுவ வெற்றிகளை தமிழீழ வெற்றியாக ஊதித் தொலைத்த இந்த ஊடகங்கள் இன்றும் உங்கள் பேரணியை ஊதித்தள்ளும்.

11. மூன்று மாதங்களுக்கு முன்பு அந்த மக்களின் பரிதாபத்தை துரோகம் என்று கூறிவிட்டு இன்று அதேமாதிரியான சூழ்நிலையில் ஆனால் ஓரளவு மரணபயம் இல்லாமல் வாழும் மக்களை அரசின் மனித உரிமை மீறல்கள் என்று சத்தம்போடும் பிரிஎப் ஏன் அன்று புலிகளால் இதே போன்ற கொடுமைகள் நடைபெறும் போது எதிர்த்து குரல் எழுப்பவில்லை. அப்படி குரல் எழுப்பி  தடுத்து வைக்கப்பட்டு இருந்த மக்களை விடுவிக்கும்படி புலிகளை வற்புறுத்தியிருந்தால் இந்த நிலைமை இப்படி ஏற்ப்பட்டிருக்காது.

12. இன்று புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டபின்பும் அந்தப் பிரதேசங்களில் மீளக் குடியேற்றம் செய்யாமல் எமது மக்களை இப்படியாக அடைத்து வைத்திருப்பதை மனிதாபிமானமுள்ள எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அப்படியான மனித உரிமை மீறல்களை தமிழ்பேசும் மக்கள் எதிர்த்தே வந்துள்ளனர். ஆனால் இதேமாதிரியான மனித உரிமை மீறல்களை புலிகள் செய்யும் பொது மட்டும் காரணம் கூறிய பிரிஎப் இப்போது அரசிற்கு எதிராக குரல் எழுப்புவதை வரவேற்கும் அதே வேளை தமது கடந்தகால தவறுகளையும் பகிரங்கமாக மக்களிடம் ஒத்துக்கொள்ள துணிந்து முன்வர வேண்டும்.

13. இந்த யுத்த திருவிழாவை நடாத்த பண உதவி செய்த புலம் பெயர் மக்கள் திருவிழா முடிவில் துப்பரவு வேவைகளுக்கும் செய்யவும் முன்வரவேண்டும். வன்னி நிலப் பரப்பு எங்கும் நிலக் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டு இருப்பதாக அரசு தெரிவிக்கிறது. புலிகளும் அதனைத் தெரிவித்துள்ளனர். ஆகவே இந்த யுத்தத்திற்கு ஆரம்பத்தில் போர் முழக்கம் இட்டவர்கள் இந்தக் கண்ணி வெடி அகற்றும் பணிக்கு உதவுவது அவசியம்.

14. இன்று வன்னி மக்களின் முகாம் வாழ்க்கையில் இலங்கை இராணுவம் பொலீசார் ஒருபக்கம் லஞ்சம் வாங்கிக்கொண்டு மக்களை வெளியே அனுமதித்துவிட்டு மக்கள் தப்பி ஓடிவிட்டனர் என்று தேடுதல் வேட்டைகள் செய்வதும் இவர்கள் காணாமல் போனோர் என தமிழர்கள் பிரச்சாரம் செய்வதும் நிகழ்கின்றது. புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் அழைத்துச் செல்லப்படும் சம்பவங்கள் நிகழ்ந்தள்ளன. நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இவர்கள் எங்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பது பற்றிய விபரங்களை அரசு வெளியிடவில்லை. இவை பற்றி சுனில் அபயசேகர போன்ற மனித உரிமைவாதிகள் தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அவர்களது குரல்களைப் பலப்படுத்துவது மிக மிக அவசியம்.

15. மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில் கடந்தகாலத் தவறுகள் பற்றிய விமர்சனத்தை முன்வைக்காமல் பிரிஎப் திடீரென இந்த மக்களுக்கான போராட்ட களத்தில் இறங்கியுள்ளது பலமான சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. இப்படியான போராட்டங்களை ஆரம்பிக்க முன்னர் பிரிஎப் ஒரு சுய விமர்சனத்தை முன்வைத்திருக்க வேண்டும்.

75 நாட்கள் கவன ஈர்ப்புப் போராட்டம்!!! : த ஜெயபாலன்

Protest_Hunger_Strike_London_._._._._
1. உடனடியான நிரந்தர யுத்த நிறுத்தம்
2. உணவு மற்றும் மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்லும் வணங்கா மண் கப்பலை உடனடியாக சர்வதேச கண்காணிப்பாளர்களுடன் பொதுமக்களை அடையச் செய்ய வேண்டும்.
3. ஐ நா பொதுச்செயலாளர் பான்கி மூன் பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுணை எமது பிரதிநிதிகள் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
4. தமிழீழ விடுதலைப் புலிகளே எங்களது ஏக பிரதிநிதிகள். பிரித்தானியாவில் உள்ள அவர்கள் மீதான தடை நீக்கப்பட வேண்டும்.
5. தமிழர்கள் தனிநாடாகப் பிரிந்துபோக விரும்புகிறார்களா? அல்லது இலங்கையின் பகுதியாக இருக்க விரும்புகிறார்களா? என்பதை அறிய ஐக்கிய நாடுகள் சபை தமிழ் மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

கவன ஈர்ப்புப் போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை மீளவும் ஒருமுறை பார்ப்பதன் மூலம் 75 நாள் கவன ஈர்ப்புப் போராட்டத்தை மதிப்பீடு செய்து கொள்ளலாம்.
_._._._._

பிரித்தானிய தமிழ் மாணவர்கள் – இளையோர்களால் பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன் முன்னெடுக்கப்பட்ட கவன ஈர்ப்புப் போராட்டம் இன்று (யூன் 17 2009) முடிவுக்கு வருகின்றது. பலருக்கும் இவர்கள் இன்னமும் இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளனர் என்பது தெரிந்திருக்கவில்லை. 75 நாட்கள் இடம்பெற்ற இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டம் வன்னி மக்கள் மிக மோசமான மனித அவலத்தை எதிர்கொண்ட வேளையில் ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் நடத்தப்பட்டது. யுத்த பூமியில் இருந்து பௌதிக ரீதியில் மட்டுமல்ல யதார்த்தத்திலும் வெகுதொலைவில் நின்று நடத்தப்பட்ட இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டங்கள் – உண்ணாவிரதப் போராட்டங்கள் வன்னி மக்களை அவலத்தில் இருந்து காப்பாற்றுவதற்குப் பதிலாக அந்த அவலத்திற்கு உள்ளே வாழ நிர்ப்பந்தித்து உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு அங்கம் போன்று செயற்பட்ட ஐக்கிய இராச்சிய தமிழ் மாணவர் ஒன்றியம் மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு ஆகியன முன்னெடுத்ததாகக் கூறப்படும் இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டங்களும் உண்ணாவிரதப் போராட்டங்களும் தாயகத்தில் இருந்து ஒஸ்லோ உடன்பாட்டிற்கு பின்னான காலங்களில் இறக்குமதி செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் இளையோரினால் முன்னெடுக்கப்பட்டது என்பது பரகசியமான உண்மை. இந்த அமைப்புகளின் கட்டமைப்பு பரவலாக்கம் என்பனவே இந்த அமைப்புகளின் பின்னணியைப் பறைசற்றும். ஜெனவாவிற்கு முன்னாக இடம்பெற்ற தீக்குளிப்புச் சம்பவமும் இந்தப் பின்னணியிலேயே இடம்பெற்றதாக செய்திகள் வெளிவந்திருந்தது.

வன்னி யுத்தத்தில் வன்னி மக்கள் பணயம் வைக்கப்படுகிறார்கள். மிகப்பெரிய மனித அவலம் ஒன்று நிகழப் போகின்றது என்பதை தேசம்நெற் நண்பர்கள் வேட்டையாடு விளையாடு என்ற தெரு நாடகம் ஒன்றின் மூலம் ஆரம்பத்திலேயே எச்சரித்து இருந்தனர். ( யுத்தத்தை நிறுத்துங்கள்!! வன்னி மக்களை விடுவியுங்கள்!!! – ஈஸ்ற்ஹாம் பிரதான வீதியில் ‘வேட்டையாடு விளையாடு’ : த ஜெயபாலன் ) இந்த வன்னி மக்கள் சுயாதீனமாக தங்கள் நகர்வுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இவ்வாறு சுயாதீனமாக தங்கள் நகர்வுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு இருந்தால் யுத்தப் பிராந்தியத்தில் இருந்து தப்பி மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கான வாய்ப்பு மக்களுக்கு ஏற்பட்டு இருக்கும். மிகப்பெரும் மனித அவலம் ஒன்று தடுக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் இவர்களின் கவன ஈர்ப்புப் போராட்டங்களும் உண்ணாவிரதப் போராட்டங்களும் இலங்கை அரசை மிகச் சரியாக கண்டித்த போதும் யுத்தத்தை நிறுத்தச் சொல்லிக் கோரிய போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை பலாத்காரமாக தங்களுடன் தங்கள் மண்மூட்டைகளாக இழுத்துச் சென்றதை கண்டிக்கத் தவறியது. மக்களது சுயாதீனமான நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் மிக மோசமான முறையில் கட்டுப்படுத்தினர். தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த மோசமான நடவடிக்கையே பல்லாயிரக் கணக்கான வன்னி மக்கள் உயிரிழக்கவும் இன்னும் பல்லாயிரக் கணக்கான மக்கள் காயமடையவும் காரணமானது. மேலும் வன்னியில் உள்ள சக மாணவர்கள் இளையவர்கள் பலாத்காரமாக முறையான பயிற்சிகள் கொடுக்கப்படாமல் யுத்த முன்னரங்கு நிலைகளுக்கு அனுப்பப்படுவது பற்றியும் கொல்லப்படுவது பற்றியும் கூட இவர்கள் மௌனமாகவே இருந்தனர்.

மே 1 2006ல் சம்பூரில் ஆரம்பிக்கப்பட்ட புரொஜக்ற் பீக்கன் இராணுவ நடவடிக்கையில் டிசம்பர் 31 2008 வரையான 19 மாதங்களில் சில நூறு பொது மக்களே கொல்லப்பட்டு இருந்தனர். இக்காலப் பகுதியில் கவன ஈர்ப்புப் போராட்டங்கள் நிகழவில்லை. உண்ணாவிரதப் போராட்டங்கள் நிகழவில்லை. யுத்த நிறுத்தமும் கோரப்படவில்லை. ஆனால் ஜனவரி 1 2009 முதல் மே 18 2009 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் படுகொலை செய்யப்படும்வரையான 5 மாதங்களிற்குள்ளாக 20 000 பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதற்குக் முக்கிய காரணம் மன்னார் வவுனியா கிளிநொச்சி முல்லைத் தீவு என்று பரந்திருந்த மக்கள் ஒரு குறுகிய பிரதேசத்தை நோக்கி நகர்த்தப்பட்டு அப்பிரதேசத்தை யுத்தகளமாக்கியது. இலங்கை இராணுவத்தின் மரபுவழி யுத்தத்திற்கு தாக்குப் பிடிக்க இயலாது பின்வாங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு கெரில்லா போராட்டத்திற்கு தங்களைத் தயார்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பிற்கு மாறாக தாம் அழைத்து வந்த மக்களுக்குள் ஒழிந்திருந்து தாக்குதலைத் தொடுத்தனர்.

காலத்திற்குக் காலம் பதவிக்கு வந்த சிங்கள பெரும்பான்மையின அரசுகள் சுதந்திரம் அடைந்தது முதல் தமிழ் மக்களின் உரிமைகளை மறுத்து ஒடுக்குமுறையை தமிழ் மக்கள் மீது மேற்கொண்டது. அதற்கு எவ்விதத்திலும் மாறுபடாத வகையில் தற்போதைய அரசும் நடந்துகொண்டது. ஒரு பயங்கரவாத அமைப்பின் பிடியில் இருக்கும் மக்களை விடுவிப்பதாகக் கூறிக்கொண்ட போதும் வன்னித் தமிழ் மக்கள் விடயத்தில் இலங்கை அரசு மாற்றாந்தாய் மனப்போக்குடனேயே நடந்து கொண்டது. புலிகள் தாக்குதல் நடத்தும் பகுதிகள் மக்கள் செறிவானதாக உள்ளதை நன்கு அறிந்திருந்த போதும் என்ன விலை கொடுத்தும் புலிகளை வேரறுப்பதிலேயே அரசு கண்ணும் கருத்துமாக இருந்தது. மக்களின் அவலங்கள் பற்றியோ அம்மக்களுக்க ஏற்படப் போகும் அழிவு பற்றியோ அரசு கவனமெடுக்கவில்லை.

யுத்தத்தில் சிக்குண்டிருந்த மக்கள் பற்றி யுத்தத்தில் ஈடுபட்டு இருந்த இலங்கை அரசோ தமிழீழ விடுதலைப் புலிகளோ சிந்தித்து இருந்தால் இந்தப் பாரிய இழப்புகளை பெருமளவில் தடுத்திருக்க முடியும். யுத்தத்தில் ஈடுபட்டு இருந்த இரு தரப்பினருக்கும் எதிராக புலம்பெயர்ந்த மக்கள் குரல் எழுப்பி இருந்தாலும் இந்த அவலத்தைத் தடுத்திருக்க முடியும்.

ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டங்கள் வன்னி மக்களின் நலன்களுக்கு எதிராகவே அமைந்தது. இப்பெரும் தவறே 20 000 பொது மக்களின் அழிவுக்கு வித்திட்டது. இன்னும் ஆயிரக் கணக்கானவர்களைக் காயங்களிற்கு உள்ளாக்கியது. புலிகளும் மக்களும் ஒன்று என்று இவர்கள் போட்ட கோசம் இன்று இன்று 300 000 வரையான வன்னி மக்களை முகாம்களுக்குள் முடக்கி வைத்துள்ளது.

யுத்தத்தில் சிக்குண்ட மக்கள் பற்றி எவ்வித அக்கறையையும் புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற கவன ஈர்ப்புப் போராட்டங்களும் உண்ணாவிரதப் போராட்டங்களும் கொண்டிருக்கவில்லை. அமெரிக்காவில் இருந்து இயங்குகின்ற People for Equality and Relief in Lanka (PEARL) அமைப்பு மார்ச் 2ல் வெளியிட்ட அறிக்கையில் புலிகளின் கட்டுப்பகுதியில் யுத்தத்தில் சிக்குண்ட மக்களை வெளியேற்ற வேண்டாம் எனத் தெரிவித்து இருந்தனர். ( முல்லை மக்களை யுத்த பிராந்தியத்தில் இருந்து வெளியேற்ற வேண்டாம்! பாதுகாப்பு வலயத்தை விரிவுபடுத்துங்கள்!!! அமெரிக்கத் தமிழ் அமைப்பு PEARL : த ஜெயபாலன் ) வன்னி மக்கள் எப்படியாவது யுத்தப் பகுதியில் இருந்து தப்பிக்க முயல்கையில் வன்னி மண் அந்த மக்களின் பூர்வீக மண் அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டாம் என புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆர்ப்பாட்டங்கள் அமைந்திருந்தது.

இன்று முடிவுக்குக் கொண்டு வரப்படும் 75 நாள் கவன ஈர்ப்புப் போராட்டம் கூட வன்னி மக்களின் நலனில் முன்னெடுக்கப்படவில்லை. இந்த ஆர்ப்பாட்டம் முற்று முழுதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட முயற்சி. முற்று முழுதாக தோல்வியடைந்த ஒரு போராட்டம்.

படையினரே எதிர்பாராத வகையில் ஏப்ரல் 5ல் புதுக்குடியிருப்புப் பகுதியை சுற்றி வளைத்ததில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனும் அவரது மகன் சார்ஸ் அன்ரனியும் சுற்றி வளைக்கப்பட்டனர். படையினரின் வியூகத்தை உடைத்து தலைமையைக் காப்பாற்றும் கடுமையான மோதலில் புலிகளின் முக்கிய தளபதிகள்  தீபன் கடாபி நாகேஸ் ஆகியொர் கொல்லப்பட்டனர். இவர்களுடன் பெண்கள் பிரிவின் மாலதி படையணியின் தலைவரான விதுஷாவும், பிரதித் தலைவரான துர்காவும் பல நூற்றுக்கணக்கான பொராளிகளும் கொல்லப்பட்டனர்.  ( Project Beacon – இறுதிக் கட்டத்தில்!! புலிகளின் தலைமை ஆபத்தில்!!! : த ஜெயபாலன் )

ஏப்ரல் 5ல் இடம்பெற்ற இத்தாக்குதலைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் எதிர்காலம் ஆபத்தில் சிக்கியது புலம்பெயர்நாடுகளில் உள்ள பொறுப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மறுநாள் காலை விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர்கள் கவன ஈர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்தனர். அதனைத் தொடர்ந்து மறுநாள் ஏப்ரல் 7ல் பரேமேஸ்வரன் சிவசுப்பிரமணியம் சிவதர்சன் சிவகுமாரவேல் ஆகிய இருவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இது பின்னர் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும் மேற்கு நாடுகளுக்கும் பரவியது.

இந்த உண்ணாவிரதிகள் வைத்த கோரிக்கைகள்
1. உடனடியான நிரந்தர யுத்த நிறுத்தம்
2. உணவு மற்றும் மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்லும் வணங்கா மண் கப்பலை உடனடியாக சர்வதேச கண்காணிப்பாளர்களுடன் பொதுமக்களை அடையச் செய்ய வேண்டும்.
3. ஐ நா பொதுச்செயலாளர் பான்கி மூன் பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுணை எமது பிரதிநிதிகள் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
4. தமிழீழ விடுதலைப் புலிகளே எங்களது ஏக பிரதிநிதிகள். பிரித்தானியாவில் உள்ள அவர்கள் மீதான தடை நீக்கப்பட வேண்டும்.
5. தமிழர்கள் தனிநாடாகப் பிரிந்துபோக விரும்புகிறார்களா? அல்லது இலங்கையின் பகுதியாக இருக்க விரும்புகிறார்களா? என்பதை அறிய ஐக்கிய நாடுகள் சபை தமிழ் மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

ஐ நா பொதுச்செயலாளரையும் பிரித்தானிய பிரதமரையும் தங்களுடைய பிரதிநிதிகள் சந்திக்க வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற ஒரு அர்த்தமற்ற கோரிக்கையைத் தவிர வேறு எவ்வித கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. (ஐ நா பொதுச் செயலாளரையும் பிரித்தானிய பிரதமரையும் சந்திக்க உண்ணாவிரதம் இருந்து அனுமதி பெற்றவர்கள் இந்த உண்ணாவிரதிகளின் பிரதிநிதிகளாகவே இருப்பார்கள்.)

இந்தக் கோரிக்கைகள் அனைத்துமே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒக்ஸிஜன் வழங்கும் கோரிக்கைகளே அன்றி நடைமுறைச்சாத்தியமான வன்னி மக்களின் நலன்சார்ந்த கோரிக்கையாக அமையவில்லை.

உண்ணாவிரதிகளில் சிவதர்சன் சிவகுமாரவேல் ஆரம்பத்திலேயே உண்ணாவிரதத்தை கைவிட்டார். பரமேஸ்வரன் சிவசுப்பிரமனியம் பின்னாட்களில் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். பிரித்தானிய அரசு சில உறுதிமொழிகளைத் தந்துள்ளதன் அடிப்படையில் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வருவதாகக் கூறிய பரமேஸ்வரன் சிவசுப்பிரமணியம் பிரித்தானிய அரசின் உறுதி மொழிகளை தற்போது வெளியே தெரிவிக்க முடியாது என்று மறுத்தவிட்டார். ஆனால் அந்த உறுதிமொழி என்னவென்பது பின்னர் வெளிவந்தது. மனிதக் கேடயங்களாக உள்ள வன்னி மக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் விடுவித்தாலேயே பிரித்தானிய அரசு மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்கக் கூடியதாக இருக்கும் என்பதே பரமேஸ்வரன் சிவசுப்பிரமணியம் என்ற உண்ணாவிரதிக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த 75 நாள் கவன ஈர்ப்புப் போராட்டம் மெற்றோ பொலிட்டன் பொலிசாருக்கு எட்டு மில்லியன் பவுண்களுக்கு மேல் நட்டத்தை ஏற்படுத்தி இருந்தது. வன்னி மக்கள் இலங்கை அரசபடைகளால் கொல்லப்படுவதற்கு புலம்பெயர் மக்களும் காரணமாக இருந்துள்ளனர். இம்மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி அவர்களுக்கு மிகக் கொடுமை புரிந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியையும் அதன் தலைவர் வே பிரபாகரனின் படத்தையும் பிடித்துக் கொண்டு மனித உரிமை பேசுவதற்கும் சிங்கக் கொடியையும் முப்படைத் தளபதி சரத்பொன்சேகாவின் படத்தையும் பிடித்துக் கொண்டு மனித உரிமை பேசுவதற்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது.

புலம்பெயர்ந்த மாணவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள இளையவர்கள் இயக்க கட்சி அரசியலுக்குள் அள்ளுண்டு செல்லாது தங்களுக்கான ஜனநாயக பூர்வமான அமைப்புகளைக் கட்டி அதனூடாக மக்கள் நலன்சார்ந்த அரசியலை முன்னெடுக்க வேண்டும். இதனை அவர்கள் சுயாதீனமாக மேற்கொள்ள வேண்டும். அதனை விட்டு இறக்குமதி செய்யப்பட்ட தலைமைத்துவங்களுக்குப் பின் மந்தைக் கூட்டமாக இழுக்கப்படுவதை இவர்கள் நிராகரிக்க வேண்டும்.

தங்கள் கைகளிலும் வன்னி மக்களின் குருதி படிந்திருப்பதை இவர்கள் உணர்ந்து சுயவிமர்சனத்திற்கு தங்களை உட்படுத்திக் கொண்டே அடுத்த நகர்வை ஏற்படுத்த முடியும்.

அன்பும் பாசமும் வளமும் வசதியும் நிறைந்த டாக்குத்தர் மூத்தி அவர்களுக்கு! : ஈழமாறன்

Moorthy N S Drஅன்பும் பாசமும் வளமும் வசதியும் நிறைந்த டாக்குத்தர் மூத்தி அவர்களுக்கு!
தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற படுமோசமான பாசிச அமைப்பின் போர்வையின் பின் மறைந்திருந்து கொண்டு நீங்கள் செய்த திருகு தாளங்கள் நிறைய என்பதை நான் சொல்லித் தெரியவேண்டிய நிலையில் இல்லை என்று எனக்குத் தெரியும்.

மு.நித்தியானந்தன் உடன் மட்டக்களப்பு சிறையில் இருந்து தப்பிய சிறைக் கைதிகளுக்கு உதவியதன் பேரில் கைது செய்யப்பட்டு வெலிக்கடைச் சிறையில் இருந்தபோது சிறை நிருவாகத்துக்கு நீங்கள் சக கைதிகளைக் காட்டிக்கொடுத்த உங்கள் நடவடிக்கையிலிருந்தே நீங்கள் புலிகளுடன் மட்டுமே உறவு கொள்ள முடியும் என்பது தெட்டத் தெளிவாக தெரிந்திருந்தது.

ஈழமாறனுக்கு பண்பாக எழுதத் தெரியவில்லை என்று பலரும் குறைபட்டதாக கேள்விப்பட்டதாலேயே இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். கிளிநொச்சி மக்கள் 20000 பேர் ஒரு நாளில் கொல்லப்பட்ட அவலத்தைப் பார்த்த பின்னும் ஆக்கபூர்வமாக எதுவும் செய்யாத ஆனந்த சங்கரிஜயா போலவே நானும் வெறும் கடிதம் எழுதுவதைத் தவிர ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது வருத்தம் தான்.

ஆனால் இது புலம் பெயர் சூழலில் இருக்கும் புலி வால்களுக்கும் அவர்களை சந்தர்ப்பம் கிடைக்கிறபோதெல்லாம் பணக்காரர்களாக்கி விட்டு மௌனமாகவே இருந்துவிடும் தமிழ் உணர்வின் நிமித்தம் கேட்ட உடனேயே பணம் கொடுத்து விடும் அப்பாவி மக்களை விழித்தெழ வைப்பதும் உங்களைப் போன்ற புல்லுருவிகள் இனியும் பிரபாகரன் சாகவில்லை.. உயிரோடுதான் இருக்கிறார். மதியோடுதான் இருக்கிறார். சார்ள்ஸ்சோடுதான் இருகக்கிறார் என்று கதை அளந்து கொண்டு காலத்தை போக்குவதும் தமிழ் மக்கள் காலப் போக்கில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மறந்து போனது போலவே இந்த முறையும் உங்கள் சுருட்டல்களையும் சுத்துமாத்துக்களையும்;… மறந்து விடுவார்கள் என்று கணக்குப் போடுவதை உடைப்பதற்காக என்றாலும் இந்தக் கடிதம் உதவலாம் என்றே எழுதுகிறேன்.

மூத்தி ஜயா  நீங்கள் இங்கிருக்கும் விசுவாசிகளை ஓரம் கட்டியதும் வசதி வருகிறபோதெல்லாம் (உங்கள் பணவசதி அல்ல வெண்புறா வசதியைச் சொல்கிறேன்) வன்னிக்குச் சென்று போட்டோ எடுத்ததும் அதைக் கொண்டுவந்து ஊரெல்லாம் காட்டியதும் பெருமைப்பட்டுக் கொண்டதும் மறைமுகமாக நீங்கள் தான் லண்டன் பிரதி நிதி என்று நிறுவிக் கொண்டதும் கூட எல்லாருக்கும் தெரியும்.

இந்த வரிசையில் தான் புலிகளின் புனர்வாழ்வுக்கழகமும் இன்ன பிற அமைப்புக்களும் அம்பலப் பட்டதும் பல மில்லியன் டொலர்கள் முடக்கப் பட்டதும் வேறு வழியில்லாமல் அண்ணைக்கு அனுப்புவதற்கு வெண்பறா கட்டினீர்கள். இன்று வரையில் எவ்வளவு பணம் சேர்த்தீர்கள் என்ன செய்தீர்கள். என்று யாருக்காவது கணக்கு காட்டினீகளா? கடைக்கு கடை உண்டியல் வைத்து சேர்த்த பணம் எல்லாம் மூட்டை கட்டிச் சென்ற நீங்கள் இந்த கடைகளுக்கு எவ்வளவு பணம் சேர்ந்தது என்ற கணக்கு காட்ட வேண்டும் என்ற குறைந்த பட்ச பொறுப்பும் உங்களுக்கு வரவில்லையே ஏன்?

மூத்தி ஜயா. இது ஒன்றும் அக்குபஞ்சர் ஊசி போடும் விவகாரம் அல்ல. போட்ட ஊசிக்கு நீட்டின காசு செரியாப் போச்சு என்று சொல்வதற்கு. வெண்பறா கட்டி நாலு பிள்ளைகளுக்கு அதுவும் உங்கட தேசியத் தலைவர் துரத்திப் பிடித்து போர்முனையில் விட்டு நாசமாக்கிய சிறுவர்களுக்கு காலும் கையும் போட்டுவிட்டு மற்றதெல்லாம் என்ன செய்தீர்கள்?

தேசியத் தலைவருக்கு தெரிந்திருந்தால் புலிக்கு வால் பிடித்தால் நீங்கள் நேர்மையானவர்கள் என்ற மாயையை உருவாக்கி நாளுக்கு 15 மணி நேரங்கள் வேலை செய்து வீட்டுச் சுமை அடைத்து வாழும் வீட்டுக் கடனடைத்து மீதியை தன் தங்கைக்கு பிள்ளைக்கு என்று குருவி போல சேர்த்த பணம் முழுவதையும் அப்பாவி புலம் பெயர்ந்த மக்களை உசுப்பேத்தி வீர வசனம் பேசி வரலாறு கதைத்து உணர்ச்சி வசப் படவைத்து சேர்த்த பணமெல்லாவற்றையும் வறுகி உங்கள் வங்கியில் போட்டு விட்டு பெரும் தொண்டர்கள் போல நீங்கள் இனியும் வலம் வரலாம் என்ற தப்புக் கணக்கு போட வேண்டாம் என்று செல்லமாக எச்சரிக்கவே உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன்.

பிரபாகரன் என்ற ஒரு தனிமனிதனைக் காப்பாற்ற 20000 தமிழ் மக்களின் (வன்னி மக்கள் என்று சொல்லும் போது சிலருக்கு கோபம் கோவணம் வரையில் செல்வதாக அறிந்தேன்) உயிரை காவு கொண்டு கடைசியில் நந்திக் கடலில் நீந்தக் கூட முடியாமல் விளைந்த காரணத்தால் அத்தனை தளபதிகளையும் கொன்று குவிப்பதற்கு முன்னர் தீபம் தொலைகாட்சியிலும் ஜிரிவி தொலைக் காட்சியிலும் நாளுக்கு நாலு தடைவ வந்து வணங்கா மண் கப்பல் கட்டிறம் தமிழர்கள் வீரம் கொட்டிறம். என்று வாய் கிழியக் கத்தியவர் நீங்கள். வணங்கா மண்ணுக்கு கொட்டிக் கொடுத்த பணத்தின் தொகை என்ன என்று நீங்கள் இந்த இரண்டு தொலைக் காட்சிகளில் ஒன்னிறல் வந்து சொல்லியே ஆகவேண்டும். கப்டன் அலி தான் வணங்கா மண். சேர்த்த பணம் எல்லாம் அதிலேயே போய் விட்டது என்று பூ சுத்தும் வேலை இனி வேண்டாம். எனக்கு ஊசிபோடுற விளையாட்டை விட்டுவிட்டு பதில் தாருங்கள்.  அடுத்த முறை எழுத்து இந்த மாதிரி வராது என்பதை மட்டும் துப்பாக்கி இல்லாமல் மிரட்டுகிறேன் என்பதையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

தீபம் போன்ற பொறுப்றற்ற தொலைக்காட்சிகள் அளவுக்கு அதிக விளம்பரம் கொடுத்து உங்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தார்கள் என்பதால் அதே தொலைகாட்சியில் தேசம்நெற் ஒரு விளம்பரம் செய்யும்படிக் கேட்டுக் கொள்கிறேன். வணங்கா மண்ணுக்குச் சேர்த்த பணம் பொருட்கள் கப்டன் அலியில் சென்ற பொருட்களின் பட்டியல்  போன்ற விபரங்களைக் கோரும் விளம்பரம் ஒன்றை தீபத்தில் போட வேண்டும். மறுக்கும் சந்தர்ப்பத்தில் தீபமும் இதற்கான பொறுப்பை ஏற்றக வேண்டும் என்று பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். ஜயா மூத்தி அவர்களே எல்லோரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க கௌரவமாக இந்தக் கடித்ததை எழுதியுள்ளேன். இக் கடிதம் வெளியாகும் நாளில் இருந்து 14 தினங்களுக்குள் உரிய பதிலைத் தரவில்லை என்றால்…. (தொடக்கமே மவனே… என்றுதான் ஆரம்பிக்கும்) மிகவும் மோசமான மொழியில் உங்களைச் சந்திக்க வேண்டி வரும் என்பதையும் நீங்கள் வசூலித்த தொகை எவ்வளவு எங்கு போனது என்ற விபரங்கள் தெரியும் வரையில் என் பேனாமுனை யுத்தம் தொடரும் எனபதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாறனின் தாகம் மூத்தியின் விபரம்

இங்கனம்
யாராய் இருந்தாத் தான் என்ன.

எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி!? ‘வணங்கா மண்’ வரிசையில் ஜனனி ஜனநாயகத்தின் அரசியல் கப்பலும் கவிழ்ந்தது!!! : ரி கொன்ஸ்ரன்ரைன்

Jan Jananayagamதேர்தல்களில் நிற்பவர்கள் எல்லோரும் வெற்றி பெறுவதில்லைத் தான் அதிலும் குறிப்பாக தேர்தலில் நிற்பவர்கள் எல்லோரும் தாம் வெற்றி பெறப் போவதில்லை என்று எண்ணுவதும் இல்லை. சிலர் கட்சியின் சார்பாக நிறுத்தப்படுகின்றனர். சிலர் ஏதோகொள்கையின் நிமித்தம் தேர்தலில் நிற்கின்றனர். சிலருக்குப் பேராசை. இன்னும் சிலருக்கோ நப்பாசை. இதில் லண்டன் தொகுதியில் நின்று தோல்வியுற்ற ஜனனி ஜனநாயகம் எவ்வகை?

யூன் 4ல் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கான தேர்தல்கள் இடம்பெற்றது. பிரித்தானியா உட்பட 27 நாடுகளில் உள்ள 375 மில்லியன் பிரஜைகள் 736 ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். பிரித்தானியாவில் உள்ள 72 ஆசனங்களில் லண்டனில் 8 ஆசனங்களுக்கு 19 பேர் போட்டியிட்டனர். அதில் ஜனனி ஜனநாயகம் புலியாதரவு அலையுடன் தேர்தலில் நின்றார். தேர்தலின் முடிவுகள் இன்று (யூன் 7) வெளியாகியது. 

இவ்வாரம் வெளியாகிய புலியாதரவு ஈழமுரசு பத்திரிகையில் ‘வணங்கா மண்’ கப்பலைத் தொடர்ந்து ஜனனியின் தேர்தல் பிரவேசம் புலத்து தமிழர்களின் விடுதலைப் பாதையை தெளிவாகச் செப்பனிடுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. வீர காவியங்களோடு புறப்பட்ட ‘வணங்கா மண்’ ‘வணங்கிய மண்’ ணாக போய் சிறிலங்கா அமைச்சரின் காலில் கூனிக் குறுகி நிற்கின்றது.

ஈழப் பிரச்சினையுடன் கூட்டாக பொஸ்னியா தீபெத் பிரச்சினையையும் தீர்க்கப் புறப்பட்ட ஜனனியின் கப்பல் ஈஸ்ற்ஹாமைத் தாண்ட முதலே கவிழ்ந்துவிட்டது. ஈழத் தமிழர்கள் மிகவும் செறிந்து வாழும் ஈஸ்ற்ஹாமில் ஜனனி பெற்ற வாக்குகள் 3520 மட்டுமே. முருகானந்தன், ஒரு பேப்பர் கோபி, பற்றிமாகரன், ராஜாமனோகரன், மற்றும் வெற்றுவாய் அரசியல் ஆய்வாளர்களின் அரசியல் சித்தாந்தங்களை நம்பியும் தீபம் ஜிரிவி ஐபிசி ஒரு பேப்பர் ஈழமுரசு போன்ற ஜால்ரா ஊடகங்களை நம்பியும் நடாத்தப்படும் அரசியலின் விளைவு தான் ஜனனியின் தோல்வி.

ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு லண்டனில் ஒரு ஆசனத்தைப் பாதுகாக்க குறைந்தது 8 வீத வாக்குகளாவது (190 000) தேவையென்று தேசம்நெற்றில் முன்னரே குறிப்பிட்டு இருந்தோம். இம்முறை ஒரு ஆசனத்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட ஆகக் குறைந்த வாக்கு 188 440. ஜனனி ஜனநாயகத்திற்குக் கிடைத்த வாக்குகள் 50 014. அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 2.9 வீதமான வாக்குகளை ஜனனி ஜனநாயகம் பெற்றிருந்தார். நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல் அவர் தனது கட்டுப் பணத்தை தக்க வைத்துக் கொள்ள 40 000க்கும் அதிகமான வாக்குகளை 2.5 வீதமான வாக்குகள் –  பெற வேண்டி இருந்தது. 2.5 வீதத்திற்கு சற்று அதிகமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டதால் ஜனனி ஜனநாயகம் தனது 5000 பவுண் கட்டுப்பணத்தைத் தக்க வைத்துக் கொண்டார். ( தமிழீழத் தேசியத் தலைவி மேதகு ஜன ஜனநாயகம் அவர்களே! : ஈழமாறன் )

எவ்வித பொது அறிவும் இல்லாமல் யதார்த்தமற்ற கொள்கையினாலும் முரட்டுப் பிடிவாதங்களாலும் தடம்புரண்ட ஈழப்போராட்டம் அதே அணுகுமுறையினால் புலத்திலும் தடம் புரண்டது. அதிஸ்டவசமாக தாயகத்தில் ஏற்பட்டது போன்ற மனித அவலம் எதுவும் புலத்தில் ஏற்பட்டுவிடவில்லை.

புலத்து தமிழர்ளும் புலிப் பினாமிகளும் இன்னும் யதார்த்தத்தில் இருந்து வெகுதொலைவில் நிற்கின்றனர். தமிழகத்தில் மம்மியை கொண்டாடி மம்மியை கவிழ்த்து விட்டார்கள். இங்கு பேபியைக் கொண்டாடி பேபியையும் கவிழ்த்து விட்டார்கள். ஒரு பேப்பர் கோபியும் ஈஸ்ற்ஹாம் முருகானந்தனும் வோட்டுப் போடாதவர்களுக்கு இனி ‘துரோகிகள்’ என்று சிறப்புப் பட்டம் கொடுத்து கௌரவிப்பார்கள்.

ஜனனி ஜனநாயகம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் ஒவ்வொரு தமிழரும் 5 வேற்று இனத்தவர்களை அழைத்து வந்து வாக்களிக்க வைப்பார்கள் அதன் மூலம் தனது சீற்றை செக்குயர் (secure)பண்ணலாம் என்று குறிப்பிட்டார். பாவம் ஜனனி புலத்து தமிழர்களைப் போல் முட்டாள்கள் வேற்று இனத்திலும் இருப்பார்கள் என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டார்.

எமது சமூகத்தில் பெண்களின் அரசியல் பங்களிப்பு மிகக் குறைவான நிலையில் ஜனனி ஜனநாயகம் போன்றவர்களின் அரசியல் பிரவேசம் வரவேற்கப்பட வேண்டும். ஆனால் அவர்கள் புலிப் பினாமிகளின் தற்கொலை குண்டுதாரிகள் போன்று அரசியலில் நுழைவது அவர்களுடைய அரசியல் எதிர்காலத்தையே சிதறடித்துவிடுகின்றது.

இலங்கையில் கொல்லப்பட்ட 20 000 தமிழர்களின் இரத்தக்கறை ஜனனி போன்றவர்களிலும் இருக்கின்றது. அம்மக்கள் இலங்கை அரசாலும் புலிகளாலும் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுக் கொண்டிருக்கையில் தனது அரசியல் நலன்களுக்காக புலிகளைக் காப்பாற்றுவதிலேயே ஜனனி ஜனநாயகம் மிகத் தீவிரமாக இருந்தார். யுத்தப் பகுதிக்குள் புலிகள் மக்களைத் தடுத்து வைத்திருப்பதை ஜனனி எச்சந்தர்ப்பத்திலும் கண்டிக்கவில்லை. புலிகள் பலவந்தாமாக இளைஞர்களையும் யுவதிகளையும் பிடித்து யுத்த முன்னரங்கிற்கு அனுப்பி அவர்களைப் பலிகொடுத்த போது ஜனனியும் அவரது ஆதரவாளர்களும் பிரபாகரனது படத்தையும் புலிக்கொடியையும் தாங்கிச் சென்றனரேயன்றி அம்மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மிகப்பெரும் மனித அவலத்தில் குறுகிய அரசியல் நோக்குடன் செயற்பட்ட ஜனனி ஜனநாயகம் வன்னி முகாம்களில் தேர்தலில் நின்றிருந்தால் கட்டுக் காசையும் பறிகொடுத்து இருப்பார்.

வணங்கா மண்: வசூல் மர்மம் தொடர்கிறது! பொருட்கள் இல.அரசிடம் ஒப்படைக்கப்படும்!!! : ரி கொன்ஸ்ரன்ரைன் & த ஜெயபாலன்

Nithiyananthan_DrVanni_MissionMoorthy N S DrThaya_Idaikadar_Clrசெய்தி: கெப்டன் அலி கப்பல் கடற்படையால் கைப்பற்றப்பட்டது.

கெப்டன் அலி என்ற கப்பல் இன்று (SL_June 05 2009) அதிகாலை கடற்படையால் கைப்பற்றப்பட்டது. இலண்டனிலிருந்து அகதிகளுக்கு நிவாரணப் பொருட்களை எடுத்து வந்ததாக கூறப்படும் இக்கப்பல் இலங்கை அரசின் அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில் நுழைந்த போதே கடற்படையால் கைப்பற்றப்பட்டது எனக்கூறப்படுகிறது.

ஆயினும் வணங்கா மண் ஏற்பாட்டுக் குழுவினர் ஏற்கனவே இலங்கை அரசுடன் இரகசியமாக மேற்கொண்ட உடன்படிக்கைக்கு அமையவே கப்பல் இலங்கைக் கடற்பரப்பினுள் நுழைய அனுமதிக்கப்பட்டது. எந்தவொரு கப்பலும் அதன் புறப்படும் துறைமுகத்திலிருந்து புறப்படும் போது அது எத்துறைமுகத்திற்குச் செல்கிறது என்பது போன்ற விதிமுறைகளுக்கு அமையவே புறப்பட முடியும். அதற்கு ஏற்ப வணங்கா மண் ஏற்பாட்டாளர்கள் இலங்கை அரசுடன் ஒரு இரகசிய உடன்பாட்டுக்கு வந்தே கப்ரன் அலியை இலங்கைக்கு அனுப்பி வைத்ததாக ‘லண்டன் குரல்’ பத்திரிகைக்கு தெரியவந்துள்ளது. ‘வணங்கா மண்’ ‘கப்டன் அலியாகி’ இலங்கைக்குச் செல்ல இலங்கை அரசு அவர்களைக் கைது செய்வது போல் கைதுசெய்து விடுவிக்க உள்ளது.

லண்டன் வந்துள்ள வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லகமவிடம் வணங்கா மண் தொடர்பாக தேசம்நெற் ஆசிரியர் ரி சோதிலிங்கம் இன்று (யூன் 4) கேள்வி எழுப்பியபோது, கப்பல் தகுந்த ஆவணங்கள் இன்றி இலங்கைக் கடற்பரப்பினுள் நுழைந்தால் இலங்கை அரசு தனது பாதுகாப்புத் தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கும் எனத் தெரிவித்தார். வணங்கா மண் ஏற்பாட்டுக் குழுவினருடன் இரகசிய உடன்பாடு ஒன்று எட்டப்பட்டது தொடர்பாக அவர் எதனையும் குறிப்பிடவில்லை. கப்பலில் உள்ள பொருட்கள் பரிசோதணைக்கு உட்படுத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஆனால் மனிதாபிமான உதவிப் பொருட்கள் விதிமுறைகளுக்கு அமைவாக வழங்கப்பட்டால் அவற்றை பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதில் எவ்வித தடையும் இல்லை என்பதை இலங்கை உயர்ஸ்தானிகர் தேசம்நெற் இற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்து இருந்தார். இதற்கான இரகசிய உடன்பாடும் ஏற்கனவே ஏற்பட்டு இருந்தது.

செய்தியின் பின்னணி:

இன்று லண்டனில் வெளியான ‘லண்டன் குரல்’ பத்திரிகையின் பிரதான செய்தி. தேசம் நெற் வாசகர்களுக்காக மீள் பிரசுரமாகிறது. இச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வணங்கா மண் ஏற்பாட்டுக் குழுவின் நேர்காணலை பார்க்க அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்.

வணங்காமண் ஏற்பாட்டலர்களை நேர்காண்கிறார்கள் GTV www.tubetamil.com 2

வணங்காமண் ஏற்பாட்டலர்களை நேர்காண்கிறார்கள் GTV www.tubetamil.com 3

வணங்கா மண் தொடர்பாக வெளியான முன்னைய கட்டுரை.

புலத்து தமிழ் மக்களின் இஸ்ரேலியக் கனவு ‘வணங்கா மண்’ : த ஜெயபாலன்

வணங்கா மண்: வசூல் மர்மம் தொடர்கிறது! பொருட்கள் இல.அரசிடம் ஒப்படைக்கப்படும்!!!

‘உலகமே கை விட்ட பின் எம் உறவுகளின் உயிர் காப்பதற்க்கான தாயகம் நோக்கிய பயணம்.’ என்று பெரும் எடுப்பில் ஆரவாரித்த வணங்கா மண் ஒருங்கிணைப்புக் குழுவின் வசூல் மர்ம் இன்னும் தொடர்கிறது.

‘சாவுக்குள் வாழ்வாய் வாழும் மக்களை பட்டினியால் சாவு கொள்ள விடுவோமா? வேதனைகள் சோதனைகளை கடந்து வந்து புலம்பெயர்ந்து வாழும் நாம் எம்மினம் அழிய விடுவோமா? அரசுகள் கைவிட்டால் என்ன? மனிதநேயம் கொண்ட மக்களிடம் எடுத்து செல்லுங்கள் எம்துயரை, பெற்றுக்கொள்வோம் அவர்கள் ஆதரவை. காத்திடுவோம் எம் உறவுகளை!!!’ என்று உணர்ச்சிகளைத் தூண்டி முழுவீச்சில் வணங்கா மண் பொருட்களையும் நிதியையும் சேகரித்தது.

ஆனால் பட்டினியால் தவித்த மக்களின் இறுதிப் பகுதியினர் மீட்கப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டு இருவாரங்கள் கடந்தும் இன்னமும் இக்கப்பல் வன்னி மக்களை நெருங்கவில்லை. முல்லைத் தீவு கடற்பரப்பிற்கு கொண்டு சென்று சர்வதேச கவனத்தை ஈர்க்கப் புறப்பட்ட வணங்கா மண் தற்போது இலங்கை அரசிடம் கையளிக்கப்பட உள்ளது. தற்போது சுயஸ் கால்வாயைக் கடக்கும் இக்கப்பல் இலங்கை அரசின் உடன்பாட்டுடன் கொழும்புத் துறைமுகத்தை அடைந்து பொருட்கள் அரசினால் கையேற்கப்பட உள்ளதாக லண்டன் குரலுக்குத் தெரிய வருகிறது. 

புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்த மக்களுக்கு உணவு விநியோகத்தை மேற்கொள்ள ஆரம்பிக்க்பட்ட இந்த வணங்கா மண் கப்பல் திட்டம் அதன் ஆரம்பத்திலேயே விமர்சனத்திற்கு உள்ளானது. தற்போது தங்கள் ஆரம்ப முடிவில் இருந்து U-turn எடுத்து இலங்கை அரசிடம் பொருட்கள் கையளிக்கப்பட உள்ளது.

மார்ச்சில் ஆரம்பிக்க்பட்ட “Mercy Mission to Vanni” என்றழைக்கப்பட்ட இக்கப்பல்த் திட்டத்திற்கு கவுன்சிலர் தயா இடைக்காடர், கலாநிதி நித்தியானந்தன், Dr புவி ஆகியோரைக் கொண்ட Dr மூர்த்தி தலைமையிலான குழு பொறுப்பாக இருந்தது. இக்குழுவில் உள்ள பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவருடன் லண்டன் குரல் தொடர்பு கொண்ட போது இது பற்றிய விபரங்கள் தனக்கு தெளிவாகத் தெரியவில்லை எனத் தெரிவித்தார்.

வன்னிமிசன் என்ற பெயரில் உள்ள உத்தியோகபூர்வ இணையத்தளமும் முக்கிய தகவல்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை. வன்னிமிசனில் அனுப்பப்படும் பொருட்களின் விபரம், அதற்கு சேகரிக்கப்பட்ட நிதி விபரம் அதற்கான செலவு விபரங்கள் எதுவுமே அறிவிக்கப்படாமல் கப்ரன் அலி, சிரியா நாட்டுக் கொடியுடன் கப்பல் இலங்கை நோக்கிச் செல்கிறது.

இக்கப்பலின் கொள்ளளவு Maximum TEU capacity : 5560 Reefer containers : 1080. ஆனால் கப்ரன் அலியின் கொள்ளளவிலும் மிகக் குறைவான தொகையான 900 மெற்றிக்தொன் வரையான உணவுப் பொருட்களும் மருந்துப் பொருட்களுமே அனுப்பப்படுகின்றது.குறைந்த அளவான பொருட்களுக்கு தனியாக ஒரு கப்பலை ஒழுங்கு செய்து அனுப்புவதற்கான செலவுத் தொகை மிக மிக அதிகமாகும்.

பிரித்தானியாவில் உள்ள இந்துக் கோவில்கள் ஒன்றியம் மட்டும் 200 000 பவுண்களை வன்னிமிசனுக்கு வழங்க முன்வந்து 50 000 பவுண்களுக்கு காசோலையை உடனடியாக வழங்கி இருந்ததாக வன்னிமிசன் செய்திக் குறிப்புத் தெரிவிக்கின்றது.

வன்னி மக்களின் அவலத்தை முன்நிறுத்தி ஆபிரிக்காவில் உள்ள உயர்ந்த மலைச் சிகரமான கிளிமொஞ்சதாரோ மலையில் ஏறிய கீரன் அரசரட்ணம் என்ற இளைஞர் 30 000 பவுண்சை சேகரித்து வணங்கா மண் திட்டத்திற்கு வழங்கி உள்ளார்.

இதனைவிட வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஆலயங்கள், வியாபார ஸ்தாபனங்கள், சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், பொது அமைப்புகள், தனிநபர்கள் என பல்லாயிரக் கணக்கானோர் இந்த வன்னிமிசனுக்கு பொருளாகவும் நிதியாகவும் உதவிகளை வழங்கி உள்ளனர்.

ஆனால் இந்த வன்னி மிசனின் ஏற்பாட்டுக் குழுவினர் ஒரு கப்பலை ஒழுங்கு செய்து  பொருட்களை அனுப்பினால் தங்கள் பொறுப்பு முடிந்தது என்ற வகையில் நடந்துகொள்கிறார்கள் என இவர்களுடன் தொடர்பு கொண்ட பொதுமக்கள் லண்டன் குரலுக்குத் தெரிவித்தனர்.

இத்திட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவினரான கவுன்சிலர் தயா இடைக்காடர், கலாநிதி நித்தியானந்தன், Dr புவி, Dr மூர்த்தி ஆகியோர் இந்த வன்னிமிசன் தொடர்பாக பொறுப்புடன் நடந்து கணக்கு மற்றும் விடயங்களை முழுமையாக வெளியிட வேண்டும் என்ற குரல்கள் தற்போது எழ ஆரம்பித்து உள்ளது.

தமிழீழத் தேசியத் தலைவி மேதகு ஜன ஜனநாயகம் அவர்களே! : ஈழமாறன்

Jan Jananayagamதமிமீழத் தேசியத் தலைவி மேதகு ஜன ஜனநாயகம் அவர்களே! இங்கு காட்டாற்று வெள்ளம் போல் கூடியிருக்கும் புலம் பெயர்ந்த என் அன்பார்ந்த தமிழீழ மாக்களே! கொள்ளையானந்தன் பேச வருகிறான் என்றதும் விசிலடிப்பதற்கு என்றே வெளி மாவட்டங்களில் இருந்து எல்லாம் சிரமத்தையும் பாராமல் பிரித்தானியா பாராளுமுன்றலில் கூடியிருக்கும் மாணவப் பெருந்தகைகளே! தேசியத் தலைவர் வழிகாட்டலில் வன்னியில் ஒரு சந்ததியே அழிந்தபின் ஆமிக்காரன் சரணடைய வைத்துச் சுட்டுக் கொன்றோ அன்றி சபாரத்தினம் பத்மநாபா ராஜினி திரணகம போன்றோரைக் கொன்ற துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு கொன்றோ மரணித்துப் போன அண்ணையின்ரை இடத்தை நிரப்பி லண்டனில் இருந்தபடியே தமிழீழம் வாங்கித் தர வந்திருக்கும் எங்கள் தலைவி மேதகு ஜனநாயகத்தின் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவதிலே நான் பெருமைப் படுகிறேன்.

இங்கு தேசியத் தலைவரைப் போல போஸ் கொடுத்து அமர்ந்திருக்கும் தலைவி எப்படிப் பட்டவர் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிய வேண்டிய அவசியமில்லை. சிங்கள வெறியர்களுக்கு நான் ஒன்றைத் தெட்டத் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எங்கள் தேசியத் தலைவி ஜனாவின் கோபத்துக்கு ஆளாகி விடாதீர்கள். ஜரோப்பிய பாராளுமன்றத்தில் தன்னம் தனியாக நின்று தமிழீழம் அமைக்கப் போகும் எங்கள் மேதகு தலைவி சொன்னால் வவ்வால் வரும். எப்படி வரும்……. (மாணவர்கள் விசிலடிக்கிறார்கள்.)

தமிழ் மக்களின் நியாயமான போராட்டம் தொடங்கியபோது யாழ் லோதிக்க மேட்டுக் குடி மக்களுக்கே உரிய பாணியில் எங்கள் தலைவி சிம்பாப்வேக்கும் பின்னர் நைஜீரியாவுக்கும் தனது பெற்றோருடன் சென்றது எதற்காக? 24 மணி நேரமும் தமிழீழம் எப்படி அமைக்கலாம் என்று சிந்திப்பதற்காகவே என்பது இங்கு நிறையப் பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எதிர்க் கட்சியினர் சொல்வது போல 30 ஆண்டுகள் நடந்த போராட்த்தில் ஒரு சிறு பாதிப்புக் கூட படாமல் எங்கள் தலைவி தப்பியிருந்தது சொகுசாக வாழ்வதற்கல்ல. தமிழ் மக்களை அண்ணை அம்போ என்று கைவிடும் போது ஓடிவந்து காப்பாத்துவதற்காகவே.

துப்பாக்கிச் சூட்டுக்கும் குண்டு மழையிலும் சிறிலங்கா இராணுவத்தின் அட்டூழியத்திலும் தமிழ் மக்கள் 30 ஆண்டுகள் சீரழிந்த போது தலைவி தமிழீழம் கட்டுவதற்கான படிப்புக்கள் அத்தனையையும் படித்துக் கொண்டு இருந்தார் என்றால் நீங்கள் நம்புவீர்களா? அவரின் தேர்தல் பிரச்சார துண்டுப் பிரசுரத்தைப் பாருங்கள். அதிலே எழுத்துக்களை மாத்திப் போட்டு எம் பி ஏ என்றெல்லாம் படித்திருக்கிறார். அதன் அர்த்தம் பரியாதவர்கள் தலைவி ஏதோ தப்பி ஓடிப் போய் வெளிநாடுகளில் வாழ்ததாகவும் அவருக்கு தமிழ் மக்கள் மீது அக்கறை இல்லாதர் போலும் பூச்சாண்டி காட்டுகிறார்கள். அவர்களுக்கு நான் இரண்டு சொல்ல ஆசைப்படுகிறேன். எந்த வேட்பாளராவது இந்தத் தேர்தலில் தனது குவாலிவிக்கேசனைக் காட்டியிருக்கிறர்களா. தலைவியைத் தவிர வேறு யாராவது குவாலிவிக்கேசனைக் காட்டியிருந்தல் நான் இந்த மேடையிலேயே தீக்குளிக்கத் தயார்.

அடுத்தது தலைமை என்பது யாழ்ப்பாணத்திலிருந்து வரவேண்டும் என்பது நிர்ணயிக்கப்பட்ட விதி ஆகையால் எங்கள் தானைத் தலைவி கரிகாலி சோழத்து வீராங்கனை தமிழீழ தேசியத் தலைவி ஏகத் தலைவி ஜன ஜநநாயகத்துக்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள். இதுவே வன்னியா இருந்தா கேக்கிற விதமே வேறை. முல்லைத்தீவில பார்திருப்பீங்கள் எங்கட அண்ணைக்கு வன்னி மக்கள் மண்மூட்டையா நின்றவை. எங்கட விரோதிகள் சொல்லினம் நாங்கள் பலவந்தமா வைச்சிருந்தது என்று. அதில ஒரு துளியும் உண்மையில்லை. வன்னி மாக்கள் அடங்காப்பற்றுடையவர்கள். அவர்களை ஒரு கட்டு வைக்கோலோடு மேய்க்கலாம். தெரியும் தானே கடைசியா அந்தச் சனத்துக்கு தவிடு கரைச்சுக் குடுத்த நாங்கள். இது லண்டனா இருக்கிறபடியா உங்களை எல்லாம் கெஞ்சிக் கேட்கிறேன் தயவு செய்து எங்கள் தலைவிக்கு வாக்களியுங்கள்.

ஜரோப்பிய பாராளுமன்றத்தில் ஒரு விதி இருக்கிறது. இது நிறையப் பேருக்குத் தெரியாது. தனித்த வேட்பாளர் அதுவும் லண்டனில் நின்று ஜெயிக்கும் ஒரு வேட்பாளர் எழுந்து எங்களுக்கு தமிழ் ஈழம் வேணும் என்று பேசிவிட்டால் அதுவும் தீபம் ஜிரிவி போன்ற தெல்லைக் காட்சிகளில் அம்ணி பேசும் தங்கிலிஸ் தமிழில் பேசிவிட்டால் உடனே ஒரு பையினுள் போட்டு கையோடு தமிழீழத்தைக் கொடுத்து விட வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. சிம்பாப்வே நைஜீரியா பிறகு லண்டன் அதுவும் டபுள் எம்மே படிச்ச ஒரு தலைவி கேட்கும் போது ஜரோப்பியப் பாராளுமன்றமே அதிரப் போகின்றது என்பதை நான் உங்கள் முன் செல்லிக் கொள்வதில் அடங்காத் தமிழன் என்ற முறையில் மார்தட்ச் சொல்லுவேன்.

தயவு செய்து ரத்தத்தில் பொட்டு வைக்க வருபவர்கள் வரிசையாக வந்து தலைவிக்கும் எனக்கும் வைக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மங்கையக்காவுக்குப் பிறகு ரத்தப் பொட்டு வைக்கிற வீர விளையாட்டுகள் அமந்து போச்சுது. இப்ப எங்கட தானைத் தலைவி வெளிக்கிட்டு இருக்கிறா அவவுக்கு உங்கட வீர விளையாட்டை நீங்கள் காட்டலாம். ஒரு சிறிய வேண்டுகோள். தலைவிக்கு பொட்டுவைப்பவர்கள் குறைந்த பட்சம் சவுத்பாங்க் பல்கலைக் கழகத்திலாவது குவாலிவிக்கேசன் எடுத்திருக்க வேண்டும். அம்மணி இம்பீரியல் எம்மே.

வணங்கா மண் புகழ் டாக்குத்தர் தமிழ் போறம் தலைவர் ஒரு பேப்பர் புகழ் அண்ணன் கோபி என்று எனக்குப் பின் நிறையப் பேர் உங்களுக்கு தமிழீழம் எப்படி எடுப்பது அதற்ககு நீங்கள் எப்படிக் காசு கொடுப்பது. பிறகு நாம் அதை எப்படிப் பிரிப்பது என்து பற்றியெல்லாம் விபரமாகப் பேச இருப்பதால் என் பேச்சை நான் சுருக்கிக் கொள்ளக் கடமைப் பட்டுள்ளேன்.

அதில குறிப்பா வணங்கா மண் டாக்குத்தர் மூத்தி அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். வன்னிப் பேரவலத்தை வைச்சு சேர்த்த காசு வாய்கால் வழியோடி மெற்றோவில விளம்பரம் நோட்டிசுகள் போஸ்ரருகள் என்று நிறையச் செலவாச்சு. இதெல்லாம் எதுக்கு வன்னி மக்களுக்காகத் தானே செய்கிறோம். அவர்களுக்கு தமிழீழம் வாங்கிக் கொடுக்காமல் எங்கள் தலைவி ஜனா ஓயமாட்டார் என்பதை உங்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழீழம் தொடர்பாக பேசும் போது அப்பனை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது என்று பேட்டி கொடுத்து பின்னர் தமிழீழ உணர்வை ஊட்டி ஊட்டி வளர்த்தார் என் அப்பா என்று கதையளந்த மாபெரும் தத்துவப் பாடகி தற்போது பிச் கிச் என்று எதுகைமோனையுடன் தவைலிக்காக பாடி தனது தலைவிக்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்திருக்கும் மாயா செல்லத்துக்கு இந்தக் கூட்டத்திலே என் இதயத்தைத் தொட்டு நன்றி கூறிக் கொள்கிறேன்.

அன்பார்ந்த தமிழீழ மக்களே! ஜனனிக்கு போடுங்கோ. புலம் பெயர் சூழலில் இருக்கும் லண்டன் வாழ் தமிழ் மக்களே தயவு செய்து எங்கள் தலைவி ஜன ஜநநாயயகத்திற்கு போடுங்கோ. வணங்கா மண்ணிலை சுருட்டினது போதாது. கண்ணிர்த் துளிகளில் சேர்ந்தது போதாது. இன்னும் வேணும். அதுக்ககாகவே தேசியத் தலைவர் செத்த செய்தியைக் கூட இன்னும் மறைத்துக் கொண்டு உங்களிடம் வந்திருக்கிறோம். தமிழீழம் வாங்கித் தருவா எங்கடை அக்கா. தயவு செய்து குவாலிவிக்டீகசன் உள்ளவை 10 மணிக்கு முதலும் மற்றவை எல்லாம் 10 மணிக்கு பிறகும் அக்காவுக்கு நேரே பார்த்துப் போடுங்கோ. தமிழீழம் மலரும், ஒரு கேள்வி ஜரோப்பியப் பாராளுமன்றத்தில் கேட்டா போதும். மறு நாளே தமிழீழம் மலரும். மறக்காம நாளைக்கு அக்காவின்யைப் பாத்துப் போடுங்கோ.

மம்மி ஜெய தமிழீழம் வாங்கித் தாறம் என்று வெளிக்கிட இந்தியாக் காரங்கள் எங்கள் முதுகில் குத்திப் போட்டாங்கள். மம்மியை மண் கவ்வ வைச்சிட்டான்கள். மம்மி வருவா ஆசை முத்தம் தருவா என்று பார்திருந்த அண்ணனுக்கு விதி சதி செய்துவிட்டது. மம்மி ஜெயா போனால் என்ன அக்கா ஜனா இருக்கின்றா என்பதை மறந்துவிட வேண்டாம்.

இந்த அரசுகளை நம்ப முடியாது இந்த மாக்களையும் நம்ப முடியாது. போன வருசம் ஐரோப்பியப் பாராளுமன்றத்திற்கு லண்டனிலை ஒன்பது பேரைத் தெரிவு செய்தவை. ஆனா இந்த வருசம் 8 ஆக குறைச்சுப் போட்டான்கள். 9வது ஆக ஒரு தமிழன் ஏகபிரதிநிதியாக வந்துவிடக் கூடாது என்று திட்டம் போட்டுச் செய்த சதி இது. இதுக்கு எதிராக நாங்கள் கிளர்ந்து எழ வேண்டும். ஒன்றை மறக்கக் கூடாது வோட்டு போடுற ஆக்களில் 8 வீதம் பேராவது வாக்களித்தால் தான் 8வது இடத்திற்கு வந்து கடைசிக் கதிரையையாவது பிடிக்கலாம். ஆனபடியா அக்காவை வடிவாப் பாத்து அக்காவுக்கு நேர உங்கள் புள்ளடியைப் போடுங்கள். குறைஞ்சது போடுற வோட்டில 2 வீதம் அதாவது 40,000 க்கும் கூடுதலாக அக்காவுக்கு புள்ளடி விழுந்தால் தான் கட்டுக்காசு 5000 பவுண் என்றாலும் கிடைக்கும். வன்னி மக்களுக்காகச் சேர்த்த காசு தயவு செய்து அதை நாசமாகப் போகவிடாதீர்கள். இன்று (யூன் 4) போடுங்கள் வோட்டு அக்காவைப் பாத்து. அக்காவா கொக்கா!!!

நன்றி வணக்கம்.

வன்னி மக்களின் இன்றைய எதிர்காலத் தேவைகளும் அதை நோக்கிய செயற்பாடுகளும். மே 17 சந்திப்பு : த ஜெயபாலன்

Part_Of_the_Audienceமனித அவலத்தில் இருந்து மீண்ட வன்னி மக்களை நோக்கி – சந்திப்பு இன் போது தீர்மானிக்கப்பட்டபடி அவலத்திற்கு உள்ளான வன்னி மக்களின் நலன்கள் தொடர்பான செயற்குழுவொன்றை அமைப்பதற்கான சந்திப்பு மே 17 அன்று லெய்டன் ஸ்ரோன் குவார்கஸ் ஹவுஸில் இடம்பெறவுள்ளது. மாலை 4:30 மணி முதல் 7:30 வரை இடம்பெறும் இச்சந்திப்பில் செயற்குழுவொன்று உருவாக்கப்படுவதுடன் அதற்கான பெயரும் விவாதிக்கப்பட்டு தீர்மானிக்கப்படும். மேலும் குறுகிய கால நீண்டகால வேலைத் திட்டங்கள் பற்றிக் கலந்தரையாடப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

குறிப்பாக என்ஜிஓ மற்றும் அரச முகவர் ஸ்தாபனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவலத்திற்கு உள்ளான மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான திட்டங்களில் அந்த ஸ்தாபனங்களை ஈடுபடச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது. மேலும் இதற்கு சமாந்தரமான மற்றுமொரு பிரிவு மக்களை அவர்களுடைய கிராமங்களில் மீளக்குடியமர்த்தவும் அரசின் நலன்புரி முகாம்களை குறுகிய காலத்திற்குள் முடிவுக்கு கொண்டுவரவுமான அழுத்தக் குழுவாகச் செயற்படுவது. இவை பற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டு குறுகியகால வேலைத்திட்டம் ஒன்றை உடனடியாக ஆரம்பிக்கவும் மே 17 சந்திப்பில் தீர்மானிக்கப்பட உள்ளது. இவ்வாறான விடயங்களில் ஆக்கபூர்வமான வகையில் பங்களிக்க விரும்புபவர்கள் இச்சந்திப்பில் கலந்துகொள்வதையும் தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதையும் தேசம்நெற் வரவேற்கின்றது.

Little Aid – லிற்றில் எய்ட்

மேலும் Little Aid – லிற்றில் எய்ட் என்ற உதவி அமைப்பு தேசம்நெற் நண்பர்களால் உருவாக்கப்பட்டு உள்ளது. ஈழத்தமிழ் மக்களின் வரலாறு காணாத இந்த அவலத்தில் சிக்குண்ட மக்களுக்கு முடிந்த அளவிலான சிறிய உதவிகளைச் செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இவ்வமைப்பு பிரித்தானியாவின் பொதுஸ்தாபன ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்டும் உள்ளது. இவ்வுதவி அமைப்பிற்கான வங்கிக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டதும் அவ்விபரங்கள் தேசம்நெற்றில் வெளியிடப்படும்.

மனித அவலத்தில் இருந்து மீண்ட வன்னி மக்களை நோக்கி – சந்திப்பு

‘மனித அவலத்தில் இருந்து மீண்ட வன்னி மக்களை நோக்கி’ என்ற தலைப்பிலான சந்திப்பு மே 2ல் லண்டன் புறநகர்ப் பகுதியான சறேயில் இடம்பெற்றது. தேசம்நெற் ஏற்பாடு செய்திருந்த இச்சந்திப்பில் வன்னி மக்களை நோக்கி தங்கள் ஆதரவுக் கரங்களை நீட்டிய பலரும் கலந்துகொண்டனர். கலந்துகொண்டவர்கள் பலரும் பல்வேறு கருத்து முரண்பாடுகளைக் கொண்டிருந்த போதும் மக்களுக்கான அவசர உதவிகளைச் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தனர். இலங்கை அரசாங்கம் இடம்பெயர்ந்த மக்களை பாதுகாத்து ஆதரவளிக்க வேண்டிய பொறுப்பில் இருந்து தவறி இருப்பதாகத் தெரிவித்த நியூஹாம் துணை மேயர் போல் சத்தியநேசன் இலங்கை அரசாங்கம் தனது பொறுப்பைச் சரிவரச் செய்வதற்கு அழுத்தங்கள் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். இக்கருத்தை சந்திப்பில் கலந்துகொண்ட பலரும் வலியுறுத்தினர்.

இச்சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் நேரடியான உதவிகளை முடிந்த அளவு செய்வதுடன் முக்கியமாக என்ஜிஓ க்களுடன் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்த அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இடம்பெயர்ந்து வந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களின் நிர்வாகம் அரசாங்க அதிபரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் எவ்வாறான நிவாரணப் பணிகளும் அரசாங்க அதிபரின் அனுமதி பெற்று மேற்கொள்ளப்படுவது தவிர்க்க முடியாதது என்பதும் அங்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வன்னி மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வெளியே வருகையில் இலங்கை அரசு அவர்களை விடுவிப்பதாகக் கூறிக்கொண்டு கம்பி வேலிக்குள் அடைத்து வைப்பதாக ஆர் புதியவன், சந்திப்பினை ஆரம்பித்து வைத்துப் பேசுகையில் குறிப்பிட்டார். தங்கள் வளர்ப்பு விலங்குகளைக் கூட கம்பி வேலிக்குள் அடைக்காத மக்களை அரசு கம்பி வேலி அடைத்து வைத்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தாங்கள் பின்வாங்கிச் சென்ற இடங்களில் எல்லாம் மக்களை விட்டுவிட்டுச் செல்லாமல் ஆடு மாடுகள் போல் அவர்களையும் சாய்த்துக் கொண்டு சென்று இன்று தங்கள் தலைமையைப் பாதுகாக்க பணயம் வைத்துள்ளதாகக் குற்றம்சாட்டிய ஆர் புதியவன் அவர்களுக்கு புதுமாத்தளன் தான் பூர்வீக மண் என்று கதையளப்பதாகத் தெரிவித்தார். அடங்கா மண் வணங்கா மண் என்று புலத்தில் சேர்த்தெல்லாம் எங்கே? என்று கேள்வி எழுப்பிய ஆர் புதியவன் அரசாங்கத்தின் நலன்புரி முகாம்களில் செல்விழமாட்டாது என்ற ஒரே உத்தரவாதம் மட்டுமே இருப்பதாகத் தெரிவித்தார். கம்பி வேலிக்குள் மாளிகையைக் கட்டி குடியேற்றினாலுமே அது ஒடுக்குமுறையின் குறியீடே என்று தெரிவித்த ஆர் புதியவன் அரசாங்கத்தின் வன்னி நலன்புரி முகாம்கள் படுமோசமான நிலையிலேயே உள்ளதாகத் தெரிவித்தார்.

Paul_Sathyanesanஆர் புதியவனைத் தொடர்ந்து நியூஹாம் துணைமேயர் போல் சத்தியநேசன் உரையாற்றும் போது ‘இந்த மக்களுடைய அவலம் இரு தரப்பினராலும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் மக்களுக்கு பாதுகாப்பையும் அடிப்படைத் தேவைகளையும் வழங்க வேண்டிய அரசாங்கம் தனது கடமையில் இருந்து தவறியுள்ளது. இந்த மக்களை கௌரவமாகப் பராமரித்து அவர்களை மிக விரைவில் மீளக் குடியமர்த்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது அதனை இலங்கை அரசு தட்டிக்கழிக்க முடியாது’ என்று குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ‘மிகப்பெரிய அவலம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கையில் புலம்பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு ஒரு உணர்வு ரீதியான பொறுப்பும் கடமையும் உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்ததை உடனடியாகச் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும். ஆனால் அவர்களது உதவி ஒரு சிறிய அளவினதாகவே இருக்கும்’ என்று தெரிவித்தார். அதனால் ‘என்ஜிஓ க்களை அரச நிறுவனங்களைச் சந்தித்து அவர்களை பாதிக்கப்பட்ட மக்களை நோக்கிய செயற்திட்டங்களை இயக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். சுனாமி காலகட்டத்தின் போதும் தேசம் சஞ்சிகை இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

துணைமேயருடைய உரையை அடுத்து நிகழ்வில் கலங்துகொண்டவர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டனர்.

அண்மையில் இலங்கை சென்று வன்னி முகாம்களைப் பார்வையிட்டுத் திரும்பிய எஸ் சூரியசேகரம் கருத்துத் தெரிவிக்கையில் தாங்கள் சென்று பார்வையிட்ட முகாம்கள் குறிப்பிடத்தக்க அளவு வசதிகளுடனேயே இருந்ததாகவும் ஆனால் அண்மையில் மேலும் ஒரு லட்சம் மக்கள் அதிகரித்து இருப்பதால் நிலைமையில் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்தார். அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் மிகவும் அணுகக் கூடியவர் என்று தெரிவித்த சூரியசேகரம் நிவாரணப் பணிகள் அவர்களுக்கூடாக செய்யப்படுவது தவிர்க்க முடியாதது எனத் தெரிவித்தார். இதே கருத்தை வெளிப்படுத்திய இலங்கைக்கு விஜயம் செய்த குழுவிலும் இடம்பெற்றிருந்த ரி கொன்ஸ்ரன்ரைன் புலத்தில் உள்ளவர்கள் அங்குள்ள மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். அம்மக்கள் மிக மோசமான வாழ்நிலையை எதிர்நோக்கி இருப்பதாகத் தெரிவித்த கொன்ஸ்ரன்ரைன் புலம்பெயர்ந்த சமூகம் அவர்களது வாழ்நிலையை மேம்படுத்த இயலுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

‘இலங்கை அரசாங்கம் ஒரு இனவாத அரசாங்கம். அது இனப்படுகொலை புரிகிறது. இங்குள்ள நீங்கள் அதனைச் சொல்லத் தயாராக இல்லை.’ என்று குற்றம்சாட்டிய சபா நாவலன் ‘அங்கு நீங்கள் எதுவும் செய்ய முடியாது. இனவாத அரசு உங்களை அதற்கு அனுமதிக்காது. அப்படி எதாவது செய்வதாக இருந்தாலும் அதனை கைக்கூலிகளாக இருந்தே செய்ய முடியும்’ எனத் தெரிவித்தார். சபா நாவலன் தொடர்ந்தும் பேசுகையில், ‘ஏசியன் டெவலொப்மன்ற் பாங்க் போன்ற பல்வேறு என்ஜிஓ க்கள் மூட்டைமூட்டையாக பணத்தைக் கொண்டு அலைகிறார்கள். ஆனால் இனவாத அரசாங்கம் அவர்கள் யாரையும் அந்த முகாம்களுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை’ எனத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் ‘இனவாத அரசாங்கம் மக்களை அடைத்து வைக்கிறது. அவர்களுக்கு இப்ப புத்தகம் கொடுக்கிறம் என்றதெல்லாம் எப்படிப் போகும் எப்படிப் பயனளிக்கும்’ என்றும் சந்தேகம் எழுப்பினார்.

David_Jeyam‘இன்று ஏற்பட்டுள்ள நிலைமை அரசியல் சார்ந்ததாக இருந்தாலும் நாங்கள் இங்கு அரசியல் விவாதம் ஒன்றை நடத்த விரவில்லை. அவலத்திற்கு உள்ளான மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றியே பேச வந்துள்ளோம்.’ என்று தனது கருத்தை வெளியிட்டார் டேவிட் ஜெயம். இவர் வன்னி நிவாரணப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய கருத்தைப் பலரும் பிரதிபலித்தனர்.

அதே கருத்தை வெளியிட்ட எஸ் முருகையா முடிந்த அளவில் சிறிய அளவில் செய்யப்படும் உடனடி உதவிகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடைய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார். தேசம்நெற் மேற்கொண்டுள்ள நூல் அன்பளிப்பு போன்றவை மிகுந்த பலனளிக்கும் என்று குறிப்பிட்ட முருகையா சூரியசேகரம் அவர்களிடம் முகாமில் இருந்த மாணவர்கள் புத்தகம் தரும்படி கேட்டதை அங்கு சுட்டிக்காட்டினார்.

‘போருக்கு உதவி புரிந்த புலத்து தமிழர்கள் வன்னி மக்கள் உதவியைக் கேட்கும் போது செய்யத் தயாரில்லாதவர்களாக உள்ளனர்’ எனக் குற்றம்சாட்டினார் ரி சோதிலிங்கம். ‘இன்று புலத்துதமிழர்கள் யுத்த முனையில் இருந்து உயிர்காக்க ஓடி வந்த மக்களை துரோகிகளாகப் பார்க்கின்றனர். இந்த மக்கள் பற்றிப் பேசுவது அவர்களுக்கான உதவிகளை மேற்கொள்ளாமல் எதிர்காலத்தில் தமிழ் மக்களுடைய அரசியல் பற்றிக் கதைப்பது அர்த்தமற்றது’ என்றும் குறிப்பிட்ட சோதிலிங்கம் ‘ஒரு செயற்குழு உருவாக்கப்பட்டு நடவடிக்கைகள் துரிதமாக்கப்பட வேண்டும்’ என்றும் கூறினார்.

இதே கருத்தை ஆதரித்த ஈசன் அரசாங்க அதிபருக்கு ஊடாகவோ எவ்வகையிலோ உதவிப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறூத்திய அவர் இலங்கை அரசாங்கம் முகாம்களை சர்வதேச தரத்தில் வைத்திருக்கவில்லை என்றும் முகாம்களில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாயும் குற்றம்சாட்டினார். உடனடி உதவிகள் உடனடியாகவே செய்யப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

‘நீங்கள் உதவிகளைப் பெற்று நிவாரணப் பணிகளை மேற்கொள்கிறீரகள். ஆனால் ஏற்கனவே சேர்க்கப்பட்ட பொருட்கள் வணங்கா மண் கப்பலில் உள்ளது. நீங்கள் ஏன் அந்தக் கப்பலை இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய முயற்சி எடுக்கக் கூடாது?’ எனக் கேள்வி எழுப்பினார் எஸ் ஆர் நிஸ்தார் மொகமட். ‘வணங்கா மண் ஏற்பாட்டாளர்களுடன் கதைத்து இலங்கை அரசாங்கத்துடனும் கதைத்து அந்தக் கப்பலில் உள்ள பொருட்களை இலங்கைக்கு அனுப்ப முயற்சிக்க வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தினார்.

ஸ்ரீலங்கா இஸ்லாமிக் போறத்தைச் சார்ந்த மஹ்சூர் தனது கருத்தை வெளியிடுகையில் இஸ்லாமிக் போறம் மேற்கொண்டுள்ள நிவாரண நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிட்டதுடன் ‘பல்வேறு பிரிவுகளாக அல்லாமல் இணைந்து பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றாகச் செயற்பட முன்வர வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். தவறான நோக்கங்களுக்காக இருந்தாலும் எல்ரிரிஈ இன்று ஒற்றுமைப்பட்டு அவர்களுடைய போராட்டத்தை உயிரோட்டமாக வைத்துள்ளது’ என்று குறிப்பிட்ட அவர் ‘ஒன்றிணைந்து செயற்பட நாமும் முன்வர வேண்டும்’ என வலியுறுத்தினார்.

‘வன்னி மக்களுடைய இந்த அவலத்திற்கு இலங்கை அரசும் புலிகளும் சமபொறுப்புடையவர்கள்’ என்று தன் கருத்தை வெளியிட்ட த ஜெயபாலன் ‘இலங்கை அரசு இனவாத அரசு என்பதும் அது இவ்வாறுதான் நடந்த கொள்ளும் என்பதும் 60 ஆண்டுகளாக தமிழ் மக்கள் கண்ட அனுபவம். அது பற்றி தமிழ் மக்களுக்கு வகுப்பெடுக்க வேண்டிய அவசியமில்லை. இன்றைய அவல நிலைக்கு இரு தரப்பினருமே பொறுப்பு’ என்று ஜெயபாலன் குற்றம்சாட்டினார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் ஒரு பொட்டலத்திற்காக எத்தினை கைகள் போட்டி போடுகின்ற நிலையை நாம் உருவாக்கி விட்டுள்ளோம். அந்தக் கைகளில் ஒன்று எம் குழந்தைகளாக இருந்தால் நாம் தாங்குவோமா?’ என்று கேள்வி எழுப்பிய அவர் போராட்டம் தத்துவம் பற்றி நாம் இங்கிருந்து நாட்கணக்கில் கதையளக்கலாம் ஆனால் அந்த மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை நாம் உறுதிப்படுத்த வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். ‘நாம் நமது பிள்ளைகளுக்கு தனியார் கல்வி, கிரம்மர் ஸ்கூல் என்றெல்லாம் நேரமில்லாமல் ஓடித் திரிகிறோம். ஆனால் அந்த முகாமில் உள்ள மாணவர்களுக்கு அடிப்படைக் கல்விக்கு எம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்பதற்காக தேசம்நெற்றும் சிந்தனை வட்டமும் இணைந்து புலமைப்பரிசில் நூல்களை முகாம்களில் உள்ள மாணவர்களுக்கு வழங்கி வருகிறோம். இது எமக்கு ஏற்பட்டுள்ள குற்ற உணர்வினைக் களையவும் ஒரு வடிகாலாகிறது எனத் தெரிவித்தார் ஜெயபாலன். அவர் மேலும் குறிப்பிடுகையில் ‘அம்மக்களுடைய தேவைகள் மிக அதிகம் அதனை ஒரு தனி அமைப்பாகவோ ஒரு சிலராலோ செய்துவிட முடியாது. அதனால் இயலுமானவர்கள் அனைவரும் தங்களால் முடிந்தவரை தாங்கள் அறிந்த வழிகளில் உதவிகளை மேற்கொள்ள வேண்டும். ஒற்றுமையாக ஒரே கொடியின் கீழ் என்பதெல்லாம் யதார்த்தமற்றது’ என்றும் தெரிவித்தார். ‘முதலில் வன்னி மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும். அவர்கள் பலப்படுத்தப்பட வேண்டும்.’ என்று கூறி தனது கருத்தை நிறைவு செய்தார் ஜெயபாலன்.

Varathakumar_TICஇறுதியாகக் கருத்து வெளியிட்ட தமிழர் தகவல் நடுவத் தலைவர் வரதகுமார், ‘இன்று ஏற்பட்டுள்ள அவலநிலை அரசினாலேயே கையாள இயலாதநிலையில் உள்ளது. தற்போது பெரும்பாலான என்ஜிஓ க்கள் வவுனியா முகாம்களுக்குள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அங்குள்ள நிலைமைகளை மதிப்பீடு செய்கின்றனர்’ எனத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ‘இன்றைய இவ்வாறான சந்திப்பு மிகவும் அவசியமானது என்றும் புலம்பெயர்ந்தவர்கள் உடனடி உதவிகளை மேற்கொள்ள ஊக்குவிக்கப்பட வேண்டும்’ என்றும் தெரிவித்தார். தேசம்நெற் ஊடகம் என்ற வகையில் இம்மக்கள் தொடர்பாக முக்கிய பொறுப்பைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்த வரதகுமார் ‘அங்குள்ள மனித உரிமை விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். ‘அந்த மக்கள் கைவிடப்பட்ட மக்கள். அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டக் கூடியவர்கள் புலம்பெயர்ந்த மக்களே’ என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சந்திப்பின் இறுதியில் அவலத்திற்கு உள்ளான வன்னி மக்களின் நலன்கள் தொடர்பான குழுவொன்றை அமைப்பது என்றும் அதற்கான சந்திப்பினை அடுத்த இரு வாரங்களிற்குள் தேசம்நெற் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மனித அவலத்தில் இருந்து மீண்ட வன்னி மக்களை நோக்கி – சந்திப்பு

Wanni_Warமிகக் கொடிய மனித அவலத்தில் இருந்து மீண்டு தொடர்ந்தும் துயர்மிகு வாழ்வை எதிர்நோக்கியுள்ள வன்னி மக்களுக்கு முடிந்த அளவு உதவிகளை மேற்கொள்வதற்கான சந்திப்பு ஒன்றினை தேசம்நெற்றும் ஈழ நண்பர்கள் திரைக்கலை அமைப்பும் ஏற்பாடு செய்துள்ளனர். இச்சந்திப்பில் முக்கிய அம்சமாக வன்னியில் ஏற்பட்ட மனித அவலத்தில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான உதவித் திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட உள்ளது. ஏற்கனவே ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியமும் தேசம்நெற்றும் தனித்தனியாக முன்னெடுக்க முற்பட்ட உதவி நடவடிக்கைகளை இணைந்து மேற்கொள்ளவும் எவ்வாறு உதவி நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும் கலந்துரையாடப்பட உள்ளது.

கடந்த ஆண்டு முதல் ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியமும் தேசம்நெற்றும் இணைந்து நடாத்தும் குறும்படக் காட்சிப்படுத்தலின் 5வது காட்சிப்படுத்தலைத் தொடர்ந்து இச்சந்திப்பு சறேயில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கலந்துரையாடலில் முக்கியமாக உடனடி மற்றும் நீண்டகால உதவி நடவடிக்கைகள், உதவ முன்வருபவர்களை நேரடியாக உதவித் திட்டங்களில் இணைப்பது, அனைத்து உதவி நடவடிக்கைகளிலும் வெளிப்படையான தன்மையைக் கொண்டிருப்பது இதன் மூலம் நம்பகத் தன்மையை ஏற்படுத்துவது என்பன பற்றியும் ஆராயப்பட உள்ளது. குறிப்பாக அப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் இச்சந்திப்பில் கலந்துகொள்வதால் காத்திரமான உதவித் திட்டங்களை செயற்படுத்த முடியும்.

மே 2 குறும்படக் காட்சி நிகழ்வில் சந்திரியின் கதை மெமறிஸ் ஒப் பாஸ்ற் ஆகிய இரு குறும்படங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. ஜானகி விஸ்வநாதனின் சந்திரியின் கதை சாதிய ரீதியான சமூக ஒடுக்குமுறையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட குறும்படம். மெமறிஸ் ஒப் பாஸ்ற் தேம்ஸ்வலி பல்கழைக்கழக மாணவர்களின் தயாரிப்பு. இவற்றுடன் ஏற்கனவே காட்சிப்படுத்தப்பட்ட துறூத வின்டோ – யன்னலினூடாக என்ற ஆர் புதியவனின் குறும்படமும் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

சந்திப்பு விபரங்கள்:

6.30 pm on 2nd of May 2009.

The Corner house
116 Douglas Road
Surbiton

யுத்தம் ஏற்படுத்திய இனவாதம் புலத்திலும் எதிரொலிக்கிறது!

Protest_Michiganவட அமெரிக்காவின் மிசிகன்  மாநிலத்தின் தலைநகர் லான்சிங்கில், அமெரிக்க வாழ் சிங்கள மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட அரசுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நூற்றுக்கனக்கான தமிழ் மக்கள் ஒன்று கூடிய கண்டன ஆர்ப்பாட்டம் அதே இடத்தில் இடம்பெற்றது

அமெரிக்க செனட்சபையின் மிச்சிகன் மாநில உறுப்பினர்களும், சிறிலங்கா அரசின் முயற்சிகளுக்கு ஆதரவு அளித்து வருவதாக, நன்றி தெரிவிக்கப்படும் வகையில் சிங்கள மக்களால் லான்சிங்கின் தலைமை அலுவலக முன்றலில் வெற்றிவிழா ஒன்று ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது.

சிங்கள மக்கள் அதிகமாக வாழும் இம்மாநிலத்தில் ஒரு சில தமிழ்க் குடும்பங்களே இருக்கின்ற போதும் சிகாகோ, டொறொன்றோ மாநிலங்களில் இருந்து பல மணித்தியாலங்கள் பயணம் மேற்கொண்டு மிசிகன் மாநிலத்துக்கு வந்த தமிழ் மக்கள் காலை 8 மணி முதல் ஒன்று கூடி, லான்சிங் தலைமை அலுவலக கட்டிடத்தின் முன் குவிந்து சிறிலங்கா அரசின் இனப்படுகொலைகளை கண்டித்து தமது ஆர்ப்பாட்டத்தினை நடாத்தி தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

Protest_Michigan‘Sinhala Terror Government,’
‘Rajapakse a war criminal,’
‘President Obama, help the Tamils,’
‘UN, save the Tamils,’
‘LTTE, our freedom fighters,’
‘Prabhakaran, our national Leader,’
‘Media break the silence’

ஆகியவாறு சிறிலங்கா அரச பயங்கரவாதத்திற்கு எதிரான தமது கோபத்தினை வெளிப்படுத்தும் முகமாக உரக்க கோஷங்களை எழுப்பியபடி இவ் ஆர்ப்பாட்டத்தினை தமிழ் மக்கள் நடத்தினர்.

இதே போன்றதொரு முரண்பாடு அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டு வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றது. உலகில் ஏனைய பாகங்களில் போன்று யுத்தமும் அது உந்திவிட்டுள்ள தேசியவாத அலை தற்போது இனவாதமாகப் பரவுகிறது. இதனை தற்போது புலம்பெயர்ந்த நாடுகளிலும் உணரக் கூடியதாக உள்ளது. லண்டனில் விகாரைக்கு வைக்கப்பட்ட தீ தமிழ் அரச ஆதரவு (பெரும்பாலும் சிங்கள மக்களின்) ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் புலி ஆதரவு (பெரும்பாலும் தமிழ் மக்களின்) ஆர்ப்பாட்டக் காரர்களுக்குமிடையேயான மோதல்கள் இதனையே வெளிப்படுத்துகின்றன.

வன்னியில் மனித அவலத்தில் இருந்து மீண்டுள்ள மக்களை நோக்கி இனவேறுபாடற்ற உதவிகளை அனைத்து மக்களும் முன்னெடுக்க புலம்பெயர்ந்த நாடுகளில் அந்த மக்களின் பெயரால் தேசியவாதமும் இனவாதமும் தலைக்கேறி மோதல்கள் தலைதுக்குகின்றன.

ஒரு பக்கத்தில் மனிதம் அழிந்து கொண்டிருக்க அதனைத் தடுப்பதற்கான முயற்சிகளைக் கைவிட்டு வெற்றி – தோல்விக்காக பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உணர்ச்சிவசப்படுகிறார்கள். ஆனால் அந்தத் தளத்தில் உள்ள மக்கள் யதார்த்தத்தைப் புரிந்த கொண்டு எதனைச் செய்ய வேண்டுமோ அதனை முன்னெடுக்கிறார்கள்.

லண்டன் தமிழ் இளையோரின் தமிழ்தேசிய எழுச்சி : மயூரன் (லண்டன்)

Protest_Londonவன்னியில் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் மிகப்பெரும் மனித அவலத்தினால் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கைத் தாண்டி தற்போது ஆயிரம் என்ற நிலைக்கு வந்துள்ளது. இதனால் புலம் பெயர்ந்து வாழும் மக்களில் பெரும்பாலானோர் தமது உறவுகளை இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றனர். இது இவர்கள் மனதில் ஒரு ஆறாத வடுவை ஏற்படுத்தி அவர்களுக்குள் இருக்கும் தமிழ்த் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பி விட்டிருக்கிறது. இந்தத் தமிழ்த் தேசியத்தின் எழுச்சி உலகின் தலைநகரங்கள் எங்கும் ஈழத்தமிழர்கள் நகர வீதிகளில் இறங்கி போக்குவரத்துக்களை ஸ்தம்பிதம் அடையச் செய்து உலக நாடுகளின் பார்வையை இலங்கையின் பக்கம் திரும்பச் செய்ததோடல்லாமல் இலங்கை அரசாங்கத்தை புலம்பெயர் தமிழர்களுடன் குறிப்பாக மாணவர்களுடன் சர்வதேச அரசியற் களத்தில் போராடும் நிலைக்கும் இட்டுச்சென்றிருக்கின்றது.

அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி முதன் முதலாக பிரான்ஸ் வாழ் எம்முறவுகளால் பாரீஸின் மையப்பகுதியில் ஒரு சாலைமறியல்ப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. இது ஒரு சில மணிநேரங்கள் மட்டுமே இடம்பெற்றாலும் இதுவே புலம்பெயர் நாடுகளில் நடக்கும் வீதி மறிப்புப் போராட்டங்களுக்கு அத்திவாரம் இட்டது எனலாம். அதனைத் தொடர்ந்து லண்டன், நோர்வே என இச் சாலைமறியல்ப் போராட்டங்கள் விரிவடைந்தன.

கடந்த ஜனவரி 15ஆம் திகதியிலிருந்து இலங்கையின் சுதந்திர தினமான நான்காம் திகதி வரை சுழற்ச்சி முறையிலான உண்ணாவிரதத்தினை பாராளுமன்றத்தின் முன்னுள்ள சதுக்கத்தில் பிரித்தானிய தமிழ் இளையோர்கள் மேற்கொண்டிருந்தனர். இதில் பலர் தமது ஆதரவினைத் தெரிவித்ததோடு அவ் உண்ணாவிரதத்திலும் கலந்து கொண்டனர். அதன் பின்னர் ஜனவரி மாதம் 31ஆம் திகதி லண்டனில் முதலாவது வரலாhறு காணாத எழுச்சிப் பேரணியையும் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் 125,000 மக்கள் கலந்து கொண்டிருந்தனர் என்பது தெரிந்ததே. 
அந்த எழுச்சிப் பேரணியானது லண்டனின் மத்திய பகுதிகளில் ஒன்றான மில்பாங்க் என்னுமிடத்திலிருந்து ஆரம்பமாகி பாராளுமன்றம் முன்பாகச் சென்று ரெம்பிள் பிளேஸ் என்ற இடத்தில் முடிவடைந்திருந்தது. இதற்கான ஒழுங்கமைப்பினை இயையோர்களாகிய தமிழ் மாணவர்களே முன்னின்று செய்திருந்தனர்.  இந்த எழுச்சிப் பேரணிக்கான அனுமதி மதியம் 1.30 இருந்து மாலை 4 மணிவரையே கிடைத்தது. ஆனால் மக்கள் வெள்ளம் அலை மோதியதனால் மாலை ஐந்து மணியாகியும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் வெஸ்மினிஸ்ரர் பாராளுமன்றத்தைத் தாண்டிச் செல்லவில்லை. இதனால் காவல்த்துறையினர் அவர்களை மேற்கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. ஆகவே அங்கு கலந்து கொண்ட SAGT அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் வீதியை மறித்து வீதிக்குக் குறுக்கே அமர்ந்தனர். இதனால் அங்கு வந்த மக்களும் வீதியில் அமர்ந்தனர். இவ்வாறு விதியை மறித்தவர்களை கலைப்பதற்கு பிரித்தானிய காவல்த்துறையினர் தடியடிப்பிரயோகம் மேற்கொண்டும் அது பலனளிக்கவில்லை. இதன்பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் கீத்வாஸ் அவர்களின் தலையீட்டின் பேரில் மக்களாகவே கலைந்து சென்றனர்.

இதுவே பிரித்தானியாவில் நடந்த முதலாவது வீதி மறியல்ப் போராட்டமாகும். இவ்விதி மறியல் போராட்டத்தை அன்றைய தினம் முன்னின்று நடாத்தியவர்கள் இந்த சாக்ரி (SAGT) அமைப்பினரே. முதலில் இந்த சாக்ரி அமைப்பினர் என்றால் யார் என நோக்கினால். தமிழர் இனப் படுகொலைக்கெதிரான மாணவர் இயக்கம் (Student Against Genocide of Tamil)  என்பதாகும். இதன் சுருக்கமே SAGTஎனப்படுகிறது.  இது கடந்த ஜனவரி மாதம் முதல் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக இன்றுவரை தனது பணிகளை முன்னெடுத்து வருகிறது.
 
மேலும் இலங்கையின் சுதந்திர தினமாகிய பெப்ரவரி நான்காம் திகதி பாராளுமன்றச் சதுக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்வினை பிரித்தானிய இளையோர் அமைப்பு மேற்கொண்டிருந்தது. இதிலும் கிட்டத்தட்ட 12 யிரம் வரையான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதியிலிருந்து 28 திகதி வரை சுழற்ச்சி முறையில் 24 மணிநேர உண்ணாவிரதப் போராட்டமும், இனப்படுகொலைகளைச் சித்தரிக்கின்ற கண்காட்சிகளும், இனப்படுகொலை தொடர்பான புரிந்துணர்வுக் கலந்துரையாடல்களும் இடம் பெற்றன. இதன்மூலம் மாணவர்கள் தமிழ் இனப்படுகொலைகளை பல்கலைக்கழக ரீதியில் கொண்டுசென்றனர். இந்த நிகழ்ச்சி நிரலையும் தமிழர் இனப் படுகொலைக்கெதிரான மாணவர் இயக்கமே SAGT ஒழுங்கு செய்திருந்தது.

பின்னர் வன்னியில் நடக்கின்ற இனப்படுகொலையானது நூற்றுக் கணக்கில் உயர்ந்த போது பொங்கி எழுந்த தமிழ் இளையோர்கள் கடந்த 06ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 03 மணியளவில் பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன்னால் அணிதிரண்டு திடீரென அந்த வீதியை மறித்து வீதிக்குக் குறுக்கே அமர்ந்தனர். இதன்பின்னர் அவ்விடத்தில் கிட்டத்தட்ட 8 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். இதனால் அங்கு காவல்த்துறையினர் மேலதிகமாகக் குவிக்கப்பட்டு அவர்களை அங்கிருந்து அகற்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. இருந்தும் பிரித்தானிய காவல்துறையினரால் அவர்களை ஒரு அடி கூட நகர்த்த முடியவில்லை. இச்செய்தியைக் கேள்விப்பட்ட மக்கள் தமது வேலைகளையும் விட்டுவிட்டு அங்கு சென்று சாலைமறியல்ப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் இணைந்தனர். இதனால் காவல்த்துறையினர் செய்வதறியாது தவித்தனர். இது இவ்வாறு இருக்க மறுநாள் செவ்வாய்கிழமை (07.04.09) அதிகாலையில் மக்கள் தம் காலைக் கடன்களையும் வேறு வேலைகளையும் பார்ப்பதற்காக கலைந்தனர். இதனால் அங்கு 1500 வரையான மக்களே இருந்தனர்.

இச்சந்தர்ப்த்தைப் பயன்படுத்திய காவல்த்துறையினர் காலை எட்டு மணியளவில் அந்த பாராளுமன்ற வீதிக்கு விரைந்த காவல்த்துறையினரும், கலகத் தடுப்புப் பிரிவினரும் அங்கிருந்த மக்களின் மீது தடியடிப்பிரயோகம் செய்தனர். இதன்போது மாணவர்கள் மக்கள் எனப் பலர் கை, கால் முறிவுகளுக்கும் காயங்களுக்கும் உள்ளானார்கள். இருந்தும் மக்கள் அவ்விடத்திலிருந்து கலைந்து செல்லவில்லை. அடிவாங்கியும் நகராது இருந்தனர். காவல்த்துறையினருக்கு வேறுவழி தெரியவில்லை. உடனே அவர்கள் நாங்கள் உங்களுக்கு பாராளுமன்றத்திற்கு முன்னால் உள்ள மைதானத்தை ஒதுக்கித் தருகின்றோம் அதற்குள் இருந்து உங்கள் ஆர்ப்பாட்டத்தினைத் தொடரலாம் என்றனர். இம்முடிவின் பேரில் மாணவர்கள் மக்களை அவ்விடத்திலிருந்து அகலச்செய்து பாராளுமன்றத்திற்கு முன்னாலுள்ள மைதானத்திலிருந்து தங்களது கண்டணத்தை வெளிப்படுத்த ஏற்பாடுசெய்தனர். அது இன்றுவரை தொடர்கின்றது.  இதேபோல்த்தான் நோர்வேயிலும், பிரான்சிலும் இளையோர்கள் சாலைமறியல்ப் போராட்டத்தில் இறங்கினர். இருந்தபோதும் அவர்களை காவல்த்துறையினர் அங்கிருந்து அகற்றிவிட்டனர்.
 
இது இவ்வாறு இருக்கையில் அன்று மாலை (07.04.09) 05 மணியளவில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 21 வயதுடைய சிவகுமாரவேல் சிவதர்சன்;, 28 வயதுடைய சுப்பிரமணியம் பரமேஸ்வரன் ஆகிய இரு இளைஞர்களும் சாகும் வரை நீராகாரமின்றி உண்ணாநிலைப் போராட்டத்தினை மேற்கொண்டனர். இதற்கு ஆதரவாக பல உறவுகள் இரவு பகலாக அங்கிருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பிரித்தானிய தமிழ் மாணவர்களின் பங்கு மிகப்பெரியது. அவர்கள் நான்கு நாட்களாகியும் வீடு செல்லாது அங்கேயே படுத்துறங்கி உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களு ஆதரவு வழங்கியதனை என்னால் காணமுடிந்தது.  இவ்வாறு உண்ணாவிரதம் இருந்தவர்களை பாராளுமன்ற உறுப்பினர் சைமன் கியூஸ் சந்தித்ததனைத் தொடர்ந்து அவர்கள் நீர் மட்டும் அருந்தி தமது உண்ணாநிலைப் போராட்டத்தினை மேற்கொண்டனர். இருந்த போதும் பிரித்தானிய இளையோர் அமைப்பு, உண்ணாவிரதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்களுக்கடையில் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன.
 
இதன் பயனாக பாராளுமன்ற உறுப்பினர் செரோன் மக் டொனால்ட் அவர்களால் கொடுக்கப்பட்ட உறுதி மொழியை அடுத்து சிவகுமாரவேல் சிவதர்சன் என்பவர் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை 10.04.09 கைவிட்டார். அதாவது செரோன் மக்டொனால்ட் அவர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரை பிரித்தானிய அரசு. ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் அமைப்பிற்கும், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபைக்கும் அழைத்து செல்வதாக வாக்குறுதி வழங்கப்பட்டதை அடுத்தே சிவதர்சன் போராட்டத்தைக் கைவிடார்.

ஆனால் சுப்பிரமணியம் பரமேஸ்வரன்  இன்றுவரை போராட்டத்தினைத் தொடர்கின்றார். பரமேஸ்வரன் அவர்களிடம் உண்ணாநிலைப் போராட்டத்தினை இன்றுவரை தொடர்ந்திருப்பதற்கான காரணத்தை வினாவியபோது என்னை இங்கிருந்து அகற்றுவதற்காக நான் எப்போது சுயநினைவை இழப்பேன் எனபிரித்தானிய காவல்த்துறையினர் எதர்பார்த்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் முடிவு கிடைக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். ஆனால் எமது கோரிக்கைகள் நிறைவேறாது எனது உயிர் பிரிந்துதான் இதற்கு ஒரு முடிவு கிடைக்குமாக இருந்தால் அதற்கும் நான் தயாராக இருக்கின்றேன். எமது போராட்டத்திற்கு சர்வதேசம்தான் பதில் கூறவேண்டும். சர்வதேச நாடுகள் போருக்குப் பின்புலமாக நிற்பதை நிறுத்தி தமிழ்மக்களைக் காப்பாற்ற வேண்டும். எமக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உறுதிமொழி வழங்கியுள்ளனர். அவை அமுலாக்கப்பட வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்றார். பிடிவாதமாக இன்றுவரை தியாக தீபம் திலீபன் அண்ணாவின் வழியில் உண்ணாவிரதத்தைத் தொடர்கின்றார்.

பரமேஸ்வரன் முதல் நான்கு நாட்களும் நீராகாரம் கூட அருந்தாது உண்ணாவிரதம் இருந்தார். அதன்பின்னர் பலரின் வேண்டுகோளுக்கிணங்க தண்ணீரைப் பருகுகின்றார். தற்போது இவருக்கு நாடித்துடிப்பும் இரத்த அழுத்தமும் குறைந்துகொண்டுவருகிறது. அதேநேரம் தண்ணீர் போதியளவு அருந்தாததனால் சிறுநீரகம் பாதிப்படைந்து வருகிறது. இந்நிலை தொடர்வதால் இவரது நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. அத்துடன் கடந்த 21ஆம் திகதி பரமேஸ்வரன் மேலும் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். தமது சொந்த நிலங்களை விட்டு அகதிமுகாம்களில்  இலங்கை அரசு மக்களை அடைத்திருப்பதனால் அங்கு அடைபட்டிருக்கும் மாணவர்களின் கல்வி நிலையும், மக்களின் மனோநிலைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சர்வதேச நாடுகள் இதில் தலையிட்டு அந்த மக்களை உடனடியாக தமது சொந்த நிலங்களில் குடியேற்ற ஆவனை செய்ய வேண்டும் என்றார். தமிழர்கள் அல்லாத பிற நாட்டவர்களும் அங்குவந்து கண்ணீர் விட்டு அழுதனர். ஒரு ஸ்பானிஸ் பெண்மணி கண்ணீர் மல்க உயிருக்கு எவ்வளவு மதிப்பிருக்கின்றது. எனவே இவர்களது உயிர்முக்கியம் எனவே உண்ணாவிரதத்தை விட்டு அமைதிவழியில் மேற்கொள்வதே சிறந்தது என்றார்.

அத்துடன் கடந்த 11ஆம் திகதி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட நிகழ்வில் பெரும்பாலான மக்கள் கலந்து கொள்ளச் சென்றவேளை பாராளுமன்றத்திற்கு முன்னால் உள்ள மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த சுப்பிரமணியம் பரமேஸ்வரனுக்கு உதவியாக வெறும் இருபது மாணவர்களே இருந்தனர். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய பிரித்தானிய காவல்த்துறையினர். அந்த மைதானத்தில் உள்ள புற்கள் உங்கள் ஆர்ப்பாட்ட மூலம் அழிக்கப்படுகின்றது எனக் கூறி அவர்களை அங்கிருந்து வெளியேற்றி புற்களைச் சுற்றி இரும்பு வேலிகள் அமைத்தனர். இருந்தும் மக்களை அந்த புற்றரைகளுக்கு அப்பால் இருந்து உண்ணாவிரதத்தையும், ஆர்ப்பாட்டத்தையும் மேற்கொள்ளுமாறும் கூறினர். முன்னர் 400 பேர் மட்டும் இரவு பகலாக அங்கு தங்கியிருக்க அனுமதித்த காவல்த்துறையினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை 12 ஆம் திகதிமுதல் வெறும் 40 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் ஏனையோர் அங்கு வந்து உண்ணாவிரதியைப் பார்த்துவிட்டு அகன்றுவிடவேண்டும் என்றும் கூறினார்.

இதனை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இன்றுவரை செய்கின்றனர். எவ்வாறாவது காவல்த்துறையினர் மக்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கில் அங்கு கலந்து கொண்டிருப்பவர்கள் யாரும் ஒலிபெருக்கி பயன்படுத்தமுடியாது. என்று அறிவித்தனர். இதனால் ஆத்தரமடைந்த 4000 இற்கும் அதிகமான மாணவர்களும் மக்களும் ஈஸ்டர் தின விடுமுறையான திங்கட்கிழமை (13.04.09) மாலை 03 மணியளவில் வேகுண்டெழுந்து மீண்டும் வீதியைத் தடைசெய்தனர். அன்றையதினம் விடுமுறை என்றதனால் பல காவல்த்துறையினர் கடமையில் இல்லை. இதனால் அவர்கள் ஒருகணம் சங்கடப்பட்டாலும் எதுவும் செய்யமுடியவில்லை. அவர்களும் மக்களை எதுவும் செய்யவில்லை. இரவு 09 மணியளவில் பிரித்தானிய தமிழ் மாணவர்களின் பணிப்பின் பேரில் மக்கள் தாமாகவே வீதியை விட்டகன்று வீதியை வாகனங்களின் போக்குவரத்திற்காக திறந்துவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த 18ஆம் திகதி ஸ்கொட்லண்ட் யாட் காவல்த்துறையினர் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரனைச் சந்தித்துவிட்டு 20ஆம் திகதி காலை தமது முடிவினை அறிவிப்பதாக கூறியபின்னர். பரமேஸ்வரன் ஊடகங்களினூடாக மக்களுக்கு பணிவான வேண்டுகோள் ஒன்றைவிடுத்தார். அதாவது அனைவரையும் 20ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு முன்னாலுள்ள சதுக்கத்தில் காலை ஒன்றுகூடுமாறு மன்றாடி வேண்டினார். இதனால் கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் இற்கு மேற்பட்ட மக்கள் காலை அவ்விடத்தில் கூடினர். இதனால் அவ்விடம் நிரம்பி வழிந்தது. மக்கள் நிற்பதற்கே இடமில்லாது போனது. இதனால் கடந்த 11ஆம் திகதி பிரித்தானிய காவல்த்துறையினரால் புற்களைச் சுற்றிப் போடப்பட்ட கம்பிவேலிகளை உடைத்தெறிந்து கொண்டு மக்கள் புற்தரைக்குச் சென்றனர். இதன்பின்னர் காவல்த்துறையினரே அங்கு ஏற்கணவே போடப்பட்ட கம்பிகளை அவ்விடத்திலிருந்து அகற்றினர்.

இதன் பின்னர் மூன்றாவது தரமாகவும் வீதிகளை மறிப்பதற்கு தமிழ்மாணவர்கள் திட்டம் தீட்டினர். அதனடிப்படையில் மாணவர்கள் காலை 9.30 மணியளவில் அங்கிருந்த மக்களையும் அழைத்துக்கொண்டு பாராளுமன்றத்திற்கு முன்னால் செல்லும் பிரதான மூன்று வீதிகளை பிரித்தானியப் பொலீஸாரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் ஊடறுத்துச் சென்று வீதியின் நடுவில் அமர்ந்து கொண்டனர். இதனால் எதுவுமே செய்யமுடியாத காவல்த்துறை வெறும் கைகளை மட்டும் கட்டிநின்று நடப்பதை அவதானித்துக்கொண்டிருந்தனர். இந்த நிகழ்வினை Skynews,Bbc முதலான தொலைக்காட்சிகளும் மெற்ரோ, ஈவினிங் ஸ்ராண்டட் முதலான பத்திரிகைகளும் காட்சிப்படுத்தின. தொடர்ச்சியாக காவல்த்துறையினர் மக்களை வீதிகளை விட்டகன்று சதுக்கத்திற்குள்ளும், புற்றரைகளுக்குள்ளும் செல்லுமாறும் நீங்கள் புற்றரைகளை எதிர்வரும் மே மாதம் 11 திகதிவரை பயன்படுத்தலாம் என்று உறுதியளித்தும் மக்கள் கலைந்து செல்வதாக இல்லை. மாறாக விரியம் கொண்ட மக்களின் போராட்டத்தினால் காவல்த்துறையினர் மௌனமானார்கள்.

நேரம் இரவு 10 மணியையும் கடந்து சென்றது. மக்கள் வீதியை விட்டகல்வதாக இல்லை. இருந்தும் நேரம் நள்ளிரவு 12 மணியைத் தொடும்போது  அங்கிருந்த மக்களின் தொகை வெறும் 1500 ஆகவே இருந்தது. அங்கிருந்த மாணவர்கள் மக்களை அவ்விடத்தைவிட்டகன்று புற்றரைகளுக்குச் செல்லுமாறு வேண்டினர் காரணம் அங்கிருந்தவர்களின் எண்ணிக்கையையும், மக்கள் காவல்த்துறையினரால் தாக்கப்படாதிருக்கவுமே அவர்களை வீதியை விட்டகலுமாறு மாணவர்கள் வேண்டினர். அதனடிப்படையில் நள்ளிரவு 12 மணிக்கு தாயகத்தில் இறந்தவர்களுக்காகவும் அன்று பிரித்தானிய மகாராணியின் பிறந்ததினம் என்பதனாலும் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செய்துவிட்டு வீதியை விட்டகன்றனர். இங்கு முக்கியமாக மக்கள் வீதியை விட்டகலும் போது வீதியில் உள்ள குப்பைகளை அகற்றி வீதிகளை நன்கு துப்புரவு செய்ததன் பின்னரே புற்றரைகளிற்குச் சென்றனர். காலை 9.30 ற்கு பிரதான மூன்று விதிகளை மறித்தவர்கள் நள்ளிரவு 12 மணிக்கே வீதிகளை விட்டகன்றனர்.

அதன்பின்னர் கடந்த செவ்வாய்கிழமை பிரித்தானிய தமிழ் மாணவர்களால் 40 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சந்திப்பொன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. இவ்வழைப்பிதழை ஏற்று மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களே சமூகமளித்திருந்தனர். இதனால் வெறுப்படைந்த மாணவர்கள் மீதமுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்வாங்கும் முயற்ச்சிகளில் தற்போது இறங்கியுள்ளனர். அத்துடன் உண்ணாநிலைப் போராட்டத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் தமிழ் மாணவர் அமைப்பு கவனிக்க. SAGT(Student Against Genocide of Tamil) என்ற இயக்கம் அதற்கு வெளியே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், பல அமைப்புக்களுக்கும் அரசியல் ரிதியிலான விளக்கங்களையும் அழுத்தங்களையும் மேற்கொண்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.

அதாவது 24 பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைத்திருக்கும் இந்தச் சாக்ரி SAGT இயக்கம் பிரித்தானிய மனிதஉரிமைகள் அமைப்பின் மாணவர்கிளையின் ஆதரவையும் பெற்றுள்ளது. அத்துடன் யுனிசண் Unison என்கின்ற தொழிற்சங்கத்திற்கும் எமது அவலத்தினைத் தெரியப்படுத்தி அவர்களின் ஆதரவையும் பெற்றுள்ளனர். இதனால் யுனிசன் தொழிற்சங்கம் பிரித்தானியாவில் அமைந்துள்ள இந்தியத் தூரதரத்திற்கு ஒரு கடிதம் ஒன்றினையும் அனுப்பியுள்ளது. இதில் நீங்கள் அப்பாவித் தமிழ்மக்களைக் கொல்வதற்கு ஆதரவு வழங்குகிறீர்கள். அத்துடன் அபாயகரமாக கிளாஸ்ரர் குண்டுகளையும், இரசாயண வாயூக்களை இலங்கை இராணுவம் பயன்படுத்துவதற்கும் நீங்கள் நேரடியாக உதவுகின்றீர்கள் என இந்தத் தொழிற்சங்கம் நம்புகின்றது. எனவே இவற்றை முடிந்தவரை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன் பிரித்தானிய ஆசிரியர் தொழிற்சங்கமும் (Union for teacher) தனது ஆதரவினை இந்த சாக்ரி அமைப்பிற்கு வழங்கியுள்ளது. மேலும் அரச வர்த்தகத்துறைச் தொழிற்சங்கமும் (Civil and Commercial Works Union) தனது ஆரதவினை இந்த மாணவர்களுக்குத் தொடர்ச்சியாக வழங்கியுள்ளனர். அத்துடன் பிரித்தானிய மாணவர்களின் அமைப்புடன் (National Union of Student) ச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் சாக்ரி அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஆகவே இவைகள் அனைத்தும் பிரித்தானிய தமிழ் மாணவர்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

மேலும் 22ஆம் திகதி தமிழ் மாணவர்கள் அனைவரும் பாடசாலைச் சீருடையுடன் பாடசாலைகளுக்குச் செல்லாது பிரித்தானிய நாடாளுமன்றச் சதுக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தமையை காணக்கூடிதாக உள்ளது. இதில் 10ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து ண்டிருந்தனர். ஐரோப்பியப் பாராளுமன்றத்திற்கு கடந்த திங்கட்கிழமை ஒரு தொகுதிப் மாணவர்களின் பிரதிநிதிகள் சென்று திரும்பியிருக்கின்றனர். அத்தோடு செவ்வாய்கிழமை கொமன்வேல்ட் நாடுகளின் ஒன்றியததின் காரியாலயமான பிரான்சுக்கும், வியாழக்கிழமை (23.04.09) வோஷிங்டனுக்கும் சென்று கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர். ஆனால் இதனுடைய விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இவ்வாறு ஒரு புறம் உடனடி யுத்த றுத்தத்திற்காக சர்வதேச நாடுகளுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை மக்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்திலும் ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டுள்ளனர். 

ஆகவே ஒட்டு மொத்தமாக நோக்குகின்ற போது எல்லாத் தரத்திலுமுள்ள தமிழ் மாணவர்கள்களை இளையோர் அமைப்பு, தமிழ் மாணவர் ஒன்றியம், சாக்ரி இயக்கம் ஆகியவற்றினூடாக இணைத்து அதை ஒரு நிறுவன ரீதியாக ஒருங்கிணைத்து அதனூடாக மிகப்பெரிய தமிழ்த் தேசியஎழுச்சியை ஏற்படுத்தியிருக்கின்றார்கள். எனவே ஒட்டுமொத்த இளையவர்களும் தாயகத்திற்கான பணியில் உங்களால் இயன்ற பங்கினை இந்த நெருக்கடி மிகுந்த காலகட்டத்துள் செய்து தமிழர் சுயநிர்ணயத்திற்கான நீண்ட வரலாற்றுப் பயணத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.