::தேர்தல்கள்

::தேர்தல்கள்

இலங்கைத் தேர்தல்கள் பற்றிய செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

தேர்தல் களத்தில் முரளி கண்டியில், சுசந்திகா கேகாலையில்…

muralidharan.jpgவிளையாட் டுத்துறை பிரபலங்கள் பலரும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சனத் ஜயசுரிய ஆளும் கட்சியில் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக முன்னர் அறியக் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மேலும் பல விளையாட்டுதுறை முக்கியஸ்தர்களும் தேர்தல் களத்தில் குதித்துள்ளதாக தெரியவருகின்றது.

அதன்படி இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கண்டி மாவட்ட வேட்பாளர் பட்டியலில் உபதலைவராக போட்டியிடவுள்ளார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கட்டுகளை வீழ்த்தி முத்தையா முரளிதரன் உலக சாதனைப் படைத்துள்ளார். முத்தையா முரளிதரனை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் இணைப்பதன் மூலம் தமிழ் சிங்கள இளைஞர்களின் வாக்குகள் குவியும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் தெரிவுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் கேகாலை மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாக இன்றையதினம் தேர்தல் தெரிவுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

வேட்புமனுத் தாக்கல் நாளை ஆரம்பம்

srilanka_parliament_02.jpgவேட்பாளர் நியமனப்பத்திரங்களைத் தயாரிக்கும் பரபரப்புக்கு மத்தியிலும், தேர்தலில் போட்டியிடும் சின்னத்தைத் தெரிவு செய்வதில் சிறு அரசியல் கட்சிகள் இன்னமும் முடிவெடுக்க முடியாத நிலையில் இறுதி நேர பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளன.

பெரிய அரசியல் கட்சிகள் வேட்பாளர் நியமனப் பத்திரங்களைத் தயாரிக்கும் இறுதிக்கட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. அதேநேரம் சிறிய கட்சிகளுக்கு ஆசனங்களை ஒதுக்கிக் கொடுப்பதில் முனைப்புக் காட்டியுள்ளன.

இந்த நிலையில் பெரிய கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்திருக்கும் சில அரசியல் கட்சிகள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது இணைந்தே போட்டியிடுவதா என்பதில் இன்னமும் தெளிவான முடிவை எடுக்க முடியாத நிலையில் உள்ளன.

யாழ்ப்பாணத்தில் தனித்துப் போட்டியிடுவதெனவும் அதேநேரம் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் நட்புறவுடன் செயற்படுவதெனவும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) தீர்மானித்திருக்கிறது. எனினும், அரச தரப்புடன் நேற்றைய தினமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கட்சியின் பேச்சாளரொருவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

அரசாங்க ஆதரவு கட்சியாகத் தேர்தலில் களமிறங்குவதுடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து போட்டியிடுவதனை விடவும், தனித்து வீணைச் சின்னத்தில் போட்டியிடுவது சாதகமானது என ஈ.பி.டி.பி. நம்புகிறது.

இதேபோன்று ஆளுந்தரப்பில் உள்ள மலையக மக்கள் முன்னணி நுவரெலியா, பதுளை மாவட்டங்களில் தனித்து கட்சியின் மண்வெட்டிச் சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன. அமரர் பெ. சந்திரசேகரனின் பாரியார் சாந்தினி சந்திரசேகரனின் தலைமையில் நுவரெலியா மாவட்டத்திலும், மாகாண சபை உறுப்பினர் எஸ். அரவிந்த்குமார் தலைமையில் பதுளை மாவட்டத்திலும் மலையக மக்கள் முன்னணி களமிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இறுதிக் கட்டத்திலும் அரச தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேற்றும் கூடி ஆராய்ந்துள்ளது. இம்முறை கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் பலருக்குப் போட்டியிட வாய்ப்பளிக்காதிருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக எம்.கே. சிவாஜிலிங்கம், என்.ஸ்ரீகாந்தா ஆகியோருக்கு வாய்ப்பளிக்கக் கூடாதெனக் கூட்டமைப்பின் பெரும்பாலானோர் கூறியுள்ளனர்.

இந்நிலையில், சிவாஜிலிங்கமும், ஸ்ரீகாந்தாவும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தலைமையிலான புதிய இடதுசாரி விடுதலை முன்னணி கட்சியில் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

தேர்தலுக்கு முன்னைய காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள வன்முறைகள் ஜனநாயக இலக்குகளை அடைவதற்கான ஒன்றான மைல்கல்லாக இல்லை.” :பொதுநலவாய நாடுகளின் குழு

kamale-shsharma.jpgகடந்த மாதம் 26 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னைய காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள வன்முறைகள் ஜனநாயக இலக்குகளை அடைவதற்கான மைல்கல்லாக இல்லை.” என கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்ட பொதுநலவாய நாடுகளின் குழு தமது இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இக்குழுவின் பொதுச் செயலாளர் கமலேஷ் ஷர்மா இவ்வறிக்கையில், தேர்தல் தினத்தன்று வாக்காளர்கள் தமது வாக்குகளை சுதந்திரமாக அளித்திருந்தாலும், தேர்தலுக்கு முன்னைய காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள வன்முறைகள் ஜனநாயக இலக்குகளை அடைவதற்கான ஒன்றான மைல்கல்லாக இல்லை.” எனத் தெரிவித்தார்.

இம்முறை தேர்தலில் இடம்பெற்ற பலசம்பவங்கள் கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் இடம்பெற்றவையே.இவற்றை தேர்தல் ஆணையாளர் சுட்டிக் காட்டியுள்ளார்.இவை குறித்து உடனடியாக கவனம்செலுத்தப்பட வேண்டும். கோரிக்கைகள் விடும் பட்சத்தில் பொதுநலவாய நாடுகளின் ஒன்றியம் இவ்விடயத்தில் உதவ தயாராகவுள்ளது எனவும் அவர் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாக்களிப்பு மற்றும் வாக்கு எண்ணும் பணிகளிர்கு முறையான நிர்வாக ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேர்தல் ஆணையாளரும் தேர்தல் உத்தியோகத்தர்களும் வாக்காளர்கள் வாக்களிக்க தேவையான ஒழுங்குமுறைகளை சீராகச் செய்திருந்ததாகவும் கமலேஷ் கான் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் ஏப்ரல் 8ஆம் திகதி

parliament.jpgபாராளு மன்றம் நேற்று நள்ளிரவு முதல் கலைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது.

இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி எதிர்வரும் ஏப்ரல் 8ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும். வேட்புமனு தாக்கல் இம்மாதம் 19ம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை இடம்பெறும்.

அடுத்த பாராளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் 22ம் திகதி கூடுகிறது.

புலிகளால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு ரிஎன்ஏ இல் ஆசனம் இல்லை! லண்டனில் ஆர் சம்பந்தன் : த ஜெயபாலன்

Sambandan R TNA MPதமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆனவர்களுக்கு இம்முறை ஆசனம் வழங்குவதில்லை என லண்டனில் இடம்பெற்ற சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் ஆர் சம்பந்தன் தெரிவித்ததாக தேசம்நெற்க்கு தெரியவருகின்றது. உறவினர் ஒருவரின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக லண்டன் வந்திருந்த ஆர் சம்பந்தனை தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் கிளையினர் பெப்ரவரி 8ல் சந்தித்து உரையாடி உள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இடையே உடன்பாடு ஒன்றை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சியிலேயே சில செய்திகளை ஆர் சம்பந்தன் கசியவிட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட முடியாத இடைவெளி இருப்பதை உணர்ந்த நிலையில் சந்திப்பு நிறைவுபெற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைத்து உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் கிளையில் இருந்த சிலர் விரும்பியிருந்தனர். அதையொட்டியே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இச்சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் கிளையின் தலைவர் நிக்லஸ்பிள்ளை, தமிழர் விடுதலைக் கூட்டணியின் காலம்சென்ற தளபதி அ அமிர்தலிங்கத்தின் துணைவியார் மங்கையற்கரசி அமிர்தலிங்கம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர் எஸ் அரவிந்தன் உட்பட இன்னும் சிலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழரசுக் கட்சியிலேயே போட்டியிடும் என்றும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவது பற்றி பேசுவதிலே அர்த்தமில்லை என ஆர் சம்பந்தன் இச்சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி ஆனந்தசங்கரி சிங்கள மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மிதவாதத் தலைவர் என்று குறிப்பிட்ட ஆர் சம்பந்தன் ஆனந்தசங்கரிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒரு ஆசனத்தை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தாங்கள் வி ஆனந்தசங்கரியுடன் உடன்பட்டு செயற்படுவதற்கு முன்நிபந்தனையாக வி ஆனந்தசங்கரி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதான கடுமையான விமர்சனங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்தது தொடர்பாக தேர்தல் முடிவுவரை மௌனமாக இருந்த வி ஆனந்தசங்கரி தேர்தல் முடிவுக்குப் பின் கடுமையான விமர்சனத்தை முன்வைத்ததை ஆர் சம்பந்தன் சுட்டிக்காட்டி இருந்தார்.

இச்சந்திப்பின் போது அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட யாருக்கு ஆசனங்கள் வழங்குவது என்பது பற்றியும் சில அபிப்பிராயங்களை ஆர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுக்கு எதிராக சுயேட்சையாகப் போட்டியிட்ட எம் கெ சிவாஜிலிங்கம், அவருக்கு ஆதரவாக நின்ற என் சிறிகாந்தா ஆகியோருக்கு ரிஎன்ஏ இல் ஆசனம் இல்லை என்றும் அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இல்லை என்றும் ஆர் சம்பந்தன் அங்கு கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துள்ளார்.

மற்றுமொரு கேள்விக்குப் பதிலளித்த ஆர் சம்பந்தன் தமிழீழ விடுதலைப் புலிகளால் ரிஎன்ஏ இல் தேர்தலில் நிறுத்தப்பட்டவர்களுக்கு இம்முறை ஆசனங்கள் வழங்க முடியாது என்ற வகையில் கருத்துத் தெரிவித்து இருந்தார். ரிஎன்ஏ ஆசனங்களுக்கு தகுதி அடிப்படையைக் கொண்டு வருவதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டவர்களை ஓரம்கட்டலாம் என்ற வகையிலும் அவருடைய கருத்துக்கள் அமைந்திருந்தது. குறிப்பாக சட்டத்தரணிகள், பொறுப்பான தொழில் தகுதியைக் கொண்டவர்கள், ஊர் மக்கள் மத்தியில் செல்வாக்கானவர்கள் என்ற அடிப்படையில் ஆசனங்கள் வழங்கப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டவர்கள் ஓரம்கட்டப்படுவர் என்ற வகையிலேயே ஆர் சம்பந்தனின் கருத்துக்கள் இருந்தது என தேசம்நெற் க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைபின் பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள்:
தமிழர் விடுதலைக் கூட்டணி: இரா சம்பந்தன், (திருகோணமலை) மாவை சேனாதிராஜா (யாழ்ப்பாணம்)
ஈபிஆர்எல்எப்(சுரேஸ் அணி): சுரேஸ் பிரேமச்சந்திரன் (யாழ்ப்பாணம்), ஆனந்தன் நடேசு சிவசக்தி (வன்னி)
ரெலோ: செல்வம் அடைக்கலநாதன் (மன்னார்), நோகராதரலிங்கம் சுப்பிரமணியம் (வன்னி), எம் கெ சிவாஜிலிங்கம் (யாழ்ப்பாணம்), நல்லதம்பி சிறிகாந்தா (யாழ்ப்பாணம்)
தமிழ் கொங்கிரஸ்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (யாழ்ப்பாணம்)
இவர்கள் ஒன்பது பேரையும் தவிர ஏனைய 13 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் சென்றவர்கள்: சந்திரகாந்தன் சந்திரநேரு (தேசியப்பட்டியல்), ரி கனகசபை (மட்டக்களப்பு), சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி (மட்டக்களப்பு), தங்கேஸ்வரி கதிர்காமன் (மட்டக்களப்பு), பாக்கியசெல்வம் அரியேந்திரன் (மட்டக்களப்பு), சதாசிவம் கனகரட்ணம் (வன்னி), சிவநாதன் கிசோர் (வன்னி), சதாசிவம் கனகரத்தினம் (வன்னி), கெ துரைரத்தினசிங்கம் (திருகோணமலை), வில்லியம் தோமஸ் (திகாமடுல்ல), கஜேந்திரன் செல்வராஜ் (யாழ்ப்பாணம்), பத்மினி சிதம்பரநாதன் (யாழ்ப்பாணம்), சொலமன் சிறில் (யாழ்ப்பாணம்), ரசீன் மொகமட் இமாம் (தேசியப் பட்டியல்)

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி (சம்பந்தர் அணி), ஈபிஆர்எல்எல் (சுரேஸ்அணி) ஆகியோரின் ஆசனங்களுக்கு பிரச்சினை இராது. ஆனால் தற்போது நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ரெலொவில் செல்வம் அடைக்கலநாதனுக்கு மட்டுமே ஆசனம் வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளது. தமிழ் கொங்கிரஸ் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளால் தெரிவு செய்யப்பட்ட 9 பாராளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் எதிர்காலம் ஆர் சம்பந்தன் – மாவை சேனாதிராஜா – சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் கைகளிலேயே உள்ளது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் தாங்கள் தெரிவு செய்யப்பட்ட தொகுதிகளில் வாழ்ந்த காலத்திலும் பார்க்க அதற்கு வெளியே குறிப்பாக புலம்பெயர் நாடுகளிலேயே கூடுதலாக வாழ்ந்துள்ளனர். அந்நாடுகளிலேயே பெரும்பாலும் இவர்கள் அறியப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு என்று ஒரு அரசியல் அடையாளம் இருந்திருக்கவில்லை. அதனால் இவர்களில் பெரும்பாலானவர்களை ஓரம்கட்டுவதில் ஆர் சம்பந்தனுக்கு பெரும் சவால்கள் இருக்கப் போவதில்லை. ஆனால் எம் கெ சிவாஜிலிங்கம், என் சிறிகாந்தா போன்றவர்கள் ஆர் சம்பந்தனுக்கு தலையிடியாகலாம். தங்கள் தொகுதிகளில் சுயேட்சையாகப் போட்டியிடவும் வாய்ப்புகள் உள்ளது. ரிஎன்ஏ தங்களைக் கட்சியில் இருந்து நீக்க முடியாது என எம் கெ சிவாஜிலிங்கம் தனிப்பட்ட முறையில் தெரிவித்து வருகின்றார். தங்களுக்கும் ரிஎன்ஏ க்கும் இடையே எழுத்து மூலமான உடன்பாடுகள் எதுவும் இல்லாத நிலையில் எந்த அடிப்படையில் தங்களை ரிஎன்ஏ யில் இருந்து நீக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பி வருகின்றார். இவ்வாறான சர்ச்சைகள் ரிஎன்ஏ யை நீதிமன்றத்திற்கு அலைக்கழித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு ஆசனங்களை வழங்காது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின் புதிய நபர்கள் அவ்விடங்களை நிரப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புலத்தில் உள்ள சிலர் அது தொடர்பாக பேசி வருவதாகவும் தெரியவருகின்றது. ரிஎன்ஏ இல் மட்டுமல்ல ஏனைய தமிழ் கட்சிகளிலும் புலம்பெயர் இறக்குமதிகள் சில போட்டியிடுவதற்கான வேலைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர்.

மேலும் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் எவ்வாறு வியூகம் அமைக்கலாம் எவ்வாறு ஆசனங்களைத் தக்க வைப்பது என்று கணக்குப் போடுவதில் கட்சிகள் படுபிசியாகி உள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உடன் உடன்பாட்டுக்கு வந்துள்ளது. அரச ஆதரவான கட்சிகளான ஈபிடிபி, புளொட், ஈபிஆர்எல்எப் ஆகியனவும் ஒரு உடன்பாட்டை எட்ட முயற்சிக்கின்றன. வவுனியா நகரசபையை புளொட் கோட்டைவிட்டு ஒரு பாடத்தைக் கற்றுள்ளது. முன்னர் புளொட், ஈபிஆர்எல்எப் கூட்டணியில் இருந்த வி ஆனந்தசங்கரி தற்போது தனிமைப்பட்டுள்ளார். தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளும் தனித்துப் போட்டியிட உள்ளது.

இவர்களைவிடவும் தேசியக் கட்சிகளும் உள்ளுர் பிரமுகர்களை தேர்தல் களத்தில் இறக்க உள்ளன. உள்ளுர் வர்த்தகப் புள்ளிகள் சிலரும் தேசியக் கட்சிகளில் போட்டியிட உள்ளனர். இந்த ஆரவாரங்களுடன் வடக்கு கிழக்கு தேர்தலுக்கு தயாராக உள்ளது. வடக்கு கிழக்கில் உள்ள 23 தமிழ் ஆசனங்களுக்கான போட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இருந்த ஏகபோகம் இல்லாமல் போய்விடும். ஆனால் வடக்கு கிழக்கில் பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்ட கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தன்னை தக்க வைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது. தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தங்கள் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ அரச மற்றும் அரச சார்புக் குழுக்களின் அரசியல் அராஜகங்களுக்கு எதிரான எதிர்ப்பு வாக்குகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு செல்வதற்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது ஒரு எண்ணிக்கை விளையாட்டு மட்டுமே.

இலங்கை நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டது.

parliament.jpgஇலங்கையின் 6 வது நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு முதல் கலைப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று நள்ளிரவு  வெளிவருமெனவும் ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பிரிவுப் பொறுப்பாளர் லூசியன் ராஜகருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு 10 நாட்களுக்குள் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான தினம் தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 5 அல்லது 7 வாரங்களுக்குள் பொதுத்தேர்தல் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாக இருப்பதால், பெரும்பாலும் ஏப்ரல் மாதம் முதல்வாரத்தில் தேர்தல் வாக்கெடுப்புகள் இடம்பெறும்.
இலங்கையின் 6 வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர் தெரிவு கடந்த 2004 ம் ஆண்டு ஏப்ரல் 2 ம் திகதி இடம்பெற்ற அதேவேளை, முதலாவது நாடாளுமன்ற அமர்வு அதே மாதத்தின் 22 ம் திகதி இடம்பெற்றது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் சொலிடாரிட்டியின் கருத்துப் பகிர்வு! : தொகுப்பு ரி சோதிலிங்கம்

Sarath_Fonseka_Posters_in_Jaffnaலண்டன் தமிழ் சொலிடாரிட்டி தனது இலங்கைத் தேர்தல் சம்பந்தமான கருத்துப்பகிர்வினை சோசலிசக் கட்சியின் தொடர் கூட்டத்தில், பெப்ரவரி 4ல் பகிர்ந்து கொண்டது. தமிழ் சொலிடாரிட்டியின் ஒருங்கிணைப்பாளர் சேனன் தமிழ் சொலிடாரிட்டியின் நிலைப்பாட்டை அங்கு வெளியிட்டார்.

”இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலைப் பற்றி பேசுவதற்கு முன்பு ஒரு சிறு கதை ஒன்றினை இங்கே சொல்ல விரும்புகிறேன் இலங்கையில் புலிகள் அரசுடன் போராடினார்கள் அந்த புலி இயக்கத்தின் முக்கிய தளபதிகள் இருவரை அரசும் எதிர்க்கட்சியுமாக சேர்ந்து பிரித்தெடுத்து அரசு தனது அமைச்சரவையிலும் மாகாண சபையிலும் அமைச்சர்களாக்கியுள்ளது. பின்னர் இவர்களின் உதவியுடனும் புலிகளுக்கு எதிராக சண்டையிட்ட புலிகளை அரசு முற்றாக அழித்துள்ளது. இந்த இறுதி யுத்தத்தில் 250 ஆயிரம் பேர்கள் அகதிகளாக்கப்பட்டும் பல ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டும் பாரிய பொருளாதார இழப்புக்களும் நடைபெற்றது. இந்த பாரிய யுத்தத்தை ஆட்சியிலிருந்த மகிந்தாவும் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவும் வெற்றிகரமாக நடாத்தி முடித்தனர். அதன் பின்னர் தமது வெற்றி விழாக்களையும் கொண்டாடினர்.

புலிகளால் உருவாக்கப்பட்ட ரிஎன்ஏ என்ற தமிழ் கட்சிகளின் கூட்டணியினர் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட இந்த இராணுவத் தளளபதி சரத் பொன்சேகாவிற்கு வாக்களித்து அரசை மாற்றுங்கள் என்று யுத்தத்தில் பாதிப்புற்று நலிவடைந்திருந்த மக்களைப் பார்த்து வேண்டுகோள் விடுத்தனர். தமிழ் மக்களில் மிகச் சிறுபான்மையினர் இந்த தேர்தலில் பங்கு பற்றி தமது மக்களை கொன்றொழித்த அந்த இராணுவத் தளபதிக்கே வாக்களித்துள்ளனர். இப்போது மகிந்தா அரசு இதன் காரணமாக தமிழர்கள் மீது சீற்றம் கொள்ளலாம் எனவும் தற்போது பயப்பிடுகின்றனர்.

இந்த ரிஎன்ஏ யினர் தாம் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தாமே புலிகளின் பின்னர் தமிழ் மக்களின் ஏகபோகபிரதிநிதிகள் என்றும் தம்மைவிட யாருக்கும் தமிழர் பிரச்சினை பற்றி பேச முடியாது என்றும் வாதிடுகின்றனர்.”

இந்த சிறுகதையை உங்களுக்கு சொல்ல வேண்டியது அவசியம். காரணம் இங்குள்ள பலருக்கு இலங்கையில் அரசியல் கட்சிகளின் தன்மை பாரம்பரியம் என்பன பற்றி தெரியாதவர்கள் அங்குள்ள கடந்த சில வருட நிலைமைகளை தெளிவுபடுத்தவே இதை கூறினேன்.

யாருமே மக்களின் நலனில் அக்கறையற்றவர்களாகவே இருக்கிறார்கள். இதில் கடந்த 40 வருடமாக தமிழர்களுக்காக போராடுகிறோம் என்ற ரிஎன்ஏயும் என்றுமே சாதாரண மக்களின் பிரச்சினையில் அக்கறையில்லாமல் உள்ளனர். தாம் தமது குடும்பங்களை சொத்துக்களை எப்படி காப்பாற்றுவது என்பது தான் இவர்களது கவலை.

தனது ஆட்சிக் காலம் இரண்டு வருடங்கள் உள்ள போதும், இரண்டு வருடங்களின் பின்பு வரவேண்டிய தேர்தலை மகிந்தா அரசு இன்றே தனது புலிகளின் அழிப்பு வெற்றியுடனேயே நடாத்துகிறது. இந்த வெற்றி தனக்கு சாதகமானது என்பதை பயன்படுத்தவே இந்த தேர்தல் இந்த தேர்தலை அடுத்து பாராளுமன்ற தேர்தலும் நடாத்தப்பட உள்ளது.

இந்த ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் அரச ஊடகங்களையும் மக்களின் பொதுச் சொத்துக்களையும் பயன்படுத்தியே தனது வெற்றியை தீர்மானித்துள்னர். எதிர்க்கட்சிகளும் மற்றய 20 வேட்பாளர்களின் படங்களைக்கூட மக்களால் பாத்துக்கொள்ள இடம் அளிக்காமல் இந்த தேர்தலை நடாத்தி முடித்துள்ளனர்.

தேர்தல் காலங்களில் முகாம்களில் இருந்தவர்களில் 40 சதவிகிதமானவர்களே வாக்களிக்க தம்மை பதிவு செய்தனர் என்றும் ஆனால் தேர்தல் வாக்களிக்கும் இடங்களுக்கு எடுத்துவர பஸ்கள் இல்லை எனக் காரணம் காட்டி மக்களை வாக்களிப்பு நிலையங்களுக்கு அழைத்துச் செல்ப்படவில்லை.

இந்த 57 சதவிகித தேர்தல் வெற்றிக்கு பின்னர் மகிந்தா அரசு தொடரந்து தனது ஜனநாயக மறுப்பு நடவடிக்கைகளை தொடர ஆரம்பித்துள்ளது. பத்திரிகைகளுக்கு மூடுவிழா செய்துள்ளது. பத்திரகையாளர்களை கைது செய்துள்ளது. ஆதரவளிக்காதவர்களை அடித்தும் இம்சைப்படுத்தியும் உள்ளனர்.

தேர்தல் காலங்களில் வெளிவந்த பத்திரரைகளின் செய்திகளில் சில

கருணா பிள்ளையான் சிங்களம் படிக்கிறார்கள். மகிந்தா தமிழ் பேசக்கூடியவர் ஆனால் பொது இடங்களில் பேச முடியாதுள்ளது!

சர்வதேச நிதிஉதவிகள் தமிழ் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய துரித நடவடிக்கை!

இலங்கையில் சிறுபான்மை என்ற இனமே இல்லை நாம் எல்லோரும் இலங்கையர்களே!

இப்படியெல்லாம் செய்திகள் வந்த பிறகு புலிகளுக்கு பல தளபாடங்களையும் பேச்சுவார்த்ததைக்கு என்று கூறி கூட்டி வந்து புலிகளை அடியோடு இல்லாதொழித்த எரிக்சொல்கேயிம் மகிந்தாவிற்கு வாழ்த்துச்செய்தி அனுப்பினார்.

இலங்கை தற்போது உலகின் மிகமுக்கிய உல்லாசப் பிரயாணிகளின் இடம். இது நியுயோர்க் ரைம்ஸ் செய்தி.

இலங்கையில் மக்கள் ஜனநாயக முறைப்படி வாக்களித்து தமது ஜனாதிபதியை தெரிவு செய்துள்ளனர். பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டது. இலங்கையில் தற்போது ஜனநாயகம் முழுமையாக மக்களால் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். – இது அமெரிக்கா வால்ஸ்ரிற் பத்திகைகளின் செய்திகள்.

இப்படி சர்வதேசங்களின் பார்வை இலங்கையில் இருப்பது ஒன்றும் ஒளிவு மறைவு அல்ல. நிறையவே குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்யும் படையுள்ளது. இதை பயன்படுத்தவும் இலங்கையில் உள்ள சந்தையை நிரப்பவுமே சர்வதேசம் முனைப்பாக உள்ளதும் இதன் அடுத்த பக்கத்தை சீனாவும் இந்தியாவும் நிறைவு செய்யவுமே போட்டிகள் நடைபெறுகின்றன” என தமிழ் சொலிடாரிட்டியின் சார்பில் சேனன் கருத்துத் தெரிவித்தார்.

இதனிடையே சபையிலிருந்து எழுந்த கேள்விகளில்: தமிழர்கள் பல ஆயிரக்கணக்கில் தெருக்களுக்கு வந்து போராடியுள்ளனர், யுத்தத்ததை நிறுத்த முடியவில்லை, போராட்டங்களுக்கு நாம் ஆதரவு அளித்தோம் ஏன் என்று விளங்கிக் கொள்ளவில்லை, ஈராக் யுத்த்தை ஆதரிப்பவர்களை அழைத்து கூட்டம் போட்டு தமக்கு ஆதரவளிக்கும்படி கேட்கிறார்கள், இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்க ஒப்புக் கொண்டவர்களை அழைத்து விருந்து கொடுத்து தமக்கு உதவும்படி கேட்கிறார்கள், இவர்கள் எல்லாம் தமிழர்களுக்காகவா போராடினார்கள்? இவர்களுக்கு போராட்டத்தின் அர்த்தம் புரியவில்லை என்று கருத்துக்கள் எழுந்தன.

உலகின் பல நாடுகளில் கொலைகளை செய்த பாராளுமன்றம் முன்போய் நீதி கேட்டது எவ்வளவு தூரம் சரியானது என்று இவர்கள் சிந்திக்கவில்லை?

தமிழர்களின் தலைமைகள் தமிழர்களை கேலிக் கூத்தாக்கியுள்ளனர். இன்றும் தமிழர்கள் யுத்தத்தில் தோல்வியடைந்த மனோநிலையில் இருப்பதையும் இதன் பின்னர் இந்த தேர்தலில் தமது தலைவர்களால் தாம் கேவலப்படுத்தப்பட்டதையும் நினைத்து தலைகுனிவுடன் உள்ளனர் என்றும் கருத்துக்கள் எழுந்தது.

ஜக்கிய இலங்கைக்குள் தமிழ் சிங்கள மக்கள இணைந்து வாழ்வதற்கான அடிப்படையில் மக்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்ற கருத்துடன் இக்கூட்ட கருத்துப்பகிர்வு முடிவடைந்தது.

ஜனாதிபதி தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பரப்பப்பட்ட செய்திகளில் உண்மையில்லை: தயானந்த திஸாநாயக்க

election-commisone.jpgதாம் துப்பாக்கி முனையில் பெறுபேறுகளில் கையொப்பமிட்டதாகவும், தேர்தல் பெறுபேறுகள் வெளியிடப்படும் போது தாம் தேர்தல்கள் செயலகத்தில் இருக்கவில்லையென்றும், வெளியாகியதாக செய்திகளில் உண்மையில்லை என தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கடந்த 26ஆம் திகதிக்கு பின்னர் அடுத்த நாள் காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும்,  தமது மகள் கடத்தப்பட்டதாகவும் பல்வேறுப்பட்ட கட்டுக்கதைகள் பரப்பட்டதாகவும், இதில் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ராஜகிரிய, தேர்தல் செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த கருத்தை அவர் வெளியிட்டார்.

ஜனாதிபதி தேர்தல் பெறுபேறுகள் தொடர்பாக, எந்தவித சந்தேகமும், கொள்ளத்தேவையில்லை எனவும், ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட தேர்தல் பெறுபேறுகள் அனைத்திலும் தமது கையொப்பங்கள் இடப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிடடுள்ளார்.  தேர்தல் வாக்களிப்புகள் உட்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் சீரான முறையில் இடம்பெற்றன.

இந்தநிலையில், தமது அலுவலக சேவையாளர்கள் மற்றும் ஏனையவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தாம் எதிர்வரும் பொதுத்தேர்தலின் போதும் பணியாற்றப்போவதாக தயாநந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.  கடந்த தேர்தல்களின் போது, தம்மால், அநீதியான முறையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்குமாயின் நீதிமன்ற நடவடிக்கைகளை அல்லது உரிய விசாரணைகளை சந்திப்பதற்கும் தாம் தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

ஜனாதிபதித் தேர்தலும் தமிழ் வாக்காளர்களும் : த ஜெயபாலன்

Karuna_Election_Campaignதற்போது வன்னி யுத்தம் முடிவடைந்த நிலையில் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக தங்களை அறிவித்து வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவுடன் அரசியல் சீட்டுக்கட்டி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாக சன்னதம் ஆடியது. ஆனால் இறுதியில் ரிஎன்ஏ சம்பந்தரின் பந்தை லாவகமாக ஆடிய மகிந்த ராஜபக்சவின் பிரச்சாரக் குழு சிக்ஸரே அடித்துவிட்டது. இடதுசாரித் தலைமைகளுடன் இணைந்து ஒரு முற்போக்கு அணி ஒன்றை உருவாக்க முயற்சிக்காமல் ஜெனரல் சரத் பொன்சேகாவை வெல்ல வைக்கப் போகின்றோம் என்றும் அரசியல் சாணக்கியம் என்றும் கூறி தமிழ் மக்களின் அரசியலை சாக்கடைக்குள் தள்ளியது ஆர் சம்பந்தன் – மாவை சேனாதிராஜா – சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டு. இன்று வீழ்ந்தும் மீசையில் மண்படவில்லையென கதையளக்கின்றனர்.

‘தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் ” எனத் தமிழ் மக்கள் தெரிவித்து இருக்கிறார்களாம் என்று கதையளக்கின்ற சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டு சரத்பொன்சேகாவை ஆதரிக்கும்படி தமிழ் மக்களைக் கேட்டுக் கொள்வதற்கு முன்பாகவே தமிழ் மக்கள் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டனர். இது காகம் இருக்க பனம் பழம் வீழ்ந்த கதையே. ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு தமிழ் மக்கள் மத்தியில் வீழ்ந்த வாக்குகள் மகிந்த சகோதரர்களின் குடும்ப ஆட்சிக்கு எதிராகவும் புலிகளுக்கு ஏற்பட்ட தோல்விக்கான பழிவாங்கும் வாக்குகளே அல்லாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வீழ்ந்த வாக்குகள் அல்ல.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஜனவரி 7ல் தேசம்நெற்க்கு தெரிவித்தது போல் ‘இந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவானது ஜனாதிபதியைத் தெரிவு செய்வது மட்டுமல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஒரு பரிசோதணைக் களமாக அமைய உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் அனைவரையும் வாக்களிப்பில் கலந்துகொள்ளுமாறும் சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் தமிழ் மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் இருப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பை நிராகரிப்பதாகவே கொள்ள வேண்டும்” என தமிழ் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இந்த அடிப்படையில் பார்க்கையில் நாடு முழுவதும் 74 வீதமான மக்கள் வாக்களித்து இருக்கையில் யாழ் மாவட்டத்தில் 15 வீதமான மக்களே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்த வேட்பாளரான ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு வீழ்ந்துள்ளது. இது தான் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறும் ”தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம்”  என்பதன் லட்சணம்.

சுரேஸ் பிரேமச்சந்திரனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஜெனரல் பொன்சேகாவுடன் இணைந்து வடக்கு கிழக்கு – இணைந்த தமிழ் தாயகம் என்றெல்லாம் றீல் விட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டாளிகள் – ஜெனரல் சரத் பொன்சேகா, யூஎன்பி, ஜேவிபி அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என அறிக்கைகளை வெளியிட்டனர். அது ஒருபுறம் இருக்க லண்டனில் சுரேஸ் பிரேமச்சந்திரனின் சகோதரர் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு வாக்கெடுப்பு நடாத்துகிறார். இலங்கை வாழ் தமிழ் மக்கள் பொதுவாக புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து பொருளாதார மற்றும் உதவிகளை எதிர்பார்க்கின்றனரே அல்லாமல் தங்களுக்கான அரசியல் தலைமைத்தவத்தையோ அல்லது அரசியல் புத்திஜீவிதத்தையோ எதிர்பார்க்கவில்லை என்பது சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கும் அவரது சகோதரருக்கும் இன்னும் சரிவரப் புரியவரவில்லை. இன்னும் சில புலம்பெயர் புலி ஆதரவு புலி எதிர்ப்பு புத்திஜீவிகளால் இன்னமும் தங்கள் அரசியல் அடையாளத்தை தக்க வைப்பதற்கு அப்பால் சிந்திக்க முடியவில்லை. அதிஸ்டவசமாக மக்கள் இவர்களைக் கண்டுகொள்வதும் இல்லை.

Buses_on_Election_Duty_25thJan10தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான போதும் சுயேட்சையாகப் போட்டியிட்ட எம் கெ சிவாஜிலிங்கம் நாடு முழுவதும் பத்தாயிரத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்றிருந்தார். எம் கெ சிவாஜிலிங்கம் ஓரளவு அறியப்பட்ட இடதுசாரி அரசியல் வாதிகளைக் காட்டிலும் சில ஆயிரம் வாக்குகளை அதிகம் பெற்றிருந்தார். குறிப்பாக சிறிதுங்க ஜெயசூரிய, விக்கிரமபாகு கருணாரட்ன ஆகிய இடதுசாரிக் கட்சி வேட்பாளர்களைக் காட்டிலும் எம் கெ சிவாஜிலிங்கம் சற்று அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தார். ஆனால் இந்த வாக்குகளால் எம் கெ சிவாஜிலிங்கம் எவ்வித திருப்தியையும் அடைய முடியாது. குறிப்பாக தமிழ் பேசும் சிறுபான்மையின மக்கள் மாறி மாறி இனவாதத் தலைமைகளைத் தெரிவு செய்வதிலும் அவற்றுடன் கூட்டுவைத்து அரசியல் நடத்துவதிலுமே ஆர்வம் காட்டுகின்றனரே ஒழிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவதற்கான அரசியல் முதிர்ச்சியும் தூர நோக்கும் அவர்களிடம் இல்லை என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டு உள்ளது.

மிக மோசமான அவலத்தை ஏற்படுத்திய வன்னி யுத்தம் முடிவடைந்து சில மாதங்களுக்கு உள்ளாகவே நடைபெற்ற தேர்தலில் தங்கள் அரசியல் இருத்தலை தக்க வைப்பதை மட்டுமே கணக்கில் கொண்டு எய்தவனை நோவதா அம்பை நோவதா என்று அரசியல் பேசியது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. ஜெனரல் சரத்பொன்சேகாவோடு வில்லுடைக்க சுயம்வரம் சென்றவர்கள் தற்போது மண் கவ்வித் திரும்பியுள்ளனர்.

MR_Poster_Jaffnaஇவர்கள் ஒருபுறம் இருக்க மகிந்த ராஜபக்சவின் தோளோடு தோள் நின்ற ஈபிடிபி, புளொட், ஈபிஆர்எல்எப், ரிஎம்விபி மற்றும் கருணா அம்மான் போன்றவர்களுடைய அரசியலும் அம்மணமாக்கப்பட்டு விட்டது. இவர்கள் மக்களில் இருந்து வெகு தொலைவிலேயே உள்ளனர். மீண்டும் பதவிக்கு வரும்போது இவர்களின் ஆயுதங்களைக் களைவேன் என்று மகிந்த ராஜபக்ச ஒரு உறுதிமொழியை தமிழ் மக்களுக்கு வழங்கி இருந்தாலே மகிந்த ராஜபக்சவுக்கு தமிழ் மக்கள் அளிக்கும் வாக்குகள் அதிகரித்து இருக்கும். ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு தமிழ் மக்கள் வாக்களித்தமைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று தமிழ் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களைக் களைவேன் என அவர் உறுதியழித்து இருந்தது. யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, வவுனியா போன்ற தமிழ் மாவட்டங்களில் உள்ள வாக்காளர்களுடன் உரையாடிய போது, அவர்கள் தமிழ் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் மீது மிகுந்த அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். தமிழ் ஆயுதக் குழுக்களின் அடாவடித்தனங்கள் பற்றிய அச்சம் அவர்களிடம் நிறையவே உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீது வன்னி மக்கள் எவ்வளவு வெறுப்பை வெளிப்படுத்துகின்றனரோ அதேயளவு வெறுப்பை ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்கள் தொடர்பாகவும் தமிழ் மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழ் மக்கள் ரிஎன்ஏ உட்பட எந்தவொரு தமிழ் அரசியல் தலைமை மீதும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்பதையே வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் தொடர்ச்சியாக தமிழ் சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகளின் அரசியல் முடிவுகளால் அம்மக்கள் மிக மோசமான வாழ்வை எதிர்கொண்டிருந்தனர். இதன் வெளிப்பாடாக தமிழ் அரசியல் தலைமைகள் மீதான நம்பிக்கையீனம் பரவலாகக் காணப்படுகின்றது. தற்போதுள்ள தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முன்னெடுக்கின்ற தகமையை இழந்துள்ளனர். இதுவே தமிழ் பிரதேசங்களின் அரசியல் யதார்த்தமாக உள்ளது.

அரசியலமைப்பும் பாராளுமன்றத் தேர்தலும்

ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் அரசியல் அமைப்புச் சபை ஒன்றை உருவாக்குவதற்கான ஆணையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த அரசியல் அமைப்புச் சபை தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பை மாற்றியமைத்து புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும். இதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டு ஆட்சியமைப்பதன் மூலமே சாத்தியம் ஏற்படும். அந்த ஆணையையே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இம்முறை கோரவுள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறையின்படி எந்தவொரு கட்சியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. அதற்கு தேர்தல் முறையை மாற்றி அமைக்க வேண்டும். அதனாலேயே 17வது திருத்தச் சட்டதுக்கு ஆளும்கட்சி அழுத்தம் கொடுத்து வருகின்றது. அதனை நிறைவேற்றவும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசுக்கு தேவையாக உள்ளது.

இந்தப் பெரும்பான்மையைப் பெற்று தேர்தல் முறையை மாற்றி அமைக்க குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சிலரையாவது வாங்க அரசு முயற்சிக்கலாம்.

இவ்வாறான மாற்றங்களுக்கு ஊடாக அரசியல் அமைப்பை அரசு மாற்றி அமைத்தாலும் அது இலங்கையில் உள்ள சிறுபான்மை இனங்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவும் வகையில் மாற்றி அமைக்கப்படுமா என்பது சந்தேகத்திற்கு உரியதே. இது பற்றிய தெளிவான அறிவிப்பு எதனையும் ஜனாதிபதி வெளியிடவில்லை.

ரிஎன்ஏ உட்பட தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்துமே அடுத்த நான்கு வருடத்தில் தங்கள் அரசியல் எதிர்காலத்தை எவ்வாறு தக்க வைத்துக் கொள்ளலாம் என்பதையொட்டியே தங்கள் காய்களை நகர்த்துவர். தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிய அக்கறை பெரும்பாலும் தமிழ் அரசியல் கட்சிகளால் வெளிப்படுத்தப்படவில்லை. இனிமேலாவது அவ்வாறு வெளிப்படும் என்று எதிர்பார்ப்பதும் தவறு.