(இக்கட்டுரை எம். எம். சுஹைர் அவர்களால் எழுதப்பட்டதாகும். இவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமாவார்.)
அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக அறிவிப்பை விடுத்த தனது முதலாவது விரிவான ஊடகவியலாளர் மாநாட்டில், சரத் பொன்சேகா “எந்த வொரு சமூகமும் மித மிஞ்சிய அதிகாரங்களைக் கோரக் கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார். (டெய்லி மிரர் 30 நவம்பர் 2009 பிரதான தலைப்புச் செய்தி).
இவரின் இந்தக் கருத்தை வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் வாழுகின்ற தமிழ் மக்களுக்கும் அதேபோல் முஸ்லிம் மக்களுக்கும் எதிரான ஒரு தாக்குதலாகவே சிறுபான்மையின மக்கள் கருதுகின்றனர்.
இந்தச் சமூகங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் பெரும்பான்மை சமூக அரசுகளிடமிருந்து மித மிஞ்சிய அதிகாரங்களைக் கோரி வருகின்றனர் என்ற தொனிப் பொருளிலேயே அல்லது அந்த மாதிரியான சிந்தனையின் பின்னணியிலேயே சரத் பொன்சேகா இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார் என்றே கருதத் தோன்றுகின்றது.
இன உறவுகள் தொடர்பான மிகவும் பாரதூரமான உணர்வுபூர்வமான விடயத்தில் சரத் பொன்சேகாவின் இந்தக் கூற்று, அவர் இந்த விடயம் தொடர்பாக ஏற்கனவே தெரிவித்த கருத்துக்களை மீண்டும் உறுதி செய்வதாகவே அமைந்துள்ளது.
இதில் 23 ஆம் திகதி செப்டம்பர் மாதம் 2008 இல் கனடாவின் “நெஷனல் போஸ்ட்” இதழுக்கு அவர் வழங்கிய பேட்டியில் “சிறுபான்மையினராக இருக்கின்றோம் என்ற காரணத்துக்காக மித மிஞ்சிய விடயங்களுக்கு அவர்கள் கோரிக்கை விடுக்கக் கூடாது” என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். “இந்த நாடு சிங்களவர்களுக்கு மட்டுமே உரியது என்று நான் உறுதியாக நம்புகின்றேன். சிறுபான்மையினர் இங்கு விருந்தாளிகள் மட்டுமே” என்று அவர் ஏற்கனவே தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக அவர் வருத்தம் தெரிவிப்பார் அல்லது மன்னிப்புக் கோருவார் என்ற எதிர்ப்பார்ப்பு, இப்போது தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது. பல அவதானிகளின் கருத்தும் இதுவாகவே உள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் சரத்பொன்சேகா போட்டியிடும் அறிவிப்பை வழங்கிய அண்மைய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் இனிப்பு பூசப்பட்ட வில்லைக்குள் பழைய மருந்தை அடைத்துக் கொடுக்கும் ஒரு முயற்சியாகவே இருக்கின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைக்கவுள்ள பெரும்பான்மையின வாக்குகளை திசை திருப்பலாம் என்ற நோக்கில், சரத் பொன்சேகா இந்த அதி உயர் பதவிக்கான போட்டியில் குதித்திருந்தாலும் கூட, இந்த நாடு சிங்களவர்களுக்கே உரியது என்ற அவரது தொடர்ச்சியான கூற்று, இத்தகைய ஒரு தேர்தலில் முக்கியமானதாகக் கருதப்படும் சிறுபான்மையின வாக்குகளை அவருக்கு ஒருபோதும் வழங்கப்போவதில்லை.
ஏனெனில் சிறுபான்மையினர் தொடர்பாக பேசும்போது “விருந்தாளிகள்”, “சுற்றுலாப் பயணிகள்”, “கோரிக்கை”, “மிதமிஞ்சிய உரிமை” என்றெல்லாம் வார்த்தைப் பிரயோகங்களை அவர் அள்ளிக் கொட்டியிருப்பது வேண்டத்தகாத, விரும்பத்தகாத விடயமாகவே கருத்தப்படுகிறது.
சரத் பொன்சேகாவின் அரசியல் தர்க்கம் இது தான் என்றால், அது இந்த நாட்டின் இனக் குழுக்கள் அனைத்தையும் சிங்களக் குழுக்கள் உட்பட தேவையற்ற ஒரு முரண்பாட்டு அரசியல் சூழலுக்கே தள்ளிவிடும்.
ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த விடயத்தில் மிகவும் தெளிவான ஒரு நிலையிலேயே உள்ளார். அதாவது இந்த நாட்டில் எவரும் சிறுபான்மையினராகக் கருதப்படக் கூடாது. இந்த நாட்டை நேசிக்கும் எல்லோருமே பெரும்பான்மையினர் தான். தேசப்பற்றற்ற ஒரு சில தீய சக்திகள் மட்டுமே சிறுபான்மையாக இருக்கின்றன என்பது தான் ஜனாதிபதியின் நிலைப்பாடாக உள்ளது.
யாரும் தனக்கு உரிமையில்லாத எதையும் மிதமிஞ்சிய கோரிக்கையாக முன்வைக்கக் கூடாது. இது முற்றிலும் சரி. ஆனால் சரத் பொன்சேகா சிறுபான்மை, பெரும்பான்மை பேதம் இருக்கின்றது என்பதை மிகத் தெளிவாக முன்வைக்க முயலுகின்றார். (டெயிலி மிரர் 27 நவம்பர் 2009)மேலும் பெரும்பான்மையினர் தான் மற்றவர்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது. அவர்களுக்கு எந்தளவுக்கு அது இருக்கின்றது என்ற தீர்ப்பைக் கூற வேண்டியவர்கள் என்ற கருத்தையும் சரத் பொன்சேகா முன்வைத்துள்ளார்.
சரத் பொன்சேகாவின் இந்தக் கருத்து சகல பிரஜைகளுக்கும் இருக்கின்ற சமத்துவ உரிமைகள் தொடர்பான அரசியல் சாசன ஏற்பாடுகளை முற்றாக மீறுவதாக அமைந்துள்ளது. ஒருவருக்கு இன, மத மற்றும் வேறுபாடுகளுக்கு அப்பால் சமமான உரிமைகள் இருப்பதாக அரசியல் யாப்பு கூறுகின்றது.
“பயங்கரவாதத்தை ஒழிப்பதில் ஒரு பங்கு வகித்த தான் இப்போது “விருந்தாளிகளை”க் கையாள தயாராகி வருகின்றேன்” என்று சரத் பொன்சேகா கூறுவதாகவும் அவருடைய இந்தக் கருத்தில் இருந்து அர்த்தம் கொள்ள முடிகின்றது.
இந்த நாட்டின் சிங்களப் பெரும்பான்மை மக்களால் கூட முன்வைக்கப்படாத ஒரு தீவிரவாதக் கருத்தை சரத்பொன்சேகா மிகத் தெளிவாக முன்வைத்துள்ளார். 1972 மற்றும் 1978 அரசியல் யாப்புக்களில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் தொடர்பான ஏற்பாடுகளை முழு நாடும் ஆதரிக்கின்றது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கையை மீண்டும் ஒரு இருள் சூழ்ந்த யுகத்துக்குள் தள்ளிவிட சரத்பொன்சேகா எத்தனிக்கின்றாரா என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது.
அவர் ஆரம்பத்தில் இராணுவத் தளபதியாக இருக்கின்றபோது தான் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அதுவே அரசியல் சாசனத்தை மீறுகின்ற ஒரு செயலாகும். நாட்டின் அரசியல் சாசனத்தையும், அடிப்படைச் சட்டங்களையும் மீறி செயற்பட அவர் தயாராக இருக்கின்றார் என்ற கருத்திலேயே இதை நோக்க வேண்டியுள்ளது.
இதுபோன்ற கருத்தை இதற்கு முன்னர் வெளியிட்ட ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி டி. பி. விஜேதுங்க ஆவார். சிறுபான்மையினர் என்பவர்கள் ஒரு மரத்தை படர்ந்திருக்கும் செடிகள் போன்றவர்கள் என்று 1993 ஆம் ஆண்டில் அவர் தெரிவித்திருந்தார். அப்போதைய சிறுபான்மைத் தலைவர்கள் தொண்டமான் மற்றும் அஷ்ரப் ஆகியோர் இதற்கு தக்க பதிலளிக்கும் வகையில் ஐ. தே. க.விலிருந்து விலகி 1994 ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு ஆதரவு வழங்கினர்.
இந்த நாட்டின் சிறுபான்மையினர் “விருந்தாளிகள்” என்றும், அந்த “விருந்தாளிகளுக்கு” இந்த நாட்டில் உரிமை இல்லை என்றும் கூறுகின்றவர்கள், அவ்வாறு கூறுவதன் மூலம் வெளிநாட்டுச் சக்திகளின் தலையீட்டுக்கான கதவுகளையும் திறந்து விடுகின்றனர்.
சில சிறுபான்மையினர் கடந்த காலங்களில் வெளிநாட்டு ஆதரவுகளைப் பெற்றுக் கொள்ள முயற்சிகள் செய்துள்ள நிலையில், இத்தகைய கூற்றுக்கள் அவ்வாறான முயற்சிகளை நியாயப்படுத்தும் வருந்தத்தக்க ஒரு சூழலையே தோற்றுவிக்கும்.
வெளிநாடுகளுடனான ஒப்பந்தம் ஒன்றை பொன்சேகா மேற்கொண்டிருக்காவிட்டால், சிறுபான்மையினர் பற்றி அவர் மீண்டும் வித்தியாசமான ஒரு வடிவத்தில் உளறி இருக்கமாட்டார். அல்லது இந்த நாட்டுக்கு மிக அவசரமாகத் தேவைப்படும் தூரநோக்கு அவரிடம் கிடையாது என்பதே இந்த உளறலின் அர்த்தமாகும்.
பாக்கீர் மார்க்காரின் 12 வது ஞாபகார்த்தப் பேருரையை நிகழ்த்திய கலாநிதி, தயான் ஜயதிலக்க (ஐலண்ட் 30 நவம்பர் 2009) இந்த நாட்டுக்கு முன்னே உள்ள தெரிவை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.
“இலங்கை சிங்கள பெளத்தர்களுக்கு மட்டும் தான் சொந்தமானது. சிறுபான்மையினர் ஏதோ ஒரு வகையில் விருந்தாளிகள், அல்லது நாட்டுக்குள் வருகை தந்தவர்கள் என்ற குறிப்பானது, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்த நாட்டின் 60 வருட கால சுதந்திர வரலாற்றில் பெருமளவு பிரஜைகள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.
“இலங்கைக்கான வெற்றிகரமான ஒரு தனித்துவத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரே பாதை இன, மொழி மற்றும் சமய ரீதியான பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பேதங்கள் இன்றி இலங்கை நாடானது அதன் பிரஜைகள் அனைவருக்கும் சம அளவில் சொந்தமானது என்ற கருத்தை வலியுறுத்துவதாகும்.
‘நாங்கள் எல்லோரும் விரிவான ஒரே குடும்பத்தின் உறுப்பினர்கள்/ உறவினர்கள் என்ற வகையில் ஒருவருக்கொருவர் இயல்பான வித்தியாசங்களுடன் வாழப் போகின்றோமா அல்லது நாம் ஒருவருக்கொருவர் மேலாண்மைக்காகவும், ஏனைய பிரிவுகளுக்காகவும், இந்த சிறிய தீவில் வெவ்வேறு இறைமையுள்ள பிரதேசங்களுக்காகவும் மோதிக் கொள்ளும் கூட்டத்தினராக வாழப் போகின்றோமா இதில் இரண்டாவது நிலைமையை நாம் தெரிவு செய்தால், எமது காலம், வளம், உயிர்கள், எதிர்காலம் என எல்லாமே தொடர்ந்தும் நாசமாகிவிடும்.
“ஒரு நாடு என்ற வகையில் எமக்குள்ள வியக்கத்தக்க முழு ஆற்றல்களையும் நாம் அடைந்து கொள்ள முடியாமல் அது எமது எதிர்காலத்தை சீர்குலைத்துவிடும். பிளவுபட்டிருந்த நாடு இப்போது மீண்டும் ஐக்கியப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய அரசியல், இராணுவ, பொருளாதார, ராஜதந்திர தலைமையால் இது சாத்தியமாகியுள்ளது. அதற்காக நாம் அனைவரும் அவருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
“அவருடைய அடுத்த இலக்கு மக்கள் மத்தியில் சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதங்கள் இன்றி மக்களை ஐக்கியப்படுத்துவதாகும். அத்தோடு தனக்குள்ள நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறைகளைப் பயன்படுத்தி பொருளாதார ரீதியாகவும் நாட்டை விரைவில் விருத்தி செய்வதும் அவரது குறிக்கோளாகும்.
“இந்த இலக்குகளை அடைந்துகொள்ள இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் யுத்தம் வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ராஜபக்ஷ சகோதரர்களால் அமைதியும், பாதுகாப்பான சூழலும் ஏற்படுத்தப்பட்டது என்பதை நினைவு கூர கடமைப்பட்டுள்ளனர்.
“இன அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தவோ, அல்லது வேறு வழிகளில் புதிதாக, இன மோதல்களை அல்லது சமய மோதல்களை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் எந்த ஒரு முயற்சியையும் இந்த நாட்டின் பிரஜைகள் நிராகரிக்க வேண்டும்.”
நன்றி: தினகரன்- 09.12.2009