::தேர்தல்கள்

::தேர்தல்கள்

இலங்கைத் தேர்தல்கள் பற்றிய செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

ஜனாதிபதி தேர்தலுக்கு மேலும் இருவர் கட்டுப்பணம்

vote.jpgஜனாதி பதித் தேர்தலில் போட்டியிடு வதற்காக நேற்றும் ஒரு அரசியல் கட்சியும், சுயேச்சை வேட்பாளரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இதன்படி ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவென ஒன்பது அரசியல் கட்சிகளும், ஒரு சுயேச்சை வேட்பாளரும் நேற்று வரையும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

சிறுபான்மையினர் பற்றிய சரத் பொன்சேகாவின் முரண்பாடான கருத்துக்கள் அரசியல் யாப்பை மீறுபவை – சட்டத்தரணி எம். எம். சுஹைர்

pr-can.jpg(இக்கட்டுரை எம். எம். சுஹைர் அவர்களால் எழுதப்பட்டதாகும். இவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமாவார்.)

அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக அறிவிப்பை விடுத்த தனது முதலாவது விரிவான ஊடகவியலாளர் மாநாட்டில், சரத் பொன்சேகா “எந்த வொரு சமூகமும் மித மிஞ்சிய அதிகாரங்களைக் கோரக் கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.  (டெய்லி மிரர் 30 நவம்பர் 2009 பிரதான தலைப்புச் செய்தி).

இவரின் இந்தக் கருத்தை வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் வாழுகின்ற தமிழ் மக்களுக்கும் அதேபோல் முஸ்லிம் மக்களுக்கும் எதிரான ஒரு தாக்குதலாகவே சிறுபான்மையின மக்கள் கருதுகின்றனர்.

இந்தச் சமூகங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் பெரும்பான்மை சமூக அரசுகளிடமிருந்து மித மிஞ்சிய அதிகாரங்களைக் கோரி வருகின்றனர் என்ற தொனிப் பொருளிலேயே அல்லது அந்த மாதிரியான சிந்தனையின் பின்னணியிலேயே சரத் பொன்சேகா இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார் என்றே கருதத் தோன்றுகின்றது.

இன உறவுகள் தொடர்பான மிகவும் பாரதூரமான உணர்வுபூர்வமான விடயத்தில் சரத் பொன்சேகாவின் இந்தக் கூற்று, அவர் இந்த விடயம் தொடர்பாக ஏற்கனவே தெரிவித்த கருத்துக்களை மீண்டும் உறுதி செய்வதாகவே அமைந்துள்ளது.

இதில் 23 ஆம் திகதி செப்டம்பர் மாதம் 2008 இல் கனடாவின் “நெஷனல் போஸ்ட்” இதழுக்கு அவர் வழங்கிய பேட்டியில் “சிறுபான்மையினராக இருக்கின்றோம் என்ற காரணத்துக்காக மித மிஞ்சிய விடயங்களுக்கு அவர்கள் கோரிக்கை விடுக்கக் கூடாது” என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். “இந்த நாடு சிங்களவர்களுக்கு மட்டுமே உரியது என்று நான் உறுதியாக நம்புகின்றேன். சிறுபான்மையினர் இங்கு விருந்தாளிகள் மட்டுமே” என்று அவர் ஏற்கனவே தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக அவர் வருத்தம் தெரிவிப்பார் அல்லது மன்னிப்புக் கோருவார் என்ற எதிர்ப்பார்ப்பு,  இப்போது தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது. பல அவதானிகளின் கருத்தும் இதுவாகவே உள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் சரத்பொன்சேகா போட்டியிடும் அறிவிப்பை வழங்கிய அண்மைய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் இனிப்பு பூசப்பட்ட வில்லைக்குள் பழைய மருந்தை அடைத்துக் கொடுக்கும் ஒரு முயற்சியாகவே இருக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைக்கவுள்ள பெரும்பான்மையின வாக்குகளை திசை திருப்பலாம் என்ற நோக்கில், சரத் பொன்சேகா இந்த அதி உயர் பதவிக்கான போட்டியில் குதித்திருந்தாலும் கூட,  இந்த நாடு சிங்களவர்களுக்கே உரியது என்ற அவரது தொடர்ச்சியான கூற்று, இத்தகைய ஒரு தேர்தலில் முக்கியமானதாகக் கருதப்படும் சிறுபான்மையின வாக்குகளை அவருக்கு ஒருபோதும் வழங்கப்போவதில்லை.

ஏனெனில் சிறுபான்மையினர் தொடர்பாக பேசும்போது “விருந்தாளிகள்”, “சுற்றுலாப் பயணிகள்”, “கோரிக்கை”, “மிதமிஞ்சிய உரிமை” என்றெல்லாம் வார்த்தைப் பிரயோகங்களை அவர் அள்ளிக் கொட்டியிருப்பது வேண்டத்தகாத, விரும்பத்தகாத விடயமாகவே கருத்தப்படுகிறது.

சரத் பொன்சேகாவின் அரசியல் தர்க்கம் இது தான் என்றால், அது இந்த நாட்டின் இனக் குழுக்கள் அனைத்தையும் சிங்களக் குழுக்கள் உட்பட தேவையற்ற ஒரு முரண்பாட்டு அரசியல் சூழலுக்கே தள்ளிவிடும்.

ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த விடயத்தில் மிகவும் தெளிவான ஒரு நிலையிலேயே உள்ளார். அதாவது இந்த நாட்டில் எவரும் சிறுபான்மையினராகக் கருதப்படக் கூடாது. இந்த நாட்டை நேசிக்கும் எல்லோருமே பெரும்பான்மையினர் தான். தேசப்பற்றற்ற ஒரு சில தீய சக்திகள் மட்டுமே சிறுபான்மையாக இருக்கின்றன என்பது தான் ஜனாதிபதியின் நிலைப்பாடாக உள்ளது.

யாரும் தனக்கு உரிமையில்லாத எதையும் மிதமிஞ்சிய கோரிக்கையாக முன்வைக்கக் கூடாது. இது முற்றிலும் சரி. ஆனால் சரத் பொன்சேகா சிறுபான்மை, பெரும்பான்மை பேதம் இருக்கின்றது என்பதை மிகத் தெளிவாக முன்வைக்க முயலுகின்றார். (டெயிலி மிரர் 27 நவம்பர் 2009)மேலும் பெரும்பான்மையினர் தான் மற்றவர்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது. அவர்களுக்கு எந்தளவுக்கு அது இருக்கின்றது என்ற தீர்ப்பைக் கூற வேண்டியவர்கள் என்ற கருத்தையும் சரத் பொன்சேகா முன்வைத்துள்ளார்.

சரத் பொன்சேகாவின் இந்தக் கருத்து சகல பிரஜைகளுக்கும் இருக்கின்ற சமத்துவ உரிமைகள் தொடர்பான அரசியல் சாசன ஏற்பாடுகளை முற்றாக மீறுவதாக அமைந்துள்ளது. ஒருவருக்கு இன, மத மற்றும் வேறுபாடுகளுக்கு அப்பால் சமமான உரிமைகள் இருப்பதாக அரசியல் யாப்பு கூறுகின்றது.

“பயங்கரவாதத்தை ஒழிப்பதில் ஒரு பங்கு வகித்த தான் இப்போது “விருந்தாளிகளை”க் கையாள தயாராகி வருகின்றேன்” என்று சரத் பொன்சேகா கூறுவதாகவும் அவருடைய இந்தக் கருத்தில் இருந்து அர்த்தம் கொள்ள முடிகின்றது.

இந்த நாட்டின் சிங்களப் பெரும்பான்மை மக்களால் கூட முன்வைக்கப்படாத ஒரு தீவிரவாதக் கருத்தை சரத்பொன்சேகா மிகத் தெளிவாக முன்வைத்துள்ளார். 1972 மற்றும் 1978 அரசியல் யாப்புக்களில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் தொடர்பான ஏற்பாடுகளை முழு நாடும் ஆதரிக்கின்றது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கையை மீண்டும் ஒரு இருள் சூழ்ந்த யுகத்துக்குள் தள்ளிவிட சரத்பொன்சேகா எத்தனிக்கின்றாரா என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது.

அவர் ஆரம்பத்தில் இராணுவத் தளபதியாக இருக்கின்றபோது தான் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அதுவே அரசியல் சாசனத்தை மீறுகின்ற ஒரு செயலாகும். நாட்டின் அரசியல் சாசனத்தையும், அடிப்படைச் சட்டங்களையும் மீறி செயற்பட அவர் தயாராக இருக்கின்றார் என்ற கருத்திலேயே இதை நோக்க வேண்டியுள்ளது.

இதுபோன்ற கருத்தை இதற்கு முன்னர் வெளியிட்ட ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி டி. பி. விஜேதுங்க ஆவார். சிறுபான்மையினர் என்பவர்கள் ஒரு மரத்தை படர்ந்திருக்கும் செடிகள் போன்றவர்கள் என்று 1993 ஆம் ஆண்டில் அவர் தெரிவித்திருந்தார்.  அப்போதைய சிறுபான்மைத் தலைவர்கள் தொண்டமான் மற்றும் அஷ்ரப் ஆகியோர் இதற்கு தக்க பதிலளிக்கும் வகையில் ஐ. தே. க.விலிருந்து விலகி 1994 ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு ஆதரவு வழங்கினர்.

இந்த நாட்டின் சிறுபான்மையினர் “விருந்தாளிகள்” என்றும், அந்த “விருந்தாளிகளுக்கு” இந்த நாட்டில் உரிமை இல்லை என்றும் கூறுகின்றவர்கள், அவ்வாறு கூறுவதன் மூலம் வெளிநாட்டுச் சக்திகளின் தலையீட்டுக்கான கதவுகளையும் திறந்து விடுகின்றனர்.

சில சிறுபான்மையினர் கடந்த காலங்களில் வெளிநாட்டு ஆதரவுகளைப் பெற்றுக் கொள்ள முயற்சிகள் செய்துள்ள நிலையில்,  இத்தகைய கூற்றுக்கள் அவ்வாறான முயற்சிகளை நியாயப்படுத்தும் வருந்தத்தக்க ஒரு சூழலையே தோற்றுவிக்கும்.

வெளிநாடுகளுடனான ஒப்பந்தம் ஒன்றை பொன்சேகா மேற்கொண்டிருக்காவிட்டால், சிறுபான்மையினர் பற்றி அவர் மீண்டும் வித்தியாசமான ஒரு வடிவத்தில் உளறி இருக்கமாட்டார். அல்லது இந்த நாட்டுக்கு மிக அவசரமாகத் தேவைப்படும் தூரநோக்கு அவரிடம் கிடையாது என்பதே இந்த உளறலின் அர்த்தமாகும்.

பாக்கீர் மார்க்காரின் 12 வது ஞாபகார்த்தப் பேருரையை நிகழ்த்திய கலாநிதி, தயான் ஜயதிலக்க (ஐலண்ட் 30 நவம்பர் 2009) இந்த நாட்டுக்கு முன்னே உள்ள தெரிவை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.

“இலங்கை சிங்கள பெளத்தர்களுக்கு மட்டும் தான் சொந்தமானது. சிறுபான்மையினர் ஏதோ ஒரு வகையில் விருந்தாளிகள், அல்லது நாட்டுக்குள் வருகை தந்தவர்கள் என்ற குறிப்பானது, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்த நாட்டின் 60 வருட கால சுதந்திர வரலாற்றில் பெருமளவு பிரஜைகள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.

“இலங்கைக்கான வெற்றிகரமான ஒரு தனித்துவத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரே பாதை இன, மொழி மற்றும் சமய ரீதியான பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பேதங்கள் இன்றி இலங்கை நாடானது அதன் பிரஜைகள் அனைவருக்கும் சம அளவில் சொந்தமானது என்ற கருத்தை வலியுறுத்துவதாகும்.

‘நாங்கள் எல்லோரும் விரிவான ஒரே குடும்பத்தின் உறுப்பினர்கள்/ உறவினர்கள் என்ற வகையில் ஒருவருக்கொருவர் இயல்பான வித்தியாசங்களுடன் வாழப் போகின்றோமா அல்லது நாம் ஒருவருக்கொருவர் மேலாண்மைக்காகவும், ஏனைய பிரிவுகளுக்காகவும், இந்த சிறிய தீவில் வெவ்வேறு இறைமையுள்ள பிரதேசங்களுக்காகவும் மோதிக் கொள்ளும் கூட்டத்தினராக வாழப் போகின்றோமா இதில் இரண்டாவது நிலைமையை நாம் தெரிவு செய்தால், எமது காலம், வளம், உயிர்கள், எதிர்காலம் என எல்லாமே தொடர்ந்தும் நாசமாகிவிடும்.

“ஒரு நாடு என்ற வகையில் எமக்குள்ள வியக்கத்தக்க முழு ஆற்றல்களையும் நாம் அடைந்து கொள்ள முடியாமல் அது எமது எதிர்காலத்தை சீர்குலைத்துவிடும். பிளவுபட்டிருந்த நாடு இப்போது மீண்டும் ஐக்கியப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய அரசியல், இராணுவ, பொருளாதார, ராஜதந்திர தலைமையால் இது சாத்தியமாகியுள்ளது. அதற்காக நாம் அனைவரும் அவருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.

“அவருடைய அடுத்த இலக்கு மக்கள் மத்தியில் சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதங்கள் இன்றி மக்களை ஐக்கியப்படுத்துவதாகும். அத்தோடு தனக்குள்ள நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறைகளைப் பயன்படுத்தி பொருளாதார ரீதியாகவும் நாட்டை விரைவில் விருத்தி செய்வதும் அவரது குறிக்கோளாகும்.

“இந்த இலக்குகளை அடைந்துகொள்ள இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் யுத்தம் வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ராஜபக்ஷ சகோதரர்களால் அமைதியும், பாதுகாப்பான சூழலும் ஏற்படுத்தப்பட்டது என்பதை நினைவு கூர கடமைப்பட்டுள்ளனர்.

“இன அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தவோ, அல்லது வேறு வழிகளில் புதிதாக, இன மோதல்களை அல்லது சமய மோதல்களை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் எந்த ஒரு முயற்சியையும் இந்த நாட்டின் பிரஜைகள் நிராகரிக்க வேண்டும்.”

நன்றி: தினகரன்- 09.12.2009

ஜனாதிபதி மஹிந்த சார்பில் நேற்று கட்டுப்பணம்

elc-2010.jpgஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பாக நேற்று (7) தேர்தல் செயலகத்தில் கட்டுப் பணம் செலுத்தப்பட்டது.

ஐ. ம. சு. முன்னணி செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் ஐ. ம. சு. முன்னணி சார்பாக நேற்று கட்டுப்பணம் செலுத்தியதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிறி தெரிவித்தார்.

ஏற்கனவே 7 வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் இது வரை 8 பேர் கட்டுப் பணம் செலுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.

எதிர்வரும் 16 ஆம் திகதி நண்பகல் வரை கட்டுப்பணம் ஏற்கப்படவுள்ளன.

தேர்தலைக் கண்காணிக்க 4 வெளிநாட்டுக் குழுக்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கா உறுதியளிப்பு

dayananda_disanayake.jpgஜனவரி 26 இல் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை கண்காணிக்க 4 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் வருகை தரவுள்ளன. ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம், ஆசிய தேர்தல் ஆணைக்குழு என்பனவற்றைச் சேர்ந்த நான்கு குழுக்கள் தேர்தலை கண்காணிக்குமென தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தமக்கு அறிவித்திருப்பதாக ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.

எதிர்க் கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் திஸ்ஸ அத்தநாயக்க இத்தகவலை தெரிவித்தார்.எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது வேட்பாளரின் தேர்தல் பிரசாரங்களைத் தடுப்பதற்கு அரசாங்க அதிகாரிகள் சிலர் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் தொடர்பான விபரங்களைத் திரட்டி வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்ததுடன், பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஐ.தே.மு. ஆட்சியமைக்கையில் அவர்கள் தொடர்பாக சட்டரீதியில் நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

திசாநாயக்கவின் இல்லத்தில் ஜனாதிபதி, எஸ்.பி.திசாநாயக்க இடையில் நேற்று சந்திப்பு

sb-dissanayake.jpgஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திசாநாயக்க இன்று திங்கட்கிழமை தனது எதிர்காலத்திட்டங்கள் தொடர்பாக செய்தியாளர் மாநாட்டில் அறிவிக்கவுள்ளார்.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எஸ்.பி.திசாநாயக்க ஆதரவளிப்பாரென ஊகங்கள் வெளிப்படுத்தப்படும் நிலையில் இன்று செய்தியாளர் மாநாடு இடம்பெறவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி சன்டே ரைம்ஸ் நேற்று ஞாயிறு மாலை தெரிவித்தது. 

இதேவேளை, ஹங்குரான்கெத்தவிலுள்ள திசாநாயக்கவின் இல்லத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் எஸ்.பி.திசாநாயக்கவுக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் வெலிசறையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் கட்சியின் பிரதம அமைப்பாளரான எஸ்.பி.திசாநாயக்க கலந்துகொள்ளவில்லை. தனது தீர்மானத்தை அறிவிப்பதற்காக இன்று திங்கட்கிழமை திசாநாயக்க கொழும்பில் செய்தியாளர் மாநாட்டைத் திட்டமிடுவதாக அவரின் ஊடகப் பேச்சாளர் கூறியதாக சன்டே ரைம்ஸ் தெரிவித்தது. எஸ்.பி.திசாநாயக்க தற்போது மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தில் பல முக்கிய அமைச்சுப் பொறுப்புகளை வகித்திருந்த எஸ்.பி.திசாநாயக்க பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ்க் கூட்டமைப்பு செவ்வாய் தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பாக அக்கட்சி இன்னமும் தீர்மானிக்கவில்லை.அதேசமயம், தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது குறித்தும் முடிவெடுக்கப் படவில்லையென அக்கட்சியின் திருமலைமாவட்ட எம்.பி. பி.துரைரெட்ணசிங்கம் சனிக்கிழமை கூறியுள்ளார்.ஆயினும் நாளை செவ்வாய்க்கிழமை ஜனாதிபதித்தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எடுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறினால் சுயேச்சை வேட்பாளராக தான் போட்டியிடப் போவதாக யாழ்.மாவட்ட எம்.பி. எம்.கே.சிவாஜிலிங்கம் இந்தியாவில் தெரிவித்திருந்ததாக செய்திகள் வெளியான நிலையிலேயே துரைரெட்ணசிங்கம் இந்தக் கருத்துகளை கூறியுள்ளார்.

இதேநேரம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பி.க்கள் சிலர் வெவ்வேறான கருத்துக்களை வெளியிட்டாலும் இத்தேர்தல் தொடர்பாக கூட்டமைப்பு விரைவில் உறுதியான முடிவொன்றை எடுக்குமென கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த முடிவுக்கு அனைத்து எம்.பி.க்களும் கட்டுப்படுவரெனவும் அதனால் தற்போது கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்படும் கருத்துக்கள் குறித்து மக்கள் குழப்பமடையத் தேவையில்லையென்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க ஈரோஸ் முடிவு

ஈரோஸ் (ஈழவர் ஜனநாயகக் கட்சி) ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதென முடிவு செய்துள்ளதாக கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஈரோஸ் தலைவர் ‘தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை நன்கு அடையாளம் கண்டவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரினாலேயே தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிட்டும்.

சரத் பொன்சேகா ஒரு இராணுவத் தளபதி. அவருக்கு அரசியல் என்பது பூஜ்யம். இத்தகைய ஒருவரினால் ஒரு ஜனநாயக நாட்டை எவ்வாறு ஆட்சி செய்ய முடியும். முப்பது வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து வட கிழக்கு மக்களின் வாழ்வில் நிம்மதியைக் கொடுத்த மஹிந்த ராஜபக்ஷவிற்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.

மலையக மக்கள் முன்னணி இன்று தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலில் மலையக மக்கள் முன்னணியின் நிலைப்பா ட்டை தீர்மானிக்க “விரிவுபடுத்தப் பட்ட மத்திய குழு” இன்று சனிக்கிழமை தலவாக்கலையில் கூடி ஆரா ய்கிறது. தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பாகவும் மலையக மக்களின் எதிர்கால அரசியல் உரிமைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி வேட்பாளர்கள் பகிரங்கப்படுத்தும் தீர்வுகளின் அடிப்படையிலேயே ஜனாதிபதி வேட்பாளரை தமது கட்சி ஆதரிக்க வேண்டுமென மலையக மக்கள் முன்னணியின் சகலமட்ட அங்கத்தவர்களும் முன்னணியின் தலைவரும், அமைச்சருமான பெ. சந்திரசேகரனை சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஜனாதிபதித் தேர்தல்; 6 அரசியல் கட்சிகள் நேற்று கட்டுப்பணம் செலுத்தின

vote.jpgஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட ஆறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று (03) வியாழக்கிழமை கட்டுப்பணம் செலுத்தினர்.

* ஐக்கிய சோசலிச கட்சியைச் சேர்ந்த சிறிதுங்க ஜயசூரிய,
* ஒக்கொம வெசியோ ஒக்கொம ரஜவரு அமைப்பைச் சேர்ந்த எம். பி. தெமினிமுல்ல,
* ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணியின் ஜே. எ. பீற்றர் நெல்சன் பெரேரா,
* நவ சிஹல உறுமயவின் சரத் மனமேந்திர,
* ஜாதிக சங்வர்தன பெரமுனையைச் சேர்ந்த அச்சல அசோக சுரவீர,
* ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியின் பீ. டி. பீ. எஸ். ஏ. லியனகே

ஆகிய அறுவருமே நேற்றுத் தமது வைப்புப் பணத்தை செலுத்தியதாக தேர்தல்கள் ஆணை யாளர் தயானந்த திசாநாயக்க அறிவித்துள்ளார்.

மேற்குலகின் சதிவலையில் ஐ.தே.கவும், ஜே.வி.பியும்

msri-sens.jpgபிராந்தி யத்தில் ஒரு ஸ்திரமற்ற நிலையை உருவாக்கவும், புதிய ஆக்கிரமிப்புப் போக்கினைக் கடைப்பிடிக்கவும் மேற்குலக சக்திகள் சதிமுயற்சியில் ஈடுபட்டுள்ளன. மேற்குலகின் இந்த சதிவலையில் ஐக்கிய தேசிய கட்சியும், ஜே.வி.பியும் வீழ்ந்துள்ளது மாத்திரமல்லாமல் அதில் சரத் பொன்சேகாவையும் சிக்கவைத்துள்ளதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறினார்.

இந்தச் சதிவலைக்கு இடமளிக்காமல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலுவுடன் உள்ளதோடு மக்களும் ஓர் எழுச்சியுடன் காணப்படுகிறார்கள் என்றும் அமைச்சர் மைத்திரிபால சுட்டிக்காட்டினார்.

கொழும்பு மகாவலி மையத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். “எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் வரலாற்றில் முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு ஜனாதிபதி பாரிய வெற்றியைப் பெறுவார். மக்களின் பொதுவான எதிர்பார்ப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷதான். ஜனாதிபதி முன்னணியிலிருக்கும் தூரத்தையும் எதிர்க்கட்சி வேட்பாளர் பின்னடைவில் உள்ள தூரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால், எதிர்க்கட்சி வேட்பாளர் ஜனாதிபதியை நெருங்கவே முடியாது. ஜனாதிபதிக்கு எந்தச் சவாலும் கிடையாது.

அதேநேரம் போட்டியும் இல்லை. மக்களின் ஏகோபித்த ஆதரவில் ஜனாதிபதி மீண்டும் அமோக வெற்றியீட்டுவார். நாட்டின் பிரதான பிரச்சினையைத் தீர்த்ததைப் போல் ஏனைய பிரச்சினைகளையும் ஜனாதிபதி தீர்த்து வைப்பார். ஜே.வி.பியும் ஐ.தே.க.வும் சந்தர்ப்பவாத கூட்டணியொன்றை அமைத்துள்ளன.

‘இந்து’ பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் இதுபற்றி விபரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அமைச்சர் மைத்திரிபால, அன்று புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டு ஆயுதங்களை வழங்கிய மேற்குலக சக்திகளே இன்று இலங்கையில் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகவும், அந்தச் சூழ்ச்சியில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பியும் வீழ்ந்து நாட்டை குழப்புவதாகக் கூறினார்.

அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் கட்சிமாறப் போவதாக இணையத்தளங்களில் செய்தி வெளியிடுகிறார்கள். இது உண்மைக்குப் புறம்பானது. அமைச்சர்கள், எம்.பிக்கள் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாகவே உள்ளோம். கட்சிமாறும் பேச்சுக்கே இடமில்லை. எதிர்க்கட்சியால் எம்மைக் குழப்ப முடியாது என்றும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறினார்.