மாவை.சேனா

மாவை.சேனா

“மாவீரர் தின நினைவேந்தல், இறந்த உறவுகளுக்கு மக்கள் அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதில் திட்டவட்டமாக உள்ளோம்” – மாவை சேனாதிராஜா

“மாவீரர் தின நினைவேந்தல், இறந்த உறவுகளுக்கு மக்கள் அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதில் திட்டவட்டமாக உள்ளோம்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம்(18.11.2020)  ஒன்றினைந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இரு முக்கிய விடயங்கள் பற்றி ஆராய்ந்தோம். அதாவது தமிழ் தேசியக் கட்சிகளின் ஒற்றுமை தொடர்பாகவும், மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமை தொடர்பில் தமிழ் தேசியத்தின்பால் உள்ள கட்சிகளின் தலைவர்களை அழைத்து பேசுவதென தீர்மானித்திருந்தோம். மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பிலும் ஆராய்ந்தோம்.

அந்தந்த துயிலுமில்ல பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடுவதென தீர்மானித்தோம். கொரோனா வைரஸ் காலத்தில் மக்கள் பாதுகாப்பாக எவ்வாறு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதனை அடுத்தவாரமளவில் அறிக்கை மூலம் வெளியிடுவோம்.

மாவீரர் தின நினைவேந்தல், இறந்த உறவுகளுக்கு மக்கள் அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதில் திட்டவட்டமாக உள்ளோம்.

மாவீரர் தின நிகழ்வுகளை தடையின்றி நடத்துவதற்கு தேவைப்பட்டால் அரசாங்கத்துடன் பேசுவோம்” எனவும் மேலும் அவர்  தெரிவித்துள்ளார்.