பொதுஜன பெரமுன

பொதுஜன பெரமுன

“எமது கைகளில் இரத்தக் கறையில்லை. புதிய பரிணாமத்தை நோக்கி பயணிக்க தமிழ்,முஸ்லிம் மக்கள் எம்முடன் ஒன்றிணைய வேண்டும்.” – மஹிந்த ராஜபக்ஷ

“எமது கைகளில் இரத்தக் கறையில்லை. புதிய பரிணாமத்தை நோக்கி பயணிக்க தமிழ்,முஸ்லிம் மக்கள் எம்முடன் ஒன்றிணைய வேண்டும்.” என முன்னாள் ஜனாதிபதியும்,பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பு சுஹததாஸ உள்ளக அரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாட்டில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கை எமது பாரிய பலமாகும்.எமது நம்பிக்கையை மக்கள் பாதுகாத்துள்ளார்கள்.பாரிய சவால்களுக்கு மத்தியில் மக்கள் எம்முடன் உள்ளார்கள் என்பது பலவிடயங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டை சுட்டிக்காட்டி சமூக வலைத்தளங்களில் சேறு பூசும் விமர்சனங்கள், தவறான கருத்துக்கள் பதிவேற்றப்பட்டுள்ளதை அவதானித்துள்ளோம்.போலியான குற்றச்சாட்டுகள்,சேறு பூசல்கள் ஒன்றும் எமக்கு புதிதல்ல, 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாறான நிலைமைக்கு முகம் கொடுத்தோம்.

30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நான் நாட்டை அபிவிருத்தி செய்தேன்.யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாமல் ஒருசில அரச தலைவர்கள் பிரபாகரனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்.ஒருசிலர் பிரபாகரனுக்கு ஆயுதம் வழங்கி புலிகளின் போராட்டத்தை தூண்டி விட்டார்கள்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து தமிழ்,சி;ங்களம் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் வாழும் சூழலை ஏற்படுத்தினேன்.பொருளாதாரத்தை மேம்படுத்தினேன். இவ்வாறான பின்னணியில் 2015 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் மாற்றத்தை  எதிர்பார்த்தார்கள். நான் அதற்கும் இடமளித்தேன்.

2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் எமது பொருளாதார கொள்கைக்கு முரணாக செயற்பட்டது.தவறான தீர்மானங்கள்,காட்டிக் கொடுப்புகள் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தின. 2015 ஆம் ஆண்டு அரசாங்கமே வரையறையற்ற வகையில் வெளிநாட்டு கடன்களை பெற்று நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியது.

2019 ஆம் ஆண்டு பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள். நல்லாட்சி அரசாங்கத்தினால் பலவீனப்படுத்தப்பட்ட நிதி நிலைமையை நாங்கள் பொறுப்பேற்றோம்.கொவிட் பெருந்தொற்று தாக்கம் பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தியது.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்கினோம்.பொருளாதார பாதிப்பை ஒரு தரப்பினர் தமது அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்திக் கொண்டு அரகலய என்பதொன்றை தோற்றுவித்தார்கள்.

ஜனாதிபதியின் ஆடையை அணிந்துக் கொள்ள இன்று பலர் தயாராகவுள்ளார்கள்.பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரசாங்கத்தை பொறுப்பேற்காமல், தப்பிச் சென்றவர்களிடம் மக்கள் ஒருபோதும் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்கப் போவதில்லை.

ஒருசிலர் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இளைஞர்களை தவறான வழிநடத்துகிறார்கள்.தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான ஆலோசனைகள் மற்றும் கட்டளைகளுக்கு அமைய அவர்கள் நாட்டுக்கு எதிராக செயற்படுகிறார்கள்.ஒரு தரப்பினரது குறுகிய நோக்கங்களுக்காக நாட்டை பிளவுப்படுத்த இடமளிக்க முடியாது.

எமது கைகளில் இரத்தக் கறையில்லை.புதிய பரிணாமத்தை நோக்கி பயணிக்க தமிழ்,முஸ்லிம் மக்கள் எம்முடன் ஒன்றிணைய வேண்டும்.அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தல்களில் நாங்கள் வெற்றிப்பெறுவோம்.எமது பயணத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

“டொலருக்கு அடிமையானவர்களே ராஜபக்ஷர்களுக்கு எதிராக செயற்படுகிறார்கள்.” – பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு !

“டொலருக்கு அடிமையானவர்களே பொதுஜன பெரமுனளுக்கு எதிராக திட்டமிட்ட வகையில் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளார்கள்.“ என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஹிங்குராகொட பகுதியில்  இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ராஜபக்ஷர்கள் நாட்டுக்கு சேவையாற்றினார்களே தவிர நாட்டுக்கு தீ வைக்கவில்லை. பொதுஜன பெரமுன தலைமையிலான எமது அரசாங்கத்தில் அமைச்சரவையில் இருந்தவர்கள் பொருளாதாரப் பாதிப்பை அரசியல் நெருக்கடியாக மாற்றியமைத்தார்கள்.

ஜனநாயக போராட்டம் என்று குறிப்பிட்டுக்கொண்டு கடந்த ஆண்டு பயங்கரவாத செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டன. டொலருக்கு அடிமையானவர்கள் ராஜபக்ஷர்களுக்கு எதிராக திட்டமிட்ட வகையில் பிரசாரங்களை முன்னெடுக்கிறார்கள்.

ராஜபக்ஷர்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை பெரும்பாலான மக்கள் நன்கு அறிவார்கள்.ஆகவே போலியான பிரசாரங்களுக்கு மக்கள் இனி ஏமாற்றமடைய மாட்டார்கள். கட்சி என்ற ரீதியில் மறுசீரமைப்புடன் பலமடைந்துள்ளோம்.

இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவவே ஆட்சியமைக்கும். பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே நாங்கள் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம். எக்காரணிகளுக்காகவும் எமது கட்சி கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றார்.

நாட்டை முன்னேற்றவே பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டம் – ராஜபக்ஷ தரப்பு விளக்கம் !

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சட்டமூலம் பயங்கரவாதத்திற்கு எதிரானதே தவிர, ஜனநாயகத்திற்கு எதிரானதல்ல என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டம் உருவாக்கப்படவுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

“குறுகிய அரசியல் நோக்கத்திற்காக தொழிற்சங்கத்தினர் பொருளாதாரத்தை பாதிப்பிற்குள்ளாக்கும் வகையில் தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.

தங்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக மக்களையும், அரசாங்கத்தையும் இவர்கள் நெருக்கடிக்குள்ளாக்குகிறார்கள்.

நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் ஒழுக்கத்தை அடிப்படையாக கொண்டு செயற்பட வேண்டும் அதற்கு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்தால் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது.“ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“தவறு இடம்பெறுவது இயல்பு. அதனை ஏற்க வெட்கப்பட வேண்டியதில்லை.” – மகிந்த ராஜபக்ச

“தவறு இடம்பெறுவது இயல்பு. அதனை ஏற்க வெட்கப்பட வேண்டியதில்லை. தவறை திருத்திக் கொள்ள முற்படாமல் முடங்கி இருப்பதுதான் வெட்கம்.” என மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன கட்சியின் நாவலப்பிட்டிய தொகுதி கூட்டத்தில் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அங்கு பேசிய அவர்,

இலங்கையில் அமைதி நிலவுவதையும் இலங்கையர்கள் சுயமாக எழுவதையும் சகித்துக் கொள்ள முடியாத சிலர், கையேந்தும் நிலையையே விரும்புகின்றனர். இந்நிலைமை மாற வேண்டும் என்றும் அனைவரும் ஒன்றிணைந்து பொது வேலைத்திட்டத்தின் கீழ் பயணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாம் ஒரு நாடாக பல சவால்களை சந்தித்துள்ளோம். கொவிட் பிரச்சினையை எதிர்கொண்டு, மீண்டெழ முயற்சிக்கும்போது பொருளாதார சவால் ஏற்பட்டது.

அதனை எதிர்கொள்கையில் பிரச்சினைகளும் ஏற்பட்டன. மன்னர் காலத்தில் இருந்தே ஆக்கிரமிப்பு போன்ற சவால்களை, ஒன்றாக இருந்து – எழுந்து எதிர்கொண்ட வரலாறு எமக்கு உள்ளது. இது தெரிந்தும், தெரியாதவர்கள்போல் சிலர் செயற்படுகின்றனர்.

சவால்களை ஏற்பதற்கு தைரியமின்றி, விமர்சனங்களை மட்டும் முன்வைத்துக்கொண்டு, சுமைகளை எம்மீது திணிக்கின்றனர். தவறுக்கு நாம் மட்டுமே பொறுப்பு என பந்தாடியும் எம்மை பந்தாடியும் வருகின்றனர்.

மறுபுறத்தில் சேறுபூசும் நடவடிக்கையும் இடம்பெறுகின்றது. தாங்கள் நல்லவர்கள் என காட்டிக் கொள்ள முற்படுபவர்களும் தவறுகளை இழைத்துள்ளனர். தவறு இடம்பெறுவது இயல்பு. அதனை ஏற்க வெட்கப்பட வேண்டியதில்லை. தவறை திருத்திக் கொள்ள முற்படாமல் முடங்கி இருப்பதுதான் வெட்கம்.

பொதுவேலைத்திட்டத்துக்கு அழைப்பு விடுத்தாலும் வருவதில்லை. ஆட்சிகள் மாறும்போது அரசக் கொள்கைகளும் மாறுவது சிக்கலுக்குரிய விடயமாகும். எனவே, பொது வேலைத்திட்டத்தின்கீழ் ஒன்றாக இணைந்து பயணிக்க முன்வரவேண்டும்” என தெரிவித்தார்.

“140 வாக்குகளுடன் ரணில் ஜனாதிபதியாவார்.” – ரணிலை ஜனாதிபதியாக்கவா இத்தனை போராட்டங்கள்..?

இதேவேளை ரணில் விக்கிரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக கூட நியமிக்க கூடாது என காட்டுக்கூச்சல் போட்டுக்கொண்டிருந்த கோட்டாகோகம போராட்டக்காரர்கள் தற்போது நீடித்த அமைதி காப்பதானது;  நடத்தி முடிக்கப்பட்டுள்ள போராட்டங்களின் பின்னணியில் ரணில் விக்கிரமசிங்கவும் – மேற்குலக சதியும் இருப்பதாக பல அரசியல் விமர்சகர்களும் சுட்டிக்காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.