சி.சிறீதரன்

சி.சிறீதரன்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக சி.சிறீதரன் !

இலங்கத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

திருகோணமலையில் இன்று நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்சபைக் கூட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 184 வாக்குகளைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவாகியுள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் 137வாக்குகளைப் பெற்றுள்ளார்.

புதிய தலைவர் எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறும் கட்சியின் தேசிய மாநாட்டின்போது உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்பார்.

“இலங்கை தமிழரசுக் கட்சியினை ஏனைய கட்சிகள் பழிவாங்கும் முகமாக செயற்படுகிறார்கள்.” – சி.சிறீதரன்

“70 வருட வரலாற்றைக் கொண்ட இலங்கை தமிழரசுக் கட்சியினை ஏனைய கட்சிகள் பழிவாங்கும் முகமாக செயற்படுகிறார்கள்.”  என தமிழ் தேசிக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“மாநகர சபையில் மக்கள் எமக்கு பெரும்பான்மையினை வழங்க தவறி விட்டார்கள். அதைவிட எதிர்வரும் காலத்தில் யாழ். மாநகர சபையில் 25க்கும் மேற்பட்ட ஆசனத்தை பெற்று யாழ் மாநகர சபையினை பூரணமாக கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.

அதற்குரிய ஆணையை மக்கள் வழங்குவார்கள் என நம்பிக்கையுடன் தெரிவிக்க விரும்புகின்றோம்.

எதிர்வரும் தேர்தலில் மாநகர சபையை தமிழரசுக் கட்சி பூரணமாக கைப்பற்றும் என்பதில் எந்தவிதமாற்று கருத்துக்கும் இடமில்லை.

மக்கள் எங்களுடன் தான் உள்ளார்கள். ஓரிருவர் கூறும் வார்த்தைகள் நியமாகிவிட முடியாது.  மக்களை ஏமாற்றி மாதச் சம்பளத்தை பெறுவதற்காக பின்வாசலால் கையெழுத்திட்டு சபை அமர்வுக்கு கலந்து கொள்ளாது விட்ட ஏனைய கட்சிகளின் கதைகளை கேட்பதற்கு நாம் தயார் இல்லை.

ஏற்கனவே சூ.சிறில் பல வருடங்களுக்கு முன்னர் மாநகர சபையின் பிரதி முதல்வராக செயற்பட்டவர்.   அவர் நீண்ட அரசியல் அனுபவம் உள்ளவர். ஆளுமை மிக்கவர். அவ்வாறான ஒருவரைத் தான் இம்முறை எமது வேட்பாளராக தெரிவு செய்தோம்.

அது மாத்திரமல்ல கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து தமிழ் மக்களுக்காக நாடாளுமன்றத்தில் கடுமையாக குரல் கொடுத்த ஒருவரை தான் தமிழரசுக் கட்சி முதல்வர் வேட்பாளராக தெரிவு செய்துள்ளது.

எனவே ஏனைய கட்சிகள் எமது கட்சியை பழிவாங்கும் முகமாக செயற்படுகிறார்கள் என்பது இப்போது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது” – என்றார்.

“இந்தியாவின் கரிசனையினால் வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான தனி நிர்வாக கட்டமைப்பினை உருவாக்க முடியும்.”- சிறீதரன்

யுத்தம் நடந்து 30 ஆண்டுகள் அதற்கு பின்னர் 12 ஆண்டுகள் கடந்து 42 ஆண்டுகள் இந்த மண்ணிலே கடந்திருக்கின்றது. ஆனால் வடக்கு கிழக்கில் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் ஏற்படவில்லை. என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வடக்கு கிழக்கின் அபிவிருத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பரசியல் பாதிப்படைய செய்யுமல்லவா எனவும், அதற்கான மாற்று திட்டங்கள் உள்ளதா எனவும் ஊடகவியலாளர் அவரிடம் வினவியபோது இவ்விடயத்தினை அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கில் 30 வருடங்களிற்கு மேல் பொருளாதார ரீதியில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2009க்கு முதலே 30 ஆண்டுகளிற்கு மேலாக தொடர்ச்சியான பொருளாதார தடை, மக்கள் உழைக்கக்கூடிய சூழல் இல்லா நிலை குறிப்பாக 10 ஆண்டுகளாக மின்சாரம் என்றால் என்ன என்று கேள்வி கேட்குமளவிற்கு வடக்கு கிழக்கிலே மக்கள் வாழ்ந்திருந்தார்கள்.

இந்த நிலையில்தான் பொருளாதார ரீதியில் மக்கள் ஒடுக்கப்பட்டு உற்பத்தி தொழில்துறைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. இலங்கை அரசாங்கம் யுத்தத்தை காரணமாக காட்டிக்கொண்டிருந்தார்கள். உலக நாடுகளும் இலங்கை அரசு சொல்வதை கேட்டு வடக்கு கிழக்கில் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு பின்னின்றன.

யுத்தத்திற்கு பின்னர் வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கென பெருந்தொகையான நிதியை இலங்கை அரசுக்கு உலக நாடுகள் வழங்கியிருந்தன. அவ்வாறு வழங்கப்பட்ட நிதிகளைக்கூட அதிவேக பாதைகள், தெற்கின் அபிவிருத்திகளிற்கு இலங்கை அரசு பயன்படுத்தியபோது, அதனை கண்காணிக்கக்கூடிய நிலை இல்லாமல் எங்களுடைய பொருளாதாரம் கீழ் நிலைக்கு சென்றுள்ளது.

எங்கள் மக்களின் தற்துணிவும், அவர்களது சுய நம்பிக்கையும் தாங்கள் உழைத்து வாழ்வோம் என்ற எண்ணமும் இருந்தமையால்தான் இன்று பல நீண்ட நாட்களாக வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழர்கள் தங்களது சுய பொருளாதாரத்தில் பொருளாதாரத்தை கட்டி நிமிர்த்தி வருகின்றார்கள். இந்த நிலையிலே இடைக்கால பொருளாதார நிர்வாகம் தொடர்பிலே பேச்சுக்கள் அடிபடுகின்றது. இது ஒரு நல்ல விடயமாக பலராலும் பார்க்கப்படுகின்றது. நானும் அதனை சாதகமான செய்தியாக பார்க்கின்றேன்.

குறிப்பாக யுத்தம் நடந்து 30 ஆண்டுகள் அதற்கு பின்னர் 12 ஆண்டுகள் கடந்து 42 ஆண்டுகள் இந்த மண்ணிலே கடந்திருக்கின்றது. ஆனால் வடக்கு கிழக்கில் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இளைஞர்களிற்கான தொழில்வாய்ப்பு உள்ளிட்டவை குறைந்திருக்கின்றது. இல்லையென்றும் சொல்லலாம்.

இதற்கான வாய்ப்பாக வடக்கு கிழக்கிற்கான தற்காலிக வாய்ப்பாக வடக்கு கிழக்கினை இணைந்த வகையில் குறிப்பிட்ட சில ஆண்டுகளிற்கு பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்கான இடைக்கால நிர்வாகத்தினை உருவாக்குவது காலத்திற்கு பொருத்தமானது என கருதுகின்றோம்.

இது தொடர்பில் புத்திஜீவிகள், புலம்பெயர் உறவுகள் உள்ளிட்டவர்கள் மத்தியில் இந்த விடயம் பரவலாக பேசப்படுகின்றது. இதில் மிக முக்கியமாக பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாகும். பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் ஊடாக தமிழ் மக்களினுடைய அரசியல் அங்கிகாரத்தினை பெற்றுக்கொள்ளுதல், அந்த அரசியல் அங்கிகாரம் என்பது வடக்கு கிழக்கு அபிவிருத்தியினால் கட்டப்படுவது தொடர்பில் சிங்கள மக்களிற்கு கூட்டாக அவர்களிற்கு விளங்கும் வகையில் சொல்வதாகும்.

குறிப்பாக வடக்கு கிழக்கு இணைப்பு, சமஸ்டி என கூறுவது தமிழீழம் எனும் தனிநாடு என சிங்கள மக்கள் மத்தியில் பயக்கின்றது. ஆகவே இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்டதாக ஒரு நிர்வாகம் ஒன்று கிழக்கையும், வடக்கையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டால் சிறப்பாக அமையும், ஏற்கனவே இவ்வாறு1987ம் ஆண்டு ஒரு கட்டமைப்பு எழுத்து வடிவிலே பேசப்பட்டு எழுத்துடனேயே போய்விட்டது. சிரான் அமைப்பும் இவ்வாறான நிர்வாக கட்டமைப்பை வரைந்தது. அதுவும் அரசியல் மாற்றங்களால் இல்லாது போனது. அது நடைமுறைப்படுத்தப்படவும் இல்லை.

இப்பொழுது இருக்கின்ற சூழல் இலங்கையின் அரசியலமைப்புக்குள் இந்தியாவினுடைய கூடுதலான கரிசனையில் உதவி வழங்கும் நாடுகளையும் சேர்த்துக்கொண்டால் வடக்கு கிழக்கிற்கான தனி கட்டமைப்பினை உருவாக்க முடியும்.

யுத்த காலத்தில் தென்னிலங்கையில் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு அங்கு அபிவிருத்தி அடைந்திருக்கின்றது என்பதுடன், எல்லா மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் மற்றம் துறை சார்ந்த அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வேலைவாய்ப்புக்களும் வழங்ப்பட்டுள்ளது.

ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதற்கான வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது. காரணம் யுத்தம். இதனை நிமிர்த்துவதற்கான ஒரு வழியாக இந்த இடைக்கால நிர்வாகத்தினை நாங்கள் பார்க்கின்றோம். இதன் ஊடாக நாட்டுக்கு நிதியை கொண்டுவர முடியும்.

குறிப்பாக உலக நாடுகளின் நிதி, இந்தியாவின் நேரடி கண்காணிப்பில் முதலீடுகளை கொண்டு வருதல், இந்தியாவின் மேற்பார்வையில் கொண்டு வருவதன் ஊடாக பல சலுகைகளையும் எதிர்பார்க்கலாம். புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களின் முதலீடுகளை வடக்கு கிழக்கிலே அதிகரிப்பதன் மூலம் தொழில் துறைகளை இயக்க முடியும். குறிப்பாக ஆனையிறவில் உள்ள குறிஞ்சாதீவு உப்பளம், மட்டக்களப்பு காகித தொழிற்சாலை உள்ளிட்ட மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை இப்பொழுது இருக்கின்ற காலத்திற்கேற்ற தொழிற்சாலைகளாக மாற்றியமைப்பதன் மூலம் உடனடி வேலைவாய்ப்புக்களை உருவாக்க முடியும்.

அதேபோன்று பரந்தன் இரசாயன தொழிற்சாலையில் கைத்தொழில்பேட்டை ஒன்றை உருவாக்குவதன் மூலம் அதில் பல்வேறுபட்ட தொழில் துறைகளை உருவாக்க முடியும். வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களை சேர்ந்தவர்களும் சந்திக்கக்கூடிய பகுதியாக பரந்தன் பகுதி உள்ளது.

அவ்வாறான தொழிற்துறைகளை முன்னெடுப்பதன் மூலம் வடக்கு கிழக்கில் அபிவிருத்தி அலையொன்றை அல்லது தொழில் புரட்சியொன்றை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில்தான் இந்த இடைக்கால நிர்வாகம் தொடர்பில் நாங்கள் சிந்திக்கின்றோம். இது தொடர்பில் நாங்கள் பல தடவை சிந்திக்க இருக்கின்றது. இது தொடர்பில் கட்சியின் உயர் மட்டத்திலும் இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டிருக்கின்றது.

தொடர்ந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளுடனும் இது தொடர்பில் கூடி ஆராய்ந்து அவர்களின் கருத்துக்களும் பெறப்பட்டு வடக்க கிழக்கில் பொருளாதார ரீதியாக ஒரு நிர்வாக கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் அரசியல் உள்ளிட்ட விடயங்களிற்கும் பலத்தை தரும் என்று நாங்கள் கருதுகின்றோம்.

இதேவேளை வனவள திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றால் முன்னெடுக்கப்படும் நில அபகரிப்புக்களை தடுத்து வடக்கு கிழக்கினை பாதுகாக்க முடியும் என்பதுடன், வடக்கு கிழக்கு என்றால் அது தமிழீழம் அல்ல என்பதையும், உலகத்தில் உள்ள சமஸ்டியின் கூடிய அலகாக இந்த நாட்டில்தான் இருக்கின்றது. அவர்கள் அப்படி வாழ வேண்டும் என்பதில் நியாயம் உள்ள என்பதை சிங்கள மக்கள் உணரக்கூடிய வகையிலான செயற்பாடடை அதன் ஊடாக கொண்டுவர முடியும்.

அதுதான் தென்பகுதி மக்களிற்கும் நன்மையை கொண்டு வரும். ஏனென்றார் நிதி நாட்டுக்குள் கொண்டுவரப்படும்போது இலங்கையின் பொருளாதாரத்திலும் கடுமையான வளர்ச்சியினை கொண்டுவரும். சிங்கள மக்கள் உணர்ந்துகொள்ளக்கூடிய இந்த காலத்தில் இடைக்கால நிர்வாகம் என்பது எங்களிற்கு அவசியமானது.

அது தொடர்பில் தூர நோக்கோடும், நல்லெண்ணத்தோடும் ஒவ்வொருவரும் சிந்தித்தால் வாய்ப்பானதாக அமையும் என்று நான் கருதுகின்றேன் என அவர் தெரிவித்தார்.

இவ்வாறான விடயத்தை நடைமுறைப்படுத்த முற்படுகின்ற பொழுது மத்திய அரசினை நீங்கள் எதிர்க்கின்றபொழுது அவர்களும் இதனை எதிர்ப்பார்கள் அல்லவா என அவரிடம் ஊடகவியலாளர் வினவினார்,

சுனாமி ஏற்பட்ட குறிப்பிட காலத்தில் இவ்வாறான நிர்வாக அலகு ஒன்றை சிரான் அமைப்பு விரைந்து முயற்சி எடுத்தபொழுது ஆட்சியில் ரணில் விக்ரமசிங்க இருந்தார். அதன் பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் அது கைவிடப்பட்டது. தற்பொழுது அவர் பிரதமராக இருப்பதால் குறித்த திட்ட வரைபை அவர் மறுக்கமாட்டார் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.

பனை அபிவிருத்தி சபையை கொழும்புக்கு நகர்த்த பெரும் முயற்சி – ஊடுருவும் சிங்களவர்கள் !

யாழ்ப்பாணத்தில் உள்ள பனை அபிவிருத்தி சபையை கொழும்புக்கு மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதுடன் அதன் தலைவராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.”  என  தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பெருந்தோட்ட அமைச்சு, காணி அமைச்சு மற்றும் 3 இராஜாங்க அமைச்சுக்கள் மீதான  குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த சிறிதரன் மேலும் கூறுகையில்,

“யாழ்ப்பாணம் மாவட்டத்திலே இருக்கின்ற குறிப்பாக வடக்கையும், கிழக்கையும் பிரதிநிதித்துவப்படுத்தி  உருவாக்கப்பட்டுள்ள பனை  அபிவிருத்தி சபை என்பது  இப்போது கொழும்பை நோக்கித் தள்ளப்படுகின்றது. அதனுடைய தலைவராக தற்போது முதன்முதலாக ஒரு சிங்கள மொழி பேசுபவர் நியமிக்கப்பட்டுள்ளார். நான் அவர் மீது குற்றம் சொல்லவில்லை. ஆனால், பனை  அபிவிருத்தி சபை தமிழர்களின் பாரம்பரிய தொழிலை அடிப்படையாகக்கொண்டது. எனவே, தயவு செய்து அதனைத் தமிழர்களிடம் விடுங்கள். ஒரு கித்துள் திணைக்களத்துக்கோ அல்லது தென்னை அபிவிருத்தி திணைக்களத்துக்கோ தமிழ்த் தலைவரை நியமியுங்கள் என்று நான் கேட்கவில்லை.

பனை  அபிவிருத்தி சபை கம்பணக்காளர், உத்தியோகஸ்தர்களில் கூட அதிகளவான சிங்களவர்கள் இணைக்கப்படுகின்றனர். பனை அபிவிருத்தி சபையை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குக் கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகினறன. அது வடக்கு, கிழக்குக்கு உரியது. அதில் உள்ள தொழிலாளர்கள், உத்தியோகஸ்தர்களில் நிறைய மாற்றங்கள் செய்யப்படுகின்றன என்று அறிகின்றோம்.  பல பேரின் மாற்றங்களில்  தமிழர் நீக்கப்பட்டு சிங்களவர் நியமிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக வடக்கு மாகாண செயலருக்கு ஆங்கிலமும் தமிழும் தெரியாத ஒரு சிங்கள மொழி பேசுபவர். நாங்கள்  மொழி ரீதியாக அவருடன் பேச முடியாது. வடக்கு மாகாண ஆளுநரால் கூட தமிழ் பேச முடியாமல் உள்ளது. அவ்வாறான நிலைமைக்குள்தான் நாம் தொடர்ந்தும் தள்ளப்படுகின்றோம்.

ஒரு கல்வி அமைச்சை எடுத்தீர்களேயானால் அங்குள்ள மேலதிக செயலாளர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை. பல அரச திணைக்களங்களில் இதே நிலைதான். தமிழ்மொழியில் மொழி பெயர்ப்பதற்கு கூட ஆட்கள் இல்லை. இன விகிதாசாரம் கூட பேணப்படாது நிலைமை மோசமாக இருக்கின்றது. தயவு செய்து இந்த விடயத்தில் அதிக கரிசனை செலுத்துங்கள்” – என்றார்.

பிரபாகரன் போதைப்பொருள் கடத்தினார் என கூறிய அமைச்சர் டக்ளசுக்கு சிறீதரன் கொடுத்த பதில் !

நான் அரசுக்கு வக்காளத்து வாங்கும் கையாள் அல்ல. பதவிக்காக ஆளுந்தரப்பின் கால்களைக் கழுவி பிழைக்கவும் வரவில்லை. எனவே, தயவுசெய்து என்னைப் பேவிடுங்கள்.” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு சபையில் வைத்து பதிலளித்துள்ளார்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.

பாராளுமன்றத்தில் இன்று சிறிதரன்  உரையாற்றும்போது அவருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் சிறிதரன் பேசிக்கொண்டிருந்த உரையை குறுக்கீடுஅமைச்சர் செய்த டக்ளஸ்தேவானந்தா, ”மஹிந்த ராஜபக்ச காலத்தில் வடக்கு, கிழக்கில் அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ளன என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டுள்ளீர்கள். அதற்கு முன்னரும் நாம் செய்திருப்போம். ஆனால், நீங்கள் செய்யவிடவில்லை. பிரபாகரன் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டார். இது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அல்லது நீங்கள் மறைக்கலாம்” என்று குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளிக்கையிலேயே பதவிகளுக்காகக் கால் கழுவிப் பிழைப்பதற்காகத் தான் அரசியல் நடத்தவில்லை என சிறிதரன் அவ்வாறு குறிப்பிட்டார்.

”சத்திரசிகிச்சை வெற்றி – நோயாளர் மரணம்” – ராஜபக்ஷ அரசின் வரவு செலவுதிட்டம் தொடர்பில் சிறீதரன் !

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசின், நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் சமர்ப்பிக்கப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் ”சத்திரசிகிச்சை வெற்றி – நோயாளர் மரணம்” என்பதைப் போன்றது.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் நேற்று (13) சபையில் தெரிவித்தார்.

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

வரவு – செலவுத் திட்டத்தினூடாக சொல்லப்படுகின்ற திட்டங்கள், அறிவிக்கப்பட்டுள்ள செலவீனங்கள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், இவற்றை எந்த வருமானத்தில் இறுதியில் கையாளப்போகின்றீர்கள்? இந்த அரசு அதிகமான கடன்களையும் கடனுக்கான வட்டியையும் செலுத்த வேண்டியுள்ளது.

ஆகவே, கடனும்  வட்டியும் செலுத்த வேண்டிய அரசால் 2022ஆம் ஆண்டிலே எவ்வாறு அபிவிருத்திப் பணிகளை செம்மையாக மேற்கொள்ள முடியும்? குறிப்பாக 80 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையின் தலா வருமானம், தனி நபர் வருமானமெல்லாம் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளை விடவும் உயர்ந்த நிலையிலேயே இருந்தது. ஆனால், இன்று இலங்கையில் தனிநபர் வருமானங்கள் எவ்வளவு தூரத்துக்குக் கீழ் நிலைக்கு வந்துள்ளன என்பதை அவதானிக்க முடியும்.

சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளில் இவை மேல் நிலைக்கு வந்துள்ளன என்றால் அந்த நாடுகளில் வாழ்கின்ற மக்களுக்கிடையில் இருந்த ஒற்றுமை உணர்வுகளும் அங்கு கட்டி வளர்க்கப்பட்ட இன சௌஜன்யமுமே காரணம். ஆனால், இலங்கையில் 70 ஆண்டுகளுக்கு மேல் போரும் இனவாதமும் கைகூடியிருந்த காரணத்தால் இங்கு சரியான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி இன ஒற்றுமையோடு இந்த நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய தலைவர்கள் உருவாக்கப்படாமை இந்த நாட்டின் மிகப்பெரும் துர்ப்பாக்கிய நிலை.

இனியும் இந்தச் சந்தர்ப்பத்தை இந்த நாடு இழக்கப் போகின்றதா? அல்லது சரி செய்யப்போகின்றதா? என்பதனை காலம்தான் தீர்மானிக்க வேண்டும். இப்போதுகூட ஒரு காலம் கனிந்திருக்கின்றது. தமிழ்த் தேசிய இனத்தை சிங்கள தேசிய இனத்துடன் இணைத்து தமிழ் மக்களுக்கான உரித்துக்களை வழங்கி பொருளாதாரத்தைக் கட்டி வளர்க்க முடியும் என்பதனை நீங்கள் மறந்து விடக்கூடாது.

ஆனால், அவ்வாறில்லாமல்  இங்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச அரசின் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் ”சத்திரசிகிச்சை வெற்றி – நோயாளர் மரணம்” என்பதாகவே உள்ளது” – என்றார்.

அரசுடன் இணைந்து செயற்பட கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்த ஆளுந்தரப்பு – கூட்டமைப்பின் நிபை்பாடு என்ன..?

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயாராகவே இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

எந்த அரசாங்கத்தோடும் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் அதற்காக கதவுகளை மூடியதில்லை என்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார விடுத்த அழைப்புக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த காலங்களில் கூட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் 13 சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்தியதாக சிறிதரன் கூறினார்.

“தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியாத படி ஒரு இலட்சத்தி ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட படையினர் தமிழர் நிலங்களில்  குவிக்கப்பட்டிருக்கிறார்கள்” – பாராளுமன்றில் சி.சிறீதரன் !

“தமிழ் மக்கள் அவர்களுடைய சொந்த நிலத்தில் நிம்மதியாக வாழ முடியாத படி ஒரு இலட்சத்தி ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட படையினர் தமிழர் நிலங்களில்  குவிக்கப்பட்டிருக்கிறார்கள்” என பாராளுமன்றில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்றையதினம்(19.11.2020) உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களிடம் தாங்கள் ஓர் வேற்று நாட்டில் வாழும் உணர்வும் எண்ணமும் இருக்கிறது. காரணம் ஒரு இலட்சத்தி ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட படையினர் அங்கு குவிக்கப்பட்டு அவர்களுடைய பிரசன்னத்தோடு அந்த மக்கள் அங்கு அடக்கப்பட்டுக் கொண்டுள்ளார்கள்.

அவர்களுடைய சொந்த நிலங்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அவர்கள் சுதந்திரமாக அந்த மண்ணிலே வாழமுடியாமல் இருக்கிறார்கள். அப்படியானால் அவர்கள் எப்படி இந்த நாட்டின் பிரஜைகள் என்று சொல்ல முடியும். நீண்டகாலாமாக அழுது கொண்டுள்ள மக்களின் கண்ணீருக்கு  இந்த நாட்டிலே என்ன பதில் இருக்கிறது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மக்களது உறவுகள் இன்றைக்கு கிட்டத்தட்ட 1400 நாட்களுக்கு மேல் அவர்கள் தங்களது உறவுகள் வருவார்கள் என்பதற்காக  தெருக்களிலே குந்திக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களுக்கான பதிலைச் சொல்ல இந்த நாட்டின் ஜனாதிபதினாலேயோ?, பிரதமராலையோ? அல்லது நாட்டின் தலைவர்களினாலேயோ?  ஏன் இதுவரை ஒரு பதிலும் சொல்லவில்லை.

ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் இருந்து நாங்கள் விலகிக் கொள்கின்றோம் என்று அரசாங்கம் சொல்கிறது. ஆனால் மன்னார் ஆயர் ராயப்பு யோசப் அவர்கள் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு முன்னால் 1,46,000 இற்கு மேற்பட்ட மக்கள் காணாமல் போயும் கொல்லப்பட்டும் உள்ளார்கள் என்ற உண்மையை சொன்னார். இதுவரை அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.

சிறையிலே இருக்கின்ற கைதிகள் இன்றைக்கு கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க யாரும் தயார் இல்லை. அமைச்சர் நாமல் ராஜபக்ச கூட அவர்களுடன் சிறையில் இருந்தார். நான் வெளியில் வந்தால் விடுகிறேன் என்றார். இன்று அவருக்கு பெரும்பான்மை இருக்கிறது. அவருடைய அப்பா பிரதமர், சித்தப்பா நாட்டின் ஜனாதிபதி. ஏன் அவரால் அந்த அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியவில்லை. ஒரு காலத்திலே ஒரு பேச்சு இன்னொரு காலத்திலே ஒரு பேச்சாக இந்த நாட்டிலே வாழுகின்ற இனத்தை ஏமாற்றியது தான் இந்த நாட்டிலே நடந்திருக்கிறது.

பல்வேறு பட்ட இன்னல்களை இந்த மக்கள் சந்திக்கிறார்கள். குறிப்பாக தொல்பொருல் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி திணைக்களம், கடலோர காவல் திணைக்களம், வனவள திணைக்களம் ஆகியவை குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழ்கின்ற மக்களின் காணிகளை சுவீகரிக்கின்றார்கள். காணிகளை பறிகின்றார்கள். இளம் முயற்சியாளர்களுக்கு காணி வழங்குதலில் உள்ள பின்னனி என்ன?

இந்த நாடில் வாழும் தமிழர்கள் சரியான இலக்கோடும் நிம்மதியோடும் உண்மையான உரித்துக்களுடனும் வாழவேண்டுமேயானால் நீங்கள் திறந்த மனதோடு எல்லா இனங்களையும் மதிக்கின்ற குறிப்பாக 70 ஆண்டுகளாக தங்களுக்கு உரித்தான உரிமைக்கு போராடுகின்ற இந்த தமிழ் இனத்திற்காக ஒரு விடிவை நோக்கிய பயணத்தில் பேசுவதற்கு தயாராகுங்கள்.

தமிழ்த் தேசிய இனத்தின் அபிலாசைகளை பூரித்தி செய்யக் கூடிய வகையில் அவர்களையும் இந்த நாட்டின் பிரஜைகளாக ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் உங்களுடைய ஒரு தீர்வை முன்வையுங்கள். அப்போதுதான் நாடு வளர்ச்சியை நோக்கி செல்ல முடியும் என தெரிவித்துள்ளார்