வெளிநாட்டு மோகம்

வெளிநாட்டு மோகம்

யாழில் இளைஞர்களிடையே காட்டுத் தீயாய் பரவும் வெளிநாட்டு மோகம் – இலக்கு வைக்கப்படும் கிராமப்புற இளைஞர்கள் !

யாழில் கிராம புற இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி பண மோசடி செய்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,  வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள், கிராமப்புற இளைஞர்களை இலக்கு வைத்து, வெளிநாடுகளில் வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து 30 தொடக்கம் 40 இலட்சம் ரூபாய் வரையில் பணமோசடிகளில் ஈடுபடுகின்றனர்.

அவர்களின் ஏமாற்று நாடகத்தை அறியாத அப்பாவி இளைஞர்கள் போலி வாக்குறுதிகளை நம்பி பணத்தை இழக்கின்றனர். இது தொடர்பான ஏராளமான முறைப்பாடுகள் யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனவே, இந்த வெளிநாட்டு நுழைவு விசா மோசடிகள் தொடர்பில் அவதானமாகவும் , விழிப்பாகவும் இருப்பது அவசியம்” இவ்வாறு பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளும், நுழைவு விசா மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. அதிலும், வெளிநாடுகளில் இருந்து வருவோரே இத்தகைய மோசடியில் அதிகம் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களின் வெளிநாட்டு மோகம் – கனடாவுக்கு அனுப்புவதாக கூறி யாழ்ப்பாணத்தில் ஏழு கோடி ரூபாய் மோசடி !

கனடாவுக்கு அனுப்புவதாக தெரிவித்து, கடந்த மூன்று வருடங்களில் மட்டும் யாழ்ப்பாணத்தில் 7.5 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.

 

யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த 21 முறைப்பாடுகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போதே இந்த தகவல் வெளிவந்துள்ளது.

 

இது குறித்து மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

 

கனடாவுக்கு அனுப்புவதாக ஆசை காட்டி யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை பண மோசடிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விசாந்த மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.