விமல் வீரவன்ச

விமல் வீரவன்ச

இலங்கையில் தமிழ் ஈழம் தோன்றியிருந்தால் சிங்களவர்கள் காசா போல் இலங்கையில் ஆக்கப்பட்டிருப்பார்கள் – நாடாளுமன்றில் விமல் வீரவன்ச !

விடுதலை புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டு வராமலிருந்தால்  தென்னாசியாவில் தமிழீழம் தோற்றம் பெற்றிருக்கும். அது இஸ்ரேல் போல் மாற்றமடைந்திருக்கும், காஸாவின் இன்றைய நிலை எமக்கு ஏற்பட்டிருக்கும். இஸ்ரேலுக்கு ஆயுதத்தை வழங்கி விட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அமெரிக்கா முதலை கண்ணீர் வடிக்கிறது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற  பலஸ்தீன விவகாரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதலினால் பலஸ்தீனர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.பலஸ்தீனர்களின்  இன்றைய நிலை குறித்து நாங்கள் கவலையடைகிறோம்.பலஸ்தீனர்கள் இன்று எதிர்கொண்டுள்ள நிலைமைக்கும்,இலங்கையின் நிலைமைக்கும் இடையில் பரஸ்பர ஒற்றுமை காணப்படுகிறது.

இரண்டாம் உலக மகா யுத்தம் தீவிரமடைந்த போது யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருதற்கு பெரிய பிரித்தானியா யூதர்களுடன் ஒப்பந்தம் செய்தது.யுத்தம் முடிந்தவுடன் தமக்கு ஒரு நாடு அல்லது இராச்சியம் வேண்டும் என யூதர்கள் பெரிய பிரித்தானியாவிடம் வலியுறுத்தினார்கள்.இரண்டாம் உலக மகா யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர்  பெரிய பிரித்தானிய பலஸ்தீனர்களுக்கு சொந்தமான பூர்வீக பூமியில் யூதர்களை குடியமர்த்தி பிரச்சினைகளை தோற்றுவித்தது.

தமிழர்கள் உலகெங்கிலும் வாழ்கிறார்கள்.அவர்கள் தென்னிந்திய திராவிட மொழியை அடிப்படையாகக் கொண்டவர்கள் ஆகவே அவர்களுக்கு இலங்கைக்குள் ஒரு தனித்த நாட்டை உருவாக்கிக் கொடுப்பதாக பெரிய பிரித்தானியா போலியான சுதந்திரத்தை வழங்கி இலங்கையில் வாழ்ந்த தமிழ் தலைவர்களிடம் குறிப்பிட்டது.இதன் பின்னரே 50 :50 அதிகாரம் பற்றி பேசப்பட்டது.

50:50 அதிகாரம் என்பது தோல்வியடைந்த நிலையில் யுத்தம் தோற்றம் பெற்றது. இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளை அழித்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வராமல் இருந்திருந்தால் தென்னாசியாவில் தமிழ் ஈழம் தோற்றம் பெற்றிருக்கும்.அவ்வாறான நிலை தோற்றம் பெற்றால் தென்னாசியாவில் காஸாவை போன்ற நிலைமை எமக்கு ஏற்பட்டிருக்கும்.தமிழ் ஈழம் இஸ்ரேல் போல் செயற்பட்டிருக்கும்.  பலஸ்தீனர்களின்  இன்றைய நிலையை  நாங்கள் எதிர்கொண்டிருப்போம்.

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பாதுகாப்பதற்கு அமெரிக்காவின் மெராய்ன் படையின் கப்பல் இலங்கையின் கடல் பரப்புக்கு அப்பாற்பட்ட சர்வதேச கடல் எல்லைக்கு வருகை தந்திருந்தது. பிரபாகரனை உயிருடன் ஒப்படைக்குமாறு அமெரிக்கா அப்போதைய அரசாங்கத்திடம் வலியுறுத்தியது. ஆனால் அதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடமளிக்கவில்லை. அதேபோல் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் பிரபாகரனை உயிருடன் கோரின. பிரிவினைவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் மேற்குலக நாடுகளிடம் இருக்கவில்லை. தமிழ் ஈழத்துக்காகவே உலக நாடுகளும் குரல் கொடுத்தன.

இலங்கையில் தமிழ் ஈழத்தை உருவாக்க பெரிய பிரித்தானிய முன்னெடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. ஆனால் பலஸ்தீனத்தில் அவர்களின் நோக்கம் வெற்றிப் பெற்றன.இரண்டாம் உலக யுத்தத்தின் போது உலகில் நாடற்றவர்களாக இருந்த யூதர்களுக்கு பலஸ்தீன நிலத்தை ஆக்கிரமித்து நாடு உருவாக்கிக் கொடுக்கப்பட்டது.கால போக்கில் யூதர்களான இஸ்ரேலியர்கள் முழு பலஸ்தீனத்தையும் ஆக்கிரமித்து  பலஸ்தீனர்களின் அடையாளத்தை அழிக்க முயற்சிக்கிறார்கள்.தமது உரிமைக்காக பலஸ்தீனியர்கள் போராடுகிறார்கள்,ஆகவே பலஸ்தீனர்களின் நிலைமையை எம்மால் உணர்வுபூர்வமாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி விட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அமெரிக்க முதலை கண்ணீர் வடிக்கிறது.யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் ஐக்கிய நாடுகள் சபைக்கு பிரேரணை கொண்டு வரும் போது அமெரிக்க தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி  பிரேரணைகளை தோற்கடிக்கிறது.ஆகவே இலங்கைக்கு எதிராக செயற்படுத்தும் போலியான மனித உரிமைகளை  பாதிக்கப்பட்டுள்ள  பலஸ்தீனர்களுக்காக உண்மையுடன் செயற்படுத்துமாறு உலக நாடுகளிடம் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

பொருளாதார மீட்சி என்று குறிப்பிட்டுக் கொண்டு இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் – விமல் வீரவன்ச

பொருளாதார மீட்சி என்று குறிப்பிட்டுக் கொண்டு இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கிறது.எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இலங்கையில் இந்தியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை பிரஜைகள் சொந்த நாட்டுக்குள் இரண்டாம் தரப்பினராக அடையாளப்படுத்தப்படுவார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

 

பாதுக்க வேரகல பகுதியில் சனிக்கிழமை (02) மாலை இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் தெரிவித்ததாவது,

 

நாட்டுக்கு என்ன நேர்ந்துள்ளது.மக்கள் சொல்லனா துயரங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.வாழும் சூழல் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.பொருளாதார மற்றும் சமூக பாதிப்பை அரசாங்கம் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது.இந்தியாவின் செல்வந்தரான அதானிக்கு இலங்கையின் பெரும்பாலான வளங்களை வழங்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

 

மன்னார் காற்றாலை மின் உற்பத்தியின் பங்குகளை அதானி நிறுவனத்துக்கு வழங்குவதால் நடுத்தர மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்காது. நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் டெலிகொம் நிறுவனத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதேபோல் இலங்கை மின்சாரத்தை பல கூறுகளாக பிரித்து அதனையும் இந்தியாவுக்கு வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

இலங்கையின் பொருளாதார கேந்திர மையங்களை இந்திய நிறுவனங்களுக்கு வழங்கும் செயற்பாடுகளினால் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படும். இவ்வாறான நிலையில் இந்தியாவுடன் எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

 

எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இந்தியர்கள் இலங்கையில் சுதந்திரமாக தமது வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் சொந்த நாட்டுக்குள் இரண்டாம் தர பிரஜைகளாக கருதப்படுவார்கள். இலங்கை இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக மாற்றமடையும்.

 

நாடடின் தேசிய வளங்களை இந்தியாவுக்கு வழங்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் குறித்து எதிர்க்கட்சிகள் ஏதும் பேசுவதில்லை.அனைவரும் இந்தியாவுக்கு துதி பாடிக் கொண்டிருக்கிறார்கள்.பொருளாதார பாதிப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு நாட்டின் சுயாதீனத்தை இந்தியாவிடம் விட்டுக் கொடுக்கும் செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றன.

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவருக்கு ஆதரவாக செயற்படும் ராஜபக்ஷர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதற்காக மக்களை தெளிவுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். இந்தியாவின் ஆக்கிரமிப்புக்கு இடமளித்துக் கொண்டு இருக்க முடியாது.

“மோசடியாளர்களின் பக்கமே நான் என்பதை ஜனாதிபதி ரணில் உறுதிப்படுத்தியுள்ளார்.” -விமல் வீரவன்ச

மோசடியாளர்களின் பக்கமே நான் என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதிப்படுத்தியுள்ளார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (28)  இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

அரசாங்கத்துக்கும் நாட்டு மக்களுக்கும் இடையிலான தொடர்பு ஒப்பந்த செயலாற்றுகை எந்தளவுக்கு உறுதியாக காணப்படுகிறதோ அந்த அளவுக்கு அரச நிர்வாகம் வினைத்திறனாக இருக்கும் என்று ஆளும் தரப்பின் உறுப்பினர் குறிப்பிடுகிறார்.

அரசாங்கத்துக்கும், நாட்டு மக்களுக்கும் இடையிலான தொடர்பு இன்று பலமாக உள்ளதா அல்லது பலவீனமடைந்துள்ளதா,

என்பதை சற்று ஆராயுங்கள். கிரிக்கெட் துறையின் ஊழல் மோசடியை வெளிப்படுத்தி,தற்றுணிவுடன் செயற்பட்டதால் விளையாட்டுத்துறை,இளைஞர் விவகாரம் மற்றும் நீர்பாசனத்துறை அமைச்சு பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டார்.

கோட்டபய ராஜபக்ஷவின் நிர்வாகம் மோசமானது என்று குரல் எழுப்பப்பட்டதால் தான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி மகுடம் சூட்டப்பட்டது. ஆனால் இன்று அனைத்தும் தலைகீழாக உள்ளது. போராட்டத்தின் ஊடாக ஜனாதிபதி மகுடம் சூடிய ரணில் விக்கிரமசிங்க தனது உண்மை முகத்தை நேற்று (நேற்று முன்தினம்) காண்பித்துள்ளார்.

ஊழல் மோசடி தொடர்பில்  கருத்துரைத்தவரை பதவி நீக்கி விட்டு,ஊழல்வாதிகள் பக்கம் ஜனாதிபதி அமர்ந்துள்ளார். இவ்வாறான நிலையில் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான தொடர்பு ஒப்பந்தம் எவ்வாறு பாதுகாக்கப்படும்.

பொருளாதார பாதிப்பு தொடர்பில் கவனம் செலுத்தாமல் சிறுப்பிள்ளை போல் கடந்த அரசாங்கம் செயற்பட்ட போது தவறுகளை சுட்டிக்காட்டினோம். குறிப்பிட்ட விடயத்தை ஆராயாமல் அப்போதைய  ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ என்னையும், உதய கம்மன்பிலவையும் அமைச்சு பதவியில் இருந்து நீக்கினார்.

அதுவே அவரது அரசாங்கத்தின் அழிவுக்கு ஆரம்ப புள்ளி வைத்தது. அரசாங்கத்துக்கும், மக்களுக்குமிடையிலான தொடர்பு முறிந்தது. இந்த அரசாங்கத்தின் அழிவு ரொஷான் ரணசிங்கவை அமைச்சு பதவியில் இருந்து நீக்கியதுடன் ஆரம்பமாகியுள்ளது.

ஊழல்வாதிகளுக்கு சார்பாகவே நான் செயற்படுவேன் என்பதை ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார்.பொதுஜன பெரமுனவினர் ஆட்சியதிகாரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைத்து விட்டு அரச நிர்வாகம் முறையாக இடம்பெறுகிறது என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.வெகுவிரையில் அதன் பிரதிபலனை அவர்கள் பெறுவார்கள்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.சுமார் 06 இலட்சம் பேரின் மின்விநியோகம்  துண்டிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் 12 இலட்சம் பேருக்கு சிவப்பு எச்சரிக்கை மின்கட்டண படிவம் அனுப்பட்டுள்ளது. மனசாட்சி இல்லாமல் கடுமையான தீர்மானங்களை அமுல்படுத்துதால் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாது.

மின்கட்டண அதிகரிப்பால் சிறு மற்றும் நடுத்தர தொழிற்றுறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.இந்நிலை நீடித்தால் சமூக கட்டமைப்பு மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். அரச சேவையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பளம் அதிகரிப்பதாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 20 ஆயிரம் ரூபா  மாதந்தம் வரி அறவிடலுக்கான முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு எவ்விதமான திட்டங்களும் முன்வைக்கப்படவில்லை.வரி அறவிடல்  மாத்திரமே அரசாங்கத்தின் பிரதான கொள்கையாக காணப்படுகிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 அம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டார் என்பதை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

தற்போதைய நெருக்கடி சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சர்வதேச நிறுவனங்களில் உயர் பதவியை பெற்றுக்கொள்வார். நாட்டின் எதிர்காலம் குறித்து அவருக்கு அக்கறையில்லை. தற்போதைய தவறான தீர்மானங்கள் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்றார்.

ராஜபக்சக்களுக்கு எதிரான அரகலய ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடைய சர்வதேச சதிகள் – விரைவில் அம்பலப்படுத்துவேன் என்கிறார் விமல் வீரவன்ச !

கடந்த வருடம் இடம்பெற்ற அரகலய ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடைய சர்வதேச சதிகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சதிதிட்டம் குறித்து மேலும் பல தகவல்களை அம்பலப்படுத்திய பின்னர் சதிதிட்டம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என ஜனாதிபதியை கோருவதற்காக நாங்கள் அவரை சந்திப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

சதிதிட்டம் குறித்த  முதல்கட்ட விபரங்களை அவர் ஒன்பதுபேரின் மறைக்கப்பட்ட கதை என்ற ஏப்பிரல் மாதம் வெளியான நூலில் அவர் வெளியிட்டிருந்தார்.

எனினும் புதிய தகவல்கள் குறித்து மேலதிக விபரங்களை அவர் வெளியிட மறுத்துள்ளார் அவற்றை தவறாக அர்த்தப்படுத்தலாம் என்பதால் மேலதிக விபரங்களை வெளியிடவிரும்பவில்லை என அவர்குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைப்பதற்காக அந்தவிபரங்களை முதலில் ஜனாதிபதியிடம் கையளிக்கவேண்டும், என தெரிவித்துள்ள விமல்வீரவன்ச தனத பிரசுரத்தில் உள்ள விடயங்கள் ஜனாதிபதிக்கு தெரியும் லண்டனில் சமீபத்தில் ஆற்றிய உரையில் ஜனாதிபதி தான் தெரிவித்துள்ள விடயங்களை ஏற்றுக்கொண்டுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எங்களிடம் உள்ள ஆதாரங்களை குழப்ப விரும்பவில்லை என  விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு எதிராக போராட்டம் – விமல் வீரவன்சவை கைது செய்ய உத்தரவு !

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) பிடியாணை பிறப்பித்துள்ளது. இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதன் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது 2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் ராத் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்த போது, ​​விமல் வீரவன்ச இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தார். இந்தநிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 11ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

“கனடா பிரதமர் முள்ளிவாய்க்காலை நினைவுகூர்ந்தால் நாம் கனடா படுகொலையை நினைவுகூருவோம்.” – விமல் வீரவன்ச

“கனடாவில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் 1996 ஆம் ஆண்டு  ஜூன் மாதம் 21 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார்கள். ஆகவே  எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதியை ‘கனடா படுகொலை தினம்’ என நாம்   அனுஷ்டிக்க வேண்டும்.” என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சபையில் சுட்டிக்காட்டினார்.

சபாநாயகர் தலைமையில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

மே 18 இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது என குறிப்பிட்டு கனடா நாட்டு பிரதமர் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி  நாட்டை அவமதித்துள்ளார். இலங்கை தொடர்பில் கருத்துரைக்கும் கடனாவின் வரலாற்று பக்கத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

1996 ஆம் ஆண்டு  ஜூன் மாதம்  21 ஆம் திகதி  கனடா  நாட்டில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். கனடாவில் தான் உண்மையில் இனப்படுகொலை இடம்பெற்றது. எதிர்ரும் மாதம் 21 ஆம் திகதி அந்த தினத்தை நாம் ‘கனடா இனப்படுகொலை தினம்’ என பாராளுமன்றத்தின் ஊடாக அனுஷ்டிக்க வேண்டும்.

இலங்கையில் இடம் பெறாத இனப்படுகொலையை கனடா அனுஷ்டிக்கும் போது கனடாவில் இடம்பெற்ற இனப்படுகொலையை நாம் அனுஷ்டிக்க வேண்டும். அதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

“கோட்டாபாயவுக்கு எதிரான போராட்டத்தை அமெரிக்காவே செய்தது” – விமல் வீரவங்சவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா பதில் !

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் பின்னணியில் அமெரிக்கா இருந்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மறுத்துள்ளார்.

‘ஒன்பது – மறைக்கப்பட்ட கதை’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ‘அரகலய’ ஆர்ப்பாட்டத்தின் பின்னணியுடன் அமெரிக்க தூதுவரை தொடர்புபடுத்தி அவரை விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் செய்துள்ள டுவிட்டர் பதிவிலேயே இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தனது மறுப்பினை தெரிவித்துள்ளார்.

அவரது டுவிட்டர் பதிவில், ‘புனைகதை’ என்று முத்திரை குத்தப்பட வேண்டிய புத்தகத்தில் ஒரு எம்.பி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி அப்பட்டமான பொய்களை பரப்பியிருக்கின்றார்.

75 ஆண்டுகளாக அமெரிக்காவும் இலங்கையும் ஜனநாயகம், இறையாண்மை மற்றும் செழிப்புக்கான உறுதிப்பாட்டை பகிர்ந்து கொண்டிருக்கின்றன.

அதேபோன்று தொடர்ந்தும் கூட்டாண்மையுடன் எதிர்காலத்தை நாம் உருவாக்குவோம். எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் கடந்த ஆண்டு இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது ஜனாதிபதி மாளிக்கைக்குள் படைத்தளபதிகள் மற்றும் ஜனாதிபதி உள்ளிட்டோர் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படவிருந்ததாகவும், அந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் இராணுவத்தளபதி இந்தியாவுக்கு சென்றிருந்தமை சந்தேகத்தை தோற்றுவிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ள கருத்தை பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

‘கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் பக்க நிகழ்வாக தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 7ஆம் திகதி இந்தியாவில் இடம்பெற்றது.

நாட்டின் அப்போதைய ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை மற்றும் அனுமதியின் கீழ் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாதுகாப்பு பதவி நிலை தலைமை அதிகாரி, முன்னாள் விமானப்படைத் தளபதி சவேந்திர சில்வா குறித்த மாநாட்டில் பங்குபற்றியிருந்தார்.

இந்நிலையில் நூல் வெளியீட்டு விழாவொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய விமல் வீரவன்ச, ‘2022 மே 9ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தவர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் ஜனாதிபதி மற்றும் படைத்தளபதிகள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டதாகவும், அந்த சந்தர்ப்பத்தில் சவேந்திர சில்வா இந்தியா சென்றிருந்தமை சந்தேகத்தை ஏற்படுத்தியது.’ என குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து அடிப்படையற்றதாகும். சவேந்திர சில்வா கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் பங்குபற்றுவதற்காக கடந்த ஆண்டு ஜூலை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்தது அப்போதைய ஜனாதிபதியின் ஆலோசனைக்கமையவே என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கோட்டா கோ கமவில் முதல் குடிலை ரணில் தரப்பே அமைத்தது.’ – விமல் வீரவன்ச

காலி முகத்திடலில்  ‘கோட்டா கோ கம’ முதலாவது குடிலை ஐக்கிய தேசியக் கட்சியின் ஆஷு மாரசிங்கவினால் அமைக்கப்பட்டது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்து அரகலயவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்திருந்ததாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

காலி முகத்திடலில் உள்ள அரகலய இடத்தை அகற்ற வேண்டாம் என அப்போதைய பிரதமர் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அரகலயவை தாக்க ஆரம்பித்தார் என்றார்.

“இனப்பிரச்சினைக்கு தீர்வு 13ஆவது திருத்தம் அல்ல. 1957 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சமூக ஏழ்மை ஒழிப்பு சட்டமே தீர்வு.”- விமல் வீரவன்ச

“வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்க தீர்வு காண 1957 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சமூக ஏழ்மை ஒழிப்பு சட்டத்தை முழுமையாக செயற்படுத்த வேண்டும்.” என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (15)இடம்பெற்ற அரச பொங்கல் பண்டிகை நிகழ்வில் கலந்துக்கொண்டு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டார்.இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஜனாதிபதி,பிரதமர்,பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மகாநாயக்க தேரர்களுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக வடக்கு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றினால் குறுகிய காலத்தில் நாடு இரண்டாக பிளவடையும்.13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதால் வடக்கின் பிரிவினைவாத,சாதி அடிப்படையிலான அரசியல் தலைவர்களின் நோக்கம் நிறைவேறுமா தவிர தமிழ் மக்களின் உண்மை பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் பிரிவினைவாத அரசியல் கட்சிகள் அடையாளப்படுத்த்தும் இன அடிப்படையிலான பிரச்சினைக்கு தீர்வு காண்பதை விட ,நாங்கள் அடையாளப்படுத்தும் சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும். யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களின் மனங்களை வெல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது உண்மை.

தமிழ் மக்களின் அடிப்படையில் சர்வக்கட்சி தலைவர் கூட்டம் அண்மையில் இடம்பெற்றது.இந்த கூட்டத்தில் பிரிவினைவாத அரசியல் கட்சிகளின் நிபந்தனைகளை அரசாங்கம்  ஏற்றுக்கொண்டுள்ளது. சர்வதேச காலநிலை  தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் 2002 ஆம் ஆண்டு முன்வைத்த கொள்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம்,வடக்கிழக்கு மாகாண சபையை தற்காலிக அரசாங்கமாக மாற்றியமைக்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

அப்போதைய பிரதமராக பதவி வகித்த நீங்கள் (ஜனாதிபதி)அதற்கு இணக்கம் தெரிவித்தீர்கள். அதற்கமைய ‘ஒஸ்லோ ஒப்பந்தம்’கைச்சாத்திடப்பட்டது.

அதனை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் மங்கல சமரவீர புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள்,சர்வதேச பிரிவினைவாத அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களை ஒன்றிணைத்து சிங்கப்பூர் நாட்டில் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டதுடன் ஒருசில தீர்மானங்களும் எடுக்கப்பட்டது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படவில்லை.

விடுதலை புலிகள் அமைப்பின் சந்தேக நபர்களை விடுதலை செய்வதன் ஊடாக தமிழ் மக்களின் நன்மதிப்பை பெற்றுக்கொள்ளல்,இராணுவ முகாம் மற்றும் அதனை அண்மித்த காணிகளை விடுவித்தல்,மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான ‘எல்’ வலய காணிகளை பிரதேச செயலகம் ஊடாக விடுவித்தல்,காணி கொள்கையில் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு மாத்திரம் காணிகளை வழங்கும் திட்டத்தை வகுத்தல்,ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்க விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. காணாமல் போனார் அலுவலகம் சட்டத்தின் ஊடாக இயற்றப்பட்டுள்ளது.தென்னாப்பிரிக்காவில் உருவாக்கப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் சர்வதேச தலையீடு தென்னாப்பிரிக்காவில் வெளிப்படையாக காணப்படுவதை அறிய முடிகிறது.

2002 மற்றும் 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிறைவேற்ற முடியாத விடயங்களை 2023 ஆம் ஆண்டு நிறைவேற்ற முயற்சிப்பது நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாக கட்டமைப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள பின்னணியில் மக்களை திசைத்திருப்பி நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிக்கீன்றீர்கள் என்பதை நன்கு அறிவோம். பிரிவினைவாதத்தில் இருந்து நாட்டை பாதுகாத்து வடக்கு மக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் 10 பிரதான யோசனைகளை முன்வைக்கிறோம்.

இராச்சியத்தின் நிறைவேற்று அதிகாரத்தை உள்ளூராட்சி மன்றங்களுக்கு விரிவுப்படுத்தி அதற்கு இணையாக மக்கள் சபை என்பததொன்றை உருவாக்கி அரச செயற்பாடுகளில் மக்களை இணைத்துக் கொள்ள வேண்டும். நிறைவேற்று அதிகாரத்தை வினைத்திறனான முறையில் செயற்படுத்தும் வகையில் உள்ளூராட்சிமன்ற பிரதானிகளை உள்ளடக்கிய வகையில் உள்ளூராட்சி அபிவிருத்தி சபை ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

அத்துடன் உள்ளூர் அதிகார சபைக்குள் நிறைவேற்று அதிகாரத்தை செயற்படுத்துவதற்காக மத்திய அரசாங்கத்தின் பிரதி அமைச்சரின் அதிகாரத்துடன் குறைந்தளவிலான அமைச்சரவை ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் அவர்களுக்கு விசேட சலுகைகள் ஏதும் வழங்க கூடாது.

நாட்டின் சகல இனங்களின் தேசியத்துவம் மதிக்கப்படுவதுடன்,மதம் மற்றும் மொழி அடிப்படையில் வேறுப்பாடுகள் காண்பிக்க கூடாது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் குறிப்பாக தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் 1957 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சமூக ஏழ்மை ஒழிப்பு சட்டத்தை முழுமையாக செயற்படுத்த வேண்டும். பிரிவினைவாதம் மற்றும் மதவாதத்தை அடிப்படையாக கொண்ட செயற்பாடுகளை தடுக்கும் வகையில் புதிய பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள்குடியமர்த்தல்,ஏழ்மை ஒழிப்பு ஆகியவற்றுக்காக விசேட நிதியம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் அல்லது புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்கள் முழுமையாக விடுதலை செய்ய வேண்டும்.குறுகிய அரசியல் நோக்கத்திற்காக இராணுவத்தினர் மீது தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட வேண்டும்.

“தமது பொறிக்குள் இலங்கையை சிக்க வைப்பதற்கு இந்தியாவும், மேற்குலகமும் முயற்சிக்கின்றன.” – விமல் வீரவன்ச

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தமது பொறிக்குள் இலங்கையை சிக்க வைப்பதற்கு இந்தியாவும், மேற்குலகமும் முயற்சிக்கின்றன என்று ‘உத்தர லங்கா சபாகயவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நேற்று நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

“இலங்கை பொருளாதார ரீதியில் பலமிழந்துள்ளது. இதனை வைத்து பலம்பொருந்திய நாடுகள் இலங்கையின் கழுத்தை இறுக்கி பிடிக்க முற்படுகின்றன. தமது உபாயத்துக்குள் இலங்கையை கொண்டுவருவதற்கு கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுவருகின்றன. தமது நாட்டு ரூபாவை இலங்கையில் செயற்படுத்துவதற்கு இந்தியா முயற்சிக்கின்றது. அவ்வாறு நடந்தால் இலங்கை இந்தியாவின் மாநிலமாக மாறக்கூடிய சூழ்நிலைமை தானாகவே உருவாகிவிடும்.

மறுபுறத்தில் நாட்டில் போராட்டங்களை தூண்டிவிட்டு, அராஜக நிலைமையொன்றை உருவாக்குவதற்கு மேற்குலக நாடுகள் திட்டம் தீட்டுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.