ரவூப் ஹக்கீம்

ரவூப் ஹக்கீம்

விமான நிலையத்தில் பா உ சிறிதரனுக்கு ஏற்பட்ட தாமதத்திற்கு சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்கா மன வருத்தம் !

விமான நிலையத்தில் பா உ சிறிதரனுக்கு ஏற்பட்ட தாமதத்திற்கு சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்கா மன வருத்தம் !

பயங்கரவாதத் தடைச் சட்டம் அரசாங்கத்தின் கொள்கை அல்லது விஞ்ஞாபனத்தின் ஒரு பகுதி அல்ல, ஆனால் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் வரை அது அவதானத்துடன் பயன்படுத்தப்படும் என அவைத் தலைவர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், பா.உ. சிறீதரன்; அண்மையில் இந்தியாவுக்கு பயணம் செய்தபோது, குடிவரவு அதிகாரிகள் பயணத் தடையை காரணம் காட்டி அவரின் பயணத்தை தடை செய்ய முற்பட்டதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டி இருந்ததுடன் அத்தகைய தடைக்கு நீதிமன்ற உத்தரவு தேவை என்றும் வாதிட்டிருந்தார்.

குறித்த விடயத்துக்கு பதிலளித்த சபைத்தலைவர் பிமல் ரத்நாயக்க, இது தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சிறிதரன் எம்.பி.க்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும் தெரிவித்த சபைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமைகளை உறுதிப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியதுடன் அங்கு பயங்கரவாத தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தவில்லை என்பது தெளிவானது எனவும் குறிப்பிட்டார்.

இஸ்ரேலை பாதுகாக்க செங்கடலுக்கு கடற்படைகளை அனுப்புவதை விட்டுவிட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள் – அரசிடம் ரவூப் ஹக்கீம் வலியுறுத்து !

செங்கடலில் இஸ்ரேலின் கப்பல்களை பாதுகாப்பதற்காக கடற்படையை அங்கு அனுப்புவதை விட்டு, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் கிழக்கு மாகாண மக்களுக்கு உதவிகளை செய்ய கடற்படையினரை ஈடுபடுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற நீதிமன்ற நியாயசபை மற்றும் நீதிமன்ற அவமதிப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

 

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக புல்மோட்டை தொடக்கம் பொத்துவில் பானமை வரையும் அனைத்து கரையோர மற்றும் தாழ்நிலப்பிரதேசங்களில் கடும் மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக அந்த பிரதேச மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நீர் வலிந்து ஓடமுடியாமல் பல இடங்களில் நீர் தேங்கி இருக்கிறது. அதனால் போக்குவர்தது பிரச்சினைகளும் மிகவும் பூதாகரமாக உருவெடுத்து வருகிறது.

 

அத்துடன் மக்களின் வாழ்விட பிரதேசங்களில் இருந்து நீரை அகற்றவேண்டிய நிலையும் கிணறுகளை சுத்தப்படுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று இந்த மோசமான காலநிலையால் பயிர் நிலங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதுடன் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த மூன்று மாவட்டங்களிலும் உள்ள மக்களுக்கு சமைத்த உணவு வழங்க, அரசாங்க அதிபர்கள் அதற்கான கணக்கீடுகளை செய்து, அதற்கான தேவையான வசதிகளை, அந்த விடயங்களை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறேன்.

 

இந்த சந்தர்ப்பத்திலே அரசாங்கம் இஸ்ரேலின் கப்பல்களை பாதுகாப்பதற்காக செங்கமலுக்கு எமது கடற்படையினரை அனுப்புவதற்கு பதிலாக, கடற்படையினரை இவ்வாறான அனர்த்த நிலைமைகளில் ஈடுபடுத்துவதே மிகவும் உசித்தமான விடயம். இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி கவனம் செலுத்துவார் என எதிர்பார்கிறேன்.

 

செங்கடலுக்கு இஸ்ரேலின் கப்பல்களை பாதுகாக்க எமது கடற்படையினரை அனுப்புவதற்கு ஜனாதிபதி எடுத்திருக்கும் தீர்மானத்தை நான் கடுமையாக சபையில் விமர்சித்திருந்தேன். அதனால் இஸ்ரேலின் கப்பல்களை பாதுகாப்பதை விட்டு, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் கிழக்கு மாகாண மக்களுக்கு உதவிகளை செய்ய கடற்படையினரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் வினயமாக ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையை முன்வைக்கிறேன். அது அந்த மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றார்

“ஒரு லட்சம் இலங்கை ஊழியர்களை இஸ்ரேலுக்கு அனுப்பும் திட்டத்தை அரபு தூதுவர்கள் கிண்டல் செய்கிறார்கள்.” – ரவூப் ஹக்கீம்

இந்த இக்கட்டான நேரத்தில் 10,000 பேரை இஸ்ரேலுக்கு வேலைக்கு அனுப்ப அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அது பாதுகாப்பு மற்றும் பொருளாதார தாக்கங்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் இன்று தெரிவித்தார்.

 

அரேபிய இராஜதந்திரிகள் கூட இந்த நகர்வுகள் குறித்து குழப்பமடைந்துள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

இன்றைய டெய்லி மிரர் நாளிதழின் பிரதான செய்தியை குறிப்பிடும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.

 

“வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் 10,000 ஊழியர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கு அமைச்சரவையின் ஒப்புதலைக் கோரியிருந்தார். இது குறித்து நான் வருத்தமடைகிறேன். இது போன்ற நேரத்தில் நாம் உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும். இதுவும் மிகவும் உணர்ச்சியற்ற விடயம். இது நமது பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கு முன்னர் திலான் பெரேரா விடய அமைச்சராக இருந்த காலத்தில் இவ்வாறான ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்பட்ட போது, ​​இஸ்ரேலுக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர் தியத்தலாவ முகாமில் இராணுவப் பயிற்சிகள் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

 

“ஏழை காசா குடியிருப்பாளர்களால் காலி செய்யப்பட்ட பண்ணைகளில் அவர்கள் வேலை செய்ய வேண்டும். இவர்கள் வலுக்கட்டாயமாக அங்கு அனுப்பப் போகிறார்கள். அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை. நான் நேற்று ஒரு இராஜதந்திர விழாவில் பல அரபு தூதர்கள் கலந்துகொண்டேன். அவர்களும் இந்த நடவடிக்கையை ஏளனம் செய்து கேலி செய்தனர். நீங்கள் அந்நிய செலாவணி சம்பாதிக்கலாம், ஆனால் நேரம் மோசமாக உள்ளது, ”

 

இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கை மத்திய கிழக்கு நாடுகளுக்கு பல வருடங்களாக பணியாளர்களை அனுப்பி வருவதாகவும், இதுவும் அந்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாகும்.

 

“இஸ்ரேலுக்குப் போக 10,000 பேர் இருப்பார்கள் என நான் நினைக்கவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு மக்கள் செல்வார்கள் என நான் நினைக்கவில்லை. இது பழைய நடைமுறையின் தொடர்ச்சிதான். இருந்தாலும் வெளிநாட்டவரிடம் இதுபற்றி வேலைவாய்ப்பு அமைச்சர் கலந்துரையாடுவார்.

 

இலங்கையின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்றும், காஸா பகுதி மீதான தாக்குதலைக் கண்டிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

“வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் காணிகளை அபகரிப்பது நல்லிணக்க விடயங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.” – ரவூப் ஹக்கீம்

“வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தொடர்ந்தும் காணிகளை அபகரிக்க இடமளித்தால், அது இனப்பிரச்சினைக்குரிய தீர்வுக்கான நல்லிணக்க விடயங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் அஷ்வசும வேலைத்திட்டம் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

காணி அபகரிப்புகள் அந்த மக்களை வறுமை நிலைக்கும் வேறு பிரச்சினைகளுக்கும் தள்ளிவிடுகின்ற பிரதான பிரச்சினையாகும்.  யுத்தத்துக்கு பின்னர் காணி அபகரிப்பு பிரச்சினை குறிப்பாக, வடக்கில் பாரியளவில் இடம்பெற்று வருகிறது. அதனால்தான் காணி அபகரிப்புகளை உடனடியாக நிறுத்துமாறு தமிழ் அரசியல்  கட்சிகளுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக தமிழ் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

காணி அபகரிப்பு வடக்கு, கிழக்கில் இன்னும் இடம்பெற்று வருவதை காண்கிறோம்.

மேலும், திருகோணமலை பிரதேசத்தில் சியம் நிகாய மஹாநாயக்க தேரர்களின் வழிபாட்டு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு தடுக்க முற்பட்டால் பாரிய அழிவு ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்திருக்கிறார். இது பாரிய அச்சுறுத்தலாகும். இதனை சாதாரணமாக கருத முடியாது.

அதேநேரம் இந்த அச்சுறுத்தலை விடுக்கும் சரத் வீரசேகர எம்.பி.தான் தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற மேற்பார்வை குழுவின் தலைவர்.  இப்படி அச்சுறுத்தல் விடுக்கும் ஒரு தலைவரிடமிருந்து முன்மாதிரி, அர்ப்பணிப்பை எதிர்பார்க்க முடியுமா என்ற கேள்வி எமக்கு எழுகிறது. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

அதேநேரம் கிழக்கில் சில பிரதேசங்களை பெளத்தமயமாக்கும் இவ்வாறான சித்த விளையாட்டினால் நாட்டில் இருக்கின்ற இனப்பிரச்சினை இன்னும் படுமோசமான முறையில் பாதிக்கப்படப் போகிறது.

மேலும், திருகோணமலை வெள்ளைமணல் பிரதேசத்தில் தொல்லாயிரம் ஏக்கர் நிலப்பரப்பினை விமானப்படையினர் சுவீகரித்துக்கொள்ள முயற்சி இடம்பெறுவதாக அறியக் கிடைத்தேன்.

அந்த பிரதேசத்தின் ஒரு பகுதியில் குடிமக்களின் வீடுகள் அமைந்திருக்கின்றன. அடுத்த பகுதியில் கடல் அமைந்திருக்கிறது. அந்த இரண்டுக்கும் இடையில் இருக்கும் பாரிய நிலப்பரப்பை, பாதுகாப்பு தேவைகளுக்காக என தெரிவித்துக்கொண்டு விமானப்படை சுவீகரிக்க திட்டமிட்டு வருகிறது. ஆனால், உல்லாச பயணிகளின் தேவைகளுக்கு வசதிகளை ஏற்படுத்துவதற்கே இதனை சுவீகரிக்கப்போவதாக தெரியவருகிறது. இதனால் அங்கு தொழில் வாய்ப்புக்களில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுபோன்று காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறோம். இவ்வாறான நடவடிக்கை கடந்த காலங்களிலும் இடம்பெற்று வந்தன; தற்போது இடம்பெற்று வருகின்றன.

இதே பிரச்சினை திருகோணமலை அரிசிமலை பிரதேசத்திலும் இடம்பெற்று வந்தது. இந்த காணிகளை பாதுகாத்து தருவதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.

அத்துடன். இந்த காணிகளை அபகரிக்க தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் அமைச்சர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் மதகுருமார்களும் சேர்ந்து வருகின்றனர். துப்பாக்கிகளுடனே வருகின்றனர்.

இப்படியான அநியாயங்களுக்கு வடக்கு, கிழக்கு பிரதேசங்கள் தொடர்ந்தும் இடமளித்தால், இனப்பிரச்சினைக்குரிய தீர்வுக்கான நல்லிணக்க விடயங்களுக்கு என்ன நடக்கும்?

சர்வதேசத்தின் முன்னிலையில், ஜெனீவாவில் இந்த அரசாங்கம் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டு வருகிறது என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதற்கு மத்தியில் இவ்வாறு காணிகளை அபகரிக்கும் விடயங்கள் தொடர்ந்தால், மக்களை வறுமை நிலையில் இருந்து மீட்பதற்கு எடுக்கும் முயற்சிகளில் பயன் இல்லாமல் போகும் என்றார்.

“வடக்கு – கிழக்கை இணைக்க வேண்டும் என கூறி முஸ்லீம்களிடையே விசமத்தனமான கருத்துக்கள் விதைக்கப்படுகிறது.” – ரவூப் ஹக்கீம்

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் செயற்பாடுகளில் முஸ்லிம் தரப்பையும் இணைத்துக் கொள்ள ஜனாதிபதி ரணில் நடவடிக்கை எடுப்பது அவசியம் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் உரையாற்றிய ரவூப் ஹக்கீம் எம்பி,

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாகவும் நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் கட்சிகளுடனும் குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்கது.

சகல தரப்புகளும் இணங்கும் சிறந்த தீர்வை மிக விரைவில் பெற்றுத்தருவதற்கான முயற்சியை ஜனாதிபதி ரணில் உளப்பூர்வமாக எடுப்பாரானால் அதில் முஸ்லிம் தரப்பையும் இணைத்துக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

எனினும் அது சம்பந்தமாக விசமத்தனமான பிரசாரங்கள் முஸ்லிம் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவது கவலைக்குரிய விடயமாகும். இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து, தமிழ் மக்களின் அபிலாசைகள் என்பது சில சமயங்களில் முஸ்லிம்களின் அபிலாசைகளுடன் முரண்பட்டதாக காணப்படுகின்றன.

அந்த வகையில் தேவையற்ற சந்தேகங்களை கிளப்பி ஒட்டுமொத்த இனப்பிரச்சினை தீர்வுக்கான சாத்தியப்பாட்டையும் குழப்ப முயற்சிக்கும் விடயமாக இதை உணர முடிகிறது. அதனடிப்பையில் ஒட்டுமொத்த வடக்கு கிழக்கு பிரதேசத்தையும் ஒரு அரசியல் அலகாக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழர் தரப்பில் நீண்டகாலமாக தெரிவிக்கப்பட்டு வருகின்ற போதிலும்; அதில் முஸ்லிம் தரப்பு சற்று மாற்றமான கருத்தை கொண்டிருக்கின்றது என்பதை குறிப்பிட வேண்டும் என தெரிவித்தார்.

ஞானசார தேரரின் ஒரே நாடு – ஒரே சட்டம் அறிக்கையை குப்பையில் போடுங்கள் – ரவூப் ஹக்கீம்

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ஒரே நாடு – ஒரே சட்டம் தொடர்பான செயலணி அறிக்கையை குப்பை கூடையில் போடுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) நடைபெற்ற எதிரணிகளின் கூட்டு செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், அதற்கான நடவடிக்கையை ஜனாதிபதி எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“என்னை ராஜபக்ஷக்களுடன் இணைந்து பணியாற்ற கூறியதே ரவூப் ஹக்கீம் தான்.” – இரட்டை வேடம் போடும் ரவூப் ஹக்கீம் !

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுடன் கார்னிவல் அலுவலகத்தில் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தியபின்னர் 20 க்கு ஆதரவாக வாக்களிக்குமாறு எமக்கு கூறிய ரவூப் ஹக்கீம், இப்போது என்னை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக இரட்டை வேடம் போடுவதாக அமைச்சர் ஹாபிஸ் நஸீர் தெரிவித்துள்ளார்.

 

பொதுஜன பெரமுன அரசில் சுற்றாடல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்  ஹாபிஸ் நஸீரை, கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்துள்ளார். இதனையடுத்தே, ஹக்கீமின் இரட்டை வேடம் என்ற தலைப்பில் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அவசரக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எந்த விசாரணையுமின்றி என்னை உடனடியாக கட்சியை விட்டு நீக்கியதாக கூறப்படும் எந்தத் தகவலும் இதுவரை எனக்கு வரவில்லை, அவ்வாறு கிடைத்தால் அதற்குத் தகுந்த பதிலளிப்பேன் என்றும் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் தெரிவித்துள்ளார்.

அவர் தனது கடிதத்தில் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,

2020 ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றி பெற்று இரண்டு மாதங்களுக்கு பின், 2020 ஒக்டோபர் மாதமளவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்புமனுவினூடாக தற்போதைய பாராளுமன்றத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் நான். தற்போது அதிகாரத்தில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் இணைந்து நான்,செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் தீர்மானமே காரணமாகும்.

அவ்வாறிருக்கையில், முறையான விசாரணைகள் எதுவுமின்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து என்னை திடீரென நீக்கிவிட்டதாகக் கூறி அவர் எவ்வாறு இந்த நாட்டைத் தவறாக வழிநடத்த முடியும்?

தற்போது, நமது அயல் நாடொன்றில் இலங்கையின் தூதுவராக இருக்கும் அவரது நண்பருடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினதோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தியினதோ அனுமதி இன்றி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியுடன் உறுதியான புரிந்துணர்வுக்கும் ரவூப் ஹக்கீம் வந்ததை அவரால் மறுக்க முடியுமா?

அதனை தொடர்ந்து, 2020 ஒக்டோபர் 18 ஆம் திகதி ரவூப் ஹக்கீமின் கார்னிவல் (Carnival) அலுவலகத்தில் ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஷவுடன் ஒரு மணி நேரத்துக்கு மேல் சந்திப்பு நடத்தியதை அவர் மறுக்க முடியுமா? இச்சந்திப்பில் ரவூப் ஹக்கீமின் அழைப்பின் பேரில், நான் உட்பட எம்.சி.பைசால் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், தெளபீக் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் எங்கள் அனைவரையும் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்குமாறும் பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறும் எங்களை வேண்டிக் கொண்டதால், நான் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற விரும்பினாலும் ஜக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவம் மற்றும் அவரது கண்டி மாவட்ட தேர்தலில் ஜக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு என்பவற்றின் காரணமாக அவரால் அவ்வாறு செய்ய முடியாமல் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

நாட்டு மக்கள் பொதுஜன பெரமுனவை, அத்தேர்தலில் அமோக வெற்றியுடன் பாராளுமன்றத்துக்கு அனுப்பியிருப்பதாலும், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எனது வாக்காளர்களின் நலன் கருதியும், அதிகாரத்திலுள்ள அரசாங்கத்துடன் இணைந்து வாக்காளர்களுக்கு அத்தியாவசியமான தேவைகளை பெற்றுக்கொடுக்க நான் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது அவசியமானதாலும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதை உடன்படுகிறேன்.

அதன் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட எமது அரசியல் கட்சியின் தலைமையின் வேண்டுகோளுக்கிணங்க, அவரை நம்பி 20ஆவது திருத்தத்துக்கு வாக்களித்தேன். ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியின் அழுத்தத்தின் காரணமாக ரவூப் ஹக்கீம் வாக்களித்தமைக்காக எனது விளக்கத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால் ரவூப் ஹக்கீம்தான், நான் பொது ஜன பெரமுனவுடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென்று அவர் கட்டாயாப்படுத்தியதற்கேற்ப நான் செயற்பட்டதை ரவூப் ஹக்கீம் நன்றாக அறிந்திருந்ததால், இவ்விடயம் தொடர்பாக ரவூப் ஹக்கீம் என்மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை.

கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 03, அன்று பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக, என்னை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக இப்போது திடீரென்று ரவூப் ஹக்கீம் கூறுகிறார், இந் நீக்கமும் கூட ஜனாதிபதி என்னை நாட்டின் அவசர தேசிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அவருக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டு, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியை பெற்றுக் கொண்டதன் பின்னரே இந் நீக்கம் ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் அங்கம் வகிக்குமாறு ஜனாதிபதி அழைத்ததன் பின்னரே, தேசிய நலன் கருதி அதனை நான் ஏற்றுக்கொண்டேன்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினர் மறைமுக பொறுப்பாளிகள்..? – ரவூப் ஹக்கீம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசாங்கம் உடனடியாக இரத்துச் செய்ய வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சில விடயங்களை மூடி மறைப்பதற்காகவே அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் மீது அவசரமாக செயற்படுகிறது. மேலும்  கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் அண்மைய வெளிநாட்டு விஜயத்தை தொடர்ந்து அரசாங்கம் பாரிய அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.

ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரையும் போப் பிரான்சிஸையும் சந்தித்து ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து கர்தினால் விவாதித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினர் மறைமுக பொறுப்பாளிகளா என்பதைத் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

“சிங்கள தரப்புடன் இணைந்து அரசியல் நடத்த வேண்டிய கட்டாயத்தில் மனோகணேசன்.” – கஜேந்திரகுமார்

தென்னிலங்கை சிங்கள தரப்புடன் இணைந்து அரசியல் நடத்த வேண்டிய கட்டாயத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் உள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலம் இது தொடர்பில் பேசிய அவர்,

ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் ஒற்றையாட்சிக்குள் திணிக்கும் சதி வலையில் சிக்கிக் கொள்ளக் கூடாது.  இந்தியாவின் ஒற்றையாட்சிக்குள் தமிழ் பேசும் தலைவர்களான மனோ கணேசன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளமை வேதனையளிக்கின்றது.

உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் முஸ்லிம் மக்களே பேரினவாதிகளால் இலக்கு வைக்கப்படுகின்றமையை உணர்ந்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை செயற்பட வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லீம் சமூகத்தை துன்புறுத்துவதில் அரசாங்கம் அடையும் இன்பத்திற்கு அளவே இல்லை. ” – ரவூப் ஹக்கீம்

கட்சியில் ஆதரவாளர்களுடைய செல்வாக்கும், நன்மதிப்பும் இருக்கும் வரைதான் கட்சித் தலைமையில் நான் இருப்பேன்  என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை எஸ்.ரி.ஆர். அமைப்பின் நான்காவது ஆண்டு நிறைவு தின நிகழ்வு  சம்மாந்துறை அப்துல் மஜீத் நகர மண்டபத்தில் அமைப்பின் தலைவர் யாத்தீக் இப்றாஹிம் தலைமையில் கடந்த 27.03.2021 அன்று இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில்  இவ்வாறு தெரிவித்தார்.

அவர்  தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கட்சியின் ஆதரவாளர்கள், அடிமட்ட போராளிகளின்  மன உணர்வுகள் சம்பந்தமான பெறுமானத்தை பாராளுமன்ற உறுப்பினர்களும் சரி, தலைமையும் சரி உணர்ந்து கொள்ள வேண்டும். கட்சியில்  பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட கௌரவம் மற்றும் எதிர்கால அரசியலில் என்னால் எதுவித  பாதிப்புகளும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக மிகவும் மௌனமாக இருந்து வந்துள்ளேன்.

பல்வேறு போராட்டங்களின் பின்னர் சர்வதேசத்தின் தலையீட்டினாலேயே   ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான உரிமை கிடைக்கப் பெற்றுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் இயக்கம் இந்த ஆட்சியாளர்களுடன் தேலையில்லாமல் முரண்பட்டு கொள்ளவுமில்லை. ஆனால் அவர்களின் எடுப்பார் கைப்பிள்ளையாகவும் ஒருபோதும் இருக்கவும் போவதில்லை.

ஆட்சியாளர்களின் அனுசரணை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வளவோ இருக்கலாம் ஆனால் தமது பதவியில் நீடிக்க வேண்டுமாயின் கட்சி ஆதரவாளர்களின் செல்வாக்கும், நன்மதிப்பும்  தலைமையின் ஆசீர்வாதமும் இல்லாவிட்டால் தங்களின் நிலைமை என்னவென்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் நாட்டில் முஸ்லிம் சமூகம் நெருக்கடியான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். சமூகத்தை துன்புறுத்துவதில் அரசாங்கம் அடையும் இன்பத்திற்கு அளவே இல்லை. அந்த அளவுக்கு நாட்டில் இனவாதம் தலைவிரித்தாடுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது  ஒரு சிலரின் அரசியல் நோக்கத்திற்காக இவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள் என்பதுதான் எங்களுக்கு மத்தியில் பேசப்படுகின்ற விடயமாகும்.

முஸ்லிம் காங்கிரஸ்  தனிநபர்களில் தங்கியிருக்கின்ற இயக்கமல்ல. எந்தவித எதிர்பார்ப்புக்கள் இல்லாமல் இருக்கின்ற இளைஞர்களினதும், தாய்மார்களின் துஆக்களினாலும் வளர்க்கப்பட்ட இயக்கமாகும்.

எனவே, இந்த இயக்கத்தினுடைய பொறுப்பு என்பது சமூகத்தின் அவலங்களுக்கு தைரியமாக குரல்கொடுக்கின்ற திராணியுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆட்சியாளர்களுக்கு கூஜா தூக்குகின்றவர்களாக இருக்கக் கூடாது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஏ.எல். தவம், எம்.எஸ். உதுமாலெவ்வை, கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.