ரவிகரன்

ரவிகரன்

இன்றைய வட்டுவாகல் பாலம் நினைவுச் சின்னமாகும் – புதிய பாலம் புதிதாக நிர்மாணிக்கப்படும் ! பா உ ரவிகரன்

இன்றைய வட்டுவாகல் பாலம் நினைவுச் சின்னமாகும் – புதிய பாலம் புதிதாக நிர்மாணிக்கப்படும் ! பா உ ரவிகரன்

“இறுதி வன்னி யுத்தத்தின் அடையாளங்களில் ஒன்று வட்டுவாகல் பாலம் அது நினைவுச் சின்னமாகப் பாதுகாக்கப்படும். புதிய பாலம் புதிதாக நிர்மாணிக்கப்படும்” என பா உ துரைராசா ரவிகரன் தேசம்நெற்க்கு நேற்றுத் தெரிவித்தார். வரவு செலவுத்திட்டத்தின் மீதான இரண்டாம் நாள் நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு கொழும்பிலிருந்து தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தனது வேண்டுகோளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த வட்டுவாகல் பாலத்தை திருத்தவும் வடக்கின் விதிகளைத் திருத்தவும் ஆறு பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை தான் வரவேற்பதாகவும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பாலம் புனரமைக்கப்பட்டால் முல்லைத்தீவு மக்கள் மிகுந்த நன்மையடைவார்கள் எனவும் ரவிகரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

அரசாங்கம் இன்றைய பாலத்தை நினைவுச் சின்னமாகப் பேண அனுமதி வழங்கியுள்ளதா எனத் தேசம்நெற் கேட்ட போது எமது அதிகாரிகள் அதற்கான திட்டவரைபைக் கொண்டுள்ளனர். அதன் அடிப்படையிலேயே புதிய பாலம் நிர்மாணிக்கப்படும். பழைய பாலம் நினைவுச் சின்னமாகப் பேணப்படும் எனத் தெரிவித்தார்.

வழமைபோல் எமது அதிகாரிகள் நிதியைப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்புவார்களா? அல்லது நிதியை குறித்த காலத்தில் வினைத்திறனுடன் பயன்படுத்தும் திறமையையும் ஆளுமையையும் கொண்டிருக்கின்றார்களா எனக் கேட்டபோது, நிச்சயமாக அவர்கள் நிதியை திருப்பி அனுப்பாமல் குறித்த காலத்திற்குள் திட்டத்தை முடித்து மேலதிக நிதிக்கான வேண்டுகொளை வைப்பார்கள் என உறுதியளித்தார்

தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டுமா ?’ ‘விகாரைக்கு அத்திவாரம் போடும் போதே தடுத்திருக்க வேண்டும் !’ பா உ ரவிகரன்

கேள்வி: ‘தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டுமா ?’ ‘விகாரைக்கு அத்திவாரம் போடும் போதே தடுத்திருக்க வேண்டும் !’ பா உ தி ரவிகரன் பதில்

 

தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டுமா? எனத் தேசம்நெற் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த பா உ துரைராசா ரவிகரன், “விகாரைக்கு அத்திவாரம் போடும் போதே அதனைத் தடுத்திருக்க வேண்டும்” எனத் தேசம்நெற்க்கு பதிலளித்தார். தான் யாரையும் குற்றம்சாட்டவில்லை என்றும் இதற்கு மேல் தான் ஏதும் சொல்லவிரும்பவில்லை என்றும் நேற்று தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் வன்னியில் வன இலாக்கா மற்றும் தொல்லியல் திணைக்களம் மக்களுடைய காணிகளை அபகரிக்கின்றது எனறும் 2009 இல் அவர்களிடம் இருந்த இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட ஏக்கர் காணிகள் தற்போது இரண்டு மடங்காக நான்கு லட்சத்துக்கு மேற்பட்ட ஏக்கர்களை கொண்டுள்ளனர் எனவும் தமிழரசுக் கட்சியின் பா உ ரவிகரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில் தாங்கள் தொடர்ச்சியாக குருந்தூர்மலை புத்தர் விகாரை தொடர்பில் சட்டரீதியாகப் போராடியதாகவும் அதற்காக தனக்கு வன்னியில் உள்ள ஒவ்வொரு சட்டத்தரணியும் ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அவர்கள் பணத்துக்காக அல்லாமல் இலவசமாக வந்து வழக்குகளை வாதாடியதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஆனாலும் பா உ ரவிகரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரோ ஏனைய சட்டத்தரணிகளோ தையிட்டி விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவி;ல்லை என்ற குற்றச்சாட்டை வைக்கவில்லை. போராடாமல் எதனையும் அடைய முடியாது என்பதை பா உ ரவிகரன் சுட்டிக்காட்டினார்.