பா.உ இளங்குமரன்

பா.உ இளங்குமரன்

வடக்கில் நான்கு பொருளாதார மத்திய நிலையங்கள் விரைவில் – தொழில்துறையை வளர்ப்பதன் மூலம் இளைஞர்கள் வெளியேற்றத்தை தடுப்போம் என்கிறார் பா.உ இளங்குமரன்!

வடக்கில் நான்கு பொருளாதார மத்திய நிலையங்கள் விரைவில் – தொழில்துறையை வளர்ப்பதன் மூலம் இளைஞர்கள் வெளியேற்றத்தை தடுப்போம் என்கிறார் பா.உ இளங்குமரன்!

 

வடக்கில் நான்கு பொருளாதார மத்திய நிலையங்கள் விரைவில் உருவாக்கப்படும்  என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன். நிகழ்வொன்றில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட போது தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய பா.உ இளங்குமரன், “கடந்த அரசாங்கத்தை விட எமது அரசாங்கத்தில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் கல்விக்கு மேலும் அதிக நிதியை ஒதுக்கி கல்வித் துறையை மேம்படுத்துவோம். நாட்டை விட்டு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது.தற்போது பாடசாலையை விட்டு விலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது. இதற்கு காரணம் நாட்டின் பொருளாதார பின்னடைவும் கிராமிய வறுமையுமே காரணம்.  நாங்கள் எமது நாட்டினுள்ளேயே தொழிற் துறைகளை உருவாக்கும் போது மாணவர்களும் இங்கே கல்வி கற்க கூடிய சூழ்நிலை ஏற்படும். என தெரிவித்தார்.

மேலும் பேசிய பா.உ இளங்குமரன், தங்கத் தீவாக இருந்த தீவகம், கடந்த ஆட்சியாளர்களின் திறனற்ற ஆட்சி காரணமாக தகரத் தீவாக மாற்றம் பெற்றுள்ளது. சுற்றுலாத்துறையை தீவகத்தில் அபிவிருத்தி செய்வதனூடாக வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் இடமாக மாற்றுவதனூடாக தீவகம் மீண்டும் செந்தளிப்பு பெறும். தீவகத்தை மீண்டும் தங்கத் தீவாக மிளிர வைப்போம்.

எதிர்காலத்தில் வடக்கில் மூன்று மத்திய பொருளாதார நிலையங்களை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளோம். ஒரு பொருளாதார மத்திய நிலையத்தை மாங்குளத்திலும், பரந்தன் – ஆனையிறவை மையப்படுத்திய இடத்தில் ஒரு பொருளாதார மத்திய நிலையத்தையும், பலாலியில் ஒரு பொருளாதார மத்திய நிலையத்தையும் உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இங்கேயே தொழில்துறையை உருவாக்கி, இங்கேயே உழைத்து உண்ணக்கூடிய ஒரு நிலையை உருவாக்குவோம். கடந்த காலத்தில் மனித வளம் சிறந்த முகாமைத்துவம் இல்லாமையால் வீணடிக்கப்பட்டது. ஆனால் இனி நாங்கள் மனித வளத்தை சிறந்த முறையில் திட்டமிட்டு நிர்வகித்து நாட்டை கட்டியெழுப்புவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

என்.பி.பி இளங்குமரன் ஏற்படுத்திய வெளிச்சத்தில் குளிர்காயும் பொன்.ஐங்கரநேசன் உள்ளிட்ட தமிழ்தேசிய குழுவினர் !

என்.பி.பி இளங்குமரன் ஏற்படுத்திய வெளிச்சத்தில் குளிர்காயும் பொன்.ஐங்கரநேசன் உள்ளிட்ட தமிழ்தேசிய குழுவினர் !

 

யாழ்ப்பாணத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சுண்ணாம்பு கல் அகழ்வு இடம்பெறுவதை யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் என்.பி.பி பா.உ இளங்குமரன் அம்பலப்படுத்தியிருந்தார். இதனை தொடர்ந்து சட்டவிரோதமான சுண்ணாம்பு கல் அகழ்வு நடைபெறுவது தொடர்பில் இதுவரை கண்டுகொள்ளாத யாழ்ப்பாணத்து ஊடகங்களும், சமூக செயற்பாட்டாளர்களும் தற்போது பொறுப்புள்ளவர்களாக பேச ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் வடமாகாண ஆளுநரிடம் சட்டவிரோத சுண்ணக்கல் அகழ்வை முடிவுறுத்தக்கோரி மனு ஒன்றை கையளித்துள்ளார். குறித்த மனுவில் யாழ்ப்பாணக் குடாநாடு கடலாலும், கடல் நீரேரிகளாலும் சூழப்பட்ட ஒரு தீபகற்பம். பூமி வெப்பமடைவதன் விளைவாக ஏற்பட்டுவரும் கடல்மட்ட உயர்வு குடாநாட்டைப் பெருமளவு பாதிக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்டுப்பாடற்ற சட்டவிரோத சுண்ணாம்பு அகழ்வு காலநிலை மாற்றத்தால் ஏற்படவுள்ள பாதகங்களை மேலும் விரைவுபடுத்தும், அதிகப்படுத்தும். இவற்றைக் கருத்திற்கொண்டு விவசாய நடவடிக்கையைப் பாதிக்காத வகையில் சுண்ணாம்புக்கல் அகழ்வை நெறிப்படுத்துவதோடு, இதில் நிலவக்கூடிய சட்டவிரோதச் செயற்பாடுகள் அனைத்தும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் பொ. ஐங்கரநேசன்.

வட மாகாண சபையின் வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சராக பணியாற்றியிருந்த பொன். ஐங்கரநேசனுக்கு சுண்ணாம்புக்கல் அகழப்படும் பிரச்சினைகள் தொடர்பில் தெரியாமலில்லை. கடந்த கால ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் கூட சுண்ணாம்புக்கல் அகழ்வு தொடர்பாக சமூக செயற்பாட்டாளர்கள் அழுத்தம் கொடுத்து சட்டவிரோதமான அகழ்வுகள் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் இவை தொடர்பில் வடக்கு மாகாண சபை இயங்குநிலையில் இருந்த போது இது தொடர்பாக எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை அப்போதைய அமைச்சர் பொன். ஐங்கரநேசன். மாறாக இரணைமடு குளத்தின் அபிவிருத்தி திட்டங்கள் உட்பட பல திட்டங்களில் தங்களால் முடியுமானவரை எல்லாம் ஊழல் நடந்தது வடக்குமாகாண சபை இயங்கு நிலையில் இருந்த காலகட்டங்களில். இதனாலேயே வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையில் இருந்த அனைவரையும் தமிழ்மக்கள் அடுத்தடுத்து அனைத்து தேர்தல்களிலும் நிராகரித்தனர் – நிராகரித்தும் வருகின்றனர்.

 

இவ்வாறான நிலையில் புதிதாக பாராளுமன்றம் தெரிவான என்.பி.பி இளங்குமரன் மீது ஊடக வெளிச்சம் விழ ஆரம்பித்துள்ளது. இந் நிலையில் அந்த வெளிச்சத்தில் தாங்களும் குளிர்காய எண்ணி வழக்கொழிந்து போன பொன்.ஐங்கரநேசன் உள்ளிட்ட தமிழ்தேசிய வாதிகளும் தம் மௌனம் களைத்து சுண்ணாம்புக்கல் அகழ்வு பிரச்சினை பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். எவ்வாறான போதும் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால் ஆரோக்கியமானது தான் என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.