பழ.நெடுமாறன்

பழ.நெடுமாறன்

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதை விரைவில் ஆதாரங்களுடன் தெரியப்படுத்துவேன் – பழ.நெடுமாறன்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற அறிவிப்பு இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் அதற்கான ஆதாரங்கள் கிடைத்தவுடன் அதை ஊடகங்களில் வெளியிடப்போவதாக உலகத் தமிழர் கூட்டமைப்புத் தலைவர் நெடுமாறன் மீண்டும் தெரிவித்துள்ளார். ஏ.என்.ஐ செய்திச்சேவை இந்த செய்தியை பிரசுரித்துள்ளது.

பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், விரைவில் அவர் பொது வெளியில் வருவார் என்றும் நெடுமாறன் தகவல் வெளியிட்ட சில வாரங்களுக்குப் பிறகு அவரது அறிக்கை மீண்டும் வந்துள்ளது.

எனினும் முன்னதாக இந்த கூற்றை மறுத்த இலங்கையின் இராணுவப் பேச்சாளருமான பிரிகேடியர் ரவி ஹேரத், பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை நிரூபிப்பதற்கான மரபணுச் சான்றிதழ்கள் உட்பட அனைத்து பதிவுகளும் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

தமிழர்களை தன்னுடைய அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தி வரும் இந்தியா தான் தமிழரின் எதிரி – தேசம் திரை YouTube !

இந்திய அரசை நம்பியதினால் தமிழர்களுக்கு முதலில் ஏற்பட்டது அழிவு இரண்டாவது ஏற்பட்டது பேரழிவு இனி ஏற்பட இருப்பது மீள முடியாத பேரழிவு. இலங்கையில் தமிழ் – சிங்கள மக்களிடையே இருந்த முரண்பாட்டை தீர்த்து வைக்கத் திறமையற்ற, படித்த ஆனால் மூன்றாம் தர சிங்கள, தமிழ் அரசியல் தலைமைகள், தங்கள் வாக்கு வங்கிகளை நிரப்ப போட்டி போட்டு, இனவாதத் தீயை வளர்த்தன. இவர்கள் இலங்கையை அந்நிய சக்திகளிடம் கையளித்து, கடந்த 75 ஆண்டுகளாக நாட்டைச் சீரழித்து வருகின்றனர். அதன் உச்சமாக தற்போது இலங்கையின் இயற்கைத்துறைமுகமான திருகோணமலை எதிர்கால யுத்தத்தின் மையப்புள்ளியாக மாற்றப்பட்டு வருகின்றது. அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் 30 பேர்வரை இரு இரு விசேட விமானங்களில் பெப்ரவரி 14 அன்று இலங்கை வந்து பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளனர்.

இன்று பெப்ரவரி 18இல் தமிழகத்தின் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வவுனியா ஆலயத்தில் மதக் கலகத்தை தூண்டிவிடும் வகையில் உரையாற்றினார். இது “சிவ பூமி, ராமஜன்ம பூமி, ஆரியச் சக்கரவர்த்தி பிறந்த பூமி” என்றெல்லாம் புகழாரம் சூட்டி ராமாயண யாத்திரை இலங்கையில் இருந்து ஆரம்பிக்கும் என்றும் இந்தியாவில் இருந்தும் யாத்திரை வரும் அதற்காகவே தமிழகத்தில் இருந்து பலாலிக்கு விமானப் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. மன்னார் – ராமேஸ்வரம் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என்றெல்லாம் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் என்ற பெயரை உச்சரிக்காது அர்ஜூன் சம்பத் வெளிநாட்டவர்கள் இங்கு வந்து மதமாற்றம் செய்வதாகவும் ஈஸ்டர் குண்டுவெடிப்பு மதவாதத்தை தூண்டும் செயல் என்றும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் ஊடகவியலாளராக ஒளிப்பதிவாளராகக் கலந்துகொண்ட ஒருவர் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் “இந்தியாவின் தமிழகத்தின் சாத்தான்கள் வந்து எங்களுக்கு வேதம் கற்றுக் கொடுக்கிறார்கள்” என்று சினந்து கொண்டார். இந்த சாத்தான்கள் ராமர் யாத்திரையை இங்கும் நடத்தி மசூதிகளையும் தேவாலயங்களையும் நொருக்குவதற்கு இப்பவே திட்டமிட்டுவிட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார். அந்த ஆலயத்தின் அடியவர் தேசம்நெற் வட்ஸ்அப்க்கு அனுப்பி வைத்த குறிப்பில் இவ்வாறான மதத்தை அரசியலோடு கலக்கின்ற பிரச்சாரங்களுக்கு ஆலயங்கள் இடமளிப்பதை தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார். இந்நிகழ்வுகளை ஏற்பாடு செய்த மயூரன், சண்முகரத்தினம் போன்றவர்கள் இவ்வாறான மதஅடிப்படைவாதிகளை ஆலயங்களுக்கு அழைத்து எமது ஆலயங்களை மத அடிப்படைவாதிகளின் கூடாரங்கள் ஆக்குவதை நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தேசம்நெற் க்கு கிடைக்கும் செய்திகளின்படி திருகோணாமலையில் உள்ள 90 எண்ணைக் குதங்களில் 80 வரையான குதங்கள் இந்தியாவுக்கு கையளிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகின்றது. அமெரிக்க ராஜதந்திரிகளின் வருகை திருமலை விவகாரம் பற்றியது அல்ல என அமைச்சர் பண்டார தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஒருவர் இது பற்றிக் குறிப்பிடுகையில் ஒவ்வொரு எண்ணைக் குதமுமே நூறு பெற்றோல் நிலையங்களுக்கான பெற்றோலியத்தை சேகரித்து வைக்கும் கொள்ளளவைக் கொண்டன எனத் தெரிவித்தார். இவ்எண்ணெய்க் குதங்கள் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் யுத்த தளபாடங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக பிரித்தானியாவால் உருவாக்கப்பட்டவை. இன்றைய உக்ரைன் நிலைமையொன்று அதாவது அமெரிக்க சக இந்தியா எதிர் சீனா உருவாகுமானால் அதன் முதல் பொறி திருகோணமலையிலேயே தெறிக்கும் என்பது உறுதியாகி வருகின்றது.

இந்தியா காலம் காலமாக தன்னுடைய நலனை மட்டும் கருத்தில் கொண்டே இலங்கைத் தமிழர்களைப் பகடைக்காய்களாக பாவித்து வருகின்றது. தமிழர்களும் தமிழ் தலைவர்களும் குனியக் குனிய இந்தியா மேலும் மேலும் தமிழர்களைக் குட்டிக்கொண்டே இருக்கின்றது. இந்தியாவின் இந்திய நலன்சார்ந்த அரசியலால் இதுவரை தமிழர்கள் இழப்பைத் தவிர எதனையும் சந்தித்தில்லை. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தைக் கூட இந்தியா முழுமையாக அமுல்படுத்த முயற்சிக்கவில்லை. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 36 ஆண்டுகள் ஆகியும் அது இன்னமும் தமிழ் மக்களுக்கு எட்டாத கனியாகவே உள்ளது. 36 ஆண்டுகளாக நாய்க்கு எலும்புத்துண்டு போடுவது போல் இந்திய அரசு 13ஆவது திருத்தச் சட்டத்தைக் காட்டிக் காட்டி தமிழ் மக்களை அவர்களின் தன்மானத்தை நொறுக்கி வருகின்றது.

இலங்கையில் உள்ள இன முரண்பாட்டுக்கு உயிரூட்டி அதற்கு வன்முறை வடிவம் கொடுத்து. தமிழர் விடுதலைக் கூட்டணியினர் உசுப்பி விட்ட இளைஞர்களை இந்திய உளவுப்படை கோழிக்குஞ்சுகளை பிடிப்பது போல் துப்பாக்கிகள் தாறோம், குண்டுகள் தாறோம், பயிற்சியும் தாறோம் என்று வளைத்துப் போட்டனர்.

சிங்கள கிராமங்களுக்குள் சென்று சிங்களவர்களைக் கொல்லுங்கள் நிறைய துப்பாக்கிகளும், குண்டுகளும், பயிற்சிகளும் தருவோம் என்றதும், நான் முந்தி நீ முந்தி என்று தமிழீழ விடுதலைப் புலிகள் முந்திக் கொண்டனர். கொக்கிளாய், நாயாறு, அனுராதபுரம் படுகொலைகள் நடந்தேறியது.

“புலிகளின் தலைவர் பிரபாகரன் ஐரோப்பா சென்றுவிட்டார்!” அறிவிக்க தஞ்சாவூர் முள்ளிவாய்கால் முற்றத்தில் கூட்டம்!! இந்தியாவின் இரட்டை வேடம் யாழ்ப்பாணத்தில் கலாச்சார மையம் தமிழகத்தில் புலிக்கு மீண்டும் ஆயுதப் பயிற்சி? !!!

இச்செய்தி எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் போது, நல்ல சேதி வருகுது.. நல்ல சேதி வருகுது.. என்று அறிவித்தபடி தமிழக புலித்தேசியவாதத் தலைவர்கள் தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தை நோக்கி விரைந்து கொண்டுள்ளனர் என தேசம்நெற்க்கு கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. பழ நெடுமாறன், குளத்தூர் மணி, வைக்கோ, கோவை ராமேஸ் என புலித்தேசிய ஆதரவாளர்கள் பலரும் இந்த ஊடகச் சந்திப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இன்னம் சில மணி நேரங்களில் இடம்பெறவுள்ள இச்சந்திப்பில் பழ நெடுமாறன் “புலிகளின் தலைவர் பிரபாகரன் ஐரோப்பா சென்றுவிட்டார்!” என்றும் “போராட்டம் மீண்டும் ஆரம்பிக்க உள்ளது” என்றும் தஞ்சாவூர் முள்ளிவாய்கால் முற்றத்தில் அறிவிக்க உள்ளார். இக்கூட்டத்தில் கலந்துகொள்ள காசி ஆனந்தன் நேற்று காலையே பயணமாகி விட்டதாகவும் தேசம்நெற்க்கு தெரியவருகிறது. இந்த மாநாட்டின் பின்னணியில் 2009 இற்குப் பின் புலிகள் பலவாகச் சிதறுண்டதில் ஒரு பிரிவினரான ஐரோப்பாவில் செயற்படும் ரிசிசி அமைப்பிலிருந்த சிலரே இதனைத் தூண்டிவருவதாகத் தெரியவருகிறது.

இது தொடர்பாக கேப்பிரிட்ஜில் உள்ள வரலாற்று மையத்தைச் சேர்ந்த வி ஜெயாத்தன் விடுத்துள்ள அறிக்கையில் இதுவொரு புனைவு மோசடி என்றும் இதற்கு யாரும் ஒத்துழைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். இது பற்றி ரிசிசி உறுப்பினர் தகவல் தருகையில் தம்மோடு இருந்த சிலரே இச்செயலில் ஈடுபட்டு இருப்பதாகவும் இந்நபர்கள் 1990 களுக்கு முன் இந்திய இராணுவத்துடனான தமது இயக்கத்திற்கு ஏற்பட்ட மோதலின் பின்னர் வந்தவர்கள் என்றும் சுவிஸ்நாட்டில் தற்போது வதியும் அப்துல்லா என்ற இயக்கப் பெயரைக் கொண்ட ஒருவருமாக நால்வர் இவ்விடயத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இன்னும் சில மணிநேரங்களில் நடைபெறவுள்ள இக்கூட்டத்திற்கு புலிகளின் ஆலோசகராக இருந்து இறுதியுத்தத்தில் தமிழகம் வந்து சேர்ந்த பிரபாகரனின் அரசியல் ஆலோசகர் மு திருநாவுக்கரசு கலந்துகொள்ளமாட்டார் என்று அவருடைடய அணியில் நிற்கும் தியாகராஜா திபாகரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். மு திருநாவுக்கரசுவின் கருத்தியலுடன் அதாவது, இந்திய உளவுத்துறையாடு இணைந்து செயற்பட்டு; இந்தியாவின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவுவதன் மூலம், இலங்கைத் தமிழர்களுக்கு சாதகமான ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என இத்தரப்பில் உள்ள விரல்விட்டு எண்ணக் கூடிய நபர்கள் நம்புகின்றனர். இவர்கள் இந்திய உளவுத்துறையோடு வெளிப்படையாக தங்களை அடையாளம் காட்டி வருகின்றனர்.

இந்த இந்திய ரோ சார்பு அணியின் முன்னணிச் செயற்பாட்டாளர்களாக மு திருநாவுக்கரசுடன் லண்டனைச் சேர்ந்த நிலா தற்போது சிலகலமாக இந்தியாவில் தங்கியுள்ளார், லண்டன் வரலாற்று மையத்தின் ஆயூட்கால உறுப்பினர் திபாகரன் மற்றும் மயூரன் ஆகியோர் உள்ளனர். நிலா தற்போது தமிழக்தில் இருந்தாலும் அவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளப் போவதில்லை எனத் தெரியவருகின்றது.

முள்ளிவாய்க்கால் முற்றத்தை ஏற்படு செய்யும் பழ நெடுமாறன் தலைமையிலான குழவினரும் இந்திய உளவுத்துறையுடன் செயற்படுபவர்களாக இருந்த போதும், முன்னைய குழவினரைப் போல வெளிப்படையாக தங்களை இந்திய உளவுத்துறையினருடன் அடையாளப்படுத்துவதில்லை.

“பிரபாகரன் ஐரோப்பாவிற்கு வந்துவிட்டார், அவர் நிதி நெருக்கடியில் இருக்கின்றார், அவர் போராட்டத்திற்கு ஆதரவு கேட்கின்றார்” என்ற கதைகள் சில வாரங்களாகவே ஐரோப்பாவில் உலா வந்துகொண்டுள்ளது. இதன் உச்ச கட்டமாக பிரபாகரன் சுவிஸில் சிலரின் வீடுகளுக்கு சென்று விருந்துபசாரத்தில் கலந்துகொண்டதாகச் செய்திகள் பரப்பப்பட்டது. அதற்கும் மேலாக முஸ்லீம் பெண்களைப் போன்று பர்தா அணிந்த பெண்ணை சிலர் வீடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பாதுகாப்புச் சிக்கல்கள் காரணமாக தன்னை அடையாளப்படுத் முடியாது என மதிவதனி என் போர்வையில் வந்தவர் தெரிவித்தாகவும் தேசம்நெற்றுக்கு தெரியவருகிறது.

இந்தச் சந்திப்புகளின் மூலம் வர்த்தகப் புள்ளிகள் 150,000 பவுண்கள் வரை அன்பளிப்புச் செய்ததாகவும் அவர்கள் ஒரு மில்லியன் பவுண் வரை சேர்க்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பின்னணியில் சற்று பெரிய தொகையை வழங்க விருப்பம் தெரிவித்த லண்டன் வர்த்தகர் துவாரகாவை தான் சந்திக்க வேண்டும் என்று கோரி இருக்கின்றார். அதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது. துவாரகாவைத் தெரிந்திராத அந்த வர்த்தகரும் துவாரகாவைச் சந்தித்த போது துவாரகாவை அழைத்து வந்தவரைப் பார்த்து “துவாரகாவிற்கு வாகனம் ஓட்டக் கற்றுக்கொடுத்தது யார்?” என்று கேட்க துவாரகாவை அழைத்துவந்தவர் ஒரு தளபதியாகவிருந்த ஆண் போராளியின் பெயரைச் சொல்லியுள்ளார்.

சற்று விசயம் அறிந்த இந்த வர்த்தகர் துவாரகாவைச் சந்திக்க வருவதற்கு முன்னரேயே பேர்மிங்ஹாமில் உள்ள ஒரு மூத்த பெண் போராளியுடன் தொடர்பு கொண்டு தான் எப்படி அவர் துவாரகா என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று கேட்டுள்ளார். ஏனெனில் மதிவதனி போல் அவரும் முக்காடு போட்டுக்கொண்டு வருவார் என்றே அவர் எண்ணினார். அவ்வாறே நடந்தது. அப்பெண் போராளி தான் அந்தக் கேள்வியைக் கேட்குமாறு இந்த வர்த்தகருக்கு கூறியிருந்தார். ஏனெனில் இப்பெண் போராளித் தளபதியே துவாரகாவுக்கு வாகனம் ஓட்டக் கற்றுக் கொடுத்தவர். துவாரகா விடயத்தில் அவர்கள் ஏமாற்றியதை உணர்ந்த அந்த வர்த்தகர் வந்தவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை.

இந்த நிதி சேகரிப்பை முடுக்கி விடவே முள்ளிவாய்க்கால் முற்றம் கூட்டப்படுகிறது. இதில் “ உலகத் தமிழர்களுக்கு இன்பச் செய்தி, இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே காத்திருந்ஙகள்… !” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி குறும்செய்தி அனுப்பி வைக்கின்றது.

பெப்ரவரி 11இல் யாழ்ப்பாணத்தில் கலாச்சார மண்டபத்தைத் திறந்து வைத்த இந்தியா 48 மணி நேரத்திற்குள்ளாக “புலிகளின் தலைவர் பிரபாகரன் ஐரோப்பா சென்றுவிட்டார்!” என்று தெரிவிக்க உள்ளனர். இந்த அறிவிப்பு ஒன்றும் எழுந்தமானதாக நடைபெறவில்லை. இதற்கு பணம் புரட்டுவது மக்களை ஏமாற்றுவது தான் என்ற காரணமும் இருக்க முடியாது. இது இந்திய உளவுத்தறையான ரோ இன் ஆசீர்வாதம் இல்லாமல் சாத்தியமில்லை. தேசம்நெற்க்கு கிடைக்கும் மற்றுமொரு தகவல் இந்திய உளவுத்துறையினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிலருக்கு ஆயதப் பயிற்சிகள் வழங்கி வருவதாகத் தெரிவிக்கின்றது. புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களிடம் சேர்க்கப்படும் இந்நிதி இலங்கையில் தேவைப்படும் போது வன்முறையைத் தூண்டி இந்திய அரசின் ஆளுமையை மேலும் ஸ்தீரணப்படுத்த பயன்படும் எனத் தெரியவருகின்றது. ஈஸ்ரர் குண்டுவெடிப்புக் கூட பயிற்சிகள் தொடர்புகள் எல்லாமே இந்திய மண்ணிலேயே நடந்துள்ளது. எங்கு எப்போது வெடிக்கும் என்பதனைக்கூட இந்தியா தெரிந்துவைத்திருந்தது.

எண்பதுக்களின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத் தமிழ் இளைஞர்களை உசுப்பேற்றிய தமிழரசுக் கட்சி தனக்கேற்பட்ட தோல்வியில் இருந்து மீள தன் வாக்கு வங்கியைப் பலப்படுத்த தமிழீழக் கோரிக்கையை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தியது. ஆனால் அந்தச் சீட்டை அதன் பின் இந்தியாவே மிகத் திட்டமிட்ட முறையில் பயன்படுத்தி சிங்களவர்களைப் படுகொலை செய்ய (அனுராதபுரம், கொக்கிளாய், நாயாறு படுகொலைகள்) புலிகளைத் தூண்டி இனமுரண்பாட்டை திட்டமிட்டுத் தூண்டியது. ஆயத அமைப்புகளுக்கு பயிற்சி அளித்து போராட்ட களத்தில் இறக்கியது ஒன்றும் தமிழர்களின் மீதான கரிசனையினால் அல்ல என்பதை காலமும் நிரூபித்துவிட்டது.

அன்றையைக்காட்டிலும் இன்று இலங்கையின் அமைவிடம் உலக வர்த்தகப் போக்குவரத்தில் முக்கியத்துவமானதாக உள்ளது. அதனால் சீனாவும் இந்தியாவும் இலங்கையை ஆளுமை செலுத்துவதில் கங்கணம் கட்டி உள்ளனர். இந்தப் போட்டியில் இந்தியா கலாச்சார மையத்தையும் கட்டித்தரும், தேவைப்பட்டால் அதனைக் குண்டு வைத்தும் தகர்க்கும். இந்தியாவுக்கு செம்பு தூக்குவதற்கு நான் முந்தி நீ முந்தி என்று அரசியல் தலைவர்கள் போட்டி போட்டு களமிறங்கிவிட்டனர். இப்போது இவர்களோடு ஆறுதிருமுருகன், கம்பவாருதி ஜெயராஜ் என்று ஒரு பெரும் கூட்டமே அள்ளுப்படுகின்றது.

அடுத்த முறை அண்ணாமலை மோடியின் சிறுநீரைக் கொண்டு வந்து கோமயம் என்று தெளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அன்று இலங்கையில் இன வன்முறையைத் தூண்டிவிட்ட இந்தியா இன்று மத வன்முறையையும் தூண்டிவருகின்றது. சமூக வலைத்தளங்களிலும் வாய்வார்த்தைகளிலும் என்றுமிலாத அளவுக்கு மதவாத நாற்றம் மோடியின் கோமயத்தின் நாற்றத்தையும் மிஞ்சி நிற்கின்றது.

இலங்கை தமிழர்களுக்கு எதிராக செயற்படுவதில் காங்கிரஸ் அரசும், பா.ஜ.க அரசும் ஒரே போக்கையே பின்பற்றுகின்றன – பழ.நெடுமாறன் விசனம் !

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்காமல் இந்திய அரசு புறக்கணித்தமை கண்டிக்கத்தக்கது என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நேற்று முன்தினம் (06) சமர்ப்பிக்கப்பட்டது.

எனினும், பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது  இந்தியா வாக்களிப்பில் கலந்துகொள்ளாமை கண்டித்தக்கது என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் அறிக்கை மூலம் குறிப்பிட்டுள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு எதிராக  தீர்மானங்கள் கொண்டு வரப்படுகின்ற போதிலும் அதற்கு ஆதரவாக வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்து வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் காங்கிரஸ் அரசு கையாண்ட நடைமுறையையே பாரதிய ஜனதாக் கட்சி அரசும் பின்பற்றுவதாகவும், தமிழர்களுக்கு எதிராக செயற்படுவதில் இரு கட்சிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசை திருப்திப்படுத்துவதற்காக இலங்கை தமிழர்களை இந்திய அரசு கைவிட்டுள்ளதாக தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.