தனுஷ்க குணதிலக

தனுஷ்க குணதிலக

அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை குற்றத்தில் கைதான தனுஷ்க குணதிலகவும் நாமல் ராஜபக்சவும் – நாமல் விசனம் !

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீதான சம்பவத்தில் தன்னையும் இணைத்துக்கொண்டு கிரிக்கெட் விளையாட்டை அரசியலாக்குவதன் மூலம் நாட்டின் நற்பெயருக்கும் கீர்திக்கும் மேலும் சேதம் ஏற்படும் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு விளையாட்டு நிர்வாகத்தில் தலையிடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தன்னுடைய டுவிட்டர் பக்கத்திலேயே இது தொடர்பான பதிவை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச  வெளியிட்டுள்ளார்.

தனுஷ்க குணதிலக கைது குறித்து இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக வெளியிட்டுள்ள தகவல் !

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலவுக்கு நேர்ந்ததை எண்ணி வருத்தமடைவதாக இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக தெரிவித்துள்ளார்.

“என்ன நடந்தது என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. நீதிமன்றம் விரைவில் இதற்கான பதிலைக் கண்டுபிடிக்கும். அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எங்களுக்குத் தெரியாது. நாங்கள் பேச வேண்டியதில்லை.” என்றார்.

உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறிய பின் இன்று
காலை இலங்கை வந்தடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவின் தொடரும் ஒழுக்கமற்ற போக்கு – அவுஸ்திரேலியா பெண் முன்வைத்த குற்றச்சாட்டு!

ரி20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு ரி20 உலகக் கிண்ணத்திற்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கை அணியில் தனுஷ்க குணதிலக்க இடம்பெற்றிருந்த போதிலும், அவர் முதல் போட்டியில் மாத்திரமே விளையாடினார்.

துடுப்பாட்ட வீரராக மட்டுமே அணியில் இணைந்த தனுஷ்க, பல போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடைந்ததால் முதல் போட்டியின் பின்னர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், தனுஷ்காவுக்கு உபாதை ஏற்பட்டதாக தகவல் வெளியான போதிலும் அவர் தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

இவ்வாறான சூழலில் நேற்று (05) இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான சுப்பர் 12 போட்டியின் பின்னர் சிட்னியில் இலங்கை அணி தங்கியிருந்த விடுதியில் வைத்து தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

29 வயதான பெண் ஒருவர் தனுஷ்க குணதிலக்க தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ​தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி முதலில் தனுஷ்க குணதிலக்கவுடன் ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் தொடர்பு கொண்டதாகவும், பின்னர் நவம்பர் 2 ஆம் திகதி சிட்னி ரோஸ் பேயில் உள்ள யுவதியின் வீட்டிற்கு தனுஷ்க சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த யுவதி அவரது வீட்டில் வைத்து அனுமதியின்றி நான்கு முறை உடலுறவிக்கு உட்படுத்தப்பட்டதாக தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட தனுஷ்க குணதிலக்கவிற்கு பொலிஸ் பிணை வழங்க மறுக்கப்பட்ட நிலையில், அவர் நாளை உள்ளூர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

அவர் ஒழுக்கத்தை மீறியதாக குற்றம் சாட்டப்படுவது இது முதல் முறையல்ல, அவர் பல சந்தர்ப்பங்களில் ஒழுக்கத்தை மீறியதாக அதிகார மற்றும் அதிகாரப்பூர்வமற்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளார். இதற்கு முன்னதாக இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுத்தொடரின் போது பொது இடத்தில் வைத்து புகைப்பிடித்த குற்றத்துக்காக குணதிலகவுக்கு 24மாதங்கள் கிரிக்கெட் விளையாட தடை விதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அவுஸ்ரேலிய பெண் மீது பாலியல் வன்கொடுமை – உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க கைது !

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் நாளை (07) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, 29 வயதுடைய பெண் அளித்த முறைப்பாட்டின் பேரில், 31 வயதுடைய ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் டேட்டிங் செயலி மூலம் குறித்த பெண்ணிடம் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.