ஜே.வி.பி

ஜே.வி.பி

இராஜபக்சக்களின் பின்வாங்கலும் ரில்வின் சில்வாவின் நேர்காணலும்  – இதயச்சந்திரன்

இராஜபக்சக்களின் பின்வாங்கலும் ரில்வின் சில்வாவின் நேர்காணலும்

இதயச்சந்திரன்

…………………….

ஐநாவின் அபிவிருத்திக்குழுவின் வருகையோடு தேர்தல்  திருவிழா சூடு பிடித்துள்ளது.

 

இந்த ஜனநாயகச் சடங்கில் வசைபாடலும், குழிபறித்தலும், அணி சேர்தலும், கோட்பாட்டு மோதலும் முதன்மை பெறுவதைக் காண்கிறோம்.

 

தமிழ்த் தேசியத்தை காப்பாற்ற வேண்டுமென்கிற முழக்கம் சகல மேடைகளிலும் எதிரொலிக்கிறது. ஒட்டாத குழுக்கள் அனைத்தும் தேச விடுதலை பற்றி பேசாமல். தேர்தலில் எத்தனை ஆசனங்களை கைப்பற்றுவது என்கின்ற இலட்சியத்தோடு இயங்குகின்றன.

 

தற்போதைய சூழலில் தேர்தல் வெற்றிக் கணக்குகள், விருப்புவாக்கு தெரிவுகள் குறித்தே பரவலாக ஆராயப்படுகிறது.

 

தமிழர் தாயக கணிப்புகள் பல, வன்னி மாவட்டத்தில் செல்வமும் ,காதர் மஸ்தானும் வெற்றி பெறுவார்கள் என கட்டியம் கூறுகின்றன. ஏனைய மாவட்டங்களில் எவரையும் குறிப்பிட்டுச் சொல்லமுடியாதென்கிறார்கள்.

 

மலையகத்தில் அனுஷா சந்திரசேகரன் , வடிவேல் சுரேஷ் , ஜீவன் தொண்டைமான் மற்றும் திகாம்பரம் ஆகியோர் முன்னிலையில் இருப்பதாகத் தெரியவருகிறது.

 

வடக்கு -கிழக்கு தமிழர் தாயகத்தைப் பொறுத்தவரை திருக்கோணமலையிலும் அம்பாறையிலும் ‘மோதல் தவிர்ப்பு’ உடன்பாடு காணப்பட்டு தமிழரசுக் கட்சி போட்டியிடுகிறது.

சங்கின் உறுப்பினர்களும் திருக்கோணமலை வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அதன் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அருண் ஹேமச்சந்திராவும் திசைகாட்டிச் சின்னத்தில் இறங்குவதால் போட்டி பலமான இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

 

இவ்விரண்டு உணர்திறன் மிக்க இடங்களின் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற முன்னிற்கும் தமிழ்த் தேசியவாதிகள், ஏனைய மாவட்டங்களில் ஏன் ஒன்றிணையவில்லை என்கிற ஆதங்கம் மக்களிடம் உண்டு.

 

இனி தமிழர் தாயக அரசியலுக்கும் தென்னிலங்கை அரசியலுக்குமான மோதல்கள் ,முரண்பாடுகள் குறித்து பார்ப்போம்.

 

இளையோர் பார்வையானது அநுராவின் ‘ தேசிய மக்கள் சக்தியின் மீது குவிவதை தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் எச்சரிக்கை உணர்வோடு அவதானிக்கின்றன.

 

இதன் எதிர்வினை அரசியலாக, ‘வடக்கு கிழக்கு ஊழல் அரசியல்வாதிகளை அநுராவால் அம்பலப்படுத்த முடியுமா?’ என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ‘ ‘மதுபானசாலை அனுமதிப்பத்திர பட்டியலை (பார் லைஸென்ஸ்) அநுர வெளியிடுவாரா ? ‘ என்று சுமந்திரனும் கூறத் தொடங்கியுள்ளனர்.

 

உண்மையிலேயே சகல மட்ட ஊழல்களையும் அநுர அரசு அம்பலப்படுத்த வேண்டுமென்பதே மக்களின் பெருவிருப்பாகும்.

 

2015 இல் உருவாக்கப்பட்ட ‘நல்லாட்சி’ அரசின் மத்திய வங்கி கடன் முறி ஊழல் பற்றிய விசாரணைகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பெறுமதி சேர் வரி (வாட் வரி)3.5 பில்லியன் ரூபாவை செலுத்தாத மூவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

 

‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்பதைப் போல, அநுர அரசிற்கு சவால் விடுத்த உதய கம்மன்பிலவிடமே , அதற்கான ஆதாரங்களை வெளியிடச் சொல்லி விஜித ஹெரத் எச்சரித்துள்ளார். திங்களன்று வருமென்கிறார் கம்மன்பில. பார்ப்போம் .

 

இராஜபக்சக்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்தாலும், அக்குழுவின் இணை அனுசரணையாளர்களான கம்மன்பிலவும், விமல் வீரவன்சவும் தமது அரசியல் கருத்துக்களை உதிர்த்தவண்ணமுள்ளனர்.

 

இருப்பினும் இராஜபக்சக்களின் ‘ஈரடி பின்னால்’ நகர்வில் ஒரு அரசியல் தந்திரம் மறைந்திருப்பதாக ஊடக நண்பர் ஒருவர் தனது ஆய்வு நிகழ்வொன்றில் குறிப்பிட்டிருந்தார் .

 

சனாதிபதி தேர்தலில் அநுர தரப்பினரால் கட்டமைக்கப்பட்ட ‘ இராஜபக்ச எதிர்ப்பு’ பிம்பத்தை நாடாளுமன்றத் தேர்தலில் வலுவிழக்கச் செய்ய, இராஜபக்சக்கள் போட்டியிடவில்லை என்பதே நண்பரின் வாதம்.

 

குறைக்கப்படும் வாக்குகள் சஜித் பக்கம் கணிசமான அளவில் திரும்பும் என நண்பர் எதிர்பார்க்கின்றார். இது அநுராவின் வாக்குகளை உடைக்கும் மஹிந்தரின் தந்திரமாக இருக்கலாம்.

 

ஆனாலும் ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகளை தொடர்ச்சியாக வெளிக்கொண்டு வருவதன் ஊடாக, கடந்த ஆட்சியாளர்களை அரசியல் ஊடக வெளியில் முக்கிய பேசுபொருளாக வைத்திருக்கிறது தேசிய மக்கள் சக்தி.

 

ஆகவே இராஜபக்சக்கள் தற்காலிகமாக ஒதுங்கினாலும் அநுராவின் கிடுக்கிப்பிடி, தேர்தலின் பின்னரும் தொடரும் வாய்ப்புகள் அதிகம் போல் தெரிகிறது .

 

அடுத்ததாக ஜே. வி .பி இன் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா அவர்கள் வழங்கிய நேர்காணலொன்று, தமிழ் ஊடகப் பரப்பில் பலத்த விவாதமொன்றினை ஏற்படுத்தியுள்ளது .

 

அதுபற்றி பேசாமல் கடந்து செல்ல முடியாது.

 

‘ அடித்தட்டு தமிழ் மக்களின் பிரச்சினை பொருளாதாரப் பிரச்சினையே’ என்று கூறும் சில்வா , ‘ அம்மக்களுக்கு 13 அல்லது அதிகார பகிர்வு என்ற பிரச்சினை இல்லை ‘ என்கிறார்.

 

ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வீழ்ச்சி வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களையும் பாதிக்குமென்பது உண்மை.

தமிழ் மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சினையை அவர் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளார் என்பதை அந் நேர்காணலே எடுத்தியம்புகிறது.

 

ஆனாலும் இடதுசாரி கருத்தியலை வரித்துக்கொண்ட தோழர் டில்வின் சில்வா அவர்கள், ஒரு தேசிய இனத்தின் அரசியல் உரிமையினை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார் ?.

 

அரசியல் உரிமை மட்டுமல்ல…. பொருளாதாரத்தை பங்கிடும் இறைமையுடன் கூடிய உரிமையும் மக்களின் பிரச்சினைதான்.

 

இவர்களுக்கும் நம்மவர்களுக்கும், இந்த இரண்டையும் இணைத்து முன்னெடுக்கும் அரசியல் புரிய வேண்டும்.

 

இனப்படுகொலையை எதிர்கொண்ட தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை அரசியல் உரிமையைப் புறந்தள்ளி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.

 

வல்லரசுக் கழுகுகள் வட்டமிடுகின்றன.

அவதானம் தேவை.

 

மக்களோடு பேசுங்கள். அவர்களே தமக்கான அரசியல் தீர்வு எதுவென்று சொல்வார்கள்.

ஜேவிபியினர் கூறுவது போன்று எல்லோரும் சமம் என்று போனால் அது மிகப் பெரிய ஆபத்தாகும். – விக்கினேஸ்வரன் எச்சரிக்கை!

“பெரும்பான்மை சிங்களவர்கள் வாழும் இலங்கையில் ஜேவிபியினர் கூறுவது போன்று எல்லோரும் சமம் என்று போனால் அது மிகப் பெரிய ஆபத்தாகும்.” என சி.வி.விக்கினேஸ்வரன் தெவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் தெரிவித்ததாவது,

13 ஆவது திருத்த சட்டத்திற்கு எதிராக அந்த காலத்திலே இருந்து ஜேவிபி செயற்பட்டது. ஆனால் ஐனாதிபதி தேர்தல் காலத்தில் அதற்கு மாற்றான கொள்கையுடன் வாக்கு கேட்டனர். இவ்வாறான நிலையில் இப்போது மீண்டும் தமது நிலைப்பாட்டையா சில்வின் சில்வா ஊடாக வெளிப்படுத்த முயல்கின்றனர். ஆனாலும் அக்கட்சியின் பிமல் ரத்நாயக்க அப்படி அவர் கூறவில்லலை என்றவாறாக கூறியிருக்கிறார். இதனூடாக தமிழ் மக்களுக்கு எதிராக இவ்வாறன கருத்துக்களை கூறுவது அந்த மக்களின் மனங்களை நோகச் செய்யும் என்பது அவர்களுக்கே தெரிகிறது போல உள்ளது.

 

இந்த 13 ஆவது திருத்தச் சட்டம் எங்களுக்கு எந்தக் காலத்திலும் ஒரு நிரந்தர தீர்வாக அமையாது. ஆனாலும் இப்போது இருக்கும் 13 ஆவதையும் நாங்கள் இதற்காக பறிகொடுத்துவிட்டு ஜேவிபியினர் கூறுவது போன்று எல்லோரும் சமம் என்று போனால் அது மிகப் பெரிய ஆபத்தாகும்.ஏனெனில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் சிங்களவர்கள் அவர்களுடைய வாழ்க்கை முறையையும் பாசையும் மதமும் எங்கள் எல்லோரையும் பீடிக்க கூடியதாகத் தான் அமையும். ஆகையினால் அவ்வாறான கருத்துக்களை நாங்கள் கண்டிக்கின்றோம். சிர்வின் சில்வா போன்றவர்கள் அவ்வாறு கூறுவது பிழை என்று தெளிவாக கூறுகின்றோம்.

 

இந்த 13 ஆவது திருத்தத்தை பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கால கட்டத்திலும் மாறி மாறி கூறி வருகின்றதை பார்க்கிறோம். அவ்வாறு அவர்கள் எதனைக் கூறினாலும் 13 ஆவது திருத்தச் சட்டம் எந்தக் காலத்திலும் எங்களுக்கு ஒரு தீர்வாக அமையாது. அவ்வாறு அமையவும் போவதில்லை.ஆனால் தமிழ் மக்களுக்கு எந்தவாறான தீர்வு தரப் போகின்றார்கள் என்று குறிப்பிடுகையில் பொருளாதார பிரச்சனை தான் எங்களுக்கு இருக்கு என்று சில்வின் சில்வா குறிப்பிடுகின்றார்.அதுவும் பொருளாதார பிரச்சனை என்று கூறும் போது எங்களுடைய தமிழ்ப் பிரதேசங்களில் காணிகள் அபகரிக்கபடுகின்றன. பௌத்த சின்னங்கள் கொண்டுவரப்பட்டு புதிய புதிய விகாரைகள் அமைக்கப்படுகின்றன.

 

வடக்கையும் கிழக்கையும் ஒருமித்து வைத்திருக்கும் இடத்திலே சிங்களப் பிரதேசத்தைக் கொண்டு வந்து எங்களுடைய தொடர்ச்சியை அற்றுப் போகச் செய்கின்றார்கள். குறிப்பாக வடகிழக்கிலே அதிக இரானுவர்கள் குவிக்கப்பட்டு இருக்கின்றார்கள். அதனால் எங்களுக்கு ஏற்படும் பலவிதமான சமூக பிரச்சனைகளை நாங்கள் எதிர்நோக்கி கொண்டு இருக்கிறோம். இவற்றையெல்லாம் பற்றி குளிப்பிடாது பொருளாதார அபிவிருத்தி என்று சில விடயங்களை செய்வதால் பிரச்சனை தீரும் என அவர் நினைத்தாரானால் அது அவருடைய அறியாமையை வெளிப்படுத்துகிறது.

 

வடகிழக்கு மாகாணங்களிலே தமிழ் மக்கள் மூவாயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக தமிழ் மொழியை பாவித்து அவர்களுக்கென்று வாழ்வு முறையொன்று அமைத்து இருக்கிறார்கள். அதனை உப்போதும் பாதுகாத்துக் கொண்டு வருகிறார்கள். ஆனால் அதனை இல்லாமல் படுத்தும் விதத்தில் பொருளாதார ரீதியான தேவை என்று கூறுவது மனவருத்தத்திற்குரியது. அதனை நீங்கள் கண்டி்க்கிறோம்.மேலும் முன்னாள் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து என்பது தெற்கில் பொருந்தினாலும் வடகிழக்கிலே எங்களுக்கு பொருந்தாது. உண்மையில் இளையவர்கள் அனுபவசாலிகளாகவும் இருக்க முடியும். ஆனாலும் ரணில் அவர்கள் அனுபவசாலிகளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டுமென கூறுவதற்கு காரம் இருக்கலாம்.

 

அதாவது அனுபவம் இல்லாமல் சில புதிய சிந்தனைகளை நடைமுறைப்படுத்தும் போது இந்த நாட்டிற்கு அந்த விடயம் ஏதாவது பிரச்சனைகளை ஏற்படுத்துமென்று கருதலாம். ஆனால், வடகிழக்கு மாகாணங்களிலே இது சம்பந்தமாக அவ்வாறான ஒரு தீர்மானத்தை நாங்கள் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் இப்போது இருக்கும் அரசியல் யாப்பின் பிரகாரம் எல்லா அதிகாரங்களும் மத்தியிலே தான் இருக்கின்றது.

 

ஆகவே எங்களுக்கு தேவையானவர்கள் வந்து மக்களுக்காக ஓடியாடி சில சில நன்மைகளைப் பெற்றுக் கொடுக்க கூடியதாகவும் பல இடங்களிலும் சென்று மக்களுக்கு எதனை எடுத்துக் கொடுக்க முடியும் என்று ஆராயந்து நடவடிக்கை எடுக்க கூடியவர்கள் தான் தேவை. ஆகவே அந்த விதத்தில் வடகிழக்கு மமாகாணங்களில் இளைஞர்கள் கட்டாயமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென மக்களைப் பொறுத்தவரையில் நினைக்கின்றனர்.

 

மேலும், மத்தியில் இருக்கின்ற பொருளாதார பிரச்சனைகள் சம்பந்தமான நிதி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு அவர் கூறுவது சரியாக இருக்கும். ஆனால் பாராளுமன்றத்திலே நாங்கள் இவ்வாறான வயது சென்றவர்களை கொண்டிருக்க வேண்டுமென்று அவசியமில்லை. ஏனென்றால் அதிகாரம் எங்கள் கைவசம் இல்லாத நிலை உள்ளது. ஆகையினால் அவர் கூறுவது தெற்கிற்கு பொருந்தும் எனினும் வடகிழக்கு மாகாணத்திற்கு பொருந்தாது என்று தான் நான் அவதானிக்கிறேன் என்றார்.

ஜே.வி.பி.தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்க்கின்ற, அல்லது தீர்த்து விடும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை. – செல்வம் அடைக்கலநாதன்

ஜே.வி.பி.தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்க்கின்ற, அல்லது தீர்த்து விடும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை.அவர்கள் தற்போது தேர்தல் ஆசனங்களை கூடுதலாக கைப்பற்ற வேண்டும் என்று சில நடவடிக்கைகளை எடுக்கின்றனர் என ரெலோ தலைவரும், வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று (07) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கட்டமைப்பு சார்பாக சங்குச் சின்னத்தில் நாங்கள் போட்டியிடுகின்றோம். வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், வேட்பாளர்களை நாங்கள் தெரிவு செய்துள்ளோம்.

அம்பாறை மற்றும் திருகோணமலை பிரதேசங்களில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளோம்.

தென்பகுதி மக்கள் அங்குள்ள அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊழலுக்கு எதிராக ஜே.வி.பி கட்சிக்கு வாக்களித்துள்ளனர். தற்போது அது எங்களிடமும் பரவியுள்ளது.

ஜே.வி.பி உடன் இணைந்து போட்டியிடுவதில் எமது இளைஞர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். ஜே.வி.பி. தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்க்கின்ற, அல்லது தீர்த்து விடும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை.

அவர்கள் தற்போது தேர்தல் ஆசனங்களை கூடுதலாக கைப்பற்ற வேண்டும் என்று சில நடவடிக்கைகளை எடுக்கின்றனர்.

அந்த வகையில் எமது இன பிரச்சினையாக இருக்கலாம்,எமது நிலங்கள் அபகரிக்க படுகின்ற விடையங்களாக இருக்கலாம். கடந்த காலங்களில் அனுபவித்த துப்பாக்கிச் சத்தங்கள் இல்லாத எமது தேசத்தை அனுபவிக்கின்ற நிலைப்பாடுகளை இந்த ஜே.வி.பி அரசாங்கம் நிறுத்துமா? என்கிற கேள்வி இருக்கிறது என தெரிவித்தார்.

‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ – தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனம் !

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தலுக்கான கொள்கைப் பிரகடனம் இன்று(26) வெளியிடப்பட்டது.

‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ எனும் தொனிப்பொருளில் இந்த கொள்கைப் பிரகடனம் அமைந்துள்ளது.

 

ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

 

தேசிய மக்கள் சக்தியின் இந்த கொள்கைப் பிரகடனத்தில் சமத்துவம், ஒப்புரவு, சட்டவாட்சி, அனைவரையும் ஒருங்கிணைத்தல், ஜனநாயக பண்புகள், பொருளாதார ஜனநாயகம், மக்கள் சார்ந்த ஆட்சி முறை, அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும் சமூக நீதி, விஞ்ஞான தொழில்நுட்பம், ஆய்வு மற்றும் அபிவிருத்தி ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.

 

நாட்டில் ஜனாதிபதி முறையை மாற்றியமைப்பதற்கான கொள்கையொன்றை வைத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

 

நாட்டிற்கு தேவையான அனைத்து மக்களுக்கும் சமத்துவமான புதிய அரசியல் யாப்பை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டமொன்றையும் கொண்டுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.

 

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் 25 அமைச்சர்கள் மாத்திரமே பதவி வகிப்பார்கள் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

 

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் வாகனங்களுக்கான உரிமம் இரத்து செய்யப்படும் என கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மொழி உரிமை சமத்துவமாக பேணப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நிதி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்கு விசாரணைகளுக்காக விசேட மேல் நீதிமன்றம் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக கொள்கைப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது.

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான வேலைத்திட்டங்களை கொண்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

படிப்படியாக நாட்டை செல்வந்த நாடாக மாற்றியமைப்பதற்கும் நாட்டு மக்களுக்கு அழகான வாழ்க்கையை கொண்டு செல்வதற்கும் தாம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

கொள்கைப் பிரகடன வௌியீட்டு நிகழ்வில் உரை நிகழ்த்திய அனுர குமார திசாநாயக்க, சுற்றுலாத்துறை, பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

பொருளாதார கொள்கை மற்றும் ஆட்சி அமைப்பு தொடர்பில் வெவ்வேறு தரப்பினரே அதிகமாக பேசியதாகவும் அவ்வாறானவர்களின் திரிபுப்படுத்தப்பட்ட கருத்துகளுக்கு பதிலடியாக கொள்கைப் பிரகடனம் அமைந்துள்ளதாக அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

நாடு அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி கண்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அனுர குமார திசாநாயக்க, மீண்டும் புனரமைப்பதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கும் சவாலை ஏற்றுக்கொள்வதாக கூறினார்.

 

தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதில் தோல்வி கண்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

 

சிறுபான்மையினர், தமது தாய் மொழியிலேயே தமது பணிகளை முன்னெடுப்பதற்கான நடைமுறையை அமுல்படுத்துவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

தமிழ் மொழியிலேயே அரச நிறுவனங்களுக்கு கடிதங்களை அனுப்பவும் பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழிகளில் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கும் இயலுமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார்.

 

அத்துடன் மதங்களுக்கான சுதந்திரத்தையும் வழங்குவதாக அவர் கூறினார்.

தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதில் தோல்வி கண்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

 

சிறுபான்மையினர், தமது தாய் மொழியிலேயே தமது பணிகளை முன்னெடுப்பதற்கான நடைமுறையை அமுல்படுத்துவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

தமிழ் மொழியிலேயே அரச நிறுவனங்களுக்கு கடிதங்களை அனுப்பவும் பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழிகளில் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கும் இயலுமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார்.

 

அத்துடன் மதங்களுக்கான சுதந்திரத்தையும் வழங்குவதாக அவர் கூறினார்.

 

சமத்துவத்தை ஏற்படுத்துவதில் அரசியலே முக்கிய பங்கு வகிப்பதாக அனுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

 

நாட்டை கட்டியெழுப்புவதற்கு வௌிநாட்டு கொள்கை அவசியமாகும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

“எமது ஆட்சியில் மதங்களுக்கிடையிலான சுதந்திரம் பேணப்படும்” – அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையிடம் அனுர உறுதி !

“எமது ஆட்சியில் மதங்களுக்கிடையிலான சுதந்திரம் பேணப்படும்” என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

 

குறித்த சந்திப்பினையடுத்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அநுர மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அநுரகுமாரதிசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளதாவது” அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினரை சந்தித்திருந்தோம். நாட்டின் அரசியல் நிலவரம் தொடர்பாகவும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் நாம் கலந்துரையாடினோம்.

 

நாட்டில் இன்று பலர் மதங்களுக்கிடையில் முறுகல் ஏற்படும் வகையில் போலி பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலர் தேசிய மக்கள் சக்தி தொடர்பாக இவ்வாறு விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக முஸ்லிம் மற்றும் பௌத்த மக்கள் மத்தியிலேயே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர்.

 

சரித ஹேரத் திஸ்ஸ அத்தநாயக்க ரவூப் ஹக்கீம் போன்றவர்கள் இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர். அதாவது தேர்தல் பிரசார்ஙகளின் போது தேசிய மக்கள் சக்தியை இலக்கு வைத்து உண்மைக்கு புறம்பான விடயங்கள் முன்வைக்கப்படுகின்றன.

 

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மதநல்லிணக்கம் மதங்களுக்கிடையிலான சுதந்திரம் பேணப்படும் .இந்த நாட்டில் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நாம் இடமளிக்கமாட்டோம். நாட்டில் அனைத்து இனமக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்படும்.இவை அரசியல் லாபம் கருதி முன்னெடுக்கப்படும் செயலாகும்” இவ்வாறு அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

எங்களால் மட்டுமே அரசியலை தாய் நாட்டுக்கும் மக்களுக்கும் பொறுப்புக்கூறும் தொழிலாக மாற்ற முடியும் – அனுரகுமார திஸாநாயக்க 

எமது நாட்டு அரசியலை தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே தாய் நாட்டுக்கும் மக்களுக்கும் பொறுப்புக்கூறும் தொழிலாக மாற்ற முடியும் என அக்கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்க  தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாளிகாவத்தை பி.டி.சிறிசேன விளையாட்டரங்கில் நடைபெற்ற ஓய்வுபெற்ற ஆயுதப்படைகளின் தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் இடம்பெறும் இவ்வாறான விரும்பத்தகாத அரசியல் நிகழ்வுகள் இதற்கு முன்னர் இடம்பெற்றதில்லை. மகிந்த ராஜபக்ஷவை அப்பா என்று அழைத்தவர்கள் தற்போது ரணில் விக்ரமசிங்கவை  அப்பா என  அழைக்கின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கட்சியை விட்டு வெளியேறிய போது, ​​பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸும் கட்சிக்குள் ஊடுருவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ரணில் விக்ரமசிங்கவை கைது செய்து சிறையில் அடைக்கும் வரை தூங்கமாட்டேன் என கூறிய மகிந்தானந்த அளுத்கமகே இன்று ரணில் விக்ரமசிங்கவின் மடியில் உறங்குவதாகவும் அனுரகுமார தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க மத்திய வங்கியை கொள்ளை அடித்ததாக குற்றம் சுமத்திய பந்துல குணவர்தனவும் இன்று ரணில் விக்ரமசிங்கவிடம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, திருடன் என கூறிவிட்டு அவரையே அணுகுவது நகைச்சுவையாக உள்ளது எனவும் அனுரகுமார திஸாநாயக்க விமர்சித்துள்ளார்.

ஊழல் அமைச்சரவையில் ஆரம்பிக்கிறது! ஒரு டொக்டர் அர்ச்சுனாவால் முடியாது!! ஆட்சி மாற்றம் வேண்டும்!!! அருண் ஹேமச்சந்திரா

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜே.வி.பி கட்சி தொடர்பான நேர் – எதிர்மறையான கருத்துக்கள் வேகமாக பரவி வரும் நிலையில் இது தொடர்பான கருத்துக்களை ஜே.வி.பி கட்சியினுடைய திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திரவுடன் கலந்துரையாடுகிறது தேசம்திரை.

இது தொடர்பான முழுமையான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல் தோல்விக்கு அஞ்சுகிறார் – ஜே.வி.பி குற்றச்சாட்டு!

“அரசாங்கம் தேர்தலைப் பிற்போட முயற்சி செய்கின்றது” என தேசிய மக்கள் சக்தியின் பிரசார செயலாளரும், கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” பொதுமக்கள் ஜனாதிபதித் தேர்தலையே எதிர்ப்பார்த்துள்ளனர். ஆனால் அரசாங்கம் தேர்தலை பிற்போடும் முயற்சியிலேயே உள்ளது.

அரசாங்கம் மீது மக்களுக்கு காணப்படும் நம்பிக்கையின்மை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது.

 

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தேர்தலை அறிவிப்பதற்கான அதிகாரம் கிடைத்துள்ளது. எனவே ஆணைக்குழு இனியும் பின்வாங்காமல் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

நாளைய தினம் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. தேர்தல் தோல்விக்கு அஞ்சியே ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க தேர்தலை பிற்போடுவதற்கான சதித்திட்ட முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றார்” இவ்வாறு விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டை கட்டி எழுப்ப வேண்டும் என்றால் நாங்கள் இனவாதத்தை தோற்கடிக்க வேண்டும். – கிழக்கில் அனுர குமார திசாநாயக்க

இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்றால் நாங்கள் இனவாதத்தை தோற்கடிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் தேசிய தலைவர் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் அம்பாறை மாவட்ட கரையோர வர்த்தகர்களுக்கும் இடையிலான  கலந்துரையாடல் கூட்டம் நேற்று (12) மாலை காரைதீவில் இடம்பெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட செயற்பாட்டாளரும் கல்முனை தொகுதி அமைப்பாளருமான ஏ. ஆதம்பாவா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற  இக்கூட்டத்தில், அம்பாறை மாவட்டத்தின்  பெருமளவிலான தமிழ் பேசும் கரையோர வர்த்தக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அத்துடன் பல வர்த்தகர்கள் இங்கு  நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில்  முன்னிலைப்படுத்தி அறிமுகப்படுத்தப்பட்டனர்.

இங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட  நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க உரையாற்றிய போது,

எங்களது நாடானது பொருளாதாரத்தில் ஒதுக்கப்பட்ட வீழ்ச்சி அடைந்த நாடாக இருக்கின்றது. வாங்கிய கடனை செலுத்த முடியாத ஒரு நாடாக நாங்கள் இருக்கிறோம். தொழில் வல்லுனர்களுக்கு இலங்கையை விட்டு வெளியேற வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டிருக்கின்றது.

இந்த நாட்டை கட்டி எழுப்ப வேண்டும் என்றால் நாங்கள் இனவாதத்தை தோற்கடிக்க வேண்டும். தேசிய ஒற்றுமையை நாங்கள் உருவாக்க வேண்டும். ஆட்சியாளர்கள் ஏன் இனவாதத்தை கொண்டு வருகிறார்கள் ? எங்கள் எல்லோருக்கும் தெரியும் அவர்களுக்கு பொது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாதவிடத்து, பிள்ளைகளுக்கு தொழில் ஒன்றை வழங்க முடியாதவிடத்து,  மீனவ சமூகத்தினுடைய பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டால் அவர்கள் இனவாதத்தை கட்டவிழ்த்து விடுவார்கள். இந்த இதனவாதத்தின் ஊடாக சிங்கள மக்களை மூளைச்சலவை செய்து சிங்கள மக்களுக்காக ஒரு அரசாங்கத்தை உருவாக்குவோம் என்று சொல்வார்கள்.

ஆகையினால் இந்த நாட்டை சிறப்பாக கட்டி எழுப்புவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும். தேசிய ஒற்றுமையை நாங்கள் உருவாக்க வேண்டும். தேசிய ஒற்றுமையை யாருக்கு உருவாக்கலாம். சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களுக்கு ஒற்றுமை தேவை இல்லையா ..?

தேசிய ஒற்றுமை தேவை இல்லையா ? அதற்காகவே நாங்கள் முயற்சி செய்கிறோம். அது தேவை இல்லை என்றால் வேறு கட்சிகளை நீங்கள் தேர்ந்தெடுங்கள். வர்த்தகத்துடன் தொடர்புடைய நிறைய பேர் இங்கே இருக்கின்றீர்கள். நீங்கள் அனைவரும் மக்களை சந்திக்கிறீர்கள். கலந்துரையாடு கின்றீர்கள். நீங்கள் சொல்வதை மக்கள் கேட்பார்கள். இன்னும் இரண்டரை மாதங்கள் தான் இருக்கின்றது. எல்லோரும் சேர்ந்து கதைப்போம். தெற்கைப் போன்று கிழக்கு மாகாணத்திலும் மாற்றம் உருவாக வேண்டும் என்று தெரிவித்தார்.

பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்படும் விழாக்களுக்காக 30 வீத கேளிக்கை வரி – ஜே.வி.பியின் பொருளாதார அறிக்கை உண்மையா..?

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை அறிக்கையின் வரைபென குறிப்பிடும் ஆவணமொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

 

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் குழு, பொருளாதார நிர்வாக சபை மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொருளாதார ஆய்வுப் பிரிவு ஆகியன இணைந்து கடந்த 06 மாதங்களாக மேற்கொண்ட கலந்துரையாடலுக்கு அமைய இந்த இறுதி வரைபு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், 3/5/ 2024 0034 P EC என வரைவின் முன் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இது தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு மட்டுமே எனவும் வலியுறுத்தப்பட்டது.

 

இவ்வாறு பகிரப்பட்டுள்ள ஆவணத்தில், தனிநபர் கையிருப்பு மதிப்புக் கணக்கீடு என்ற துணைத் தலைப்பின் கீழ் பொதுமக்கள் வைத்துள்ள தங்கம், வைரம் மற்றும் இரத்தின நகைகள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தங்க கையிருப்புடன் கூடுதலாக தனியார் கையிருப்பு மதிப்பை கணக்கிடுவதே இதன் நோக்கம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், 10 இலட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்யும் திருமணம், பிறந்தநாள் விழாக்கள், ஒன்றுகூடல் நிகழ்வுகள் போன்றவற்றுக்கு சிறப்பு உரிமம் பெற வேண்டும் எனவும், அதற்கு 30 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. தேசிய கலாச்சார கூட்டு நிதியத்தில் இவை சேமிப்பில் வைக்கப்படும் எனவும் அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும், பல்பொருள் அங்காடிகளில், உணவகங்களில் பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்ளும் போது ஒரு தடவைக்கான தனிப்பட்ட பாவனை அதிகபட்ச கொள்வனவுத் தொகை இருபதாயிரம் ரூபாவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு 12.5 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டர் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுவதாகவும், நகர்ப்புறங்களைத் தவிர ஏனைய அனைத்து பகுதிகளிலும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மட்டுமே உள்நாட்டு எரிவாயு விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எனினும், தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை ஆவணம் இன்னும் தயாரிக்கப்படவில்லை என அக்கட்சி பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்து வந்துள்ள காரணத்தினால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் இந்த ஆவணம் அக்கட்சியினதா என factseeker ஆராய்ந்து பார்த்தது.

 

இது குறித்து தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிஹால் அபெசின்ஹ மற்றும் கட்சியின் ஊடகப் பிரிவிடம் Factseeker வினவியபோது, ​​தேசிய மக்கள் சக்தி தனது பொருளாதார கொள்கை அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை எனவும், தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் இந்த ஆவணம் போலியானது என்பதையும் அவர்கள் தெரிவித்தனர்.

 

இது தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் சுனில் ஹதுன்னெத்தியிடம் Factseeker வினவியபோது, ​​தேசிய மக்கள் சக்தி தற்போது வரையிலும் நில அளவையாளர்கள், பொறியியலாளர்களின் அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சித் திட்டம் தொடர்பான கருத்துக்களை மட்டுமே வெளியிட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

 

ஆகவே, சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் ஆவணமானது தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கைத்திட்டம் அல்ல என்பதையும் அது போலியான ஆவணம் என்பதையும் Factseeker உறுதிப்படுத்துகின்றது.