ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

“பயங்கரவாதத்திற்கு நிதியுதவிகளை வழங்குவதை தடுப்பதற்காக செயற்பாடுகள் விரைவில்..” – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவிகளை வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளை இலங்கை விரைவில் ஆரம்பிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

மேற்படி செயற்பாடுகள் நாட்டின் வணிகச் செயற்பாடுகளை இலகுபடுத்துவது தொடர்பான மதிப்பீடுகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் போன்ற விடயங்கள் மீது நேரடியாக தாக்கம் செலுத்தும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நுவரெலியா கிரேண்ட ஹோட்டலில் நேற்று (03) நடைபெற்ற சட்டத்தரணிகள் மாநாட்டின் 2 ஆம் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“பொருளாதாரத்தை வழமைக்கு திருப்பும் முயற்சிகளில் நீதிக் கட்டமைப்பின் பணியும் வணிக நிலைத்தன்மையும்” என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்று வரும் மேற்படி மாநாடு இன்று (04) நிறைவடையவுள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவிகளை வழங்குவதை தடுப்பதற்காக காணப்படும் சட்டதிட்டங்களின் இடைவெளிகளை விரைவில் கண்டறிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் இலங்கை மூலோபாய குறைபாடுகள் கொண்ட நாடாக பட்டியலிடப்படலாம் என்றும் அதனால் நாட்டின் அபிவிருத்திக்கு பாதகமான விளைவுகள் ஏற்படலாம் என்றும் அறிவுருத்தினார்.

தேசிய கொள்கையொன்றின் கீழ் நாட்டை வழிநடத்திச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் இதன் போது வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேசிய கொள்கை வகுப்பதற்கான குழுவை நியமிக்கும் பணிகள் தற்போதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தேசிய கொள்கை வகுப்புச் செயற்பாடுகளின் போது அனைத்து தரப்பினரதும் இணக்கப்பாடுகளை பெற்றுக்கொள்ள முடியாதிருந்தாலும், மேற்படி விடயங்கள் குறித்து உடன்பாடு ஒன்றை உருவாக்கி அவற்றை அமுல்படுத்துவதற்கான முனைப்புக்களை மேற்கொள்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னைய அரசாங்கங்கள் தேசிய கொள்கை ஒன்றை வகுக்கத் தவறியதன் காரணமாகவே இன்றளவில் நாட்டின் பிரச்சினைகள் உக்கிரமடைந்துள்ளன என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இங்கு கருத்து தெரிவித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌஷல்ய நவரத்ன, இந்த மாநாட்டின் வாயிலாக நீதித் துறையினர், கொள்கை தயாரிப்பாளர்கள், அதிகாரிகள் மற்றும் வியாபாரத் துறையினர் மத்தியிலான கருத்தாடல் ஒன்றை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார். அத்தோடு ஒரு தேசமாக நாம் முன்னேற வேண்டுமானால், சட்டத்துறை தொழில்முனைவின் முக்கியத்துவத்தை அடையாளம் காண்பது முக்கியம். மேலும், தொழில் மற்றும் தொழில்முனைவோர், சட்டத்தின் ஆட்சியை ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சுதந்திரம் பெற்றதிலிருந்து 75 வருடங்களின் பின்னர் அபிவிருத்தி அடைந்த இலங்கை தொடர்பிலான எதிர்பார்ப்புகள் தற்போது முதல் முறையாக ஏற்பட்டுள்ளதென தெரிவித்த தேசிய சட்டத்தரணிகள் சம்மேளனத்தின் தலைவர் பைசர் முஸ்தபா யுத்தம் மற்றும் தவறான பொருளாதார கொள்கைகள் என்பனவே பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தியது என்றும் தெரிவித்தார்.

அதனால் கடந்த கால தவறுகளை திருத்திக்கொண்டு எதிர்கால சவால்களுக்கு முகம்கொடுக்க சகலரும் முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இங்கு கருத்து தெரிவித்த உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி பிரியந்த ஜயவர்தன, இந்நாட்டின் பொருளாதாரத்தைப பலப்படுத்துவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதி சட்டத்தரணிகளான கே. கணகேஸ்வரன், பைசர் முஸ்தபா மற்றும் சந்தக ஜயசுந்தர உள்ளிட்டோர் மேற்படி முக்கிய அமர்வுகளில் கலந்துகொண்டனர்.

சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் ,உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் இந்நாட்டு சட்டத்துறையின் முக்கியஸ்தர்களும் வியாபார நிறுவனங்களின் உயர் முகாமைத்துவ குழுவினர் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கையில் நடமாடும் வாக்குப்பதிவு நிலையங்கள் !

மாற்றுத்திறனாளிகள் மற்றும் நடக்க முடியாதவர்களுக்காக நடமாடும் வாக்குப்பதிவு நிலையங்களை நிறுவ வேண்டியதன் அவசியம் குறித்து தேவையான தரப்பினருக்கு அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வீடுகளை விட்டு வெளியேற முடியாதவர்களுக்கு விசேட வாக்களிப்பு நிலையங்களை நிறுவுவதன் மூலம் தமது வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் வாக்களிப்பதைக் கண்காணிக்க முடியும், அதே நேரத்தில் வாக்காளர் செல்வாக்கு இல்லாமல் வாக்களிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

அத்தியாவசிய சேவை ஊழியர்கள், சுதந்திர வர்த்தக வலயங்களுக்குள் பணிபுரிபவர்கள் மற்றும் விசேட வசதிகள் தேவைப்படுபவர்களுக்கும் வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட வேண்டும் எனவும் நிமல் புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.

முன்கூட்டியே வாக்களிக்க விண்ணப்பிப்பதற்கான பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் தேர்தல் நாளுக்கு முன்னதாக வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான முன்மொழிவு சட்ட வரைவு ஆசிரியருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அத்தகைய விதிமுறைகள் விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என நம்புவதாகவும் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

ஜப்பானிடம் மன்னிப்பு கோரிய இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க !

ஜப்பானின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்தப்படவிருந்த கொழும்பு இலகு ரயில் போக்குவரத்துத் திட்டம் (LRT) இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் அரசாங்கத்திடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவிற்கும் இடையில் நேற்று (25) டோக்கியோவில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின் போதே ஜனாதிபதி தனது வருத்தத்தை வெளிப்படுத்தியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

இரு தரப்பினரின் உடன்பாடு இல்லாமல் பாரிய திட்டங்களை நிறுத்தவோ அல்லது ரத்துச் செய்யவோ முடியாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டியதன் அவசியத்தை  வலியுறுத்தினார்.

ஜனாதிபதியை ஜப்பான் பிரதமர் அன்புடன் வரவேற்றதுடன், இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையிலான சிநேகபூர்வ உரையாடலின் பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஜப்பான் வழங்கிய ஆதரவிற்கு தனது நன்றியைத் தெரிவித்ததுடன், ஜப்பானிய பிரதமரின் உதவிக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் குறித்தும்  இரு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

 

“தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போர் மட்டுமே முடிந்துள்ளது.” – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போர் மட்டுமே முடிந்தது எனவும் ஏனைய போர்கள் தொடர்வதாகவும் தோன்றுகிறது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை கொழும்பு நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களைச் சுற்றி பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினரால் ஏற்படுத்தப்பட்டிருந்த கடுமையான பாதுகாப்பு வளையம் பற்றிய முறைசாரா கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இதன்போது பாதுகாப்பு தரப்பில் உள்ள உயர்மட்ட அதிகாரிகளிடையே ஏற்பட்டுள்ள முறுகல்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை பல்கலைக்கழக மாணவர்களால் கொள்வனவு செய்யப்பட்ட 1000 உணவுப் பொதிகள் பற்றிய தகவல்கள், கடந்த ஆண்டு ஏற்பட்டதைப் போன்ற ஒரு பெரிய போராட்டத்தின் அச்சத்தைத் தூண்டியதாகவே பாதுகாப்பு தரப்புக்கள் தெரிவித்திருந்தன.

இதனடிப்படையில் வன்முறையை சமாளிக்க படையினரும் காவல்துறையினரும் நடவடிக்கை எடுத்திருந்தனர். எனினும் மீண்டும் ஒரு போராட்டத்திற்கான சூழ்நிலை இல்லை என்பதால் சுமார் 72 மணி நேரத்திற்குள் பாதுகாப்பு பலப்படுத்தல் படிப்படியாக திரும்பப் பெறப்பட்டது.

பாதுகாப்பு ஸ்தாபனத்தில் இருப்பவர்கள் உணவு கொள்வனவு அடிப்படையில் மதிப்பீடுகளை மேற்கொள்வது அசாதாரணமானது அல்ல.

பிரிவினைவாதப் போரின் போதும் வடக்கில் உள்ள வெதுப்பகங்களை உளவுத்துறை அதிகாரிகள் கண்காணித்த வரலாறுகள் உள்ளன.

அசாதாரண அளவு ரொட்டிகள் தயாரிக்கப்படும் போது அவர்களின் கவனம் தூண்டப்படும். இதனால், தாக்குதல் நடக்கலாம் என்ற சந்தேகம் படையினர் மத்தியில் இயல்பாகவே ஏற்பட்டு வந்ததாக பாதுகாப்பு தரப்புக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சட்டமாக்கப்படவுள்ள சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையின் முக்கிய அம்சங்கள் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் ஒப்பந்தத்தின் முக்கிய விடயங்கள் சட்டமாக கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டமூலம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் ஊழல் ஒழிப்பு சட்டமூலம் ஆகிய மூன்று வரைவுகளும் ஜூன் மாதத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நிதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (02) நடைபெற்ற சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டம் தொடர்பில் பல்கலைக்கழகங்களின் பொருளாதாரப் பிரிவு விரிவுரையாளர்களை தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைக் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கும் கருத்துக்களைப் பெறுவதற்கும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலிருந்தும் பொருளாதாரப் பிரிவின் சிறந்த மாணவர்கள் பத்து பேரை அனுப்புமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அறிவித்தார். இதில், தெரிவு செய்யப்படும் சில மாணவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த நாட்டில் உற்பத்தி மற்றும் சேவைகள் தானியங்கி முறைமைக்கு செல்ல வேண்டும் எனவும் இல்லையெனில் இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளுடன் போட்டியிட முடியாது எனவும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதற்காக கல்வி முறையை புதிதாக மாற்றியமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், 18 ஆவது தடவையாக சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்வதற்கு தான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

முதலில் ஐ.எம்.எப் உடன்படிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு ஆதரவளிப்பதா..? இல்லையா..? என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்த எதிர்பார்க்கிறோம். அனைவரும் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் ஏதேனும் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். எனவே, ஆதரவு வழங்க கோரும் பிரேரணையை முன்வைக்க இருக்கிறோம்.

சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையின் முக்கிய அம்சங்களை சட்டமாக கொண்டு வர உள்ளோம். அதில் ஏதும் மாற்றம் செய்ய வேண்டுமானால் பாராளுமன்றம் செல்ல வேண்டும். அதிலுள்ள அடிப்படை விடயங்கள் மே மாதத்தில் சமர்ப்பிக்கப்படும். புதுவருடத்தின் பிறகு ஜஎம்எப் குறித்து கிராம மக்கள் அறிவூட்டப்படுவர். இரண்டாவதாக, பசுமைப் பொருளாதாரம் உட்பட நமது திட்டங்கள் என்ன? என்பது குறித்து தெளிவுபடுத்தப்படும்.முதலில் இந்தத் திட்டங்கள் தொடர்பிலான கருத்துக்களை பெற வேண்டும்.

பயங்கரவாதத் தடைச் சட்டமூலம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் ஊழல் ஒழிப்புச் சட்டமூலம் ஆகிய மூன்று வரைவுகளும் எதிர்காலத்தில் கொண்டுவரப்பட வேண்டும்.. இந்த மூன்று சட்டமூலங்களையும் ஒன்றாக கொண்டு வரக்கூடாது என நீதி அமைச்சர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோர் கோரிக்கை விடுக்கின்றனர். அதற்குக் காரணம், உச்சநீதி மன்றம் அவர்கள் மீதும் வேறு பல காரணங்களுக்காகவும் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கிறது. எனவே, ஏப்ரல் இறுதிக்குள் ஒரு வரைவை முன்வைக்க முடியும் என்று நான் நம்புகிறேன். அதன் பிறகு, மற்ற இரண்டு வரைவுகள் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியும் ஜூன் மாதத்திற்குள் மூன்று வரைவுகளும் கொண்டு வரப்படும்.

குறிப்பாக நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், போட்டித்தன்மையுடன் உற்பத்தியை அதிகரிப்பதே எங்கள் நோக்கம். போட்டித்திறன் மற்றும் உற்பத்தி ஆகிய இரு துறைகளும் முன்னேற்ற வேண்டும். அதற்காக நாம் இணைந்து பணியாற்றலாம். அரசின் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களை இணைத்து தனி விவசாய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை உருவாக்கத் திட்டமிட்டோம். தேவைப்பட்டால், பட்டப் படிப்புகளை நிறுவலாம். இதன் ஊடாக ஆராய்ச்சி செயல்முறையை வலுப்படுத்த எதிர்பார்க்கிறோம். இதிலிருந்து தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இதிலிருந்து அறியலாம். அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து இந்த திட்டத்தை செயல்படுத்துவோம்.

ஐஎம்எப் ஒப்பந்தத்தை அனைவரும் படித்திருக்கிறார்கள். இங்குள்ளவர்களுக்கு அதைப் பற்றி தெளிவுபடுத்த முடியும். நாம் வழங்கக்கூடிய எந்தவொரு தீர்வையும் ஜஎம்எப் கட்டமைப்பிற்குட்பட்டு மட்டுமே வழங்க முடியும். அதிலிருந்து வெளியில் வர முடியாது. எங்களுக்கு ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த கட்டமைப்பிற்குள் மட்டுமே நாம் செயல்பட வேண்டும்.

விவசாயிகளும், சுற்றுலாதுறை வர்த்தகர்கள் கூட இது அவசியம் என்கின்றனர். பெரும்பான்மையினரின் கருத்தும் அதுவாகும். தனியார் மயமாக்க வேண்டாம் என்று தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. அவ்வாறானால் என்ன செய்யுமாறு கேட்கிறார்கள்? அவற்றுக்காக செலவிடப்படும் பணத்தில் மூன்றில் ஒரு பங்கை பல்கலைக்கழகங்களுக்கும் பாடசாலைகளுக்கும் வழங்கினால் இதனை விட முன்னேற்றம் ஏற்படும்.அத்தோடு சம்பள பிரச்சினையும் தீர்க்கப்படும். தொழிற்சங்கங்கள் விரும்பியபடி செயல்பட முடியாது. இலங்கை மீண்டும் ஆப்கானிஸ்தானை விட பின்தங்குவதை அனுமதிக்க முடியாது.மறுசீரமைப்புகள் மேற்கொள்ள வேண்டும். நாட்டில் மறுசீரமைப்புகள் முன்னெடுக்கப்பட ட வேண்டும் என்பதை எதிர்க்கட்சிகள் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளன.

தொழிற்சாலைகளை உருவாக்க சட்டமொன்றை கொண்டு வந்துள்ளதோடு ஆணைக்குழுவொன்றையும் உருவாக்கியுள்ளோம். ஆனால் நாம் தொழில்மயமாக்கலை முன்னெடுக்கவில்லை. யுத்தத்திலிருந்து சமாதானத்தை ஏற்படுத்த விரும்பினோம்.

1983-1987 களில் யுத்தத்திற்கு செலவழித்த பணத்தை விட அதிக பணம் சிவில் யுத்தத்திற்காக செலவழிக்கப்பட்டது. போருக்குப் பிறகு, நாங்கள் தொழில்மயமாக்கலுக்கு திரும்பவில்லை. மாறாக, நிர்மாணத் துறையில் உள்ள திட்டங்களுக்குச் சென்றுள்ளோம். 2009ல் கைத்தொழில்மயமாக்கலுக்கு சென்றிருந்தால் நிறைய முதலீடுகள் வந்திருக்கும். நிபந்தனைகள் விதித்தால், அந்த முதலீடுகள் வராது. நிலைமை நன்றாக இருந்தால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலில் வரமாட்டார்கள். வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் பணத்தை வைத்திருந்த நமது முதலீட்டாளர்கள் தான் முதலில் வருவார்கள். அதன் பிறகு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருவார்கள்.

30 வருடங்களில் நிறைவு செய்யப்பட வேண்டிய மகாவலி திட்டத்தை 10 வருடங்களில் நிறைவேற்ற ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன நடவடிக்கை எடுத்தார். அதற்குப் பயன்படுத்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் ஒரே நேரத்தில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன. அதன் ஊடாக இலங்கை மக்களுக்கான பணத்தைப் பெறும் முறைகள் அமைக்கப்பட்டன. அவ்வாறு முன்னேறிய குழுக்கள் உள்ளன. அவர்கள் இப்போது வேறு திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள்.

நமக்கு இந்தப் பணிகளை அவ்வாறானதொரு நிலையிலேயே ஆரம்பிக்க வேண்டியுள்ளது. எமது மக்கள் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து தமது தொழில்கள் வீழ்ச்சியடையும் என அஞ்சுகின்றனர். எனவே, பணம் லண்டன் அல்லது டுபாயில் வைக்கப்படுகிறது. அந்த பணத்தை திரும்ப கொண்டு வர முடிந்தால்,சிறந்தது.

பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டில் பொருளாதாரம் கற்கும் மாணவர்களிடமிருந்து திறமையான பத்து மாணவர்களை தெரிவு செய்து வழங்க முடியுமா என அதிகாரிகளுடனும் அமைச்சருடனும் கலந்துரையாடுங்கள். நான்கு திறமையான மாணவர்களுக்கு வெளிநாட்டு புலமைப்பரிசில்களை வழங்க எதிர்பார்க்கிறோம். ஹார்வர்ட், கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்ட் மற்றும் ஸ்டாபோர்ட் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்வோம். என்றார்.

நாளை திறக்கப்படுகிறது இலங்கையின் முதலாவது சர்வதேச பறவைகள் பூங்கா மற்றும் சுற்றாடல் சுற்றுலா வலயம் !

கண்டி ஹந்தானையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது சர்வதேச பறவைகள் பூங்கா மற்றும் சுற்றாடல் சுற்றுலா வலயம் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது. ஹந்தானை சர்வதேச பறவைகள் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையம் என பெயரிடப்பட்டுள்ள இந்த பூங்கா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாளை (20) ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்த பூங்கா வரும் 23ஆம் திகதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும். ஹந்தானை தேயிலை அருங்காட்சியக வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த 27 ஏக்கர் புலம்பெயர் பறவை பூங்கா மற்றும் சுற்றாடல் சுற்றுலா வலயம் நூற்றுக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த பறவைகளின் இருப்பிடமாக உள்ளது. வெளிநாடுகளுக்குச் சொந்தமான பறவைகள், புலம்பெயர் பறவைகள் போன்றவற்றை உள்ளடக்கிய பூங்காவில், காயமடைந்த பறவைகளுக்கு சிகிச்சை அளித்து விடுவிக்கும் பிரிவும் உள்ளது. 490 மில்லியன் ரூபா செலவில் நிறுவப்பட்டுள்ள இந்த பறவை பூங்காவில் வெளிநாட்டு பறவைகள் பெரிய கூண்டுகளில் அடைத்து வைக்கபட்பட்டுள்ளன. அவற்றை பராமரிக்கும் பணிகளுக்கு சுமார் நூறு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பூங்கா 40 வருட காலப்பகுதியில் இலங்கைக்கு சொந்தமான பறவைகள் பற்றிய ஆய்வின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக புலம்பெயர்ந்த பறவைகளை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. விலங்கியல் மாணவர்களுக்கான கல்வி பயிற்சி நிலையம், பறவை காப்பகம், பறவைகள் தங்குமிடம் மற்றும் ஒரு தனிமைப்படுத்தல் பிரிவு என்பனவும் உள்ளன இந்த பூங்காவில் வெளிநாட்டு பறவைகளை இனப்பெருக்கம் மற்றும் ஏற்றுமதி செய்வதற்கான அலகும், பாடசாலை மாணவர்களுக்கான கல்வி மற்றும் பொழுதுபோக்கு மையம் மற்றும் இயற்கை பறவைகள் ஆய்வு மையம் என்பனவும் உள்ளன.

“நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை தீர்த்து விட்டு மக்கள் துன்பப்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை.” – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

நாட்டின் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாகவும், நாட்டை அராஜகத்திற்குள் தள்ள இடமளிக்காமல் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இன்று (18) முற்பகல் நடைபெற்ற இலங்கை மற்றும் மாலைதீவுகளை உள்ளடக்கிய ரொட்டரி கழகத்தின் , மாவட்ட இலக்கம் 3220 ஏற்பாடு செய்த 32 ஆவது ரொட்டரி மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் விரைவில் வழமைக்குத் திரும்பும் என்று நம்பிக்கை தெரிவித்த ஜனாதிபதி, இந்த வருட இறுதிக்குள் நாட்டில் ஜனநாயகம் தளராமல் செயற்படும் சமூகம் கட்டியெழுப்பப்படும் என்றும் உறுதியளித்தார்.

அத்துடன், நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை தீர்த்து விட்டு மக்கள் துன்பப்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்கான சகல தீர்மானங்களையும் அரசாங்கம் மேற்கொள்ளும்.

தான் ஜனநாயகத்தை மதிக்கும் தலைவர் என்றும், ஆனால் ஜனநாயகத்திற்கு முதலில் பொது அமைதி தேவை என்றும், அதற்கு சட்டம் ஒழுங்கை பேணுவது அவசியம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

ஒரு நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லாமல் ஜனநாயகம் இருக்க முடியாது எனவும், ஜனநாயகத்திற்கு நிலையான பொருளாதாரம் அவசியம் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சட்டம், ஒழுங்கு மற்றும் பொருளாதார மீட்சி இல்லாத நாட்டில் அராஜகமே தவிர ஜனநாயகம் இல்லை எனவும், நாட்டை அராஜக பாதைக்கு செல்ல ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி, ரணில் விக்ரமசிங்க , அராஜகத்தின் கீழ் நிலைக்கு கொண்டு செல்வதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் மூலம் அடுத்த வருடம் மக்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்தி நாட்டில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தி தமக்கு விரும்பும் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான சூழல் ஏற்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.

போலியோ தடுப்புப் பிரச்சாரம், சுனாமி மற்றும் மருந்துத் தட்டுப்பாடு மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடி போன்றவற்றுக்கு காலத்தில் முகங்கொடுக்க நேரிட்டது. இந்த நெருக்கடிகளின் போது ரொட்டரி கழகம் இலங்கைக்கு வழங்கிய ஆதரவை ஜனாதிபதி பாராட்டினார்.

அரச அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்யும் போது இழுபறியில் ஈடுபட வேண்டாம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

அரச அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்யும் போது இழுபறியில் ஈடுபடாமல் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தம்மிடம் முன்வைக்கப்படும் மக்களின் 50 வீதமான பிரச்சினைகளை அரச அதிகாரிகளால் தீர்க்க முடியும் எனவும் குறிப்பிட்ட சில பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதியோ அல்லது அமைச்சரோ கொழும்பில் இருந்து வரவேண்டிய அவசியமில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்கள் சிறந்த பொதுச் சேவையை சிறந்த ஒருங்கிணைப்புடன் வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதிக்கு முன்னர் நுவரெலியாவில் காணிப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அனைத்து அரச நிறுவனங்களையும் இணைத்து கூட்டறிக்கையை உருவாக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, அந்த அறிக்கை உரிய காலத்தில் சமர்ப்பிக்கப்படாவிட்டால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதுடன், உலக முடிவுப் பகுதிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்காக பட்டிப்பளைக்கும் பொரலந்தவிற்கும் இடையில் கேபிள் கார் திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

அபிவிருத்தியடைந்த நாடுகளே காலநிலை மாற்றத்திற்கான அடிப்படைக் காரணம் – கோப் 27 மாநாட்டில் ரணில் !

அபிவிருத்தியடைந்த நாடுகளின் கட்டுப்பாடற்ற தொழில்மயமாதலே காலநிலை மாற்றத்திற்கான அடிப்படைக் காரணம் என்றும், இதன் விளைவுகளையே வறிய நாடுகள் அனுபவிக்க நேரிட்டுள்ளது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

எகிப்தில் நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் தொடர்பான கோப் 27 மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

நிறைவான உயிர்ப் பல்வகைமையைக் கொண்டுள்ள இலங்கை, காலநிலை மாற்றத்தின் சவால்களை தொடர்ச்சியாக எதிர்கொண்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை முன்னெடுத்த நடவடிக்கைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

 

2030 ஆம் ஆண்டளவில் காபன் வெளியேற்றத்தை  14.5 சதவீதமாக குறைக்கும் செயன்முறையை இலங்கை ஆரம்பித்துள்ளது. கடல் சார்ந்த பிரதேசங்களில் திட்டமிடலை ஆரம்பித்துள்ளதோடு காலநிலை அலுவலகம் ஒன்றை அண்மையில் அங்குரார்ப்பணம் செய்தது.

மார்ச் 1 ஆம் திகதியை உலக கடல் புல் தினம் எனும் ஐ.நா பிரகடனத்தை தலைமை தாங்கியமை, சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் நிலைபேண்தகு பயன்பாட்டிற்கான தேசியக் கொள்கையை அமுல்படுத்துதல்,காலநிலை மற்றும் சமுத்திரங்களில் ஏற்படக்கூடிய அபாயம் மற்றும் பாதிப்புக்கான பொதுநலவாயத்தின் முன்னோடி திட்டத்தை செயல்படுத்துதல்,சதுப்புநில சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரம் பற்றிய பொதுநலவாயத்தின் Blue Charter Action Groupஐ வழிநடத்துதல், நிலக்கரி சக்தி மூலமான ஆற்றல் திறனை மேலும் அதிகரிக்காதிருத்தல், படிம எரிபொருள் மானியங்களை படிப்படியாக நீக்குதல்,2030 ஆம் ஆண்டுக்குள் மின்சார உற்பத்திக்காக 70% புதுப்பிக்கத்தக்க ஆற்றலை இலக்காகக் கொள்ளுதல்,

வொஷிங்டனில் அண்மையில் வழங்கப்பட்ட உலகளாவிய மீத்தேன் உறுதிமொழியில் இணைதல் என்பன அதில் அடங்கும்.

இருந்தாலும், காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு UNFCC மற்றும் பரிஸ் உடன்படிக்கையை பூர்த்தி செய்வதற்கான பரந்த அளவிலான நடவடிக்கைகள் தொடரப்பட வேண்டும்.

காலநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில்  ஆற்றலின்மை மிகப்பெரிய தடையாக உள்ளது. எனவே ஆற்றல்களை கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும்.

இப்பிரச்சினையிலிருந்து மீள்வதற்காக நாம், பல்கலைக்கழக மாதிரியில் இதுவே முதல் வகை எனக் குறிப்பிட்டுக் கூறும் வகையில், சர்வதேச காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகம் ஒன்றை இலங்கையில் நிறுவ வேண்டும்.

அதன் துணை நிறுவனம் மாலைதீவில் அமைக்கப்பட வேண்டும். இப்பல்கலைக்கழகமானது, விஞ்ஞானிகள், சூழலியலாளர்கள்,ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்போர், அபிவிருத்தியை நடைமுறைப்படுத்துவோர்  மற்றும் உலகின் அனைத்து நாடுகளையும் சேர்ந்த மாணவர்களுக்கும் தமது எல்லைகளைத் தாண்டி  கற்கைகளை மேற்கொள்ளும் உலகளாவிய மையமாக  செயற்படும்.

உத்தேச காலநிலை மாற்ற பல்கலைக்கழகமானது காலநிலை மாற்றத்தைத் தணிக்கும் மற்றும் அதனுடன் ஒத்திசைவாக்கும் ஆற்றல்களை உருவாக்கும் வகையிலான  குறுகிய கால கற்கைநெறிகள் மற்றும் பட்ட பின்படிப்புக்களை தொடரும் வாய்ப்புகளை வழங்கும்.

இப்பல்கலைக்கழகமானது காலநிலை மாற்றத்தில் இருந்து உலகைப் பாதுகாப்பதற்கு தேவையான அரசியல், பொருளாதார, சமூக, கலாசார மற்றும் டிஜிட்டல் மாற்றங்களை வழங்குவதற்காக புதிய தலைமுறையினரின் ஆற்றல்களை மேம்படுத்தும், காலநிலை மாற்ற சவால்கள் மற்றும் வாய்ப்புக்கள் தொடர்பில் உள்நாட்டில் அறிவூட்டும் வாகனமாக இது செயற்படும்.

ஸ்தாபிக்கப்படும் உயர்கல்வி நிறுவனமானது – பல பங்குதாரர் கூட்டுமுயற்சியாகவும்  தேசிய எல்லைகளை தாண்டிய ஒரு நிறுவனமாகவும் திகழ்வதற்காக பொதுநலவாய அமைப்பு, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட பல்தரப்பு நிறவனங்கள் மற்றும் அமைப்புக்களுடன் இணைந்து முன்னெடுக்கப்படும்.இலங்கையின் பிரேரணைக்கு சர்வதேச சமூகத்தின் விரிவான ஆதரவும் ஒப்புதலும்  கிடைக்கும் என்பது எனது நம்பிக்கையாகும்.

காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கான பரிந்துரைகள் உலகளாவிய களத்தில் முன்வைக்கப்பட வேண்டியிருப்பதனால், அதிக நம்பிக்கையுடன் அடுத்த ஆண்டு மீண்டும் சந்திப்போம்.இருப்பினும், COP 26 உட்பட முந்தைய முடிவுகளின் முன்னெடுப்புகள் மிகவும் வருத்தமளிக்கிறது.

காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கான பரிந்துரைகள் உலகளாவிய களத்தில் வழங்கப்பட வேண்டியிருப்பதால், அதிக நம்பிக்கையுடன் அடுத்த ஆண்டு மீண்டும் சந்திப்போம்.இருப்பினும், COP 26 உட்பட முந்தைய முடிவுகளின் சரிபார்ப்புச் செயலாக்கம் மிகவும் வருத்தமளிக்கிறது.

படிம எரிபொருள் கைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட நாடுகளைச் சேர்ந்த  G7 மற்றும் G20 அமைப்புக்கள் பசுமை ஹைட்ரஜனின் முக்கிய ஊக்குவிப்பாளர்களாக இருந்தபோதும் நாளடைவில் அவர்கள் அதிலிருந்து பின்வாங்கி படிம எரிபொருளை பயன்படுத்துவதே வருத்தமளிக்கும் அடிப்படை உண்மையாகும். இத்தகைய இரட்டை நிலைப்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அபிவிருத்தியடைந்த நாடுகள் தங்கள் பொறுப்புகளிலிருந்து விலகுவதை விட காலநிலை மாற்றத்திலிருந்து மீள்வதற்கான தலைமைத்துவத்தை வழங்க வேண்டும்.காலநிலை நிதியுதவியானது தனது இலக்கை தவறவிட்டது என்பது இரகசியமல்ல.

காலநிலை சவால்களுக்கு  நிதியளிப்பதற்காக ஆண்டுதோறும் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட 100 பில்லியன் டொலர்கள்  பெட்டகத்தில் இல்லை என்பது நகைப்புக்குரியது. பல அபிவிருத்தியடைந்த நாடுகள் காலநிலை சவால்களுக்காக தாம் முன்னெடுக்க வேண்டிய பங்களிப்பை புறக்கணிப்பதே பொருத்தமானதென நினைக்கின்றனர்.பாதுகாப்பு நலன்களுக்காக நடத்தப்பட்டதாகக் கூறப்படும்  உக்ரைன் போரின் இரு தரப்பிலும் இருக்கும்  நாடுகள்,350 பில்லியன் அமெரிக்க டொலர்களை விட  அதிக தொகையை  போருக்காக செலவழிப்பதில் எந்த கவலையும் கொள்ளவில்லை.

எனினும் தற்போது பாதுகாப்பு தேடவேண்டிய ஆபத்தில் உணவுப் பாதுகாப்பின்மை விடயம் காணப்படுகிறது.  இது போருக்கு முன்பு அனுபவித்திராத அளவுக்கு அதிகரித்துள்ளது.  அபிவிருத்தியடைந்த மற்றும்  அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளைச் சேர்ந்த பலர்   மூன்று வேளை உணவுக்கே வழியில்லாமல் இருக்கின்றார்கள். குறிப்பாக ஆப்பிரிக்காவில் 30 முதல் 40 மில்லியன் மக்கள் பட்டினியில் இருப்பதாக  மதிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த யுத்தமானது வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதற்கும், எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகங்களின் தட்டுப்பாட்டுக்கும் காரணமாக அமைந்ததுடன் இது பசிக்கு எதிரான போராட்டமாக நம் வீடுகளுக்கு வந்துள்ளது.

 

எதிர்பார்த்தபடி, இதே நாடுகளால் உறுதியளிக்கப்பட்ட மிகவும் அவசியமான காலநிலை நிதியைக் குறைக்க வழிவகுத்தது.போருக்குப் பொறுப்பான தரப்பைக் கண்டுபிடிப்பது அல்ல, போரை முடிவுக்குக் கொண்டுவரும் தரப்பைக் கண்டுபிடிப்பதே எமக்குள்ள பிரச்சினையாகவுள்ளது.

 

எங்களுக்கு இந்த நிதி ஏன் தேவை? காலனித்துவ ஆட்சிகளின் போது  ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் பெறுமதியான வளங்களை ஐரோப்பாவிற்கு மாற்றியதுடன் அவர்களின் நாடுகளை தொழில்மயமாக்க இவை  பயன்படுத்தப்பட்டன  . இந்தக் கொள்ளையின் காரணமாகவே நாங்கள் ஏழைகள் ஆனோம்.

 

அபிவிருத்தியடைந்த பொருளாதாரத்தின் கட்டுப்பாடற்ற தொழில்மயமாக்கலும் காலநிலை மாற்றத்திற்கான அடிப்படைக் காரணமாக அமைந்தன. இதன் விளைவுகள் காரணமாகவே ஏழை நாடுகளாகி    பாதிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.போதிய நிதி இல்லாததால் எங்களின் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. எனவே, தெற்கில் உள்ளவர்கள் இரட்டை ஆபத்தை எதிர்கொள்கின்றனர். நமது மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாக்க போராடும் அதே வேளையில் பொருளாதார ரீதியாக முன்னேறவும் போராடவேண்டியுள்ளது.

 

எனவே அபிவிருத்தியடைந்த நாடுகள் தங்களின் நிதியுதவியை இரட்டிப்பாக்குவதாக கிளாஸ்கோவில் வழங்கிய  உறுதிமொழியை நிறைவேற்றுவது கட்டாயமாகும். காயத்திற்கு அவமானம் சேர்க்கும் வகையில் காலநிலை மாற்றங்களும் தீவிரமாக அதிகரித்து வருகின்றன.மேலும் அவற்றின் தாக்கங்கள் மிகவும் விலை உயர்ந்தவை. தொழில்மயமான உலகில் இருந்து வெளியேறும் உமிழ்வின் அதிகரிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள  அபிவிருத்தியடைந்து வரும்  நாடுகள் எதிர்நோக்கியிருக்கும் இழப்பு மற்றும் சேதங்களுக்கு இழப்பீடு   வழங்கப்பட வேண்டும்.

இழப்புக்களும் சேதங்களும் பற்றிய பிரச்சினை இப்போது எங்கள் முறையான நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு காரணமான தரப்பினர், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி அளிப்பதை  உறுதி செய்தாக வேண்டும்.

காலநிலை தொடர்பான பாதிப்புகளை அடையாளப்படுத்தும் பேரவையால் முன்மொழியப்பட்டபடி, எதிர்கால சவால்களுக்கு பதில் வழங்கக் கூடியவாறு சர்வதேச விழிப்புணர்வை வலுப்படுத்தும் வகையில்  ஒரு விசேட  அறிக்கையை உருவாக்குவது பொருத்தமானதாக இருக்கும்.

உறுதியளித்த வகையில் நிவாரணங்களை வழங்குவதில்  அபிவிருத்தியடைந்த நாடுகள் தோல்வி கண்டுள்ள நிலையில், இதனைக் கருத்திற் கொண்டாயினும் COP 28 இற்காக நாம் டுபாய் செல்வதற்கு முன், காலநிலை நிதி மற்றும் அதனுடன் தொடர்புபட்ட ஏனைய விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர்கள் மட்ட கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

“டைட்டானிக் கப்பல் பனிப் பாறையில்  முட்டியதன் பின்னரே நான் அதனை பொறுப்பேற்றுள்ளேன்.” – ஜனாதிபதி ரணில்

“டைட்டானிக் கப்பல் பனிப் பாறையில்  முட்டியதன் பின்னரே நான் அதனை பொறுப்பேற்றுள்ளேன். பனிப்பாறையில் மோதிய டைட்டானிக் கப்பலை  காப்பாற்ற என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறேன்’’ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று முன்தினம் (30) பிற்பகல் நடைபெற்ற இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் 32வது வருடாந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் உரையாற்றுகையில்,

“தேயிலை உற்பத்தித் துறையில் கடந்து வந்த இக்கட்டான நிலைமைகள் தொடர்பில் அதன் தலைவர் கூறியிருந்தார். டைட்டானிக் கப்பல் பனிப் பாறையில்  முட்டியதன் பின்னரே நான் அதனை பொறுப்பேற்றுள்ளேன்.  நான் எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும். பொருளாதார நெருக்கடியை சந்தித்திருப்பதாக பிரகடனப்படுத்தியுள்ளோம்.  மக்களுக்குப் போதுமான  அளவு  உண்பதற்கு   உணவு இருக்கிறது என்பதையும் முதலில் உறுதி செய்தாக வேண்டும்.

இந்த நெருக்கடியுடன் எமது பொருளாதாரம்  தடைப்பட்டுள்ளது. பணவீக்கம், நிதி நெருக்கடி ஆகிய அனைத்தும் எமது பொருளாதாரத்திற்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளன.  அதிலிருந்து மீள வேண்டும்.

முதலாவதாக நாம் எம்மிடமுள்ள வெளிநாட்டுக் கையிருப்பை தக்க வைத்துக் கொள்வதுடன் இறக்குமதியை மட்டுப்படுத்த வேண்டும். அதன் ஊடாக, எம்மால் எரிபொருள், உரம் மற்றும் மருந்து ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். வருமானம் இல்லாமல் போனதால் எமக்கு கட்டணங்களைச் செலுத்துவதற்கும் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போயுள்ளது. எனினும்   1.7 மில்லியன் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்கவும்  கடன்களை மீளச்  செலுத்தவும் வேண்டியுள்ளது என்பதை நாம்  கருத்திற்கொண்டு  செயற்பட வேண்டும்.

நாம் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாக அறிவித்துள்ளோம். முதலாவதாக நாம்  வங்குரோத்தடைந்துள்ளோம் எனும் நிலையை மாற்றுவதற்கு அவசியமான நகர்வுகளை முன்னெடுத்துள்ளோம் என்பதை உறுதிபடுத்த வேண்டும். அதற்காக நாம் சர்வதேச நாணய நிதியத்திடம் கலந்துரையாட வேண்டும். ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு அமைப்பும் இதைச் செய்யுமாறு எம்மிடம் வலியுறுத்தியுள்ளன.

2019 ஆம் ஆண்டு வரை எம்மிடம் ஒரு திட்டம் இருந்தது. எனவே நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் ஆழமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும். அதனை தவிர எம்மிடம் வேறு தெரிவு  எதுவும் இல்லை. இவ்வருடம் எமது பொருளாதார வளர்ச்சி வீதம் 8 சதவீத மறைப்பெருமானமாக அமைந்திருக்கிறது. கடந்த வருடம்  மறைப்பெருமானத்திலே நாட்டின்  வளர்ச்சி வீதம் காணப்பட்டது. அடுத்த வருடம் இது 3 சதவீதமாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.

உலகப் பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்குமென அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் இது ஒப்பீட்டளவில் மிக மோசமாகவே இருக்குமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது கவலையளிக்கும் விடயமாகும். இதனால் ஐரோப்பியா மற்றும் ஏனைய நாடுகளில் அதிகரித்து வரும் பணவீக்கத்தால் வாழ்க்கைச் செலவும் அதிகரிக்கும். இது  ஆடை, தேயிலை, கோப்பி ஆகியவற்றின் ஏற்றுமதியில்  வீழ்ச்சியை ஏற்படுத்தி பெரும் தாக்கத்தை உண்டுபண்ணும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே நாம் ஒருவாறாக இவ்வருடத்தைக் கடந்து அடுத்த வருடத்துக்குச் செல்ல வேண்டும். சுமார் இரண்டு  வருடங்களை நாம் சமாளிக்க வேண்டும். எமது வருமானம் 15% இலிருந்து  8.5%ஆக குறைந்துள்ளது. எனவே நாம் மீண்டும் 15% வருமானத்தைப் பெற வேண்டியுள்ளது. 2026  இல் இந்த இலக்கை அடைய வேண்டும்.  நான் நான்கு வருட நிகழ்ச்சித் திட்டத்துக்குச் சென்றேன். இரண்டு வருடங்களுள் அதனை நிறைவேற்றுவது சாத்தியமில்லை. 2023 ஆம் ஆண்டு இலங்கைக்கு மட்டுமன்றி உலக அளவில் மிக மோசமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயம் உள்ளிட்ட அனைத்துக்கும் வரி அறவிட வேண்டியுள்ளது. அதனைத் தவிர எம்மிடம் வேறு வழியில்லை. நாம் அதை படிப்படியாக செய்திருக்கலாம் என்று நான் நினைத்தாலும் எமக்கு பணம் தேவைப்பட்டதால் எம்மால் அவ்வாறு செய்ய முடியவில்லை. கடன் மறுசீரமைப்பு  மேற்கொள்ள வேண்டியுள்ளது. சாதாரண மக்கள் வாழ்வதற்கு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். எனவே முதலாவதாக நாம் தற்போதுள்ள நெருக்கடியை மீளகட்டமைக்க வேண்டும்.

எனவே நாம் எமது கடன் வழங்குனர்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும். அதற்காகவே நான் முதலில் பாரிஸ் கிளப்பிற்குச் சென்றேன். அதில் உள்ளவர்கள் அனைவரும் மேற்குல நாடுகளையும், ஜப்பானையும் சேர்ந்தவர்கள். ஆனால் நாம் தனித்துவமானதொரு நிலையிலேயே இருக்கின்றோம். எமக்கு கடன் வழங்க முன்வந்துள்ள மூன்று நாடுகளுள் ஒன்று மாத்திரமே பாரிஸ் கிளப்பிற்கு சொந்தமானது. மற்றைய இரண்டும் அதில் அங்கத்துவம் வகிக்காத நாடுகள் ஆகும். அவை இந்தியா மற்றும் சீனாவாகும்.

நான் ஜப்பானுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதோடு இந்தியா மற்றும் சீனாவுடன் தற்போது  பேச்சுக்களை ஆரம்பித்துள்ளேன். இருதரப்பு விடயங்களை ஆராயும் வகையில் நாம் பொதுவானதொரு மேடையில் இது தொடர்பில் கலந்துரையாடி வருகிறோம். இதுவே  நாம் முன்னெடுக்க வேண்டிய செயன்முறையாகும்.

உயர் வருமானத்தை பெற்று  முன்னோக்கிச் செல்ல முடியும் என்பதை  காண்பிக்க  வேண்டும். பல நாடுகள் எமக்கு நேரடியாகவும் சில நாடுகள் வெவ்வேறு அமைப்புக்களுக்கூடாகவும்   உதவிகளை  வழங்க  முன்வந்துள்ளன. எனவே உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட அனைத்துக்கும் நன்றி தெரிவிக்கிறேன். எம்மிடம் போதுமானளவு உரம் கையிருப்பில் உள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகள்  எமக்கு  உதவ முன்வந்துள்ளன. எனவே உரப் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிட்டது.

எரிபொருளுக்காக யாரும் எமக்கு பணம் தரப்போவதில்லை. எனவே எம்மிடம் கையிருப்பில் உள்ள வெளிநாட்டுக் கையிருப்பில் உரம் வாங்குவதற்கான பணத்தைக் கொண்டே எரிபொருளை வாங்க வேண்டும்.

உக்ரேன் யுத்தம் மற்றும் குளிரான காலநிலைக் காரணமாக எரிபொருள் விலை வரும் டிசம்பர் / ஜனவரியளவில் அதிகரிக்குமென எதிர்பார்த்திருந்தபோதிலும் அதன் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

தற்போது உரம் கையிருப்பில் உள்ளதால் விவசாயத்திற்கு புத்துயிரளிக்க   வேண்டும். நெல்லில் ஆரம்பித்து, தேயிலை மற்றும் ஏனைய பயிர்களை அபிவிருத்தி செய்ய வேண்டும்.

பெரும்போகம் மூலம் அடுத்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் அதிக விளைச்சல் கிடைக்குமாக இருந்தால் நாட்டின் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மைய ஏற்படுத்த அது பெரும் உதவியாக இருக்கும்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்த வேண்டும். அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள்  அதிகளவான  சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு செயற்பட்டால்  இதனை  அடைய முடியும். வெளிநாட்டு நிதி கையிருப்பை  இப்போது அதிகரிக்க வழியில்லை. மற்ற எல்லா வழிகளையும் இழந்துவிட்டதால், நமது தொழில் முயற்சிகளை  டொலரில் விற்பதே வெளிநாட்டு மூலதனத்தை திரட்ட ஒரே வழியாக இருக்கும்.

இதன் ஊடாக  கையிருப்பில் சுமார் 4 பில்லியன் டொலர்களை சேர்க்க முடியும். இது ரூபாயை மேலும் வலுப்படுத்தும். முழுமையான வர்த்தகப் பொருளாதாரம் மற்றும் உயர்  பொருளாதார வளர்ச்சி வீதத்தை நோக்கிச் செல்வதாக இருந்தால்  இவை அனைத்தும் சாத்தியமாகும்.

பணவீக்கம் உயர் மட்டத்தை  எட்டியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் எமக்கு அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் வட்டி வீதங்கள் குறைவடைவதைக் காண முடியும். எனவே, நாங்கள் எடுத்து வரும் இந்த நடவடிக்கைகளால், அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள், வட்டி வீதத்தை எளிதாக்கி அதன் பயனை  மக்களுக்கு வழங்க முடியும்.

கடந்த இரண்டு வருடங்களில் 3.2 டிரில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட்டுள்ளதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அதனால், உற்பத்தியை பெருக்குவதைத் தவிர, இப்பிரச்சினைகளை குறுகிய வழியில் தீர்க்க முடியாது.

தேயிலை உற்பத்தித் துறையில் உள்ள குறைபாடுகளை அறிவோம். போதுமான உரம் கிடைத்துள்ளது.   தேயிலைக் கைத்தொழிலை  நாம் அபிவிருத்தி செய்ய வேண்டும்

பொருளாதார  மாதிரி (மொடல்) ஒன்றுடன் நாம் முன்னேற வேண்டும். ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.

விவசாயத்தை நவீனப்படுத்தும் வேலைத்திட்டத்தில் இறங்கியுள்ளோம். இதன் ஊடாக தேயிலைக் கைத்தொழிலுக்கு பெரும் மதிப்பு ஏற்படும்.

தேயிலைக் கைத்தொழிலை மறுசீரமைத்து உங்களின் ஆதரவுடன் முன்னோக்கி செல்லும் வேலைத்திட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். இதை எவ்வாறு  நிறைவேற்றுவது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், பனிப்பாறையில் மோதிய டைட்டானிக் கப்பலை  காப்பாற்ற என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறேன்’’ என்றும் ஜனாதபதி தெரிவித்தார்.