ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க

ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க

வல்லவராகவும் நல்லவராகவும் தன்னை நிரூபித்துள்ள ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியே தமிழ் மக்களின் வெற்றியாகும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீராப் பிரச்சினையாக வைத்திருந்து அரசியல் ஆதாயம் தேடுவோரின் விருப்பமே தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சி என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஒப்பீட்டளவில் வல்லவராகவும் நல்லவராகவும் தன்னை நிரூபித்துள்ள ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை தமிழ் மக்களின் வெற்றியாக மாற்றும் வகையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்பாடுகள் அமைய வேணடும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே செயலாளர் நாயகத்தினால் குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சமகால அரசியல் நிலவரங்கள், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சு சார்ந்த முன்னெடுப்புக்கள் போன்றவை தொடர்பிலும், அவை சரியான முறையில் மக்களை சென்றடைவதை உறுதிப்படுத்துவதற்கு அரச அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய ஒத்துழைப்புக்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தும் வகையில் குறித்த கலந்துரையாடல் அமைந்திருந்தது.

 

அதன்போது, தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை வெற்றியடைய செய்ய வேண்டிய அவசியம் தொடர்பாக வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் பொது வேட்பாளரை தேர்தலில் நிறுத்துவதற்கான முயற்சிகள் தொடர்பான விமர்சனத்தினையும் முன்வைத்துள்ளார்.

 

அத்தோடு, தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அவலங்களையும் அரசியல் கோஷங்களாக பயன்படுத்தி குறுகிய அரசியல் ஆதாயம் தேடும் தரப்புக்கள், தமது நலன்களுக்காக தமிழ் மக்களை இன்னுமொருமுறை பலிக்கடாவாக்க முனைகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

மேலும், இவ்வாறான முட்டாள்தனமான முயற்சிகள் கடந்த காலங்களில் ஆயுதப் போராட்ட குழுக்களினாலும் மிதவாத தமிழ் தலைமைகளினாலும் பலமுறை முன்னெடுக்கப்பட்டதாகவும் ஆனால் அவற்றினால் எமது மக்களுக்கு எந்தவித நன்மைகளும் கிடைக்கவில்லை என்றும் மாறாக மீளமுடியாத பின்னடைவுகளையே ஏற்பட்டதாகவும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

சம்பந்தனின் ஆதரவோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோ ரணில் விக்ரமசிங்கவிற்கு தேவையில்லை – ஆளுந்தரப்பு திட்வட்டம் !

சம்பந்தனின் ஆதரவோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோ ரணில் விக்ரமசிங்கவிற்கு தேவையில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

‘வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினால் ரணில் விக்ரமசிங்கவிற்கும், அரசுக்கும் ஆதரவு வழங்கத் தயார்’ – என இரா.சம்பந்தன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ரணில் விக்ரமசிங்கவிடம் நிபந்தனைகளை முன்வைத்து அவருக்கும் அரசுக்கும் ஆதரவு வழங்குவது போல் பாசாங்கு செய்து தங்கள் காரியங்களை நிறைவேற்ற சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிக்கின்றனர்.

அவர்களின் வியூகம் ரணில் விக்ரமசிங்கவுக்கும் தெரிந்த விடயம். எனவே, சம்பந்தனின் ஆதரவோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோ ரணில் அரசுக்குத் தேவையில்லை.

அபிவிருத்தியில் அதிகூடிய கவனம் எடுத்துச் செயற்படும் ரணில், அதற்கான இலக்கை அடையும் தருவாயில் அரசியல் தீர்வுக்கான செயற்றிட்டங்களையும் முன்னெடுத்து அதிலும் வெற்றி காண்பார். இதற்குத் தமிழ் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்.’ என்றார்.

“நல்லூர் ஆலயத்தை விட பெரிய ஆலயத்தை அமைக்க முடியும்.” – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில்

“அனைத்து மதத் தலைவர்களும் நல்லூர் ஆலய பொறுப்பாளர்கள் விரும்பினால் நல்லூர் ஆலயத்தை விட பெரிய ஆலயத்தை அமைக்க முடியும்.” என ஜனாதிபதி ரணில் தெரிவித்தரணில்ள்ளார்.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று (06) முற்பகல் யாழ்.மாவட்ட சர்வ மதத் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் யுத்தத்தினால் இழந்த வருமானத்தை வடக்கிற்கு மீள வழங்குவதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்த எதிர்பார்ப்பதாகத் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடமாகாண பாதுகாப்புப் பிரிவினரின் கீழ் உள்ள பகுதிகளில் உள்ள கோவில்கள் மற்றும் தேவாலயங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படுவதுடன், அந்த மத ஸ்தலங்களை மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அனைத்து மதத் தலைவர்களும் நல்லூர் ஆலய பொறுப்பாளர்கள் விரும்பினால் நல்லூர் ஆலயத்தை விட பெரிய ஆலயத்தை அமைக்க முடியும். கிறிஸ்தவ தேவாலயங்களில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பாக மடு தேவாலயத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்.

யுத்த காலத்தில் முஸ்லிம் மக்கள் இந்தப் பிரதேசங்களை விட்டு வெளியேறியதாகவும், அவர்கள் மீள்குடியேறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இனம் மற்றும் மதம் என்ற அடிப்படையில் பிளவுபட வேண்டிய அவசியமில்லை என வலியுறுத்திய ஜனாதிபதி, அனைத்து மக்களினதும் உரிமைகளைப் பெற்றுக் கொண்டு ஒரு நாடாக முன்னோக்கிச் செல்ல வேண்டும். அனைத்து மதம் தொடர்பிலும் செயற்பட புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் ஆலோசனைக் குழுக்களை நியமிப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன், நாட்டின் சமய மற்றும் கலாசார விழுமியங்களை முன்வைத்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அநுராதபுரம் மற்றும் கண்டியை மையப்படுத்தி பௌத்த சமய கலாசாரத்தை மேம்படுத்தும் வகையில் ஊக்குவிப்பு திட்டத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், யாழ்ப்பாணம் மற்றும் தெற்கு கைலாயத்தை மையப்படுத்தி இந்து சமய கலாசாரத்தை மேம்படுத்தும் வகையில் ஊக்குவிப்பு திட்டத்தை உருவாக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அது பற்றிய அறிக்கையை அவருக்கு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது. இந்நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு இந்த செயற்பாடுகள் பெரும் உறுதுணையாக அமையும்.

வடமாகாண சமய ஒற்றுமையைப் பாதுகாப்பதற்கு அனைத்து அரசியல்வாதிகளும் மதத் தலைவர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வடக்கில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக வடமாகாண ஆளுநரிடம் அனைத்து மதத் தலைவர்களுடன் கலந்துரையாடி அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்துத் தெரிவிக்குமாறு பணிப்புரை விடுத்தார்.

யாழ்ப்பாண சர்வமதக் குழு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது பரிந்துரைகளைக் கையளித்தது. அதற்கேற்ப அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த ஜனாதிபதி, எந்தவொரு மதத்திற்கும் அநீதி இழைக்காத வகையில் அனைத்து சமய திணைக்களத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

 

“பாடசாலை மாணவர்களுக்கு மத்திய வங்கி அறிக்கை தொடர்பான தெளிவூட்டல் வழங்கப்படவேண்டும்.” – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

எதிர்கால சந்ததியினர் நவீன தொழிநுட்பம் மற்றும் நிதி அறிவாற்றலினால் வலுவூட்டப்படுவார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

 

புதிய பொருளாதார முறைகளுடன் 2048 ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை நோக்கிய பயணத்தில் இது அத்தியாவசியமானது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

 

அடுத்த வருடம் முதல் பாடசாலைகளில் மத்திய வங்கி அறிக்கை தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும், அதற்காக ஆசிரியர்கள் மற்றும் மாணவத் தலைவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை இலங்கை மத்திய வங்கி நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 

தெரிவு செய்யப்பட்ட 100 பாடசாலைகளில் ‘மூலதனச் சந்தை பற்றிய சங்கங்களை நிறுவும் திட்டத்தின் முதலாவது நிகழ்வு கண்டி நுகவெல மத்திய கல்லூரியில் நேற்று (31) முற்பகல் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

 

பங்குச் சந்தை மற்றும் நிதி அறிவாற்றல் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்குடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு, இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் கொழும்பு பங்குச் சந்தை என்பன இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன.

 

கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எம். ரணசிங்க,இலங்கை பிணையங்கள் மற்றும் பங்குப் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சிந்தக மெண்டிஸ் மற்றும் கொழும்பு பங்குச் சந்தையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ பண்டாரநாயக்க ஆகியோர் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

 

நுகவெல மத்திய கல்லூரியில் மூலதனச் சந்தை பற்றிய சங்கத்தை ஸ்தாபிப்பதற்கான பட்டயச் சான்றிதழ் மற்றும் ஒரு இலட்சம் ரூபா நிதி என்பவற்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாடசாலை அதிபர் தம்மிக்க பண்டாரவிடம் வழங்கி வைத்தார்.

 

அத்துடன், மூலதனச் சந்தை பற்றிய அறிவைப்பெறக் கூடிய நூல்களின் தொகுப்பு ஜனாதிபதியின் கரங்களினால் பாடத்திற்குப் பொறுப்பான ஆசிரியை அச்சினி கனிடுவெவவிடம் கையளிக்கப்பட்டது.

 

கல்லூரியின் சித்திரப்பாட ஆசிரியை நயனா விஜேகோனினால் வரையப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உருவப்படமும் இதன் போது ஜனாதிபதியிடம் வழங்கி வைக்கப்பட்டது.

 

இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க:

 

“நாம் ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டு நின்றால் உலகம் நம்மைக் கடந்து செல்லும்” என்ற பாடலை மேற்கோள் காட்டி கல்வி அமைச்சர் உரையாற்றினார். அதை மனதில் வைத்துத் தான் இன்று இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

 

20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கைத்தொழில்துறை யுகத்தின் அணுகுமுறைகளுடன் நாங்கள் நீண்ட காலமாக பணியாற்றினோம். அந்தf; கொள்கை அடிப்படையிலான அரசியலில் ஈடுபட்டோம். அதன் முடிவுகளை பற்றி இங்கு குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். அந்த  கொள்கை அடிப்படையிலான அரசியலில் ஈடுபட்டோம். அதன் முடிவுகளை பற்றி இங்கு குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.

 

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில், பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் கோவிட் தொற்றுநோய் காரணமாக நாம் வங்குரோத்தடைந்த நாடாக மாறினோம். ஆனால் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றும் திட்டத்தை இப்போது ஆரம்பித்துள்ளேன். அதனை எமது அரசாங்கம் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது.

 

ஒரு நாடு என்ற வகையில் மீண்டும் படுகுழியில் விழாமல் எப்படி முன்னேறுவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். 20ஆம் நூற்றாண்டின் மத்தியில் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகளைத் தொடர்வதா அல்லது புதிதாகச் சிந்தித்துப் புதிய பாதையில் செல்வதா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். பழைய முறையின் கீழ் சென்றால், ஒரே இடத்தில் சுற்றுவதற்குக் கூட நாடொன்று எஞ்சாது. ஏனென்றால் இன்று நாம் இருக்கும் இடத்தில் ஒரு பாரிய இடைவெளி இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.

 

இந்த நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கக் காத்திருக்கும் தலைமுறைக்கு இவ்வாறானதொரு நிலை ஏற்பட இடமளிக்க மாட்டோம் என்பதையும் கூற வேண்டும். எனவே தொழில்நுட்பத்துடன் புதிய பயணத்தை மேற்கொள்ள வேண்டும். 21ஆம் நூற்றாண்டின் தொழில் நுட்ப வளர்ச்சியை பற்றி நான் சொல்லத் தேவையில்லை.

 

நாங்கள் பாடசாலையில் கற்கும் போது கிராமங்களில் ஒரு தொலைபேசி கூட இருக்கவில்லை. ஆனால் இன்று அனைவரிடமும் கைபேசி உள்ளது. சிலரிடம் இரண்டு கைபேசிகள் இருக்கின்றன. அதுதான் நிகழ்ந்துள்ள மாற்றமாகும்.

 

இந்த மாற்றத்துடன் நாம் முன்னேறும்போது, நவீன தொழில்நுட்பத்தை நாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அதற்காக பல பாரிய பணிகளை செய்து வருகிறோம். மேலும், கல்வி அமைச்சு மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் அந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும் புதிய தொழில்நுட்ப முறைகளை முடிவு செய்ய வேண்டும். பிளாக்செயின் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு,ஜெனொம் விஞ்ஞானம் என இவை அனைத்தையும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

 

மேலும் இந்த தொழில்நுட்பத்தை கிராமத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். ஏனென்றால், புதிய தொழில்நுட்பத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் வகையில் விவசாயத்தை நவீனமயமாக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறோம். நவீன தொழில்நுட்பத்துடன் நாம் முன்னேறும் போது இன்னொரு விடயத்தையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். தொழில்நுட்பம் மட்டும் போதுமானதல்ல. இந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் பணம் தேவைப்படுகிறது. நாம் அனைத்து விடயங்களுக்கும் பணத்தை பயன்படுத்தும் சமூகம். இன்று அந்தப் பணம் மிகவும் திறந்த சந்தையில் பயன்படுத்தப்படுகிறது. பணப் பயன்பாட்டை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாது. அமெரிக்க அரசாங்கமோ அல்லது சர்வதேச நாணய நிதியமோ அதைச் செய்ய முடியாது.

 

அன்று டிஜிட்டல் தொழில்நுட்பம் இருக்கவில்லை. இலங்கைக்கு இணையத்தைப் பெற 1993 ஆம் ஆண்டில் நான் கையெழுத்திட்டேன். அதுவரை இந்த வசதிகள் எங்களிடம் இல்லை. இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் நாம் மிகக் குறுகிய காலத்தில் உலகத்துடன் இணைந்துள்ளோம்.

மேலும், போட்டித்தன்மையான பொருளாதாரத்தில், எல்லைகளைப் பற்றி கவலைப்படாத நிதி முறைமையே உள்ளது. இது நல்லதோ கெட்டதோ அதை மாற்ற முடியாது. இந்த எல்லையில் இருந்து நாம் செயற்பட வேண்டும். உலகிற்குத் தேவையான பணம் இறுதியாக சந்தையில் இருந்து பெறப்படுகிறது. வங்கிகள் தங்களுக்குத் தேவையான பணத்தை வங்கிகளிடமிருந்து பெறுகின்றன. நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான பணத்தை பங்குச் சந்தையில் இருந்து பெறுகின்றன. அதற்கேற்ப பணம் பயன்படுத்தப்படுகிறது.

 

இங்கே மிக முக்கியமான விடயம் பணம். தனியார் துறையைப் போலவே, அரசாங்கமும் பணச் சந்தையைத் தான் தேர்ந்தெடுக்கிறது. திறைசேரி முறிகளை பெறுகிறோம். இன்று இந்த முறையைப் பற்றி உங்களை அறிவூட்ட அதன் ஒரு பகுதியைத்தான் இன்று ஆரம்பித்துள்ளோம்.

 

அதேபோல் அடுத்த வருடத்திலிருந்து மத்திய வங்கி அறிக்கைகளை பாடசாலைகளில் ஆராய்வதற்கு எதிர்பார்க்கிறேன். அது தொடர்பில் நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். அதற்காக ஆசிரியர்கள் மற்றும் மாணவத் தலைவர்களை பயிற்றுவிப்பதோடு, வங்கி அதிகாரிகளின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ளவும் எதிர்பார்க்கிறோம். அதனால் புதிய முறைமைகள் தொடர்பில் நாம் அறிந்திருக்க வேண்டும். அறிவை பெற்றுக்கொடுப்பதற்கு மாத்திரமன்றி நிதிப் பயன்பாடு, பிணையங்கள் உள்ளிட்ட அனைத்தையும் கிராமங்கள் வரையில் கொண்டுச் செல்ல வேண்டும். கிராமங்களில் திறமையானவர்கள் உள்ளனர். அவர்களுக்கு அவசியமான அறிவை பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

 

இன்று முழு உலகமும் ஒரே சந்தையாக இயங்குகிறது. அதனுடன் நாமும் இணைந்துகொள்ள வேண்டும். அதற்காக பல சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களையும் கைசாத்திட வேண்டும். சிங்கப்பூர், இந்தியா, பங்களாதேஷ், தாய்லாந்து, இந்தோனேசியா, சீனா, மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். ஜப்பான், கிழக்காசியா, தென்கிழக்காசியா,அவுஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுடன் புதிய சந்தைக்குள் பிரவேசிக்க எதிர்பார்த்துள்ளோம்.

 

அதேபோல் அவசியமான வசதிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் நாம் ஐரோப்பிய சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இன்னும் இரு வாரங்களில் அமெரிக்க குழுவொன்று எம்முடன் பேச்சுவார்தைக்காக இலங்கை வரவுள்ளது. அதனால் உலக சந்தை மற்றும் அதற்கான ஒப்பந்தங்கள் தொடர்பில் நாம் அறிந்திருக்க வேண்டும்.

 

நாம் புதிய பசுமை பொருளாதாரத்தை கட்டியெழுப்ப போகிறோம். அதேபோல் டிஜிட்டல் பொருளாதாரத்தையும் கட்டமைப்போம். பசுமைப் பொருளாதாரத்திலும் பங்குப் பரிவர்த்தனை இருக்கும். அதற்குள் புதிய முறைமைகள் காணப்படும். அதேபோல் கடல்வழிப் பொருளாதாரம் ஒன்றை உருவாக்கவும் எதிர்பார்த்துள்ளோம். அது தொடர்பில் லண்டனிலுள்ள விசேட சட்டத்தரணிகள் சங்கத்தினருடன் கலந்துரையாடி சட்டங்களை உருவாக்கி வருகிறோம். நாம் புதிய பொருளாதார முறையுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டுமா முடங்கிக் கிடக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டும்.

 

இன்னும் 10-15 வருடங்களாகின்ற போது, இங்குள்ள பலரும் 25-35 வயதை அடைந்திருப்பீர்கள். அதனால் உங்களுடைய எதிர்காலம் தொடர்பில் இன்றிலிருந்தே தீர்மானிக்க வேண்டும். அதற்கு அவசியமான அறிவை நாம் பெற்றுத்தருவோம். அதற்கான வேலைத்திட்டத்தினையே இப்போது ஆரம்பித்திருக்கிறோம்.

தற்போது 100 பாடசாலைகள் மாத்திரமே இந்த வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் அந்த எண்ணிகையில் அதிகரிப்புச் செய்யப்படும். பங்குச் சந்தை, பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவிற்கு இயலுமை இருக்குமாயின் இந்த செயற்பாடுகளுடன் தொடர்ந்து கைகோர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒன்று அல்லது இரண்டு சங்கங்களை பொறுப்பேற்றுக்கொண்டு அவர்களுக்கு உதவிகளை வழங்குங்கள்.

இந்த வேலைத்திட்டத்தினை ஆரம்பிப்பதற்காக 10 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் ஒவ்வொரு பாடசாலைக்கும் ஒரு இலட்சம் என்ற அடிப்படையில் கிடைக்கும். அதனை தவிர்ந்த எந்தவொரு தொகையினையும் இந்த திட்டத்திற்காக செலவிட வேண்டாம். இதனை ஒரு இலட்சத்திற்கு மட்டுப்படுத்துங்கள். வருட இறுதியில் எந்த பாடசாலை சிறப்பாக செயற்பட்டுள்ளது என்பதை தேடியறிவோம். வேலைத்திட்டத்தினை சரியான முறையில் நிறைவு செய்யும் பாடசாலையின் 10 மாணவர்களுக்கும் விடயம் சார்ந்த ஆசிரியருக்கும் சிங்கப்பூர் பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் தொடர்பில் அறிந்துகொள்வதற்கான சுற்றுப்பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படவுள்ளது.

அதனாலேயே அந்த தொகையை ஒரு இலட்சத்திற்கு மட்டுப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டது. வறுமையான பகுதியாக இருந்தாலும் வளர்ச்சியடைந்த பகுதியாக இருந்தாலும் செலவு 1 இலட்சம் ரூபாவாக மட்டுப்படுத்தப்பட்டது. அதேபோல் இரண்டாம் மூன்றாம் இடங்களுக்கும் அந்த வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கிறோம். அதனூடாக புதிய பொருளாதார பாதைக்குள் பிரவேசிக்க முடியும். அதேபோல் 2048 இல் அபிவிருத்தி அடைந்த நாட்டை உருவாக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த பொறுப்புக்களை உங்களிடத்தில் கையளிக்கிறேன். இதற்கு பங்களிப்பு வழங்கி ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி.

நுகவெல கல்லூரிக்குள் நுழைந்த போது எனக்கு மற்றுமொரு விடயம் நினைவில் வந்தது. முன்னாள் கல்வி அமைச்சர் சீ.டபிள்யூ.டபிள்யூ. கண்ணங்கர அவர்களே மத்திய கல்லூரிகள் தொடர்பிலான யோசனையை அரச மந்திரிகள் சபையில் சமர்பித்து நிறைவேற்றினார். அதன் பலனாக பாராளுமன்ற தேர்தலில் ஹொரனை மக்கள் அவருக்கு தோல்வியை பரிசளித்தனர்.

அதுவே கல்வி அமைச்சர்கள் முகம்கொடுக்க வேண்டிய நிலைமையாகும். அதற்காக அடுத்த அரசாங்கத்தில் டீ.எஸ் சேனநாயக்க தெரிவுசெய்யப்பட்டார். ஏ.டி நுகவெல கல்வி அமைச்சராக தெரிவு செய்யப்பட்டார். அவர் 50 மத்திய கல்லூரிகளை நிறுவ உதவினார். நுகவெல மத்திய கல்லூரிக்கு மேலதிகமாக மேலும் 49 மத்திய கல்லூரிகளை உருவாக்கியமைக்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவர் உருவாக்கிய பாடசாலையொன்றில் புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதும் மகிழ்ச்சிகுரியதாகும். என்றார்.

பொருளாதார நிலைபேற்றுத் தன்மையை ஏற்படுத்த கல்வித்துறையில் முதல் மறுசீரமைப்பு !

நாட்டின் பொருளாதார நிலைபேற்றுத் தன்மையை அடையும் செயன்முறையில் துரிதமாக மறுசீரமைப்புக்களை அறிமுகப்படுத்த வேண்டிய முக்கிய துறையாக கல்வித்துறையை அரசு அடையாளங் கண்டுள்ளது.

அதற்கமைய, குறித்த அனைத்துப் பங்கீட்டாளர்களின் ஒத்துழைப்புடன் புதிய கல்விக் கொள்கைச் சட்டகத்தை தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.

அடுத்துவரும் 25 ஆண்டுகளுக்கான தேசியக் கல்விக் கொள்கைச் சட்டகம் மற்றும் ஏற்புடைய அனைத்து மறுசீரமைப்புக்களையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து முன்னுரிமை அடிப்படையில் அமுல்படுத்துவதற்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்குவதற்காக ஜனாதிபதி தலைமையில் மற்றும் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரின் பங்கேற்புடன் 10 உறுப்பினர்களுடன் கூடிய அமைச்சரவை உபகுழுவை நியமிப்பதற்காக ஜனாதிபதி  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

“ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்.” – எம்.ஏ.சுமந்திரன்

ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டு வரப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சியில் நேற்று மாலை (08) ஊடகங்களுக்கு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பாரிய பொருளாதாரச் சிக்கல் ஒன்று இந்த நாட்டை பீடித்திருக்கின்றது. அதிலிருந்து இந்த நாட்டை மீட்க போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறி வருகின்றார். அவ்வாறு நாடு மீண்டதாக ஒரு மாயத் தோற்றம் ஏற்படுத்தப்படுகின்றது. ஆனால் மிக விரைவிலே நாடு மிக மோசமான பொருளாதார சூழ்நிலைக்கு செல்ல இருக்கிறது. அப்படியான சந்தர்ப்பத்தில் திரும்பவும் மக்கள் போராட்டங்கள் வெடிக்கக்கூடும் என்ற காரணத்தினால் அதை கட்டுப்படுத்துவற்கு இந்தச் சட்டத்தை கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றனர். ஏனெனில் கடந்த காலங்களைப் போன்று மீண்டும் மக்கள் போராட்டங்கள் ஏற்படுகிற பொழுது அதனைக் கட்டுப்படுத்த அல்லது ஒடுக்குவதற்கு தற்போது ஜனாதிபதியின் கையில் இருக்கின்ற சட்டங்கள் போதாது என்று அவர் கருதுகின்றார்.

 

அதேபோன்று, பயங்கரவாத தடை சட்டங்களை பிரயோகித்தால் சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதியை மீறுவதாக அமையும் என்பதாலே ஐரோப்பிய ஒன்றியத்தினால் கொடுக்கப்படுகின்ற ஜீ.எஸ்.பி வரிச் சலுகை கூட இல்லாமல் போகின்ற நிலைமை ஏற்படும். ஆகவே புதியதொரு நல்ல விடயத்தை தாங்கள் செய்வது போல மிக மிக மோசமான ஒரு செயலையே செய்வதற்கு முனைகின்றனர். குறிப்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக காட்டிக் கொண்டு அதனை விட மோசமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமென்ற இந்தச் சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கின்றனர். அதாவது பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குகிறேன் என்று ஒரு மாயத் தோற்றத்தை காட்டிக் கொண்டும் சர்வதேச நியமங்களுக்கு அமையவே புதிய சட்டத்தையே கொண்டு வருகிறேன் என்பதற்காகவே இந்த முயற்சி எடுக்கப்படுகிறது.

இந்த சட்டம் கொண்டு வரப்படுவதற்கான உண்மையான நோக்கம் என்னவெனில் மக்கள் ஜனாதிபதிக்கு எதிராக அல்லது அரசாங்கத்திற்கு எதிராகவோ தமது எதிர்ப்பை காண்பிக்கின்ற போது அதனை இரும்பு கரம் கொண்டு அடக்குவதற்கான ஒரு கருவியாகத்தான் அல்லது முன்னெச்சரிக்கையாகத் தான் முன்கூட்டியே இந்த சட்டத்தை கொண்டு வருவதற்கு அரசாங்கம் முனைந்திருக்கின்றது. வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்பது அரசியலமைப்பை மீறுகின்றது. அவ்வாறு அரசியலமைப்பை மீறுகின்றது என்றோ அல்லது வேறு காரணங்களைக் கூறியோ நீதிமன்றம் சென்றாலும் அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்றும் நீதிமன்றம் சொல்லலாம். அதேநேரம் சர்வஜன வாக்கெடுப்பும் தேவை என்றும் கூட நீதிமன்றம் சொல்லலாம். ஆனால் இன்றைக்கு இருக்கின்ற நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு என்ற ஒன்றைத் தவிர மற்ற அனைத்தையும் அரசாங்கம் செய்யலாம். ஏனெனில் ஆளுங்கட்சியுடன் எதிர்க்கட்சியில் இருக்கின்ற சில தரப்புக்களும் இணையப் போவதாக அறிகின்றோம். ஆனாலும் இந்த அரசுக்கு இப்பொழுது மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாவிட்டாலும் எதிர்க்கட்சிகளில் இருக்கின்ற பலர் இப்போது கட்சிதாவுவதற்கு தயாராகின்றனர்.

அரசாங்கம் மூன்று இரண்டு பெரும்பான்மையை இலகுவாகவே பெற்றுக் கொள்ளலாம். ஆகையினால் அதை மட்டும் வைத்துக் கொண்டு நாம் இதனை தடுக்க முடியாது. ஆகவே அரசின் இந்தப் புதிய சட்டம் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களை மீறுகிறது என்பதை நாம் தெளிவாக சொல்லுகின்றோம்.

 

நாம் மட்டுமல்ல இன்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து பலரும் இந்த விடயங்களை கூறுகின்றனர். இதனால் ஜீ.எஸ்.பி வரிச் சலுகை கிடைக்காமல் போகலாம் என்பதும் தெரிந்த விடயம். அதன் மூலம்தான் இந்த சட்ட மூலம் இயற்றுகின்ற அரசின் யோசனையை மாற்றலாம் என்று நாங்கள் நினைக்கின்றோம். அதேபோல ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச நிறுவனங்களும் கூட இதனுடைய தாற்பரியத்தை அல்லது மோசமான தன்மையை உணர்ந்து அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். ஆகவே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கு நாங்கள் எப்படியாக நாடு பூராகவும் எழுச்சி ஏற்படுத்தினோமோ அதே போல் இந்த மோசமான சட்டத்தை தடுப்பதற்கு மக்களிடையே சென்று மக்கள் மத்தியில் விளக்கங்களை கொடுத்து ஒரு எழுச்சியை ஏற்படுத்த முனைகிறேன். இவ்வாறு நாட்டு மக்களிடத்தே இந்த விடயம் தொடரபில் கலந்துரையாடல்களையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி மக்கள் எழுச்சியை எடுத்துக் காட்டுவோமாக இருந்தால் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றாமல் தடுக்கலாம் என்று கருதுகின்றேன் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

திட்டமிட்டு சதிவேலை செய்த எம்.ஏ.சுமந்திரன் – க.வி.விக்னேஸ்வரன் அதிருப்தி !

ரணில் விக்ரமசிங்கவிற்கும் சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே இந்த சந்திப்பிற்கு அரச தரப்பில் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய தலைவர்களிற்கு முன்கூட்டியே தகவல் வழங்காமல், திடீர் அழைப்பு விடுக்கப்பட்டு, முறையற்ற ஏற்பாட்டுடன் நடத்தப்பட்ட இந்த கலந்துரையாடலுக்கு ஏனைய தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டு, ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

தம்மால் வர முடியாதென தெரிந்தும் சுமந்திரன் திடீர் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார். செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன் ஆகியோர் சார்பிலும் தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஜனாதிபதி செயலாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன்.

அத்துடன், எரிக் சொல்ஹெய்மை இந்த பேச்சில் இணைக்கும் நோக்கத்துடன் இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டால், இந்திய தரப்பிலிருந்து ஒரு பிரதிநிதியை தாம் அழைத்து வருவோம்.

இவ்வாறான நிலையில், ஏனைய தமிழ் கட்சிகளின் எதிர்ப்பையடுத்து, எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி பேச்சை நடத்த ரணில் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இனப் பிரச்சினைக்கான முழுமையான தீர்வு – ரணிலுக்கு ஆதரவு வழங்க தயார் என்கிறார் எம்.ஏ.சுமந்திரன் !

இனப் பிரச்சினைக்கான முழுமையான தீர்வு புதிய அரசியலமைப்பின் ஊடாக ஒரு வருட காலத்திற்குள்ளே செய்து முடிக்கப்படும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதியை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (25) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப் பிரச்சினைக்கான முழுமையான தீர்வு காண்பது தொடர்பான வேலை திட்டம் உடனடியாக நடைபெற வேண்டும். அதை ஜனாதிபதி முன்னெடுக்கின்ற போது எங்களுடைய முழுமையான இணக்கப்பாடும் முழுமையான ஆதரவும் அதற்கு இருக்கும் என்பதே எங்களுடைய உத்தியோகபூர்வ நிலைப்பாடாகும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக இருந்த காலப்பகுதியில் எவ்வளவு சேர்ந்து செயற்பட்டோம் என்பதை அவர் அறிவார். 2016 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து பாராளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்ட காலத்தில் இருந்து ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இதற்கான முன்னெடுப்புகள் வழிகாட்டல் குழு எல்லாம் அமைக்கப்பட்டது. அந்த வழிகாட்டக் குழுவிலே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் நானும் அங்கத்தவர்களாக இருந்திருக்கின்றோம்.

புதிய அரசியலமைப்பு தொடர்பான 2 இடைக்கான அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டன. 2019 ஜனவரி மாதம் இரண்டாவது இடைக்கால அறிக்கையோடு நிபுணர் குழுவினால் வரையப்பட்ட ஒரு முழுமையான அரசியலமைப்பு வரைவு கூட அப்பொழுது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கமினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து வந்து ஜனாதிபதி தேர்தலிலே ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக முன்நின்ற சஜித் பிரேமதாஸவுடைய தேர்தல் அறிக்கையிலே அந்த முயற்சியில் தொடர்ந்து செயற்பட்டு முடிவை எட்ட வேண்டும் என்று சொல்லப்பட்டது.

2016 ஆம் ஆண்டு அரசியலமைப்பு பேரவையாக உருவாக்கப்பட்டு பலவித கூட்டங்கள் கலந்துரையாடல்கள் மக்கள் சந்திப்புகள் செய்யப்பட்டு மாகாண சபைகளுடைய பிரதிநிதித்துவத்தையும் பெற்று விசேடமாக தென்பதியிலுள்ள ஏழு மாகாண சபைகளை உள்ளடக்கி வேலை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தொடர்ந்து முன் சொல்ல ஜனாதிபதி ஆவணம் செய்ய வேண்டும். கடந்த ஆட்சிக்காலத்திலே இந்த வேலை செய்யப்பட்டது. இதனை வெகு விரைவாக தொடர்ந்து முன்னெடுத்தால் ஒரு வருட காலத்திற்குள் இதனை முடிவுக்கு கொண்டு வரலாம். ஒரு வருடம் கூட தேவை இல்லை. அனைவருடைய இணக்கப்பாட்டோடு சகல மக்களுடைய ஆதரவோடு புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும்.

ஜனாதிபதியின் கருத்தை வரவேற்கின்ற நேரத்தில் இதற்கு முன்னர் பங்களித்ததை போலவே முழுமையான பங்களிப்பை கொடுப்போம் என ஜனாதிபதி அவர்களுக்கு சொல்லி வைக்க விரும்புகிறேன் என்றார்.

போர்க்காலத்தில் இறந்தவர்கள் எவராக இருந்தாலும் நினைவேந்த முடியும் – ஜனாதிபதி  ரணில்

போர்க்காலத்தில் இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த இனத்தவர்கள் அவர்களை அமைதியாக நினைவேந்த முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் ஒவ்வொரு வருடமும் நினைவேந்தல் நிகழ்வுகள் வரும்போது இன ரீதியான, மொழி ரீதியான, மத ரீதியான கருத்து மோதல்கள் வெடிக்கின்றன.

அந்த நிலைமை இனியும் தொடரக்கூடாது என்பதில் ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க உறுதியாகவுள்ளார். நினைவேந்தல்களை இறந்தவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த இனத்தவர்கள் அமைதியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

அந்த நிகழ்வுகள் அரசியல் நிகழ்ச்சி நிரல் உள்ளதாகவோ அல்லது இன ரீதியான கிளர்ச்சியைத் தூண்டுபவையாகவோ இருக்கக்கூடாது.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர “வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர்களுக்குச் சொந்தமானவை அல்ல. எனவே வடக்கு, கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிப் பயங்கரவாதிகளைப் போற்றித் துதிபாடவோ அல்லது அவர்களை நினைவேந்தவோ அனுமதி கிடையாது.” என தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

“புலிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய ரணில் “கோட்டா கோ கம“ போராட்டக்காரர்களுடன் பேச மறுப்பது ஏன்..? – முஜிபுர் ரகுமான் கேள்வி !

விடுதலைப் புலிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய ரணிலால் ஏன் ஆர்ப்பாட்டம் செய்யும் இளைஞர்களிடம் பேசமுடியவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“அன்று 2001 ஆம் ஆண்டு இந்த நாட்டில் ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா பண்டாநாயக்க தலைமையின் கீழ் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி ஏற்று அரசாங்கத்தை உருவாக்கியதன் பின்னர் இந்த நாட்டில் போராடிய விடுதலைப் புலிகளுடன் அவர்கள் சமாதான ஒப்பந்தம் செய்தனர்.

சமாதான ஒப்பந்தம் மட்டுமல்ல, அவசரகால சட்டத்தையும் அவர்கள் எடுத்தனர். அப்படியென்றால் அன்று அவர்களால் விடுதலைப்புலிகளுடன் சமாதான பேச்சுவார்த்தையை மேற்கொள்ள முடியும் என்றால், போராட்டக்காரர்கள்  அவர்களை விட மிக மோசமாக இருக்கின்றனரா? இன்று நாட்டில் இருக்கக்கூடிய இந்த இளைஞர்களுடைய ஜனநாய போராட்டம் என நாங்கள் இந்த அரசாங்கத்திடம் கேட்க விரும்புகின்றோம்.

முன்னாள் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் நாட்டில் ஏற்பட்ட பல பொருளாதார பிரச்சினைகளுக்கு எதிராக நாட்டில் இருந்த இளைஞர்கள் மக்கள் அனைவரினது போராட்டம் காரணமாக தான் அவர்கள் இருவரும் பதவி விலக வேண்டிய நிலை நாட்டில் உருவானது.

எனவே அதன் பின்னர் தான் நாடாளுமன்றில் இருக்கக்கூடிய உறுப்பினர்களால் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எனவே இன்று இந்த நாட்டில் நடக்கக்கூடிய இந்த அநியாயங்களுக்கு எதிராக, அவசரகால சட்டத்திற்கு எதிராக இந்த நாட்டில் இருக்கக்கூடிய இயக்கங்கள் பல கட்சிகள் பல தொழிற்சங்கள் செய்யக்கூடிய இந்த போராட்டத்திற்கு நாங்களும் ஆதரவு வழங்குகின்றோம்” எனத் தெரிவித்தார்.