சபாலிங்கம்

சபாலிங்கம்

மனித உரிமையும் ஜனநாயகமும் தனிச்சொத்துடமை என்கிறாரா பாண்டிபஜார் போராளி ராகவன்? இலக்கிய விமர்சகர் வாகீசன்

திரு.சின்னையா ராஜேஸ்குமார்(ராகவன்) அவர்களுக்கு,
‘தேசம்நெட்’ இதழில் வெளியாகியிருந்த ‘தோற்றுப் போனவர்களின் கதைகள்: ‘தோற்றுத்தான் போவோமா…’ தொகுப்பு மலர் மீதான ஒரு பார்வை – வாகீசன்’ என்ற எனது கட்டுரைக்கு எதிர்வினை ஆற்றியிருந்த தாங்கள் என்னை நோக்கி “எனது பெயரைக் கூடக் குறிப்பிட திராணியற்று என்னை பாண்டிபஜார் போராளி என்று கூறி என் மீது அவதூறு பரப்புகிறார்” என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அனைவரும் அறிவார்கள் கடந்த 2 வருடங்களாக தாங்களும் தங்களது இலண்டன் இலக்கியவாதியாகிய ஒரு நண்பரும் சேர்ந்து எனக்கு ‘தோழர் உஉ’ என்ற பட்டத்தை வழங்கி (நான் ‘உண்மைகள் உறங்குவதில்லை’ என்ற கட்டுரையொன்றினை எழுதியபடியால்) அந்தப் பெயரிலேயே என்னை நோக்கி செய்த அவதூறுகள் கொஞ்சநஞ்சமல்ல. இதற்குரிய Screenshot எல்லாம் என்னிடம் ஆதாரமாக உண்டு, வேண்டுமானால் பதிவிடத்தாயார். அப்போதெல்லாம் உங்களுக்கு எனது பெயரைக் குறிப்பிட திராணி இருக்கவில்லையா ??? எவ்வளவு கேவலமாக எல்லாம் என்னை விழித்திருந்தீர்கள். விஷப்பாம்பு என்றீர்கள். விஷக்கிருமி என்றீர்கள். ஒரு மனநோயாளி, சிகிச்சை அளிக்கப்பட வேண்டியவர் என்றீர்கள். அவதூறு என்பது உங்கள் போன்றவர்களுக்கு எல்லாம் இரத்தத்தில் ஊறிப் போன விடயம்.
நிற்க, இலண்டன் வந்த சபாலிங்கத்தை நீங்கள் சந்திக்க மறுத்ததாக நான் கூறிய விடயத்தை மறுத்த நீங்கள் “சபாலிங்கத்தை நான் சந்திக்க மறுத்ததாக அப்பட்டமான பொய் ஒன்றை உதிர்த்திருக்கிறார். சபாலிங்கம் எனக்கு சிறு வயதிலே பழக்கமானவர். எனது ஊர்க்காரரை தான் திருமணம் செய்து கொண்டார். அவரும் புஸ்பராஜாவும் லண்டன் வந்து என்னை சந்தித்து உரையாடினர். அது பற்றி ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியங்கள் புத்தகத்தில் புஸ்பராஜா படத்துடன் பதிவு செய்துள்ளார்.” என்று ஒரு அப்பட்டமான பொய்யினைக் கூறி புஸ்பராஜாவின் ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்ற புத்தககத்தில் இருந்து ஏதோ இரண்டு பக்கங்களை Photocopy செய்து பதிவேற்றி மக்களை எல்லாம் முட்டாள் ஆக்கியிருக்கிறீர்கள். ஒரு சாதாரண முகநூல் வாசகன் இதையெல்லாம் check பண்ணி பார்க்க மாட்டான் என்று தங்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் இப்படி ஒரு மாபெரும் மோசடியைச் செய்துள்ளீர்கள்.
இப்போது நான் குறிப்பிடுகிறேன். எனது கையில் உள்ள ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்ற நூலில் (இது 2ம் பதிப்பு) 590 ம் பக்கத்தில் (இந்தப் புத்தகத்தின் 1வது பதிப்பில் 560ம் பக்கம்) உங்களைச் சந்தித்தது பற்றி புஷ்பராஜா பின்வருமாறு குறிப்பிடுகிறார்
“—அதன் பின்பு 1993 ம் ஆண்டு நவம்பரில் லண்டனில் சந்தித்தேன். நீண்ட காலத்திற்கு பின் சந்தித்ததால் பல விடயங்கள் பேச வேண்டி இருந்தது. இருவரும் நீண்ட நேரமாகப் பேசினோம்—-“. இதில் சபாலிங்கம் குறித்தோ அல்லது சபாலிங்கத்துடன் அவர் உங்களை வந்து சந்தித்தது குறித்தோ எந்தத் தகவலும் இல்லை. இப்போது பகிரங்கமாக உங்களிடம் நான் ஒரு வேண்டுகோளை வைக்கின்றேன். நீங்கள் கூறியபடி சபாலிங்கத்துடன் வந்து உங்களைச் சந்தித்ததை புஷ்பராஜா தனது புத்தகத்தில் எழுதியுள்ளார் என்றால் அது நீங்கள் வைத்திருக்கும் புத்தகத்தில் எத்தனையாவது பக்கத்தில் உள்ளது என்ன கூறியிருந்தார் என்று பகிரங்கமாக தெரிவிக்க முடியுமா ??? முப்பது வருடங்களாக மக்களை ஏமாற்றியது போதும். நிறுத்திவிடுங்கள். இனியாவது தயவு செய்து மனந்திரும்புங்கள்.
._._._._._.
அசோக் யோகன் கண்ணமுத்துவின் பதிவில் இருந்து…
 
நண்பர் சபாலிங்கம் தமிழிழ விடுதலைப்புலிகள் தொடர்பாக ஒரு ஆவணம் எழுத எண்ணி, பல தரப்பினரை சந்தித்து உரையாடிக் கொண்டிருந்த காலம் அது. சபாலிங்கம் புலிகளால் 1994 ஆண்டு படுகொலை செய்யப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர், இவ் ஆவண முயற்சி தொடர்பாக இராகவனை சந்தித்து உரையாட லண்டன் சென்றிருந்தார். இரண்டு நாள் தங்கியிருந்து இராகவனோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முயன்றும், அவரால் முடியவில்லை. இராகவன் பக்கத்திலிருந்து எந்த தொடர்புகளும் அவருக்கு கிடைக்கவில்லை. மிகுந்த ஏமாற்றதோடும், இராகவன் மீது கடுங்கோபத்தோடும் பிரான்சிக்கு திரும்பியிருந்தார்.
 
இந் நிகழ்வு சபாலிங்கத்தின் மிக நெருங்கிய நண்பர்களுக்கு தெரிந்திருந்தது. லண்டனில் இருக்கும் அவரின் நெருங்கிய நண்பர்களுக்கும் இது தெரியும். இச் சம்பவம் எனக்கும் சபாலிங்கம் ஊடாக தெரிந்திருந்தது.
இராகவனோடு எனக்கு தொடர்பு ஏற்பட்ட காலத்தில் இச் சம்பவம் தொடர்பாக கேட்டிருந்தேன். சபாலிங்கம் லண்டன் வந்து, புலிகளின் ஆதரவாளர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்ததன் காரணமாக, சபாலிங்கத்தை தான் சந்திக்கவிரும்பவில்லையென்று என்று கூறினார்.
2007ம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற நண்பர் சபாலிங்கம் அவர்களின் நினைவுக் கூட்டத்திற்கு தலைமை தாங்க இராகவன் அவர்களை அழைத்திருந்தோம். அவர் மீது மரியாதை கலந்திருந்த காலகட்டம்.
 
இந்த தலைமை தாங்கல் தொடர்பாக சபாலிங்கத்தின் மிக நெருங்கிய நண்பர்கள் அதிருப்தியும், என் மீது கடும் விமர்சனங்களையும் கொண்டிருந்தனர்.
வாசன் இப் பிரச்சனையை எழுதிய போது, இராகவன் சபாலிங்கத்தை சந்திக்க விரும்பான்மைக்கான காரணத்தை (என்னிடம் சொன்னதை) சொல்லி இருக்கலாம். ஆனால், இதை மறைத்து, சபாலிங்கத்தை சந்தித்ததாக பொய் ஒன்றை கூறுகின்றார். தவறுகளை ஏற்றுக்கொள்வதில் ஏன் நமக்கு இத்தனை பொய்மை , கபடம், மோசடி .. ?
 
இராகவன் தன்மீது வைக்கப்படும் நேர்மையான – உண்மையான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அற்றவராகவே, புலிகளின் காலத்திலிருந்து இற்றைவரை தன் வாழ்வை தொடர்கின்றார்.
விமர்சனங்கள் வைப்பவர்களை மனநோயாளிகள் என்றும் அவதூறாளர்கள் என்றும் பட்டம் சூட்டி மகிழ்வது அவரின் உளவியல் மனப்பாங்காக இருக்கின்றது. இப் பட்டங்களை எனக்கும் அவர் அடிக்கடி தாராளமாக வழங்கி மனமகிழ்வு கொள்ளும் ஒரு மனநிலையை தொடர்ச்சியாக பேணுகிறார்.
இராகவன் அவர்களுக்கு ஒரு தாழ்வான வேண்டுகோள்; நாங்கள் இவ்வாறு முரண்பட்டு கொண்டிருப்பதை விடுத்து, நாம் எல்லோரும் சுயவிமர்சனங்களோடும், உண்மையோடும்- நேர்மையோடும் , பொது வெளி ஒன்றில் அனைத்து முரண்பாடுகளையும் பேசி உரையாடும் தளம் ஒன்றை உருவாக்குவோம். இவ் உரையாடலில் நானும் கலந்துகொள்ள விரும்புகிறேன். நீங்களும் அவசியம் வரவேண்டுமென விரும்புகின்றேன்.

தோற்றுப் போனவர்களின் கதைகள்: ‘தோற்றுத்தான் போவோமா…’ தொகுப்பு மலர் மீதான ஒரு பார்வை – வாகீசன்

‘தோற்றுத்தான் போவோமா….’ புகலிட தொகுப்பு மலரினை மீண்டுமொருமுறை மீள் வாசிப்புக்குட்படுத்தினேன். இது பிரான்சின் தலைநகர் பாரிசில் 1995 ம் ஆண்டு ஒரு மேதினத்திலன்று விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட தோழர் சபாலிங்கம் நினைவாக, சுமார் 5 வருடங்கள் கழித்து 1999 ம் ஆண்டு பிரான்சில் இருந்து சபாலிங்கம் நண்பர்கள் வட்டத்தினால் வெளியிடப்பட்டிருந்தது. புலிகளின் வரலாற்றில் ஒரு கறை படிந்த அத்தியாயமாக ஒரு கறுப்புப் பக்கமாக இன்றும் விளங்குகின்ற தோழர் சபாலிங்கத்தின் படுகொலை ஆனது அன்று புகலிட சமூகத்தில் பெரும் அதிர்ச்சியினையும் திகைப்பினையும் ஏற்படுத்தியிருந்த விடயம் நாம் அறிந்ததே. இந்த படுகொலையினால் அன்று இங்கு புகலிடத்தில் மனித உரிமைகளை முன்னிறுத்தி தீவிரமாக செயற்பட்டு வந்த புலி எதிப்பாளர்களின் செயற்பாடுகளில் ஒரு தடுமாற்றமும் பயப்பிராந்தியும் ஏற்பட்டிருந்தது. ஆயினும் சுமார் 5 வருடங்கள் கழித்து தற்கொலைக்கு ஒப்பான ஒரு செயலாக இம்மலர் வெளியீட்டினை நிகழ்த்திய ‘சபாலிங்கம் நண்பர்கள் வட்டம்’ அமைப்பினரின் இப்பணியினையும் இதன் பின் உள்ள அர்ப்பணிப்பையும் துணிச்சலினையும் நாம் மறுக்கமுடியாது.

அனைத்து அராஜகங்களுக்கும் வன்முறைகளுக்கும் எதிராகவும் மனித உரிமைகளுக்கு ஆதரவாகவும் வெளியிடப்பட்ட இத்தொகுப்பு மலரில் ஈழம், புகலிடம், தமிழகம் என்ற பரப்பில் இருந்த பல்வேறு விதமான படைப்பாளிகளினதும் சமூக செயற்பாட்டாளர்களினதும் படைப்புக்கள் வெளியாகியிருந்தன. இந்நூலின் முன்னுரையில் வெளியீட்டாளர்கள் ‘இது வெறும் புலிகளுக்கு எதிரான குரல் அல்ல. பல்வேறு விதமான அரச அடக்குமுறைகள், பெண்களின் மீதான வன்முறை, குழந்தைகளின் மீதான அடக்குமுறை, என அனைத்து மனித நேயமற்ற செயல்களுக்கு எதிராகவும் எமது குரல் ஒலிக்கின்றது’ என்று அழுத்தம் திருத்தமாக கூறுகின்றனர்.

‘காலம் தாழ்த்திய ஒரு அஞ்சலி’ என்று இதன் ஆரம்பப் பக்கங்களிலேயே சமுத்திரன் ஒரு பதிவினை எழுதுகிறார். உண்மைதான். இது ஒரு காலந்தாழ்த்திய அஞ்சலிதான். நாம் ஏற்கனவே மேலே கூறியபடி இம்மலரானது சபாலிங்கம் படுகொலை செய்யப்பட்டு 5 வருடங்கள் கழித்து மிகவும் தாமதமாகவே வெளியிடப்பட்டிருகின்றது. ஆயினும் மிகவும் காத்திரமாகவும் சிறப்பாகவும் செம்மையாகவும் வெளிவந்திருக்கின்றது.

அழகலிங்கம் எழுதிய ‘அராயகமும் மார்க்சியமும்’ தி. உமாகாந்தனின் ‘சரியும் சர்வாதிகார சாம்ராஜ்ஜியங்கள்’ போன்ற காத்திரமான கட்டுரைகள் இம்மலரை சிறப்பிக்கின்றன. ‘சிந்தனை: அக்கினிக்குஞ்சு’ என்ற தலைப்பில் பேராசிரியர் மு.நித்தியானந்தன் சிந்தனைக்கு அஞ்சும் மனிதர்கள் குறித்தும் அச்சமும் பீதியும் கொண்டு மாற்றுக் கருத்துக்களை கண்காணிக்கும் மனிதர்கள் குறித்தும் எழுதி ராஜினி திரணகமவின் படுகொலையுடன் தொடர்பு படுத்தி ஒரு சிறப்பான கட்டுரையினை எழுதுகிறார். ‘புலம் பெயர்ந்தது தமிழர்கள் மட்டுமல்ல, வன்முறைகளும்தான்…’ என்ற கட்டுரையில் அழகு குணசீலன் இதுவரை காலமும் புலம்பெயர் தேசங்களில் இடம்பெற்ற அராஜகங்கள், வன்முறைகள், படுகொலைகள், மாற்றுச் சஞ்சிகைகள், பத்திரிகைகள், மீதான தடைகள் பற்றியும் தேடகம் எரிப்பும் குறித்தும் ஒரு அட்டவணையுடன் கூடிய விரிவான கட்டுரை ஒன்றினை எழுதுகிறார். அசோக் யோகன் கண்னமுத்து ‘துடைப்பானின் குறிப்புக்கள்’ என்ற தனது பதிவில் தேசியவாத உணர்வுகள் எப்படி தேசியவெறியாக உருமாறி, அது எவ்வகையில் மற்றவர்களின் மீது மேலாண்மை செலுத்துகின்றது என்பதினை விளக்கி, எமது தேசிய இனப்பிரச்சினைகளின் தீர்வாக மார்க்சிய வழிப்பட்ட அணுகுமுறையினை ஆராய்கின்றார். ‘காலுடைந்த சிவில் சமூகமும் தமிழ் புத்திஜீவிகளும்’ என்ற கட்டுரையில் இன்றய தமிழ் சமூகத்தில் உள்ள புத்திஜீவிகளின் போலித்தனங்கள் குறித்து ஸ்பார்ட்டகஸ்தாசன் விரிவான கட்டுரை ஒன்றினை சேரன், சி.புஷ்பராஜா, சமுத்திரன், தமிழரசன், செ.கணேசலிங்கன், சுவிஸ் ரஞ்சி, ப.வி.சிறிரங்கன், ஜோர்ஜ் குருசேவ், முதலானோரின் அரசியல் கட்டுரைகளுடன் அருந்ததி, சேரன், இளைய அப்துல்லாஹ், நா.விச்வநாதன், தமயந்தி திருமாவளவன், சி.சிவசேகரம், சோலைக்கிளி, உமா, இளைய அப்துல்லாஹ், றஞ்சனி, அ.ஜ.கான், முத்துலிங்கம், செல்வம் அருளாந்தம், இந்திரன் போன்றவர்களது கவிதைகளும் தமயந்தி, உமா, தயாநிதி, ரவீந்திரன், நிருபா, சந்துஷ், நா.கண்ணன் ஆகியோர்களின் சிறுகதைகளும் இம்மலரில் இடம் பிடித்துள்ளன.

இன்று தீவிரமான புலி எதிர்ப்பாளர்களாக இருந்து புலிகளிற்கு எதிராக தமது உரத்த குரல்களை படைப்புக்களாக பதிவு செய்து வருகின்ற பலரது படைப்புக்கள் எதுவும் இதில் இடம் பெறாதது, இவர்கள் புலிகளின் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்த அழிவிற்கு பின்பாகவே தீவிரமான புலி எதிப்பாளர்களாக மாறி புலிகளிற்கு எதிராக கம்பு சுத்தப் பழகி இருக்கின்றார்கள் என்ற உண்மையினையும் எமக்கு எடுத்துச் சொல்கின்றது. முக்கியமாக இன்று சிங்கள இனவாத அரசின் ஒத்தோடியாக மாறி, இலங்கை அரசின் அனைத்து அராஜகங்களுக்கும் செயல்களுக்கும் ஒத்து ஊதுகின்ற பாண்டி பஜார் போராளி அன்று சபாலிங்கம் இலண்டன் வந்து அவரைச் சந்திக்க விரும்பியபோது அவரைச் சந்திக்க மறுத்ததும் இதனை சபாலிங்கம் பாரிசில் தனது தோழர்களிடம் வேதனையுடன் பகிர்ந்து கொண்டதும் எமது புகலிட வரலாற்றில் நாம் மறைக்க முடியாத உண்மைகள்.

இம்மலரானது உண்மையில் ஒரு இரண்டு தசாப்தகால ஈழ-புகலிட சமூக, பண்பாட்டு அரசியல் களங்களின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தினை வெளிப்படையாகப் பேசி நிற்கின்றது என்றே நாம் கருதுகின்றோம். சேரன் ‘காற்றை எதிர்த்து ஒரு காலடி’ என்ற ஒரு விரிவான கட்டுரையினை எழுதியிருக்கின்றார். அதில் அவர் இங்கு புகலிடத்தில் வெளியாகி இருந்த சிறுசஞ்சிகைகள் தவிர்ந்த அன்றைய அனைத்துப் பத்திரிகைகளும் புலிகளின் எதேச்சதிகாரங்கள், அராஜகங்கள் போன்றவற்றை எப்படி ஆதரித்து நின்றன என்பதினை தெளிவாக விளக்குகிறார்.

இதே வேளை இங்கு வெளியாகியிருந்த பெரும்பாலான சஞ்சிகைகள் அனைத்துமே புலி எதிர்ப்பாளர்களினாலேயே வெளி வந்திருந்தன என்பதுவும் நாம் மறுக்க முடியாத உண்மை. புலிகள் தமது இராணுவ வெற்றிகள் மூலமும் அர்ப்பணிப்புக்கள் தியாகங்கள் மூலமும் கட்டிக் காத்து வந்த பிம்பங்களை கட்டவிழ்ப்பதில் இவர்கள் மிக வெற்றிகரமாகச் செயற்பட்டார்கள் என்பதும் அதனை இவர்கள் இறுதிவரை சாதித்துக் காட்டினார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. அத்துடன் புலிகளின் ஜனநாயக விரோத செயற்பாடுகளிற்கு எதிராக குரல் கொடுத்த இவர்களது பல்வகை அமைப்புக்களிலும் கூட ஜனநாயக விரோதப் பண்புகளே கோலோச்சி இருந்தது என்பதுவும் வரலாறு இன்று எமக்குக் காட்டி நிற்கும் உண்மைகள். இவர்கள் புலிகளின் பிம்பங்களை சிதைப்பதற்காக அவர்களிக்கு எதிராக பல்வேறு பிம்பங்களை சிருஷ்டித்தார்கள். ஆனால் அந்த பிம்பங்களின் பின்னால் உள்ள அதிர்ச்சிகரமான முகத்திலறையும் உண்மைகள் இப்போது ஒவ்வொன்றாக வெளி வந்து இன்று அந்த பிம்பங்களும் ஒவ்வொன்றாகச் சிதைவடையும் போது எமது அறிவு ஜீவிகளின் ஒரு 3௦ வருட கால ஏமாற்று வேலைகளும் பித்தலாட்டங்களும் எம்மை அதிர்ச்சியடைய வைக்கின்றன.

தோழர் சபாலிங்கத்திற்கு அர்ப்பணம் செய்யப்படுள்ள இந்த அஞ்சலி மலரில் சபாலிங்கம் குறித்ததான எந்த விபரங்களோ அல்லது அவரது வாழ்க்கை வரலாறுகளோ இதில் இணைக்கப்படாதது கொஞ்சம் ஏமாற்றத்தினை அளிப்பதினை இங்கு அவசியம் குறிப்பிட்டேயாக வேண்டும்.

இம்மலர் வெளிவந்து இன்று 20 வருடங்களாகின்றன. வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது ஏமாற்றமும் சோகமும்தான் எஞ்சுகின்றது. இந்த தொகுப்பில் தமது படைப்புகளை வெளிக்கொணர்ந்த தி.உமா காந்தன், திருமாவளவன், சி.புஷ்பராஜா, செ.கணேசலிங்கன் போன்றோர் இன்று உயிருடன் இல்லை. தோழர் அ.ஜ.கான் மிக அண்மையில்தான் தமிழகத்தில் கோவிட் 19 தொற்றுக்குள்ளாகி மரணமடைந்து, எம்மையெல்லாம் துயரத்தில் ஆழ்த்தி இருந்தார். இதில் எம்மை அதிக துயரத்திலும் வேதனையிலும் ஆழ்ந்தும் விடயம், அன்று இந்த இதழில் தமது படைப்புக்கள் மூலம் அதிகாரத்திற்கு எதிராகவும், படுகொலைகள், வன்முறைகள் என்பவற்றிட்கெதிராகவும் தமது உரத்த குரல்களை பதிவு செய்த பலரும், இன்று இலங்கை பேரினவாத சிங்கள அரசின் ஆதரவாளர்களாக மாறி இலங்கை அரசின் அராஜகங்களையும் படுகொலைகளை நியாயப்படுத்தும் மனிதர்களாக மாறியுள்ளமைதான். இவர்கள் இன்றும் சிங்கள பேரினவாத அரசு ஈழப்போரின் இறுதியில் நிகழ்த்திய இனப்படுகொலையை அது இனப்படுகொலை இல்லை என்று மறுதலிப்பவர்களாகவும், அந்த அரசின் அனைத்து வகை செயற்பாடுகளிற்கும் ஆதரவளிப்பவர்களாகவும் மாறியுள்ளமை உண்மையில் எம்மை திகைப்பில் ஆழ்த்தும் விடயங்களாகும்.

இதற்குமப்பால் இவர்களில் பெரும்பாலோர் மற்றவர்களின் மாற்றுக் கருத்துக்களுக்கு சிறிதேனும் மதிப்பளிக்காதவர்களாக, ஜனநாயகம், பேச்சு சுதந்திரம் குறித்து எந்தவித அக்கறையுமற்றவர்களாக, தம் மீதான சிறு அளவு விமர்சனங்களை கூட ஏற்றுக் கொள்ளாதவர்களாக, மற்றவர்களின் மீது வசை பாடுபவர்களாக, அந்த வசைகளை பாடுவதற்காக எந்த எல்லைகளையும் மீறுபவர்களாக தொடர்ந்தும் இருந்து வருவது எமக்கு தொடர்ந்தும் வேதனையளிக்கும் விடயங்களாகும். இவர்களது இன்றைய இத்தகைய செயல்கள் இவர்களது அன்றைய செயற்பாடுகளை சந்தேகக் கண் கொண்டு பார்க்க வைக்கின்றது. இவையாவும் இன்று எம்மை இவர்களது அன்றைய எழுத்தக்களை மீண்டும் ஒரு மறுவாசிப்பிற்கு உட்படுத்தப் பட வேண்டிய அவசியத்தினை எம்மிடம் வலியுறுதி நிற்கின்றது. இதற்குமப்பால் இவர்களில் சிலர் இன்று புலி ஆதரவாளர்களாக, அனுதாபிகளாக மாறியிருப்பதுவும் கூட வரலாற்றின் ஒரு முரண்நகையே.

முடிவாக, ‘தோற்றுத்தான் போவோமா…’ என்று அறைகூவல் இட்டு பல தசாப்த காலங்களாக அராஜகங்களுக்கும் வன்முறைகளுக்கும் எதிராகவும் மனித உரிமைகளிற்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வந்த இவர்கள், இறுதி யுத்தத்தில் புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு முன்பாகவே தம்மளவில் தாமே தோற்றுப் போயிருந்தது எமது வரலாற்றின் ஒரு துயர சம்பவமே.

தோல்விகளின் வரலாறுகளையே தொடர்ந்தும் எழுதுவதுதான் எமது தலையெழுத்தா என்ன ???

முரண்பாடுகள், படுகொலைகள், மரணங்கள் – சபாலிங்கம் முதல்… புலம்பெயர் இலக்கியச் சூழல்: பாகம் 33

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 33 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 13.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

தேசம்: தோழர் திரும்பவும் நாங்க அந்த புலம்பெயர் அரசியல் சூழல் பற்றி கதைப்பம். கிட்டத்தட்ட 92 இலிருந்து 30 ஆண்டுகள் புலம்பெயர் அரசியல்ல இருந்திருக்கீங்கள். இந்த அரசியல் சூழலில் பெரிய மாற்றங்கள் வந்துட்டு. 92 ல இருந்து 2010 மட்டுமான 20 ஆண்டுகள் புலிகள் அதிகாரத்தில் இருந்த காலகட்டம். புலிகள் கட்டுப்பாட்டில் தான் புலம் பெயர்ந்த தேசங்களும் இருந்தது. அதுக்கு பிறகு புலிகள் இல்லாத காலகட்டம். நாங்க அந்த முதல் காலகட்டத்தை பார்ப்போம். அந்தக் காலகட்டம் கூட புலிகள் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. இங்கேயும் அரசியல் கருத்துக்களுக்கான சுதந்திரமின்மை ஒன்றும் இருந்தது. அதுகள பற்றி கொஞ்சம் சொல்லுங்க. ஏனென்டா நிறைய பேருக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது எவ்வளவு தூரம் அபாயகரமானதாக இருந்தது?

அசோக்: 92 களில் புலிகளின் அதிகார ராஜ்ஜியமாகத்தான் இருந்தது. சுதந்திரம் அற்ற தன்மை தான். புலிகள் பற்றி எதுவும் வெளிப்படையாகப் பேசமுடியாத சூழல். எங்கும் எதிலும் புலிகள்தான். அவங்களின்ற உளவு வலைப்பின்னல், கொலைக்கரங்கள் இங்க எல்லா இடங்களிலும் வியாபித்துக் கொண்டிருந்த காலம் அது. சிறுபத்திரிகைகள் வெளியிட இயலாது. புலிகளின் இந்த கருத்துச் சுதந்திர மறுப்பு, அடாவடித்தனங்களுக்கு எதிராக வெளிவந்து கொண்டிருந்த புகலிட இலக்கிய சஞ்சிகைகளின் வருகையும் இக்காலங்களில் குறைந்துவிட்டது. புலிகளுக்கு எதிரான ஒரு குரலா ஒலித்துக்கொண்டிருந்தது அந்த நேரத்துல இலக்கியச் சந்திப்புகள் தான்.

தேசம்: அது யார் தொடங்கினது…? எப்படி தொடங்கியது…?

அசோக்: அது ஜெர்மன்ல தான் 1988ல் ஆரம்பத்தில் தொடங்கப்பட்டது. சிறுபத்திரிகை ஆசிரியர்கள் படைப்பாளிகளின், இலக்கிய ஆர்வலர்களின் ஒன்று கூடலாகத்தான் இந்த இலக்கிய சந்திப்பு ஆரம்பத்தில் இருந்ததென நினைக்கிறேன். ஜெயரெத்தினம் என்ற இலக்கிய ஆர்வலரின் முன் முயற்சியால் இச்சந்திப்பு தொடங்கப்பட்டது. இதில் தோழர்கள் சிறி ரங்கன், பரா, பார்த்தீபன், பாரதி, சுசிந்திரன், சந்தோஷ், வாணிதாசன், ராகவன், சிவராஜன் போன்றவங்க முக்கியமானவர்களாக இருந்திருக்கிறாங்க. உண்மையில் இந்த இலக்கிய சந்திப்பின் வரலாற்றை சொல்லக்கூடியவர்கள் இவங்கதான். அது காலத்துக்கு காலம் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

தேசம்: அது எப்ப பாரிசுக்கு மாறுது…

அசோக்: 92 பாரிசில் நடந்த சந்திப்பில் தான் நான் முதலாவதாக கலந்து கொள்ளுறன். அந்த இலக்கிய சந்திப்பை பொறுப்பெடுத்து பாரிசில் நடத்தியவர்கள் கலைச்செல்வன், லஷ்மி, புஸ்பராஜா, சபாலிங்கம் போன்ற தோழர்கள்தான்.

நிறைய அரசியல் இலக்கியம் சார்ந்த நண்பர்களின் தொடர்வும் அறிமுகமும் இந்த இலக்கிய சந்திப்பில்தான் ஏற்படுகிறது. சபாலிங்கம் 94 மே யில புலிகளால படுகொலை செய்யப்படுகிறார்.

தேசம்: சபாலிங்கத்தை ஏன் புலிகள் கொலை செய்கிறார்கள்…?

அசோக்: சபாலிங்கம் ஆரம்ப காலத்திலேயே விடுதலைப் புலிகளோடு நெருக்கமான உறவில் இருந்தவர். இலங்கையில் மாணவர் பேரவையின் முக்கிய செயற்பாட்டாளராக இருந்தவர். ஒரு தடவை பிரபாகரன் காயப்பட்ட போது சபாலிங்கம் தான் அவரை காப்பாற்றி எல்லா உதவியும் செய்தவர்.

தேசம்: இலங்கையிலயோ…?

அசோக்: ஓம் இலங்கைல. அந்த காலகட்டத்தில் பிரபாகரனுக்கும் சபாலிங்கத்திற்கும் நெருங்கிய உறவு இருந்திருக்கிறது. அப்ப பிரபாகரனோட பலமும் பலவீனமும் சபாலிங்கத்துக்கு தெரியும். அவர் ஆவண சேகரிப்பாளர். அத்தோட அகதி தஞ்சம் கோருகின்றவர்களூக்கு உதவிகள் செய்றது. மனித உரிமைவாதி அவர். மனித உரிமைவாதி என்றால் புலிகளுக்கு சார்பாக இருக்க முடியாதுதானே. அப்ப விடுதலைப் புலிகளுக்கும் அவருக்கும் நிறைய முரண்பாடுகள் இருந்தது. அந்த நேரத்தில் அவர் தன்னைப்பற்றி ஒரு பயோகிராபி எழுத வெளிக்கிட்டவர். அவர் துணிந்தவர் நேரடியா ஓபனா கதைப்பார். அவர் பிரபாகரனை பற்றிய விமர்சனங்களை வெளிப்படையாக வைத்துக்கொண்டிருந்தவர்.

பரிஸ் இலக்கியச் சந்திப்புக்கு பிறகு சுவிஸ்ல இலக்கியச் சந்திப்பு நடந்தது. அதுல சபாலிங்கம், புஸ்பராஜா, கலைச்செல்வன், லச்சுமி எல்லாம் கலந்து கொள்கிறாங்க. அங்க நடந்த உரையாடலின் போது சபாலிங்கம் புலிகள் தொடர்பிலான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அது எப்படியோ புலிகளுக்கு…,

தேசம் : பொறுங்கோ இது தனிப்பட்டமுறையில நடந்ததா…?

அசோக்: இல்லை. இது இலக்கிய சந்திப்பில் நடந்தது.

தேசம்: தனிய புலிகள் மீது மட்டும் வச்சாதான் இல்ல பிரபாகரன் மீதும் அந்த விமர்சனத்தை வச்சாரா…?

அசோக்: புலிகள் வேற – பிரபாகரன் வேற இல்ல தானே. அந்த விமர்சனங்கள் ரெண்டுபேரையும் நோக்கி தான் போயிருக்கும். அது வந்து நான் நினைக்கிறேன், இவர் பயோகிராபி எழுதுற கதை வந்த காலகட்டங்களில் இவருடைய இந்த விமர்சனங்களும் அவங்களுக்கு ஒரு எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கும். அதுக்குப் பிறகுதான் இந்த படுகொலை நடந்தது.

தேசம்: அப்ப இந்த குறிப்பிட்ட சம்பவம் – குறிப்பிட்ட நிகழ்ச்சி தான் இதற்கு பிரதான காரணமாக இருந்தது…?

அசோக்: அந்த நிகழ்ச்சி ஒரு தூண்டுதல். ஆனா அவர் நீண்ட காலமாகவே புலிகளுக்கு எதிரானவராக புலிகளின் மனித உரிமைமீறல்கள், படுகொலைகள் தொடர்பாக கடும் விமர்சனங்கள் அவருக்கு இருந்தது.

தேசம்: அப்போ அவர் எழுதியிருக்கிறார் நிறைய ஏற்கனவே…?

அசோக்: அவர் எழுதியது குறைவு. அது சம்பந்தமான டொக்கியூமென்ற்ஸ் எல்லாம் சேமித்து வைத்திருந்தார். புலிகளுடைய படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான எல்லா ஆவணங்களையும் சேர்த்துக் கொண்டிருந்தவர். அடுத்தது புலிகள் மாத்திரமல்ல, புதியதோர் உலகம் இருக்குதானே. புளொட்ல நடந்த படுகொலைகள் தொடர்பாக கோவிந்தன் என்ற பெயரில் தோழர் கேசவன் எழுதின புத்தகம், அதைக் கூட இங்க ரீ பிரின்ட் போட்டவர். இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆவணங்களை எல்லாம் அவர் சேர்த்தவர். அவர் புலிகளுக்கு எதிரா மாத்திரமில்லை அனைத்து மனித உரிமை மீறல்களுக்கும் எதிராகவும் இருந்தவர். கூடுதலா அந்த நேரத்தில் புலிகள் அதிக படுகொலைகளையும், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்ததால அவருடைய கவனம் அவர்கள் மீது போனது.

தேசம்: அவருடைய கொலை வந்து எவ்வளவு பெரிய தாக்கத்தை புலம்பெயர் தேசங்களில் ஏற்படுத்தியிருந்தது..?
அசோக்: அது ஜெயபாலன், நிறைய பேரை பயமுறுத்தி போட்டுது.

தேசம்: சபாலிங்கம் படுகொலை தான் முதன்முதலில் இலங்கை, இந்தியாவுக்கு வெளியே நடந்த முதல் படுகொலை என நினைக்கிறேன்.

அசோக்: ஓம் புலம்பெயர் தேசத்தில் நடந்த முதல் படுகொலை. அந்தப் படுகொலைக்கு பிறகு சுதந்திரமா பேசுற தொணி எல்லாம் ஆட்களுட்ட குறைஞ்சு போய்விட்டது. ஏன் சபாலிங்கம் செத்தவுடனயே துண்டுப்பிரசுரம் வெளியிடுவதற்கு கூட யாருமே முன்வரவில்லை தானே. அந்த நேரம் மனிதம் குரூப் இருந்தது சுவிஸ்ல, அவங்க தான் முதன்முதலில் சபாலிங்கம் படுகொலை பற்றி கடுமையான அறிக்கை விட்டவங்க. அது மாதிரி இங்க பாரிசில் நாங்க ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தனாங்க. அந்த அறிக்கைய துண்டுப் பிரசுரத்தை விநியோகிக்க ஆக்கள் எவருமே வரவில்லை. பயம் நிறைய பேருக்கு. கடைசியில் நானும், இப்ப லண்டன்ல இருக்க நாவலனும் தான் வினியோகித்தம். அப்படியான நெருக்கடிதான் இருந்தது. அதுக்குப் பிறகு நாங்கள் சபாலிங்கம் காலமாகி ஒரு மாதத்தில் அஞ்சலிக் கூட்டம் நடாத்தினோம். அஞ்சலி கூட்டத்துக்கு வருவதா நிறைய பேர் சொன்னவங்கள். எதிர்பார்த்த அளவுக்கு யாருமே வரல. பேசுவதா ஒப்புக்கொண்ட ஆக்கலும் கூட வரல. கடைசியா நானும் தோழர் அழகிரி, சுகன், யோகராஜா நாங்க தான் பேசினது. நான் நினைக்கிறேன் ஒரு 15 பேர் தான் வந்திருப்பாங்க. அதுவும் பயந்து பயந்து வந்தவங்க. யாருமே வரல. அப்படி ஒரு பயத்தை அது கொடுத்திருந்தது.

தேசம்: இந்தக் கொலை சம்பந்தமாக யாராவது கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருந்ததா…?

அசோக்: அந்த வழக்கில் யாருமே கைது செய்யப்படவில்லை. வெளி நாட்டவர்கள், அகதிகள் மத்தியில் இதுபோன்ற படுகொலைகள் நடந்தால் இந்த அரசுகள் பெரிய கவனம் கொள்ளாது. தங்களுக்கு பாதிப்பு வந்தால் மட்டும்தான் கவனம் கொள்ளுவாங்க.

தேசம்: பிரித்தானியாவிலும் அப்படியான சம்பவங்கள் நடக்கிறதுக்கான வாய்ப்புகள் …

அசோக்: ஓம். குறைவு.

தேசம்: குறைவு எண்டில்ல அப்படி நடந்திருந்தால் கைதுசெய்யப்பட்டு இருப்பாங்க. தப்பி போவதற்கான வாய்ப்பு இல்லை. பிரான்சுல இத கண்டும் காணாம விடுறது. தங்களுக்குள் மோதிக் கொண்டு போகட்டும் என்று…

அசோக்: ஓம். அவங்களைப் பொறுத்தவரை தங்கள் சமூகததை, தங்கள் சட்டம் பாதுகாப்பை பாதித்தால், தங்களோட அரச நிர்வாகத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் பட்சத்தில் நடவடிக்கை எடுப்பாங்க. அதுவரை அது அவங்களுக்கு வெளிநாட்டார் பிரச்சனைதான். அது எங்க சமூகத்தோட பிரச்சனை. எத்தனை படு கொலைகள் நடந்தது. ஒரு தடவை யோகராஜா என்ற தோழரை புலிகள் தாக்கினாங்க. அவர் EPRLF தோழர். அவரும் நானும், நாவலனும் போய் பொலிசில் முறையிட்டோம். பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவங்களைப் பொறுத்தவரை இது தங்கட பிரச்சனை அல்ல. வெளிநாட்டார் பிரச்சனை. இப்படி பல சம்பவங்கள்…

தேசம்: அதனாலதான் புலிகளுடைய படுகொலை கடைசியானதுமில்ல. தொடர்ச்சியாக நடந்து கொண்டு இருந்தது.

அசோக்: ஓம்.

தேசம்: பாரிஸில் தான் கூடுதலான படுகொலைகள் நடந்தது. நாதன் படுகொலை …

அசோக்: ஓம். புலிகளுடைய படுகொலைகள் எல்லாம் வந்து, அரசுகள் பெருசா கவனத்தில் எடுத்து எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல. அது அவங்களுக்கு சாதகமா போய்விட்டது. அடுத்தது ஆட்களைக் கடத்திக் கொண்டு போய் அடிக்கிறது தொடர்பான பிரச்சனைகளும் இருந்தது தானே. இங்க மாத்திரம் இல்லை, அதை எல்லா இடங்களையும் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

தேசம்: அடிக்கிறது நடந்திருக்கிறது. ஆனா கொலை அளவுக்கு மற்ற நாடுகளில் போகல.

அசோக்: அந்த சூழல் பெரிய மோசமான ஒரு சூழல் தான். அதுக்குப் பிறகுதான் சிறு சஞ்சிகைகள் வெளியிடுவதற்கான தயக்கம் நிறைய பேர்கிட்ட வந்தது.

தேசம்: அப்படியிருந்தாலும் பரிஸில நிறைய இலக்கிய ஈடுபாடு நடந்தது. அந்த நேரம் ஒரு காலகட்டம் வரைக்கும் – நான் நினைக்கிறேன் 2007 வரைக்கும் புலம்பெயர் இலக்கியத்தின் ஒரு மையமாக பரிஸ் இருந்தது என்டு.

அசோக்: ஓம் ஆரம்பத்தில் மனோ ‘ஓசை’ சஞ்சிகையை வெளியிட்டவர். நான் வந்து முதன்முதல்ல அவருடைய சஞ்சிகையில தான் துடைப்பான் என்ற பெயரில் எழுதினனான். ஒரு இலக்கிய உறவு அவரோட தான் ஏற்பட்டது. ஓசை சஞ்சிகைக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடி வந்தபோது தோழர் சபாலிங்கம்தான் உதவினவர். சபாலிங்கம் படுகொலைக்கு பிறகு ஓசை வெளிவரவில்லை. பிறகு மனோ ‘அம்மா’ என்றொரு சஞ்சிகை கொண்டு வந்தவர்.

தேசம்: அம்மாவுல தான்; நீங்க சேனன்…?

அசோக்: சேனன், வின்சென்ட் ரபேல் பலரும் எழுதினாங்க. நான் எழுதல்ல. அது சிறு கதைகளுக்காக கொண்டுவரப்பட்ட சஞ்சிகை. சபாலிங்கத்தின் படுகொலை அரசியல் எழுத்துக்களை கொண்டு வரும் பயத்தை கொடுத்து விட்டது.

தேசம்: அது 2000க்கு முன்பே வந்துட்டுதா…?

அசோக்: ஓம் வந்துட்டுது. அதோட அரவிந்தன், முகுந்தன், எல்லாருமாக சேர்ந்து ‘மௌனம்’ என்ற சஞ்சிகையை வெளியிட்டாங்க.

பிறகு ‘எக்ஸில்’ வந்தது. லட்சுமி, கலைச் செல்வன், ஞானம், விஜி, கிருஸ்ணராஜா ஆட்கள் சேர்ந்து இந்த சஞ்சிகையை கொண்டு வந்தாங்க. பிறகு அதுல முரண்பாடுகள் ஏற்பட்டு பிரிந்து, அதுக்கு பிறகு லட்சுமி கலைச்செல்வன் ‘உயிர் நிழல்’ என்ற சஞ்சிகையை கொண்டு வராங்க. பரிஸ் வந்து ஒரு அரசியல் இலக்கிய மையமாக இருந்தது.

தேசம்: 2007-2010 பரிஸ் ஒரு முக்கிய மையமாகத் தான் இருந்தது.

அதே நேரம் பரிஸ் ஒரு இலக்கிய அரசியல் முரண்பாட்டின் மையமாகவும் இருந்தது.

அசோக்: ஓம்… ஏனென்றால் இங்க வந்து அரசியல் இலக்கிய பிரக்ஞை உள்ள ஆட்கள் நிறைய பேர் இருந்தாங்கள். புலிகளோட நெருக்கடி இருந்த அந்த காலங்களில் எங்களுக்குள்ள அதற்கெதிரான ஒரு உத்வேகம் ஒற்றுமை இருந்தது. அதே நேரம் நீங்க சொல்வதுபோல் எங்களுக்குள்ளும் முரண்பாடுகள் இருந்தன.

தேசம்: புலிகளுடைய காலத்தில் புலிகளின் இந்த செயற்பாடுகள். உங்களுக்கு ஒரு ஊக்க சக்தியாகவும் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.?

அசோக்: புலிகளுடைய அடக்குமுறை என்பது ஐரோப்பிய நாடுகளில் எல்லா இடங்களிலும் பரவித்தானே இருந்தது. இதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது தானே… அதற்கு எதிரான பிரச்சாரங்களை செயற்பாடுகளை மிகத் தீவிரமாக முன்னெடுத்தோம். இன்று புலி எதிர்ப்பு பேசுகிற பலரை அந்தக் காலத்தில் நான் கண்டதே இல்லை. 2009க்கு பிறகு நிறைய புலி எதிர்ப்பாளர்களை சந்திக்கிறன். இப்போ பேசுறது பிழை இல்ல. ஆனா அந்தக் காலத்துல அவங்களோட குரல் புலிகளுக்கு எதிராக ஒலிக்கவில்லை.

தேசம்: ஒலிக்க வேண்டிய காலத்தில் அது ஒலிக்கல்ல. ஒரு சந்தர்ப்பவாதமா தான் பார்க்க வேண்டியிருக்கு.

அசோக்: ஓம்.

தேசம்: அப்படி யாரைப் பார்க்கிறீர்கள் நீங்கள்…?

அசோக்: பெயர்கள் வேண்டாம். நிறைய பேர் இருக்கிறார்கள் அப்படி.

அந்த நேரத்தில கலைச்செல்வனும் நண்பர்களும் சேர்ந்து பள்ளம் என்றொரு இலக்கிய சஞ்சிகையை வெளியிட்டாங்க. இதற்காக புலிகள் கலைச் செல்வனைக் கடத்தி சென்று சித்திரவதை செய்தாங்க. இப்படி புலிகளின் வன்முறைக்கலாச்சாரம் இங்க இருந்தது.

தேசம்: கலைச்செல்வன் உங்களுடைய நெருங்கிய நண்பர்.

கலைச்செல்வன் எனக்கு மாத்திரம் அல்ல பலருக்கும் நெருங்கிய நண்பனாக இருந்தவர். உதவும் குணத்திற்கும், ஆபத்தில் உதவுவதற்கும் உதாரணம் காட்டமுடியும் என்றால் அது கலைச்செல்வனாகத்தான் இருக்கமுடியும். நிறைய தோழர்களிடையே நல்ல உறவு இருந்தது. ஒரு காலகட்டத்தில் மிக தீவிரமாக எல்லோரும் வேலை செய்தார்கள். அவர்களுடைய அந்த அராஜகங்களுக்கு எதிரான குரலையும் நடவடிக்கையும் நாங்கள் மறுக்க இயலாது.

தேசம்: அதை யாரும் மறுப்பதற்கில்லை.

அசோக்: அடுத்தது புஸ்பராஜா தோழர். எல்லாருக்கும் ஊக்கமாக இருந்தவர் அவர் சபாலிங்கத்தின் மிக நெருங்கிய நண்பராக இருந்தவர். சபாலிங்கம் படுகொலை செய்யப்பட்ட காலகட்டத்தில் மிக நெருக்கமாக இருந்தவரும் அவர்தான்.

தேசம்: மற்றது அவருடைய ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்ற வரலாற்று நூலும் மிக முக்கியமானது. அதுல பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் அதை ஆவணப்படுத்தி நூலாக கொண்டு வந்தது ஒரு முக்கியமான விஷயம்.

அசோக்: அடுத்தது புஸ்பராஜா தோழர் எங்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாகவும் இருந்தவர்.

தேசம்: அரசியல் இலக்கிய தளங்களில் பரா மாஸ்டரின் பங்களிப்பும் முக்கியானது.

அசோக்: தோழர் பரா குடும்ப உறுப்பினர்கள் முழுப்பேருமே அரசியல் இலக்கிய மற்ற மனித உரிமை விடயங்களில் நிறைய செயற்பட்டாங்க. மல்லிகா, உமா, சந்தோஸ் எல்லாரும். இவங்க சிறு சஞ்சிகை ஒன்றைக் கூட வெளியிட்டாங்க. ‘சிந்தனை’ என்று பெயர்.

பாரா தோழருக்கு நீண்ட அரசியல் வரலாறு உண்டு. இலங்கையில் இடதுசாரி தொழிற்சங்கங்களை உருவாக்கியதில், அதனை முன்னெடுத்ததில் பரா தோழருக்கு நிறைய பங்குண்டு. அந்த வரலாறுகளெல்லாம் பதிவு செய்யப்படவேண்டியது. நானும் ஜெகாவும் பரா தோழரின் அனுபவங்களை ஒளிப்பதிவு செய்தோம். எழுத்தில் கொண்டு வரமுடியல்ல. சுவிஸ்ல ‘மனிதம்’ என்றெரு சஞ்சிகை நீண்ட காலம் வெளிவந்தது. அவங்க அமைப்பு வடிவத்தில் இயங்கினாங்க. ‘மனிதம்’ குரூப்புக்கு வரலாறு ஒன்று இருக்கு. ஒரு காலகட்டத்தில் பரிஸ் மாதிரி, சுவிஸிலையும் மிக மோசமான நெருக்கடியை புலிகள் கொடுத்தார்கள். அதற்கு எதிராக மனிதம் குரூப் நிறைய வேலை செய்தது. அந்த நண்பர்கள் துணிந்து புலிகளுக்கு எதிராக செயற்பட்டார்கள். ஜே ர்மனியில் தான் நிறைய சிறு சஞ்சிகைகள் வெளிவந்தன. பார்த்தீபன் ஆட்கள் ‘தூண்டில்’ என்றும், நிருபா ‘ஊதா’ என்றும், பாரதி ஆட்களும் ஒரு சஞ்சிகை வெளியிட்டாங்க. நான் இங்கு வருவதற்கு முன்னர் 80களின் கடைசி வரை நிறைய சிறுசஞ்சிகைகள் வெளிவந்திருக்கின்றன. எப்படியும் சுமார் 25 சஞ்சிகைகள் வெளி வந்திருக்கும் என நினைக்கிறன். அந்தளவிற்கு இலக்கிய சூழல் இருந்தது.

தேசம்: உங்களை பொறுத்த வரைக்கும் நீங்கள் பாரிஸில் வாழ்ந்தாலும் கலை இலக்கியச் சூழலை பொருத்த வரைக்கும் நீங்கள் எல்லைகளை கடந்து தான் வேலை செய்தீர்கள்.

அசோக்: இங்க வந்த பின் நிறைய தொடர்புகள் இருந்தது. Human Rights Watch என்ற மனித உரிமை அமைப்புடனும் உறவு இருந்தபடியால் அதன் ஆங்கில, தமிழ் பிரசுரங்களை யூரோப் ஃபுல்லா நாங்கள் விநியோகித்திருக்கிறோம். அந்த நேரம் நான் வேலை செய்ததை விட இதற்குப் பின்னால் அலைந்ததுதான் கூட. இதனால் நிறைய வேலைகளை இழந்திருக்கிறேன். தெரியும் தானே வேலைக்கு போனால் ஒழுங்காக வேலைக்கு போக வேண்டும். ஒருநாள் போகாவிட்டாலும் பிரச்சனை. நான் இப்படி ஜெர்மன், பெர்லின் போனேன் என்று சொன்னா இங்க வேலை போய்விடும்.

அடுத்தது தோழர் உமாகாந்தன். அவரும் இறந்து போய்விட்டார். அவரும் முக்கியமானவர். கட்டாயம் நிறைய பெயர்களை குறிப்பிட வேண்டும். ஆனால் பெயர்கள் உடனடியா ஞாபகம் இப்ப வரவில்லை. இந்த பெயர்களையெல்லாம் பதிவு செய்யவேண்டும். அடுத்தது நாங்கள் ‘நண்பர்கள் வட்டம்’ ஒன்றை இங்கு வைத்திருந்தோம். அந்த நண்பர்கள் வட்டத்துக்கு ஊடாக நிறைய வேலை செய்திருக்கிறம். நிறைய சந்திப்புகளை, கலந்துரையாடல்களை செய்திருக்கிறம். நிறைய புத்தக வெளியீடுகளை குறும்பட நிகழ்வுகளை புகைப்பட கண்காட்சி எல்லாம் செய்திருக்கிறம். நண்பர்கள் வட்டத்தில கலைச்செல்வன், லஷ்மி, அசோக் பிரகாஷ், கிருபன், மோகன், வன்னியசிங்கம், பிரதீபன், உதயகுமார் என்று நிறைய நண்பர்கள் இருந்தாங்க.

தேசம்: மற்றது நீங்கள் ‘அசை’ என்று ஒரு சஞ்சிகை கொண்டு வந்தீங்க அல்லவா?

அசோக்: அது மூன்று இதழ் வந்தது. அது ஒரு அரசியல் கோட்பாட்டுசஞ்சிகை. தொடர்ச்சியாக கொண்டுவரமுடியல்ல.

தேசம்: மற்றது இங்கே இருந்து அரசியல் கலை இலக்கியத்துடன் ஈடுபட்டவர்கள் கனடா வேறு நாடுகளுக்கும் போயிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

அசோக்: இங்கே இருந்து நிறைய பேர் போயிருக்கிறார்கள். வின்சென்ட் ரபேல், சேனன், கற்சுறா…

தேசம்: சேனன் லண்டனில் இருக்கிறார். கற்சுறா …

அசோக்: கற்சுறா, வின்சென்ட் ரபேல் கனடாவில் இருக்கிறாங்க. அவர் நிறைய திறமைசாலி. மொழியியல் தொடர்பாக மிக புலமைகொண்டவர். கற்சுறா இங்க இருக்கும் போது தேவி கணேசன் என்ற பெயரில் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தவர். நல்ல சிறந்த கவிஞராக வரவேண்டியவர். சேனனின் இன்றைய அரசியல் வளர்ச்சியும் செயற்பாடும் முக்கியமானது. அவர் பாரிசில் இருந்திருந்தால் சோபாசக்தியோடு சேர்ந்து தன் அரசியலை அழித்திருப்பார். தப்பிவிட்டார்…

ஜெர்மனியில் சுசீந்திரன், பாரதி, சிறிரங்கன், பார்த்தீபன், சிவபாலன் என்று நிறைய. பார்த்தீபன் தூண்டில் என்றொரு சஞ்சிகையை வெளியிட்டவர். மற்றது பெண்கள் தொடர்பான நிறைய சந்திப்புகள் நடந்தது. இலக்கிய சந்திப்பு மாதிரி ‘பெண்கள் சந்திப்பு’ ம் இருந்தது. அதுல நிறைய பெண்கள் கலந்து கொண்டார்கள். இதுவும் ஜெர்மனியில் தான் 1990 இல் உருவானது. ஆரம்பத்தில் இதனுடைய முன்னணி செயற்பாட்டாளராக தேவிகா கங்காதரன் இருந்தாங்க என நினைக்கிறன். பிறகு தொடர்ச்சியான செயற்பாட்டில் நிருபா, உமா, இன்பா, ரஞ்சினி, மல்லிகா, தேவா …

தேசம்: லண்டனில் ராஜேஸ் பாலா…

அசோக்: ஓம். ராஜேஷ் பாலாவும் அதில் இருந்தாங்க. பிரான்சிலிருந்து லக்சுமி, சுவிசிலிருந்து ரஞ்சி, நோர்வேயிலிருந்து தயாநிதி போன்றவங்க முக்கியமானவங்களாக அதனோடு செயற்பட்டாங்க. தயாநிதி அந்த நேரத்தில காத்திரமான பெண்ணிய கோட்பாட்டு சஞ்சிகை ஒன்றை கொண்டு வந்தாங்க. சக்தி என்று பெயர். காலப்போக்கில் இலக்கிய சந்திப்பிலும், பெண்கள் சந்திப்பிலும் முரண்பாடு வந்தது என்பது இன்னுமொரு வரலாறு. ஒரு காலகட்டத்தில் ஆரோக்கியமான செயற்பாடுகளில் பெண்கள் சந்திப்பும், இலக்கிய சந்திப்பும் இருந்தது.

தேசம்: அடுத்தது பரிஸ் அரசியல் இலக்கியத்துக்கான களம். தலித் முன்னணியின் உருவாக்கம் ரஜாகரனுடைய கட்சியின் உருவாக்கம்.

அசோக்: நான் இங்க வந்ததும் ரஜாகரனுடன் தான் உறவு ஏற்பட்டது.

தேசம்: உறவுகளும் அதைத் தொடர்ந்து முரண்பாடுகளும்,,,

அசோக்: ஹட்டன் நெசனல் வங்கி கொள்ளை தொடர்பான பிரச்சனைகளிளால் இந்த முரண்பாடு வருகின்றது. அவர் ஜனநாயக உரையாடலுக்கான ஆளில்லை. தன்னுடைய கருத்துக்குக்கும் ஆளுமைக்கும் உட்பட்டு நாங்க இருந்தா அவருக்கு அது ஓகே. எந்த பிரச்சனையும் இல்லை. ஹட்டன் நெசனல் வங்கி கொள்ளை தொடர்பாக கேள்வி கேட்கத் தொடங்கித்தான் இந்த முரண்பாடுகள் வந்தது.

தேசம்: அவருடைய மொழியும் ஒரு ஆணாதிக்க மொழிதான்.

அசோக்: ஆனால் தனிப்பட்ட முறையில் பழகுவதற்கு நல்லவர். உபசரிப்பது, உதவி செய்வது. நான் வந்த பொழுது மிக நெருக்கடியான பொருளாதார நிலையில் நான் வீடு எடுப்பதற்கு அட்வான்ஸ் தந்ததே அவர்தான். பிறகு ஆரம்ப காலத்தில் எனக்கு ஒரு கேமரா வாங்கி தந்தார். எல்லாப்பணமும் கொடுத்து விட்டேன். நல்ல உபசரிப்பு செய்வார். ஆனால் அவருடைய தவறுகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். கேள்விகள் கேட்டால் பிரச்சனை.

தேசம்: ஏற்றுக் கொள்ளும் வரைக்கும் பிரச்சினையில்லை…

அசோக்: ஒரு காலகட்டத்தில் மிக நெருக்கமான நண்பர்களாக தான் நாங்கள் இருந்தோம். இப்படி அரசியல் முரண்பாட்டுக்கு அப்பால் தனிப்பட்ட ரீதியில் பார்த்தோம் என்றால் மிக அன்பான ஆட்களாக இருப்பார்கள். கஷ்டத்தில் உதவி செய்கிற தன்மை எல்லாம் இருக்கும். ஆனால் நிபந்தனை அடிப்படையில் தான் அது அமையும் அது கஷ்டம் எங்களுக்கு.

தேசம்: அதே மாதிரி தலித் முன்னணியுடன் உங்களுக்கு நிறைய முரண்பாடுகள் இருந்தது என்று நினைக்கிறேன்…

அசோக்: ஓம். தலித் முன்னணியினர் எனக்கு முதலே நண்பர்கள். தேவதாஸ், அசுரா என்கிற நாதன்.

தேசம்: ஏன் அந்த முரண்பாடு உங்களுக்கு தலித் முன்னணி உடைய ஏற்படுகிறது? என்ன பிரச்சினை அது?

அசோக்: தலித் முன்னணியுடன் இலங்கை அரசியல் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடுதான். விடுதலைப் புலிகள் மீது எத்தகைய கடும் விமர்சனம் வைத்திருக்கிறனோ, அதைவிட மிகக் கடுமையான விமர்சனம் இலங்கை அரசு மீதும் எனக்கு இருக்கு. பேரினவாத அரசு ஒடுக்குமுறைகளை புறம்தள்ளி விட்டு, புலிகள்தான் எங்கள் எதிரி என்று சொல்லிக் கொண்டிருக்கமுடியாது. அப்போ இரண்டையும் நாங்கள் எதிர்க்க வேண்டும். புலிகளை எதிர்க்கிற அந்நேரம், பேரினவாத அரசையும் எதிர்க்க வேண்டும் என்ற உணர்வு என்னிடம் இருக்கிறது.

2009க்கு பிற்பாடு தான் என்னுடைய நிறைய தோழர்களுடன் முரண்பாடு வருது. அதுவரையில் மிக தீவிரமாக புலி எதிர்ப்பாளர்களாக, அனைத்து அடக்குமுறைகளுக்கு எதிராகவும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதாக சொல்லிக்கொண்ட நாங்கள், புலிகள் அழிக்கப்பட்ட உடனேயே இன்னாரு ஒடுக்குமுறையாளனான இலங்கை பேரினவாத அரசோடு இணைகிறோம். அதனை ஆதரிக்கிறம் .நியாயப்படுத்துறம்.

விமர்சன பூர்வமான கண்ணோட்டத்தோடு மக்களின் நன்மைக்காக நாங்கள் இலங்கை அரசோடு பேசலாம். அந்த வகையில் நீங்கள் மக்களின் நன்மைக்காக மக்களின் விடுதலைக்காக பேசுவது தவறு இல்லை. ஏனென்றால் நீங்கள் உரிமை பற்றி பேச வேண்டும் என்றால் உடன்பாட்டுக்கு வர வேண்டுமென்றால் அந்த அரசுடன் தான் பேச வேண்டும். ஆனால் அவங்க தனிப்பட்ட நலன்களுக்காக போய்ச் சேருகிறார்கள் ஆதரிக்கின்றார்கள் . அதை என்னால் சகிக்க முடியாமல் போய்விட்டது. வர்க்கத்தாலும், சாதித்தாலும் ஒடுக்கப்பட்ட எங்கட மக்களின் விடுதலை உரிமை பற்றி பேசுவதுதான் தலித்திய அரசியல். ஆனால் இவங்க ஒடுக்குமுறையாளர்களுடன் தனிப்பட்ட சுயநலன்களுக்காக கைகோர்க்கிறாங்க.

தேசம்: பொதுவாக பாரிஸ் இலக்கியத் தளம், அரசியல் தளம் போன்றவற்றில் பேசப்பட்ட மிகக் கூர்மையான முரண்பாடு என்டு நினைக்கிறேன். ஞானம் அவர்களுடனான முரண்பாடு. அது எப்படி..? அது வந்து அவர் இருக்கிற அரசியல் நிலைக்காக அல்ல. அதுக்கு முதலே அந்த முரண்பாடு வந்துட்டு என்டு நினைக்குறேன்.

அசோக்: ஞானம் பற்றி முன்னர் கதைத்திருக்கிறன் என நினைக்கிறன். நான் பாரிசிக்கு வந்த புதிதில் எனக்கு உதவி செய்ததில் முக்கியமானவர் ஞானம்.

தேசம்: அவர் மட்டக்களப்புகாரர் தானே…?

அசோக்: நாங்க ஒரே கிராமத்தை அதாவது களுதாவளை கிராமத்தை சேர்ந்தவங்க. புளொட் மாணவர் அமைப்பில் வேலை செய்தவர். மிகவும் நல்லவர். நல்ல திறமைசாலி. நல்ல ஆற்றலும் திறமையும் உள்ளவர். இங்க பாரிசிக்கு வந்த போது அவர் செய்த உதவிகளை மறக்கமுடியாது. இதுபற்றி முன்னர் சொல்லி உள்ளேன். இதில ஒரு பெரிய சிக்கல் என்னென்டு கேட்டால், வெறும் புலி எதிர்ப்பு என்று சொல்லி சொல்லி இலங்கை அரசோடு அதன் ஆதரவு சக்திகளோடு இணைய முடியாது. போய் சேர ஏலாது. அத்தோட புலிகளிலிருந்து கொண்டு எங்கட மக்களையும் தோழர்களையும் நண்பர்களையும் கொடுரமாக கொன்றொழித்துவிட்டு புலிகளோடு இருந்த காலத்தில் எல்லா அயோக்கியத்தனங்களையும் செய்து விட்டு அதிகாரப் போட்டியால் தனிப்பட்டமுரண்பாடுகளினால் வெளியேறி விட்டு புலிகளை எதிர்க்கின்ற எந்த பேர்வழிகளையும் நான் நம்புவதில்லை.

புலிகள்ல மேல்மட்டங்கள்ல வேலைசெய்தவங்கள் இருக்காங்கள் தானே… நான் இவங்களை எப்போதும் எப்போதுமே நம்புறது இல்ல. புலிகளோட மனோநிலை என்டுறதுல ஒரு உளவியல் கட்டமைப்பு இருக்கும். அவங்கள் இயல்பாகவே அந்த உளவியல் கட்டமைப்பால் வடிவமைக்கப்பட்டிருப்பாங்க. அவங்களிட்ட ஜனநாயக பண்பாடே இருக்காது. ஜனநாயக அமைப்புக்களுக்கு எதிராக இருப்பாங்கள். புலிகள எதிர்க்கின்ற இன்னோரு புலிகளாதான் இருப்பாங்கள். அப்படி தான் நான் பிள்ளையானையும் , கருணாவையும் பார்க்குறன். அப்ப ஞானம் போன்ற ஆட்களின் இணைவு என்டது பலத்த அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் கொடுத்தது.

நீங்கள் ஒரு இடதுசாரிய முற்போக்கு சிந்தனைகளுடன் வளர்ந்தவர்கள் – பேசுபவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் கருணாவோடயும் பிறகு பிள்ளையானோடயும் – எந்த அடிப்படையில எப்பிடி வேலைசெய்வீங்கள். விடுதலைப் புலிகள் என்ற சொல்லாடலே ரத்தவாடை அடிப்பது. பிள்ளையான் கட்சியின் பெயரைப் பாருங்கள். தமிழ் மக்கள் வடுதலைப் புலிகள் . அதே ரத்தவாடை அடிக்கும் சொல்லாடல். இவர்கள் வன்னிப் புலிகளை எதிர்த்தார்களே தவிர எண்ணமும் செயலும் மனக் கட்டமைப்பும் புலி அரசியலைக் கொண்டதுதான்.

புலிகள் பிற்போக்குத்தனமான அரசியலை கொண்டு தமிழ்தேசிய வாதத்தை அணுகினாங்க. அதன் விளைவுகளை நாங்க பார்த்தோம் அனுபவித்தோம். இதே அரசியலை பிற்போக்கு அரசியலை கொண்டு பிள்ளையான் கட்சியினர் பிரதேசவாத அரசியலை கட்டமைக்கிறாங்க. எப்போதுமே தேசியவாதம், பிரதேச வாதம் போன்ற அடையாள அரசியல்கள் பிற்போக்குத்தனமான சிந்தனைகளையும் சுய நல பிழைப்பு வாதத்தையும் கொண்டவங்க கையில் அகப்படும் போது அது ஆபத்தான விளைவுகளைதான் கொடுக்கும். இவ்வாறான பிற்போக்குத்தன அரசியலை வைத்து அரசியல்வாதிகளும், அவர்களை அண்டிப்பிழைப்பவர்களும் வாழ்வாங்க. ஆனா பாதிக்கப்படுவது அப்பாவி மக்களும், இளம் தலைமுறையும்தான். இத நாங்க மட்டக்களப்பு பிரதேசத்தில பார்க்க முடியும். இதனால்தான் ஞானம் தொடர்பாக முரண்பாடுகள் எனக்கு வருகிறது.

தேசம்: உங்களுக்கும் அவருக்கும் இடையிலான முரண்பாடு அதுக்குப் பிறகுதான் வருதா…?

அசோக்: இல்லை இல்லை இதற்கு முதலே முரண்பாடு தொடங்கி விட்டது. இப்ப கருத்தியல் சார்ந்து மிகத் தீவிரமானது இந்த கருணா பிள்ளையானோடு சேர்ந்த பிறகுதான். இதற்கு முதல் எப்படி இந்த முரண்பாடு தொடங்குது என்றால் ‘எக்சில்’ என்றொரு சஞ்சிகையை கலைச்செல்வன், லக்சுமி, ஞானம், விஜி, கிருஸ்ணராஜா, கற்சுறா இவங்கள் எல்லாருமா சேர்ந்து வெளியிடுறாங்க. அந்தக் காலகட்டத்தில் நானும் இங்க பாரிசில் இருந்தேன். இவர்களின் இந்த ஒருங்கிணைவு, சஞ்சிகை வெளியீடு தொடர்பாக எனக்கு சில சிக்கல்கள் இருந்தது. ஏனென்றால் உண்மையில் கருத்தியல் சார்ந்து ஒன்றுபட வேணும். கோட்பாட்டு செயற் தளத்தில் ஒரு ஒன்றிணைவு இருக்க வரவேண்டும். அப்போதுதான் ஆக்க பூர்வமாக செயற்பட முடியும்.

ஒரு கட்டத்துக்குப் பிறகு தனி நபர்கள் முரண்பாடுகள் இவங்களிடம் தலை தூக்கிறது. ஏனென்டா இந்த புத்தகத்தின் வருகைக்கான உழைப்பும் பொருளாதார ரீதியான உதவியும் கலைச்செல்வன், லட்சுமி பக்கம்தான் கூடுதலா இருந்தது. அவங்கட முயற்சியால்தான் அது வெளிவந்தது. அத்தோட கலைச் செல்வன், லக்சுமி அரசியல் சார்ந்து ஆளுமையானவங்க. அப்ப அதன் தாக்கம் இருக்கும். இவங்களால ஒருகட்டத்திற்கு மேல இணைந்து செயற்பட முடியல்ல. அரசியல் சமநிலை இவர்களிடம் இருக்கல்ல. முரண்பாடுகள் வருகிறது. முரண்பாடு வந்தவுடன் இவங்க கலைச்செல்வன், லட்சுமி மீது வைத்த கூற்றச்சாட்டு இருக்குத்தானே அது அபாண்டமான ஆரோக்கியமற்றதா இருந்தது.

தேசம்: யார் குற்றச்சாட்டுகள வைச்சது…?

அசோக்: ஞானம், கற்சுறா ஆட்கள்தான் அதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போயிட்டு. அப்ப ஞானமெல்லாம் எங்களுடன் மிக நெருக்கமான உறவு தான். கற்சுறாவோடும் நாங்கல்லாம் நெருக்கமான நண்பர்கள் தான். இந்த முரண்பாட்டின் அடிப்படையில நாங்க ஒரு சைட் எடுக்க வேண்டி வந்து விட்டது. நாங்கள் பார்த்தோம், கலைச்செல்வன், லட்சுமி ஆட்கள் பக்கம்தான் நியாயம் இருந்தது. நான் தோழர் புஷ்பராஜா எல்லாரும் கலைச்செல்வன் பக்கம்தான் சப்போர்ட் பண்ணினோம். இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு நாங்கள் மிகத் தீவிரமாக ஈடுபட்டம். பிரச்சனை மிக தீவிரமாக கூர்மை அடைந்தது.

பிரச்சினையின் போது இவங்க முன்வைக்கிற குற்றச்சாட்டு தெரியும்தானே. “இவன் வேளாளன், இவன் சாதி பார்க்கிறான்” போன்ற அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். இந்த குற்றச்சாட்டை நீங்கள் வேறாக்கள் மேல முன்வைக்க முடியும். ஆனா கலைச்செல்வன், லட்சுமி மேல முன்வைக்கிறது அபாண்டம். அவங்க சாதிய தற்கொலை செய்து கொண்டவர்கள். இயல்பாகவே அரசியல் ரீதியாக வளர்ந்தாக்கள். திட்டமிட்டு இந்த குற்றச்சாட்டுகளை அவங்க மேல முன்வைத்தார்கள். அத எங்களுக்கு சகிக்க முடியாமல் இருந்தது. அடுத்தது இவங்க நடந்துகொண்ட முறைகள். நாங்கள் புலிகளின் வன்முறைகள் பற்றி கதைக்கிறம். இவங்க கலைச் செல்வன் இல்லாத நேரம் பார்த்து லட்சுமி வீட்டுக்கு போய் கதவுல எல்லாம் அடிச்சு பெரிய கலாட்டா பண்ணினாங்க. என்ன பிரச்சனை என்றால் கருத்தியல் சார்ந்து வருகிற முரண்பாடுகள் அனேகமாக வன்முறைகளுக்கு போவதில்லை. ஆனா தனிநபர் பிரச்சனைகளால வாற முரண்பாடுகள் இப்படித்தான் வன்முறை மனோபாவத்தை ஏற்படுத்தும். அதுதான் இங்கையும் நடந்தது. இந்த பிரச்சனைகளுக்கு பிறகு பேர்லினில் நடந்த இலக்கிய சந்திப்பில் இவங்க நடந்துகொண்ட முறை மோசமானது. அடிபுடி வரும் நிலைக்கு போனது. நல்ல வேளை சுசிந்திரன், பாரதி, பரா ஆட்கள் தடுத்துவிட்டாங்க.

ஒரு பக்கம் நாங்க வன்முறைகளை எதிர்க்கிறோம். மறுபக்கம் இப்படி செய்றத ஏற்க முடியாது. அந்த அடிப்படையில் தான் நாங்கள் கலைச்செல்வன், லட்சுமி ஆட்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தோம். பிறகு அது பெரிய முரண்பாடா போய். அதுல அவங்க நடந்துகொண்ட முறை பிழை. அதால எங்களுக்கு அவங்கட நட்புகளும் போயிட்டு. உண்மையிலேயே இந்த முரண்பாட்டை தீர்த்திருக்க முடியும். ஞானமும், கற்சுறாவும் மோசமானவர்கள் இல்லை. நியாயங்களை ஏற்று இருப்பார்கள்.பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியும். ஆனா இந்த முரண்பாட்டை பயன்படுத்தி இதை கூர்மையாக்கியதில் வேறு சிலருக்கு பங்கு உண்டு. இவங்களும் அவங்களின்ற கதையை கேட்டு பின்னால போனாங்க. இந்த முரண்பாடு வந்த உடனே ஒரு குரூப் அவங்களுடன் இணைந்து கொண்டது. அது எப்ப எப்ப என்டு பார்த்துக் கொண்டிருக்கிற தவறான சக்திகள் இணைந்து கொண்டாங்க.

தேசம்: யார் அந்த தவறான சக்திகள்..?

அசோக்: அந்த நேரம் சோபாசக்தி எல்லாம் உடனடியாக போய் சேர்ந்தாங்கள்.