கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

யாழில் ஒரு வாரத்தில் 12பேர் சாவு

யாழில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 12 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். யாழ். மாவட்டத்தில் தொற்றாளர்களது எண்ணிக்கை கணிசமாக வீழ்ச்சியடைந்து வருகின்ற போதிலும் நாளாந்த உயிரிழப்புகள் தொடர்ச்சியாக பதிவாகும் நிலை நீடித்து வருகிறது.
ஜூலை 01 முதல் ஜூலை 07 வரையான ஒரு வாரத்தில் மட்டும் இவ்வாறு 12 கொரோனா இறப்புகள் யாழ். மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.
இதன்படி, ஜூலை மாதம் முதலாம் திகதி 4 பேரும், ஜூலை 2ஆம் திகதி 2பேரும், ஜூலை 4 ஆம் திகதி ஒருவரும், 5ஆம் திகதி ஒருவரும், ஜூலை 6ஆம் திகதி 3 பேரும், 7ஆம் திகதி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். யாழ். மாவட்டத்தில் ஜூலை 7ஆம் திகதி வரையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் பிரதேச செயலர் பிரிவு வாரியாக நோக்கும் போது, யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் – 33 பேரும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 12 பேரும், நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 12 பேரும், உடுவில் பிரதேச செயலர் பிரிவில் – 09 பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவு, பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவு மற்றும் சங்கானை பிரதேச செயலர் பிரிவில் தலா 8 பேரும், தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவில் 5 பேரும், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவு, சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவு, வேலணை பிரதேச செயலர் பிரிவு ஆகியவற்றில் தலா 3பேரும், காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 2பேரும், ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் ஒருவரும் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பயணத் தடை மேலும் நீடிப்பு

இலங்கையில் தற்போது அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடையானது, எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

 

உலகில் சுமார் 4.42 கோடி பேருக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி !

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் பரவ ஆரம்பித்த  கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 4.42 கோடி பேருக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3.24 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 10.62 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 79 ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்றவர் மரணம் !

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியின் 1 மற்றும் 2ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

மேலும், இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் இறுதிகட்ட மருத்துவ பரிசோதனை இங்கிலாந்து, இந்தியா, பிரேஸில், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த பரிசோதனையில் ஆயிரக்கணக்கான தன்னாவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பிரேஸில் நாட்டில் ஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீரென உயிரிழந்துள்ளார். ரியோ டி ஜெனிரோ நகரில் வசித்துவந்த 28 வயதுடைய தன்னார்வளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால், அந்த தன்னார்வலர் உயிரிழந்ததற்கான காரணங்கள் குறித்து பிரேஸில் அரசோ, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமோ, அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமோ எந்த பதிலும் அளிக்கவில்லை.

மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரனை நடத்த பிரேஸில் சுகாதாரத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தடுப்பூசி பரிசோதனையின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஆனால், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து தயாரிப்பு நிறுவனம் இந்த விவகாரம் குறித்து பதிலளிக்கவில்லை.

எவ்வாறிருப்பினும் பிரேஸிலில் ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியின் பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது.

அச்சுறுத்தும் கொவிட் 19 – கொரோனா பாதிப்பால் பார்வையை இழந்த 11வயது சிறுமி!

டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) தனது கொரோனா வைரஸ் நோயாளியான 11 வயது சிறுமி ஒருவருக்கு மூளை நரம்பு பாதிப்பைத் ஏற்பட்டு உள்ளது என்றும் இது அவரது பார்வை மங்கலாகிவிட்டது எனவும் கூறி உள்ளது.
குழந்தை நரம்பியல் பிரிவு மருத்துவர்கள் சிறுமியின் உடல்நிலை குறித்து ஒரு அறிக்கையைத் தயாரித்து வருகிறார்கள். அது விரைவில் வெளியிடப்படும்.
இதுகுறித்த வரைவு அறிக்கை கூறியதாவது:-
11 வயது சிறுமி ஒருவர் கொரோனா நோய்த்தொற்றால்தூண்டப்பட்ட அக்யூட் டெமிலினேட்டிங் நோய்க்குறி (ஏடிஎஸ்) இருப்பதைக் கண்டுபிடித்தோம். குழந்தை வயதினரிடையே பதிவான முதல் பக்கவிளைவு இதுவாகும் என்று கூறியுள்ளது.
குழந்தை நரம்பியல் பிரிவின் தலைவர் டாக்டர் ஷெபாலி குலாட்டி கூறியதாவது:-
இந்த சிறுமி பார்வை இழப்புடன் எங்களிடம் வந்தார் எம்.ஆர்.ஐ  சோதனை ஏ.டி.எஸ் பாதிப்பை காட்டியது, இது ஒரு புதிய பக்கவிளைவாகும். இருப்பினும், வைரஸ் மூளை மற்றும் நுரையீரலை பெரும்பாலும் பாதிக்கிறது என்பதை இப்போது நாம் அறிவோம்.
ஏடிஎஸ் என்பது  நரம்புகள் மெய்லின் எனப்படும் பாதுகாப்பு அடுக்குடன் மூடப்பட்டிருக்கும், இது மூளையில் இருந்து வரும் செய்திகளை உடலின் வழியாக விரைவாகவும் சுமுகமாகவும் நகர்த்த உதவுகிறது.
மெய்லின் பாதிப்பால் மூளை சமிக்ஞைகளை சேதப்படுத்தும் மற்றும் பார்வை, தசை இயக்கம், புலன்கள், சிறுநீர்ப்பை மற்றும் குடல் இயக்கம் போன்ற நரம்பியல் செயல்பாடுகளின் வரம்பை பாதிக்கும் என கூறப்படுகிறது.

உலகில் 11 லட்சத்தைக் கடந்தது கொரோனா உயிர்ப்பலி !

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ்  தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள நிலையில் இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.91 கோடியைத் தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 2.92 கோடியைக் கடந்தது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11 லட்சத்தைக் கடந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“கொரோனா வைரஸ் தொற்று காற்றின் மூலமாகவும் பரவலாம்” – எச்சரிக்கின்றது அமெரிக்க நோய் தடுப்பு மையம் !

கொரோனா வைரஸ் தொற்று காற்றின் மூலமாகவும் பரவலாம் என அமெரிக்க நோய் தடுப்பு மையம் (சிடிசி) தெரிவித்துள்ளது. காற்றில் உள்ள வைரஸ் கிருமிகள் மனிதர்களுக்கு கொரோனா பாதிப்பை ஏற்படுத்தலாம் என பொதுநல மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
கொரோனா வைரஸ் பரவல் பற்றி அமெரிக்க நோய் தடுப்பு மையம் ஏற்கனவே இதேபோன்ற அறிக்கையை வெளியிட்டு பின் அதனை திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.
 கோப்புப்படம்
இந்நிலையில், சிடிசி வெளியிட்டுள்ள புதிய தகவலில் சமூக இடைவெளியை சரியாக பின்பற்றிய நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

“உலக சனத்தொகையில் பத்து பேரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு” – உலக சுகாதார அமைப்பு

உலக சனத்தொகையில் பத்து பேரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அவசர நிலை சேவை திட்டத்தின் நிர்வாக பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் மைக் ரயன் இதனைத் தெரிவித்தார்.

மேலும், உலகளவில் தற்போது வரையில் ஏராளமான மக்கள் குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 56 இலட்சத்து 95 ஆயிரமாக பதிவாகியுள்ளது. மேலும் 10 இலட்சத்து 45 ஆயிரம் பேர் குறித்த வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், உலகளவில் தற்போது 8 மில்லியன் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக விசேட மருத்துவ நிபுணர் மைக் ரயன் குறிப்பிட்டுள்ளார்.

இது உலக சனத்தொகையில் 10 இல் 1 என்ற அளவிற்கு அண்மித்த தொகையென்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அமெரிக்காவில் கொரோனா தொற்று 76 லட்சத்தைத் தாண்டிaது ! – 3.53 கோடியைத் தாண்டியது கொரோனா பாதிப்பு.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில்  பரவ ஆரம்பித்த  கொரோனா வைரஸ் , தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.53 கோடியைத் தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 2.66 கோடியைக் கடந்தது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 66 ஆயிரத்து 400-க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10.41 லட்சத்தைக் கடந்துள்ளது.
ஐக்கிய அமெரிக்காவில் கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 76 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும், அங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 14 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 48 லட்சத்தைக் கடந்துள்ளது இதே நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66 லட்சத்தை தாண்டி உள்ளது. மொத்த பாதிப்பு 66,23,816 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 74,442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 903 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இந்தியாவில் 1,02,685 ஆக உயர்ந்துள்ளது.

”நீண்ட நேரம் மூக்கு கண்ணாடி அணிந்தால் கொரோனா தொற்று இல்லை” – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு !

மூக்கு கண்ணாடி அணிந்தால், கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கக்கூடும் என்று  விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்பாக உலகளாவிய ஆய்வுகள் நீளுகின்றன.
அந்த வகையில் இதன் ஒரு பகுதியாக சீனாவில் உள்ள சுய்ஜோ ஜெங்டு வைத்தியசாலையின் கொரோனா நோயாளிகளை கொண்டு விஞ்ஞானிகள் ஒரு ஆய்வை நடத்தினார்கள். இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களில் சீனாவின் நாஞ்சாங் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது இணைந்த வைத்தியசாலை ஆராய்ச்சியாளர்களும் அடங்குவர்.

இவர்கள் தங்களது ஆய்வு முடிவை ஜாமா கண் மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளனர்.

அதில் நீண்ட நேரம் மூக்கு கண்ணாடி அணிபவர்கள் அசாதாரணமானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது என கூறப்பட்டுள்ளது.

ஆய்வு முடிவுகளில் கூறி இருப்பதாவது:-

ஒரு நாளில் 8 மணி நேரம் தொடர்ந்து கண்ணாடி அணிகிறவர்களுக்கு கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. கண்ணாடி அணிவதால், அவர்கள் கண்களை அடிக்கடி தொடுகிற வாய்ப்புக்கு அது ஒரு தடையாக அமைந்திருக்கிறது.

இது ஒற்றை ஆய்வாக அமைந்துள்ளது. இதை உறுதி செய்வதற்கு கூடுதலான ஆய்வுகள் தேவைப்படுகின்றன. அதுவும் பல இடங்களில் பெரிய அளவுகளில் நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் லிசா மராகசிஸ் கருத்து தெரிவிக்கையில், “இந்த கண்டுபிடிப்புக்கு மாற்று விளக்கங்கள் இருக்கலாம். இந்த ஆய்வு முடிவு, கொரோனாவில் இருந்து காக்க, கண்களை பாதுகாக்க பொதுவெளியில் வரும்போது கண்ணாடியோ, ஷீல்டோ அணிய வேண்டும் என்ற முடிவுக்கு வர தூண்டுகிறது. ஆனால் தொற்றுநோயியல் கண்ணோட்டத்தில், ஒரு ஒற்றை ஆய்வின் முடிவுதான் இது என்பதால் கவனமாக இருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் கண்ணாடிகள், அசுத்தமான கைகளில் இருந்து கொரோனா பரவலுக்கு எதிராக தடையாக செயல்படக்கூடும் என ஒப்புக்கொண்டுள்ளார்.