மூக்கு கண்ணாடி அணிந்தால், கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்பாக உலகளாவிய ஆய்வுகள் நீளுகின்றன.
அந்த வகையில் இதன் ஒரு பகுதியாக சீனாவில் உள்ள சுய்ஜோ ஜெங்டு வைத்தியசாலையின் கொரோனா நோயாளிகளை கொண்டு விஞ்ஞானிகள் ஒரு ஆய்வை நடத்தினார்கள். இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களில் சீனாவின் நாஞ்சாங் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது இணைந்த வைத்தியசாலை ஆராய்ச்சியாளர்களும் அடங்குவர்.
இவர்கள் தங்களது ஆய்வு முடிவை ஜாமா கண் மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளனர்.
அதில் நீண்ட நேரம் மூக்கு கண்ணாடி அணிபவர்கள் அசாதாரணமானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது என கூறப்பட்டுள்ளது.
ஆய்வு முடிவுகளில் கூறி இருப்பதாவது:-
ஒரு நாளில் 8 மணி நேரம் தொடர்ந்து கண்ணாடி அணிகிறவர்களுக்கு கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. கண்ணாடி அணிவதால், அவர்கள் கண்களை அடிக்கடி தொடுகிற வாய்ப்புக்கு அது ஒரு தடையாக அமைந்திருக்கிறது.
இது ஒற்றை ஆய்வாக அமைந்துள்ளது. இதை உறுதி செய்வதற்கு கூடுதலான ஆய்வுகள் தேவைப்படுகின்றன. அதுவும் பல இடங்களில் பெரிய அளவுகளில் நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் லிசா மராகசிஸ் கருத்து தெரிவிக்கையில், “இந்த கண்டுபிடிப்புக்கு மாற்று விளக்கங்கள் இருக்கலாம். இந்த ஆய்வு முடிவு, கொரோனாவில் இருந்து காக்க, கண்களை பாதுகாக்க பொதுவெளியில் வரும்போது கண்ணாடியோ, ஷீல்டோ அணிய வேண்டும் என்ற முடிவுக்கு வர தூண்டுகிறது. ஆனால் தொற்றுநோயியல் கண்ணோட்டத்தில், ஒரு ஒற்றை ஆய்வின் முடிவுதான் இது என்பதால் கவனமாக இருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில் கண்ணாடிகள், அசுத்தமான கைகளில் இருந்து கொரோனா பரவலுக்கு எதிராக தடையாக செயல்படக்கூடும் என ஒப்புக்கொண்டுள்ளார்.