கிளிநொச்சி

கிளிநொச்சி

இளங்குமரனுக்கு கறன்ட் கம்பம் தான் தெரியும் ஆனால் நாங்கள் கறன்ட் அடித்தோம் என்றால் தாங்கமாட்டார் ! பா உ சிறிதரன் – “கறன்ட் கம்பம் இல்லாம கறன்ட் வராதில்லா” பா உ இளங்குமரன்

இளங்குமரனுக்கு கறன்ட் கம்பம் தான் தெரியும் ஆனால் நாங்கள் கறன்ட் அடித்தோம் என்றால் தாங்கமாட்டார் ! பா உ சிறிதரன் – “கறன்ட் கம்பம் இல்லாம கறன்ட் வராதில்லா” பா உ இளங்குமரன்

பா உ சிவஞானம் சிறிதரன் பா உ இளங்குமரனின் தொழிலை நையாண்டி செய்து கிளிநொச்சியில் உரையாற்றினார். தனக்கு கட்சிக்குள் நடக்கின்ற சொந்தக் கதை சோகக் கதைகளை எல்லாம் கொட்டித் தீர்த்து கிளிநொச்சியில் உள்ள நான்கு பிரதேச சபைகளைக் கைப்பற்றப் பெரும் பிரயத்தனம் எடுத்துவருகின்றார். கிளி கனிஸ்டா மகாவித்தியாலயத்தில் அதிபராக இருந்தவர். இன்றும் அப்பாடசாலையின் செயற்பாடுகளில் கட்டுப்பாடுகளை வைத்துள்ளார். கிளிநொச்சி பா உ சிறிதரனின் கோட்டை என்றால் மிகையல்ல. சிறிதரன் ஏன் எனக்கு இவ்வளவு பயப்படுகின்றார் என்று சமூகம் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் கேள்வி எழுப்பினார். அவருடைய பிரச்சாரப் பீரங்கி அலனைக் காப்பாற்ற அவர் எடுத்த முயற்சியை நாங்கள் முறியடித்தோம். அது தான் அவருக்குக் கோபம் என்றார் பா உ இளங்குமரன்.

 

கிளிநொச்சிக் கூட்டத்தில் அண்மையில் உரையாற்றுகின்ற போது பா உ இளங்குமரன் மின்சார சபையில் ஊழியராகப் பணியாற்றியதை கிண்டலடித்து: “இளங்குமரனுக்கு கறன்ட் கம்பம் தான் தெரியும் ஆனால் நாங்கள் கறன்ட் அடித்தோம் என்றால் தாங்கமாட்டார்” எனத் தனது தொழில் மேலாண்மையை வெளிப்படுத்தினார். இதே போல் பா உ இளங்குமரனின் தொழிலைக் கிண்டலடித்து ‘நாயைப் பிடியுங்கோ என்று வீடுவீடாய் மீற்றர் ரீடிங் எடுத்தவர், தன்னைப் போல் எம்பிபிஎஸ் படிக்காதவர்’ என்ற தொனியில் கருத்து வெளியிட்டு இருந்தார்.

மற்றுமொரு சந்தர்ப்பத்தில் கிளி ஊடகவியலாளர் தமிழ்செல்வனை ‘வடக்கத்தையான்’ என்று பா உ சிறிதரன் திட்டிய ஒளிப்பதிவு வெளியாகி இருந்தது. அதுபோல் பா உ அர்ச்சுனா அமைச்சர் சந்திரசேகரை மலையகத் தமிழர்கள் பற்றிய பொதுப்புத்தியில் இருந்து கைநாட்டு எழுத வாசிக்கத் தெரியாதவர் என நையாண்டி பண்ணியதோடு தான் கப்பல் விட்ட பரம்பரையிலிருந்து வந்ததாகவும் மலையக மக்களை கள்ளத் தோணிகள் கப்பலில் வந்தவர்கள் எனவும் தெரிவித்திருந்தார். பா உ இரா சாணக்கியனும் அமைச்சர் சந்திரசேகரனது நாசியில் உள்ள ஒவ்வாமைப் பிரச்சினையை வைத்து நளினம் செய்திருந்தார். தமிழ தமிழ் தேசியத் தலைமைகளுக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசியலை எதிர்கொள்ளும் அரசியல் வலிமை இல்லாததால் அவர்கள் தங்களது சாதி, பிரதேச, மதவாத அரசியலையும் எதிரணியினரின் தொழிலையும் வைத்து அரசியல் செய்யும் மூன்றாம்தர நிலைக்கு கீழிறங்கி உள்ளனர்.

இதே மூன்றாம் தர அரசியலைஇ தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தொகுதி மக்களுக்கு எதிராகவும் இந்த தமிழ் தேசியத்தை முன்னிறுத்தும் அரசியல்வாதிகள் செய்கின்றனர். இவர்கள் விளிம்புநிலை மக்களை சமூகத்தில் பல்வேறு வகையிலும் ஒடுக்கப்படும் மக்களை, தொழிலாளர்களை, ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அதிபர்கள், மருத்துவர்கள் என மேட்டுக்குடியைச் சேர்ந்த பரம்பரை மேல் தட்டினரையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் என்பதாலேயே தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரும்பியுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியில் பா உ இளங்குமரன் என்ற சாதாரண மின்சாரசபை ஊழியரும் உள்ளார். சிறிபவானந்தரா மருத்துவ கலாநிதி இவ்வாறு பல தரப்பட்ட சமூக தொழில் பிரிவுகளில் உள்ளவர்களும் தோழமை அடிப்படையில் மக்களோடு மக்களாக இணைந்து செயற்படுகின்றனர்.

சிறிதரனின் கருத்துக்களுக்கு பதிலளிப்பது போல் அமைச்சர் சந்திரசேகர் கருத்துத் தெரிவிக்கையில் நீங்கள் தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டு பிரிந்து நின்று குழாயடிச் சண்டை பிடிக்கின்றீர்கள் என்று குற்றம்சாட்டினார்.

நத்தார் தினத்தில் கிளிநொச்சியை உலுக்கிய விபத்து – 2 வயது குழந்தையையடுத்து 34 வயது தாயும் பலி

நத்தார் தினத்தில் கிளிநொச்சியை உலுக்கிய விபத்து – 2 வயது குழந்தையையடுத்து 34 வயது தாயும் பலி !

கிளிநொச்சியில் டிப்பர் வாகனத்தில் விபத்துள்ளான குடும்பம்: மகளை தொடர்ந்து  தாயும் பலி! - ஐபிசி தமிழ்

கிளிநொச்சி  நகரில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற டிப்பர்  – மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த குடும்பத்தில் மகளை தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த தாயும் உயிரிழந்துள்ளார். குறித்த தாய் நேற்று 02 உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது. சம்பவத்தில் சாவகச்சேரி கல்வயல் பகுதியைச் சேர்ந்த கஜன் யாழினி வயது 34 என்ற இளம் தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் இருந்து இரணைமடு நோக்கிப் பயணித்த டிப்பர் ரக வாகனமொன்று அதற்கு முன்பாக பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயமடைந்ததுடன் அவர்களில் 2 வயது குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்ததது.  விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் டிப்பர் ரக வாகனத்தின் சாரதி மதுபோதையில் இருந்துள்ளார். பின்னர் அவர் பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிகிச்சை பெற்றுவந்த  தாயார் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளதுடன் தந்தையும் மூத்த மகளும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிளி. பிரபல சூழலியல், புலனாய்வு ஊடகவியலாளர் தமிழ் கடத்தப்பட்டு தாக்கப்பட்டார் ! வேடிக்கை பார்த்த மக்கள் !

கிளிநொச்சியில் நன்கு அறியப்பட்ட சூழலியல் மற்றும் புலனாய்வு ஊடகவியலாளர் மு தமிழ்ச்செல்வன் கறுப்பு நிற பிக்கப் வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தமிழ்செல்வனோடு தொடர்பு கொண்ட போது, தான் நீர்திணைக்களத்திலிருந்து மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இச்சம்பவம் ஏ9 வீதியில் உள்ள கிளிநொச்சி ரெலிக்கொம்மிற்கு அருகில் இடம்பெற்றதாகத் தெரிவித்தார்.

இச்சம்பவம் பற்றி விபரித்த தமிழ்செல்வன், “நான் வந்த மோட்டர் சைக்கிளுக்கு குறுக்காக கறுப்பு நிற பிக்கப்பில் வந்தவர்கள் வாகனத்தை நிறுத்தினர். என்னை நோக்கி வந்து என்னை தங்களுடைய பிக்கப்புக்குள் பலவந்தமாக இழுத்துப் போட்டனர். ஆனாலும் என்னுயை கால்கள் வெளியே நீட்டிக்கொண்டிருந்ததால், கடத்த வந்தவர்களுக்கு பிக்அப் கதவை மூடமுடியவில்லை. மீண்டும் என்னை நோக்கி வந்து காலை உள்ளுக்கு விட்டு கதவை மூட முற்பட்டனர். அப்போது அவர்களை உதைத்து உதறித் தப்பிக்க முயன்றேன்” எனத் தெரிவித்தார் தமிழ்ச்செல்வன்.

தேசம்நெற்க்கு தமிழ்ச்செல்வன் மேலும் தெரிவிக்கையில், “உதறித் தள்ளிவிட்டு தப்பி ஓட முயன்றபோது அவர்கள் என்னைக் கலைத்துப் பிடித்து செமையாகத் தாக்கினர். அதனாலேயே மருத்துவமனைக்கு வரும்நிலையேற்பட்டது. ஆனாலும் அவர்களால் என்னை திருப்பி வானுக்குள் தள்ளமுடியவில்லை. அவர்களிடம் இருந்து தப்பிக்க முடிந்தது” எனத் தெரிவித்தார். “இந்த நிலையிலும் எனக்கு ஏற்பட்ட மிகுந்த மனவருத்தம் என்னவென்றால், என்னை வானுக்குள் போட்டு கடத்த முற்பட்ட போதும், என்னைத் தாக்கிய போதும் மக்கள் அதனைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். இச்சம்பவத்தை மக்கள் கடந்து போய்க்கொண்டே இருந்தனர். யாரும் உதவிக்கு வரவில்லை. யாருக்காக நான் எழுதிக்கொண்டு இருக்கிறேனோ, அவர்கள் வேடிக்கை பார்ப்பவர்களாக இருந்தனர்” எனக் கவலையோடு தெரிவித்தார்.

சூழலியல், மற்றும் புலனாய்வு ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் தாக்கப்பட்டதை தேசம்நெற் வன்மையாகக் கண்டிக்கின்றது. “கிளிநொச்சியில் சட்டம், ஒழுங்குகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும், கிளிநொச்சியின் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும், கசிப்பு காய்ச்சுவது, கள்ள மண் கடத்துவது, கள்ள மரம் வெட்டுவது என்பனவற்றுக்;கு எதிராக கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வருபவர் மு தமிழ்ச்செல்வன். அவர் கிளிநொச்சி மாவட்டத்தின் ஒரு சமூகக் காவல்காரன். இவரைத் தாக்கியது ஒட்டுமொத்த ஊடக சமூத்தின் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்” என லண்டனைத் தளமாகக் கொண்டு செயற்படும் தேசம்நெற் ஊடகக் குழுமத்தின் ஆசிரியர் த ஜெயபாலன் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “வடமாகாணத்தில் வன்முறைச் சம்பவங்கள் தலைவிரித்தாடுகின்றது. ஊடகவியலாளர்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தாக்குதல், மக்களின் குரல்களை மழுங்கடிப்பதற்கான ஒரு முயற்சியே” என்றும் வடக்கு ஆளுநர் வேதநாயகன் பொலிஸாருடன் பேசி வடக்கில் இவ்வாறான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் தமிழ்ச்செல்வனைத் தாக்கிய குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை வடக்கு ஆளுநர் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சிவஜோதி ஞாபகார்த்த விருது வழங்கல் நிகழ்வும் – யார் எவர் தொகுதி இரண்டு நூல் வெளியீடும் !

லிட்டில் டெக் அக்கடமியின் முன்னாள் பணிப்பாளரும் சமூக ஆளுமையுமான அமரர் வ.சிவஜோதி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு லிட்டில் டெக் அக்கடமியின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெறும் ஞாபகார்த்த நிகழ்வு நாளைய தினம் (23.11.2024) காலை 9.45 மணிக்கு கிளிநொச்சி, திருநகர், கனகராசா வீதியில் அமைந்துள்ள லிட்டில் டெக் அக்கடமி வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வில் சமூக மாற்றத்திற்காக இயங்கி கொண்டிருக்கும் ஓர் சமூக ஆளுமை கௌரவிக்கப்பட்டு அவருக்கான “சிவஜோதி ஞாபகார்த்த விருது” வழங்கப்பட்டு ஒன்றரை லட்சம் ரூபாய் பெறுமதியான பணப்பரிசிலும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு கல்விப்பணி மூலம் சமூக மாற்றத்திற்காக இயங்கி வரும் கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயம் பாடசாலை அதிபர் திருமதி ஜெயா மாணிக்கவாசகனுக்கு அவருடைய பாடசாலை சார்ந்த முன்னேற்ற செயற்பாடுகளுக்காக சிவஜோதி ஞாபகார்த்த விருதுடன் ஒன்றரை லட்சம் ரூபாய் பெறுமதியான பணப்பரிசிலும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாளைய தினம் இடம்பெறவுள்ள நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட ஆளுமைகளை ஆவணப்படுத்திய “யார் எவர் கிளிநொச்சி தொகுதி 2 ” என்ற நூலும் வெளியீடு செய்யப்படவுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு 2023 கிளிநொச்சி மாவட்ட ஆளுமைகளை ஆவணப்படுத்திய ”யார் எவர் தொகுதி ஒன்று’ எனும் நூல் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. குறித்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு கிளிநொச்சி மாவட்ட மக்களையும் – சமூக செயற்பாட்டாளர்களையும் அன்புடன் லிட்டில் டெக் அக்கடமியின் விழா ஏற்பாட்டுக் குழுவினர் அழைத்து நிற்கின்றனர்.