காந்தியம்

காந்தியம்

காந்தியமும் புளொட்டும் அரசியலும் காதலும் – செல்வி உடனான நட்பும் காதலும்

காந்தியமும் புளொட்டும் அரசியலும் காதலும் – செல்வி உடனான நட்பும் காதலும்

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!
தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 05 & 06 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 06.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 05 & 06:

தேசம்: கிட்டத்தட்ட 80 ஆம் ஆண்டு காலம் வரைக்கும் காந்தியத்தோடு உங்களுடைய செயற்பாடுகள் இருக்குது. அதுக்குப் பிறகு காந்தியம் எவ்வளவு காலம் இயங்கியது என்று நினைக்கிறீர்கள்?

அசோக்: 82 இல் வவுனியாவில் விமானாப்படைத் தாக்குதல் நடக்குது தானே. அது புளொட்டின்ட தோழர்கள்தான். அற்புதம் இன்னுமொரு தோழரும் சேர்ந்து தான் அந்த விமானப்படை தாக்குலை செய்கின்றார்கள்.

தேசம்: அற்புதம் இப்ப எங்க இருக்கிறார்?

அசோக்: லண்டனில். அதுல ஒரு தோழர் இறந்துவிட்டார் என்று நினைக்கிறேன். அற்புதம் பிறகு கைது செய்யப்பட்டவர். அதுலதான் காந்தியம் மீதான சந்தேகம் வருது.

தேசம்: எண்பதுகளிலேயே?

அசோக்: இது வந்து 83 ஆரம்பத்தில என்று நினைக்கிறேன். காந்தியம் மீதான போலீஸ் கண்காணிப்பு அதுக்குள்ள தான் வருது. முதலே சந்தேகம் இருந்திருக்கு, இயக்கத்துடன் தொடர்பு இருக்கு எண்டு. இதுல உறுதிப்படுத்தப்பட்டது. கடும் கண்காணிப்பு, அதன் பிறகு 1983 ஏப்ரல் என நினைக்கிறன். உமாமகேஸ்வரன், சந்ததியார் போன்றவர்களோடு தொடர் என்று கூறி டேவிட் ஐயாவும் டாக்டர் இராஜசுந்தரமும் கைது செய்யப்படுகிறார்கள்.

தேசம்: வேறு யார் யார் கைது செய்யப்படுகிறார்கள்?

அசோக்: அந்தக் காலகட்டத்தில் காந்தியத்தில் வேலை செய்த நிறைய பேர்… அதுக்கு முதல் ஒருதரம் சந்தேகத்தின் பெயரில் குமரன் தோழரும் கைது செய்யப்படுகிறார், கோயில்குளம் காந்தீய ஒப்பிசிலிருந்து. அப்பவே சந்தேகம் வந்திட்டு, புளொட்டுக்கு வேலை செய்பவர் குமரன் என்று. கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டவர். பிறகு விடுவிக்கப்படுகின்றார்.

தேசம்: ராஜசுந்தரம் எல்லாம் இந்த தாக்குதல் தொடர்பாக தான் கைது செய்யப்படுகிறார்கள்?

அசோக்: காந்தியத்துக்கும், இந்த தாக்குதலுடன் தொடர்புடைய ஆயுத இயக்கத்துக்கும் தொடர்பு இருக்கு என்று சொல்லி அச்சந்தேகமும் இருந்ததினாலும் தான் உமாமகேஸ்வரன், சந்ததியார் போன்றவர்களோடு தொடர் என்று கூறி கூறி டேவிட் ஐயாவும் டாக்டர் இராஜசுந்தரமும் கைது செய்யப்படுகிறார்கள்.

தேசம்: காந்தியத்தில் இருக்கும்போது இது தொடர்பில் ஏதாவது காரணங்களுக்காக நீங்கள் கைது செய்யப்பட்டீர்களா?

அசோக் : காந்தியத்தில் இருக்கும்போது நான் கைது செய்யப்படவில்லை. நான் முதன் முதலாக கைது செய்யப்படும்போது புளொட்டில் …

தேசம்: 80க்கு பிறகுதான் அது நடக்குதா

அசோக்: ஓம்

தேசம்: அப்ப அதைப்பற்றி பிறகு கதைப்போம். இப்ப நீங்கள் பதின்ம வயதில் இருக்கிறீர்கள் அரசியல் துடிப்பு அதெல்லாம் சரி. காதலின் பருவமும் இதுதான். அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள். பிற்காலத்தில் நாங்கள் எல்லாரும் அறிந்த உங்களுக்கும் செல்விக்குமான உறவு. அது எப்படி உருவாகிற்று?

அசோக்: இளம்வயது கோளாறுகள் எல்லோருக்கும் இருக்கும் தானே. அது நிறைய நடந்திருக்கு. செல்வியின் உடனான தொடர்பு எப்படியென்றால். அந்த நேரம் பேனா நட்பு என்ற ஒன்று இருந்தது. பத்திரிகைகளில் பேனா நண்பர்களின் முகவரி வரும்.

தேசம்: அது என்ன என்று சொல்ல முடியும் என்றால் நல்லா இருக்கும்.

அசோக்: பத்திரிகைகள் சஞ்சிகைகளில் பேனா நண்பர் பகுதி என்று ஒன்று வரும். அதில பேனா நட்புக்களை விரும்புகின்றவர்களின் பெயர் முகவரி அவர்களின் விருப்பங்கள் ஈடுபாடுகள் பொழுது போக்குகள் பற்றிய விபரங்கள் இருக்கும். உதாரணமாக நான் அசோக் என்றால்… அசோக் வயது போட்டு எனக்கு விருப்பமான துறை, கவிதை, கட்டுரை, இலக்கியம், விளையாட்டுத்துறை என்று எல்லாம் வரும். அப்ப அதில் ஈடுபாடு கொண்டவங்க எல்லாம் பென் ஃப்ரெண்ட் ஆவார்கள். கடிதத் தொடர்புதான்.

தேசம்: அந்த முகவரிகள் பத்திரிகையில் வரும். அதுல இருந்து உறவுகள் ஏற்படும்.

அசோக்: அந்த உறவினால் என்ன நடக்கும் என்று கேட்டால் உங்களுக்கு இடையே ஆழமான ஒரு கருத்து பரிமாற்றத்தை உரையாடலை அது கொண்டுவரும். ஏனென்றால் உங்களுடைய துறை சார்ந்த நபருடன் தானே நீங்கள் தொடர்பு கொள்வீர்கள்..

தேசம்: ஃபேஸ்புக்கும் முதல் வந்த வடிவம்…

அசோக்: பேஸ்புக் என்றது வேறு உலகம். பேனா நட்பு என்பது இது ஆரோக்கியமான உலகம். அது உண்மையில ஆழ்ந்த நட்புக்கான ஒரு வெளி. எழுத்துக்கூடாக நீங்க பல்வேறு சர்ச்சைகள் கருத்துக்களை கதைப்பீங்க. உரையாடல், விமர்சனப் பண்பை வளர்த்துக் கொள்வீங்க… அப்படித்தான் எனக்கு நிறைய பென் பிரண்ட் இருந்தது. அப்படியொரு பென் பிரண்ட் தான் செல்வியும்…

தேசம்: எந்த வயசு கட்டத்துல வந்தது… ?

அசோக்: நான் நினைக்கிறேன், 16 17 வயசுல வந்து இருக்கும் என்று நினைக்கிறேன். அதாவது இளந்தளிர் வாசகர் வட்டம் இயங்கிக் கொண்டிருந்த காலகட்டம் என நினைக்கிறன்… அந்த காலகட்டத்திலேயே தான் தொடர்பு வருகிறது. பிறகு நான் காந்தியத்துக்குள்ள வரேக்க செல்வி காந்தியத்துக்கும் வாரா என்ட தொடர்பில. நான் சந்திக்க முதல், செல்வியைச் சந்தித்தது என்னுடைய நண்பர்கள்தான். செல்வியை சந்திக்கிற என்னுடைய நண்பர்கள் செல்வி தொடர்பாக அவர்கள் தாற அபிப்பிராயம் செல்வி மீதான பெருமதிப்பை ஏற்படுத்துது.

தேசம் : உங்களுக்கு 16,17 வயசுல நீங்க தொடர்புகொண்டா அவாவுக்கு எத்தனை வயசு அப்ப?

அசோக்: செல்வி என்னை விட 3 வயது இளமை.

தேசம்: அப்ப அவாவுக்கு கிட்டத்தட்ட 14 வயசு இருக்கும். அப்ப இது பேனா நட்பு என்ற ரீதியில் தான் உருவானது. எப்ப இது நீங்க காதலியாக அல்லது…

அசோக்: அது நீண்ட காலம். காந்தியத்துக்குள்ள வந்ததுக்கு பிறகு தோழர்கள் நிறைய பேர் செல்வியை சந்திக்கினம். செல்வி காந்தியத்துக்குள் வந்து வேலை செய்கிறார். பிறகு புளொட்டுக்கு வாறா. புளொட்டின் ஆரம்ப காலத்தில் தான் அந்த நட்பு உருவாகிறது.

தேசம்: அது எந்த ஆண்டு காலகட்டமாக இருக்கும்?

அசோக்: 83இல் அதான் தொடங்கியிருக்கும் என்று நினைக்கிறேன். அதுக்கு முதல் நெருக்கமான பென் பிரண்ட் தான். நேரடியாக சந்தித்த பிறகுதான் அந்த லவ் எனக்கு உருவாகுது.

தேசம்: எப்ப நேரடியாக சந்திச்சனீங்கள்?

அசோக்: 82 நேரடியா சந்தித்திருப்போம்.

தேசம்: நீங்கள் காந்தியத்துக்குள்ள வேலை செய்யும்போது வவுனியாவுக்கு போறீங்க. வவுனியாவில் தான் அந்த சந்திப்பு ஏற்படுதா?

அசோக்: ஓம். நான் முதன்முதல் சந்தித்தது சேமமடுவில. செல்வியின்ர வீட்டில. அண்ணி யாழ்ப்பாண யூனிவசிற்றில படித்துக்கொண்டிருந்தவ. அப்ப செல்வி, யாழ்ப்பாணத்திலே அண்ணியைச் சந்திச்சு இருக்காங்க. அப்ப அண்ணி சொன்னா “செல்வி வந்தது. யாழ்ப்பாணம் வந்தனீ, செல்வியை சந்தித்துவிட்டு போ” என்று.

தேசம்: அப்ப நீங்க வவுனியாவில் சந்திக்கவில்லையா ?

அசோக்: வவுனியாவில் சேமமடுவிலதான் தான் சந்திச்சன். செல்வி யாழ்ப்பாணத்தில் ரியுசன் சென்டரில படித்துக் கொண்டிருந்தவ. அப்ப நான் யாழ்ப்பாணம் வர, செல்வி போயிற்றாங்க சேமமடுவுக்கு. அப்ப அண்ணி சொன்னா, “செல்வி சேமமடுவுக்கு போயிட்டுது, வேணும்டா அங்க போய் சந்தித்துவிட்டு போ” என்று. அப்ப நான் வவுனியா போகும் போது, ஓமந்தையில் இறங்கி , சேமமடுவுக்கு போய் சந்திச்சிட்டுத் தான் ஊருக்கு போனான்.

தேசம்: அப்போ உங்களுக்கு…

அசோக்: லவ் எல்லாம் இல்லை. பிரெண்டாதான் இருந்தது.

தேசம்: இது எத்தனையாம் ஆண்டு நடந்தது ?

அசோக்: 83ஆக இருக்க இயலாது . 82 நடுப்பகுதியாக இருக்கலாம்.

தேசம்: செல்வியின் அரசியல் மாற்றம் என்பது காந்தியத்திலிருந்து புளொட்டுக்குப் போக… நீங்கள்தான் செல்வியையும் காந்தியத்துக்கு கொண்டு வாறீங்கள்…

அசோக்: ஓம் என்ட பிரண்ட் என்டதும் நிறைய பேர் சந்திக்கினம். அப்ப காந்திய ஈடுபாடுகள் வருது. சேமமடு பக்கத்தில காந்திய வேலைத்திட்டங்கள் எல்லாம் இருந்தது. அப்ப காந்திய கருத்தரங்குகளிலும் செல்வி கலந்துகொண்டார்.

தேசம்:அப்ப நிறைய பெண்கள் ஈடுபடுகிறார்களா? பெண்களின் பங்களிப்பு எப்படி இருந்தது காந்தியத்தில்?

அசோக்: காந்தியத்தின் சிறுவர் பாடசாலைகள் முழுக்க பெண்கள் தானே ஆசிரியர்கள். வொலன்டியேர்ஸில குடியேற்றத் திட்டங்கள் போன்ற வேலைகளுக்கு ஆண்கள் ஈடுபட்டார்களேயொழிய கல்வி, சுகாதாரம் சார்ந்த விடயங்களில் எல்லாம் பெண்கள்தான் ஈடுபட்டார்கள். கூட்டுறவு சங்க நியாயவிலை கடைகளில் அவற்றுக்கு பொறுப்பாக இருப்பார்கள். அப்ப செல்வி வந்து இதுல இல்ல. செல்வி வொலன்டியராக கருத்தரங்குகளில் கலந்துகொள்ளுற ஆளாத்தான் இருந்தா.

பாகம் 06:

தேசம்: காந்திய இயக்கத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் மற்றவர்களுடனான உறவுக்கும், அவருடனான உறவுக்கும், எப்படி அது உங்களுக்கான காதல் என்ற நிலைக்கு போச்சுது ?

அசோக்: பேனா நட்பு என்ற உறவு வரும் போது அது இலக்கிய உறவு மாத்திரமல்ல. எங்களுக்கு அரசியல் ஆர்வம் இருந்ததால, அது ஒரு அரசியல் சார்ந்த உறவாகவும் இருக்கும்தானே. ஒரு ஆழமான உரையாடலாக இருக்கும். எங்கட விருப்புக்கள் இதனை தீர்மானிக்கும். அத்தோட பேனா நட்பு பரஸ்பரம் ஆழமான புரிதலை நேசிப்பை அன்பை உருவாக்கும். ஆணும், பெண்ணுமாக இந்த நட்பு இருக் கிற பட்சத்தில love வருவதற்கான சாத்தியம் நிறைய இருக்கு. அப்படித்தான் எங்களுக்குள்ள love வந்தது.

தேசம்: நீங்க அந்த உறவு வருவதற்கு முதல் நீங்கள் புளொட்டில் இணையவில்லை. காந்திய இயக்கத்தில் தான் இருக்கிறீர்கள்.

அசோக்: இரண்டிலும் இருக்கிறேன். அதற்குப் பிறகு செல்வி எங்களோட வந்த வேலை செய்யத் தொடங்குகிறா. காந்தியத்திலும் ஆண், பெண் உறவு என்பது ஆரோக்கியமானதாக இருந்தது. தோழமையுடன் இருந்தது. காதல்களும் இருந்தது. காதல்களும் கூட ஆரோக்கியமான உறவாகதான் இருந்தன.

தேசம்: ஆரோக்கியமான காதல் எனும் போது ? நீங்கள் எதைக் குறிப்பாக சொல்லவாறீங்கள்?

அசோக்: ஒரு பரஸ்பரம் சமநிலை. இப்ப நாங்க சொல்றோம் தானே ஒரு ஆணாதிக்கத்தனம் இல்லாமல் பரஸ்பரம் உரிமைகளை கொண்ட, சமநிலையில் தோழிகளாக பார்த்தல், ஒரு ஆரோக்கியமான சமநிலை உரையாடல். சமத்துவம். ஒரு சிக்கல் இருக்கு தானே, காதலுக்குள்ள. காதல் என்றாலும் கூட ,அதுக்குள்ளேயும் ஒரு ஆணாதிக்கத்தனம், ஆளுமை ஒன்று இருக்கும். அதிகாரம் ஒன்று இருக்கும். அந்த அதிகாரமற்ற முறையில் சுதந்திரமான உண்மையான நேசிப்பு கொண்ட காதல் ஒன்று உருவாகுவதற்கான சாத்தியம் இருந்தது.

தேசம்: பொதுவாகவே காதல் சம்பந்தமான விஷயங்கள் அது மலரேக்க தனிப்பட்ட எதிர்காலம் சம்பந்தமாக தான் கூடுதலாக கதைக்கிறதா இருக்கும். தாங்கள் எப்படி எதிர்காலத்தைக் கொண்டு போவது. இது வந்து முற்றிலும் மாறுபட்ட சூழலாக இருந்திருக்கும். ஏனென்றால், ரெண்டு பேருமே சேர்ந்து அரசியலில் ஈடுபடுகின்றீர்கள். அப்ப உங்களுடைய உரையாடல் பொதுவாகவே அரசியல் சார்ந்து தான் இருக்குமா அல்லது தனிப்பட்ட விருப்பங்கள் சார்ந்து கதைக்கப்படுமா ?

அசோக்: ஆரம்ப காலத்தில பேனா நட்பில இருக்கக்க தனிப்பட்ட எங்களின் எதிர்பார்ப்புக்கள் ஆசைகள் விருப்பங்கள் என்று என்னவெல்லாமோ கதைத் திருக்கிறம். காதல் என்று வரும் போதும் தனிப்பட்ட விஷயங்கள் கதைத்திருப்பம். எதிர்கால இருவரின் இணைந்த வாழ்வு பற்றி நிறைய கதைத்திருக்கிறம். செல்வி மீது செல்வியின்ர அம்மம்மா, அம்மா எல்லோரும் பெரிய நம்பிக்கை கொண்டிருந்தாங்க. செல்விக்கு அப்பா இல்ல. எங்க love செல்வியின்ர அம்மாவுக்கு தெரிய வந்த போது, செல்வியின்ர அம்மா எனக்கொரு கடிதம் எழுதி இருந்தாங்க. கடிதம் ஒரு தாயின்ர நியாயத்தை கொண்டிருந்தது. அது எனக்கு கவலைய வேதனைய கொடுத்திச்சி. படிக்க வேண்டிய வயதில் காதலா என்ற குற்ற உணர்வை என்னில வந்தது. செல்வியின்ர எதிர்கால நல்வாழ்வு என்னால வீணாகிவிடுமோ என்றெல்லாம் நான் அப்ப யோசிச்சி இருக்கிறன்.

தான் கடிதம் எழுதினது பற்றி செல்வியிற்ற சொல்ல வேண்டாம் என அம்மா கேட்டிருந்தா. நான் அத பற்றி செல்வியிற்ற சொன்னதில்ல. நானும் செல்வியும் அம்மாவை ஏமாற்றிவிட்டோமோ என்று இப்ப நினைக்கிறன்.

இயக்கத்துக்கு வந்தபிறகு முழுக்க முழுக்க இயக்கம் சார்ந்த உரையாடல்களாகத் தான் இருந்தது. அடுத்தது இயக்கத்துக்கு வந்ததுக்கு பிறகு இரண்டு பேரும் பிஸியாகிட்டம். அப்ப சந்திக்கிறதும் குறைவு. நாங்க கூடுதலாக சந்திக்க தொடங்கினது யாழ்ப்பாணம் வந்த பிறகுதான்.

தேசம்: உங்கள் அரசியல் தெளிவு மற்ற தோழர்களிடம் இருந்ததா?

அசோக்: இருந்தது ஏனென்றால் வாசிப்பும், அரசியல் அறிவூட்டல்களும் நிறைய நடந்தது. காந்தியத்தில் வேலை செய்த நிறைய தோழர்களைப் பார்த்தீர்கள் என்றால் நான் சந்தித்த தோழர்கள் கருத்தியல் ரீதியாக வளர்ந்தாக்கள் தான். அதற்குக் காரணம் பின்புலம் புளொட் இருந்தது. புளொட்டுக்குள்ள வந்த தோழர்களை பார்த்தீர்களென்றால் ஏதோ ஒரு வகையில் ஒரு சித்தாந்த ரீதியாக வளர்ச்சி அடைந்து தோழர்களாக தான் இருந்திருப்பார்கள். தலைமையை விடுங்கள், தலைமை தொடர்பா எங்களுக்கு நிறைய விமர்சனம் இருந்தது. அதுக்கு கீழ வந்த தோழர்களைப் பார்த்தீர்களென்றால் அவங்க கருத்தியல் ரீதியாக வளர்ச்சியடைந்து தான் புளொட்டைத் தேர்ந்தெடுக்கிறார்கள். புளொட்டை தேர்வு செய்வதற்கான அரசியல் தெளிவு ஆரம்பத்தில் அவர்களிடம் இருந்துள்ளது.

ஏனென்றால், அந்த கால கட்டங்களில் தோன்றிய இயக்கங்கள் தொடர்பாக புலிகள் தொடர்பான விமர்சனம் இருக்கு அவங்களுக்கு. மார்க்சிய ஐடியோலொஜி கொண்ட இயக்கமாக ஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈரோஸ், புளொட் இருக்கு. அப்ப அவர்கள் புளொட்டைத் தான் தேர்ந்தெடுக்கிறார்கள். ஏனென்றால் புளொட் மக்கள் மத்தியில் வேலை செய்யுது. அவர்களைப் பொறுத்த வரைக்கும் மக்கள் மத்தியில் வேலை செய்ய வேண்டுமென்ற அபிலாசை இருக்கின்றபடியால் அவங்கள் புளொட்டைத் தேர்ந்தெடுக்கிறாங்க. புளொட்டுக்கு வந்ததுக்கு பிறகு நான் சந்தித்த தோழர்கள் முழுப் பேரும் அரசியல் வளர்ச்சி கொண்டவர்களாக இருந்தாங்க. மக்கள் மத்தியில் வேலை செய்யும் ஆர்வமும், அபிலாசையும் கொண்டவர்களாக இருந்தாங்க.

தேசம்: யாழ்ப்பாண நிலையும் இப்படித்தான் இருந்ததா?

அசோக் : 83 யூலை கலவரத்திற்கு பிறகுதான், யாழ்ப்பாணத்தில புளொட்டினுடைய வெகுஜன அமைப்புகளை உருவாக்குவதற்கு முயல்கிறோம். அதற்கு முதல் யாழ்ப்பாணத்தில் அமைப்புகள் இருக்கவில்லை. தோழர் சத்தியமூர்த்தியும், தோழர் குமரனும் தான் அங்க முக்கியமான ஆட்களாக இருந்தவை. சத்தியமூர்த்தியும், ரிங்கோ கேதீஸ்வரனும் யாழ்ப்பான யுனிவர்சிட்டியில் இருந்தபடியால், அங்கு பெரிதாக வேலை செய்ய முடியவில்லை. புளொட் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்கள் அவ்வளவுதான்.

எனக்கு தெரிஞ்சு யாழ்ப்பாணத்தில் ஆட்கள் இல்லை. அண்டர்கிரவுண்டுல சுழிபுரத்தில் ஒரு சில தோழர்கள் வேலை செய்தார்கள். சிவசண்முகமூர்த்தியுடன் சுந்தரத்துடன் இயங்கியவர்கள் அவர்கள்.
வெகுஜன மக்கள் மத்தியில் வேலை செய்வதற்கு ஆட்களே இல்லை. அந்த காலகட்டத்தில் பலம் வாய்ந்த அமைப்பாக EPRLF இருந்தது. எல்லா வகையிலும் அவங்கள் பலமான அமைப்பாக இருந்தவங்க. கருத்தியல் சார்ந்தும் நிறைய வளர்ச்சி அடைந்த தோழர்கள் அவங்களிட்ட இருந்தாங்க. எங்களுக்கு அப்படி இல்ல. அடுத்தது பொலிஸ் நெருக்கடி ,கண்காணிப்புக்கள் இருந்தபடியால யாழ்ப்பாண பொறுப்பாக இருந்த குமரன் தோழரால் வேலை செய்ய முடியாமல் போய்விட்டது. அதால குமரன் 83 க்கு முன்னர் முல்லைத்தீவு, வவுனியாவில் எங்களுடன் தான் வேலை செய்தவர். 83 யூலை கலவரத்திற்கு பிறகுதான் மக்கள் அமைப்பு அரசியல் வேலைத்திட்டம் என்று யாழ்ப்பாணத்தில் தொடங்குகிறம்.

தேசம்: இந்த காலகட்டத்தில் அரசியலில் பெண்களின் ஈடுபாடு எவ்வாறு இருந்தது? எவ்வளவு தூரம் பெண்கள் ஈர்க்கப்பட்டு இருந்தார்கள்? அரசியலை நோக்கி அல்லது பெண்களை அரசியலை நோக்கி கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவா?

அசோக்: காந்தியத்தில் வேலை செய்த பெண்கள் பலரும் புளொட்டில் இணைகின்றனர். நிறைய பெண் தோழர்கள். சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால் 83க்கு முன்னர் நிறைய பாசறைகள் நடந்தது.

தேசம்: 83 ஜூலைக்கு முதலே இந்த அரசியல் வகுப்புகள் தீவிரமாக நடக்கிறது…

அசோக் : ஓம், தீவிரமாக நடந்தது. யாழ்ப்பாணத்தில நடக்கேலையேயொழிய, அங்கால நிறைய நடந்தது. வவுனியாவில சமணர்குளம் என்ற இடத்தில தொடர்ச்சியாக அரசியல் பாசறைகள் நடந்தது. தங்கராஜா என்ற தோழர் பழைய JVP தோழர் அரசியல் வகுப்புக்கள் எடுத்தவர். பாசறைகள் வகுப்புகள் இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து நடக்கும். தோழர் கேசவன் எல்லாம் வந்து வகுப்பு எடுப்பார்கள். எல்லா தோழர்களுக்குமான ஒரு அரசியல் வகுப்பாக தான் இருந்தது அது.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் நான் நினைக்கிறேன் கூடுதலாக அரசு எதிர்ப்பு ஊர்வலங்கள் அப்படியான சம்பவங்கள் கூட நடந்திருக்கும்.

அசோக்: நடந்தது. புளொட் ஆரம்ப காலத்தில் ஒரு வெகுஜன அரசியல் அமைப்பு. ஒரு அண்டர் கிரவுன்ட் அமைப்பாக இருக்கேலதானே. அந்த நேரத்தில் உண்ணாவிரதம், கிராமங்களில் கருத்தரங்குகள் நடத்தி இருக்குறம். 82இல் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட போராளிகளை, மக்களை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டங்கள் நிறைய இடங்களில் நடத்தியிருக்கிறோம். 81ம் ஆண்டும் 82ம் ஆண்டும் திருகோணமலையிலும், மட்டக்களப்பிலும் மே தினக் கூட்டம் நடத்திஇருக்கிறம். அதால தான் நாங்கள் வெகுஜன அமைப்பாக பரவலாக பார்க்கப்பட்டோம்.

தேசம்: இன்னும் ஒரு விஷயம் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் குறிப்பாக மட்டக்களப்பில் மூன்று சமூகங்களுமே கிட்டத்தட்ட சரி சமமான நிலையில் இருக்கிறது. முதல் உரையாடலில் சொல்லி இருந்தீர்கள், ஜேவிபியின் அரசியல் வகுப்புகள் எடுக்க வந்தவர்களில் முஸ்லிம் தோழர்களும் இருந்தார்கள் என்று. தமிழ் முஸ்லிம் உறவு எப்படி இருந்தது அந்தக் காலத்தில்.

அசோக்: மிக நெருக்கமாக இருந்தது. புளொட்டில் முஸ்லிம் தோழர்கள் நிறைய பேர் இருந்தார்கள். முஸ்லிம், தமிழர் உறவுகள் ஒரு சிக்கலான விஷயமாக போய்விட்டது பிற்காலத்தில்.

மட்டக்களப்பில் ஆரம்ப காலத்தில் முஸ்லிம் தோழர்கள் இருந்தார்கள். உதாரணமாக நாக படையின் உருவாக்கம் எப்படி நடந்தது தெரியும்தானே… புளொட் வெகுஜன அமைப்பு வேலையைத்தான் கூடுதலாக செய்துகொண்டிருந்தது. தீவிரவாத நடவடிக்கைகளில் பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை. அப்ப புலிகள் வேலை செய்ய தொடங்கி விட்டார்கள். ஒரு சில தோழர்களுக்கு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்ற உணர்வு ஒன்று இருந்தது.

புளொட்டுக்கு ஆரம்ப காலத்தில் எங்களுட்ட அந்த ஐடியா இருக்கேல. நாங்கள் வெகுஜன மக்கள் மத்தியிலும், காந்தியத்தோடையும் இருந்தபடியால், மக்கள் மத்தியிலான வேலைத்திட்டமாகத்தான், தொடர்பாகதான் எங்களுடைய கொள்கை இருந்தது. அரசியல்மயப்படுத்தல், மக்களை அணிதிரட்டல், அதற்கு ஊடாக மக்கள் யுத்தத்தை கொண்டு வருதல் என்பதுதான் புளொட்டின் கோட்பாடாக இருந்தது. அந்த நேரத்தில இந்த தோழர்கள் மிகத் தீவிரமாக இயங்க வேண்டும் என்று சொல்லி, முடிவெடுத்து அப்படி செயற்படவும் தொடங்கிவிட்டனர். தயா, சிறிபத்மன் கொஞ்சத் தோழர்கள் மிகத் தீவிரமாக இருந்தார்கள். அதுல ஜூனைதீன் இரண்டு மூன்று முஸ்லிம் தோழர்ககளும் இருந்தவர்கள்… இவங்க எல்லாம் சேர்ந்துதான் இந்த நாக படையை உருவாக்கினாங்க… அது கொஞ்சம் எல்லை மீறிப் போகும்போது நாங்கள் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் வந்தது. நாங்கள் தீவிரமாக இல்லை என்று சொல்லி, அவர்கள் தனிநபர் பயங்கரவாதத்தில் ஈடுபட வெளிக்கிட்டாங்க.

தேசம்: அப்படி என்றால் என்ன கொள்ளை போன்ற சம்பவங்களா?

அசோக்: கொள்ளை இல்லை. மட்டக்களப்பு மாலா ராமச்சந்திரன். அந்தக் கொலை அவங்கதான் செய்தது.

தேசம்: இது கழுகு படையா? நாக படையா?

அசோக்: நாக படை. இந்த நாக படைக்கு ஊடாகத்தான் மாலா ராமச்சந்திரன் கொலை நடக்குது. நாகேந்திரன் என்றவர் சுடப்பட்டு அவர் தப்பிவிட்டார்… அப்ப ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் ஆட்சிக்காலம். யுஎன்பி கட்சியை சேர்ந்தவர்களை சுடுவதுதான் இவர்களின் நோக்கமாக இருந்தது. நடவடிக்கை எடுக்காமல் விட்டிருந்தால் மட்டக்களப்பில பலரை சுட்டிருப்பாங்க. எந்தவொரு அரசியல் தெளிவும் இவங்ககிட்ட இருக்கல்ல. அப்ப நான் மட்டக்களப்பு மாவட்ட புளொட் அமைப்பாளர். இவங்க வாசுதேவாவின் தனிப்பட்ட உறவை வைத்துக் கொண்டு தன்னிச்சையாக இயங்க வெளிக்கிட்டாங்க. இது வாசுதேவாவுக்கும் சிக்கலாகி விட்டது. அது எங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக வந்துட்டது.

ஏனென்றால், இவங்கள் புளொட் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஆட்கள். ஒரு தனி இயக்கமாக நாக படை என்று உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட தொடங்கிவிட்டாங்க… அது எங்களுக்கு பெரிய சிக்கலாக வந்தது. பிறகு அவர்களை எல்லாம் தடுத்து நடவடிக்கை எடுத்து, அதில் ஈடுபட வேண்டாம் என்று சொல்லி. பிறகு சம்பவத்தில் ஈடுபட்ட முக்கியமான தோழர்கள் எல்.ரீ.ரீக்கு போயிட்டாங்க.

தேசம்: தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் அவ்வளவு தூரம் தீவிரவாத இயக்கமாக இல்லாதபடியால்… அதுல இருந்த முஸ்லிம் தோழர்களுக்கு பிறகு என்ன நடந்தது ?

அசோக்: ஜூனைதீன் என்ற தோழர் புலிகளோடு சேர்ந்து பிறகு லெப்டினட் கேணலாக இருந்து , பிறகு இறந்துவிட்டார் என்று நினைக்கிறேன். முக்கியமான பதவியில் இருந்தவர். மற்ற முஸ்லிம் தோழர்களின் பெயர் மறந்து போயிட்டேன். அவங்களும் எல்.ரீ.ரீ தான்.

தேசம்: அந்தக் கால கட்டங்களில் 80களின் ஆரம்பம் 83 ஜூலை முதல் மட்டக்களப்பு அல்லது கிழக்கு மாகாணத்தில் எப்படி இந்த வெவ்வேறு இயக்கங்களின் செயற்பாடுகள் இருக்கிறது. கிட்டத்தட்ட எல்லோரும் ஒரே மாதிரியான வளர்ச்சி நிலையில் இருந்தினமா? அல்லது…

அசோக்: இல்லை எல்.ரீ.ரீ .ஈ மிகக் குறைந்த அளவில் தான் இருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எஃப் தோழர்கள் நிறைய பேர் வேலை செய்தவர்கள். ஈபிஆர்எல்எஃப் தோழர்களுக்கும் எங்களுக்கும் மிக நெருக்கமான உறவு இருந்தது. எல்.ரீ.ரீ . ஈ ஆட்களோடும் உறவு இருந்தது. யாழ்ப்பாணத்திற்கு வந்த போது மிகப் பெரிய அதிர்ச்சி எனக்கு இருந்தது. ஏனென்றால் யாழ்ப்பாணத்தில பெரிய முரண்பாடு இயக்கங்களுக்குள்ள. அது மட்டக்களப்பில் இருக்கேல.

எல்.ரீ.ரீயில வேலை செய்த தோழர்கள் எல்லாம் நாங்கள் மிக நெருக்கமாக இருந்தோம். வேணுதாஸ் அண்ணர் எல்லாம் எல்.ரீ.ரீயில் மிக முக்கியமான ஆள். ரஞ்சன் கனகரட்ணம் என்ட ஃப்ரெண்ட். பரமதேவா என்ற ஃப்ரண்ட். புளொட் வாசு தேவாவின் தம்பி. எங்களுக்குள்ள நெருக்கம் ஒன்று இருந்தது. ரஞ்சனும், நானும் பரமதேவாவும் ஜெயிலில் ஒன்றாக இருந்தம். அப்ப அவர்களுக்கு புளொட்டுக்கு வாற ஐடியா இருக்கேல. எல்.ரீ.ரீக்கு போற ஐடியா இருந்தது. அப்புறம் நாங்க வெளில வந்தும் மிக நெருக்கமாகத் தான் இருந்தம்.

தேசம்: யாழ்ப்பாணத்தில் இயக்கங்களுக்கு இடையிலான வன்முறை மிகக்கூர்மையாகவும், மட்டக்களப்பில் நட்பு ரீதியாகவும் இருந்ததற்கு காரணம் என்ன?

அசோக் : யாழ்ப்பாணத்தில் அதிகாரப் போட்டி ஒன்று இருந்ததாக தெரிஞ்சது. நாங்க பிறகு கதைக்கலாம் இதைப் பற்றி. நான் யாழ்ப்பாணம் வரைக்கும் அந்த உறவுகள் எனக்கு நீடித்தது. அப்ப இறைகுமாரன், உமைகுமாரன் யாழ்ப்பாணத்தில கொலை செய்யப்பட்டபோது எங்களுக்கு பெரிய அதிர்ச்சி. இக் கொலைகளை யார் செய்தது என்று உண்மையாக எங்களுக்கு தெரியாது. இறைகுமாரன் வாசுதேவாவின் ஃப்ரண்ட். எனக்கும் தெரியும் இறைகுமாரனை. வாசுதேவவோட இளைஞர் பேரவையில் இருந்து பிரண்ட்.
அப்ப நாங்கள் மட்டக்களப்பில் இறைகுமாரனுக்கு அஞ்சலி கூட்டம் நடத்தினாங்கள். அதற்குப்பிறகுதான் வேணுதாஸ் அண்ணை என்னை கூப்பிட்டு சொல்கிறார் அசோக் உங்கட இயக்கம்தான் செய்தது என்று சொல்லி. உனக்கு தெரியாதா என்று.

தேசம்: இறைகுமாரன், உமாகுமாரன் புலிகளுக்கு ஆதரவாளர்கள்?

அசோக்: ஓம். இரண்டு வாரத்திற்கு பிறகு பிறகு மட்டக்களப்பில் ஒரு ஒரு கூட்டம் நடந்தது. அதற்கு அமிர்தலிங்கம் வந்தவர். அப்பதான் அவர் ஓப்பினா பேசினார் கொலை செய்து போட்டு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்துகிறார்கள் என்று. எனக்கும் வாசுதேவாவுக்கும் பயங்கரப் பேச்சு. அப்பதான் வெளில தெரியும் எல்லாருக்கும் புளொட் தான் செய்தது என்று சொல்லி. அதற்கிடையில் வாசுதேவா புளொட் தான் செய்தது என்று தெரிஞ்ச உடனே யாழ்ப்பாணம் போனார். போயிட்டு வந்து சொன்னார் உண்மையிலேயே புளொட் தான் செய்தது என்று. எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

தேசம்: அதுக்கான காரணங்கள் விளக்கங்கள் தரப்பட்டதா உங்களுக்கு…

அசோக்: அதற்குப் பிறகு சென்டர் கமிட்டில அதெல்லாம் கதைக்கப்பட்டது. தன்னிச்சையாக சில பேர் செய்ததாக. ஆனால் அவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கல்ல.

தேசம்: இந்த கொலைகளில் சந்ததியாருக்கு தொடர்பு இருக்கின்றதா?

அசோக் : இல்ல. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தோழர் சந்ததியாரால் அமைப்புக்கு வந்தவங்க. சந்ததியாருக்கு மிகவும் தெரிஞ்சவங்க. இதனால்தான் அப்படி சந்தேகம் பலருக்கு வந்தது. உண்மையிலே தன்னிச்சையான செயற்பாடுதான் இந்த கொலைகள்.

தேசம்: இதெல்லாம் புளொட் ஒரு கட்டமைப்புக்குள் வருவதற்கு முதல் நடந்த சம்பவங்களா அல்லது அதற்குப் பிறகு நடந்த சம்பவங்களா… ?

அசோக்: இந்த கொலைகள் நடக்கும் போது யாழ்ப்பாணத்தில் புளொட் கட்டமைப்பு உருவாகல்ல. ஏனைய மாவட்டங்களில் உருவாக்கப்பட்டுவிட்டது. இது சுந்தரம் சித்திரா அச்சகத்தில் வைத்து புலிகளால் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்வினையான சுந்தரத்தின் விசுவாசிகளால் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. புளொட்டின் கட்டமைப்பு பார்த்தீர்களென்றால் 79 ஆண்டு நவம்பர் புளொட்டின் உருவாக்கமே வருது. தமிழிழ மக்கள் விடுதலைக் கழகம் என்ற பெயர் வைக்கப்படுகிறது. அதற்கு முதல் புதியபாதை என்ற அமைப்பு தான் இருந்தது. புதியபாதை என்ற அமைப்பு பிறகு புளொட் என்ற பெயருடன் உருவாக்கப்படுகிறது.

உருவாக்கப்பட்ட மத்திய குழுவில் இருந்தவர்களைப் பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள். உமா மகேஸ்வரன், சந்ததியார், ஐயர், சாந்தன், சுந்தரம். இதில ஐயரும், சாந்தனும் பிரபாகரனோடு சேர்ந்து புலிகள் அமைப்பை தொடங்கியவர்களுள் முக்கியமானவர்கள். 79 நவம்பர் மாதம் உருவாக்கப்பட்ட மத்திய குழுவின் பிற்பாடு அவங்களுக்குள்ள ஒரு முரண்பாடு வருகிறது .ஏனென்றால் தன்னிச்சையான போக்கு நடக்குது.

தேசம்: இந்த காலகட்டத்தில் நீங்கள்…

அசோக் : புளொட்டில இல்லை நான். இது காலப்போக்கில் கேள்விப்பட்ட விஷயங்கள். என்ன முரண்பாடு வருது எப்படி என்றால். இவங்கள் எப்படி புலிகளில் என்னென்ன தவறு நடக்கக் கூடாது என்று எதிர்பார்த்தார்களோ அதெல்லாம் இங்க நடக்குது. முதலில் வெகுஜன அமைப்புக்களை உருவாக்கி அதன் பலத்தில் இராணுவத் தாக்குதல்களைத் திட்டமிடுவது. பின்னதாக இரண்டு நடவடிக்கைகளையும் சமாந்தரமாக முன்னெடுக்கலாம் என்ற கருத்து தான் இருந்தது. பிறகு மத்திய குழுவில் சுந்தரம், உமாமகேஸ்வரன், சந்ததியார் இவங்கட ஆதிக்கம் மேலோங்க கருத்து முரண்பாடு வருகின்றது. பிறகு சுந்தரம் உமா மகேஸ்வரனும் சந்ததியாரும் சேர்த்து தன்னிச்சையான போக்குல ஈடுபடுகிறார்கள் என்று சொல்லி ஐயரும், சாந்தனும் முரண்படுகின்றாங்க. பிரச்சனை வரும்போது சாந்தனும் ஐயரும் அந்த கமிட்டியை விட்டு போகிறாங்க… அதுல மிஞ்சினது சந்ததியாரும், உமாமகேஸ்வரனும், சுந்தரமும் தான். இப்ப பார்க்கும்போது தெரியுது என்னவென்றால், புலிகளின் அதே அரசியலுடன் தான் இவர்கள் தொடர்ச்சியாக வந்திருக்கிறங்க என்று. ஏனென்றால் மத்திய குழுவுக்குள்ள ஜனநாயகம் எதுவும் இருக்கல்ல.

மக்கள் போராட்டம், தேசிய விடுதலைப்போராட்டம், வர்க்க அணி திரட்டல் எந்த அரசியல் தெளிவும் இவர்களிடம் இருக்கல்ல. அனைத்து ஒடுக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் என்ற புளொட் வாசகம் எம்மைப் போன்றவங்கள உள்வாங்க பயன்படுத்தபட்ட கோசம் என்பது இப்ப நினைக்கக்குள்ள விளங்குது.

தேசம்: இதே காரணங்களுக்காகத்தானே பிரபாகரனோடு முரண்பட்டு ஐயர் வெளியேறியவர்…

அசோக் : ஓம். அப்போ ஐயரோடு சாந்தன், நாகராஜா, குமணன் போன்றவர்கள் வெறியேறுகிறாங்க. பிரபாகரனோடு ராகவன், மாத்தையா, செல்லக்கிளி போன்றவர்கள் இருக்கிறாங்க.

தேசம்: இதில பார்க்கும் போது இதில ஓரளவு சமப்படுத்தப்பட்ட பலம் ஒன்று சந்தததியார், உமா மகேஸ்வரன், சுந்தரத்துக்கு ஒரு ஈகுவலான பலம் இருந்திருக்கு. அதில சந்ததியாரும் சுந்தரமும் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்கள்…

அசோக்: உமாமகேஸ்வர் கட்டுவன். ஐயர் புண்ணாலைக்கட்டுவன்.

தேசம்: சாந்தன்…

அசோக்: தெரியல்ல.

தேசம் :இது ஒரு லூசான கட்டமைப்பா…

அசோக்: பெயரளவில்தான் மத்திய குழுவே தவிர அரசியல் இயக்க கட்டமைப்புக்கான எந்த அரசியல் அமைப்பு வடிவங்களை விதிகளை புளொட் கொண்டிருக்கல்ல. இவங்கள் வெளியேறினதுக்கு பிறகு நான் நினைக்கிறேன் அதுக்குள்ள பிறகு கண்ணனும், ராஜனும் சேர்ந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அதற்குப் பிறகு சென்றல் கமிட்டி என்று உருவாக்கப்படவில்லை. அப்படியேதான் இயங்கிக்கொண்டிருந்தது. பிறகுதான் பூரணமான சென்ட்ரல் கமிட்டி பிற்காலத்தில் உருவாக்கப்படுது 83 ஜூலைக்கு பிற்பாடு.

தேசம்: ஆம் ஆண்டு ஜூலை வரைக்கும் இப்படியான ஒரு கட்டமைப்புதான்?

அசோக்: இப்படியான கட்டமைப்புதான். ஆனா யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில மாவட்ட நிருவாக கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு விட்டன அந்த நேரத்தில். மாவட்ட அமைப்பாளராக நாங்கள் இருந்தோம். மாவட்ட அமைப்பாளர் கூட்டம் வவுனியாவிலும் மற்ற இடங்களிலும் நடக்கும். ஒரு உத்தியோகபூர்வமான அமைப்பா மாவட்ட அமைப்புக்கள் இருந்தது. மாவட்ட அமைப்பாளருக்கு கீழ கிராமிய அமைப்பாளர்கள் எல்லாம் இருந்தாங்க. மட்டக்களப்பு ஜெயில் விரெக் நடந்து பின்தளம் சென்ற பின்னதான் சென்ட்ரல் கமிட்டி பிற்காலத்தில் பூரணமாக உருவாக்கப்படுது.

காந்தியத்தின் தோற்றமும் அதன் செயற்பாடுகளும் புளொட்டின் உருவாக்கமும்!

காந்தியத்தின் தோற்றமும் அதன் செயற்பாடுகளும் புளொட்டின் உருவாக்கமும்

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!
தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 04 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 06.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 4

தேசம்: 77 ஆம் ஆண்டு கலவரத்துக்குப் பிறகு ஜே.வி.பியுடனான உறவு முறிந்து ஒரு இடைவெளிக்குப் பிறகு, காந்தியத்திட்ட போறீங்க. காந்தியத்தின் செயற்பாடுகள் அந்த காலத்தில் எப்படி இருந்தது?

அசோக்: 77 ஜே.வி.பியினுடைய தொடர்பு துண்டிக்கப்பட்ட பின்பு, நாங்க சுயமாக வாசகர் வட்டம், தேசிய இளைஞர் சேவை மன்றம், அவர்கள் நடாத்தும் விளையாட்டு முகாம், தலைமைத்துவ பயிற்சி நெறி, சிரமதானம் என்று இதிலையும் ஈடுபடுகின்றோம். இலக்கியங்களுக்கு ஊடாக வெளிக்கிடுறம். அந்த நேரத்துல காந்திய வேலைத்திட்டங்கள் கிழக்கு மாகாணத்தில் தொடங்கிவிட்டது. மாலையர்கட்டு என்ற இடத்தில் காந்திய பண்ணை போடுவதற்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டு இருக்கு. அந்த நேரத்தில் தொண்டர் இல்லை , காந்திய வேலைத்திட்டங்கள் செய்ய. நிறைய சிறுவர் பாடசாலைககளும் ஆரம்பிக்க ப்பட்டன.

தேசம்: அப்ப நீங்கள் ஈடுபட தொடங்கும்போதே காந்தியம் இயங்கத் தொடங்கிவிட்டது…

அசோக்: ஆம் காந்தியம் இயங்கத் தொடங்கிற்று… வடக்கிலே கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, இவையெல்லாம் தொடங்கிவிட்டது. யாழ்ப்பாணத்தில இயங்கவில்லை. திருகோணமலையில் எல்லாம் ஃபுல்லா இயங்க தொடங்கிற்று.

தேசம்: அதன் பின்னணி என்ன மாதிரி ? யார் யார் காந்தியத்தை உருவாக்கினது?

அசோக்: நான் நினைக்கிறேன் என்னவென்றால், 77 இல் கே சி நித்தியானந்தா தமிழர் புனர்வாழ்வு கழகம் ரி.ஆர்.ஆர்.ஓ என்ற அமைப்பை தொடங்குகிறார்…

தேசம்: கே.சி நித்தியானந்தா தான் தோழர் டக்ளஸ் தேவானந்தாவினுடைய வளர்ப்பு தந்தை என்று சொல்வது. அவர் ஒரு தொழிற்சங்கவாதியாக இருந்தவர்.

அசோக்: ஆம். அன்றைய தொழிற்சங்கவாதிகளாக இலங்கையில் விளங்கிய திசாநாயக்க, கந்தசாமி, வைகுந்தவாசன், ஆசிர்வாதம், எஸ்.டி.பண்டாரநாயக்க, திருமதி தமரா இலங்கரத்ன, பிலிப் குணவர்தன, போன்றவர்களுடன் மிகவும் நெருக்கமாக தொழிற்சங்க வேலைகள் செய்தவர் கே. சி. நித்தியானந்தா. அதே காலகட்டத்தில் தான் டேவிட் ஐயா ஆட்கள் காந்திய அமைப்பை தொடங்குகிறார்கள்.

தேசம் : ரீ.ஆர்.ஆர்.ஓ தொடங்கப்பட்ட அதே காலகட்டத்தில் தான் காந்தியமும் தொடங்கப்படுகிறது…

அசோக் : ஆமா ஏனென்றால், அந்த இனக்கலவரத்துக்குப் பிறகு பாதிக்கப்பட்ட மலையக மக்களை குடியேற்ற வேண்டும், அவர்களுக்கு புனர்வாழ்வு, எதிர்கால நம்பிக்கைகளை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் தொடங்கப்படுகிறது. காந்தியத்தை தொடங்குவதில் முக்கியமாக இருந்தவர்கள் டேவிட் ஐயா, டாக்டர் ராஜசுந்தரம், சாந்தினி, அடுத்தது கூடுதலா சண்முகலிங்கம் , அதுல கூட ஈடுபாட்டுடன் இருந்தவர்.

சரோஜினிதேவி என்டு கனடாவில இருக்கிறா, அவங்களின்ர தம்பிதான் சண்முகலிங்கம். ஏனென்டா, அவர் மலையகத்தில வேலை செய்தவர். ஜே.வி.பியோட உறவா இருந்தவர். அவருக்கு நிறைய மலையகத் தொடர்பெல்லாம் இருந்தது. அடுத்தது, அவர் காந்தியத்தை உருவாக்கினதில ஒராள் இல்ல. காந்தியத்தோட ஈடுபட்டவர். காந்திய உருவாக்கத்தில வந்து நாலு, ஐந்து பேர் இருக்கிறாங்க. டேவிட் ஐயா, ராஜசுந்தரம், சாந்தினி, ஒரு சிங்களத் தோழரும் அதில இருந்தவர் என்று நினைக்கிறேன்.

தேசம்: இந்த காந்தியம் தொடங்கினாக்களுக்கும், தமிழரசுக் கட்சிக்கும் அல்லது தமிழ்த்தேசிய அரசியலுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கா?

அசோக்: டேவிட் ஐயாவுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில எந்த உடன்பாடும் இருக்கேல. காந்திய குடியேற்றத் திட்டங்கள் தொடர்பாக தமிழரசுக் கட்சிக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால், அவர்கள் நினைத்தார்கள் காந்தியம் காலப்போக்கில், ஒரு அரசியல் கட்சியாக வரும் என்ற ஒரு பயம் அவங்களுக்கு இருந்தது. காந்தியப் பணிகள் தொடங்கி, பாராளுமன்ற கட்சியாக வருமோ என்ற பயம் இருந்தது. அதால காந்திய அமைப்புக்கு மிக எதிராகத்தான் தமிழரசு கட்சி இருந்தது. அடுத்தது, டேவிட் ஐயாவுக்கும் கோட்பாட்டு ரீதியாக, அரசியல்ல தமிழரசுக் கட்சியை பிடிக்கல. தமிழ் தேசியவாதியாக அவர் இருந்தாலும்…

தேசம்: டேவிட் ஐயாவின் பின்னணி பற்றி சொல்லுறீங்களா?

அசோக்: அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ண் யுனிவசிற்றியில் ஆக்கிடெக்கில் பட்டம் பெற்றவர். லண்டனிலும், நைஜீரியாவிலும் Urban planning study முடித்தவர். பிறகு கென்யாவின் மொம்பாசா urban planning யில முதன்மைக் கட்டடக் கலைஞராகப் பணியாற்றினாங்க. உலகம் முழுதும் பிரபல ஆர்க்கிடெக் ஆக இருந்து வந்தவர். வந்து காந்தியத்தைத் தொடங்குகிறார்.

தேசம் : எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் அவர்?

அசோக்: நான் நினைக்கிறேன், யாழ்ப்பாணம் தீவுப் பகுதியை சேர்ந்தவர். கரம்பன் என்று நினைக்கிறேன். இளவாலை சென் கென்றிஸில் தான் படித்திருப்பார் என்று நினைக்கிறேன். பல்வேறு பிரபலமான ஆக்கிடெக் கட்டடங்களை எல்லாம் அவர் உருவாக்கியிருக்கிறார் ஐரோப்பிய நாடுகளில். அவருடைய வரலாற்றை படித்தால் தெரியும், அவர் எங்கெங்கு வேலை செய்திருக்கிறார் என்று. பிரபலமான ஆர்க்கிட்டெக்காக இருந்திருக்கிறார். ஆர்க்கிட்டெக் பற்றி அறிய உலகமெல்லாம் சுத்தி இருக்கின்றார். காந்தியம் பண்ணைய தொடங்குவதற்கு முதல் அவர், மாதிரி கிராமம், மாதிரிகூட்டுப் பண்ணை பற்றி நிறைய ஐடியாக்கள், டேவிட் ஐயாவிடம் இருந்திருக்கு. கூட்டு பண்ணையை பற்றி படிப்பதற்காக இஸ்ரேவேலுக்கெல்லாம் போய் இருக்கிறார்.

தேசம்: அப்ப காந்தியத்தின்ட அந்த concptயை, ஐடியாவை அவர்தான் கொண்டு வாரார்?

அசோக்: அவர்தான் கொண்டு வாரார். காந்தியக் சித்தாந்தத்தின் மீது தீவிரமான ஈடுபாடு இருந்திருக்கு. பல நாடுகளுக்கு போய் கூட்டுப்பண்ணை, சுய பொருளாதார கட்டமைப்புக்கள் எப்படி உருவாக்கப்படுது என்றெல்லாம் பார்க்திருக்கிறார். அந்த மாதிரித் திட்டத்தைதான் இங்க கொண்டு வாறார், காந்திய பண்ணைகளை உருவாக்குவதற்கு. பாடசாலைகள், சுகாதார வசதிகள், சத்துணவு திட்டம், சிறுவர்களுக்கான பால், மா விநியோகம், பெண்களுக்கான வேலை வாய்ப்புகள், நடமாடும் மருத்துவமனைகள், பெண்களுக்கான பயிற்சி நிலையங்கள், ஆசிரியர்கள் பயிற்சி திட்டங்கள் என்று பல்வேறு திட்டங்களை கொண்டு வாறார்.

தேசம்: டேவிட் ஐயா பற்றி சொன்னீர்கள். கே.சி நித்தியானந்தா காரைநகர் …
அசோக்: ஆனா, கொழும்பில்தான் கே.சி நித்தியானந்தா இருந்தவர். அவருடைய இருப்பிடம் அங்கதான். தொழிற்சங்கவாதியாக அங்க இருந்தவர். அங்கதான் டக்ளஸ் தோழர் இருந்து வளர்ந்தவர் என்று நினைக்கிறேன். லங்கா சமசமாஜக் கட்சியிர அரசாங்க எழுதுவினைஞர் சேவை நலச் சங்கத்தை ஆரம்பித்து வைத்தவர்களில் முக்கியமானவர் இவர்.

தேசம்: டாக்டர் ராஜசுந்தரம் அவரைப் பற்றி…

அசோக்: அவர் டாக்டர். வவுனியாவில் கிளினிக் வைத்திருந்தவர். அவர் வைஃப் சாந்தினி அவங்களும் டாக்டர். “சாந்தினி கிளினிக்” என்று வவுனியாவில் பிரபலமாக இருந்தது. ராஜசுந்தரம் மலையகத்தில் வைத்தியராக இருந்தவர். அந்த இணைப்பு தான் அவரை காந்தியத்துடன் இணைக்குது. அவருக்கும் நிறைய ஈடுபாடு இருந்தது. மலையக மக்கள் மீதான ஒரு கரிசனையும் இருந்தபடியால்… பொருளாதார பெரும்பங்கு டேவிட் ஐயாவின் சொந்தக் காசுதான் . மற்றப்படி பல்வேறு அமைப்புகள் தனிநபர்களுக்கு ஊடாகவும் பணம் பெறப்பட்டது என நினைக்கிறன்.

தேசம்: வேறு யார் குறிப்பாக ஈடுபட்டிருக்கிறார்கள் ?

அசோக்: காந்தியத்தில் நிறைய பெயர் ஈடுபட்டிருக்கின்றார்கள் சரோஜினி அடுத்தது…

தேசம்: அவருக்கு ஏதாவது அரசியல் பின்னணி இருக்கா… ?

அசோக்: சரோஜினி பிறகு புளொட்டில சென்றக் கமிட்டில இருந்தவ. காந்தியத்த்துக் ஊடாகத்தான் நிறையபேர் புளொட்டுக்கு வாறாங்கள். அந்த காலகட்டத்தில் காந்தியத்தில் வேலை செய்தாக்கள் வந்து… தோழர் சந்ததியார் வேலை செய்தவர்.

தேசம்: நீங்கள் போகும்போது சந்ததியார் காந்தியத்தில் இருந்தவரா?

அசோக்: சந்ததியார் காந்தியத்தில் இருந்தவர். நான் நினைக்கிறேன் ஜென்னி காந்தியத்தில் இருந்தவ. ஜெயச்சந்திரன் பார்த்தன் காந்தியத்தில் இருந்தவர். வாசுதேவா… அடுத்தது, ஜென்னிட அம்மா பிலோமினா லோரன்ஸ் அவா தான் திருகோணமலைக்கு மாவட்ட காந்திய பொறுப்பாளராக இருந்தவா.

தேசம்: ஆனா அவாவும் தமிழ்தேசிய தமிழரசுக் கட்சிதானே…

அசோக் : தமிழரசுக் கட்சியின் பிரதம பேச்சாளர். மங்கையர்கரசி மாதிரி ஒரு பேச்சாளர். நன்றாக பேசக்கூடியவர்.

தேசம்: தமிழரசுக் கட்சிக்கு பெரிய உடன்பாடு இல்லாவிட்டாலும் அதுல உறுப்பினர்கள் சிலர் இருந்திருக்கினம்.

அசோக்: தமிழரசுக் கட்சி நிறைய பேர் காந்தியத்தில் இருந்திருக்கிறாங்கள். தலைமைக்கு அதோட உடன்பாடு இருக்கேலயேயொழிய, அதைக்கூட வெளிப்படையாக காட்டவில்லை. அது உள்ளுக்குள்ள ஒரு பனிப்போர் இருந்ததேயொழிய, வெளிப்படையாக காட்டேல. வெளிப்படையாத் தெரிஞ்சாதான் இவங்களுக்கு தெரிஞ்சிருக்கும். அது உள்ளுக்குள்ளேயே இருந்ததுதான்.

அப்ப வாசுதேவா எங்களை சந்திக்கிறார். சந்தித்து காந்தியத்துக்கூடாக இப்படி அபிவிருத்தி வேலைகள், மக்கள் நலப்பணிகள் செய்யலாம் என்று சொல்ல, எங்களுக்கு உடன்பாடு வருது. ஏனென்றால், எங்களுக்கு சமூக போராட்டம், சமூக அக்கறை இருக்கிறபடியால், நாங்கள் இதுல வேலை செய்யலாம் என்று சொல்லி…

தம்பலவத்தை என்ற ஒரு கிராமம் இருக்கு, மண்டூருக்கு அங்கால. அது வந்து எல்லைப்புற கிராமம். அந்த கிராமத்திற்கு பக்கத்தில் மாலையர்கட்டில்ல வந்து ஒரு காந்திய குடியேற்றத் திட்டம் செய்ய வேண்டும் என்று சொல்லி வாசுதேவா கூப்பிடுகின்றார். அப்ப நாங்கள், அங்க போய் காடுகளை அழித்து வீடுகள் அமைத்து இந்த குடியேற்றத் திட்டத்தில நாங்கள் உதவி செய்கிறோம்.

தேசம்: அது எல்லைப்புற கிராமமா?

அசோக்: எல்லைப்புற கிராமம். அதுல முக்கியமா பேரின்பம் என்ற ஒரு தோழர் வேலை செய்தவர். அவர் எங்கே என்றே தெரியல. அவர் முக்கியமா அதுல ஈடுபட்டவர். காந்தியப் பண்ணைக்கு பொறுப்பாக இருந்தது சண்முகம் என்று ஒரு தோழர், அவர் இப்பவும் இருக்கிறார். மிக முக்கியமாக இருந்தவர்.

தேசம்: போராட்டங்களோடு சம்பந்தப்பட்ட பலர் இந்தக் காந்தியதுத்துடன் தொடர்பில இருக்க வாய்ப்பு இருந்ததா?

அசோக்: ஓம். மண்டுர் மகேந்திரன் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவரெல்லாம் தொடர்பு இருந்தது.

தேசம் : யாழ் மாவட்டத்தில் இருந்து வந்த இளைஞர்கள் பலர் அதுல இருந்திருக்கினமா?

அசோக்: மட்டக்களப்பு காந்தியத்திலாவா…

தேசம் : இல்ல பொதுவா காந்தியத்தில…

அசோக்: யாழ்ப்பணத்தில காந்தியம் இருக்கேலத்தானே.

தேசம்: இல்ல அங்கே இருந்து வந்தவர்கள் காந்தியத்தில் ஈடுபட்டார்களா… ?

அசோக்: தோழர் சந்ததியார் இருந்தவர். காலப்போக்கில் வவுனியா வேலைத்திட்டங்களில் யாழ்ப்பாணத் தோழர்கள் என்று சொல்லி… தோழர் பொன்னுத்துரையை, குமரனை, தோழர் ஜூலியை தெரியும். குமரன் புளொட்டுக்கூடாக வந்ததேயொழிய, காந்திய வேலைத்திட்டங்களில் யாழ்ப்பாணத் தோழர்கள் குறைவு.
சில வேளைகளில் ஏனைய குடியேற்றத்திட்டங்களில் வேலை செய்திருப்பாங்க. 81ம் ஆண்டு என நினைக்கிறன், யாழ்ப்பாணத்தில ஒரு கிராமத்தில சில சிரமதான வேலைகள், குடிசைகள் அமைச்சி கொடுத்தம். கிராமத்தின் பெயர் ஞாபகம் இல்லை. அப்ப நாங்கதான் வவுனியாவில இருந்தும் மட்டக்களப்பில இருந்தும் போய் இருந்தம். யாழ்ப்பாணத்தில இருந்து குமரன் தோழரும் இன்னொரு தோழரும் வந்திருந்தாங்க.

தேசம்: நீங்கள் சொல்வதைப் பார்த்தால், காந்தியத்தில் இருந்தவைக்கு கூடுதலா பிற்காலத்தில் புளொட்டுடன் தான் தொடர்பு கூட வந்திருக்கா அல்லது வேறு அமைப்புகளுடனும் தொடர்பு வந்திருக்கா?

அசோக்: காந்திய பண்ணைகளை உருவாக்குவதற்கு தொண்டர்கள் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் புளொட் உருவாகிவிட்டது. அப்ப சந்ததியார் காந்தியத்தில் இருந்தபடியால், சந்ததியார் என்ன செய்தார் என்றால் புளொட் இளைஞர்களை காந்தியத்துக்குள் இணைத்தார். அப்ப யார் யாரெல்லாம் புளொட்டில் இருந்தார்களோ அவர்கள் எல்லாம் காந்தியத்தில் வேலை செய்தார்கள். அதனாலதான் புளொட்டுக்கும் காந்தியத்துக்கும் உறவு வந்திச்சுது. காந்தியத்தில் இருந்த தோழர்கள் வேறு அமைப்புக்களுக்கு போனமாதிரி நான் அறியல்ல.

தேசம்: தொண்டர்கள் புளொட் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று டேவிட் ஐயாவுக்கு தெரியுமா?

அசோக்: இந்த தொண்டர்கள் புளொட் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று டேவிட் ஐயாக்கு ஓரளவு தெரியும் . புளொட் ஆயுத அமைப்பு என்று டேவிட் ஐயாவுக்கு தெரிந்திருந்தால் நான் நினைக்கவில்லை, அவர் விரும்பி இருப்பார் என்று. ஒரு ஆயுத இயக்கத்தோடு காந்தியத்தை இணைப்பதற்கு அவர் விரும்பி இருக்க மாட்டார். அவர் நினைத்திருப்பார் புளோட் ஒரு வெகுஜன அரசியல் இயக்கம் தான் என்று.

ஆனால் டாக்டர் ராஜசுந்தரத்துக்கு தெரிந்திருக்கும். ஏனென்றால், சந்ததியாரும் டாக்டர் ராஜசுந்தரமும் நல்ல நெருக்கம். சந்ததியார் அண்டர்கிரவுண்ட் இயக்கத்தில் இருக்கிறார் என்று கட்டாயம் டாக்டர் ராஜசுந்தரத்துக்கு தெரிந்திருக்கும். டேவிட் ஐயாவுக்கு அதெல்லாம் தெரிந்திருக்க சான்ஸ் இருந்திருக்காது. டேவிட் ஐயா நினைத்திருப்பார், சந்ததியார் சமூக அக்கறையோடு, காந்திய அமைப்பில ஆர்வத்தோட சமூக சேவைக்கு வாரார் என்று.

இப்படித்தான் வாசுதேவாவும் காந்தியத்தில் இணைந்தவர். சந்ததியார் கூட பெருசா வெளியில தெரியல. வாசுதேவா வெளிப்படையாகவே புளொட்டினுடைய அமைப்புச் செயலாளராக இருந்தவர். அதோட காந்தியத்தினுடைய கிழக்குமாகாண இணைப்பாளர். அப்ப புளோட் அண்டர்கிரவுண்ட் இயக்கம் இல்லை. அண்டர்கிரவுண்ட் ஆனது எப்ப என்று கேட்டால், சுந்தரத்தின் படுகொலைக்குப் பிறகு. அப்போ புளொட் ஒரு வெகுஜன அரசியல் இயக்கம்தான்.

தேசம்: காந்தீயம் ஒரு சமூக பொருளாதார மேம்பாட்டு அமைப்பு. புளொட் ஆயுத விடுதலை அமைப்பு. காந்தியத்தோடு தொடர்வு வைத்தால் அது காந்திய அமைப்பின் வளர்ச்சிக்கு ஆபத்து என்று சந்ததியாருக்கு தெரியவில்லையா ? இதை எப்படி பார்க்கின்றீங்க…

அசோக்: உண்மையில இப்ப யோசிக்கும் போது, நிறைய தவறுகள் விட்டிருக்கிறம். மக்கள் நல அபிவிருத்தி சமூக மேம்பாட்டு அமைப்பு ஒன்று, சுதந்திரமாக இயங்குவதுதான் சரி என்ற அரசியல் புரிதல் அன்று எங்களுக்கு இல்லாம போயிற்று. சமூக மேம்பாட்டு வெகுஜன அமைப்புக்களுக்கும், இராணுவ கட்டமைப்பு கொண்ட விடுதலை இயக்கத்திற்குமான உறவு நிலை, தொடர்வு பற்றிய அரசியல் தெளிவு எங்கட்ட இருந்திருந்தால் காந்திய அமைப்பை காப்பாற்றி இருக்க முடியும். இப்ப யோசிக்கும்போது எங்க தவறு தெரிகிறது.

தேசம்: புளொட் வெகுஜன அமைப்பாக அது பதிவு செய்யப்பட் டதா?

அசோக்: இல்லை. புளொட் ரெஜிஸ்ட்டர் பண்ணுப்படல. புளொட் வந்து ஒரு அரசியல் வெகுஜன இயக்கமாக வெளியில இயங்குகிறது. உண்ணாவிரதம், பகிஷ்கரிப்பு, துண்டு பிரசுரம் அடித்தல், புதிய பாதை பத்திரிகை, கருத்தரங்குகள் போன்ற சட்டத்திற்கு உட்பட்ட வெகுஜன அரசியல் வேலைத் திட்டங்களில ஈடுபடுகிறது.

ஆயுத இயக்கம் என்றால் தானே தடை செய்யப்படும். அது ஏதாவது குற்றங்களில் ஈடுபட்டு… புளொட் வெளிப்படையாக குற்றங்களிலில ஈடுபடவில்லை. ஆனைக்கோட்டை பொலிஸ் நிலைய தாக்குதலில் கூட, புளொட் என்று வெளிப்படையாகத் தெரியாது. எப்ப அடையாளப்படுத்தப்படுகிறது என்றால், சுந்தரம் படுகொலைக்குப் பிறகுதான் அடையாளப்படுத்தப்படுகிறது. சுந்தரம் புளொட் என்று தெரிய வருகிறது.

தேசம்: காந்தியத்தில் உங்களுடைய செயற்பாடுகள் எப்படி அமைந்தன?

அசோக்: காந்தியத்தில் எங்கள் செயற்பாடுகள் என்னென்று கேட்டால்… படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்…

தேசம்: அப்ப நீங்கள் ஏ எல் படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்…

அசோக்: ஓ.எல் எடுத்துட்டன். ஏ.எல் எடுக்கல நான் குழப்பிட்டன். அந்தக் காலகட்டத்தில் சனி – ஞாயிறுகளில், ஒரு விடுமுறை காலத்தில்தான் காந்திய வேலைத்திட்டங்களில் ஈடுபடுவது. முக்கியமாக ஈஸ்வரன் தோழர்… காந்தியத்தில் மிக முக்கியமானவர். அவர் புளொட்டில மத்தியகுழுவில் இருந்தவர். எனக்கு முதன் முதல் புளொட் தோழர் என்று அறிமுகமானவர் ஈஸ்வரன் தோழர்தான். ஈஸ்வரன் முதலில் வந்து காந்தியத்தின் ஆளாகத்தான் எனக்கு அறிமுகமானவர். அப்ப அவருக்கு வேறு பெயர்.

மாலையர்கட்டு பண்ணை வேலை முடிந்த பிறகு, செட்டிகுளம் கல்லாறு பண்ணையை ஈஸ்வரனே பொறுப்பு எடுக்கிறார். அவர்தான் முன்நின்று அதனை தொடங்குகின்றார். அவரும் நானும் தான் முதல் முதல் அந்தக் செட்டிக்குளம் கல்லாறு பண்ணைக்கு போறோம். பயங்கர முசுரு காடு. ஈஸ்வரன் மிகப்பெரிய உழைப்பாளி, மிக எளிமையானவர். நான் சொகுசாய் இருந்த ஆள்தானே… அப்ப நம்மட வேலைகள் தெரியும்தானே. அவர் மிக நேர்மையான உழைப்பாளி. அவருக்கு ஊடாகத்தான் நான், உடல் உழைப்பு என்றால் என்ன என்பதை தெரிந்து கொண்டேன்.

ஒடுக்கட்ட வறிய மக்களோடு அவர்களாக மாறி அவர்களுக்காக சேவை செய்வதென்பதை ஈஸ்வரன் தோழரிடம் நாம் கற்கவேண்டும். அவ்வளவு எளிமையானவர். மிகப்பெரிய காந்திய வேலைத்திட்டம் அது என்று நினைக்கிறன். நிறைய செட்டிக்குள தோழர்கள் உதவி செய்தார்கள். தர்மலிங்கம் என்றொரு தோழர். இதில முக்கியமானவர். இப்ப அழிந்து போய் இருக்கும் என நினைக்கிறேன். மலையக மக்கள் இருக்கிறார்களோ தெரியவில்லை.

தேசம்: செட்டிகுளத்திலயா…

அசோக்: செட்டிக்குளத்திற்கு பக்கத்தில் கல்லாறு பண்ணையில்…

தேசம்: காந்திய இயக்கத்தில் அதில் உங்களுக்கு அரசியல் ரீதியான அறிவூட்டல்களும் நடந்ததா?

அசோக்: இல்லை இல்லை. காந்திய பண்ணையில் சேவை மனப்பான்மைதான். காந்தியத்தில் இருக்கும்போதுதான் வாசுதேவா ஊடாக அரசியல் உறவுகள் வருது எனக்கு. உண்மையிலேயே வாசுதேவா காந்தியத்துக்குள் எங்களை ஈடுபடுத்தியது புளொட்டுக்குள்ள கொண்டு போகத்தான். நேரடியாக நாங்கள் புளொட்டுக்குள்ள போக விரும்பமாட்டோம் என்பதற்காக…

தேசம்: அதுக்குள்ள ஒரு ஹிடின் அஜெண்டா இருந்திருக்கு…

அசோக் : அஜெண்டா இருந்திருக்கு. அதுக்கு பிறகு அவர் புளொட் பற்றிக் கதைக்க வெளிக்கிடுறார். அப்ப சில அறிமுகங்கள் வருது. நான் முன்ன சொன்ன மாதிரி ஈஸ்வரன் தோழரை முதலில் புளொட் என்று எங்களுக்கு அறிமுகப்படுத்துகிறார். பிறகு தோழர் டொமினிக், கேசவன், ஜெயச்சந்திரன் – பார்த்தன், ரகுமான் ஜான், குமரன் பொன்னுத்துரை, முரளி எனப்பலரும் அறிமுகம் ஆகிறார்கள்.

தேசம்: தோழர் கேசவன் பிற்காலத்தில் தீப்பொறி…

அசோக்: ஆம் . புதிய தோர் உலகம் நாவல் எழுதியவர். புலிகளால கொலை செய்யப்பட்டவர்.

தேசம்: இதெல்லாம் காந்தியத்தில் நீங்கள் இருந்த காலகட்டத்தில்…

அசோக்: ஆம். காந்தியத்தில் இருந்த காலகட்டத்தில் புளொட்டுக்குள்ள போவதற்கான முதல் ஆரம்பம். அந்த அறிமுகங்கள் நடக்குது. அப்ப இவங்கள் புளொட்டுக்கு வேலை செய்கிறார்கள்.

தேசம்: காந்தியத்திலும் இருக்கினம், புளொட்டிலும் இருக்கினம்.

அசோக்: ஆம். அப்ப எங்கட அரசியல் தெரியும்தானே… எங்களுக்கு தமிழீழம் தனிநாடு கோரிக்கை இதிலெல்லாம் ஈடுபாடில்லை என்று தெரியும் தானே. அப்ப இவங்கள் எங்களுக்கு முன்னுக்கு வைக்கிற கோஷம் என்னவென்றால் வர்க்கப் போராட்டம். தேசிய முரண்பாடுகள், இனப்பிரச்சனைகள், தமிழ் மக்களுக்கு உரிமை அற்ற தன்மை, பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சனைக்கான முதல் தீர்வும், அதன் பின் வர்க்கப்போராட்டமும். அதாவது, தேசிய விடுதலைப் போரட்டத்தின் ஊடாக வர்க்கப்போராட்டம். கிடைக்கின்ற சோசலிச தமிழ் ஈழத்தினுடாக, எதிர்காலத்தில் சிங்கள உழைக்கும் தொழிலாள விவசாய வர்க்கத்தின் – பாட்டாளி வர்க்கத்தின் இணைப்போடு, தென்னிலங்கை மக்களின் வர்க்கப்போராட்டத்திற்கு ஆதரவளித்தல்.

தமிழீழம்தான். ஆனா அது ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஊடாக வர்க்கப் போராட்டம். தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஊடாக வர்க்கப் போராட்டத்தை நோக்கிய பயணம்தான். அதற்கான முதல் படிதான் இந்த தேசிய விடுதலைப் போராட்டம். அப்ப எங்களுக்கு தேசிய ஒடுக்குமுறை இருக்குத்தானே.
தேசிய விடுதலைக்கூடாக ஒரு வர்க்கப் போராட்டத்தை கொண்டு போறது என்ற சித்தாந்தம் எங்களுக்கு பிடித்துக்கொண்டது. அப்ப கேட்க உண்மையாத்தான் எங்களுக்கு இருந்தது.

இப்ப பரிசீலிக்கும் போது, எனக்குள் பல்வேறு விமர்சனங்கள் உள்ளது. அப்ப மிக திருப்தியாக இருந்தது. அப்ப நாங்க நினைச்சம் அதுல போய் சேர்ந்து வேலை செய்யலாம் என்று.

பிறகு வவுனியாவுக்கு வாறம். தோழர் சந்ததியார் எல்லாரையும் சந்திக்கிறோம். அந்த நேரத்தில் மட்டக்களப்பில் அமைப்பாளராக சின்னாச்சி என்ற ஒரு தோழர் வேலை செய்தவர். அம்பாறை மாவட்டத்தில் கருணாநிதி என்ற தோழர் வேலை செய்தவர். அவர்கள் பெருசாக இல்லை. பிற்காலத்தில் இரண்டு பேரும் புலிகளுக்கு பொயிற்றாங்க.

அப்ப மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளராக என்னையும், அம்பாறைக்கு ஜீவா என்கிற அகஸ்டின் செபமாலையையும் நியமிக்கிறாங்க. இப்ப அவர் ஜேர்மனியில் இருக்கின்றார். எனக்கு உதவியாக வரதன் என்கிற ராகவன் தோழர் நியமிக்கப்படுகின்றார். அவர் இப்ப நாட்டிலதான் இருக்கிறார்.

தேசம்: மாலையர்கட்டு முடிய நீங்கள் செட்டிகுளம் போறீங்க. எவ்வளவு காலம் காந்தியத்துடன் உங்களுடைய செயற்பாடு இருந்தது?

அசோக்: காந்தியத்தில ஒரு வருஷத்துக்குள்ள தான் இருந்தது.

தேசம்: ஒரு வருஷம் என்றால் 79 ஆம் ஆண்டு மட்டில…

அசோக்: அப்படித்தான். 80 க்கு பிறகுதான் நான் புளொட்டின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஆகினது. 80 நடுப்பகுதியில் புளொட்டில் சேர்ந்திருப்பேன். ஏனென்றால் புளொட்டின் உருவாக்கம் நடந்தது 79 ஆம் ஆண்டு நவம்பர் மாதமளவில் தான். தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம் என்ற பெயருடன், அப்போதுதான் உருவாகினது.

தேசம்: இந்தக் காலகட்டத்தில் கூடுதலாக மலையகத் தமிழர்களுடன் வேலை செய்வதற்கான வாய்ப்பு இருந்ததா உங்களுக்கு?

அசோக்: நிறைய இருந்தது. மாலையர்கட்டில, செட்டிகுளத்தில எல்லாம் மலையக மக்கள் தானே…

தேசம்: மலையக தமிழர்களுக்கும், தமிழ் சமூகத்திற்குமான உறவுகள் எப்படி பார்க்கப்பட்டது அந்த காலத்தில்?

அசோக்: எல்லைக் கிராமங்கள் தானே. எல்லைக் கிராமங்கள் என்று சொன்னால் கொஞ்சம் தள்ளித்தான் தமிழ்க் கிராமங்கள் இருக்கும். மலையக தமிழ் மக்களுக்கும் அந்தப்பகுதி தமிழ் மக்களுக்கும் உடனே பெரிய தொடர்புகள் இருக்கேல. காலப்போக்கில் உறவு ஒத்துழைப்பு என்று இருந்தது. ஐந்து ஆறு மைல் தள்ளித்தான் சிங்களக் கிராமங்கள் இருக்கும். பல்வேறு விமர்சனங்கள் அந்த காலத்துல வந்தது. எல்லை கிராமங்கள்ல மலையக மக்களை நாங்கள் பலிகடா ஆக்குறம் என்று.

தேசம்: அந்த நேரமே இந்த விமர்சனங்கள் இருந்ததா?

அசோக்: சில இடங்களில் இருந்து வந்தது. விமர்சனங்கள் எப்பவும் இருக்கும் தானே. அதை நாங்கள் உதாசீனப்படுத்திட்டம். ஏனென்றால் அது தமிழ்அரசுக் கட்சியை சேர்ந்த சில பேரால் வைக்கப்பட்டது. அந்தக் காணிகள் தமிழ்ப் பிரதேசத்துக்குரிய காணிகள்தான். எல்லை பிரதேசமாக இருந்தாலும், சிங்கள கிராமங்கள் பக்கத்தில் இல்லை. தமிழ் எல்லை பிரதேசங்களில் ஏனைய தமிழ் கிராமங்களும் இருந்தது. பல்வேறு கிராமங்களுக்கு இடையில்தான் இந்த குடியேற்றங்கள் உருவானது. நெருக்கமான கிராமங்களாக இருக்கவில்லை. ஒரு மைல் அப்படி இடைவெளிகள் இருக்கும். கல்லாறுப் பண்ணையில் வந்து பக்கத்தில் பல்வேறு கிராமங்கள் இருக்கு. கிளிநொச்சி, முல்லைத்தீவு மட்டக்களப்பில் அப்படித்தான் தமிழ்க் கிராமங்களை அண்மித்துத்தான் குடியேற்றங்கள் செய்யப்பட்டது.

தேசம்: மலையக மக்களுக்கும், தமிழ்மக்களுக்கும் இரு சமூகங்களுக்கும் இடையிலான உறவு, குடியேற்றம் செய்யப்பட்ட இடங்களில் எப்படி இருந்திருக்கும் அந்த நேரம். வரவேற்கிற தன்மை இருந்ததா?

அசோக் : முரண்பாடு இருக்கேல. அந்த பிரதேச மக்கள் நிறைய ஹெல்ப் பண்ணி இருக்கிறார்கள். நாங்கள் அந்த வேலைத் திட்டம் செய்யேக்குள்ள பக்கத்து கிராமப்புற மக்கள் எல்லாம் வந்து ஹெல்ப் பண்ணுவாங்க. செட்டிகுளம் கல்லாறு பண்ணைக்குள்ள நிறைய செட்டிகுளம் பையன்கள் எல்லாம் வந்து ஹெல்ப் பண்ணி இருக்கிறார்கள். முரண்பாடு இருக்கேல, ஆரம்பத்தில் நெருக்கம் இருக்கல்ல. சமூக உறவுகள் காலப்போக்கில்தானே உருவாகும். ஆனா நாங்க கிராமக் குழுக்களை அமைத்திருந்தோம். இக்குழுவில மலையக இளைஞர்களும், அந்தப் பிரதேச இளைஞர்களும் அங்கம் வகிச்சாங்க. அது காலப்போக்கில் தானே ஏற்படும்.

தேசம்: வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இந்த மலையக மக்களுக்கு எதிரான, வேற பெயர் சொல்லிக் கூப்பிடுற தன்மைகள் இருந்தது. வடக்கத்தையான், தோட்டக்காட்டான், கள்ளத்தோணி இப்படியான விஷயங்கள் எல்லாம் இருந்தன. இப்படியான எதிர்மறையான கருத்து நிலைகள் மற்ற பகுதிகளில் இருந்ததா?

அசோக்: நிச்சயமாக இல்லை. இருந்திருந்தால் குடியேற்றங்கள் செய்திருக்கேலாது. யாழ்ப்பாண சமூகத்தின் ஒருசாரர்களின் மலையக மக்கள் மீதான வெறுப்புணர்வுக்கு இவ்வாறான கண்ணோட்டத்திற்கு பல்வேறு அரசியல் பொருளாதார பின்புல காரணிகள் இருக்கு. அங்கு கிழக்கு மாகாணத்தில அந்த காரணிகள் இல்லை. ஏன் இங்க வருது என்று கேட்டால், பொருளாதார ரீதியாக ஆசிரியர் வேலைவாய்ப்புக்கள் ஏனைய தொழில் என்று அங்க போய்… எப்ப முரண்பாடு வரும் என்று கேட்டால், அந்த பிரதேசத்துக்கும் எங்களுக்கும் சமூக பொருளாதார அரசியல் உறவெண்டு வரும்போதுதான். அந்த உறவை சமத்துவமாக சமநிலையாக நேச உறவாக நாங்க பேணமுடியாம, அதிகார சாதிய வர்க்க பிரதேச கண்ணோட்டத்தோடு அணுக வெளிக்கிடக்குள்ள முரண்பாடுகள் வரும் . இந்த அதிகாரத்தனம், ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட, புறக்கணிப்புக்கு உள்ளாப்பட்ட மக்களிடமிருந்து எங்களை அந்நியப்படுத்திவிடும்.

அங்க கிழக்கு மாகாண மக்களுக்கும், மலையக மக்களுக்கும், யாழ்ப்பாண சமூகத்தைப்போன்று, மலையகத்தில் பெரிய உறவுகளும் தொடர்புகளும் நெருக்கங்களும் இருந்ததில்லை. அப்ப முரண்பாடுகள் சிக்கல்கள் உருவாக சாத்தியம் இல்ல. அப்ப அந்த முரண்பாட்டுக்கான தளம் இல்லாமல் போய்விடுகின்றது. மலையக மக்களை குடியேற்றும் போது அந்த பிரதேச மக்கள் சொந்த மக்களாகதான் பார்த்தாங்க… உடனடியாக ஒரு சமூக உறவு வராதேயொழிய, முரண்பாடுகள் வராதுதானே.

கிளிநொச்சியிலயோ முல்லைத்தீவிலயோ மட்டக்களப்பிலயோ குடியேற்றம் செய்த இடங்களில் முரண்பாடு இல்லை.

தேசம்: வட மாகாணத்துக்கு உள்ள நடந்த குடியேற்றங்களில் பெரிய சிக்கல்கள் இருக்கவில்லை…

அசோக்: யாழ்ப்பாணத்தில் குடியேற்றங்கள் நடக்கேல தானே.

தேசம்: எல்லைக் கிராமங்களில் நடந்த குடியேற்றத்திட்டங்கள் தொடர்பான அந்த விமர்சனத்தில் ஒரு உண்மையான நிலையும் இருக்கும் தானே. ஏற்கனவே சிங்கள சமூகத்தால பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தை, நாங்கள் எல்லை கிராமத்தில் கொண்டு வந்து குடியேற்றும் போது திருப்பியும் அவர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள் என்ற குற்றச்சாட்டு நியாயமானதுதானே…

அசோக்: எங்கட உரையாடல் பிரயோகத்தில் எல்லைக் கிராமம் என்ற வார்த்தையை பயன்படுத்துறதால அந்தக் கேள்வி உங்களுக்கு வந்தது என நினைக்கிறன். கிராமங்களிடையேதான் முன்ன நான் சொன்ன மாதிரி நாங்க குடியேற்றம் செய்தனாங்க. என்டாலும் இதுபற்றி ஆராயவேண்டும்.

எல்லைக் கிராமங்களில் தான் திட்டமிட்டு நடந்தது என்று இல்லை. எதிர் விமர்சனங்கள் எப்படி வைக்கப்பட்டது என்றால், நாங்கள் ஒரு பாதுகாப்பு அரணாக மலையக மக்களை பயன்படுத்துகிறோம் என்று. தவிர்க்க முடியாம சில எல்லைக் கிராமங்களில் குடியேற்ற வேண்டிவந்தது. ஏனென்றால் அங்குதான் காணிகள் இருந்தது. எல்லை கிராமங்களில் அது அமைந்தவுடன் இந்த விமர்சனம் முன்வைத்தவர்களுக்கு அது சாதகமாக அமைந்துவிட்டது. தமிழரசுக் கட்சிக்கும் இது…

தேசம்: தமிழரசுக் கட்சி அந்த விமர்சனம் வைத்ததா?

அசோக்: ஆம் சில பேர்களுக்கு இருந்தது.