ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர்

உள்நாட்டு பொறிமுறைகளை அரசியலமைப்பிற்குள் கொண்டுவந்து தீர்வு எட்டப்படும் – ஜெனீவாவில் அமைச்சர் விஜித ஹேரத் !

உள்நாட்டு பொறிமுறைகளை அரசியலமைப்பிற்குள் கொண்டுவந்து தீர்வு எட்டப்படும் – ஜெனீவாவில் அமைச்சர் விஜித ஹேரத் !

காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் பலப்படுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஜெனீவாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது அமர்வில் தெரிவித்துள்ளார்.

இம்மாநாட்டில் இம்முறை தமிழ் தரப்புகளின் மனித உரிமைத் தளம் மிகப் பலவீனப்பட்டுப் போயுள்ளது. தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களே நீண்டகாலமாக மனித உரிமைக்காகச் செயற்பட்டு வந்த மரியதாஸ் பொஸ்கோவைக் காட்டிக்கொடுத்து விட்டனர் என்ற குற்றச்சாட்டு பலமாகியுள்ளது. மரியதாஸ் பொஸ்கோ ஜனவரி 16 இல் இடம்பெற்ற கூட்டத்தொடரில் வைத்து சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை ஜெனிவாவின் மனித உரிமைக் கூட்டத்தொடர் ஆரம்பமானபோது மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டேக் தனது ஆரம்ப உரையில் இலங்கை பற்றி எதனையும் குறிப்பிடவில்லை. மேலும் அமைச்சர் விஜித ஹெரத் தன்னுடைய உரை முடிந்து வெளியே வந்த போது தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் சிலர் அவரோடு உரையாட முற்பட்டனர். அது தொடர்பில் தமிழ் மனித உரிமைச்செயற்பாட்டாளர் கூறியது:

அமைச்சர் விஜித ஹேரத் தனது உரையில், தற்போதைய பாராளுமன்றமானது, இலங்கை வரலாற்றில் இரண்டு மலையக சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஒரு பார்வைக் குறைபாடுள்ள நபர் ஆகியோரைக் கொண்டதும், அனைத்து தரப்பினரையும் பிரதிநித்துவப்படுத்துவதுமான ஒன்றாகவுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான தேசிய பாதீட்டில், சமூக நலன் மற்றும் பாதுகாப்பிற்கான அதிகரித்த ஒதுக்கீடு உட்பட மக்களுக்கு மிகவும் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கான, தொடர் நடவடிக்கைகளுக்கு உறுதியளித்துள்ளோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்கும், மீள்குடியேற்றம், வீடளித்தல், இழப்பீடு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு போன்ற முக்கியமான தேவைகளை நிவர்த்தி செய்வதற்குமான சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி முதலாம் திகதி ஜனாதிபதியால் தொடங்கப்பட்ட, “தூய்மையான இலங்கை” திட்டத்தின் மூலம், அரசாங்கம் ஒரு புதிய அரசியல் கலாசாரத்தையும் தார்மீக மற்றும் நெறிமுறை நிர்வாகத்திற்கான அர்ப்பணிப்பையும் அறிமுகப்படுத்தியுள்ளது. எசமூகங்களுக்கு இடையிலான இடைவெளிகளைக் குறைப்பதற்கான எமது, தொலைநோக்குக்கு ஏற்ப, இலங்கை தினத்தை அறிவிக்க ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார்.

முரண்பாடுகள் தவிர்த்த, ஏனைய எஞ்சியுள்ள சவால்களை எதிர்கொள்ள நிறுவப்பட்ட உள்நாட்டு செயன்முறைகள் சுயாதீனமான மற்றும் நம்பகமான முறையில் தங்கள் பணிகளைத் தொடரும் என்பதை நாம் உறுதி செய்வோம். காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் மேலும் பலப்படுத்தப்படும். அனைத்து இலங்கையர்களின் நம்பிக்கையையும் பெறும் செயன்முறையொன்றை உறுதி செய்வதற்காக, உண்மை மற்றும் நல்லிணக்கக் கட்டமைப்பின் வரையறைகள், பங்குதாரர்களின் சாத்தியமான மிகப்பரந்த பிரிவினருடன் மேலும் விவாதிக்கப்படும்.

உள்நாட்டு பொறிமுறைகளை அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் நம்பகமானதாகவும், உறுதியானதாகவும் மாற்றுவதே எமது நோக்கமாகும். இலங்கை சமூகத்திற்குள் பதட்டங்களை ஏற்படுத்தும் வன்முறைச் செயற்பாடுகளை விசாரிக்க உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கப்படும் என்றார் அமைச்சர் விஜித ஹேரத்.

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் குற்றச்சாட்டுக்களை மறுத்த இலங்கை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.

 

இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் முழுமையான அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.

 

இலங்கை ஜனாதிபதி தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், ஐநா மனித உரிமைகள் பேரவையின் இந்த அறிக்கை வெளியாகியிருந்தது.

 

இலங்கை மனித உரிமைகள் பாதுகாப்பு முறையை சீர்திருத்துவதாக உறுதியளித்த போதிலும் இலங்கை அரசாங்கம் அதனை இன்னும் செய்யாமல் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

எனினும், 2023 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்கள் மற்றும் மசோதாக்கள் மூலம் பாதுகாப்புப் படைகளுக்கு பரந்த அதிகாரங்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன், கருத்து சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்படுத்தல் மீதான கட்டுப்பாடுகளையும் இலங்கை அரசாங்கம் விரிவுபடுத்தியுள்ளதாக ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாகவும், கைதிகளுக்கு எதிரான சித்திரவதைகள் அதனால் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், கடந்த வெள்ளியன்று, ஐ.நா உயர்ஸ்தானிகரின் அறிக்கை மீதான அதன் நிலைப்பாட்டை ஜெனிவாவை தளமாகக் கொண்ட உலக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வெளிநாட்டு தூதர்களுக்கு அரசாங்கம் விளக்கியுள்ளது.

இலங்கையின் புதிய ஜனாதிபதி பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பனவற்றை மேம்படுத்துவதற்கும் தேவையான அடிப்படையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் – ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம்

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர் அரசியல் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்கும்,பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பனவற்றை மேம்படுத்துவதற்கும் தேவையான அடிப்படையான அரசியல் யாப்பு மற்றும் நிறுவனரீதியான சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

இலங்கையின் மனித உரிமைநிலவரம் குறித்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் முழுமையான அறிக்கையிலேயே இந்த வேண்டுகோள் இடம்பெற்றுள்ளது.

 

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

 

தேர்தல்களையடுத்து புதிதாக தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி ஒரு அவசரவிடயமாக இலங்கை நாட்டுக்கென அனைவரையும் அரவணைக்கும் முன்னெடுக்கும் தேசிய நோக்கினை முன்னெடுக்கவேண்டும்.

 

அத்தோடு முரண்பாடுகளிற்கான மூல காரணங்களை கவனத்தில் எடுத்து ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கும்,அரசியல் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்கும்,பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பனவற்றை மேம்படுத்துவதற்கும் தேவையான அடிப்படையான அரசியல் யாப்பு மற்றும் நிறுவனரீதியான சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும்.

 

இலங்கை ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் என்பவற்றை அண்மித்திருக்கும் நிலையில், 2022 ஆண்டில் எதிர்ப்பு தெரிவித்த இலங்கையர்களின் அனைத்து தரப்புகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் பரந்துபட்ட தரப்பினரால் வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலைமாற்றுகால நீதிக்கான தன்னை மீண்டும் அர்ப்பணித்துக்கொள்ளும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்திருக்கின்றது.

 

 

 

இலங்கை ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் என்பவற்றை அண்மித்திருக்கும் நிலையில், 2022 ஆண்டில் எதிர்ப்பு தெரிவித்த இலங்கையர்களின் அனைத்து தரப்புகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் பரந்துபட்ட தரப்பினரால் வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலைமாற்றுகால நீதிக்கான தன்னை மீண்டும் அர்ப்பணித்துக்கொள்ளும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்திருக்கின்றது.

 

தேர்தல் காலத்திற்கு முன்னரும் தேர்தல் காலத்தின் போதும் அதன் பின்னரும் கருத்து சுதந்திரம் ,அமைப்புகளில் இணையும் சுதந்திரம்,மற்றும் அமைதியாக ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் என்பவற்றிற்கான உரிமைகi முழுமையாக பாதுகாத்து , அவற்றிற்கு மதிப்பளிக்கவேண்டிய பொறுப்பினை அரசாங்கம் கொண்டுள்ளது.

 

போராட்டக்காரர்களிற்கு எதிரான மிதமிஞ்சிய அளவிலான அல்லது அநாவசியமான பலத்தை பிரயோகிப்பதை தவிர்த்துக்கொள்ளல்,மத,பாலின ஏனைய விடயங்களின் அடிப்படையிலான ,பிரிவினைவாத இயல்பிலான மற்றும் பாரபட்ச இயல்பிலான சொல்லாடல்கள் மற்றும் நடைமுறைகளை தடுத்தல், தேர்தல் தொடர்பிலான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்களை என்பவற்றை தடுத்தல் ஆகியவற்றை அது உள்ளடக்கியுள்ளது.

மனித உரிமை பேரவையின் வெளியக பொறிமுறையை மீண்டும் நிராகரித்த இலங்கை !

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் (UNHCR) தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஆதாரங்களை சேகரிக்கும் வெளியக பொறிமுறையை இலங்கை மீண்டும் நிராகரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆதாரங்களை சேகரிக்கும் இந்த பொறிமுறை பயனற்றது என ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஆதாரங்களை சேகரிக்கும் வெளியக பொறிமுறை இலங்கையில் சமூகங்களை பிரிக்கவும் துருவமயப்படுத்தவும் மாத்திரம் உதவும் என ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த பொறிமுறையால் யாருக்கும் எந்தவொரு குறிப்பிடத்தக்க நன்மைகளும் இல்லை என்பதை சுட்டிக்காட்டிய அவர், உறுப்பு நாடுகளின் வளங்கள் வீணடிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உலகெங்கிலும் உள்ள சவாலான மனித உரிமை சூழ்நிலைகளை பாரபட்சமற்ற விதத்திலும் தேர்ந்தெடுக்கப்படாத தன்மை மற்றும் இரட்டை நிலைப்பாடுகளை தவிர்த்தும் ஐ.நா மதிப்பிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த கோட்பாடுகளுக்கு முரணாண தன்னிச்சையான செயற்பாடுகளை இலங்கை கடுமையாக எதிர்க்கிறது எனவும் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை என்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு உறுப்பு நாடுகள் வழங்கிய ஆணைக்கு முரணானது எனவும் ஹிமாலி அருணதிலக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த நடவடிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினை அரசியல் மயப்படுத்தி அதன் மீதான நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணாமலாக்குதலில் பாதுகாப்புப் படையினரும் அவர்களுடன் தொடர்புடைய ஆயுதக்குழுக்களும் ஈடுபட்டுள்ளனர் என்பதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம்

வலிந்து காணாமலாக்கப்பட்ட மக்களின் நிலை, அவர்களின் இருப்பிடம் தொடர்பான தகவல்களைக் கண்டறிந்து அதனை வெளியிடுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் கண்டறியப்பட வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமலாக்குதலில் பாதுகாப்புப் படையினரும் அவர்களுடன் தொடர்புடைய ஆயுதக்குழுக்களும் ஈடுபட்டுள்ளனர் என்பதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும், அதற்காக பொதுமன்னிப்புக் கோரப்பட வேண்டுமெனவும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வலிந்து காணாமலாக்கப்பட்ட அனைத்து இலங்கையர்களையும் ஒருபோதும் மறந்துவிட முடியாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் அவர்களின் உறவுகளும் நீண்ட காலமாகக் காத்திருப்பதாகவும், உண்மையை அறிந்துகொள்வதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆயுத மோதல்கள் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், ஆரம்பகட்ட வலிந்து காணாமலாக்கப்படுதல்கள் இடம்பெற்று பல தசாப்தங்கள் கடந்துள்ள நிலையிலும், இலங்கை அதிகாரிகள் உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த இன்றுவரை தவறியுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காணாமல்ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் – ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம்

பலவந்தமாக காணாமல்ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் அதற்கு காரணமானவர்கள் அனைவரையும் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களை ஒருபோதும் மறக்ககூடாது என்பதனை இந்த அறிக்கை மீண்டும் நினைவுபடுத்துகின்றது என தெரிவித்துள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் டேர்க் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் அவர்கள் குறித்து அக்கறையுள்ளவர்களும் நீண்டகாலமாக காத்திருக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சர்வதேச சட்டங்களுக்கு ஏற்ப அமையவில்லை –

இலங்கை பாராளுமன்றத்தில் பரிசீலனையில் உள்ள திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் ஆகிய இரண்டு சட்டமூலங்கள் தொடர்பில் தமக்கு தீவிரமான கரிசனை இருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் (OHCHR) தெரிவித்துள்ளது.

இந்த சட்டமூலங்கள் சர்வதேச சட்டங்களுக்கு ஏற்ப அமையவில்லை. எனவே, அவை மனித உரிமைகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க முடியும் என்று அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பொறிமுறைகளுக்கு நீண்டகாலமாக கரிசனையை ஏற்படுத்தும் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக, பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் கொண்டுவரப்படுவதாக மனித உரிமைகள் ஆணையாளரின் பேச்சாளர் ரவினா ஷம்தாசனி தெரிவித்துள்ளார்.

மரண தண்டனையை ஒரு சாத்தியமான தண்டனை என்ற விதியை நீக்குவது உட்பட, வரைவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. எனினும் திருத்தப்பட்ட வரைவில் உள்ள பல விதிகளின் நோக்கம் மற்றும் பாரபட்சமான விளைவுகள் குறித்து இன்னும் பாரிய கரிசனைகள் உள்ளன.

கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான ஒன்றுகூடல் உரிமைகளுக்கான கட்டுப்பாடுகள் ஏற்புடவையல்ல. இந்த நிலையில் குறித்த யோசனை, பயங்கரவாதத்தின் பரந்த வரையறையை உள்ளடக்கியுள்ளது. அத்துடன் போதிய நீதித்துறை மேற்பார்வையின்றி, மக்களைத் தடுத்து நிறுத்தவும், கேள்வி கேட்கவும், தேடவும், கைது செய்யவும், தடுத்துவைக்கவும், காவல்துறைக்கும் – இராணுவத்திற்கும் – பரந்த அதிகாரங்களை வழங்குகின்றது.

ஊரடங்குச் சட்டம், கட்டுப்பாடு உத்தரவுகள் மற்றும் தடை செய்யப்பட்ட இடங்களை குறிப்பிடுதல் ஆகியவற்றில் பிரச்சினைகள் உள்ளன. இவை அனைத்தும் போதுமான சமநிலை இல்லாமல் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் நோக்கம் பற்றிய சந்தேகங்களை எழுப்புகின்றன. இணைய வழி பாதுகாப்பு யோசனையை பொறுத்தவரை, இது பொதுமக்கள் உட்பட இணைய தகவல் தொடர்புகளை கடுமையாக பாதிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. சட்டமூலத்தின் பல பிரிவுகள், தன்னிச்சையான மற்றும் குற்றங்களின் தெளிவற்ற விதிமுறை வரையறைகளைக் கொண்டிருக்கின்றன.

இவை, பெரும்பாலும் அனைத்து வகையான சட்டபூர்வமான வெளிப்பாட்டையும் குற்றமாக்கக்கூடும். எனவே இந்த சட்டமூலம், கருத்துச் சுதந்திரத்தின் மீது பாரிய விளைவை ஏற்படுத்தும் சூழலை உருவாக்குகிறது.

இந்தநிலையில் சிவில் சமூகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சுயாதீன நிபுணர்களுடன் மேலும் அர்த்தமுள்ள ஆலோசனைகளை மேற்கொள்ளுமாறும், சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகளுக்கு முழுமையாக இணங்கும் வகையில், சட்ட வரைவுகளில் கணிசமான திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

ஐ.நாவில் இலங்கையின் சுகாதாரத்துறையை மையப்படுத்தி புனையப்பட்ட பொய்கள் – நகைப்புக்குறியயை என்கிறார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல !

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உட்பட இதர சர்வதேச ஸ்தாபனங்களிடத்தில் இலங்கையின் சுகாதாரத்துறையை மையப்படுத்தி புனையப்பட்ட பொய்களை மையப்படுத்தி சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நகைப்புக்குரியவை என்று சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் அடிப்படைகளுடன் பின்னிப்பிணைந்துள்ள சுகாதாரத்துறை, உணர்வு ரீதியான விடயம் என்பதால் அதனை பயன்படுத்தி இலகுவாக அரசியல் நன்மைகளை அடைவதற்கு பலதரப்பினரும் தீவிரமான முயற்சிகளை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் சுகாதாரத்துறையானது நலிவடைந்துள்ளதோடு, பொதுமக்களுக்கான உரிய சேவையை முன்வைக்க முடியாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், சுகாதார அமைச்சும் கட்டமைப்பும் ஊழல்கள் நிறைந்தவையாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது அமர்வில் பங்கேற்றிருந்த சுதந்திர மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யப்பா பண்டார உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து தெளிவுபடுத்தியிருந்தார்.

இந்த நிலையில், குறித்த விடயம் சம்பந்தமாக பதிலளிக்கும்போதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் சுகாதாரத்துறையானது, மக்களுக்கு சேவைவழங்குவதாக உள்ளது. அதனால் சுகாதாரத்துறை தொடர்பான விடயங்கள் பொதுமக்கள் மத்தியில் உணர்வு ரீதியாக இலகுவாக பிரசாரம் செய்யக்கூடியவையாக உள்ளன.

அதனடிப்படையில் வங்குரோத்து அடைந்துள்ள எதிர்க்கட்சிகளும், சில தொழிற்சங்கங்களும், பொய்யான பிரசாரங்களை முன்னெடுப்பதற்காக சுகாதாரத்துறையை கையிலெடுத்துள்ளன.

அவற்றின் பொய்யான பிரசாரத்தினால் எனக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டமையானது அதற்கு சிறந்த உதாரணமாக காணப்படுகின்றது.

இதேநேரம், நான் சுகாதாரத்துறையை பொறுப்பெடுக்கும்போது 570 மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு காணப்பட்டது. தற்போது அது 60 வரையில் குறைந்துள்ளது.

இவ்வாறான நிலைமைகள் பற்றியெல்லாம் தொழிற்சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் சிந்திப்பதில்லை. இலவச சுகாதாரத்துறையை சீர்குலைக்கும் வகையிலும், மக்கள் நாட்டத்தின் மீதான நம்பிக்கையை வலுவிழக்கச் செய்யும் வகையிலும் தான் செயற்படுகின்றன.

இந்நிலையில் தான் எதிரணியினர் ஐ.நாவுக்குச் சென்று முறைப்பாடுகளை முன்வைத்திருக்கின்றனர். நாட்டின் சுகாதாரத்துறை தொடர்பில் ஐ.நாவுக்குச் சென்ற செயற்பாடானது நகைப்புக்குரியதாகும்.

சர்வதேச நாடுகள் சுகாதாரத்துறையின் மேம்பாட்டிற்காக தொடர்ச்சியாக ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதால் அவற்றுக்கு யதார்த்தமான நிலைமைகள் நன்கு தெரியும் என்றார்.

“கடந்தகால மனித உரிமை மீறல்களை ஒப்புக்கொள்ள வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு இருக்கின்றது.” – ஐ.நா. மனித உரிமைகள் பிரதி ஆணையாளர்

கடந்தகால மனித உரிமை மீறல்களை ஒப்புக்கொள்ள வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு இருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா அல் நஷிப் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகிய நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்தோடு இலங்கையின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாப்பதில் பொறுப்புக்கூறல் அவசியம் என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சுயாதீனமான மற்றும் வெளிப்படையான விசாரணையை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா அல் நஷிப் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அது சர்வதேச உதவியுடனும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளின் முழுமையான பங்களிப்புடனும் இடம்பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

ஜெனீவாவில் உள்ள இலங்கை மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளில் சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கு இணங்க அரசாங்கம் விசாரணைகள் மற்றும் வழக்குகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

உண்மையைத் தேடுவது மட்டும் போதாது என்றும் பொறுப்புக்கூறலுக்கான தெளிவான அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா அல் நஷிப் தெரிவித்துள்ளார்.

அவரது முழுமையான அறிக்கை,

 

ஆழமான அரசியல் மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களைக் கோரி போராட்டம் இடம்பெற்று ஒரு வருடத்திற்குப் பிறகும், நீண்டகால சவால்களை எதிர்கொள்ள எதிர்பார்த்த மாற்றம் இன்னும் நிறைவேறவில்லை. உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் 13வது திருத்தத்தின் கீழ் மாகாண சபைகளை மறுசீரமைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம், அரசியல் பங்கேற்பதற்கான மக்களின் உரிமையையும் வாக்காளர்களின் சுதந்திரமான கருத்துக்களையும் மட்டுப்படுத்தியுள்ளது.

 

பொருளாதார நெருக்கடியானது இலங்கையில் பெரும்பான்மையினரின் உரிமைகளை கணிசமான அளவு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும், அது ஏழைகளையே அதிகம் பாதித்துள்ளது. நாட்டின் வறுமை விகிதம் 2021 இல் 13% இலிருந்து 2022 இல் 25% ஆக இரு மடங்காக உயர்ந்துள்ளதால், மேலும் 2.5 மில்லியன் மக்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர் மற்றும் 37% குடும்பங்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர்.

 

அரசாங்கம் அதன் பொருளாதார மீட்சிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தினால், அது மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாப்பதற்காக பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் அதன் கடமைகளால் வழிநடத்தப்பட வேண்டும். வதேச நிதி நிறுவனங்கள் உட்பட சர்வதேச சமூகம், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் உதவி தொடர்பான கடப்பாடுகளுக்கு இணங்க, இலங்கையின் மீட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும்.

 

பொருளாதார நெருக்கடி, சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு மத்தியில் இராணுவ மயமாக்கல் நடவடிக்கை, வடக்கு மற்றும் கிழக்கில் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் பௌத்த பாரம்பரியத்தை பாதுகாத்தல் என்ற போர்வையில் நடைபெறும் விடயங்கள் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கான முயற்சிகளும் தடுக்கப்பட்டுள்ளன. எதிர்ப்பு தெரிவிப்பதற்கான உரிமையை கட்டுப்படுத்தும் இந்த நடவடிக்கைகள் நாட்டில் மேலும் பதற்றத்தையே உருவாக்கும்.

 

கருத்து சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கும், நல்லிணக்கம் மற்றும் சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் சூழலை அரசாங்கம் உறுதி செய்வது இன்றியமையாததாகும். மேலும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், ஊடக ஒளிபரப்பை ஒழுங்குபடுத்தும் சட்டம் குறித்தும் கவலைகள் எழுந்துள்ளன.

 

 

“சர்வதேச சமூகத்தின் பிரசன்னத்துடன் இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்த வேண்டும்.” – இரா.சம்பந்தன்

“இலங்கையைப் பொறுத்தவரையில் கடந்த 13ஆண்டுகளாக பொறுப்புக்கூறலுக்கான செயற்பாடுகள் எவற்றையும் முன்னெடுக்கவில்லை.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரியுள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் பிரேரணையொன்று கொண்டுவரப்படுகின்றது. இந்தப் பிரேரணையை கொண்டுவரும் முயற்சிகளை எடுத்துள்ள, பிரித்தானியா, அமெரிக்கா, ஜேர்மன், கனடா போன்ற நாடுகள் அதனை முழுமையான நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அத்துடன், நிறைவேற்றப்படும் பிரேரணையை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான உரிய பொறிமுறைகளும் வகுக்கப்பட வேண்டும்.  இலங்கையைப் பொறுத்தவரையில் கடந்த 13ஆண்டுகளாக பொறுப்புக்கூறலுக்கான செயற்பாடுகள் எவற்றையும் முன்னெடுக்கவில்லை. எடுக்கப்பட்ட ஒருசில முயற்சிகளும் திருப்திகரமானதாக இல்லை. இவ்வாறான நிலையில், தான் புதிய பிரேரணையொன்று தற்போது கொண்டு வரப்படவுள்ளது.

ஆகவே, குறித்த பிரேரணையில், இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் அதேவேளை, அதனை நடைமுறைச்சாத்தியமாக்கும் வகையிலான சர்வதேச சமூகத்தின் பிரசன்னத்துக்கான ஏற்பாடுகளை உள்ளீர்க்க வேண்டியது அவசியமாகின்றது.

இந்தவிடயத்தில் இணை அனுசரணை வழங்கும் பிரித்தானியா தலைமையிலான நாடுகள், அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், உள்ளிட்டவை விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.