எம்.ஏ.சுமந்திரன்

எம்.ஏ.சுமந்திரன்

”நான் மூளையை உபயோகித்துச் செயற்படுகின்றேன். நன்றி விக்கினேஸ்வரன்” – எம்.ஏ.சுமந்திரன்

”நான் மூளையை உபயோகித்துச் செயற்படுகின்றேன்” என்று விக்னேஸ்வரன்  கூறியமைக்கு நன்றியைத் தெரிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்  தெரிவித்துள்ளார்.

சுமந்திரனுக்கு தமிழ்த் தேசிய உணர்வு இல்லை எனவும், அவர் மூளையை மாத்திரம் பாவித்து செயற்படுகின்றார் என விக்னேஸ்வரன்  அண்மையில் கூறியிருந்தார்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் நேற்று (24) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த சுமந்திரனிடம், விக்னேஸ்வரனின் கருத்து தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “விக்னேஸ்வரன் கூறுகின்ற விடயங்களுக்கு நான் பதில் சொல்லப் போவதில்லை. ஆனால், என்னுடைய மூளையை உபயோகித்து நான் சிந்திக்கின்றேன் என்று அவர் கூறியமைக்கு என்னுடைய நன்றியை அவருக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஒரு ஆசிரியனாக தன்னுடைய மாணவர்கள் மூளையைத்தான் பாவித்து சிந்தித்துக் கூறுகின்றனர் என்று அவர் கண்டுபிடித்திருக்கின்ற கண்டுபிடிப்பு மிகவும் அற்புதமானது.

ஆனால், அவர் எதனைப் பாவித்துச் சிந்திக்கின்றார் என்று எனக்குத் தெரியவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதன் காரணத்தினால் தமிழரசுக் கட்சி செயற்பட முடியாமல் இருகிறது. – எம்.ஏ.சுமந்திரன்

நாடாளுமன்றக் குழுத் தலைவர் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை எனவும், விரைவில் மத்திய செயற்குழுவில் அது சம்மந்தமான தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

நாடாளுமன்றக் குழுத் தலைவர் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை. அது தொடர்பில் எமது கட்சியின் அரசியல் குழு இணைய வழி ஊடாக ஒரு தடவை கலந்துரையாடப்பட்டது. மத்திய செயற்குழுவில் அது சம்மந்தமான தீர்மானம் எடுப்போம்.

 

ஒரு புறம் அரசாங்கம் தேர்தலை பிற்போட முனைப்பு காட்டுகிறது என்பதை அரசியலமைப்பில் 83 பி என்கின்ற உறுப்புரையை மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி கொடுத்ததில் இருந்தே தெரிகிறது.

 

அதைப் பற்றி விளக்கமாகவும் விபரமாகவும் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன். தேவையில்லாத ஒரு திருத்தத்தை வேண்டுமென்றே கொண்டு வந்து மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி தேர்தலை பிற்போடுவதற்கான ஒரு சதி செய்யப்படுகிறது.

 

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மனுவை சட்டத்தரணி ஒருவர் தாக்கல் செய்யதுள்ளார். அது மூன்று நீதியரசர்கள் முன்பாக விசாரணைக்கு வருகிறது. ஏற்கனவே கடந்த திங்கள் கிழமையும் அப்படியான மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

 

5 நீதியரசர்கள் குழு முன்னிலையில் நடந்தது. அந்த வழக்கில் நானும் ஆஜராகினேன். அது அடிப்படையில்லாத மனு என்ன தெரிவித்து அதனை தாக்கல் செய்தவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் வழக்கு செலவும் செலுத்தும் படி உத்தரவிடப்பட்டது.

 

வழக்கு நிலுவையில் உள்ள போது அதனை பற்றி பேசக்கூடாது.

அத்தோடு, வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதன் காரணத்தினால் தமிழரசுக் கட்சி செயற்பட முடியாமல் இருகிறது. நீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கிறது. கட்சியினுடைய சின்னத்தை பாவிக்க முடியாமல் இருக்கிறது. தேர்தல் வந்தால் என்ன செய்வார்கள் என்றெல்லாம் பலர் நீலிக்கண்ணீர் வடிக்கின்ற விடயம் நடந்து கொண்டிருக்கிறது. இதனை தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

 

கட்சி முடக்கப்படவில்லை. கட்சியினுடைய செயற்பாடுகள், சின்னம் எதுவும் முடங்கவில்லை. கட்சி முழுமையாக செயற்பட்டுக் கொண்டே இருகிறது. கட்சியின் சின்னத்தின் கீழ் எந்த தேர்தலையும் நாம் சந்திக்க முடியும். அதற்கு எந்தவிதமான இடர்பாடுகளும் கிடையாது.

இலங்கை தமிழரசுக் கட்சி உயிர்போடு இருப்பதுடன், ஒரு ஆக்கபூர்வமான பிரதிநிதிகளுடன் தொடர்ந்தும் பயணிக்கிறது. எதிர்வரும் எந்த தேர்தலில் கட்சி போட்டியிடும். மக்களுக்கான தனது செயற்பாட்டை தொடர்ந்தும் முன்னெடுக்கும்” என நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தொிவித்தாா்.

 

 

நம்பிக்கை தருகின்ற இடதுசாரி இயக்கம் என்ற அடிப்படையில் ஜே.வி.பியுடன் இணங்கிச் செல்லக்கூடிய பல விடயங்கள் இருக்கின்றன – எம்.ஏ.சுமந்திரன்

13 ஆம் திருத்தச் சட்டத்திலுள்ள மாகாண சபை முறைமை தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையாது என்பதை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக் கொண்டுள்ளது எனவும் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கை வெளியான பின்னரே தமிழரசுக் கட்சி இறுதி முடிவு எடுக்கும் எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அநுரகுமார திஸ்ஸநாயக்க தலைமையிலான குழுவினருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான சி.வி.கே.சிவஞானம், எஸ்.குலநாயகம், ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (11) நண்பகல் இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்புத் தொடர்பிலே ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னேற்ற கரமான பேச்சுவார்த்தை எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் கண்டு விடவில்லை. ஆரம்ப கலந்துரையாடல் என்ற போர்வையில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் வகையிலான கலந்துரையாடல் இடம் பெறுகின்றது.

நம்பிக்கை தருகின்ற பேச்சுவார்த்தையாக இடதுசாரி இயக்கம் என்ற வகையில் அவர்களுடன் எங்களுக்கு இணங்கிச் செல்லக்கூடிய பல விடயங்கள் இருக்கின்றன.

குறிப்பாக ஊழல் ஒழிப்பு, மக்கள் மத்தியில் சம உரிமை என்ற பல விடயங்கள், பொருளாதார சமத்துவம், போன்ற பல விடயங்களில் நேரடியாகவே இணங்கக்கூடியதாக இருந்தது.

தமிழ்த்தேசிய பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்தில் பல ஏற்றத்தாழ்வுகள் பழைய சரித்திரங்கள் இருந்தாலும் கூட அவர் கூறியது போன்று தற்போது இருக்கின்ற மாகாண சபை முறைமையை அப்படியே ஏற்றுக்கொள்வதாகவும் அதனை நடைமுறைப்படுத்துவதாகவும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த 13 ஆம் திருத்தச் சட்டத்திலுள்ள மாகாண சபை முறைமை தமிழ்த்தேசியப் பிரச்சினைக்கான தீர்வு அல்ல என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள் இதில் இருந்து முன்னேறிச் செல்வதற்கான வழிவகைகளை இரு தரப்பாகவும் இணைந்து பேசி செல்ல வேண்டும். இரு தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு அப்பால் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தாங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிடுவார்கள் அதன் பின்னர் அவர்களுடன் நடத்தப்படுகின்ற பேச்சுவார்த்தையை அடிப்படையாக வைத்து இலங்கை தமிழரசுக் கட்சி உரிய நேரத்தில் முடிவுகளை எடுக்கும் என்றார்.

நான் எப்போதுமே யாராவது ஒருவர் என்னைத் துரோகி என்று சொல்லிவிடுவார் எனப் பயந்து உண்மையைச் சொல்வதற்கு பயப்பட்டதில்லை – எம்.ஏ.சுமந்திரன்

தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் நடைபெற்ற 2005 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வடக்கு மக்கள் நூறு சதவீதம் ரணில் விக்ரமசிங்கவிற்கே வாக்களித்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்  தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை யாழ் ஊடக அமையத்தில் நேற்று (27) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பிதிலளிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவின் பயணத்துக்கு வடக்கு மக்கள் தடையாக இருந்திருக்கலாம் அதை வட பகுதி மக்கள் இப்போதாவது வருத்தத்துடன் நினைவு கூர்வார்கள் என நினைக்கின்றேன் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சில தினங்களுக்கு முன்னர் சுமந்திரன் கூறியிருப்பது தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இதனடிப்படையில், இந்த கேள்விக்கு சுமந்திரன் பதிலளிக்கையில், “அந்த தேர்தலில் என்ன நடந்தது என்பது எல்லாருக்கும் தெரிந்த விசயம் தானே.  ஆனாலும் கிழக்கு மாகாணம் வாக்களித்தது அத்தோடு கிழக்கு மாகாண மக்களுக்கும் இந்த அறிவித்தல் கொடுத்தாலும் அங்கு மக்கள் வாக்களித்தனர்.

ஏனென்றால் அதை முன்னிலைப்படுத்துகின்ற அதிகாரம் அந்தப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருக்கவில்லை ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் மக்கள் வாக்களிக்கவில்லை. எனினும் ஒருசிலர் வாக்களித்தவர்கள் என நினைக்கிறேன் அத்தோடு வாக்களித்த ஒரு சிலரும் அந்த நேரம் நூறுவீதம் ரணில் விக்ரமசிங்கவிற்கு தான் வாக்களித்தவர்கள்.

ஆனபடியால் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் யாருக்கு அந்த வாக்கு போயிருக்கும் என்பதில் எவருக்கும் எந்தவிதமான சந்தேகமும் இதுவரையில் இருந்த்தில்லை ஆனால் இன்றைக்கு ஊடகவியலாளர்கள் தான் இப்படியான சந்தேகத்தை எழுப்புகிறீர்கள். எல்லாருக்கும் தெரிந்த ஒரு விடயத்தை கதைப்பதற்கு பயந்து இதைச் சொன்னால் துரோகி என்று சொல்லிவிடுவீர்கள் என கருதி ஊடகவியலாளரே பயந்திருக்கிற ஒரு சூழலைத் தான் இன்றைக்கு இங்கு கேட்கிற கேள்வி காட்டுகிறதே தவிர எப்படி வாக்கு கொடுக்கப்கட்டிருக்கும் என்பது தொடர்பில் மக்களுக்கு மிகத் தெளிவு இருக்கிறது.

எனினும் நான் எப்போதுமே யாராவது ஒருவர் என்னைத் துரோகி என்று சொல்லிவிடுவார் எனப் பயந்து உண்மையைச் சொல்வதற்கு பயப்பட்டதில்லை என்பதையும் கூறிக்கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

காற்றாலை மின் உற்பத்திக்கு மன்னார் பொருத்தமான பிரதேசம் இல்லை – எம்.ஏ.சுமந்திரன்

காற்றாலை மின் உற்பத்திக்கு மன்னார் பொருத்தமான பிரதேசம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஏற்பாடு செய்த விசேட கூட்டம் இன்று காலை மன்னாரில் இடம் பெற்றது. குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மெலும் தெரிவிக்கையில்,

“காற்றாலை மின்சாரம் அமைக்கலாம். ஆனால் அதற்கான உகந்த இடங்களை தெரிவு செய்து முன்னெடுக்க வேண்டும்.

ஆனால் மன்னார் தீவு என்பது கடல் மட்டத்தில் இருந்து சற்று குறைவான இடத்தில் காணப்படுகின்றது.இத் தீவு இச்செயல் திட்டத்திற்கு பொருத்தமானதாக இல்லை.

மன்னாரில் இரண்டு பாரிய அச்சுறுத்தல்களை மக்கள் எதிர் கொள்கின்றார்கள். காற்றாலை அமைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் செயல் திட்டத்தில் மூன்று திட்டங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

காற்றாலை அமைப்பதன் மூலம் இப்பிரதேசங்களில் எற்படுகின்ற பல விதமான பாதிப்புக்களை மக்கள் ஏற்கனவே நேரடியாக அனுபவிக்கின்றார்கள்.

குறிப்பாக மீன்பிடி சமூகம் அவர்கள் பிடிக்கும் மீன்களின் தொகைகளில் மாற்றம் காணப்பட்டு குறைகின்றமை மற்றும் நீரோட்டங்களின் திசைகள் வழமை போல் இல்லாது மாற்றமடைவது உள்ளடங்கலாக பல்வேறு காரணிகளால் பிடிக்கப்படுகிற மீன்களின் தொகை பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை வாரம் – நெல்லியடியில் கஞ்சி வழங்கிய எம். ஏ சுமந்திரன் !

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை வாரம் ஆரம்பத்தை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று காலை 9:30 மணியளவில் இலங்கை தமிழரசுக் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் தலமையில் இடம் பெற்றது.

நெல்லியடி பேருந்து  நிலையத்தில் முள்ளிவாயக்கால் கஞ்சி காச்சப்பட்டு பயணிகள், வர்த்தகர்கள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சி முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், தமிழரசு கட்சி பருத்தித்துறை தொகுதி நிர்வாகிகளான பிரசாத், தயாபரன், உட்பட தமிழரசு கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழ்ப் பொது வேட்பாளரைக் களமிறக்குவது சிங்களத் தரப்பில் இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடாகும் – எச்சரிக்கிறார் எம்.ஏ.சுமந்திரன் !

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரைக் களமிறக்குவது பெரும்பான்மை தரப்பில் இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடாகும்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் வடமராட்சிக் கிளை அலுவலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த ஆண்டு தேர்தல்கள் ஆண்டு என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையினால் இந்த ஆண்டிலே இந்தத் தேர்தல்கள் மூலமாக மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என நாங்கள் பிரார்த்திப்போம்.

 

அது உண்மையான பாரிய மாற்றமாக இருக்க வேண்டும். ஆட்சி முறையிலும் நாட்டினுடைய சரித்திரத்திலும் உண்மையான மாற்றம் ஏற்பட வேண்டும்.

அரசியல் உரிமைகள் அனைவரினதும் கைகளுக்கும் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு மக்களும் தங்களுடைய வாழ்க்கையைத் தாங்களே தீர்மானிக்கின்ற அந்த ஆட்சி முறைமை மாற்றம் ஏற்பட வேண்டும். அதுதான் உண்மையான மக்கள் ஆட்சி. அப்படியான ஒரு மாற்றத்தை நாங்கள் கொண்டுவர வேண்டும்.

 

தேர்தல்கள் வருகின்றபோது பலவிதமான குழப்பங்கள் மக்கள் மத்தியில் ஏற்படுவதுண்டு. பல பல வித்தியாசமான சிந்தனைகள் எல்லாம் உட்புகுத்தப்படுவதுண்டு. ஆனால், ஊழலற்ற உண்மையாக மக்களை ஆட்சி செய்கின்ற மாற்றம் ஏற்படவேண்டும். எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் தங்களுடைய தலைவிதியை நிர்ணயிக்கத்தக்க வண்ணமாக ஆட்சி முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தல் ஒரு மாற்றத்துக்கான தேர்தல். இதனை இலாவகமாக நாம் கையாள வேண்டும். தமிழ்ப் பொது வேட்பாளர் ஜி.ஜி. பொன்னம்பலம் முதல் எம்.கே. சிவாஜிலிங்கம் வரை என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்ப் பொது வேட்பாளரைக் களமிறக்குவது சிங்களத் தரப்பில் இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடாகும்” இவ்வாறு எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி !

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்திற்கு சபாநாயகர் அனுமதிப் பத்திரம் வழங்கியதை எதிர்த்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

 

நீதியரசர்கள் பிரியந்த ஜயவர்தன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம், சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் எழுப்பிய பூர்வாங்க ஆட்சேபனைகளை கருத்தில் கொண்டு மனுவைத் தொடர்வதற்கு அனுமதி வழங்க மறுத்துள்ளது.

 

பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றளித்ததைத் தொடர்ந்து சட்டமியற்றும் விவகாரங்களில் தலையிட உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என சட்டமா அதிபர் ஆட்சேபனைகளை எழுப்பினார்.

 

ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்திற்கு சபாநாயகரின் சான்றிதழ் சட்டத்தில் செல்லாது என அறிவிக்குமாறு சுமந்திரன் தனது மனுவில் கோரியுள்ளார்.

 

பாராளுமன்றக் குழுவின் ஒன்லைன் பாதுகாப்பு சட்டமூலத் திருத்தங்கள் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு இணங்கவில்லையென சபாநாயகர் மற்றும் பாராளுமன்றத்திற்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கத் தவறியுள்ளதால் , மனுதாரர் மற்றும் குடிமக்களுக்கு அரசியலமைப்பின் 12(1) மற்றும் 14 வது உறுப்புரைகளில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள், சட்டமா அதிபரால் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறும் மனுதாரர் கோரியுள்ளார்.

 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தில் கையொப்பமிடாதிருக்குமாறு சபாநாயகரிடத்தில் சுமந்திரன் கோரிக்கை!

உயர் நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் உள்ளீர்க்கப்படும் வரையில் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தில் கையொப்பமிடாதிருக்குமாறு சபாநாயகரிடத்தில் கோரிக்கை விடுக்கவுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் சம்பந்தமாக அவர் மேலும் தெரிவிக்கையில்,நிகழ்நிலைப் காப்புச் சட்டமூலம் நிறைவேற்றுவதற்காக கொண்டுவரப்பட்டபோது அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அவ்வாறு மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றம் சதாரண பெரும்பான்மையுடன் அச்சட்ட மூலத்தினை நிறைவேற்றுவதாக இருந்தால் சில பரிந்துரைகளைச் செய்திருந்தது.

ஆனால், பாராளுமன்றத்தில் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டபோது எமக்கு அதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் சம்பந்தமாக குழு நிலையில் தெளிவாக வழங்கப்படவில்லை.

அத்தோடு அத்த திருத்தங்கள் 12 மணிக்கு முன்னதாக பாராளுமன்றத்தில் எமக்கு வழங்கப்பட வேண்டும் என்ற முறைமையும் உள்ளது.

ஆகவே உயர்நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களில் அதில் உள்ளீர்க்கப்பட்டுள்ளனவற்றை மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

தற்போதைய நிலையில் நான் 13 விடயங்களை உயர்நீதிமன்றத்தினால் குறிப்பிட்டும் அவை உள்ளீர்க்கப்படவில்லை என்பதை கண்டறிந்துள்ளேன்.

அதன்பின்னர் அதனை சபையில் சுட்டிக்காட்டி சபாநாயகரிடத்தில் எழுத்துமூலமாக வழங்கினேன். அதனை சட்டமா அதிபரின் பிரதிநிதிகளிடத்தில் வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் அத்திருத்தங்களை அமைச்சர் குழுநிலையில் இணைத்துக்கொள்வார் என்று குறிப்பிட்டார்கள்.

ஆனால் குழுநிலையில் அவை இணைத்துக்கொள்ளப்பட்டதா இல்லையா என்பது தற்போதைக்கு தெளிவாக இல்லை.

ஆகவே முழுமையாக ஆராயாத வரையில் குறித்த சட்டத்தில் கையொப்பமிடாதிருக்குமாறு நாம் சபாநாயகரைக் கோருவதற்கு உள்ளோம் என்றார்.

“மொழி அறிவு, சட்டப்புலமை மாத்தரம் தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தராது.” – தமிழரசுக் கட்சியின் தலைவருக்கான தேர்தல் கூட்டத்தில் சிவஞானம் சிறிதரன் !

மொழி அறிவு, சட்டப்புலமை மாத்தரம் தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தராது. மன ஒற்றுமையும் ஆற்றலும் தமிழ் மக்கள் மீதான தேசிய உணர்வும் தேசிய விடுதலைக்கான வழி வரைபடத்தையும் சரியாக எவர் கொண்டு செல்கின்றாரோ, அவரே இந்த பாதையை கொண்டு செல்வார் என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருக்கான தேர்தல் இம்மாதம் நடைபெறவுள்ளது. அப்பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகிய மூவரும் போட்டியிடுகின்றர்.

இந்நிலையில் சனிக்கிழமை (06) மட்டக்களப்புக்கு விஜயம் செய்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், அக்கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்திய பின்னர் மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே  இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆங்கிலம், மொழி, சட்டம், என்பன ஒருவருடைய ஆற்றலும் திறமையுமாகும். இதனை யாரும் இகழ்ந்து பார்க்கத் தேவையில்லை. ஆனால் ஆங்கிலம், மொழி, சட்டம் போன்றவை என்றால் எமக்கு சேர்.பொன்.இராமநாதன், தந்தை செல்வா, ஜி.ஜி.பொன்னம்பலம், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், போன்றோரின் காலத்தில் நாங்கள் விடுதலை பெற்றிருக்க வேண்டும். மொழி அறிவு, சட்டப்புலமை மாத்திரம் தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தரா. மன ஒற்றுமையும், ஆற்றலும், தமிழ் மக்கள் மீதான தேசிய உணர்வும், தேசிய விடுதலைக்கான வளி வரைபடத்தையும் சரியாக எவர் கொண்டு செல்கின்றாரோ, அவரை இந்த பாதையை கொண்டு செல்வார்.

மொழியியல் ஒருவருக்கான கொடை. சட்டம் என்பது கல்வி ரீதியாக கிடைக்கின்ற ஆற்றல். ஆனால் மக்களை வழிநடத்துவதற்கு தைரியமும், இனம் ரீதியான சிந்தனையும் இருந்தால் அது ஒரு தலைமைத்துவமாக அமையும்.

எனவே தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் சந்தித்த எமது கட்சியின் பொதுசபை உறுப்பினர்களிடையே  நான் இக்கட்சியின் தலைவராக வரவேண்டும் என்ற என்ணத்தைக் கொண்டிருக்கின்றார்கள். அதற்குரிய பெரும்பாலான ஆதரவையும், சம்மதத்தையும் எனக்குத் தெரிவித்திருக்கின்றார்கள். அவர்களின் பலத்தோடும், ஒற்றுமையோடும், நடைபெற இருக்கின்ற எமது உட்கட்சித் தேர்தலிலே நான் வெற்றி பெற்று கட்சியின் பொறுப்பை ஏற்று வழிநடாத்திச் செல்வதற்கு நான் தாயாராக இருக்கின்றேன் என அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் பொதுச் சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிந்தனர்.