எம்.எ.சுமந்திரன்

எம்.எ.சுமந்திரன்

சபாநாயகர் பதவியை துறந்தது போல பார்பேர்மிட் சிபாரிசு செய்தவர்களும் பாராளுமன்ற உரிமையில் இருந்து விலக வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

சபாநாயகர் பதவியை துறந்தது போல பார்பேர்மிட் சிபாரிசு செய்தவர்களும் பாராளுமன்ற உரிமையில் இருந்து விலக வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

பார் பேர்மிட் வழங்குவதற்கு சிபாரிசு செய்தவர்களும் சபாநாயகர் பதவி விலகியது போன்று பதவி விலக வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் பதவி விலகியமை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சபாநாயகர் கலாநிதிப் பட்டம் தனக்கு இருக்கின்றது, அதனை தற்போது நிரூபிக்க முடியாது என்பதால் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார் அது நல்லதொரு விடயம், அதை நான் வரவேற்கின்றேன்.

இதேபோன்று பார் போமிட் எடுத்தவர்களும் தாமாகவே விலகுவார்களாக இருந்தால் அதுவும் நல்ல விடயம். விக்னேஸ்வரன் தான் பார் போமிட் கொடுத்து விட்டேன் எனத் தெரிவித்து அவர் தேர்தலில் போட்டியிடமால் கொழும்புக்குப் போய் விட்டார். இதேபோன்று பார் போமிட் எடுத்தவர்களும் தாமாகவே விலகுவார்களாக இருந்தால் அதுவும் நல்ல விடயம். விக்னேஸ்வரன் தான் பார் போமிட் கொடுத்து விட்டேன் எனத் தெரிவித்து அவர் தேர்தலில் போட்டியிடமால் கொழும்புக்குப் போய் விட்டார்.

ஒவ்வொரு இடங்களிலும் நிறையப் பார் பேர்மிட் கொடுக்கப்பட்டுள்ளது என்று அரசு அறிவித்துள்ளது. அதைச் சிபாரிசு செய்தவர்கள் யார் என்ற தகவல் இன்னும் வரவில்லை. அந்தத் தகவல் வருகின்றபோது சிபாரிசு செய்தவர்களும் சபாநாயகர் பதவி விலகியமை போன்று விலக வேண்டும். அதனைச் சந்தோசமாக வரவேற்போம்” – என்றார்.

அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலைக் கால தாமதமின்றி நடத்த வேண்டும் – எம்.ஏ. சுமந்திரன்

அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலைக் கால தாமதமின்றி நடத்த வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு அடுத்த வருட இறுதி வரை காத்திருக்காமல், உள்ளூராட்சி மன்ற தேர்தல் நிறைவடைந்த பின், மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கு முன்னதாக மாகாண சபைகளை முழு அதிகாரத்துடன் இயங்கச் செய்வது முக்கியமானதாகும் எனவும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாகாண சபை முறைமையை நீக்குவதற்கு எந்தவொரு தீர்மானத்தையும் தற்போதுவரை அரசாங்கம் எடுக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். குறித்த சந்திப்பில் மேலும் பேசிய நளிந்த ஜயதிஸ்ஸ, புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கு மூன்று வருடங்கள் வரை செல்லும். எனவே, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற முறைமை தொடர்பில் தமது பரிந்துரைந்துகளை அனைவரும் முன்வைக்கலாம். மாகாண சபை முறைமை புதிய அரசியலமைப்பில் தொடர்ந்தால் தற்போது இருக்கும் அதிகாரங்களுக்கு அப்பாலான அதிகாரங்கள் வழங்கப்படாது எனவும் தற்போதைய அதிகாரங்கள் குறைக்கப்படாது எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

“சிறீதரனும் நானும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் – வெற்றிபெறுவோம்.” – மத்திய குழு கூட்டத்தின் முடிவில் சுமந்திரன் !

பெண் வேட்பாளர்களை அடையாளம் காணுவது கடினமாக உள்ளதுடன் நாளையும் வேட்பாளர் தெரிவு முடிவு பெறாது என தமிழரசுக்கட்சியின் ஊடக பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை (05) தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் நியமன குழு இன்று வவுனியாவில் கூடிய நிலையில் அதன் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தேர்தல் நியமன குழுவானது இன்று வவுனியாவில் கூடி மாவட்டம் மாவட்டமாக ஆராய்ந்து இருக்கின்றோம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வாறானவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதும் எந்தெந்த இடங்களிலிருந்து வேட்பாளர்கள் வரவேண்டும் குறிப்பாக இன்றைய நிலையில் மாற்றத்தை இளைஞர் யுவதிகள், படித்தவர்கள் வரவேண்டும் என பெருவாரியான எதிர்பார்ப்போடு இருக்கின்றனர். அதற்கு இடம் கொடுத்து எந்த விதமாக இந்த வேட்பாளர்களை நியமிப்பது தொடர்பில் பல சிந்தனைகள் இன்று பரிமாறப்பட்டன.

எனினும் நாங்கள் இன்றைய தினம் எந்த மாவட்டம் தொடர்பிலும் ஒரு தீர்மானம் எடுக்கவில்லை.

எனினும் நாங்கள் கடந்த முறை மத்திய செயற்குழுவிற்குப் பின்னர் அறிவித்ததை போலத் திருகோணமலை மாவட்டம் அம்பாறை தேர்தல் மாவட்டம் சம்பந்தமாக விசேட கரிசனை ஒன்று இருக்கின்றது.

இந்த இரு மாவட்டங்களிலும் ஒரு தமிழ் பிரதிநிதியையே பெற்றுக் கொள்ள முடியும். எனவே தமிழ் கட்சிகள் எதிர் எதிராகப் போட்டியிட்டால் அம்பாறை மாவட்டத்தில் கடந்த முறை ஒரு பிரதிநிதித்துவம் இல்லாமல் போனதைப் போல இம்முறையும் அந்த மாவட்டத்திலும் திருகோணமலையிலும் இவ்வாறான ஒரு சாத்தியக்கூறு இருப்பதன் காரணத்தினால் அது குறித்து சில நடவடிக்கைகளை நாங்கள் எடுக்க வேண்டி இருக்கின்றது.

இந்த விடயத்தில் திருகோணமலை கத்தோலிக்க ஆயர் மிக முனைப்பாகப் பல கட்சிகளோடு பேசி சில நகர்வுகளைச் செய்திருக்கின்றார். அவரை சந்திப்பதற்காக நாங்கள் சிலர் செல்கின்றோம். அந்த விடயத்தை நாங்கள் வெற்றிகரமாக முடிப்போமாக இருந்தால் எங்களுடைய மத்திய செயற்குழு தீர்மானம் மற்றும் அரசியல் குழு தீர்மானம் இன்றும் நாங்கள் எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் தமிழரசு கட்சியினுடைய பெயரிலும் சின்னத்திலும் தான் நாங்கள் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடுவோம்.

ஆனால் திருகோணமலையிலும் அம்பாறையிலும் மற்ற கட்சி உறுப்பினர்களையும் உள்வாங்கி ஒரு போட்டி இல்லாமல் தேர்தலை சந்திப்பதற்கான விடயங்கள் ஆராயப்படுகின்றன. அதனை நாங்கள் செய்து முடித்த பின்னர் நாளை மீண்டும் சந்தித்து வேட்பாளராக விண்ணப்பித்தவர்கள் உடைய பெயர்களை ஆராய்ந்து தீர்மானங்களை எடுப்போம்.

எனினும் நாங்கள் நாளையும் இறுதி தீர்மானம் எடுப்போம் என்று கூற முடியாது. நாங்கள் எதிர்பார்க்கின்ற மாதிரியான வேட்பாளர்கள் சில இடங்களில் முன் வரவில்லை.

இதேவேளை பெண்கள் பல இடங்களில் முன்வரவில்லை. பள்ளம் மேடு காடு எங்குத் தேடியும் பெண்கள் கிடைக்காமல் இருக்கிறார்கள். பெண்கள் பல குறைபாடுகளைக் கூறுகின்றார்கள். அவர்களுக்கான நியமனங்களை நாங்கள் கொடுப்பதில்லை என்று. ஆனால் நாங்கள் அவர்களுக்குச் சந்தர்ப்பத்தை வழங்கத் தயாராக இருக்கின்ற போதிலும் வராத ஒரு சூழ்நிலை இருக்கின்றது. எனவே பெண்களுக்கும் பெண்கள் அமைப்புகளுக்கும் ஒரு விசேட கோரிக்கையாக நாங்கள் முன்வைக்கின்றோம். தேர்தலில் வெல்லக்கூடிய எங்களோடு சேர்ந்து பயணிக்கக் கூடிய பெண்களைத் தயவு செய்து முன்மொழிவியுங்கள்.

அவர்களுக்கான இடங்களை வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். இந்த தடவை அவ்வாறான ஒரு புதிய பரிமாணத்திலே மக்களுடைய எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கின்ற வகையிலே பல புதிய ஆற்றல் உள்ள இளைய தலைமுறைகளுக்கு வாய்ப்பளித்து நிச்சயமாக இடம் கொடுப்போம். அதற்கான தேடலையும் நாங்கள் செய்து வண்ணம் இருக்கிறோம்.

யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சிவனேசனுக்கு இம்முறை வேட்பாளர் நியமனம் கொடுப்பதில் ஏதேனும் சிக்கல் இருப்பதாக ஊடகங்களில் பல கருத்துக்கள் வெளி வந்திருக்கின்றனவே என ஊடகவியலாளர் கேட்டபோது,

எங்களுடைய மத்திய செயற்குழு கூட்டத்திலே ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது மீளவும் இன்று உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து அதற்குப் பின்னர் தேர்தலிலே தோற்றவர்கள் இந்த தடவை சந்தர்ப்பத்தை வழங்காமல் புதியவர்களை உள்வாங்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே அந்த பிரிவுக்குள் பலர் அடங்குவார்கள். ஆனால் சிறிதரணை பொறுத்தவரை அதற்குள் வர மாட்டார்.

எனினும் இன்றைய கூட்டத்தில் நான் கூறியிருந்தேன் கட்சியினுடைய தீர்மானத்தை மீறி ஜனாதிபதி தேர்தலிலே கட்சியின் தீர்மானத்தை எதிர்த்து பிரசாரம் செய்த காரணத்தினால் அவருக்கு நியமனம் கொடுக்கக் கூடாது என்பதற்கு அப்பால் அவராகவே ஒதுங்கி இருந்தால் நல்லது என தெரிவித்திருந்தேன். எனினும் ஸ்ரீதரன் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் போட்டியிடுவார்.

என்னையும் அவரையும் யாழ் மாவட்டத்தில் கட்டாயமாகப் போட்டியிட வேண்டும் என சகல நியமன குழு உறுப்பினர்களும் கூறி இருந்தார்கள். அதற்கு அமைவாக நாங்கள் இருவரும் யாழ் மாவட்டத்திலே போட்டியிடுவோம். வெற்றியும் அடைவோம் என்று எதிர்பார்க்கின்றோம்.

எங்கள் இருவருக்கும் இது நான்காவது பாராளுமன்றம் எனினும் இன்னும் ஏழு பேரை நியமிக்க வேண்டும். மிகவும் ஆர்வமாக இளையவர்களுக்கும் புதியவர்களுக்கும் இடம் கொடுப்பதற்கு நாங்கள் கருத்தாகக் கொண்டுள்ளோம் என தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சி கைகாட்டும் வேட்பாளருக்கு தமிழர்கள் வாக்களிப்பார்கள் – சுமந்திரன்

கடந்த 3 ஜனாதிபதித் தேர்தல்களிலும் இறுதிக் கட்டத்திலேயே ஜனாதிபதி வேட்பாளருக்கான ஆதரவு தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆதரவு வழங்குமாறு கோரும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கே, பொது மக்கள் வாக்களிப்பர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

“சிறீதரன் தலைவராக தெரிவு செய்யப்பட்டமை மகிழ்வளிக்கிறது – எனது முழுமையான ஆதரவை அவருக்கு வழங்குவேன்” – எம்.ஏ.சுமந்திரன்

ஜனநாயக தேர்தல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு இலங்கை தமிழரசுக் கட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், தலைவர் சிறீதரனுக்கு தனது முழுமையான ஆதரவினை வழங்குவேன் என்றும் சக தலைமைப்பதவிப் போட்டியாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

வாக்கெடுப்பு முடிவுகள் வெளியான பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் கூறுகையில்,

 

தமிழரசுக் கட்சித் தலைவருக்கான தேர்தலிலே மிக ஆரோக்கியமாக, எமது கட்சி உட்கட்சி ஜனநாயகத்தினை நாட்டுக்கும், சர்வதேசத்துக்கும் முன்மாதிரியாக நடத்திக் காட்டியிருக்கின்றது.

 

இதிலே வெற்றிபெற்ற நண்பன் சிறீதரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

 

எமது தலைவர் மாவை சேனாதிராஜா வழிநடத்திய தமிழரசுக் கட்சிப் பொறுப்பு, இப்பொழுது சிறிதரனுக்கு வழங்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியான விடயமாகும்.

 

இந்தப் பயணத்திலே நாம் தொடர்ந்தும் ஒன்றாகவே பயணிப்போம். இதை நாம் இருவரும் தேர்தல் காலத்திலும் தெளிவாக மக்களுக்குச் சொல்லியிருக்கின்றோம். அவ்வாறே தொடர்ந்து பயணிப்போம்.

 

ஆகவே, எனது முழுமையான ஆதரவினை தற்போது ஜனநாயக முறையில் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள தலைவர் சிறீதரனுக்கு முழுமையாக வழங்குவேன் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

சிறிதரன் வென்றால் “தமிழ் தேசியம் வென்றுவிட்டது !” சுமந்திரன் வென்றால் “துரோகத்தால் துரோகிகளால் தமிழ் தேசியம் தோற்கடிக்கப்பட்டது !”

 

சிறிதரனா ? சுமந்திரனா ? : நாளைய செய்தித் தலைப்பு: சிறிதரன் வென்றால் “தமிழ் தேசியம் வென்றுவிட்டது !” சுமந்திரன் வென்றால் “துரோகத்தால் துரோகிகளால் தமிழ் தேசியம் தோற்கடிக்கப்பட்டது !”

 

 

நாளை ஜனவரி 21 தமிழரசக் கட்சியின் தலைவராக யார் தெரிவு செய்யப்படப் போகின்றார் என்பது பெரும்பாலும் தெரியவரும். இதற்கான தமிழரசுக் கட்சி அங்கத்தவர்களின் வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நாளை திருகோணமலையில் இடம்பெற இருக்கின்றது. அதற்கு கட்சியின் அங்கந்தவர்கள் 325 பேர்வரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து கிழக்கில் உள்ள திருகோணமலைக்குச் செல்கின்றனர். வாக்கெடுப்பு எண்ணிக்கை நிறைவில் வெற்றி தோல்வி அறிவிக்கப்படும் போது அசம்பாவிதங்களும் ஏற்படும் அளவுக்கு நிலைமை பதட்டமானதாக இருப்பதாக தேசம்நெற்க்கு கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தலைமைத்துவத்துக்கு போட்டியிடும் இருவருமே தேர்தல் முடிவுகளை ஏற்று மற்றையவருடன் கட்சியின் நன்மைகருதி இணைந்து பயணிப்போம் எனத் தெரிவித்து இருந்த போதும் தமிழரசுக் கட்சியின் நாளைய தேர்தல் தமிழரசுக்கட்சிக்குள் ஒரு பாரிய பிளவை ஏற்படுத்தும் என்று தேசம்நெற்க்குத் தெரியவருகின்றது.

இலங்கையில் உள்ள எந்தவொரு கட்சிக்காவது ஜனநாயகப் பாரம்பரியம் இருக்கின்றதா என்றால் எடுத்த எடுப்பிலேயே இல்லை என்று சொல்லி விடலாம். கட்சிக்குத் தலைவரானால் சாகும்வரை அவரே தலைவராக இருந்துவிடுவார். இதற்கு தமிழ் கட்சிகளும் தமிழரசுக் கட்சியும் விதிவிலக்கல்ல. தமிழரசுக்கட்சி வரலாற்றில் தேர்தல் மூலம் ஒருவரைத் தெரிவது இதுவே முதற்தடவை. ஏகமனதாக, ஏகோபித்த முடிவு, ஏக பிரதிநிதித்துவம் என்று இன்னொரு பக்கம் இருக்கின்றதை ஏற்றுக்கொள்ளாத சமூகமும் கட்சிகளுமாக நாம் எங்களை பன்மைத்துவத்தின் விரோதிகளாக பழக்கிக் கொண்டுவிட்டோம். அப்படிப் பார்க்கின்ற போது தமிழரசுக்கட்சியின் தலைமைக்கான தேர்தல் ஜனநாயகத்தின் பார்வையில் மிகப்பெரும் பாச்சல் என்றே சொல்லலாம். ஆனால் என்ன இந்தத் தேர்தலினால் தமிழ் மக்களுக்கு ஏதும் நன்மை ஏற்பட வாய்ப்பு இருக்கின்றதா என்பதே தற்போதுள்ள கேள்வி.

 

இலங்கைத் தமிழர்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வில் தமிழரசுக் கட்சி அது ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்றுவரை ஒரு இம்மியளவு முன்னேற்றத்தை நோக்கியும் நகரவில்லை. எழுபதுக்களில் தங்களுடைய வீழ்ந்துபோன வாக்கு வங்கியைத் தக்க வைக்க வே பிரபாகரன் போன்ற இளைஞர்களை உசுப்பேத்தி தமிழீழக் கோரிகையை வைத்து, அந்த இளைஞர்களாலேயே மரணத்தையும் தழுவினர். அந்த இளைஞர்களும் ஆளுக்கு ஆள் சகோதரப்படுகொலை செய்து தங்களைத் தாங்களே அழித்தனர். அன்று தப்பித்த இரா சம்பந்தன் ஒருவாறு இறுதியில் வே பிரபாகரனை பொறியில் வீழ்த்தி மீண்டும் தமிழ் தேசியத்தின் ஒற்றைத் தலைவரானார். அன்று மரணத்தில் இருந்து தப்பிய இன்னும் சிலரும் குட்டிக் குட்டித் தலைவர்களாகினர். இப்போது ஒரு காலத்தில் தமிழ் மக்களின் ஏகபோக பிரதிநிதியான தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு ஒரு போட்டி வந்துவிட்டது.

 

இத்தேர்தல் முடிவுகளில் இலங்கைத் தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுகின்றதோ இல்லையோ புலம்பெயர் தமிழ் – புலித் தேசியவாதிகளின் அரசியல் நலன்கள் பேணப்பட வேண்டும், இலங்கை அரசியலில் தங்களுடைய ஆதிக்கம் இருக்க வேண்டும் என்பதில் புலம்பெயர் சக்திகள் மிகத் தீவிரமாகச் செயற்படுகின்றனர். புலம்பெயர் புலித் தேசியவாதிகளைப் பொறுத்தவரை ஏ சுமந்திரன் தீண்டத்தகாத ஒரு மனிதர். அதற்கு சுமந்திரனுடைய அரசியல் நிலைப்பாடு மட்டுமல்ல சுமந்திரனுடைய அறிவும் ஆளுமையும் அவர்களுக்கு மிகுந்த அச்சத்தை கொடுக்கின்றது. தமிழரசுக் கட்சிக்கு சுமந்திரன் தலைவரானால் தமிழ் தேசிய அரசியலில் புலம்பெயர் விசிலடிச்சான் குஞ்சுகளின் குரல்களுக்கு இடமிருக்காது. மிகத் தீவிர புலித்தேசியத்தின் குரல்களுக்கு தமிழரசுக் கட்சியில் இடமிருக்காது.

 

அதனால் என்ன விதப்பட்டும் எஸ் சிறீதரனை வெல்ல வைப்பதில் அவர்கள் மிகத் தீவிரமாக உள்ளனர். எஸ் சிறிதரன் தமிழரசுக் கட்சிக்கு தலைவரானால் புலத்தில் உள்ள விசிலடிச்சான் குஞ்சுகள் எல்லாம் அவருக்கு அரசியல் வகுப்பும் ஆங்கில வகுப்பும் எடுப்பார்கள். தன்னுடைய வங்கிக் கணக்கை அவர்களிடம் கொடுத்துவிட்டு அவர்கள் சொல்வதை எல்லாம் கிளிப்பிள்ளை மாதிரி எஸ் சிறிதரன் கேட்பார் என்ற நம்பிக்கை புலம்பெயர் விசிலடிச்சான் குஞ்சுகளிடம் நிறையவே உள்ளது. அவ்வாறு லண்டனுக்கு மகனையும் அனுப்பி வைத்துள்ளார் எஸ் சிறிதரன்.

 

ஏ சுமந்திரனும் எஸ் சிறிதரனும் 2010இல் ஒரே காலகட்டத்தில் அரசியலுக்குச் சென்றவர்கள். இன்றுவரை பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். கல்வி, கேள்வி ஞானம், அரசியல் அறிவு, உள்ளுர் சர்வதேச தொடர்புகள் என்று பார்க்கின்ற போது ஏ சுமந்திரன் பலமானவராக உள்ளார். மக்கள் மட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் எஸ் சிறிதரன் பலமாக உள்ளார். இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை குறிப்பாக வடக்கு – கிழக்கில் வாழும் தமிழர்களைப் பொறுத்தவரை இவர்களில் யாரும் இதுவரை அவர்களுக்காக எதனையும் குறிப்பாக சாதித்துவிடவில்லை. ஏ சுமந்திரன் சில அரசியல் கைதிகளை தனது தொழில் ரீதியில் விடுதலைபெறக் காரணமாக இருந்ததைத் தவிர.

 

ஆனால் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு எஸ் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டால் அந்தக் கட்சியில் தொடர்ந்து செயற்பட ஏ சுமந்திரன் அனுமதிக்கப்பட மாட்டார். அதனை புலம்பெயர் விசிலடிச்சான் குஞ்சுகள் அனுமதிக்காது. மேலும் ஆளுமையுள்ள சுமந்திரன் தொடர்ந்தும் கட்சியில் இருப்பது எஸ் சிறிதரனின் தலைமைத்துவத்தை எப்போதும் நெருக்கடிக்கு உள்ளாக்கும். அடுத்த ஆண்டு நாடு பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்கின்ற போது விரும்பு வாக்குகளுக்காக இருவரும் கடுமையாக மோத வேண்டிவரும். அது ஏ சுமந்திரனுக்கு மிக நெருக்கடியாக அமையும். அதனால் ஏ சுமந்திரன் தமிழரசுக்கட்சித் தேர்தலில் தோல்வியடைந்தால் பிரிந்துசெல்வதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளது.

 

மாறாக, எஸ் சிறிதரன் தோற்கடிக்கப்பட்டால் அவர் தொடர்ந்தும் தமிழரசுக் கட்சியில் இருப்பாரா அல்லது பிரிந்து செல்வாரா அல்லது கட்சி தாவுவாரா என்பது அவருக்கு கிடைக்கும் வாக்குகளின் எண்ணிக்கையிலும் புலம்பெயர் புலித் தேசியவாதிகளின் நிலைப்பாட்டிலும் தங்கியுள்ளது. சிறிதரன் தேர்தலில் தோற்றுப் போனாலும் தமிழரசுக்கட்சியில் தொடர்ந்தும் இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது. கிளிநொச்சியில் உள்ள பலமான அந்த வாக்கு வங்கியை அவர் இழப்பதற்கு துணிய வாய்புகள் குறைவு. ஏற்கனவே எம் சந்திரகுமாருடைய சமத்துவக் கட்சி அவருடைய வாக்கு வங்கியை உடைத்து வளர்ந்து வருகின்ற நிலையில் எஸ் சிறிதரன் தமிழரசுக் கட்சியை உடைத்து வெளியேறினால் அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் அவருடைய வெற்றிவாய்ப்பை உறுதிப்படுத்துவது கடினமானதாக அமையும்.

 

தேசம்நெற்க்கு கிடைக்கின்ற தகவல்களின்படி புலம்பெயர் நாடுகளிலும் தாயகத்திலும் தங்களை உயர்சாதியினராகக் கருதுபவர்கள் மத்தியில்; எஸ் சிறிதரனுக்கு செல்வாக்கு உள்ள போதிலும் ஒடுக்கப்பட்ட வன்னியில் வாழும் மலையக மக்கள் மத்தியில் அவருக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு இல்லை. அதைவிடவும் சாணக்கியன் உட்பட தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் ஏ சுமந்திரனுக்கே ஆதரவைத் தெரிவித்துள்ளனர். 325 வரையான கட்சி உறுப்பினர்கள் மத்தியிலும் ஏ சுமந்திரனுக்கே ஆதரவு இருப்பதாக சொல்லப்படுகின்றது. எஸ் சிறிதரன் செல்வாக்கு ஆனையிறவுக்கும் கிளிநொச்சிக்கும் அப்பால் உள்ளதா என்பதும் கேள்விக்குறியே.

 

இன்னும் சில மணி நேரங்களில் தேர்தல் முடிவுகள் வெளிவரும்.

நாளைய செய்தித் தலைப்பு:

சிறிதரன் வென்றால் “தமிழ் தேசியம் வென்றுவிட்டது !”

சுமந்திரன் வென்றால் “துரோகத்தால் துரோகிகளால் தமிழ் தேசியம் தோற்கடிக்கப்பட்டது !”

கொலைக்குற்றச்சாட்டில் அமைச்சர் பிள்ளையான் விரைவில் கைது..?

பல்வேறு கொலை குற்றச்சாட்டுக்களின் கீழ் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் விரைவில் கைது செய்யப்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

ஏப்ரல் 21 தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு தொடர்பில் எதிர்க்கட்சி கொண்டுவந்துள்ள சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கருத்திற்குப் பதிலளித்த இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன்,

மக்கள் பிரதிநிதி என்ற வகையில் தனக்கு வழங்க வேண்டிய மரியாதை தொடர்பில் சுமந்தின் முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

 

மேலும் ஒரு சட்டத்தரணியாக இந்த விடயங்களை சுமந்திரன் தெரிந்து கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்த சந்திரகாந்தன், இவ்வாறான இழிவான கருத்துக்களை நாடாளுமன்றத்தில் வெளியிடுவதற்கு சபாநாயகர் அனுமதி வழங்க கூடாது எனவும் சபையில் வலியுறுத்தினார்.

சட்டத்தரணிகள் சங்கம் எம்.ஏ. சுமந்திரனுக்கு பயந்து போயிருக்கிறதா..? – சரத்வீரசேகரக கேள்வி..!

நீதிமன்றத்தை அச்சுறுத்தியதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரித்துள்ள பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் வீரசேகர, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.

நாடாளுமன்றத்துக்குள் நடந்துகொள்ளும் முறைமை தனக்கு நன்றாகத் தெரியும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குண்டர்களால் பௌத்த உரிமை நாசமாக்கப்படுகின்றது. அவற்றை வடக்குக்கு சென்று பார்த்துவருமாறு சட்டத்தரணிகள் சங்கத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.

 

பௌத்த உரிமைகளை நாசமாக்கும் பிரிவினைவாத குண்டர்களுக்காக முன்னிலையாகுவதற்கு முன்னர், இரண்டொரு தடவைகள் சிந்தித்துப் பார்க்குமாறும் சட்டத்தரணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

‘நாங்கள் அனைவரும் நீதிமன்றத்தை மதிக்கிறோம்’ என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சுமந்திரன், உயர்நீதிமன்றம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா, அவருக்குப் பயந்து தானா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

 

இலங்கையின் நீதித்துறை குறித்து வெளியிடப்பட்ட அவமானகரமான மற்றும் அருவருப்பான அறிக்கைகள் தொடர்பில், தானாக முன்வந்து ஜெனீவா சென்று கண்டித்ததாகவும் சரத் வீரசேகர அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“அரசாங்கத்தினால் மக்களின் ஊழியர் சேமலாப நிதியம் திருடப்படுகின்றது.”- நாடாளுமன்றத்தில் சுமந்திரன் !

இலங்கை அரசாங்கத்தினால் மக்களின் ஊழியர் சேமலாப நிதியமானது திருடப்படுவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்..;

“அரசாங்கத்தினால் மக்களின் ஊழியர் சேமலாப நிதியம் திருடப்படுகின்றது. காலங்காலமாக பல்வேறு முறைகளில் மக்களின் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் மோசடிகள் இடம்பெற்று வருகின்றன.

 

ஏனெனில் பெரும்பாலான மக்கள் நடுத்தர வர்கத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இதனால் அவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்ப முடியாத நிலையில் உள்ளனர்.

 

அனைத்து வெளிநாட்டு முதலீடுகளையும் அம்பலப்படுத்தும் அரசாங்கம் ஏன் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் குறித்த விடயங்களை அம்பலப்படுத்துவதில்லை? குறிப்பாக தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசாங்கம் ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றியுள்ளது.

 

அதுமட்டுமல்லாது ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தை தமது இறுதி கால சேமிப்பாக கருதும் தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்த தேசிய கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையானது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதனை அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஏற்றுக்கொள்வாரா? தேசிய கடன் மறுசீரமைக்கப்படும் என சர்வதேசத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்து விட்டு மக்களை தவறாக வழிநடத்துவது மற்றிலும் தவறான விடயமாகும்” என தெரிவித்துள்ளார்

வெடுக்குநாறி மலை வழிபாடு தொடர்பில் வவுனியா நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு  !

வவுனியா வெடுக்குநாறிமலை ஆலயத்தில் தொல்பொருளை சேதமாக்காவண்ணம் எளியமுறையில் வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

மேலும், விக்கிரகங்கள் உடைப்புடன் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் காவல்துறையினருக்கு பணித்துள்ளது.

வெடுக்குநாறிமலையில் சிலைகள் உடைக்கப்பட்ட விடயம் தொடர்பான வழக்கு வவுனியா நீதிமன்றில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கில் முறைபாட்டாளார்கள் சார்பில் முன்னிலையான அதிபர் சட்டத்தரணி எம்.எ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில,

இந்த வழக்கில் தொல்பொருட்திணைக்களம் முதன்முறையாக முன்னிலையாகி நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மீறி முறைப்பாட்டாளர்கள் செயற்பட்டதாக தகவல் கொடுத்திருந்தனர்.

இன்றும் அந்த விடயத்தை கூறியிருந்தார்கள். இருப்பினும் தொல்பொருள் தொடர்பான இந்த பிரதேசத்திலே மார்ச் மாதம் இடம்பெற்ற மோசமான விக்கிரகங்கள் உடைப்பு சம்பவத்தில் தொல்பொருட் திணைக்களம் ஒரு விரலைகூட அசைக்கவில்லை.

அந்த விடயத்தை கரிசனையில் கூட எடுக்கவில்லை. அதனை மீள நிறுவும் படி நீதிமன்றம் உத்தரவை வழங்கிய பின்னரே மீள நிறுவியதால் தொல்பொருள் சேதமேற்பட்டதாக பொய்யான புகாரை தெரிவிப்பதாக நாம் எடுத்துரைத்தோம்.

அந்தவிடயத்தில் இதுவரைக்கும் சந்தேகநபராக எவரையும் குறிப்பிட வில்லை. தொல்பொருட்திணைக்களம் வனவளத்திணைக்களம் போன்றவற்றால் தொடர்ச்சியாக மேற்பார்வை செய்யப்படுகின்ற ஒரு இடத்தில் இப்படியான விக்கிரகங்களை உடைத்தமை ஒரு விசித்திரமான விடயம் என்பதையும் கூறினோம்.

எனவே இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் காவல்துறைக்கு கட்டளை இட்டுள்ளார். அத்துடன் தொல்பொருளுக்கு சேதம் ஏற்ப்பட்டால் அதன் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

இது நீதிமன்ற கட்டளையை மீறி செயற்பட்டமை தொடர்பாக இருப்பதால் அதற்கான நடவடிக்கைகளை உரியமுறையிலே எடுக்குமாறு தொல்பொருட்திணைக்களத்திற்கு நீதிமன்றால் அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தொல்பொருள் அடையாளங்கள் சேதமாகின்ற வகையில் செயற்படாவண்ணம், சமய சடங்குகளை எளியமுறையிலே செய்வதற்குமான, எச்சரிக்கையும் முறைப்பாட்டாளர்களான எங்களுக்கு மன்றால் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இன்றைய வழக்கில் உடைக்கப்பட்ட விக்கிரகங்களுடன் ஆலயத்தின் பூசகர் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.