இலங்கை மின்சார சபை

இலங்கை மின்சார சபை

இலங்கையில் ஒரே ஆண்டில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மின் இணைப்புகள் துண்டிப்பு!

நாடு முழுவதும் கடந்த ஆண்டில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மின் துண்டிப்புகள் செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

 

பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தலைமையில் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை தணிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழு நேற்று வியாழக்கிழமை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடிய போது இவ்விடயம் தெரியவந்துள்ளது.

 

கடந்த வருடம் 10,69,000 மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டமை தெரியவந்துள்ளதாக தலைவர் வலேபொட தெரிவித்தார்.

 

இணைப்பு துண்டிக்கப்பட்ட நுகர்வோருக்கு, மறு இணைப்பு கட்டணத்தை 50 சதவீதம் குறைத்து, நிலுவையில் உள்ள பில் தொகையை தவணையாக செலுத்த அனுமதிக்குமாறு, அந்தந்த அதிகாரிகளுக்கு குழு அறிவுறுத்தியது.

 

மேலும் கடன் அடிப்படையில் புதிய இணைப்புகளை வழங்குவதற்கான பொறிமுறையை உருவாக்கவும், மின் கட்டணத்துடன் முழு இணைப்புக் கட்டணத்தையும் தவணை முறையில் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

 

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL), இலங்கை மின்சார சபை (CEB), நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

பதவி விலகினார் மாணவர்கள் குப்பிவிளக்கில் படிக்க வேண்டும் என கூறிய இலங்கை மின்சாரசபையின் பேச்சாளர் நொயல் பிரியந்த !

மாணவர்கள் குப்பிவிளக்கில் கல்விகற்க பழகவேண்டும் என இலங்கை மின்சாரசபையின் பேச்சாளர் நொயல் பிரியந்த சர்ச்சை கருத்தினை வெளியிட்டுள்ளார்.

 

மாணவர்கள் அவசியம் ஏற்பட்டால் குப்பிவிளக்கில் கல்விபயில முயலவேண்டும் இந்த விடயத்தில் முன்னோர்களை அவர்கள் பின்பற்றவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

அதிகரிக்கும் மின்கட்டணங்கள் குறித்த கரிசனைகள் குறித்து; கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

மின்கட்டணங்களை செலுத்தாததால் மின்துண்டிக்கப்படுவதால் பெரும் பாதிப்புகள் ஏற்படுவதை ஏற்றுக்கொண்டுள்ள மின்சாரசபையின் பேச்சாளர் இலவச மின்சாரம் என்ற கலாச்சாரத்திலிருந்து நுகர்வோர்கள் மாறுவதால் இந்த நெருக்கடிகளை அவர்கள் எதிர்கொள்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்தை மின்கட்டண அதிகரிப்பு ஒருதசாப்தகாலத்திற்கு பின்னரே மேற்கொள்ளப்பட்டதாகதெரிவித்துள்ள மின்சாரசபையின் பேச்சாளர்

 

இலங்கை மின்சார சபை எதிர்கொண்டுள்ள நிதிநெருக்கடிகள் குறித்தும் தெரிவித்துள்ள அவர் அரசாங்கத்திற்கு பெரும்தொகையை செலுத்தவேண்டிய நிலையில் மின்சார சபை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

மின்சாரசபை பேச்சாளரின் கருத்தினை சவாலுக்கு உட்படுத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் நவீன தொழில்நுட்பம் இலத்திரனியல் சாதனங்கள் காரணமாக தற்போதைய சிறுவர்களை முன்னைய தலைமுறையிடன் ஒப்பிடமுடியாது என தெரிவித்தார்.

 

இதேவேளை மின்கட்டண அதிகரிப்பை நியாயப்படுத்தியமின்சாரசபை பேச்சாளர் கல்விகற்பதற்கு ஏன் மின்சாரம் அவசியம் என கேள்வி எழுப்பியதுடன் குப்பிவிளக்குகள் போன்ற பாரம்பரிய முறைகள் போதுமானவை என தெரிவித்துள்ளார்.

 

நான் குப்பிவிளக்கிலேயே படித்தேன் என தெரிவித்த அவர் தொழில்நுட்ப வசதிகளை நம்பியிருப்பதற்கு பதில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளிற்கு அவசியமான தேவைகளை மாத்திரம் வழங்கவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில் மேற்குறித்த கருத்து தெரிவித்த இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நொயல் பிரியந்த பதவி விலகியுள்ளார்

 

அமைச்சர் காஞ்சன விஜயசேகர இதனை உறுதி செய்துள்ளார்.

 

இலங்கை மின்சாரசபையின் பேச்சாளரின் கருத்துக்களில் தொழில்சார் தன்மையோ அல்லது இரக்கமோ கருணையோ இல்லாததை அமைச்சர் தொண்டமான் உட்பட பலர் சுட்டிக்காட்டியுள்ளனர் அதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன் என காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

 

மின்சாரசபை பேச்சாளரின் கருத்துக்கள் இலங்கை மின்சாரசபையினதோ அல்லது அரசாங்கத்தினதோ நிலைப்பாடுகளை பிரதிபலிக்கவில்லை அவரின் கருத்துக்காக நான் அமைச்சு மற்றும் மின்சாரசபையின் சார்பில் மன்னிப்கோருகின்றேன் என அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

 

பேச்சாளர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் தனது கருத்துக்களிற்காக பொதுமன்னிப்பு கோரியுள்ளார் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தெற்காசியாவில் அதிக மின்சாரக் கட்டணத்தை வசூலிக்கும் நாடு இலங்கை என கூறுவது நியாயமில்லை – அமைச்சர் காஞ்சன கவலை !

ஒன்பது வருடங்களாக ஒரே மாதிரியான மின்சாரக் கட்டணத்தை வசூலித்த ஒரே நாடு இலங்கை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்தப் பின்னணியில் தெற்காசியாவில் அதிக மின்சாரக் கட்டணத்தை வசூலிக்கும் நாடு இலங்கை என கூறுவது நியாயமில்லை என்றார்.

மின்சாரக் கட்டணத்தை குறைக்குமாறு பாராளுமன்றத்தில் கூச்சலிட்ட போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எவரும் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் எந்தவொரு யோசனையையும் முன்வைக்கவில்லை.

வழங்கப்படக்கூடிய குறைந்த கட்டண விளிம்புகள் தொடர்பான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கட்டண திருத்தம் தொடர்பான இறுதிப் பொறுப்பு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினுடையது என்றும், அவர்கள் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்று பரிந்துரைகளை வழங்கியதன் பின்னர், மின்சார சபை மீண்டும் கட்டண முறை தொடர்பான முன்மொழிவுகளைத் தயாரிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கட்டண திருத்தம் தொடர்பில் அமைச்சரவை மற்றும் நிதி அமைச்சுக்கு அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்சார சபை ஊழியர்கள் 10,000 பேருக்கு விளக்கமளிக்க கோரி கடிதம்!

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் 10,000 பேருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

 

சுகயீன விடுமுறையை பதிவு செய்து, அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியமைக்கு விளக்கமளிக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

 

ஊழியர்களின் அளிக்கும் பதில்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மின்சார சபை பேச்சாளர் பிரதி பொது முகாமையாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றிய குற்றச்சாட்டில் இலங்கை மின்சார சபையில் ஊழியர்கள் 66 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில், ஊழியர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் மின்சாரம் தாக்கி மொத்தம் 50 காட்டு யானைகள் பலி – இலங்கை மின்சார சபை

சட்டவிரோதமான முறையில் விவசாய நிலங்களை பாதுகாக்கும் வேலிகளுடன் இலங்கை மின்சார சபையின் மின்கம்பிகளை இணைத்ததன் மூலம் கடந்த வருடத்தில் மின்சாரம் தாக்கி மொத்தம் 50 காட்டு யானைகள் பலியாகியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் (வணிகம் மற்றும் செயற்பாட்டு உத்தி) மற்றும் ஊடகப் பேச்சாளர் பொறி. கே.ஏ. நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், கடந்த வருடத்தில் பல்வேறு மனித நடவடிக்கைகளினால் மொத்தம் 474 காட்டு யானைகள் பலியாகியுள்ளன.

 

எனவே, யானைகளைக் கொல்ல சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக மின்சார சபை ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுத்திருந்தது. நாட்டிலுள்ள யானைகளின் எண்ணிக்கையைப் பாதுகாக்க மக்கள் ஆதரவை வழங்குமாறு இலங்கை மின்சார சபை கோருகிறது.

 

இதன்படி, பயிர்ச்செய்கைகளைப் பாதுகாக்கும் வேலிகளுடன் மின்கம்பிகளை இணைப்பது தொடர்பான சம்பவங்கள் தொடர்பாக நேரடியாக முறைப்பாடு செய்ய 1987 என்ற அவசர இலக்கத்தை இலங்கை மின்சார சபை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தனியார் மயமாகும் இலங்கை மின்சார சபை!

இலங்கை மின்சார சபை (CEB) மின்சார சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களின் கீழ் 14 தனியாருக்கு சொந்தமான நிறுவனங்களாக உடைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையம், மகாவலி மற்றும் லக்ஸபான நீர்மின் நிலையங்கள் உட்பட அனைத்து நீர்மின் நிலையங்களும் தனியார் மயமாக்கப்படவுள்ள அரச நிறுவனங்களில் அடங்கும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) மற்றும் ஓய்வூதிய நிதிகளை நிர்வகிப்பதற்கு புதிய நிறுவனம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சினால் நிர்வகிக்கப்படும் புதிய மின்சார ஆணைக்குழுவானது ”PUCSL”க்கு பதிலாக மாற்றப்படும் எனவும் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 

மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை – இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால், உற்பத்திச் செலவை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவி்க்கையில்,

நமது மின்சார உற்பத்தியில் சுமார் 40 சதவீதம் நீர் மின்சாரம் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்குச் செல்வதில் எங்களுக்கு ஒரு பெரிய இலக்கு உள்ளது.

அவற்றில் சிலவற்றை நாங்கள் ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு நாம் கட்டாயம் செல்ல வேண்டும். அந்த இலக்கை அடையும் வரை, தடையின்றி மின்சார விநியோகத்தை தொடர்வதில் இலங்கை மின்சாரசபை பாரிய பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளது. அவர்களது பிரச்சினைக்கு சாத்தியமான மாற்று எதுவும் இல்லை.

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு இடையில் தேவையற்ற மோதல் உருவாக்கப்பட்டுள்ளது என்பது மிகவும் வெளிப்படையானது.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தனது பொறுப்புகளை சரியாக உணர்ந்திருக்கிறதா என்பது ஒரு கேள்வி. குறிப்பாக தேர்தல் வரும்போது மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி மக்கள் மீது அதிக வரிச்சுமையை அரசு சுமத்தாது.

வேறு எந்த மாற்றுவழியும் இல்லாததால் இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய கசப்பான உண்மை.” என குறிப்பிட்டுள்ளார்.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 66 சதவீதத்தால் அதிகரிக்கும் மின்சார கட்டணம் – முழுமையான விபரங்கள்!

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 66 சதவீதத்தால் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி இன்று (15) பிற்பகல் கிடைத்ததாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, அதற்கான கட்டண திருத்தம் இன்று (15) முதல் அமலுக்கு வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது..

இந்த புதிய திருத்தத்தின்படி, முதல் 30 அலகுகளுக்கு தற்போது அறவிடப்படும் 8 ரூபா கட்டணம் 30 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது.

31 முதல் 60 அலகுகளுக்கு தற்போது அறவிடப்படும் 10 ரூபா கட்டணம் 37 ரூபாவாகும் , 61 முதல் 90 அலகுகளுக்கு தற்போது அறவிடப்படும் 16 ரூபா கட்டணம் 42 ரூபாவாகும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

91 முதல் 120 வரையிலான அலகுகள் மற்றும் 121 முதல் 180 வரையிலான அலகுகளுக்கு தற்போது அறவிடப்படும் 50 ரூபாய் கட்டணம் போன்று 181 அலகுகளுக்கு மேல் உள்ள ஒவ்வொரு அலகுகளுக்கும் அறவிடப்படும் 75 ரூபாய் என்ற தற்போதுள்ள கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

மேலும், முதல் 30 அலகுகளுக்கான நிலையான கட்டணம் 400 ரூபா வரையிலும், 31 முதல் 60 அலகுகள் வரை நிலையான கட்டணம் 550 ரூபா வரையிலும், 61 முதல் 90 அலகுகள் வரை நிலையான கட்டணம் 650 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், 91 முதல் 120 அலகுகள் வரையிலும், 121 முதல் 180 அலகுகள் வரையிலும், நிலையான கட்டணம் 1500 ரூபாவாக அதிகரித்துள்ளது.

வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு முதல் 30 அலகுகளுக்கு அறவிடப்பட்ட 8 ரூபாய் கட்டணம் 30 ரூபாயாகவும், 31 முதல் 90 அலகுகளுக்கு அறவிடப்பட்ட 15 ரூபாய் கட்டணம் 37 ரூபாவாகும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

180 அலகுகளுக்கு மேல் உள்ள ஒவ்வொரு அலகுகளுக்கும் 32 ரூபாவாக இருந்த கட்டணம் 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு முதல் 30 அலகுகளுக்கான நிலையான கட்டணமாக இருந்த 90 ரூபா 400 ரூபாயாகவும், 31 முதல் 90 அலகுகளுக்கான நிலையான கட்டணமான 120 ரூபா 550 ரூபாயாகவும், 180 க்கு அதிகமான அலகுகளுக்கான நிலையான கட்டணமாக இருந்த 1500 ரூபா 2000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொழில் துறைக்கு, முதல் 300 அலகுகள் பிரிவின் கீழ் ஒரு அலகிற்கு அறவிடப்பட்ட 20 ரூபா கட்டணம் 26 ரூபாவாக மாத்திரமே உயர்த்தப்பட்டுள்ளது.

300 அலகுகளுக்கு மேல் உள்ள ஒவ்வொரு அலகுகளுக்கும் கட்டணம் 20 ரூபாயில் இருந்து 26 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

முதல் 300 அலகுகளுக்கு அறவிடப்பட்ட 960 ரூபா என்ற நிலையான கட்டணம் 1200 ரூபாவாகவும் , 300 அலகுகளுக்கு மேல் உள்ள ஒவ்வொரு தொழில் துறைக்கும் அறவிடப்பட்ட 1500 ரூபா என்ற நிலையான கட்டணம் 1600 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை, உணவகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கான முதல் 180 அலகுகளுக்கு அறவிடப்பட்ட 25 ரூபாய் கட்டணம் 40 ரூபாவாகவும், 180 அலகுகளுக்கு மேல் அறவிடப்பட்ட 32 ரூபாய் என்ற கட்டணம் 47 ரூபாவாகும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை, உணவகஙடகளட மற்றும் அரசு நிறுவனங்களுக்கான முதல் 180 அலகுகளுக்கு அறவிடப்பட்ட 360 ரூபா என்ற நிலையான கட்டணம் 1000 ரூபாவாகவும், 180 அலகுகளுக்கு மேல் அறவிடப்பட்ட 1500 ரூபா என்ற நிலையான கட்டணம் 1600 ரூபாவாகும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

“ஒன்று உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை கட்டுங்கள். அல்லது மின்வெட்டில் வாழப்பழகுங்கள்.” – அமைச்சர் காஞ்சன விஜேசேகர

மின் கட்டணத்தை உயர்த்த கூடாது என்றால் நாளாந்த மின்வெட்டை மக்கள் எதிர்நோக்க வேண்டும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி தினமும் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வாழ்க்கை முறைக்கு மக்கள் மாறிக் கொள்ள வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் ஜனவரி மாதம் 05, 09 மற்றும் 13 ஆம் திகதிகளில் 03 நிலக்கரி கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கான புதிய நிலக்கரி விநியோகத்திற்கான டெண்டர் சட்டமா அதிபரின் பரிந்துரைகளைப் பெற்றதன் பின்னர் இந்தோனேசிய நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தனியார் மயப்படுத்தப்படுகிறதா இலங்கை மின்சார சபை ..?

இலங்கை மின்சார சபையையோ அல்லது அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களையோ தனியார்மயமாக்குவது கிடையாது என இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு குழுவின் உறுப்பினர் கலாநிதி சுசந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

மின்சக்தி அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

“மறுசீரமைப்பு இலங்கை மின்சார சபையின் செயற்பாடுகளை பிரிக்கும் மற்றும் அந்த செயற்பாடுகளை செயற்படுத்த சுயாதீன நிறுவனங்களை நிறுவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, மின்சார உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகம் ஆகியவற்றிற்கான சுயாதீனமான செயற்பாடுகளை மேற்கொள்ளும் நிறுவனங்களாக மாற்றப்பட உள்ளது. மின்சார சபையை ஒரே நிறுவனமாக வைத்துக்கொண்டு இந்த மறுசீரமைப்பைச் செய்ய முடியாது. எனவே, இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்டுள்ள மேற்படி செயற்பாடுகள் பிரிக்கப்பட்டு சுயாதீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதாவது அந்த அமைப்புகளை நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களாக மாற்ற வேண்டும்’’ எனவும் அவர் தெரிவித்தார்.

“ஒரு நிறுவனமாக பதிவு செய்தல் மற்றும் தனியார்மயமாக்கல் இரண்டும் முற்றிலும் வேறுபட்ட விடயங்கள்,” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஒரு நிறுவனமாக ஸ்தாபிப்பதால், சபையின் வளங்கள் அல்லது செயற்பாடுகளின் அதிகாரத்தின் உரிமையை அரசாங்கத்திடம் இருந்து அகற்ற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மறுசீரமைப்பு முன்மொழிவில், அங்குள்ள செயற்பாடுகளை எவ்வாறு பிரித்து அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான சுயாதீன நிறுவனங்களாக நிறுவுவது என்பது குறித்த திட்டம் மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்காக தற்போதுள்ள சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.