இலங்கை பௌத்தம்

இலங்கை பௌத்தம்

பௌத்த மதத்தின் இருப்புக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

ஆண்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கும் இருக்க வேண்டும் எனபது சர்வதேச பெண்கள் அமைப்புகளின் அனைத்து உடன்படிக்கைகளிலும் உள்ளடங்கியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நீதித்துறை, நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை அல்லது எந்தவொரு நிறுவனமும் அந்த நடவடிக்கைகளில் தலையிட முடியாது என்று வலியுறுத்தினார்.

ஆண்களுக்கு நிகரான உரிமைகளை பெண்களுக்கும் வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக தாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், பௌத்த மதத்தின் இருப்புக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய மறுசீரமைப்பின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள பிராந்திய அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (18) சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட புதிய பிராந்திய அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வில் இன்று கலந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

ஆண், பெண் சமத்துவச் சட்டமூலம் குறித்து பாராளுமன்றத்தில் இன்று நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. ஆனால் அதுதொடர்பில் கிடைத்துள்ள உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி பெண்களுக்கு சம உரிமை இல்லை. நாட்டின் சனத்தொகையில் பெரும்பான்மையான பெண்களால் அந்த உரிமையைப் பெற முடியாது என்பது, இந்த நாட்டின் பாராளுமன்றத்திற்கும் அரசியலமைப்பிற்கும் எதிரான தீர்மானமாகவே கருத முடியும் என நான் பாராளுமன்றத்தில் தெரிவித்தேன்.

ஆண்களுக்கு நிகரான உரிமைகளை பெண்களுக்கு வழங்குவதே எங்கள் நோக்கம். சர்வதேச பெண்கள் அமைப்புகளின் அனைத்து ஒப்பந்தங்களிலும் இது சேர்க்கப்பட்டுள்ளது. அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் நீதித்துறை, நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை அல்லது வேறு எந்த அமைப்பும் தலையிட முடியாது.

அந்தப் பணியை நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளோம். எனவே இது தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என இன்று நான் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தேன். அதேபோன்று, அந்தத் தீர்மானத்தினால் பௌத்த மதத்தின் பாதுகாப்பு நீக்கப்படலாம் என்பதால் அந்தக் கருத்தை ஏற்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது. தற்போது நாம் அதுகுறித்து அவதானம் செலுத்தி செயற்பட்டு வருகிறோம்.

தூய பௌத்தம் மற்றும் செழுமையான பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாக்க முன்வாருங்கள் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இந்த பொசன் பௌர்ணமி தினத்தில், நாட்டில் ஏற்பட்ட, தற்போது படிப்படியாக தீர்க்கப்பட்டு வரும் அரசியல், சமூக பொருளாதார குழப்பங்கள் தீர்ந்து இலங்கையை உலகின் மீண்டும் முன்னேற்றம் அடைந்த நாடாக உயர்த்துவதற்கு இந்த பௌர்ணமி தினத்தில் நாம் அனைவரும் உறுதிபூணுவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பொசனை முன்னிட்டு ஜனாதிபதி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கை வரலாற்றில் மஹிந்த தேரரின் வருகை, சமய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மைல்கல் என்பது மறுக்க முடியாதது. மேலும், அதன் மூலம் நாம் எண்ணற்ற   சமூக, கலாசார மற்றும் அரசியல் மதிப்புகளை பெற்றுள்ளோம்.

மஹிந்த தேரர் போதித்த வாழ்க்கை முறையின் மூலம் பெருமைமிக்க நாடாகவும் தேசமாகவும் நாம் முன்னோக்கி வந்துள்ளோம்.

குறிப்பாக குளங்கள், வயல்கள், தூபிகள் ஆகியவற்றினால் கட்டமைக்கப்பட்ட தன்னிறைவுப் பொருளாதாரத்திற்கு வழிகாட்டிய தர்ம கருத்தாடல்கள் மற்றும் அரசியல் சமூக கலாசார கருத்தாடல்களும் மஹிந்த தேரரின் வருகையுடனேயே உருவாகின.

இந்த பொசன் பௌர்ணமி தினத்தில், மஹிந்த தேரரின் வருகையால் கிடைத்த தூய பௌத்தம் மற்றும் செழுமையான பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாக்க தங்களை அர்ப்பணிக்குமாறு அனைத்து பௌத்த மக்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

அனைவருக்கும் பொசன் பௌர்ணமி தின வாழ்த்துக்கள் !

“பௌத்த மதத்தை அவமதிப்பவர்களை சட்டம் தண்டிக்காவிட்டால் பௌத்தர்கள் தண்டிப்பார்கள்.” – சரத் வீரசேகர எச்சரிக்கை !

“பௌத்த மதத்தை அவமதிப்பவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பௌத்தர்கள் சட்டத்தைக் கையில் எடுக்க நேரிடும்.” என ஐக்கிய பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருமான சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து அவர்,

“பௌத்த மதத்தை அவமதிப்பதும், பின்னர் மன்னிப்புக்கோருவதும் நாட்டில் வழமையான செயற்பாடொன்றாக மாறியுள்ளது. பௌத்தத்தை அவமதிப்பவர்களுக்கு எதிராக கடுமையாக தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறானவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பாரியளவில் பணங்கள் கிடைக்கின்றன, அதுபோல வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்கும் டிக்கட்டுக்கள் வழங்கப்படுகின்றன.

இவர்களுக்கு சரியான தண்டனை வழங்கப்படவில்லை என்றால் பௌத்தர்கள் இவர்களை தண்டிப்பார்கள். பௌத்தர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம். பணத்துக்காக பௌத்தத்தை அவமதிப்பவர்கள் தங்களது பெற்றோர்களைக் காட்டிக்கொடுக்கவும் தயங்க மாட்டார்கள்.” என சரத் வீரசேகர கடுமையாக சாடியுள்ளார்.