இலங்கை கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட்டில் மீண்டும் சனத் ஜயசூரிய !

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் தொழில்நுட்ப மத்திய நிலையத்தின் கீழ் உள்ள அனைத்து அணிகளையும் சனத் ஜயசூரிய மேற்பார்வை செய்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சனத் ஜயசூரிய இதற்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழுவின் தலைவராகவும் தேசிய தெரிவுக்குழுவின் தலைவராகவும் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரத்துச்செய்யப்பட்டது இலங்கையின் இடைக்கால கிரிக்கெட் குழு !

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட இடைக்கால கிரிக்கெட் குழுவை ரத்து செய்ய விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தீர்மானித்துள்ளார்.

இடைக்கால குழுவை நியமிக்கும் முடிவை ரத்து செய்யும் வர்த்தமானியில் கையெழுத்திட்டுள்ளதாக ட்விட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடையை நீக்கும் நோக்கில் இந்த தீர்மானத்தை எடுத்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

இதேவேளை, இலங்கை கிரிக்கட் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குறித்த டுவிட்டர் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன், சர்வதேச கிரிக்கட் பேரவையின் அவதானிப்புகளுக்கான கணக்காய்வு அறிக்கை குறித்து எழுத்து மூலம் தங்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்நாட்டில் கிரிக்கெட்டை முகாமைத்துவம் செய்வதில் அதற்கு அரசாங்கம் அதிகம் தலையிடாமல் இருப்பதே எமது நோக்கமாகும். – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டை அரசியலுக்கு அப்பாற்பட்டு பேணுவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2030ஆம் ஆண்டு இலங்கையின் கிரிக்கட் எங்கு இருக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை தமக்கு இருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, அதனால்தான் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் 1.5 பில்லியன் ரூபாவை பாடசாலை கிரிக்கெட்டின் அபிவிருத்திக்காக ஒதுக்கியதாகவும், எதிர்காலத்தில் அதனை வருடாந்தம் 02 பில்லியன் வரை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த நிதி நிர்வாகத்தையும், பாடசாலை கிரிக்கெட்டின் அபிவிருத்தியையும் சுயாதீன நிதியம் ஒன்றிடம் ஒப்படைக்க எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, சகல செயற்பாடுகளையும் வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுத்து எதிர்பார்த்த இலக்குகளை அடைவதே அதன் எதிர்பார்ப்பாகும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், கிரிக்கெட் விளையாட்டு தொடர்பில் எதிர்காலத்தில் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டத்தின் மூலம் இடைக்கால குழுக்கள் மற்றும் அமைச்சரின் அதிகாரங்கள் நீக்கப்படும் என குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில், விளையாட்டானது வணிகமயமாக்கப்படும் என்றால் அது அரசியலில் இருந்து விடுபட வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

நாட்டில் புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் மூலம் சுபீட்சமான நாடாக மாறுவதற்கான திட்டங்களை அரசாங்கம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும், கிரிக்கெட் போன்ற ஏனைய துறைகளிலும் சிறந்து விளங்கும் நாடாக இலங்கை மீண்டும் மாற வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

கொழும்பு கோல்ட்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று (08) பிற்பகல் நடைபெற்ற கொழும்பு கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.

150ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நினைவுப் பலகையை திரை நீக்கம் செய்துவைத்த ஜனாதிபதி, பின்னர் விளையாட்டு சங்க உறுப்பினர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

1996 உலகக் கிண்ணத்தை வென்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் 2014 பந்துவீச்சு 20 (T20) உலகக் கிண்ணத்தை வென்ற அணிக்கும் கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் அங்கத்துவம் இதன்போது வழங்கப்பட்டது.

மேலும் பல வருடங்களாக கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு பங்களிப்புச் செய்த உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பரிசுகளையும் வழங்கி வைத்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் வாழ்நாள் அங்கத்துவம் அதன் தலைவர் நிஷாந்த ரணதுங்கவினால் வழங்கப்பட்டது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தின் 150ஆவது ஆண்டு விழாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகம் இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அங்கமாக மாறியுள்ளது. இங்கிலாந்தில் கிரிக்கெட் தொடங்கிய காலத்திலிருந்தே, அணிகள் இணைந்து விளையாட்டுக் கழகங்களை உருவாக்கின. மாலுமிகள் வரும்போதும், அவர்களும் தற்காலிக கிரிக்கெட் அணியை உருவாக்கினர். மலாய் படைப்பிரிவின் படைமுகாமில் தங்கியிருந்த வீரர்கள் கோல்ட்ஸ் என்ற அவர்களின் கிரிக்கெட் அணியை உருவாக்கினர்.

ஒருமுறை கோல்ஸ் மற்றும் றோயல் கல்லூரி, புனித தோமஸ் மற்றும் வெஸ்லி கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் பின்னர், சிங்கள விளையாட்டுக் கழகம் என்ற பெயரில் மற்றொரு கழகத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

அதே நேரத்தில் தமிழ் யூனியன் உருவாக்கப்பட்டது. இதன் விளைவாக, இன அடிப்படையில் பல விளையாட்டுக் கழகங்கள் உருவாகின. இவை மலாய், பறங்கியர், சிங்களம், தமிழ் ஆகிய வார்த்தைகளால் மட்டுமே பெயரிடப்பட்டிருந்தாலும், அரசியல் கட்சிகளைப் போலல்லாமல் அனைத்து இன மக்களும் இதில் ஒன்றிணைந்து செயற்பட்டனர்.

துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான அரசியல் கட்சிகளில் இதனை கண்டுகொள்ள முடிவதில்லை. அதனால்தான் நாம் இன்று இந்தப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளோம். எவ்வாறாயினும், உங்களது பங்களிப்பு இலங்கையின் விளையாட்டு வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

இலங்கையின் கிரிக்கட் ஆரம்பத்தை எடுத்துக்கொண்டால், பிரித்தானியர்கள் சிலர் இன்றுள்ள விதிகள் எதுவுமின்றி வெறும் மட்டையால் பந்து விளையாடிய காலத்திலிருந்து இன்று வரை கிரிக்கெட்டின் பரிணாமத்தை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை பார்த்திருக்கிறோம். அந்தக் காலத்தை கடந்திருக்கிறோம். இவ்வாறு நோக்கும்போது, கிரிக்கெட் வேகமாக மாறும் விளையாட்டு. நவீன தொழில்நுட்பத்துடன் தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாக, விளையாட்டும் இப்போது மாறி வருகிறது.

இந்த ஆண்டு வரவு செலவுத்திட்ட விவாதத்திலும் கிரிக்கெட் முக்கிய இடம் பிடித்திருப்பதை பார்த்தோம். இம்முறை வரவு செலவுத் திட்ட விவாதம் முக்கியமாக கிரிக்கெட் தொடர்பிலேயே இடம்பெற்றது. வரவு செலவுத் திட்டம் பற்றி அல்ல, அதாவது அரசாங்கத்தையும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளையும் விமர்சிக்க எதிர்க்கட்சிகளுக்கு எதுவும் இருக்கவில்லை.

இதேவேளை, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருக்குப் பதிலாக புதிய அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டார். கிரிக்கெட்டின் முன்னைய நிலைமையை எவ்வாறு மீட்டெடுப்பது என்பது குறித்து அமைச்சர் தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் (ICC) கலந்துரையாடி வருகிறார். அவை அனைத்தும் விரைவில் நிவர்த்தி செய்யப்பட்டு, எமக்கு மீண்டும் உலகத்துடன் செயற்பட கிடைக்க வேண்டும் என்று நாம் பிரார்த்திப்போம்.

2030இல் இலங்கையின் கிரிக்கெட் எங்கு இருக்க வேண்டும் என்ற இலக்கு எனக்கு உள்ளது. எனவேதான் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் பாடசாலை மட்ட கிரிக்கெட் வளர்ச்சிக்காக 1.5 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டுக்கு மட்டுமன்றி இந்த இலக்கு நிறைவேறும் வரை இந்த நிதியை வழங்குவோம். இதனை வருடத்துக்கு 02 பில்லியன் வரை அதிகரிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நாட்டில் கிரிக்கெட்டை முகாமைத்துவம் செய்வதில் அதற்கு அரசாங்கம் அதிகம் தலையிடாமல் இருப்பதே எமது நோக்கமாகும். மேலும், எதிர்காலத்தில் கொண்டு வரப்படும் புதிய சட்டங்கள் மூலம் இடைக்கால குழுக்கள் மற்றும் அமைச்சரின் அதிகாரங்கள் நீக்கப்படும்.

இந்த நிதி நிர்வாகத்தையும் பாடசாலை கிரிக்கெட்டின் வளர்ச்சியையும் ஒரு சுயாதீன நிதியத்திற்கு நாம் ஒப்படைப்போம். மீதமுள்ள பகுதி நிர்வாக சபைக்கு உள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கு வழங்கப்படும். விளையாட்டுத்துறையை மேம்படுத்த அமைச்சுக்கு அதிகாரம் உள்ளது.

மைதானங்கள், உபகரணங்கள் என எதற்கு இந்த நிதி செலவிடப்பட்டாலும் அது மூலதனச் செலவில் குறிப்பிடப்படும். எனவே, நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உள்ள பாடசாலை கிரிக்கெட் முன்னேற்றம் அடைந்து வருகிறது என்பதே அதன் அர்த்தம். அதன் பின்னர் எமக்கு மாகாண மட்டத்தில் கிரிக்கெட்டை முன்னேற்ற முடியும்.

நாம் தொடர்ந்து கிரிக்கெட் வீரர்களை உருவாக்க வேண்டும். இந்த நிதியை கிரிக்கெட் வீரர்களை உருவாக்கவே நாம் பயன்படுத்துகிறோம். ஆண் பிள்ளைகள் மாத்திரமன்றி, பெண் பிள்ளைகளும் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். இதன் மூலம் நாட்டின் கிரிக்கெட் விளையாட்டை ஒரு குறிப்பிட்ட தரத்திற்கு கொண்டு வருவோம்.

மேல் மாகாணத்தில் கிரிக்கெட் பற்றிப் பேசும்போது கொழும்பில் உள்ள சில பாடசாலைகளைத் தவிர பாதுக்க, கிரிந்திவெல, அகலவத்தை போன்ற பகுதிகளில் கிரிக்கெட் எந்த வகையிலும் வளர்ச்சியடையவில்லை. எனவே, அனைத்து பாடசாலைகளுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

கிரிக்கெட் ஒரு வளர்ந்து வரும் விளையாட்டு. எல்லா ஆட்டத்திலும் எங்களால் வெற்றி பெற முடியாது. ஆனால் அவற்றில் சிலவற்றை நம்மால் வெல்ல முடியும்.

எனவே இதற்காக பணத்தை செலவிட தயாராக உள்ளோம். அத்துடன், தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு வளாகத்தை விளையாட்டுப் பல்கலைக்கழகமாக அபிவிருத்தி செய்வதற்கும் நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். அதற்காக நாம் கிரிக்கெட் நிர்வாக சபையை இணைத்துக் கொள்ளவுள்ளோம்.

நாட்டில் புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும், வளமான தேசமாக மாற்றவும் அவசியமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். பொருளாதாரத்தில் மட்டுமன்றி பாடசாலைகளில் கிரிக்கெட் போன்ற ஏனைய துறைகளிலும் சிறந்து விளங்கும் நாடாக நாம் திகழ்வதை உறுதி செய்வோம். பொருளாதாரம் என்பது பணம். விளையாட்டு வணிகமயமாக்கப்பட்டால் நாமும் அதற்குள் நுழைவோம்.

மேலும், விளையாட்டை வணிகமயமாக்கினால், அதை அரசியல் தலையீடு இல்லாமல் பேணிக் கொள்வோம் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க, அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, பிரசன்ன ரணதுங்க, மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒஃப் தி ஏர்ஃபோர்ஸ் ரொஷான் குணதிலக்க, தற்போதைய மற்றும் முன்னாள் சிரேஷ்ட கிரிக்கட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் கழக அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் மீதான தடையை நீக்கியது சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) !

இலங்கை அணி தொடர்ந்தும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) அறிவித்துள்ளது.

 

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாகக்குழு கூட்டம் இன்று (21) அஹமதாபாத்தில் நடைபெற்ற போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு கடந்த 10 ஆம் திகதி சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாக சபை எடுத்த தீர்மானத்தை உறுதிப்படுத்தியதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எனினும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கோரிக்கையை செவிமடுத்ததன் பின்னர் இருதரப்பு கிரிக்கெட் தொடர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டிகளில் இலங்கை அணியால் பங்கேற்க முடியும் என இன்று தீர்மானிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதற்கமைய, சர்வதேச கிரிக்கெட் பேரவையால் இலங்கைக்கு வழங்கப்படும் பிரதான கொடுப்பனவு கட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இன்று நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாகக்குழு கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவர் ஷம்மி சில்வாவும் கலந்துகொண்டிருந்தார்.

இலங்கை அணிக்கு மீண்டும் திரும்பும் வனிந்து ஹசரங்க !

2019 மற்றும் 2023 உலகக் கிண்ணப் போட்டிகள் இரண்டிலும் தோல்வியடைந்தமைக்காக மிகவும் வருந்துவதாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.

 

அத்துடன், எல்லா நேரங்களிலும் நாட்டுக்காக தான் விளையாடியதாக ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் கூறியுள்ளார்.

 

எல்பிஎல் போட்டிக்குப் பிறகு, தனது காயம் ஓரளவுக்கு குணமடைந்ததாகவும், ஆனால் பயிற்சி தொடங்கிய பிறகு மீண்டும் காயம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

சத்திரசிகிச்சையின் பின்னர் 12 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் எனவும் தற்போது சத்திரசிகிச்சை முடிந்து 05 வாரங்கள் கடந்துள்ளதாகவும் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.

 

எதிர்வரும் வாரத்தில் இருந்து மீண்டும் சிறிய அளவில் தனது பயிற்சியை ஆரம்பிக்கவுள்ளதாகவும் வனிந்து குறிப்பிட்டுள்ளார்.

 

12 வாரங்கள் நிறைவடைந்ததன் பின்னர் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள இலங்கை-ஜிம்பாப்வே போட்டியில் விளையாட முடியும் என, வனிந்து ஹசரங்க நம்பிக்கை வெளியிட்டார்.

தனுஷ்க குணதிலக பாலியல் வன்கொடுமையில் ஈடுபடவில்லை – அவுஸ்ரேலிய சிட்னி டவுனிங் சென்டர் நீதிமன்றம் விடுதலையளித்து தீர்ப்பு!

பாலியல் வன்கொடுமை வழக்கில் இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க குற்றவாளி அல்ல என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அனுமதியின்றி உடலுறவில் ஈடுபட்டதாக தெரிவித்து இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 

32 வயதான அவர், டி20 உலகக் கிண்ண தொடருக்காக அவுஸ்ரேலியா சென்றிருந்தபோது, இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் இந்த சம்பவம் தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.

 

இதனை தொடர்ந்து நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் பொலிஸாரிடம் அவர் வாக்குமூலம் வழங்கும் காணொளி கடந்த வாரம் நீதிமன்றில் காட்டப்பட்டது.

 

இதனை தொடர்ந்து அவரது நேர்காணலில் உண்மை வெளிப்படுவதாக தெரிவித்துள்ள நீதிபதி, சம்பந்தப்பட்ட பெண் எழுப்பிய அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்ததோடு தனுஷ்க குணதிலகாவை குற்றமற்றவர் என்று அறிவித்தார்.

இதேவேளை சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வந்த தனுஷ்க குணதிலக ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.

 

“நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. நீதிபதியின் தீர்ப்பில் எல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 11 மாதங்கள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. குறிப்பாக. இன்று எனது சட்டத்தரணி முருகன் தங்கராஜ் இங்கு இல்லாவிட்டாலும் அவருக்கும் மற்ற வழக்கறிஞர்களுக்கும் மிக்க நன்றி. எனது மேலாளர் எலீன் மற்றும் எனது பெற்றோர்கள் மற்றும் இலங்கையில் உள்ள சிலர் அனைவரும் என்னை நம்பினார்கள். அது எனக்கு நிறைய தைரியத்தை கொடுத்தது. அதனால் இறுதியில் நீதிபதி சரியான முடிவை எடுத்தார். நான் சொன்னது போல் அந்த முடிவு எல்லாவற்றையும் சொல்கிறது. “எனது வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மீண்டும் கிரிக்கெட் விளையாடும் வரை என்னால் காத்திருக்க முடியாது.”

இதேவேளை தனுஷ்க குணதிலகவிற்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை இன்று பரிசீலிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக மீண்டும் தசுன்!

2023 சர்வதேச உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக மீண்டும் தசுன் ஷானக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (புதன்கிழமை) இலங்கை கிரிக்கெட் சபையில் நடைபெற்ற தெரிவு குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

2021 இல், இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் பெரிய, கடுமையான தோல்விகளுக்குப் பிறகு, இலங்கை அணியின் தலைமை தசுன் சானகவிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

தசுன் சானகவின் தலைமையின் கீழ், இலங்கை அணி அண்மைய மாதங்களில் ஒருநாள் போட்டிகளில் முன்னேற்றத்தை காட்டியிருந்தன.

 

இருப்பினும் இந்தியாவுக்கு எதிரான ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் பாரிய தோல்வியை சந்தித்தமையால் நிலையில் தசுன் சானகவின் தலைமைத்துவம் குறித்து கேள்வியெழுப்பட்டுவந்தது.

 

இந்நிலையில் எதிர்வரும் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் தலைவராக தசுன் சானக இருக்க வேண்டும். தசுன் சானக மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இலங்கை அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்று அணியில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியவர் என்று  இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கா கருத்து தெரிவித்திருந்தமையும் கவனிக்கத்தக்கது.

“பாதிக்கப்பட்ட பெண்ணுடன் ஆன்மீக உரையாடலில் ஈடுபட்டேன்.” – பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் குணதிலக !

தனுஸ்க குணதிலக மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள பெண் அவருடன் உறவில் இருந்தவேளை அவரின் போன ஜென்மங்கள் குறித்து தனக்கு தெரியும் என தெரிவித்ததால் தான் அச்சமடைந்ததாக தனுஸ்ககுணதிலக தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் வெளியிடப்பட்ட பதிவு செய்யப்பட்ட வீடியோவில் தனுஸ்க தெரிவித்துள்ள விடயங்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பிட்ட பெண்ணை அவரது வீட்டில் முத்தமிட்டது அவருடன் பாலியல் உறவு கொண்டது போன்ற விடயங்களை தனுஸ்க ஏற்றுக்கொண்டுள்ளார்.

அதன் பின்னர் அந்த பெண்ணுடன் இடம்பெற்ற ஆன்மீக உரையாடல் குறித்து தனுஸ்க தெரிவித்துள்ளார், இந்த உரையாடலின் போது எனது முன்னைய ஜென்மங்கள் குறித்து தனக்கு தெரியும் என அந்த பெண் தெரிவித்தார் என தனுஸ்க குறிப்பிட்டுள்ளார்.

அந்த உரையாடல் சுவராஸ்யமாக இருந்தது என நான் நினைத்தேன் அந்த பெண்ணிற்கு இலங்கை கலாச்சாரம் பௌத்தம் குறித்து நன்கு தெரிந்திருக்கின்றது என நினைத்தேன் என தெரிவிக்கும் தனுஸ்க குணதிலக பின்னர் அழுவதையும் தனது முகத்தை துடைப்பதையும் காணமுடிகின்றது.

நான் சிரித்துக்கொண்டே நான் முன்னைய ஜென்மத்தில் நான் யார் என தெரிவிக்க முடியுமா என கேட்டேன் நானும் அவரின் அயலவர்களும் தாய்லாந்தில் பிறந்தோம் என அந்த பெண் தெரிவித்தார் என தனுஸ்க குறிப்பிட்டுள்ளார்.

தன்னால் எனது போன ஜென்மத்தைபார்க்க முடிவதாக அவர் குறிப்பிட்டார் நான் அச்சமடைந்தேன் எனவும் தனுஸ்க தெரிவித்துள்ளார்.

ஏன் என தெரியவில்லை எனக்கு அந்த உணர்வு ஏற்பட்டது அந்த பெண் சற்றுவித்தியசாமானவராக காணப்படுகின்றார் என நினைத்தேன் அந்த பெண் எனக்கு டக்சியை ஏற்பாடு செய்து தந்தார் நான் ஆடையணிந்துகொண்டு முத்தமிட்டு அங்கிருந்து புறப்பட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் குற்றஞ்சாட்டிய  பெண் முன்னைய ஜென்மங்கள் குறித்த பேச்சுக்களை தான் முதலில் ஆரம்பிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

 

அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு எதிரான முறைப்பாடுகள் – விசாரணைக்காக விசேட குழு நியமனம் !

ஐசிசி ரி20 உலகக் கிண்ணத்திற்கான அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு எதிரான முறைப்பாடுகள் குறித்து விசாரணை செய்ய 6 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 39(3) வது பிரிவின்படி குறித்த குழுவை நியமித்துள்ளார்.

இந்தக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சின் செயலாளர் கிங்ஸ்லி பெர்னாண்டோ, ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் சுதத் நாகஹமுல்ல, ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ், முன்னாள் கிரிக்கட் வீரர் நளின் டி அல்விஸ் மற்றும் சட்டத்தரணி ஷலனி ரோஷனா ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக செயற்படவுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை குற்றத்தில் கைதான தனுஷ்க குணதிலகவும் நாமல் ராஜபக்சவும் – நாமல் விசனம் !

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீதான சம்பவத்தில் தன்னையும் இணைத்துக்கொண்டு கிரிக்கெட் விளையாட்டை அரசியலாக்குவதன் மூலம் நாட்டின் நற்பெயருக்கும் கீர்திக்கும் மேலும் சேதம் ஏற்படும் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு விளையாட்டு நிர்வாகத்தில் தலையிடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தன்னுடைய டுவிட்டர் பக்கத்திலேயே இது தொடர்பான பதிவை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச  வெளியிட்டுள்ளார்.