இரா.சாணக்கியன்

இரா.சாணக்கியன்

சிங்கள அரசாங்கத்தினுடைய நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்குரிய பரிசுகளாகவே கிழக்கில் அமைச்சு பதவி – இரா.சாணக்கியன்

அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்களின் இடங்களில் பெரும்பான்மை சமூகத்தின் ஆதிக்கத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவரது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் களுவாஞ்சிகுடிப் பகுயில் அமைந்துள்ள இந்து ஆலயங்களுக்கு வழங்கப்பட்ட நிதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை அவர் நேற்று(26.06.2024) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜனாதிபதி ரணில் மட்டக்களப்புக்கு வரும்போது அவருக்கு உணவு வழங்கினால் அமைச்சுப் பதவி பெறக் கூடிய அளவிற்கு நிலமை வந்துள்ளது.

இந்த அமைச்சுப் பதவியை வைத்துக் கொண்டு தொடர்ந்தும் தெற்கின், அரசாங்கத்தினுடைய நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்குரிய பரிசுகளாகவே இவர்களுக்கு விசேடமான நிதி, இலஞ்சம் கிடைப்பதாகவும் நாம் அறிகின்றோம்.

இதனை மக்கள் நன்கு அறிந்து, இந்த மாவட்டம் தொடர்ந்து தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற மாவட்டமாக இருக்க வேண்டும் என நாம் நினைத்தால் மக்கள் எதிர்காலத்தில் சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏன் தமிழர்களுக்கான தீர்வொன்றை முன்வைக்கக்கூடாது..? – நாடாளுமன்றத்தில் இரா.சாணக்கியன் !

தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏன் தமிழர்களுக்கான தீர்வொன்றை முன்வைக்கக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வுகள் இன்னும் முன்வைக்கப்பட இல்லை.

தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட தரப்பினராகவே நாம் இருந்து வருகின்றோம். இந்நிலையில் இலங்கையின் அபிவிருத்தி குறித்து ஜனாதிபதி பல விடயங்களைக் கூறிவருகின்றார்.

இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழர்களுக்கான தீர்வினை வழங்காமல் எந்த அபிவிருத்திகளை மேற்கொண்டும் பயனில்லை என்பதை தென்னிலங்கை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

அத்துடன் சர்வதேச நாணயநிதியம் பற்றியும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என்று கூறுவது வெறும் கனவு என்பதையும் பெரும்பான்மை அரசியல் தலைவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான கதைகளைக் கூறியும் தமிழ்த் தலைவர்களுக்கு பல சலுகைகளை வழங்கியும் தமிழ் மக்களை ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க வைக்கலாம் என நினைக்கின்றனர்.

வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபான உரிமம் உள்ளிட்ட பல சலுகைகள் கிடைத்துள்ளன.

எனினும், பாரிய குற்றங்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் தற்போதைய ஜனாதிபதிக்கு எந்த எண்ணமும் இல்லை” என நாடாளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியன் மேலும் தெரிவித்தார்.

புலிப்பயங்கரவாத அமைப்புடன் இருந்ததற்காக எல்லா பழிகளையும் என் மீது போடாதீர்கள் – நாடாளுமன்றத்தில் பிள்ளையான்!

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு என நாடாளுமன்றத்தில் விழித்த இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் தன்மீது சுமத்த முடியாது என தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நேற்று சபையில் சாணக்கியன் பிள்ளையான் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கண்டறிய வேண்டுமானால் பிள்ளையானை கைது செய்து விசாரணை செய்யவேண்டும் என நேற்று நாடாளுமன்றத்தில் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்திருந்தார்.

 

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2019ஆம் ஆண்டில் இடம்பெற்றிருந்தாலும் அதனுடன் தொடர்புடைய குழுக்கள் கடந்த 2005ஆம் ஆண்டு தொடக்கம் நாட்டில் செயற்பட்டு வந்துள்ளதாகவும் இரா.சாணக்கியன் நேற்று சபையில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கில் பிள்ளையானுடன் கைது செய்யப்பட்ட கஜன் மாமா என்பவர் சில மாதங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்துள்ளதாகவும் ஆனால் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு இடமளிக்காது உடலை எரித்துள்ளதாகவும் இரா.சாணக்கியன் சபையில் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் இன்று சபையில் சாணக்கியனின் கருத்தினை மறுத்துக் கருத்து வெளியிட்டிருந்ததுடன், தானும் ஏற்கனவே ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பில் இருந்ததாகவும் அது ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும் குறிப்பிட்டார்.

 

அத்துடன் ஜே.வி.பி உள்ளிட்ட அமைப்புக்களும் பல பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாகவும் தான் யார் என்பதை தனது மக்கள் நன்கு அறிவார்கள் எனவும், இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மேலும் குறிப்பட்டார்.

பிள்ளையானை கைதுசெய்து விசாரணை நடத்துங்கள் ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை கைது செய்யலாம் – இரா.சாணக்கியன்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையானை கைதுசெய்து விசாரணை நடத்தினால் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் உள்ளிட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் 2005இல் இடம்பெற்ற பல்வேறு கொலைகள் தொடர்பான உண்மைகளை அறிந்துகொள்ள முடியும்.

 

அதேநேரம் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை இடம்பெறுமாக இருந்தால் அதில் சாட்சி சொல்வதற்குப் பலரும் இருக்கின்றனர் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சாணக்கியன் ராவமாணிக்கம் தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் அங்குத் தொடர்ந்து தெரிவிக்கையில்,

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2019ஆம் ஆண்டில் நடந்திருந்தாலும் அதனுடன் தொடர்புடைய குழுக்கள் 2005ஆம் ஆண்டு முதல் இந்த நாட்டில் செயற்பட்டு வந்துள்ளன.

 

இது தொடர்பில் அடிக்கடி கூறியிருந்தாலும் இதன் பாரதூர தன்மை தொடர்பில் புரிந்துகொள்ளாது இருக்கின்றனர். எவ்வாறாயினும் தற்போது 2014ஆம் ஆண்டில் நடந்த சம்பவமொன்று தொடர்பில் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

இலங்கையில் புலனாய்வுத்துறையுடன் சம்பந்தப்பட்ட மூன்று இனங்களையும் சேர்ந்த புலனாய்வுக் குழு அதிகாரிகளின் குழுவொன்றே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளன.

 

2004ஆம் ஆண்டில் ஈமானிய நெஞ்சங்கள் என்ற அமைப்பொன்று அமைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் பாயிஸ், ஆமி மொஹிதீன், கலீல் ஆகிய மூவரையும் உள்ளடக்கியதாக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. கலீல் என்ற நபர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கில் சிறைக்குச் சென்று விடுதலையானவர்.

2009 ஆம் ஆண்டில் திருகோணமலையில் 6 வயது வர்ஷா என்ற சிறுமி பெற்றோரிடம் கப்பம் கோரி கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

 

இது தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் திருகோணமலைக்குப் பொறுப்பான மேர்வின் என்பவர் கைது செய்யப்பட்டார் ஜனார்த்தனர், நிசாந்தன், ரெஜினோல்ட் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பின்னர் பொலிஸாரின் பொறுப்பிலிருந்த போதே உயிரிழந்துள்ளனர்.

 

இதேவேளை 8 வயது சிறுடு ஒருவரும் கப்பம் கோரி 2009இல் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அந்த சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் அவர்கள் நால்வரும் அரச படையினரால் கொலை செய்யப்பட்டனர்.

 

புலனாய்வு பிரிவின் குழுவினர் தமது நோக்கத்திற்காகக் கப்பம் பெறும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதுடன், அதன்பின்னர் கைது செய்யப்படுபவர்களைக் கொல்லும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு பலர் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

 

இந்த சம்பவங்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் இடையே என்ன தொடர்பு என்று நினைக்கலாம். ஆனால் 2008 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் திட்டமிட்டு கிழக்கில் ஸ்தீரமற்ற நிலைக்குக் கொண்டு செல்ல பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அவ்வாறாகப் பரிசோதிக்கப்பட்ட விடயங்களே பின்னர் நாடு முழுவதும் நடத்தப்பட்டுள்ளது.

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பல்வேறு தகவல்கள் வெளியாகின்றன. பிள்ளையான் உள்ளே இருந்தால் அவர் பலவற்றை கூறலாம் என்பதனால் அவரை விடுதலை செய்ய நடவடிக்கையெடுத்துள்ளனர்.

 

ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் பிள்ளையானுடன் கைது செய்யப்பட்ட கஜன் மாமா என்பவர் சில மாதங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்துள்ளார். மரண பரிசோதனைக்கு இடமளிக்காது அவரின் உடலை எரித்துள்ளனர்.

 

அதனால் 2005ஆம் ஆண்டு முதல் ஈஸ்மர் தாக்குதல் வரை இடம்பெற்ற கொலை சம்பவங்களுக்குத் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்குத் தொடர்பு இருக்கிறது. அதனால் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அந்த கட்சியின் தலைவை கைதுசெய்து விசாரணை நடத்தினால் இது தொடர்பான அனைத்து உண்மைகளையும் தெரிந்துகொள்ளலாம். எனவே மட்டக்களப்பு மாவட்ட வாக்குகளைப் பார்க்காமல் ஜனாதிபதி அவரை கைதுசெய்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

ஈஸ்டர் குண்டுவெடிப்பிற்குப் பின்புலத்தில் ராஜபக்ஷ குடும்பத்தினர் – ரணில் விக்கிரமசிங்க மீது சாணக்கியன் சாடல் !

இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டபோது சர்வதேச விசாரணைக்கு தயார் எனக் கூறியவர் இன்று 300 கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு சர்வதேச விசாரணையை செய்வதற்கு தயங்குகின்றார் என்றால் ஈஸ்டர் குண்டுவெடிப்பிற்குப் பின்புலத்தில் ராஜபக்ஷ குடும்பத்தினர் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை இன்னும் உறுதிப்படுத்துகின்றது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இனிவரும் காலங்களிலும் தங்களுடைய அதிகாரத்தை தக்கவைப்பதற்கு, தங்களுடைய எஜமானர்களின் கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உங்களுடைய பிள்ளைகளையும் இவர்கள் பலிக்கடாவாக்கலாம். ஆகவே எங்களுடைய மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று இன்றுடன் ஐந்து வருடங்கள் பூர்த்தியாகின்றன. ஈஸ்டர் தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு புனித செபஸ்தியன் பேராலயத்தில் இன்றைய தினம் ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கான விசேட திருப்பலி பூஜையும் நினைவேந்தல் நிகழ்வும் நடைபெற்றது.

ஆலயத்தின் பங்குத்தந்தை அனஸ்டின் தலைமையில் நடைபெற்ற இந்த திருப்பலியில் அருட்தந்தை நவரெட்னம் நவாஜி அடிகளார், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஈஸ்டர் தாக்குதலில் உயிர் நீர்த்தவர்களின் ஆதம்சாந்திக்கான விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் குறித்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீண்டுவர விசேட பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஆலய முன்றிலில் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் போது உயிர்நீர்த்தவர்களின் உருவப்படம் தாங்கிய பதாகை வைக்கப்பட்டு அதற்கு முன்பாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செய்யப்பட்டதுடன் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் பொதுமக்கள், அருட்சகோதரிகள், ஆலய பங்குமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,

கொடூரமான ஈஸ்டர் குண்டுவெடிப்புக் கொலை நடந்து ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகியிருக்கின்றது. இந்தக் குண்டுத் தாக்குதல் இயல்பாக நடந்ததா, இதற்குப் பின்னால் ஒரு பின்புலம் இருந்ததா, அரசியல் இலாபம் அடைவதற்காக செய்யப்பட்டதா எனப் பல சந்தேகங்கள் அந்த நேரத்தில் எழுந்தது. ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் அந்த சந்தேகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து சந்தேகத்திற்கிடமில்லாமல் இதுவொரு அரசியல் பின்புலத்துடன் சம்பந்தப்பட்டது என்பது போல் தென்படுகின்றது. இந்தக் கொலைக்குப் பின்னாலிருந்த எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.

ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் இது விசாரணைக்குரிய காலமல்ல தீர்ப்பு வழங்கவேண்டிய காலமாகும். வத்திக்கான் போப்பாண்டவர் உட்பட மதத்தலைவர்கள் பலராலும் எத்தனையோ அழுத்தங்கள் கொடுத்தும் இலங்கை அரசாங்கம் மக்கள் நம்பக்கூடிய வகையில் இதுவரை மக்களுக்கு எந்தவொரு நீதியும் வழங்கவில்லை என்பதே சந்தேகத்திற்குரிய விடயமாகும்.

ஈஸ்டர் குண்டு வெடிப்பிற்குப் பின்புலத்தில் இருந்தவர்கள் யாரென்பது கடந்த வருடம் சனல்-4 ல் வெளிவந்த ஆவணப்படம் மூலமாக பல சந்தேகங்கள் இன்றும் எழுப்பப்பட்டிருக்கின்றது.

இன்று நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ராஜபக்ச குடும்பத்தின் ஆதரவுடன் தான் அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார். கடந்த வருடம் ஒரு சர்வதேச ஊடகவியலாளர் ஏன் இதற்கு ஒரு விசாரணை ஆரம்பிக்கப்படவில்லை, சர்வதேச விசாரணை ஒன்றின் மூலம் உண்மை கண்டறியப்படலாம் என்று கூறியபோது உள்நாட்டு விசாரணை போதும் எனக் கூறியிருந்தார்.

இதே ஜனாதிபதி பிரதமராக இருந்தபோது 2017ல் ஐ.நா மனிதவுரிமைப் பேரவையிலே 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டுமென்றால் சர்வதேச விசாரணைக்கு நான் தயாரெனக் கூறியிருந்தார்.

இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டபோது சர்வதேச விசாரணைக்கு தயார் எனக் கூறியவர் இன்று முந்நூற்றுக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு சர்வதேச விசாரணையை செய்வதற்கு தயங்குகின்றார் என்றால் ஈஸ்டர் குண்டுவெடிப்பிற்குப் பின்புலத்தில் ராஜபக்ச குடும்பத்தினர் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை இன்னும் உறுதிப்படுத்துகின்றது.

ஈஸ்டர் குண்டுவெடிப்பானது கொழும்பு, நீர்கொழும்புடன் சேர்ந்து ஏன் மட்டக்களப்பில் மட்டும் நடத்தப்பட்டது. வடக்கு கிழக்கிலே எட்டு மாவட்டங்கள் இருக்கின்றபோது ஏன் மட்டக்களப்பில் மட்டும் நடத்தப்பட்டது என்பது பற்றி எமது மக்கள் மிக அவதானமாக சிந்திக்க வேண்டும். தமிழ் மக்கள் அதிகமான வாழ்கின்ற, தமிழ் வாக்காளர்கள் அதிகம் இருக்கின்ற மட்டக்களப்பிலே ஏன் இந்தக் குண்டுவெடிப்பு நடந்தது என்றால் ஈஸ்டர் குண்டுவெடிப்புக் காணொளியிலே மட்டக்களப்பு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டிருக்கின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுடைய ஊடகப்பேச்சாளர் அசாத் மௌலானா அவர்களின் வாக்கு மூலத்திலே சொல்லப்படுகின்ற விடயங்களைப் பார்த்தால் எம்முடைய மக்களுக்கு உண்மை புரியும்.

அதாவது ராஜபக்ச குடும்பத்தினர் இந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பு நடந்ததினூடாக நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளது, நாட்டில் பலமானதொரு தலைவர் இருந்தால்தான் இங்குள்ள சிங்கள மக்களுக்குப் பாதுகாப்பு என்பதுபோல ஒரு மாயை உருவாக்கினார்கள்.

ஆயுத முனையிலே எமது மக்களை கடந்த காலத்தில் அழித்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் பிள்ளையான் அவர்களை ஏதோ தமிழ் மக்களின் ஒரு காவலர் போன்றதொரு விம்பத்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது ஈஸ்டர் குண்டுவெடிப்பு நடந்த காலப்பகுதியிலே உருவாக்கியது.

ஈஸ்டர் குண்டுவெடிப்பு நடந்த காலப்பகுதியிலே மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருந்தால் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பல வன்முறைகள் தூண்டப்பட்டிக்கும். அன்று தமிழரசுக் கட்சியினரான நாங்கள் மட்டக்களப்பிற்கு தலைமைத்துவம் வழங்கிய காரணத்தினால்தான் துரதிஷ்டவசமான சம்பவங்கள், கலவரங்கள் எதுவும் நடைபெறாமல் பொறுப்புள்ள தலைவர்களாக மக்களை வழிநடத்தியிருந்தோம்.

இவர்களைப்போல கொடூரமான குற்றச்சாட்டுகள் இருக்கின்ற நபர்கள் அதாவது கிறிஸ்மஸ் ஆராதனையின்போது தேவாலயத்தினுள்ளே ஒரு பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவை சுட்டுக்கொலை செய்த குற்றச்சாட்டிலே சிறையிலிருந்த ஒருவர் அந்த நேரத்தில் இருந்திருந்தால் எவ்வாறான வன்முறைகள் நடந்திருக்கும் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஒரு புத்தகத்தை எழுதுவதனூடாக தங்களுடைய இரத்தக் கறைகளை கழுவியூற்ற முடியாது. ஆலயங்களிலே இந்த நிகழ்வுகளை நாங்கள் ஒழுங்கமைத்து மக்களை நாங்கள் திரட்டியெடுத்து ஆராதனையையும் நீதிக்கான அஞ்சலி நிகழ்வையும் நடத்துகின்றோமென்றால் இலங்கை சட்டத்திலே இவர்களுக்கு தண்டனை இல்லாதுபோனாலும் இறைவனுடைய நீதியின் கிழ் இவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள். இவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. மட்டக்களப்பிலே கொல்லப்பட்டது பிஞ்சுக் குழந்தைகள். அவர்களுடைய இறுதிக் கிரியைகளைச் செய்வதற்கு தாயோ தந்தையோ அங்கு இல்லாத நிலை காணப்பட்டது. அவர்கள் வைத்தியசாலையில் இருந்தனர், சிலர் உயிரிழந்திருந்தனர்.

அன்றைய தாக்குதலில் ஒரு குழந்தை தனது தாயையும் தந்தையையும் இழந்ததுடன் தனது இரு கண்களையும் இழந்து இன்றும் உயிருடன் இருக்கின்றது.

நீங்கள் உங்களுக்கு எதிரான வழக்குகளிலிருந்து தப்புவதற்காக, சிறையிலிருந்து தப்புவதற்காக, ஆட்சிக்கு வரவேண்டும் என்பற்காக செய்த பாவச் செயலுக்கு மக்கள் மன்னிப்பு வழங்கினாலும் இறைவன் உங்களுக்கு மன்னிப்பு வழங்கப்போவதில்லை. நீங்கள் செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்தே தீரவேண்டும். உங்களுக்கான தண்டனைணை எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் வழங்குவார்கள்.

முந்நூறு பேரின் இரத்தக்கறைகளின் மீதுதான் நீங்கள் கொங்கிறீட் பாதைகளில் பயணிக்கின்றீர்கள். பாதைகளுக்கு கொங்குறீட் இடுவதும் மக்களின் வரிப்பணத்தில்தான். வீதி அபிவிருத்தி செய்வதனூடாக மகாத்மா காந்தி ஆகிவிட முடியாது. வீதி அபிவிருத்தி செய்வதனூடாக நீங்கள் செய்த கொலைகளுக்கு பரிகாரம் செய்துவிட முடியாது.

குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் அணுவணுவாக செத்துக் கொண்டிருக்கின்றார்கள். என்னுடைய கணவரும் இரண்டு குழந்தைகளும் மரணித்தது ஒரு தடவைதான். ஆனால் நான் அவர்களைப் பற்றி சிந்தித்து தினமும் செத்துக் கொண்டிருக்கின்னே; என அண்மையில் ஒரு தாய் தெரிவித்திருக்கின்றார்.

அன்று சியோன் தேவாலயத்தில் வெடித்த குண்டானது எந்தத் தேவாலயத்திலும் வெடித்திருக்கலாம். அவர்கள் சீயோன் தேவாலயத்தை தெரிவு செய்ததற்கான காரணம் என்னவென்பது தெரியாது. எங்கு வேண்டுமானாலும் அது நடந்திருக்கலாம். மரணித்தவர்கள் உங்களுடைய உறவினர்களாகக் கூட இருந்திருக்கலாம். இவர்களுடைய இரத்த வெறியிலே அகப்பட்டது உங்களுடைய பிள்ளைகளாக இருந்திருக்கலாம். இனிவரும் காலங்களிலும் தங்களுடைய அதிகாரத்தை தக்கவைப்பதற்கு, தங்களுடைய எஜமானர்களின் கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உங்களுடைய பிள்ளைகளையும் இவர்கள் பலிக்கடாவாக்கலாம். ஆகவே எங்களுடைய மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். இந்தக் கொலைக் கும்பலை இந்த மாவட்டத்திலிருந்து நாங்கள் அகற்ற வேண்டும், இந்தக் கொலைக் கும்பலை இந்த நாட்டைவிட்டே அகற்ற வேண்டும். நாட்டைவிட்டு அகற்றவேண்டுமானால் அவர்களை அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டும்.

ஈஸ்டர் குண்டுவெடிப்பு நடைபெற்று ஐந்தாவது வருடம் முடிவடைந்த இந்நாளில் இந்த மக்களுக்கான நீதியை கோருவதற்காக எங்களுடன் கைகோர்த்து வாருங்கள், நாங்கள் தனியாக இதனை செய்ய முடியாது, ஒரு கட்சியாக இந்தப்பொறுப்பை தனியாக முன்னெடுக்க முடியாது, மக்கள் எங்களுடன் ஒன்றாக நின்றால் இந்தக் கொலைகாரர்களுக்கு தண்டனை வழங்கலாம். மிகவிரைவில் ஒரு தேர்தல் நடைபெறவிருக்கின்றது. தமிழ் மக்களின் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றது.எதிர்காலத்தில் நாங்கள் தலைவராக தெரிவுசெய்பவர் ஊடாக இந்த கொலைகார கும்பல்களுக்கு தண்டனைப்பெற்றுக்கொடுக்க எங்களுடன் இணைந்துவரவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கின்றேன் என்றார்.

‘நீதிக்காக ஏங்கிக் கொண்டு இருக்கின்ற சமூகமாக இருந்து கொண்டிருக்கின்றோம்..” – இரா.சாணக்கியன்

2024 ஆம் ஆண்டு தமிழர்களாகிய நாங்கள் எடுக்கும் அனைத்து தீர்மானங்களும் தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடியதான தீர்மானமாக இருக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று (14) பல்வேறு நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு, இருதயபுரம் மற்றும் கறுவப்பன்கேனி பகுதியில் உளள இளைஞர் விளையாட்டுக் கழகம் ஒன்றினால் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பல்வேறுபட்ட விளையாட்டு நிகழ்வுகள் நேற்று மாலை இடம் பெற்றது.

இந்நிகழ்வில் தலையணை அடித்தல், மெதுவாக மோட்டார் சைக்கிள் ஓடுதல், கயிறு இழுத்தல், தேங்காய் துருவுதல், தொப்பி மாற்றுதல் போன்ற பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் ஆண்கள் பெண்கள் சிறுவர்களுக்கென இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்து கொண்டதுடன் விளையாட்டு கழக தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,
2024 ஆம் ஆண்டு சித்திரை மாதம் புதிய வருடம் பிறந்திருக்கின்றது இந்த புதிய வருடத்திலேயே எமது தமிழ் மக்களுக்கு தமிழ் பேசும் மக்களுக்கு நல்லதொரு எதிர்காலத்தை நாங்கள் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய அவா.

எங்களுடைய தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை நமது அரசியல் அபிலாசைகளை இந்த வருடத்தில் பூர்த்தியாக வேண்டும் என்பது நமது அனைவருடைய அவாவாக இருக்கின்றது அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டு தேர்தல்கள் நிறைந்த வருடங்களாக இருக்க கூடும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.

இந்த காலப்பகுதியில் நமது மக்கள் ஒரே ஒரு விடயத்தை மாத்திரம் மனதில் வைத்துக் கொண்டு எமது எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்த தேர்தலில் முடிவுகளை எடுக்க வேண்டும் 2024 ஆம் ஆண்டு இன்று நாம் சித்திரை புத்தாண்டை கொண்டாடுகிறோம் ஆனால் இன்னுமொரு மாதம் சென்றால் மே 18ஆம் தேதி 15 வருடங்களுக்கு முதல் எமது மக்கள் முள்ளிவாய்க்காலில் அந்த இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டு 15 வருடங்கள் பூர்த்தியாக போகின்றது.

இந்த 15 வருடங்களாக நமது மக்களுக்கு நீதி இல்லாமல் நீதியை கோரிக் கண்டு நீதிக்காக ஏங்கிக் கொண்டு இருக்கின்ற சமூகமாக இருந்து கொண்டிருக்கின்றோம்.

அந்த வகையில் இந்த வருடத்தில் நாங்கள் எடுக்கின்ற தீர்மானங்கள் அரசியல் ரீதியாக எம்முடைய இனம் சார்ந்த நமது இனத்தை தலை நிமிர்ந்து வாழ வைக்க கடிய வகையில் நமது இனத்திற்கான நீதியை கேட்டு கிடைக்கக்கூடிய வகையான தீர்மானங்களை எமது மக்கள் எடுக்க வேண்டும்.

நேற்றைய தினம் பார்த்தேன் ஒரு அமைச்சர் கூறி இருந்தார் நிமல் சிறிபாலடி சில்வா என்கின்ற அமைச்சர் இருக்கின்றார் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இந்த நாட்டினுடைய ஜனாதிபதியாக இருந்திருந்தாலும் கூட அந்த அமைச்சர் அவருடைய அரசாங்கத்தின் அமைச்சராக இருந்திருப்பார் என்று கூறி இருக்கின்றார்.

தமிழ் மக்களாகிய நாங்கள் இந்த இடத்தில் இன்று நீதியினை கோறுகின்றோமே தவிர இந்த ஊழல் மோசடிகள் செய்யும் அமைச்சுப் பதவிகளையோ அல்லது ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அமைச்சர்களை எமது பக்கம் எடுப்பதோ ஒருபோதும் செய்யப் போவதில்லை.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு தமிழர்களாகிய நாங்கள் எடுக்கும் அனைத்து தீர்மானங்களும் தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடியதான தீர்மானமாக இருக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைக்கின்றேன் என தெரிவித்தார்

”நாட்டின் ஜனாதிபதியைத் தீர்மானிப்பவர்கள் தமிழர்களாக இருக்கவேண்டும்” – இரா.சாணக்கியன்

”நாட்டின் ஜனாதிபதியைத் தீர்மானிப்பவர்கள் தமிழர்களாக இருக்கவேண்டும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

 

மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” வடமாகாணத்தில் கிளிநொச்சி என்னும் இடத்திற்குள்ளேயே செல்லமுடியாத அமைச்சர் ஒருவரின் ஆதரவினை கொண்டு ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெறுவார் என நினைத்தால் அது ஒரு சவாலான விடயம் தான்.

 

ஐக்கிய மக்கள் சக்தி சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளது. தேசிய மக்கள் சக்தி அனுரகுமார திசாநாயக்காவினை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எந்த கட்சியில் போட்டியிடப் போகின்றார்? கூட்டமைப்பினை எவ்வாறு அமைக்கப்போகின்றார்? என்பதே தற்போது எழுந்துள்ள பிரச்சினை.

 

இன்று மொட்டுக்கட்சியும் பிரிந்த நிலையில் உள்ளது.மொட்டுக்கட்சி உருவாக்கப்பட்டது ராஜபக்ஸக்களின் எதிர்காலத்திற்காகும். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அனைத்து பொறுப்புகளும் மகிந்த ராஜபக்ஸவிடம் இருந்தநேரத்தில் அதனை மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கிவிட்டு மொட்டுக்கட்சியை ஆரம்பித்தனர். இன்று அந்த கட்சி குழப்பநிலையில் உள்ளது.

 

இன்று நாமல் ராஜபக்ஸ தனது தந்தையினைப் போன்று கும்பிடு போட்டுக்கொண்டு விகாரைகள் எல்லாம் சுற்றித்திரிகின்றார். இவர்கள் விகாரைகளை சுற்றித் திரிவதே நாட்டுக்கு ஒரு ஆபத்தான நிலைமையாகப் பார்க்கப்படுகின்றது.

 

அதேநேரம் மொட்டுக்கட்சின் பிரதான உறுப்பினரும் பசில் ராஜபக்ஸவின் வலதுகையுமான பிரசன்ன ரணதுங்க நாமல் ராஜபக்ஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தால் மொட்டு பிளவுபடும் என்று சொல்கின்றார்.

 

இன்று அவர்களுக்குள்ளே குழப்பம் இருக்கின்றது. எதிர்வரும் காலத்தில் தேர்தல் ஒன்று நடந்தால் அந்த சந்தர்ப்பத்தினை மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஐந்து வருடத்திற்கு ஓரு முறை வரும் சந்தர்ப்பத்தினை மக்கள் சரியாக பயன்படுத்தாமல் விட்டால் அடுத்த ஐந்து வருடத்திற்கு எமது எதிர்காலம் மிக மோசமான எதிர்காலமாகவே இருக்கும்” இவ்வாறு இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை தமிழரசு கட்சி போராடும் – இரா.சாணக்கியன்

தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை தமிழரசு கட்சி போராடும் எனவும் மக்களின் வரிப்பணத்தில் இடம்பெறும் அபிவிருத்தித் திட்டங்கள் மக்களுக்கு திருப்தி அளிக்காதவிடத்து வடக்கில் அமைச்சருக்கு வெள்ளிக்கிழமை நடந்த அதே நிலை கிழக்கிலும் உள்ள அமைச்சர்களுக்கும் நடக்கும். மக்களால் அவர்களும் வெகுவிரைவில் துரத்தியடிக்கப்படுவார்கள். ஜனாதிபதி தேர்தலை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக தமிழ் மக்கள் காணப்படுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

 

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட திக்கோடை கிராமத்தில் நேசக்கரங்கள் சமூக நல அமைப்பின் சாதனையாளர் பாராட்டு விழா நேற்று சனிக்கிழமை (06) அறிவொளி கல்வி நிலையத்தில் அமைப்பின் தலைவர் ந.கதிரவன் தலைமையில் நடைபெற்றது.

 

இதன்போது கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

 

இந்த நாட்டிலே வாழ முடியாத அளவிற்கு விலைவாசிகள் அதிகரித்துள்ளன. செலவுகள் அதிகரித்துள்ளன. இதனால் தற்காலத்தில் கிராமங்களிலுள்ள இளைஞர்கள் மத்திய கிழக்கு நாடுகளிலே தொழிலுக்காகச் சென்றுள்ளனர். எதிர்காலத்தில் தேர்தல்கள் வரும்போது அதில் மக்கள் தீர்க்கமான முடிவெடுக்கும்போது, மாற்றங்களை நாம் கொண்டுவரலாம். ஜனாதிபதித் தேர்தலிலே சாணக்கியன் எம்.பியை போட்டியிட வைக்கலாமே என சிங்கள சகோதரர் வினவியதாக அதிபர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.

 

இந்த நாட்டிலே ஜனாதிபதித் தேர்தல் வருவதற்கான சந்தர்ப்பம் உள்ளது. ஜனாதிபதித் தேர்தலிலே பேரம் பேசுவதற்காக பலர் அணி அணியாக சேர்ந்துகொண்டு செல்கின்றார்கள். கிழக்கிலுள்ள முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்தால தாம் பேரம் பேசும் சக்தியாக திகழலாம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அது அவர்களின் நிலைப்பாடு.

 

ஆனால் தமிழ் சமூகமாகிய நாங்களும், எங்களை பலப்படுத்த வேண்டிய காலப்பகுதி இதுவாகும். இலங்கைத் தமிழரசுக் கட்சி 1949ஆம் ஆண்டிலிருந்து இந்த நாட்டிலே தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வினை நோக்கி செயற்பட்டுக்கொண்டு வருகின்றது. அதற்காக நாங்கள் மக்களுக்குக் காட்டும் வழியிலே மக்கள் நின்று செயற்பட்டால் எமது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு அது ஒரு சந்தர்ப்பமாக அமையும். எனவே, நாங்கள் அனைவரும் ஒரே அணியாக நின்று செயற்பட்டால் நாங்கள்தான் இந்த நட்டில் அடுத்த ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக இருப்போம் என்றார்.

 

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் சாதனையாளர்களுக்கான நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டன.

சுதந்திர தினத்துக்கும் அமைச்சர்களின் சுக போகத்துக்கும் செலவழிக்கும் பணத்தை அரசு விவசாயத்திறகு செலவு செய்தால் நாட்டின் பொருளாதாரம் சரி உயரும் – இரா.சாணக்கியன்

நேற்று (22) பாராளுமன்றத்தில் விவசாயம் சம்பந்தப்பட்ட பிரேரணையின் போது, சுதந்திரமே இல்லாத நாட்டில் சுதந்திர தினத்துக்கும் அமைச்சர்களின் சுக போகத்துக்கும் செலவழிக்கும் பணத்தை அரசு விவசாயத்திறகு செலவு செய்தால் விவசாயிகளினதும் நாட்டு மக்களினதும் வாழ்க்கைத்தரம் உயர்வடையும் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நெல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் விவசாயம் சம்பந்தமான பிரச்சனைகளான சந்தைப்படுத்தல், பரிந்துக்கப்பட்ட நெல்வகை தொடர்பான பிரச்சனைகள், உர விநியோகம், யானைத் தாக்கம், மானியம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படும் நஷ்டத்துக்கான இழப்பு.

 

விவசாயிகளுடன் தொடர்புடைய ஒரு முக்கிய பிரேரணை இன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில் வடக்கு கிழக்கில் வாழும் எமது மக்கள் விவசாயம், கால்நடை, மீன்பிடியினை நம்பி தமது வாழ்வாதாரத்தினை நடத்திச் செல்கின்றனர்.

 

கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தினை உதாரணமாக வைத்து நான் சில விடயங்களை கூறுகின்றேன். இது வடக்கு கிழக்கில் காணப்படுகின்ற அனைத்து மாவட்டங்களிலும் நடக்கும் ஒரு பிரச்சனை ஆகும். அந்த வகையில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு என்பன ஒன்றாக பயணிக்கும் துறைகளாக காணப்படுகின்றன. ஆகவே விவசாயிகளுக்கு கடந்த போகத்திலே மிக முக்கிய பிரச்சனையாக காணப்பட்டது மேய்ச்சல் தரை நிலப் பிரச்சனை. மயிலத்தமடுவிலிருந்து 150 நாட்களுக்கும் மேலதிகமாக போராட்டங்கள் நடை பெறுகின்றன.

 

ஆனால் அரசாங்கத்தினுடைய இனவாத செயற்பாட்டின் காரணமாக எங்களது மேய்ச்சல் தரையை வர்த்தமானி ஊடாக அறிவிக்காமல் பெரும்பான்மை இனத்தினை குடியேற்றி விவசாயம் மேற்கொள்ள முன்வந்தமையினால் இன்று கால்நடை வைத்திருக்கும் எமது தமிழ் மக்கள் கால்நடைகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்; விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோர் விவசாயத்தை ஆரம்பிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

இது மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்லாது வெருகல், திருகோணமலை, அம்பாறை ஆகிய இடங்களிலும் இப் பிரச்சனைகள் நிலவுகின்றன. ஆகவே இப் பிரச்சனைகளுக்கு விவசாய அமைச்சரும் சரியான தீர்மானத்தை பெற்றுத் தர வேண்டும்.

 

“2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அத்துமீறிய குடியேற்றங்களை அமைப்போர் மகாவலி கங்கை B வலயத்தினுள் உள்ளடக்கப்படமாட்டார்கள்” எனக் கூறியும் அத்துமீறிய குடியேற்றங்களை அமைத்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். இதற்கான தீர்வினை ஜனாதிபதி, விவசாய அமைச்சர், மாகவலிக்குரிய அமைச்சர் ஆகியோர் இணைந்து கலந்துரையாடி பெற்றுத் தர வேண்டும்.

 

நெற்பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் முதலாவது போகத்தினை முதலில் ஆரம்பிப்பது கிழக்கு மாகாணத்தில் ஆகும். கிழக்கில் விவசாயிகள் தமது நிலத்தை தயார்படுத்தி; விதைப்பை ஆரம்பிக்கும் போது பொலன்நறுவை, அனுராதபுரம், அம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் ஆரம்பிக்க மாட்டார்கள். விவசாய ஆரம்ப திகதியை கிழக்கு மாகாணத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் எனக் கூறி நான் அமைச்சராகிய 4 வருடங்களாக கோரிக்கை முன்வைத்துள்ளேன்.

 

கடந்த போகத்திலும் அறுவடையின் பின்னரே விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டது. இதற்கான காரணம் பொலன்நறுவை, அனுராதபுரம், அம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் நெற்பயிர்ச்செய்கை ஆரம்பிக்கும் திகதியிலேயே திறைசேரியில் இருந்து நிதி ஒதுக்கப்படுகின்றது. விவசாயிகள் வட்டிக்கு பணம் வாங்கியே விவசாயம் மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது.

 

இந்தப் போகத்திலாவது உரிய நேரத்தில் மானியங்கள் வழங்காவிட்டால் எமது விவசாயிகள் கடனாளிகளாகவே மாறக்கூடிய சந்தர்ப்பம் காணப்படும். இதற்குரிய தீர்வினை விவசாய அமைச்சர் பெற்றுத் தராவிட்டால் அமைச்சராக இருந்தும் தீர்வுகளை பெற்றுத்தரவில்லை என என்றும் பழி சுமத்துவோம்.

 

எமது மக்கள் கஷ்டத்தின் மத்தியில் தமது தங்க நகைகளை அடகு வைத்து உரத்தினை கொள்வனவு செய்தாலும் விவசாயிகள் அறுவடை செய்யும் காலப்பகுதி காணப்படுகின்ற போது யானைகளின் தொல்லை காணப்படுகின்றது. உயிரிழப்பும் காணப்படுகின்றது.

 

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கௌரவ அதாவுல்லா அவர்களும் இருக்கும் போது இவ் யானைப் பிரச்சனைகளைப் பற்றி கூறினேன். யானை வேலிகளை அமைப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது வரை 10 Km யானை வேலியை கூட அமைக்கவில்லை. இராப்பகலாக கண்விழித்து யானைகளிலிருந்து நிலத்தினைப் பாதுகாத்தால் இயற்கை அனர்த்தங்களின் பிரச்சனை காணப்படுகின்றது.

இதற்கு மக்களும், அரசாங்கமும் எதுவும் செய்ய முடியாது. கடந்த போகத்தில் பெருமளவான விவசாய நிலங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்து இப் பிரச்சனை தொடர்பில் தரவுகளை மேற்கொள்ள வந்த Insurance Co-operation ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை பார்த்துவிட்டு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் எனக் கூறி சென்றுவிட்டனர்.

 

2 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் வயல் நிலங்கள் காணப்படும் மாவட்டத்தில் ஒரு நாளினுள் எவ்வாறு மதிப்பீடு செய்ய முடியும்? மட்டக்களப்பில் வெல்லாவெளி, போரதீவுப்பற்றினை நோக்கினால் அங்குள்ள ஒரு சில நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்று வரை எமது பாதிக்கப்பட்ட மக்களுக்கு Insurance Co-operation நஷ்டஈடு வழங்கவில்லை.

 

இது விவசாயிகளை தொடர்ந்து கடனாளிகளாக்கும் செயன்முறையாகும். இவ்வாறு கஷ்டத்துக்கு மத்தியிலும் எமது விவசாயிகள் நெல்லைப் பெற்றாலும் அதனை உரிய விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு இந்த அரசாங்கம் ஒரு வக்கில்லாத அரசாங்கமாக உள்ளது. அரசாங்கம் கொள்வனவு செய்ய வேண்டிய நெல்லை எமது மக்களுக்கு நீங்கள் தெரிவித்தால் அந்த இன நெல்லை எமது மக்கள் உற்பத்தி செய்வர்.

 

நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கத்திடம் பணமில்லை என்றால் இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கியுள்ள ஆடம்பர செலவுகளை குறைத்தால் நெல்லினை கொள்வனவு செய்ய வேண்டிய பகுதியளவு பணத்தினை பெற முடியும்.

 

சுதந்திரமற்ற இலங்கையில் சுதந்திர தினம் கொண்டாட செலவழிக்கப்பட்ட பணத்தினை வைத்து நெல் கொள்வனவு செய்வதற்காக ஒதுக்க முடியும். அம்பாந்தோட்டை பிரதேசத்தில் நெல் கொள்வனவிற்காக சில உத்திகள் கையாளப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் எமது மாவட்டத்தில் எவ்வித திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படவில்லை என தெரிவித்தார்

சாணக்கியனை தாக்க முற்பட்ட அரச தரப்பு எம்.பி – வெளியாகியுள்ள விளக்கம்!

சாணக்கியன் எம்.பி.யை நான் பாதுகாப்பாக பிரதமரிடம் அழைத்து செல்லவே லிப்டுக்கு (மின்தூக்கி )அருகில் வருமாறு அழைத்தேன் என அரச தரப்பு எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

சாணக்கியனின் குற்றச்சாட்டு தொடர்பில் சிறப்புரிமை மற்றும் ஒழுக்காற்று குழு ஊடாக விசாரணைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டுமென பிரதி சபாநாயகரிடம் வலியுறுத்தி கருத்து தெரிவித்த போதே ரோஹித அபேகுணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதமரை சந்திக்க வந்த தன்னை நான் தாக்க முற்பட்டதாக சாணக்கியன் எம்.பி கூறி சிறப்புரிமை மற்றும் ஒழுக்காற்று குழு ஊடாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார். நான் அந்த விசாரணைக்குழு முன்பாக ஆஜராவேன் .எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

பிரதமரை சந்திக்க வந்த சாணக்கியனிடம்” நீங்கள் பிரதமரையா சந்திக்க வந்தீர்கள்.லிப்டுக்கு வாருங்கள் அழைத்து செல்கின்றேன் என்றே கூறினேனே. அதாவது பிரதமரை சந்திக்க வந்த சாணக்கியன் எம்.பி. யை பாதுகாப்பாக பிரதரிடம் அழைத்து செல்லவே நான் முயற்சித்தேன். ஆனால் இவரிடம் இந்தளவுக்கு பயம் இருக்கும் என்பது எனக்குத்தெரியாது என்றார்.