இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்

இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்

பல்கலைகழங்களில் தொடரும் பகிடிவதைகள் – ஆறு மாத காலத்திற்குள் 82 முறைப்பாடுகள் !

பகிடிவதை தொடர்பில் முறையிடுவதற்காக கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட விசேட தொலைபேசி இலக்கத்தின் ஊடாக ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 82 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று திங்கட்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

இந்த விசேட தொலைபேசி இலக்கமானது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த விசேட தொலைபேசி இலக்கமானது 24 மணிநேரமும் சேவையில் காணப்படுவதோடு 3000ற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த முறைப்பாடுகள் தொடர்பில் செயற்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் மேலும் 9 தனியார் பல்கலைக்கழகங்கள்!

மேலும் 9 தனியார் பல்கலைக்கழகங்களை நிர்மாணிப்பதற்கான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

 

தற்போதுள்ள பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இரண்டு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் p சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

 

குறித்த பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை – விடுதிகளில் இரவு நேர சோதனை !

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் முகமாக அனைத்து பல்கலைக்கழக விடுதிகளிலும் இரவில் சோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

 

பல்கலைக்கழக விடுதிகளில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பகிடிவதை செயல்கள் இடம்பெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

பல்கலைக்கழக விடுதிகளில் இந்த சோதனைகளை பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாணவ ஆலோசகர்கள் ஆகியோரால் மேற்கொள்ளப்படும் என்றும் அவர்களுக்கு தேவையான போக்குவரத்து உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

 

இவ்வாறு பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை குற்றச்செயல்களை கட்டுப்படுத்த தேசிய குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

 

பகிடிவதை சம்பவங்கள் தொடர்பாக முறைப்பாடுகளை 076 54 53 454 என்ற வாட்ஸ்அப் இலக்கம் மூலம் தெரிவிக்குமாறும் தற்போது அதிகளவிலான முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாகவும் அனைத்து முறைப்பாடுகள் குறித்தும் துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.

“தெற்காசியாவின் கல்வியின் கேந்திர நிலையமாக இலங்கை மாற்றப்பட்டுள்ளது” – இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்

தெற்காசியாவின் கல்வியின் கேந்திர நிலையமாக இலங்கையை நிறுவுவதற்கான முயற்சிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் உறுதிப்படுத்தியுள்ளார்.

‘நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை’ எனும் தொனிப்பொருளில் நேற்று ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மைக் காலத்தில் இரண்டு முக்கிய தலைப்புகளில் உரையாற்றினார். அவற்றில் ஒன்று பொருளாதார சீர்திருத்தம், மற்றொன்று கல்வி சீர்திருத்தம். வலுவான கல்வி அடித்தளம் இல்லாமல் பொருளாதார வளர்ச்சி அடைய முடியாது என்பதை அவர் அங்கீகரிக்கிறார். உலகப் பொருளாதாரத்தின் போட்டித்தன்மையைக் கருத்திற்க் கொண்டு, முன்னேற்றமானது அறிவார்ந்த மற்றும் நன்கு தயாரிக்கப்பட்ட பணியாளர்களை சார்ந்துள்ளது.

கடந்த நான்கு வருடங்களில் இலங்கையில் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை 63% அதிகரித்துள்ளது. ஈஸ்டர் குண்டுத் தாக்குதல், கொவிட் தொற்றுநோய் மற்றும் பல்வேறு சவால்கள் போன்ற நிகழ்வுகளின் விளைவான பின்னடைவுகள் இருந்தபோதிலும், உயர்கல்வி இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த மாணவர்களின் வருகைக்கு இடமளிப்பதற்கான பௌதீக வளங்களின் பற்றாக்குறையை நாம் தற்போது எதிர்கொண்டுள்ளோம்.

உலகளாவிய தரத்தின்படி, ஒரு கல்லூரியில் பதினைந்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, நமது அரச பல்கலைக்கழகங்களில், முப்பது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே இருக்கிறார். உயர்கல்வியின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கு பௌதீக வளங்களை மேம்படுத்துவது போன்று மனித வளங்களின் வளர்ச்சியும் இன்றியமையாதது என்பதை வலியுறுத்துவது மிகவும் முக்கியமானது மற்றும் இந்த சமநிலையை அடைவதற்கு நாம் தீவிரமாக செயற்பட்டு வருகிறோம் என தெரிவித்தார்.

இன்னுமொரு குறிப்பிடத்தக்க கவலை என்னவென்றால், உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பெரும்பாலான மாணவர்கள் கலைப் பாடத்தையே தெரிவு செய்கிறார்கள். நாட்டில் உயர்தரம் வரை கல்வியை வழங்கும் 3,000 பாடசாலைகளில் 2,100 பாடசாலைகள் மட்டுமே கலைப் படிப்பை வழங்குவதே இந்தப் போக்குக்குக் காரணம். இதன் விளைவாக, புதிய கல்விச் சீர்திருத்தங்களின் மையமானது, கலைப் படிப்பை படிக்கும் மாணவர்கள் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெறுவதற்கு உதவும் அமைப்பை உருவாக்குவதாகும்.

இலங்கையில் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​நாட்டில் குறைந்த சனத்தொகையே இருந்தது, நான்கு இலட்சம் குழந்தைகளே இருந்தனர். எனினும், இலங்கையின் சனத்தொகை தற்போது 22 மில்லியனாக அதிகரித்துள்ளதுடன், குழந்தைகளின் எண்ணிக்கை 4.3 மில்லியனாக அதிகரித்துள்ளது.

இந்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, புதிய கல்வி சீர்திருத்தங்களில் உடல் மற்றும் மனித வளங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தேவையான ஆய்வகங்கள், விடுதிகள், பௌதீக உள்கட்டமைப்பு மற்றும் மனித வளங்களை வழங்க 2 டிரில்லியன் ரூபா தேவைப்படும்.

இலங்கையின் மிகப் பெரிய நிதியான வருங்கால வைப்பு நிதியானது தற்போது ரூ.4 டிரில்லியனாக உள்ளது, தோராயமாக 50% கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, உயர்கல்வித் துறை சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, தற்போதுள்ள பல்கலைக்கழகங்களுடன் வளாகங்களைச் சேர்ப்பது இந்த முன்மொழிவை உள்ளடக்கியது.

17 அரச பல்கலைக்கழகங்களில் தலா இரண்டு வளாகங்கள் அமைப்பதன் மூலம், மாணவர் சேர்க்கை நெரிசலைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், தனியார் பல்கலைக்கழகங்கள் வளர்ச்சியடைய ஊக்குவிக்க வேண்டும். தற்போது, ​​இலங்கையில் 24 தனியார் பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன, மேலும் 20க்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பல்கலைக்கழக அமைப்பு மூலம் உலகளாவிய குடிமக்களை உருவாக்க, தனியார் மற்றும் அரசு பல்கலைக்கழகங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்கு உதவித்தொகை கிடைக்கச் செய்ய வேண்டும். மாற்றாக, பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறும் போது தேர்ந்தெடுக்கப்பட்ட பாடப் பிரிவுகளின் அடிப்படையில் பணம் திரும்பப் பெற அனுமதிக்கும் கடன் முறையை செயற்படுத்தலாம். இந்த அணுகுமுறை வேலை சார்ந்த படிப்புகளைத் தொடர மாணவர்களின் ஆர்வத்தை வளர்க்கிறது.

உலகளவில் பல அபிவிருத்தியடைந்த நாடுகளின் வளர்ச்சிக்கு பல்கலைக்கழகத் துறையில் உள்ள ஆராய்ச்சி கருவியாக உள்ளது. எவ்வாறாயினும், இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழகங்களுக்கிடையில் உள்ள புவியியல் தூரம் காரணமாக, சமூகப் பிரச்சினைகளுக்கு ஆய்வுகள் மூலம் போதுமான தீர்வு காணப்படவில்லை. எனவே, பல்கலைக்கழகங்களுக்கும் சமூகத்திற்கும் இடையே அதிக ஒருங்கிணைப்பு தேவை. விவசாயக் கல்லூரிகளுக்குள் அறிவுசார் சுதந்திரம் ஊக்குவிக்கப்பட வேண்டும் மற்றும் பொதுப் பல்கலைக்கழகங்களால் சர்வதேச மயமாக்கப்பட வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“நீங்கள் சமஷ்டிதரவில்லை என்று கனவு காண்பீர்கள் என்றால் நாங்கள் சுதந்திர தமிழீழத்தை எடுக்கப்போகின்றோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ” – எம்.கே. சிவாஜிலிங்கம்

“நீங்கள் சமஷ்டிதரவில்லை என்று கனவு காண்பீர்கள் என்றால் நாங்கள் சுதந்திர தமிழீழத்தை எடுக்கப்போகின்றோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ”  என தமிழ்தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர மற்றும் சுரேன் இராகவன் போன்றோரின் அண்மைக்கால கருத்துகள் தொடர்பில் கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சரத் வீரசேகர கடற்படை அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்றவர்.  இன்று நேற்று அல்ல தொடர்சியாக ஜெனிவா கூட்டத் தொடர்வரை வந்து இனவாதத்தை கக்குவது மட்டுமன்றி  தமிழ்மக்களின் போராட்டத்தைப் பற்றி குற்றச்சாட்டு முன்வைப்பவர். அதுமட்டுமன்றி தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக பல சோடிக்கப்பட்ட  பொய்களை ஜெனிவாகூட்டத் தொடரில் முன்வைக்கின்ற  வேலைகளை செய்தது மாத்திரமல்ல, ஜெனிவா கூட்டத்தொடரில் எங்களுடன் மோதுகின்ற வேலைகள் மற்றும் வாக்குவாத்தத்தில் ஈடுபட்டவர். அதுமட்டிமன்றி தமிழ் நாட்டில் இருந்து வந்த வைக்கோ போன்ற தலைவர்களுடனும் வாக்குவாத்தத்தில் ஈடுபட்ட நபராவார்.

தற்போது இவர் அமைச்சரில்லை. பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு கடந்த காலங்களில் குறிப்பாக  காலகாலமாக இனவாத கருத்துக்களை கூறிவருபவர்கள் போல்  முன்பிருந்தவர்களை விட மிக மோசமாக இனவாத கருத்துக்களை கக்கிவருகிற செயற்பாட்டில் சரத்வீரசேகர ஈடுபட்டு வருகிறார்.

இவர் சிங்கள பெளத்த இனவாத மக்களின் உண்மையான முகத்தை காட்டி வருகிறார். ஏனையவர்கள் மெழுகு புசியவர்கள் போல் எங்களை ஏமாற்றப்பார்கிறார்கள். இவ்வாறானவர்களை வைத்துக் கொண்டு நாங்கள் ஒரு நாட்டுக்குள் வாழவேண்டும் என்று எங்களுடைய கட்சிகள் அல்லது  தலைவர்கள் நினைப்பது எவ்வாறு?

இனப்படுகொலைகள்  படுமோசமாக இடம் பெற்ற பின்னரும் கூட அதற்கான நீதி கிடைக்குமாயின் அதற்காக  பொதுசன வாக்கேடுப்பு நடாத்தி அதற்காக செல்லமுடியும் என்பது அவர்களுக்கு தெரியும். இதனை விடுத்து அவர்களிடமிருந்து மயிலே மயிலே இறகுபோடு என்று கேட்டுக் கொண்டிருந்தால் பிரயோசனம் எதுவும்  இல்லை.

இதனைபோல்தான் தற்போது சுரேன் இராகவன் வடக்கு மாகாணத்தின் ஆளுநராக . மலையகத்தைச் சேர்ந்தவர். அவரும் வெளிநாடுகளில் வாழ்ந்து இன்று ஒன்றுமில்லாமல்  தேசியப்பட்டியல் எம்.பியாக வந்துவிட்டு  அவர் பேசும் பேச்சுக்கள், வீராப்புகளை ஏற்கமுடியாதுள்ளது. அதிலும் சமஷ்டி பெறலாம் என கனவுகாண வேண்டாம் என்றால் நீங்கள் சமஷ்டிதரவில்லை என்று கனவு காண்பீர்கள் என்றால் நாங்கள் சுதந்திர தமிழீழத்தை எடுக்கப்போகின்றோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இதனை தவிர இதற்குவேறு வார்த்தைக்ள் எம்மிடம் இல்லை. மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக் கொண்டு அவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களுக்கு உதவி செய்யவில்லை.  தமிழனாக இருந்து கொண்டு பெளத்தத்தில் ஆராட்சி கெளரவ பட்டத்தை பெற்றுவிட்டு அதில் பிழையில்லை ஆனால் எமது மக்களின் அல்லது தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் வீழ்ச்சியைப் பற்றி கதைக்காது சிங்கள பெளத்த பேரினவாத்தத்திற்கு ஓத்துதுகின்றவராக  சுரேன் இராகவனும் இணைந்துள்ளார். அதுமட்டுமன்றி சரத்வீரசேகரவின் அணியில் இணைந்து கொள்ளட்டும். இவற்றையேல்லாம் கண்டு ஈழத்தமிழர்கள் அச்சப்பட போவதில்லை. பயப்படபோவதில்லை  இவர்களுடைய இனவாத கருத்துகள் எங்களுடயை இறுதி இலட்சியத்தை அடைவதற்கு உரமூட்டும் என்பதை நம்புகின்றோம் என்றார்.

“அதிகாரப்பகிர்வு என்ற பெயரில் தெற்கு இளைஞர்களை தூண்டிவிட்டு, மீண்டும் யுத்தத்திற்கு வழிவகுக்காதீர்கள்.” – நாடாளுமன்றத்தில் சுரேன் ராகவன் !

நாட்டில் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்போவதில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேன் ராகவன் தெரிவித்தார்.

அதிகாரப் பகிர்வு தொடர்பான தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் கருத்துக்களானது தெற்கு இளைஞர்களை தூண்டிவிட்டு, மீண்டும் யுத்தத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

 

நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக நான்கு சுற்றுப் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்துள்ளார்.

 

இந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட தமிழ் பிரதிநிதிகள், இது அவசியமானது அல்ல என்றும் சமஷ்டி முறையிலான தீர்வே தங்களுக்கு வேண்டும் என்றும் வெளியே சென்று கருத்துக்களை வெளியிடுகிறார்கள்.

 

நான் இவர்களிடம் ஒன்றைக் கூறிக்கொள்கிறேன். கனவுக் கணாதீர்கள்.

 

சமஷ்டி கோரிக்கையுடன் வட்டுக்கோட்டைவரை சென்று, மீண்டும் 2009 ஆம் ஆண்டு இந்நாடு பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் இரத்த ஆறுக்கு மத்தியில் திரும்பி வந்துள்ளது.

 

இவ்வாறு இருக்க மீண்டும் யுத்தமொன்றையா நீங்கள் எதிர்ப்பார்க்கின்றீர்கள்? அப்படியென்றால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அன்று சரத்பொன்சேகாவுடன் இணைந்து, சிங்கக் கொடியை தூக்கிப் பிடித்து, ஐக்கிய இலங்கைக்குள் பெரும்பான்மை சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வொன்றுக்கு செல்வோம் என்றே யாழில் கூறியிருந்தார்.

 

அப்படியென்றால், இப்போது ஏன் இதற்கு மாறான ஒரு கருத்தை இவர்கள் வெளியிட வேண்டும்?

 

அதுவும் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருக்கும்போதே ஏன் இவ்வாறு கூற வேண்டும்?

இந்த நாட்டை ஒருபோதும் பிரிக்க இடமளிக்க முடியாது. இனியும் இந்நாடு இனவாத யுத்தத்திற்கு முகம் கொடுக்காது.

 

எனவே, மீண்டும் இதற்குள் நாட்டை தள்ள முயற்சிக்க வேண்டாம். அமைதியாக இருக்கும் தெற்கு இளைஞர்களை மீண்டும் தூண்டிவிட வேண்டாம் என நான் இவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

 

இது எச்சரிக்கை கிடையாது. உண்மையைத்தான் கூறுகிறேன். இந்நாட்டிலுள்ள அப்பாவி விவசாயிகள் முதற்கொண்டு அனைவரும் இதனைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

 

அமெரிக்கா தூதுவரையும், இந்திய உயர்ஸ்தானிகரையும் மகிழ்ச்சிப் படுத்த நாம் கருத்துக்களை வெளியிட வேண்டிய அவசியம் கிடையாது.

 

நாம் ஒரு இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும்போது, அந்தப் பயணம் முடிவடையும் முன்னரே சமஷ்டியைக் கோருவதை, வடக்கு மக்கள் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

 

இதனை நான் வடமாகாண முன்னாள் ஆளுநர் என்ற வகையில் உறுதியாகக்கூறுகிறேன்.

 

தமிழ் இனவாதிகளால் மேற்கொள்ளப்படும் இந்த செயற்பாட்டை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஒரு பல்கலைகழக மாணவனுக்காக அரசாங்கம் 32 இலட்சம் ரூபா செலவழிக்கிறது !

மாணவர்களிடம் உறுதிமொழிச் சான்றிதழைப் பெற்று பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கும் புதிய திட்டம்  ஆரம்பிக்கப்படும் என்று உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், பல்கலைக்கழகத்தின் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்க மாட்டோம், பல்கலைக்கழக வளாகத்தில் கலவரத்தை ஏற்படுத்தப் போவதில்லை என   உறுதிமொழிச் சான்றிதழில் கையொப்பம் பெறப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்தில் நுழைவதற்கான உரிமையின் அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்பு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இது ஒரு சமூக உடன்பாடு எனவும், ஒப்பந்தத்தை மீறும் மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு உறுதிமொழியை  மீறும் மாணவர்களின் பல்கலைக்கழக கல்வி ரத்து செய்யப்படும்.

மேலும், பல்கலைக்கழகத்தில் சேரும் ஒரு மாணவனுக்காக  ஆண்டுக்கு 8 இலட்சம் ரூபாவை அரசாங்கம் செலவிடுகிறது.  அதன்படி, 4 ஆண்டுகள் படித்து விட்டு பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறும் மாணவர்களுக்காக  ஆண்டுகளில் 32 இலட்சம் ரூபா என்ற பெரும் தொகையை அரசு செலவிடுவதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்தில் வன்முறைக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது – இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்

பல்கலைக்கழகத்திலோ வெளியிலோ வன்முறைக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

ஒருவரது மனித உரிமையை விட 99 வீதமானோரின் மனித உரிமை தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பேராதனை பல்கலையில் பகிடிவதை சம்பவங்கள், மற்றும் பெற்றோரின் முறைப்பாடு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மனித உரிமை தொடர்பில் கவனம் எடுப்பதா என்பது தொடர்பில் கற்றவர்களும் நன்கு உணர்வர்.
அரசியல் நோக்கத்திலும் பல்வேறு நோக்கங்களுக்காகவும் ஒருசிலர் செயற்பட்டு வருகின்றனர்.

அங்கு அரசியல் தீயை மூட்ட வேண்டாம் என நாம் கேட்டுக் கொள்கின்றோம். பேராதனை  பல்கலைக்கழக சம்பவம் தொடர்பில் எனக்கு பெற்றோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து 600க்கும் மேற்பட்ட குறுஞ்செய்திகள் வந்துள்ளன.

மனித உரிமையை நாம் வரவேற்கின்றோம். எனினும் குறுகிய நோக்கங்களுக்காக செயல்படுபவர்கள் மற்றும் வன்முறைகளையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.