பாலஸ்தீனத்தில் சிறுவர்களை கொல்லும் இஸ்ரேலுக்கு உதவும் பிரித்தானியா இலங்கைக்கு தடை !
இலங்கையில் இடம்பெற்ற 30 ஆண்டு கால கொடூர யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த, முன்னாள் படை வீரர்களுக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்துள்ளது. ஆனால் அப்பாவி பாலஸ்தீனியர்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் இராணுவத்துக்கு பிரித்தானியா ஆதரவளித்து வருகிறது. அவ்வாறெனில் இலங்கை இராணுவத்துக்கொரு நீதி, இஸ்ரேல் இராணுவத்துக்கொரு நீதியா ? என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கேள்வியெழுப்பியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட போது, இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதென்றால், காசாவிலுள்ள அப்பாவி மக்களை இஸ்ரேல் கொன்று குவிப்பது மனித உரிமை மீறல் இல்லையா என்று பிரித்தானியாவிடம் கேட்கின்றேன். இஸ்ரேல் படை வீரர்களுக்கும் அரச தலைவர்களுக்கும் எதிராக எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? காசாவில் சுமார் 50 000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 70 சதவீதமானோர் பெண்கள் மற்றும் சிறுவர்களாவர். இவ்வாறு அராஜகத்தில் ஈடுபடும் இஸ்ரேல் இராணுவத்துக்காக பிரித்தானியா ஒரு பில்லியனுக்கும் அதிக உதவிகளை வழங்கியிருக்கிறது. இஸ்ரேல் இராணுவத்துக்கு எதிராக விதிக்கப்படாத தடை எதற்காக இலங்கை இராணுவத்துக்கு மாத்திரம் விதிக்கப்பட வேண்டும்? பக்க சார்பாக செயற்படும் பிரித்தானிவின் செயற்பாட்டை கடுமையாகக் கண்டிக்கின்றோம் என்றார்.
எப்படியாயினும் இலங்கையில் இடம்பெற்ற இனமோதலில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு எப்படி நியாயம் கிடைக்க வேண்டுமோ அவ்வாறே இனப்படுகொலைக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும். இனப்படுகொலையில் ஈடுபடும் நெத்தன்யாகு தலைமையிலான இஸ்ரேல் அரசாங்கம் தண்டிக்கப்பட வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் வலியுறுத்துகின்றன.

