சி.வி.விக்னேஸ்வரன்

சி.வி.விக்னேஸ்வரன்

இனவாதத்தை வடக்கு மக்கள் நிராகரித்துள்ளார்கள் , இதனாலேயே அங்கஜன் இராமநாதனுக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் அதிக வாக்குகள் கிடைத்துள்ளது ! – உதய கம்மன்பில

இலங்கையில் பூர்வீகக் குடிகள் தமிழர்களே என்ற சி.வி.விக்னேஸ்வரனின் கருத்து தொடர்பாக பல அமைச்சர்களும் தமது கண்டனங்களையும் வெளியிட்டு வருகின்ற நிலையில்  அது  தொடர்பாக விவாதிக்க வருமாறு விக்னேஸ்வரனுக்கு அமைச்சர் உதய கம்மன்பில பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று  (25.08.2020) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் விவாதிக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் “இலங்கையின் ஆதிக் குடிகள் தமிழர்களா என்பது தொடர்பாக என்னுடன் பகிரங்க சவாலுக்கு வருமாறு, நான் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு சவால் விடுக்கிறேன்.

அவரிடமுள்ள அனைத்து தரவுகளையும் தோற்கடிக்க நாம் தயாராகவே இருக்கிறோம் என்பதை இவ்வேளையில் கூறிக்கொள்கிறேன். இனவாதத்தை வடக்கு மக்கள் நிராகரித்துள்ளார்கள். அவருக்கு 21 ஆயிரத்து 554 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. தனது அரசியலுக்காக அவர் இன்று இனவாதத்தை கையில் எடுத்துள்ளார்.

எனினும், இனவாத அரசியலை கைவிட்டுள்ள சுதந்திரக் கட்சியின் உறுப்பினரான அங்கஜன் இராமநாதனுக்கு 36 ஆயிரத்து 365 வாக்குகளும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு 32 ஆயிரத்து 146 வாக்குகளும் வடக்கிலிருந்து கிடைத்துள்ளது.

இதிலிருந்தே வடக்கு மக்கள் இனவாதத்தை விரும்பவில்லை எனும் சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் இனவாதிகளுடன் இணைந்து பயணிக்க தயாராக இல்லை. மாறாக தெற்குடன் இணைந்து ஒன்றிணைந்து பயணிக்கவே விரும்புகிறார்கள்.

இந்த காரணத்தினால்தான் விக்னேஸ்வரன் போன்றோர் மீண்டும் மீண்டும் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டு வருகிறார்கள்” என கூறினார்.

சி.வி. விக்னேஸ்வரனின் உரையை ஹன்சாட்டில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறுபவர்கள் உண்மையான வரலாற்றை நாட்டு மக்களுக்குச் சொல்லத் தயாரா? – ஊடக அறிக்கையில் சுரேஷ்பிறேமச்சந்திரன் கேள்வி

9 வது பாராளுமன்றத்தில் சபாநாயகரை வாழ்த்திப் பேசுகையில், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரனின் உரையை ஹன்சாட்டில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறுபவர்கள் உண்மையான வரலாற்றை நாட்டு மக்களுக்குச் சொல்லத் தயாரா?  என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ்பிறேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு,

பாராளுமன்றத்தில் விக்னேஸ்வரன் முதன் முதலாக ஆற்றிய கன்னி உரை பாராளுமன்றத்திலும் தென் பகுதியிலும் பலத்த சலசலப்புக்களை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழ் மிகவும் தொன்மையானமொழி என்றும் இலங்கையில் மூத்த குடிமக்களாக தமிழர்களே இருந்தார்கள் என்றும் அவ்வாறான மக்களுக்கு இறையாண்மை இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் சொல்லிய கருத்தினை பாராளுமன்ற உறுப்பினர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

இதன் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார, விக்னேஸ்வரனினுடைய உரை சிங்கள மக்களுக்கு எதிரானது என்ற தொனியில் அதனை விமர்சித்ததுடன், அவரது உரையை ஹன்சாட்டில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இலங்கையினுடைய வரலாறு என்று கூறப்படும் மகாவம்சத்தில் விஜயன் இந்தியாவில் இருந்து தனது 700 நண்பர்களுடன் இலங்கைக்கு வந்ததாகக் கூறப்படுகின்றது. இவ்வாறு அவன் இலங்கைக்கு வந்து குவேனி என்ற பெண்ணை மணந்ததாகவும் கூறப்படுகின்றது. விஜயன் இலங்கைக்கு வந்த பொழுது இலங்கையில் திருகோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம், நகுலேஸ்வரம், தொண்டீஸ்வரம் ஆகிய ஐந்து ஈஸ்வரங்கள் இலங்கையைச் சுற்றிலும் இருந்ததாகவும் இங்கிருந்தோர் சிவனை வழிபட்டு வந்ததாகவும் அவர்கள் பேசியது தொன்மையான தமிழ் மொழி எனவும் சிங்கள, தமிழ் மற்றும் சர்வதேச வரலாற்று ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றார்கள்.

இதனையே தான் பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் தனது கன்னி உரையில் குறிப்பிட்டு, அவ்வாறான தொன்மையான ஓர் மக்கள் இனத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருந்தார். இது எந்த விதத்தில் ஒரு இனவாதக் கருத்தாக அமையும் என்பதை கற்றறிந்த சிங்கள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனுடைய கருத்துக்களை பாரிய இனவாத கருத்துக்களாகவும் இவை அடக்கப்பட வேண்டும் எனவும் இந்தக் கருத்துக்கள் தமிழீழக் கோரிக்கைக்கு ஒப்பானது என்றும் பிரதமர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுவதானது அவர்களின் உள்நோக்கத்தையே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

போர்த்துக்கேயர் இலங்கையைக் கைப்பற்றிய போது இலங்கை முழுவதிலும் தமிழே நீதிமன்ற மொழியாக இருந்தது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தமிழ் மக்களினுடைய மொழி அதனுடைய தொன்மை அவர்களது கலாசாரம், பண்பாடு, அவர்களுக்கு உரித்தான அதிகாரங்கள் அவர்களுடைய பாதுகாப்பு இவை எதனைப் பற்றிப் பேசினாலும் ஒட்டுமொத்த சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இவை இனவாதக் கருத்துக்களாகவே தோன்றுகின்றது. இன்னும் சொல்லப்போனால் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது மொழி தொடர்பாகவோ, தமது பிறப்புரிமைகள் தொடர்பாகவோ, அவர்களது பாதுகாப்பு தொடர்பாகவோ பேசக்கூடாது என எதிர்பார்க்கின்றார்கள்.

அரசாங்கத்தின் காணி அபகரிப்பு, எமது புராதன சின்னங்களை அழித்து ஒழித்தல், தமிழ் மக்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள மறுத்தல் போன்ற அனைத்தையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். தமிழ் இனத்துக்கு எதிரான இனப் படுகொலைகள், யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக பாராளுமன்றத்திலோ, வெளியிலோ தமிழர் தரப்புக்கள் பேசக் கூடாது என்று எதிர்பார்க்கின்றார்கள்.

இவ்வாறு பேசுவது எல்லாம் இனவாதக் கருத்துக்கள் என முத்திரைகுத்த முயற்சிக்கின்றார்கள். பாராளுமன்றத்தில் இருக்கக் கூடிய சிங்கள பௌத்த இனவாத சக்திகளும் அரசும் இவ்வாறான முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றார்கள். இவ்வாறான கருத்துக்களை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதனை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

விக்னேஸ்வரன் அவர்கள் கூறிய கருத்துக்கள் தவறான கருத்துக்கள் என்று கருதினால் அதில் எந்தவிதமான உண்மையும் இல்லை அவை பாராதூரமான கருத்துக்கள் என்று கருதினால் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உண்மையான கருத்துக்களைக் கூறி தங்கள் கருத்து சரி என வாதிட வேண்டுமே தவிர அவை எதனையும் கூறாமல் அதனை பாராளுமன்ற குறிப்பேட்டில் இருந்து எடுக்கும்படி வற்புறுத்துவதானது அவர்களது இயலாத் தன்மையை வெளிப்படுத்துகிறது.

விக்னேஸ்வரன் அவர்களுடைய கருத்துக்களை சவாலுக்கு உட்படுத்துவதற்கோ அல்லது அது பொய்யானது என்றோ நிரூபிக்கமுடியாத சூழ்நிலையில் சபாநாயகரைப் பயன்படுத்தி அவரது கருத்தை ஹன்சாட்டில் இருந்து அகற்ற முற்சிப்பது சரியான ஓர் செயற்பாடாகத் தோன்றவில்லை.

பாராளுமன்றம் என்பது மக்கள் பிரதிநிதிகள் தங்களது மக்களின் குறைநிறைகளை அது தொடர்பான சட்டங்களை பேசுவதற்கும் உருவாக்குவதற்குமான சபையாகவே உள்ளது. அதாவது மக்கள் தமது இறையாண்மையை தமது பிரதிநிதிகள் ஊடாக பாராளுமன்றத்தில் செயற்படுத்துகின்றார்கள் என்பதே அதன் அர்த்தம் ஆகும்.

ஆகவே, அந்த வகையில் சிறுபான்மை தேசிய இனம் ஒன்றின் பிரதிநிதிகள் அத் தேசிய இனத்தினுடைய உரிமைகள் தொடர்பாகவும், அவர்களுடைய இருப்புக்கள் தொடர்பாகவும், அவர்களுடைய பாதுகாப்பு தொடர்பாகவும் பாராளுமன்றத்தில் எடுத்துரைப்பதற்கு உரித்துடையவர்கள். அதற்கான உரித்துக்கள் அனைத்தும் வரலாற்றுபூர்வமாக அவர்களுக்கு இருக்கிறது என்பதையும் பெரும்பான்மை இனத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பெரும்பான்மை இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசும் புரிந்து கொள்ள வேண்டும்.

புதிய பாராளுமன்றத்தில் வந்திருக்கக் கூடிய அரச தரப்பினரும் எதிர் தரப்பில் இருக்கக் கூடிய சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களும் தம்மை சிங்கள பௌத்த பெரும் தேசியவாதிகள் எனக் கருதிக் கொள்வதும் ஏனைய தேசிய இனங்கள் தங்களுக்கு அடிமையாக சேவை செய்ய வேண்டும் என்று கருதுவதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு நிலைப்பாடாகும்.

உண்மையான வரலாற்றைத் திரிபுபடுத்தி, அதனை மறைத்து உண்மைக்கு எந்த விதத்திலும் தொடர்பற்ற கற்பனையில் தோற்றுவிக்கப்பட்ட வரலாற்றை பாடப் புத்தகங்களில் நுழைத்து மக்களை திசை திருப்பி விட்டவர்கள் இந்நாட்டில் தொடர்ந்தும் மாறிமாறி ஆட்சி செய்துவரும் சிங்கள பௌத்த மேலாதிக்கவாத சக்திகளே அன்றி, தமிழ் மக்கள் அல்லர் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நாட்டின் உண்மையான வரலாற்றை மறைத்து, இந்த நாடு சிங்கள மக்களுக்கு மட்டுமே உரித்தானது என்று நிறுவ முற்படுவது தான் இனப் பிரச்சினைக்கான ஆணி வேர். இதனைப் புரிந்து கொண்டு இனியாவது உண்மையான வரலாற்றை மக்களிடம் எடுத்துச் சென்று இதுவரை காலமும் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படுகின்ற அரச வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அனைவரும் அவரவர் உரிமைகளுடன் வாழ வழிவகுக்க வேண்டும்.

எனவே, பலமொழிகள், பலமதங்கள், பல இனங்கள் இருக்கக் கூடிய ஒரு நாட்டில் சிங்கள பௌத்தர்கள் மாத்திரம் தான் தீர்மானிக்கும் சக்திகள் என கருதி ஏனையோரை அடக்கி ஒடுக்கும் கருத்துக்களை கைவிட்டு இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வை உருவாக்கக் கூடிய வகையில் அரசும் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்வரவேண்டும் எனகேட்டுக் கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்னேஸ்வரனின் பிள்ளைகளுக்கே தமிழ் மொழி தெரியாது ! – எஸ்.பி. திஸாநாயக்க

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெரிய தந்தையாவதற்கே விக்னேஸ்வரன் முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க கூறியுள்ளார்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய கன்னி உரை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை கூறினார்.

“இலங்கையின் பூர்வீக மொழி சிங்களம் அல்ல தமிழ் என விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அவரின் இந்த உரையால் நாம் குழப்பம் அடையவில்லை என்றும், ஏனெனில் விக்னேஸ்வரனின் பிள்ளைகளுக்கே தமிழ் மொழி தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டு உரிமைகள் வழங்கினாலே இந்த நாட்டுக்கு சுபீட்சம் கிடைக்கும் ! – பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் சி.வி.சி.வி.விக்னேஸ்வரன்

தேசம் என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டு உரிமைகள் வழங்கினாலே இந்த நாட்டுக்கு சுபீட்சம் கிடைக்கும் என்று நாடாளுமன்ற முதல் அமர்வில் (20.08.2020)  தமிழ் தேசிய கூட்டணியின் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மேலும்,

“எமக்கு இப்பொழுது மிகவும் பலமான ஒரு அரசாங்கம் அமைந்துள்ளது. 1977ம் ஆண்டு இதேமாதிரியான ஒரு அரசாங்கம் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் கீழ் இருந்தது. அந்த ஆட்சியின்போதே 1983ம் ஆண்டு கலவரம் இடம்பெற்றது. அந்தக்காலத்து யானையாக இருந்து இன்று தனி ஒரு உறுப்பினராக குறுகிப்போயுள்ள பாதையை இந்த அரசாங்கமும் நிச்சயமாக எதிர்காலத்தில் தொடரக்கூடும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள் என்று நம்புகிறேன். கடந்த காலத்தில் நாம் விட்ட பிழைகளில் இருந்து பாடம் படித்து எல்லா சமூகங்களும் ஒருவருக்கு ஒருவர் மதிப்புடனும் சமனாகவும் உணருகின்ற வகையிலும் இலங்கை தாய் நாட்டின் பிள்ளைகள் நாம் என்ற இறைமையுடனும் பெருமையுடனும் நடைபோடும் வகையிலுமான சமாதானமும் செழிப்பும் மிக்க ஒரு காலத்தை ஏற்படுத்துவார்கள் என்றும் நம்புகிறேன்.

குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையுடன் மரபு, பாரம்பரிய உரிமைகளின் அடிப்படையில் தேசம் என்று அங்கீகரிக்கப்படுவதன் பிரகாரம் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடைய வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் உள்ளார்ந்த உரிமைகளை அங்கீகரிப்பதுடன் கடந்த காலம் பற்றிய தவறான வரலாற்று கண்ணோட்டங்களை களைந்தால் மட்டுமே சுதந்திரமும் சமத்துவமும் உதயமாக முடியும்.

சபாநாயகர் அவர்களே, பௌத்த மதத்தை பின்பற்றும் ஒரு நாட்டிலே, மேலாதிக்க அதிகார பிரயோகத்தை நாங்கள் எவரிடம் இருந்தும் எதிர்பார்க்கவேண்டியதில்லை. ஏனென்றால், சிங்கள கிராமத்தவர்கள், ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை இருக்கும் என்பதற்காக பின்வரும் பழமொழியை கூறுவார்கள் என்பது எமக்கு தெரியும். அதாவது, (கல கல டே பல பல வே) முற்பகல் செய்த வினை பிற்பகல் விளையும் என்பதே அது.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.