இஸ்ரேல் – பாலஸ்தீன்

இஸ்ரேல் – பாலஸ்தீன்

நான்கு பணயக்கைதிகளை உயிருடன் மீட்ட இஸ்ரேலிய படையினர் !

காசாவில் விசேட நடவடிக்கையொன்றை மேற்கொண்டு நான்கு பணயக்கைதிகளை இஸ்ரேலிய படையினர் உயிருடன் மீட்டுள்ளனா்.

அதேவேளை இந்த நடவடிக்கையின் போது 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்தாண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி, இஸ்ரேலிலிருந்து ஹமாஸ் அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்ட பணயக் கைதிகளில், 4 பேரையே இஸ்ரேல் இராணுவம் இவ்வாறு உயிருடன் மீட்டுள்ளது.

கடந்த 8 மாதங்களுக்கு மேல் தொடரும் இஸ்ரேல் – ஹமாஸ் போரில், இஸ்ரேல் படையினரால் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய மீட்பு நடவடிக்கை இதுவென குறிப்பிடப்படுகின்றது.

எனினும், இந்த நடவடிக்கையின்போது, 200க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒக்டோபர் 7 ஆம் திகதிக்கு பின்னர், இஸ்ரேல் மேற்கொண்ட மிகமோசமான தனியொரு தாக்குதல் இதுவென, ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

காசாவின் மத்தியிலுள்ள அல்நுசெய்ரட் பகுதியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

பொதுமக்கள் வாழும் பகுதியிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பணயக்கைதிகள் தொடர்மாடிக் குடியிருப்புகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாகவும் இஸ்ரேலிய இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையின் போது, இஸ்ரேலிய படையினர் கடும் தாக்குதலை எதிர்கொண்டதாகவும், இதனைதொடர்ந்து இஸ்ரேல் இராணுவம் வானிலிருந்தும் தரையிலிருந்தும் பதில் தாக்குதலை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இந்த தாக்குதலில், நூற்றுக்கும் மேற்பட்ட, பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளமை தங்களுக்கு தெரியும் என தெரிவித்துள்ள குறித்த அதிகாரி, அவர்களில் எத்தனை பேர் பயங்கரவாதிகள் என்பது தெரியாது எனவும், இஸ்ரேலின் விசேட படைப்பிரிவை சேர்ந்த ஒருவரும் இதில் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இஸ்ரேல் இராணுவம்,

மத்திய காஸாவிலிருந்து ஒரு பெண் உள்ளிட்ட 4 பிணைக் கைதிகளை தமது இராணுவம் மீட்டுள்ளதாகவும், மீட்கப்பட்ட அனைவரும் நோவா இசை விழாவிலிருந்து கடத்திச் செல்லப்பட்டவா்கள் எனவும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சிக்கல் மிகுந்த நகரச் சூழலில், கடுமையான துப்பாக்கிச்சூடு தாக்குதல்களுக்கு இடையே, பகல் நேரத்தில் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சா் யோவாவ் காலன்ட் தெரிவித்துள்ளார்.

இந்த மீட்பு நடவடிக்கை குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவிக்கையில்,

பயங்கரவாதத்துக்கு இஸ்ரேல் பணிந்துவிடவில்லை என்பதை இந்த மீட்பு நடவடிக்கை எடுத்துக் காட்டுவதாகவும், எஞ்சியுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் இதேபோன்று மீட்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பாலஸ்தீன தேசத்திற்கு தற்போதைக்கு ஆதரவளிக்கும் நோக்கம் எதுவுமில்லை – அவுஸ்திரேலிய அரசாங்கம்

பாலஸ்தீன தேசத்திற்கு தற்போதைக்கு ஆதரவளிக்கும் நோக்கம் எதுவுமில்லை என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது

 

பாலஸ்தீன அதிகாரசபையை சீர்திருத்தவேண்டும் பணயக்கைதிகள் விடுதலை ஆகியவற்றை வலியுறுத்துவதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

 

நோர்வே அயர்லாந்து ஸ்பெயின் போன்ற நாடுகளை பின்பற்றிஅவுஸ்திரேலியா பாலஸ்தீன தேசத்தைஅங்கீகரிக்கவேண்டும் என கிறீன்ஸ் கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

அவுஸ்திரேலிய இரண்டு தேசகொள்கைக்கு நீண்டகாலமாக ஆதரவுஅளித்து வந்துள்ளது என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் இந்த செயற்பாடு முன்னர் எப்போதையும் விட அவசியமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

 

பாலஸ்தீனியர்களிற்கு மேலதிக உரிமைகளை வழங்கும் இரண்டு தேசக்கொள்கைகயை அங்கீகரிக்கும் ஐக்கியநாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக அவுஸ்திரேலியா இந்த மாதம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் வாக்களித்திருந்தது என தெரிவித்துள்ள பெனிவொங் எனினும் இதன் அர்த்தம் அவுஸ்திரேலியா ஓருதலைப்பட்சமாக பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கின்றது என்பதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதலால் தகர்க்கப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகளின் கீழ் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உடல்கள் !

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலால் தகர்க்கப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகளின் கீழ் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உடல்கள் உள்ளன என காசாவின் சிவில் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த பல மாதங்களாக நாங்கள் மிகச்சாதாரணமான இயந்திரங்களை பயன்படுத்தி இடிபாடுகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம் இதனால் எங்கள் முயற்சியும் நேரமும் வீணாகியுள்ளது  என ஹமாசின் சிவில் பாதுகாப்பு பிரிவின் பேச்சாளர் மஹ்மூத் பசால் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தாக்குதலை மேற்கொண்டதும் மருத்துபிரிவினரும் காசாவின்  சிவில் பாதுகாப்பு பிரிவினருமே முதலில் அங்கு செல்கின்றனர்.

அவர்கள் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளவர்கள் – உடல்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபடுவார்கள்.

இடிபாடுகளிற்குள் சிக்குப்படுபவர்களை மீட்பதற்கு அவசியமான இயந்திரங்களை காசாவிற்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்கு ஐநாவும் மனிதாபிமான அமைப்புகளும் ஆதரவளிக்கவேண்டும் என என ஹமாசின் சிவில் பாதுகாப்பு பிரிவின் பேச்சாளர் மஹ்மூத் பசால் தெரிவித்துள்ளார்.

அல்சிபா மருத்துவமனையிலிருந்து இஸ்ரேலிய படையினர் விலகி 40நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னமும் மருத்துவமனைக்குள் பாரிய மனித புதைகுழிகளுக்குள் இஸ்ரேலிய படையினர் புதைத்த உடல்களை இன்னமும் மீட்டு வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஃபா எல்லைகளை கைப்பற்றிய இஸ்ரேல் – மனிதாபிமான உதவிகள் முழுமையாக தடைப்பட வாய்ப்பு!

காசா பகுதியில் உள்ள ரஃபாஎல்லையை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

ரஃபா மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிஎன்பதுடன் எகிப்திலிருந்து காசாவிற்கான மனிதாபிமான உதவிகள் வருவதற்கான ஒரேயொரு பாதையாகவும் காணப்படுகின்றது.

ரஃபாவின் காசா பக்கத்தினை நாங்கள் தற்போது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளோம் எங்களது சிறப்பு படைகள் இந்த பகுதியில் சோதனை நடவடிக்கைகள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளன என இஸ்ரேலின் இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை காசா எல்லை அதிகாரசபைக்கான பேச்சாளர் இஸ்ரேலிய டாங்கிகள் காணப்படுவதை உறுதிசெய்துள்ளார்.

அந்த பகுதி ஊடாக மனிதாபிமான உதவிகள் பயணிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதேவேளை ஹமாஸ் அமைப்பு  மூன்று கட்ட யுத்த நிறுத்தம் தொடர்பான யோசனைகளையும் கைதிகள் பணயக்கைதிகள் பரிமாற்றம் தொடர்பான யோசனைகளையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள அதேவேளை இஸ்ரேல் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளது.

காசாவில் மருத்துவமனைகளை முற்றுகையிட்டு துப்பாக்கிச்சூடு நடத்தும் இஸ்ரேல் !

காசாவில் இஸ்ரேலிய படையினர் மேலும் இரண்டு மருத்துவமனைகளைமுற்றுகையிட்டுள்ளனர் என தெரிவித்துள்ள  சர்வதேச செம்பிறை குழு கடும் துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளது.

எங்கள் குழுக்கள் கடும் ஆபத்தில் சிக்குண்டுள்ளன முற்றாக செயல் இழந்துள்ளன என செம்பிறை சங்கம் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளது.

கான் யூனிசில் நாசெர் அல்அமால் மருத்துவமனைகள் அமைந்துள்ள பகுதிக்குள் இஸ்ரேலிய படையினர் திடீரென டாங்கிகளுடன் உள்நுழைந்து தாக்குதலை மேற்கொண்டதில் தங்களின் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.

கடும் மோதல்கள் இடம்பெறுகின்றன பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் பல உடல்களை காணமுடிந்துள்ளது என தப்பியோடிய பாலஸ்தீனியர்கள் சர்வதேச ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளனர்.

டாங்கிகள் அவ்வப்போது எறிகணை வீச்சில் ஈடுபடும் என மருத்துவமனையிலிருந்து 100 மீற்றர் தொலைவில் உள்ள ஐந்துமாடிக்கட்டிடத்தில் வசிக்கும் ஒருவர் சர்வதேச செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார் எங்களை அச்சுறுத்தவே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஃபாவில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வெளி தாக்குதல் – 100க்கும் அதிகமானவர்கள் பலி !

ரஃபாவில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வெளி தாக்குதல் காரணமாக 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ரஃபாவை இலக்குவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட தீவிரமான விமானதாக்குதல்கள் எறிகணை தாக்குதல்கள் காரணமாக குழந்தைகள் சிறுவர்கள் உட்பட 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பாலஸ்தீன செம்பிறை சமூகம் தெரிவித்துள்ளது.

நகரின் பல பகுதிகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் காரணமாக 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

எல்லை பகுதிகளில் ஹெலிக்கொப்டர்கள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன.

இஸ்ரேலின் தாக்குதலில் காயமடைந்தவர்கள் கொல்லப்பட்டவர்கள் இடிபாடுகளிற்குள் உள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என செம்பிறை சமூகம் அச்சம் வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் குண்டுவீச்சினால்  அதிகளவானவர்கள் காயமடைந்துள்ளனர் அவர்களிற்கு சிகிச்சை வழங்குவதற்கான வளங்கள் இல்லை என அபுயூசெவ் அல் நிஜார் மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ரவா மருத்துவமனைக்குள் குழப்பமான நிலை காணப்படுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன என சிஎன்என் தெரிவித்துள்ளது.

குழந்தையொன்றை காப்பாற்றுவதற்கு மருத்துவர்கள் போராடுவதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

யப்னா முகாமில் இரண்டு மசூதிகள்  தாக்கப்பட்டதில் அங்கு தஞ்சமடைந்திருந்த பெருமளவானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

குவைத் மருத்துவமனையை சூழவுள்ள பகுதிகளிலும் எறிகணை வீச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

தொடரும் இஸ்ரேலின் அடக்குமுறை – குடிதண்ணீருக்காக திண்டாடும் காசா மக்கள்!

காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு தேடி ஓடும் அதேவேளை குடிநீருக்குகூட மக்கள் போராடிவருகிறார்கள்.

 

தெற்கு காசாவில் உள்ள பாலஸ்தீனக் சிறுவர்களுக்கு உலக சுகாதார மையம் அறிவுறுத்தும் தினசரி எடுத்துக்கொள்ளவேண்டிய தண்ணீர் அளவில் வெறும் 2% சதவீதம் மட்டுமே கிடைப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் பலஸ்தீன மக்களுக்கு நாளொன்றுக்கு வெறும் 1.5 முதல் 2 லிட்டர் அளவு மட்டுமே தண்ணீர் கிடைத்துள்ளது.

உலக சுகாதார மையம் பலஸ்தீன மக்களுக்கு ஒரு நாளுக்கு 100 லிட்டர் தண்ணீர் கிடைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

காசாவிற்குள் போதுமான அளவு உணவு, தண்ணீர், எரிபொருள்கள் செல்வதை இஸ்ரேல் கடந்த ஒக்டோபர் 9-லிருந்து தடுத்துவருகிறது.

அவ்வப்போது ஒருசில மனிதநேய உதவிகள் காசா மக்களுக்கு அனுப்பப்பட்டாலும் போதுமான அளவுக்கான அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனைக்குள் நுழைந்து மூன்று பாலஸ்தீனிய இளைஞர்களை சுட்டுக்கொன்ற இஸ்ரேலிய படையினர் !

மருத்துவமனை பணியாளர்கள் போல உடையணிந்த இஸ்ரேலிய படையினர் மேற்குகரையில் மருத்துவமனையொன்றிற்குள் நுழைந்து மூவரை சுட்டுக்கொன்றுள்ளனர்.

Israel’s war on Gaza live: Israeli forces kill 3 in West Bank hospital | Israel War on Gaza News | Al Jazeera

மேற்குகரையின் ஜெனின் நகரில் உள்ள இபின் சின மருத்துவமனைக்குள் மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் போல நுழைந்த இஸ்ரேலிய படையினர் மூன்று பாலஸ்தீனிய இளைஞர்களை சுட்டுக்கொன்றனர் என இஸ்ரேலிய பாலஸ்தீன தகவல்கள் தெரிவித்துள்ளன.

தாதிமார்கள் ஹிஜாப்அணிந்த பெண்கள் மருத்துவர்கள் போல உடையணிந்த இஸ்ரேலிய விசேட படைப்பிரிவினர் மருத்துவமனைக்குள் நுழைவதை சிசிடிவி காட்சிகள் காண்பித்துள்ளன.

ஒருவர் சக்கரநாற்காலியை தள்ளிக்கொண்டு செல்கின்றார் மற்றுமொருவர் குழந்தைகள் நாற்காலியுடன் காணப்படுகின்றார்.

மருத்துவமனைகள் நுழைந்த இஸ்ரேலிய படையினர் பின்னர் ஒவ்வொருவராக மூன்றாவது தளத்திற்கு சென்று இரண்டு இளைஞர்களை கொலை செய்தனர் என மருத்துவமனைக்குள் காணப்பட்டவர்களை மேற்கோள்காட்டி பாலஸ்தீன அரச செய்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிகாத் அமைப்பை சேர்ந்தவர்களே கொல்லப்பட்டுள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் இந்த நடவடிக்கையை பாராட்டியுள்ளார்.

சமீபத்தில் குறிப்பிடத்தக்க பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதில் ஈடுபட்ட மருத்துவமனைக்குள் மறைந்திருந்த  முகமட் ஜலாம்னே என்பவரே கொல்லப்பட்டார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய படையினர் மீதான தாக்குதல்கள் உட்பட பலதாக்குதல்களில் ஈடுபட்டுள்ள ஜெனின் பட்டாலியனை சேர்ந்த ஜெனின் முகாமை சேர்ந்த முகமட் அல் கஜாவியும் அவரது சகோதரரும் கொல்லப்பட்டனர் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

மேற்கின் மனிதத்துவத்தில் ஏதோ தவறு இருக்கிறது..? – பெத்லகேம் பாதிரியார் முன்தார் ஐசாக் [Thesam thirai YouTube]

பெத்தலகேம் தேவாலயத்தின் பாதிரியார் முன்தர் ஐசாக் டிசம்பர் 22 அன்று வழங்கிய பிரசங்கத்தில் , மேற்குலக நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து இன அழிப்புக்கு ஆதரவளிப்பதை வன்மையாகச் சாடினார் .

 

மேற்குலக கிறிஸ்தவ நாடுகள் தார்மீகப் பண்பை இழந்துவிட்டதாகத் தெரிவித்த அவர் , பாலஸ்தீனம் அழிவுகளில் இருந்து மீண்டெழும் ஆனால் இன்று இன அழிப்புக்கு ஆதரவு வழங்கியவர்கள் என்றைக்கும் தங்கள் கறையைக் கழுவிக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தார் . டிசம்பர் 10 சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று தேசம்நெற் நடத்திய கூட்டத்தில் பேசிய ஒவ்வொரு பேச்சாளர்களினதும் உரைகளை எதிரொலிப்பது போல் பாதிரியார் முன்தார் ஐசாக்கின் பேச்சு அமைந்தது .

குழந்தை யேசு பிறந்த மாட்டுத்தொழுவம் அமைந்த பெத்தலகேமில் கட்டப்பட்ட மிகப் பழமையான தேவாலயம் . வழமையாக இத்தேவாலயத்தில் கிறிஸ்மஸ் பண்டிகை மிகச் சிறப்பாக நடைபெறுவது வழமை . ஆனால் இம்முறை காசாவில் இடம்பெற்ற இனவெறித் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அத்தேவாலயம் சோடித்து அழகு படுத்தப்படவில்லை . இஸ்ரேல் இராணுவம் காஸா மீது நடத்தும் கண்மூடித்தனமான தாக்குதலையும் யுத்தத்தில் 10,000 சிறார்கள் வரை படுகொலை செய்யப்பட்டதையும் குறிக்கும் வகையில் குழந்தை யேசு இடிபாடுகளுக்கு மத்தியில் படுத்திருக்கும் வகையில் யேசுவின் பிறப்பு உருவகப்படுத்தப்பட்டது .

இதன் தொடர்ச்சியான தேசம் திரை காணொளியை காண கீழை உள்ள YouTubeபக்கத்துக்கான Link ஐ Clickசெய்யுங்கள்..!

 

 

 

ஹமாஸ் அமைப்பின் சுரங்கத்தில் இருந்து இஸ்ரேல் பணயக் கைதிகள் சடலமாக மீட்பு !

ஹமாஸ் அமைப்பினரால் காசா முனைக்கு கடத்தி செல்லப்பட்டவர்களில் 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் ஊடுருவி நடத்தப்பட்ட தாக்குதலின்போது ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட இஸ்ரேலியர்களான இடன் சிஷெர்யா, சிவ் டடூ, எலியொ டுலிடனொ, நிக் பெய்சர், ரொன் ஷெர்மென் ஆகிய 5 பேரை இஸ்ரேல் படையினர் சடலமாக மீட்டுள்ளனர்.

காசாவில் ஹமாஸ் சுரங்கத்தில் இருந்து 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட 5 பேரின் உடல்களை பாதுகாப்புப்படையினர் இஸ்ரேலுக்கு கொண்டு சென்றனர்.

காசாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. ஆனாலும், இன்னும் 129 பேர் காசாவில் பணய கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.